‘அம்பிகையின் கோரிக்கைகளுடன் ஒருங்கிணைந்து போராடுவோம்’ – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சிறீலங்காஅரசு மேற்கொண்ட இனப்படுகொலைக்கு நீதி வேண்டியும், தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் பிரித்தானியாவில் திருமதி அம்பிகை செல்வகுமாரினால் மேற்கொள்ளப்படும் உணவு தவிர்ப்புப் போராட்டம் இந்த பத்தி எழுதும் போது 7 ஆவது நாளை கடந்துள்ளது.

1948 ஆம் ஆண்டு சிறீலங்கா சுதந்திரம் அடைந்த பின்னர் தமது சுயநிர்ணய உரிமைக்காகவும், அடிப்படை உரிமைகளுக்காகவும், பறிபோகும் தமது தாயக பிரதேசத்தைக் காப்பாற்றுவதற்காகவும் தமிழ் மக்கள் பல வழிகளில் போராடி வந்துள்ளனர்.

அகிம்சைப்போர் என ஆரம்பித்த போராட்டத்தை சிறீலங்கா அரசு வன்முறை வழிகளை கையாண்டு தனது படை பலம்கொண்டு அடக்கியதுடன், பல தடவைகளில் அப்பாவிமக்களை இனக்கலவரங்கள் என்ற வழிகளில் படுகொலை செய்ததை தொடர்ந்து தமிழ் மக்களின் போராட்டம் ஆயுதப்போராட்டமாக பரிணமித்தது.

ஆயுதங்கள் மூலம் தமிழ் மக்கள் தம்மை பாதுகாத்துக் கொண்ட போதும், தமிழ் மக்களின் அந்த பாதுகாப்பை உடைப்பதற்கு உலக வல்லரசுகளும், பிராந்திய வல்லரசுகளும் சிறீலங்கா அரசுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை என்பது மிகப்பெரும் இனஅழிப்பாக மாற்றம் பெற்றது.

ஒருசமரை மட்டுமே இழந்த தமிழ் இனம் தொடர்ந்து பல்வேறுவழிகளில் தனது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றது. ஆனால் சிறீலங்கா அரசும் உலக வல்லரசுகளும், பிராந்திய வல்லரசுகளும் தமிழ் மக்களின் இந்த போராட்டங்கள் மீதும்தொடர்ந்து அழுத்தங்களையும், தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றன.

தமதுஉரிமைகளுக்காகவும், இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் ஐக்கியநாடுகள் சபை வரை தமிழ்இனம் சென்றபோதும், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்திலும், 2021 ஆம் ஆண்டு முன்வைக்கப்படும் தீர்மானத்திலும் சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனிதஉரிமை மீறல்கள் தமிழ் மக்களுக்கு எதிரானது என்பதை இந்தியாவுடன் இணைந்து மேற்குலகம் மிகவும் நுட்பமாக மறைத்துள்ளது என்பது தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைக்கான வழிகளை இந்த நாடுகள் நிராகரித்துள்ளதையே காட்டுகின்றது.

அதாவது இந்த நாடுகளின் நடவடிக்கை என்பது கடந்த 12 வருடங்களாக தமிழ் மக்கள் மேற்கொண்ட அரசியல் மற்றும் இராஜதந்திர நகர்வுகளின் தோல்வியின் வெளிப்பாடாகும்.

இந்தநிலையில் தான் அமைப்புக்கள் மற்றும்அரசியல் கட்சிகள் தவிர்ந்து மக்களாக முன்வந்து போராட்டத்தை முன்னெடுக்கும் கள நிலை ஒன்றுஉருவாகியுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்ற போராட்டமும், அம்பிகை அவர்களின் போராட்டமும் மக்கள் போராட்டமாகவே பார்க்கப்பட வேண்டும்.

எனினும்அம்பிகை அவர்களின் போராட்டத்தினை தமிழ் மக்களை ஏமாற்றும் தீர்மானத்தை வரைந்ததில் முன்னிலை வகித்த பிரித்தானியா கண்டுகொள்ளவில்லை. அது மட்டுடல்லாது, பலஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள மியான்மாரில் இடம்பெறும்போராட்டங்களை மணிக்கு ஒரு தடவை காண்பிக்கும் பிரித்தானியா ஊடகங்களும், அனைத்துலக ஊடகங்களும் பிரித்தானியா மண்ணில் இடம்பெறும் போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை.

எனினும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தாகயத்தில் வடக்கிலும், கிழக்கிலும், அனைத்துலக நாடுகளிலும் தமிழ் மக்கள் சுழற்சி முறையிலான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இருந்தபோதும், இந்த போராட்டங்களுக்கு இடையில் ஒரு ஒருங்கிணைவு ஏற்படவில்லை என்பதை அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை கொண்டு நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. அம்பிகை முன்வைத்துள்ள 4 கோரிக்கைகளை முன்வைத்து எல்லா நாடுகளிலும் போராடும் போது தான் அவரின் போராட்டம் என்பது ஒரு ஒருங்கிணைந்த போராட்டம் என்ற கருத்துருவாக்கம் ஏற்படும்.

ஓவ்வொரு நாடுகளிரும், ஒவ்வொரு அமைப்புக்களும், கட்சிகளும் தமக்கு வேண்டிய கோரிக்கைகளை முன்வைத்து போராடும் போது அது தனிப்பட்ட போராட்டமாகவே பார்க்கப்படும். அது அம்பிகை அவர்களின் போரட்டத்தை பலவீனப்படுத்தும் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை.

அதுமட்டுமல்லாது, எந்தவித கட்சிகளும், அமைப்புக்களும் சாராது ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு புலம்பெயர் அமைப்புக்கள் உரிமை கோருவதை தவிர்த்து அதற்கான ஆதரவுகளை வழங்கவேண்டும் என்பதுடன், அதற்கான ஆதரவுகளை திரட்டுவதற்கும் முன்வரவேண்டும்.

கடந்த 12 வருடங்களாக நாம் மேற்கொண்ட இராஜதந்திர அரசியல் எங்கு தோற்றுப்போனது என்பதை தமிழ் மக்கள் அறிந்து கொண்டு செயற்படுவதன் மூலமே இந்த போராட்டங்களை அதன் இலக்கை நோக்கி நகர்த்த முடியும்.

பெரும்பாலான புலம்பெயர் அமைப்புக்களைப் பொறுத்தவரையில், மேற்குலகம் சார்ந்த கருத்துக்கள் அல்லது ஆதரவான அமைப்புக்களாகவே உள்ளன. தாயகத்தில் உள்ள கட்சிகளை பொறுத்தவரையில்இந்தியா சார்பு நிலையே அங்கு அதிகம்.

அதற்கானகாரணம் என்ன?

தாயகத்தில்உள்ள இந்திய சார்பு தமிழ் கட்சிகள் தமது இருப்பை தக்கவைக்க இந்தியாவின் கருத்துக்களை அப்படியே உள்வாங்கி போராடுகின்றன. புலம்பெயர் தேசத்தில் உள்ள அமைப்புக்களும், செயற்பாட்டாளர்களும், குறிப்பாக மேற்குலகம் சார்பாக அந்தந்த நாடுகளுக்கு சார்ப்பு நிலை எடுத்து தமதுசொத்துக்களையும், சுகமான வாழ்வையும் தக்கவைக்க போராடுகின்றனர். இவற்றுக்கு இடையில் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்பது தான் உண்மை.

உண்மைஎன்பது கசப்பானது, ஆனால் அதனை ஏற்றுக்கொண்டால் தான்நாம் சரியான பாதையில் நகரமுடியும். இல்லையேல் ஏமாற்றுக்காரர்களை சுற்றிவந்து எமது வாழ்வு முடிந்துவிடும்.

இதனைசுருக்கமாக கூறுவதானால்இ ஒரு அடிபணிவு அரசியல்என கூறலாம். இந்த அடிபணிவு அரசியல்மூலம் எமக்கு தேவையானவற்றை பெறமுடியாது, மாறாக அவர்களின் கொள்கைகளுக்கு அமைவாகவே இந்த அமைப்புக்களும் கட்சிகளும் இயங்க முடியும்.

எனவேதான் தற்போது மெல்ல மெல்ல தமிழ் மக்கள் போராட்டத்தை தமது கையில் எடுத்துக்கொள்ள தலைப்பட்டுள்ளனர்.

சிறீலங்காவை பொறுத்தவரையில் அனைத்துலக நாடுகளுடன் நல்லுறவை பேணுகின்றது. ஹிரோசிமாவில் அணுக்குண்டு வீசப்பட்டதற்கு எதிராக அறிக்கை வெளியிட்டு யப்பானை நண்பனாக்கியது சிறீலங்கா.

கொரியப் போரின் போது கொழும்பு துறைமுகத்தை விநியோகத்திற்கு வழங்கி சீனாவையும், ரஸ்யாவையும் நண்பனாக்கியது சிறீலங்கா. உச்சக்கட்டப் போரின் போது 2007 ஆம் ஆண்டு திருமலை துறைமுகத்தை அமெரிக்காவுக்கு வழங்கி தமிழ் மக்களின் நடைமுறை அரசை அழித்து முடித்ததுசிறீலங்கா.

ஆனால் கிரம்பிளினில் உள்ள லெனின் சதுக்கத்தில் திருக்குறளை வைத்து தமிழுக்கு மரியாதை செலுத்தும் ரஸ்யாவை எதிரியாக பார்க்கின்றது தமிழ் சமூகம்.

2005 ஆம் ஆண்டு பெக்கன் நடவடிக்கை என திட்டம் போட்டு விடுதலைப்புலிகளை அழித்த மேற்குலகத்துடன் நட்பை பாராட்டி பணத்துக்காக ஆயுதங்களை விற்பனை செய்த சீனாவை எதிர்த்து அறிக்கை விடுகின்றன தமிழ் கட்சிகள்.

1976 ஆம் ஆண்டு எழுதப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது ரஸ்ய புரட்சியில் லெனின்தன்னாட்சிக்கு பயன்படுத்திய வசனங்களை தழுவியது என்பது எத்தனை பேருக்கு தெரியும். 1980கள் வரையிலும் சிறீலங்காவைஒரு தனிநாடாக ரஸ்யா ஏற்றுக்கொள்ளவில்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

எமதுகட்சிகளினதும் அமைப்புக்களினதும் சுயநலவாத அரசியல் என்பது உலகில் பல நாடுகளின் ஆதரவுகளைஇழக்கும் நிலையை ஏற்படுத்தி வருவதுடன், நாம் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றோம் என்பதையும் தற்போது ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் மீண்டும் எடுத்தியம்பியுள்ளது.

அம்பிகையின்போராட்டத்திலாவது நாம் இதனை உணர்ந்தவர்களாக அவரின் கோரிக்கைகளை ஒற்றுமையாக அனைத்துலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நாடுகளிடையே பேதம் பார்க்காது உறவுகளை வலுப்படுத்துவோமாக இருந்தால் அதுவே நாம் சரியான பாதையில்பயணிப்பதற்கான முதல் படியாகும்.

Posted in Uncategorized

யுத்தத்துக்கு பின் முல்லைத்தீவில் 67 விகாரைகள் – அம்பலப்படுத்தும் ஓக்லாண்ட் ஆய்வு அறிக்கை

வடக்கு -கிழக்கு மாவட்டங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் தீவிரமான நில அபகரிப்பு இராணுவம் மற்றும் அரச திணைக்களங்களினால் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், இராணுவமயமாக்கல் அதீதமான அளவில் காணப்டுவதாகவும் உலகின் பல நாடுகளிலும் நில ஆக்கிரமிப்பு பற்றி ஆய்வு நடத்திவரும் ஓக்லாண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

முல்லைத்தீவில் பொதுமக்கள் மற்றும் இராணுவம் இடையிலான விகிதம் 2:1 என்ற அளவில் இருப்பதாகவும், சுமார் 100 க்கும் மேற்பட்ட முகாம்கள் மிகவும் நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவக்கும் நாயாறுக்கும் இடையிலான 15 கிலோ மீற்றர் , முல்லைத்தீவுக்கு தாண்டுவனுக்கும் இடையிலான 15 கிலோ மீற்றர் , முல்லைத்தீவுக்கு ஓட்டுசுட்டானுக்கும் இடையிலான 26 கிலோ மீற்றர், முல்லைத்தீவுக்கு புதுக்குடியிருப்புக்கும் இடையிலான 17 கிலோ மீற்றர் பகுதிகளில் மட்டும் 33 இராணுவ முகாம்கள் இருப்பதாகவும் அளவுக்கு அதிகமான இராணுவமயமாக்கல் பொதுமக்களின் வாழ்வாதார செயற்பாடுகளை மிக மோசமாக பாதித்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் மட்டும் ஆகக்குறைந்தது 16, 910 ஏக்கர் தனியார் மற்றும் அரச காணிகளை முல்லைத்தீவில் அபகரித்துள்ளனர். இதுபற்றிய விபரமான புள்ளிவிபரம் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் காடுகளுக்குள் இருக்கும் முகாம்களுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ள நிலம் கணக்கில் எடுக்கப்படவில்லை.

வன இலாகா திணைக்களம் 32, 110 ஏக்கர், வனஜீவராசிகள் திணைக்களம் 23, 515 ஏக்கர், தொல்பொருள் திணைக்களம் 202 ஏக்கர், மகாவலி அதிகாரசபை 4,368 ஏக்கர் நிலத்தையும் அபகரித்துள்ளன. அத்துடன், சுமார் 25, 000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் மணலாற்றில் வெலிஓயா பிரசதேச செயலக பிரிவு உருவாக்குவதற்காக கடந்த பல வருடங்களாக அபகரிக்கபப்ட்டுள்ளது. மொத்தமாக 80, 000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் முல்லைத்தீவில் இராணுவம் மற்றும் அரச திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இது காடுகள் தவிர பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உரிய மொத்த நிலபபரப்பில் ( 201,617 ஏக்கர்) 40 சத வீதத்துக்கும் அதிகமாகும்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் முல்லைத்தீவில் மட்டும் 67 பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.”

முன்னறிவித்தலின்றி சென்ற பொலிஸார்; வாக்குமூலம் வழங்க மறுத்த வேலன் சுவாமிகள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் முன்னெடுக்கப்பட்ட பேரணி தொடர்பில் தவத்திரு வேலன் சுவாமிகளிடம் வாக்குமூலம் பெறுவதற்காக கிளிநொச்சி பொலிஸார் இன்று யாழ். நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்திற்கு சென்றிருந்தனர்.

எனினும், முன்கூட்டியே அறிவிக்கப்படாமையால், இன்று வாக்குமூலம் வழங்க முடியாதென பொலிஸாருக்கு அறிவித்ததாக வேலன் சுவாமிகள் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கம் இவ்வாறு பல்வேறு மட்டங்களில் வாக்குமூலங்களை பதிவு செய்து வருவதாக வேலன் சுவாமிகள் கூறினார்.

சட்டத்தை தாம் மதிக்கும் அதேவேளை, வாக்குமூலம் போன்ற தொடர்ச்சியான உள ரீதியான பாதிப்புகள் ஏற்படுத்தப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் தெரிவித்தார்.

1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு – வர்த்தமானி அறிவிப்பு வௌியானது!

தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 05 ஆம் திகதியில் இருந்து இந்த தீர்மானம் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபா வரை அதிகரிக்க வேண்டும் என்ற யோசனை நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.

குறித்த யோசனையை செயற்படுத்துவதற்காக கடந்த சில மாதங்களாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதும உடன்பாட்டுக்கு வராத காரணத்தால் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதனை சம்பள நிர்ணய சபைக்கு மாற்றினார்.

அதன்படி, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளம் 900 ரூபாவும் மற்றும் பாதீட்டு நிவாரண கொடுப்பனவாக 100 ரூபாவுமாக 1000 ரூபாய் நாளாந்த சம்பளத்தை வழங்க கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி சம்பள நிர்ணய சபையால் தீர்மானிக்கப்பட்டது.

பின்னர், அதனுடன் தொடர்புடைய ஆட்சேபனைகளை தெரிவிக்க பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், கடந்த முதலாம் திகதி சம்பள நிர்ணய சபை மீண்டும் கூடியது.

அதன்படி, தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க மேற்கொண்ட தீர்மானம் குறித்த கூட்டத்தின் போது அங்கீகரிக்கப்பட்ட நிலையில், அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலை வௌியிடுவதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, மார்ச் மாதம் 05 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

விமல் வீரவன்சவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை – ரிஷாட்

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹரானையும் தன்னையும் தொடர்புபடுத்தி, அமைச்சர் விமல் வீரவன்ச வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக ரிஷாட் பதியுதீன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் குறித்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கூறினார்.

அதன்படி அவரிடம் விசாரணை செய்து, உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு சி.ஐ.டியினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் வெளிவந்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும், தனக்கும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் தனது அரசியல் இருப்புக்காக இவ்வாறு அப்பட்டமான பொய்யை கூறும் விமலுக்கு எதிராக சட்டத்தரணி ஊடாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகி வருவதாகவும் ரிஷாட் பதியுதீன் கூறினார்.

Posted in Uncategorized

சுதந்திர சதுக்கத்தில் நாளை சத்தியாக்கிரக போராட்டம்: ஞானசார தேரரின் அதிரடி அறிவிப்பு

இஸ்லாமிய அடிப்படைவாதத்தினாலும், கிறிஸ்தவ சபைகளின் அடிப்படைவாதத்தினாலும் பௌத்த சமூதாயத்தின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. சிங்கள பௌத்தர்கள் உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு மகாநாயக்கதேரர்களுக்கு உண்டு.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கும், பொதுபல சேனா அமைப்பினை தடை செய்ய வேண்டும் என்ற பரிந்துரைக்கும் எதிர்ப்பு தெரிவித்து நாளை வியாழக்கிழமை சுதந்திர சதுக்கத்தில் பௌத்த துறவிகளை ஒன்றிணைத்து சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுப்படவுள்ளோம். இதற்கு மகாநாயக்க தேரர்கள் ஆதரவு வழங்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் அஸ்கிரிய பீடத்திடம் கோரிக்கை விடுத்தார்.

பௌத்த நாட்டில் பௌத்த அமைப்புக்கள் அடிப்படைவாத முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றன. என்ற தவறான நிலைப்பாட்டை ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கை தோற்றுவித்துள்ளது. இது தவறான செயற்பாடு என்பதை அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளோம்.பௌத்த உரிமைகளை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும் என அஸ்கிரிய பீட அனுநாயக்கர் நாரம்பனாவே ஆனந்த தேரர் ஞானசார தேரரிடம் தெரிவித்தார்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நேற்று முன்தினம் கண்டி – அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் நாரம்பனாவே ஆனந்த தேரருடன் பொதுபல சேனா அமைப்பினர் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்தார்கள்.

இச்சந்திப்பில் போது ஞானசார தேரர் குறிப்பிட்டதாவது, ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நாட்டில் வலுப் பெற்றுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தன்மையை வெளிப்படுத்தியது. இஸ்லாமிய அடிப்படைவாதம் குண்டுத்தாக்குதலுக்கு பின்னர் முற்றாக அழியவடையவில்லை. என்பதை குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வெளிப்படுத்தியது. முழுமையற்ற அறிக்கை தற்போது அரசியல் மற்றும் சமூக களத்தின் பிரதான பேசு பொருளாக காணப்படுகிறது.

நாட்டில் வலுப்பெற்று வந்த இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து பல முறை அரசாங்கத்திற்கு எடுத்துரைத்தோம். இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து பேசும் தருணத்தில் நாங்கள் இனவாதிகளாக அரசியல் தலைவர்களினால் சித்தரிக்கப்பட்டு துரதிஷ்ட வசமாக ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம் பெற்றது. குண்டுத்தாக்குதலின் உண்மை காரணிகளை கண்டறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்தார்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகியுள்ளது. குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவ்வித புதிய காரணிகளும், இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கும் பொறிமுறைகளும் குறிப்பிடப்படவில்லை. மாறாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நானும்(ஞானசார தேரர்)பொதுபல சேனா அமைப்பினரும், ஒரு சில பாதுகாப்பு அதிகாரிகளும் குண்டுத்தாக்குதலின் பொறுப்புதாரிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளோம்.

இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டிய தேவை பொதுபல சேனா அமைப்பிற்கு கிடையாது. பௌத்த மதத்திற்கும், பௌத்த சமூகத்திற்கும் பாதிப்பு ஏற்படும் போது அதற்கு எதிராக செயற்பட்டுள்ளோம். இதனை இனவாதம் என்று குறிப்பிட முடியாது. பௌத்த மதத்தின் உரிமைகளை பாதுகாப்பது காவி உடை தரித்த தேரர்களின் தலையாய கடமையாகும்.

இஸ்லாமிய அடிப்படைவாதமும், கிறிஸ்தவ சபைகளின் அடிப்படைவாதமும் பௌத்த மதத்திற்கும், பௌத்த சமூகத்திற்கும் பாரிய நெருக்கடியாகவே காணப்படுகிறது. இவ்விடயம் குறித்து அரசியல்வாதிகள் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை.பௌத்த சமூகத்தின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் போது மகாநாயக்க தேரர்கள் குரல் கொடுத்துள்ளார்கள். விசாரணை அறிக்கையினால் பௌத்த அமைப்புகளுக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஆகவே இவ்விடயம் குறித்து மகாநாயக்க தேரர்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்க வேண்டும்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பௌத்த அமைப்புக்கள் தடை செய்யப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை சுதந்திர சதுக்கத்தில் பௌத்த மத தலைவர்களை ஒன்றிணைத்து சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்படவுள்ளோம். இதற்கு மகாநாயக்க தேரர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.என்றார.

அஸ்கிரிய பீட அனுநாயக்கர் நாரம்பனாவே ஆனந்த தேரர்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றது என்பதை அரசாங்கத்திற்கு உத்தியோகப்பூர்வமாக செயற்பட வேண்டும். பௌத்த மத உரிமைகளையும், பௌத்த அமைப்புக்களையும் பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைத்து செயற்படுவது அவசியமாகும்.

பௌத்த நாட்டில் பௌத்த அமைப்புக்கள் அடிப்படைவாத முரண்பாடுகளை தோற்றுவிக்கிறது என்ற தவறான நிலைப்பாட்டை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது. தவறை திருத்திக்கொண்டு குண்டுத்தாக்குதலின் உண்மை காரணியை வெளிப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

இறுதிப் போரில் வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை கொன்றது போர் விதியா? ரெலோ இளைஞர் அணி தலைவர் சபாகுகதாஸ்

இறுதிப் போரில், சுதந்திரபுரம் தொடங்கி வெள்ளைக் கொடி வரை நடந்தது போர் விதியா? என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ரெலோவின் இளைஞர் அணி தலைவருமான சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றையதினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சபா குகதாஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நேற்றைய தினம் வெளியிட்ட செய்தியில் இறுதிப்போரில் தாங்கள் போர் விதி முறைகளை பின்பற்றியதாகவும் மனிதாவிமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் இறுதி நடவடிக்கைகளை பார்க்காதவர்கள் போலியான போர்க்குற்றச் சாட்டுக்களை முன் வைப்பதாகவும் கூறியுள்ளார்.

உண்மையில் சுதந்திரபுரம் தொடங்கி வெள்ளைக் கொடி படுகொலை வரை நடைபெற்றது சிறிலங்கா படைகளின் போர் விதி முறையா? அல்லது சர்வதேச போர் விதி முறையா? இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டு இருந்த போது விசுவமடு நோக்கி சிறிலங்கா படைகள் வந்த பின்னர் பொது மக்களை சுதந்திரபுரம் பகுதியில் தங்குமாறு இப் பகுதி சூட்டுத் தவிர்ப்பு வலயம் என பிரகடனப் படுத்தி உலங்கு வானூர்தி மூலம் துண்டுப் பிரசுரங்களை வீசினார்கள் இதனை நம்பி மக்கள் ஒன்று திரண்ட பின்னர் இராணுவம் நடாத்திய தாக்குதலில் எத்தனை ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

உலகில் தடை செய்யப்பட்ட வெடி குண்டான கிளஸ்டர் குண்டை(கொத்துக் குண்டு) பயன்படுத்தி ஆனந்தபுரம், இரணைப்பாலை, புதுமாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களில் எத்தனை ஆயிரம் மக்களை கொன்றீர்கள் இன்றும் எத்தனை பேர் ஊனமுற்றும் அதன் பகுதித் துண்டுகளை உடலில் சுமந்தவாறும் நடைப்பிணங்களாக வாழ்கின்றனர்.

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த அப்பாவிப் பொது மக்கள் மன்றாடிக் கொண்டு அபயக்குரல் எழுப்ப உங்கள் கட்டுப்பாட்டில் வைத்து சுட்டுப் படுகொலை செய்தீர்கள் இவை எல்லாம் உங்கள் அகராதியில் போர் விதிமுறையா?

இசைப்பிரியா உங்களிடம் சரணடைந்த பின்னர் உங்கள் படைகளிடம் மன்றாடி வெம்பி வெம்பி கண்ணீர் மல்க ஈவிரக்கம் இன்றி வன் கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்தமை இவை எல்லாம் மனிதாபிமான நடவடிக்கையா?

இவை தொடர்பான ஆதாரங்கள் சனல் நான்கு மூலம் வெளியிடப்பட்டும் இலங்கை அரசாங்கத்தால் ஏன் இன்றுவரை சட்ட ரீதியான தொழில் நுட்பத்தால் உண்மை இல்லை என்பதை நிரூபிக்க முடியவில்லை .சனல் நான்கு காட்சிகள் போர் விதிமுறைகளை வெளிப்படுத்துகின்றதா?

இல்லை போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியுள்ளதா? தொடர்ந்து நீதியின் கதவுகள் நிரந்தரமாக மூடியிருக்கமாட்டாது. நிச்சயம் திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

வடக்கு, கிழக்கில் தொடர்ந்தும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டங்கள் முன்னெடுப்பு

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் 10ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அருட்தந்தை சக்திவேல் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நீதி வேண்டிய இந்த போராட்டம், நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

குறித்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மத தலைவர்கள் என பலரும் தனது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

குறித்த போராட்டத்தின் கோரிக்கைகளாவன, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதினூடாக இலங்கை அரசாங்கத்தினால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிராக இனவழிப்பு என்பவற்றிக்கு சர்வதேச நீதி வேண்டும்.

தமிழ் இனத்தின் மீதானா இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் என்பன அங்கிகரிக்கப்பட வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா மரணங்கள் 511 ஆக அதிகரித்துள்ளது

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 511 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, உடுவில் பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரும், ஹொரபே பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும், அகுரணை பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் ராகமை பிரதேசத்தை சேர்ந்த 62 ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

ஐ.நாவில் இலங்கை விவகாரம்- மக்கள் பேரெழுச்சி இயக்கம் பிரதமர் மோடிக்கு அவசர கடிதம்

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டியமையை உள்ளடக்குவதற்கு உதவுமாறு, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம், பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம், பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘இந்தியாவானது உலகின் பிரதான அதிகாரத் தரப்பாகவும் மிகவும் அதிகாரம்மிக்க அயல்நாடாகவும் இருப்பதுடன் இலங்கையிலுள்ள தமிழர்கள் பற்றி மிகச் சிறந்ததொரு புரிந்துணர்வையும் கொண்டிருப்பதால் ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மனி, மொன்ரினேக்றோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகளால் இணைந்து சமர்ப்பிக்கப்பட்ட 2021ம் ஆண்டு மாசி மாதம் 19ம் திகதியிடப்பட்ட ‘பூச்சிய வரைவு’ என அழைக்கப்படுகின்ற ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டியமையை உள்ளடக்குவதற்கு உதவுமாறு கோருகின்ற மேன்முறையீட்டின் பொருட்டு இதனை நாம் வரைகிறோம்.

இந்நாடுகள் இத்தீர்மானத்தை வரைந்தபோது பாதிக்கப்பட்டோரை கலந்தாலோசிக்கக் கூடவில்லை என்பதுடன், அவை தன்னிச்சையாக வரையப்பட்ட இப் ‘பூச்சிய வரைவு’ தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க முன்னர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட இணைந்த மேன்முறையீகளையும் புறக்கணித்துள்ளன.

இந்தியா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஓர் உறுப்பினராக இருப்பதால் ‘பூச்சிய வரைவு’ தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டியமையை உள்ளடக்குவதற்குப் பரிந்துரை செய்வதற்கான சகல உரிமைகளையும் தாங்கள் கொண்டுள்ளீர்கள்.

பாதிக்கப்பட்டோராகவும் பாதிக்கப்பட்டோரின் பிரதிநிகளாகவும் ‘பூச்சிய வரைவு’ தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டியமையை உள்ளடக்குவதற்கு உதவுமாறு தங்களிடம் நாம் மேன்முறையீடு செய்கிறோம்.

இப் ‘பூச்சிய வரைவு’ தீர்மானமானது இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் புரியப்பட்ட தமிழ் மக்களை கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்தமை மற்றும் தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியமை அடங்கலான கொடூரமான குற்றங்களினால் பாதிக்கப்பட்டோரின் அடிப்படை எதிர்பார்ப்புக்களையேனும் பூர்த்தி செய்யவில்லை.

இந்நிலவரத்தின் தீவிரத் தன்மையின் காரணமாக தமிழர்கள் ஒன்றிணைந்து ஒரு மாதத்திற்கு முன்னர் 2021ம் ஆண்டு தை மாதம் 15ம் திகதியன்று, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டியமையை வலியுறுத்தி, கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.

இவ்வழைப்பானது வடக்கு- கிழக்கு சிவில் சமூகத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்றழைக்கப்பட்ட அண்மைய பேரணியில் பங்குபற்றிய பல்லாயிரக் கணக்காக தமிழர்களினால் மேலும் வலுச்சேர்க்கப்பட்டிருந்தது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தாமல் விடுதலானது கொடூரமான குற்றங்களைப் புரிந்தோர் நீதியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு வழிகோலுவதுடன் மாத்திரமல்லாது, அது இலங்கையின் அரசியற் தலைவர்களும் பாதுகாப்புப் படைப் பிரதானிகளும் தாம் நீதிக்கு முகங்கொடுக்கத் தேவையில்லை என்பதை நன்கறிந்து கொண்டு, எதுவிதத் தயக்கமும் இல்லாமல் தமிழ் மக்களிற்கு எதிரான சர்வதேசக் குற்றங்களைப் புரிவதற்கான துணிச்சலையும் ஏற்படுத்திவிடும்.

எனவே இலங்கையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தாமல் விடப்படின், தமிழ் மக்கள் எதிர்கொள்ளவல்ல இந்த அபாயத்தைத் தீவிரமாகக் கவனத்திற் கொள்ளுமாறு நாம் தங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் தற்போதைய உயர் ஆணையாளராகிய மிச்சேல் பச்சலெட் , 2021ம் ஆண்டு தை மாதம் 27ம் திகதியிடப்பட்ட தனது அறிக்கையில், இலங்கையிலுள்ள நிலவரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டியமையை நோக்காகக் கொண்டு நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிடம் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், ஐ.நா. மனித உரிமைகளுக்கான நான்கு முன்னாள் உயர் ஆணையாளர்கள், ஒன்பது சுயாதீன ஐ.நா.நிபுணர்கள் மற்றும் இலங்கை சம்பந்தமான ஐ.நா.செயலாளர் நாயகத்தின் வல்லுநர்கள் குழுவின் சகல உறுப்பினர்களும் அடங்கலாக இருபது முன்னாள் ஐ.நா.அதிகாரிகள் ‘யுத்த விதைகளை விதைத்தல்’ எனத் தலைப்பிடப்பட்டு, 2021ம் ஆண்டு மாசி மாதம் 18ம் திகதி வழங்கிய தமது அறிக்கையில் இலங்கையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையானது தனது நீதித்துறை நிறுவனங்களை அதனுடைய பாதிப்புற்றோரிற்காகச் செயற்பட முடியாதவையாக ஆக்கியுள்ளது என்பதே கருத்திற் கொளள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

எனவே, சர்வதேச அல்லது வெளிப்புற நியாயாதிக்கத்தினூடாக நீதியை நிலைநாட்டுவதன் பொருட்டு பாதிப்புற்றோருக்கும் அவர்களுடைய பிரதிநிதிகளுக்குமாகப் பணியாற்றுவதற்காக உயர் ஆணையாளரின் பரிந்துரைகளை நாம் மீள வலியுறுத்துகிறோம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச வழிவகைகள் கருத்திற் கொள்ளப்படுதல் வேண்டும்’ எனக் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.