இலங்கை அரசாங்கம் கதவை மூடிவிட்டது; பொறுப்புக்கூறலுக்கு சர்வதேச மாற்று வழியை உறுப்பு நாடுகள் தேடவேண்டும் – பச்லெட் அறிவிப்பு

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்வதில் இலங்கை தோல்வி அடைந்துள்ளதன் ஊடாகவும் ஜெனீவா பிரேரணையில் இருந்து விலகியதன் மூலமும் இலங்கை அரசாங்கம் நேர்மையான முறையில் உள்ளக ரீதியில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான கதவை மூடிவிட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் நேற்று ஜெனிவாவில் தெரிவித்தார்.

எனவே இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக இவ்வாறு பொறுப்புக்கூறலில் தோல்வியை கண்டுள்ளதால் சர்வதேச ரீதியில் இலங்கையின் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான மாற்று வழியை உறுப்பு நாடுகள் ஆராய வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கோரிக்கை விடுத்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்ற நிலையில் நேற்றைய தினம் இலங்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதன்போது ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை உத்தியோகபூர்வமாக பேரவையில் தாக்கல் செய்தார். அறிக்கையை தாக்கல் செய்துவிட்டு உரையாற்றும் பொழுதே இந்த விடயங்களை மனித உரிமை ஆணையாளர் வெளிப்படுத்தினார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான ஒரு கட்டத்தில் இருக்கின்றோம். என்னுடைய அறிக்கை வெளிக்காட்டியுள்ளதன் பிரகாரம் கிட்டத்தட்ட கடந்த 12 வருடங்களாக பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான உள்ளக ரீதியான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக தோல்வியையே சந்தித்திருக்கின்றன.

2015ஆம் ஆண்டு ஜெனிவாவில் வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும் கூட உண்மையான நேர்மையான உண்மையை கண்டுபிடித்தல் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தோல்வி கண்டிருக்கின்றது.

கடந்த ஒரு வருட காலமாக இலங்கையில் எவ்வாறான தடையை ஏற்படுத்தும் விடயங்கள் இடம் பெற்றுக் கொண்டு வருகின்றன என்பதையும் மோசமான நிலைமை சில விடயங்களில் ஏற்படும் என்பதையும் எனது அறிக்கை எடுத்துக் காட்டியிருக்கிறது. சிவில் சமூகம் மற்றும் சுதந்திர ஊடகத்துக்கான இடைவெளி தற்போது பாரிய நெருக்கடியை சந்தித்திருக்கிறது.

சுயாதீன நீதித்துறை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் 20ஆவது திருத்தச் சட்டம் காரணமாக வலுவிழந்திருக்கின்றன. சிவில் செயற்பாடுகளில் இராணுவத்தினரின் பங்களிப்பு அதிகரித்திருக்கிறது. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பல்வேறு அநீதிகளை சந்தித்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு விடயங்களில் புறக்கணிக்கப்படுகின்றனர்.

கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை கட்டாயமாக எரிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தினால் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகம் பாரிய வலியை சுமந்து கொண்டிருக்கின்றது அதுமட்டுமன்றி கடந்த காலங்களில் இடம்பெற்றதை போன்ற மீறல்கள் மீண்டும் இடம்பெறுவதற்கான சமிக்ஞைகள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன.

இலங்கையின் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட அனைத்து ஆணைக்குழுக்களும் நம்பகரமான முறையில் உண்மையை கண்டுபிடிப்பதற்கும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் தவறியிருக்கின்றன. அதுமட்டுமன்றி முக்கியமான சில மனித உரிமை மீறல் தொடர்பான சம்பவங்களில் விசாரணைகளில் அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.

அண்மையில் இலங்கை அரசாங்கம் ஒரு ஆணைக்குழுவை நியமித்திருக்கிறது. அந்த ஆணைக்குழுவும் கடந்த காலங்களில் ஏனைய ஆணைக்குழுக்களை போன்று அர்த்தமுள்ள விளைவுகளை ஏற்படுத்தாத ஒரு பழைய கதைதையே மீண்டும் கொண்டு வருவதாக இருக்கும்.

அரசாங்கம் இவ்வாறு தொடர்ச்சியாக கடந்த கால மீறல்கள் தொடர்பாக ஆராய்வதில் தோல்வி கண்டு வருவதன் ஊடாகவும் 30 -1 என்ற தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியதன் மூலமும் நேர்மையான முறையில் முன்னேற்றத்தை காண்பதற்கான கதவை அரசாங்கம் முழுமையாக மூடிவிட்டுள்ளது என்பதை நாங்கள் இங்கு சுட்டிக் காட்டுகிறோம்.

இதனால் இலங்கையில் பொறுப்புக்கூறலை ஏற்படுத்துவதற்கான சர்வதேச மாற்று வழிமுறைகளை ஆராய வேண்டும் என்று நான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுக்கின்றேன். இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் , நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை தொடர்ந்து கண்காணிப்பதற்கு எனது அலுவலகம் எப்போதும் தயாராகவே இருக்கின்றது

கண்டி எசல பெரஹெராவில் தாக்குதல் மேற்கொள்வதே சஹ்ரானின் முதல் இலக்கு! – ஆணைக்குழு அறிக்கை

கண்டி எசல பெரஹெராவில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொள்வதே ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் பிரதான திட்டமாக இருந்ததாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், மிகப் பெரிய அளவிலான வெடிபொருள் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி புத்தளம் – வண்ணாத்தவில்லு பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 2019 ஏப்ரல் 4ஆம் திகதி சஹ்ரான் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் பெயர்கள் உள்ளிட்ட தாக்குதல் பற்றிய தகவல்களை இந்திய அதிகாரிகள் புலனாய்வு சேவைகளுக்கு வழங்கியிருந்தாலும் பாதுகாப்பு செயலாளர், தேசிய புலனாய்வுத் தலைவர், பொலிஸ்மா அதிபர், புலனாய்வு பணிப்பாளரும் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்த தாக்குதலை தடுக்க சட்ட அமுலாக்க அதிகாரிகள் தவறிவிட்டனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், ஏப்ரல் 20ஆம் திகதி சஹ்ரான் மற்றும் ஏழு தற்கொலை குண்டுதாரிகள் ஈஸ்டர் தாக்குதலை நியாயப்படுத்தும் உறுதிமொழியை எடுத்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மாவனெல்லயில் புத்தர் சிலைகளை இடித்த சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர்களான ஷாஹீத் மற்றும் சாதிக் ஆகியோர், க.பொ.த. சாதாரண தர தேர்வுக்கு தோற்றவிருந்த 30 மாணவர்களுக்கு பயிற்சி முகாம் ஒன்றை நடத்தியதாக ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை உத்தியோகபூர்வமாக நிராகரித்தது இலங்கை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பெச்சலட் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் வௌியிட்டுள்ள அறிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

இலங்கையர்களை இலக்கு வைத்து தடை விதித்தல், பயணத் தடைகளை விதித்தலால் இறையாண்மை உள்ள நாட்டின் உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்து இலங்கை எழுத்து மூலம் பதில் வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இடம்பெற்று வருகிறது.

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளதுடன், இலங்கை நேரப்படி இன்றிரவு நடைபெறும் அமர்வில் அந்த அறிக்கை குறித்து அவர் உரையாற்றவுள்ளார்.

நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டமை, முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் நம்பகத்தன்மையுடன் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு தடை விதிக்குமாறு தனது அறிக்கையினூடாக உறுப்பு நாடுகளிடம் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளவர்களின் சொத்துக்களை முடக்குவதற்கும் பயணத் தடை விதிப்பதற்கும் அவர் தனது அறிக்கையில் யோசனை முன்வைத்துள்ளார்.

உரிய நீதிமன்றத்தினால் அல்லது வேறு பொறிமுறையினூடாக உறுதிப்படுத்தப்பட்ட நம்பத்தகுந்த ஆதாரங்கள் இன்றி சிலரை இலக்கு வைத்து தடை விதிப்பதற்கும், பயணத் தடை விதிப்பதற்கும் யோசனை முன்வைத்துள்ளமை இறைமையுள்ள நாடொன்றுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் நிகழ்ச்சி நிரல் என இலங்கை அரசாங்கம் அனுப்பிய பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது நாட்டின் உரிமையை மீறும் செயல் என்பதுடன், இறையாண்மைக்கான அடிப்படை விடயங்களை மீறும் செயற்பாடு எனவும் இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் அமைதி காக்கும் படையின் செயற்பாடுகளை மீண்டும் மீளாய்வு செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையாளர் முன்வைக்கும் யோசனையை நிராகரித்துள்ள இலங்கை அரசாங்கம், தொழில் ரீதியாக செயற்படும் இறைமையுள்ள ஒரு நாட்டின் இராணுவம் மீது சுமத்தப்படும் அழுத்தம், ஐக்கிய நாடுகளின் கொள்கைகளை மீறுவதாகவும் அறிவித்துள்ளது.

20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தினூடாக நீதிமன்றத்தின் கட்டுப்பாடு மற்றும் சமநிலைக்கு அழுத்தம் ஏற்படுவதாக மிச்சேல் பெச்சலட் தனது அறிக்கையில் சுமத்தும் குற்றச்சாட்டையும் இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது.

வேறு நாடுகளின் அழுத்தம் காரணமாக இலங்கை போன்ற ஒரு தனி நாட்டை, எவ்வித சாட்சியங்களும் இன்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு மேற்கொள்ளும் முயற்சி மிகவும் அபாயகரமானது என்பதால் இது குறித்து ஏனைய நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பொறுப்புவாய்ந்த ஒரு உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை திறந்த மற்றும் செயற்றிறன்மிகு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதற்கு அர்ப்பணிப்பு செய்வதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், இம்முறை மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது இலங்கை தொடர்பில் ஒருங்கிணைந்த குழு தீர்மானம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.

பிரித்தானியா, கனடா, ஜேர்மன், வடக்கு மெசடோனியா, மொன்டிநீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகள் இந்த ஒன்றிணைந்த குழுவில் அடங்குகின்றன.

இலங்கையில் வன்முறைகள் இடம்பெறுவதாகவும் மனித உரிமைகள் மீறப்படும் நிலைமை காணப்படுவதாகவும் அவர்கள் தயாரித்துள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை , மனித உரிமை பாதுகாப்பு மற்றும் அதனை ஊக்குவிக்கும் நிறுவனங்கள் செயலிழந்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

COVID தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை கட்டாயத் தகனம் செய்ய வேண்டும் என இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பிலும் ஒருங்கிணைந்த குழு அதிகக் கவனம் செலுத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 மற்றும் 51 ஆவது கூட்டத் தொடர்களின் போது, இலங்கை மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் மீளாய்வு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒன்றிணைந்த குழுவின் இந்த பிரேரணை குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இறுதி தீர்மானம் தயாரிக்கும் போது அதில் திருத்தங்களும் மேற்கொள்ளப்படலாம் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, மனித உரிமைகள் பேரவை அரசியல் கட்சி சார்பான ஓர் நிறுவனம் என குற்றம் சுமத்தி, ட்ரம்ப் நிர்வாகக் காலத்தில், 2016 ஆம் ஆண்டு பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியது.

எனினும், அதில் செயற்றிறன் மிகு மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பில், ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புரிமையை பெறும் எதிர்பார்ப்பில் உள்ளது.

தமது வௌிநாட்டுக் கொள்கை , மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிலிங்கன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் COVID தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை கட்டாயத் தகனம் செய்ய வேண்டும் எனும் கொள்கைக்கு, OIC எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மனித உரிமைகள் பேரவையில் கடும் கண்டனத்தை வௌியிட்டுள்ளது.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், பாகிஸ்தான், மாலைத்தீவு, மலேசியா, துருக்கி மற்றும் எகிப்து உள்ளிட்ட 57 நாடுகள் இந்த அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ளன.

இந்த பின்புலத்திலேயே மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பெச்சலட் தமது அறிக்கை தொடர்பில் இன்று உரையாற்றிய பின்னர், பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கை குறித்து கருத்துக்களை வௌியிட உள்ளன.

Posted in Uncategorized

முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளுக்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டியது அவசியம்: ஜெனிவாவில் வலியுறுத்தல்

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டியது அவசியமாகும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், நேற்று செவ்வாய்கிழமை அமர்வில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் யூசுப் அல் ஒதைமீன் உரையாற்றினார்.

அதன்போது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்காத நாடுகளில் முஸ்லிம் சமூகத்தின் நிலை எவ்வாறானதாக இருக்கின்றது என்பது குறித்து தமது அமைப்பு கண்காணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களின் பிரகாரம் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தினருக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சடலங்களை அடக்கம் செய்வதற்கான முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைக்கு மதிப்பளித்து, அதனை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் யூசுப் அல் ஒதைமீன் வலியுறுத்தியுள்ளார்.

மத ரீதியான சுதந்திரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், மதரீதியான அடக்குமுறைகள், பின்தள்ளுதல், சகிப்புத்தன்மை இன்மை ஆகியவற்றுக்கு எதிராக சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். மதத்தை அடிப்படையாகக்கொண்டு ஒரு நபரின் மீதோ அல்லது ஒரு சமூகத்தின் மீதோ வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதற்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய போராட்டம் தொடர்பிலும் இதன்போது அவர் கருத்து வெளியிட்டார்.

அதேவேளை அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதம் போன்றவற்றை ஒழித்து அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்டுவதற்கு பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் – ஜெனீவாவில் கனடா வலியுறுத்து

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை குறித்து கனடா கவலையடைவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இலங்கை குறித்து மேற்கண்டவாறு கூறினார்.

மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் மீதான அச்சுறுத்தல்கள், நினைவுகூரும் உரிமையை மறுத்தல் மற்றும் சிறுபான்மையினரின் உடல்கள் பலவந்தமாகத் தகனம் செய்யப்படுவது குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு இலங்கையில் நடந்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய மனித உரிமைகள் பேரவையின் அவசியத்தை, மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் வெளியிட்ட அறிக்கை எடுத்துக்காட்டுகிறது என்றும் குறிப்பிட்டார்.

அத்தோடு பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைக்குக் கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமெரிக்கா ஆதரவு

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கையில் கடந்த கால அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமை தொடர்பாக கொண்டுவரப்படும் தீர்மானங்களை ஆதரிக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிரியா மற்றும் வட கொரியாவில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள், இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமை மற்றும் தென் சூடானின் நிலைமை குறித்து மேலும் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் குறித்தும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு மீண்டும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையுடன் இணைந்துகொள்ள அமெரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2018 ஜூன் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வின்போது இலங்கை சார்பாகப் பேசுவதற்கு பதினெட்டு நாடுகள் உறுதியளித்துள்ளதாக உயர் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த நாடுகளின் உயர் மட்டப் பிரிவானது, இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும். தகவல்களின்படி, இந்த 18 நாடுகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் உறுப்பினர்களைக் கொண்ட நாடுகளும் உள்ளதுடன் அவை இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்.

யுத்த காலத்தில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பிரச்சினைகள் குறித்து இலங்கை மீது தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான முக்கிய நாடுகளின் குழுவினரின் முயற்சியைத் தடுப்பதற்கு, தமக்கு நட்பான நாடுகளின் ஆதரவைக் கோருவதற்கு இலங்கை ஒரு தீவிரமான சர்வதேச பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது.

ஐ.நா. தீர்மானத்தின் முதல் வரைவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது, 2015இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு ஒத்ததாக இருப்பதாக இலங்கை நம்புகிறது. 2019ல் பதவியேற்ற தற்போதைய அரசாங்கம் கடந்த ஆண்டு மார்ச்சில் இந்தத் தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து விலகியது.

நல்லிணக்கத்தின் அலுவலகம், இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்த அதன் கண்காணிப்பு மற்றும் அறிக்கையை மேம்படுத்தவும், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான முன்னேற்றம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தவும், மனித உரிமைகள் பேரவையில் அதன் நாற்பத்தொன்பதாவது அமர்வில் எழுதப்பட்ட புதுப்பித்த விடயங்களை உள்ளடக்கியும் முதல் வரைவு காணப்படுகிறது.

இதேவேளை, இலங்கை குறித்த தனது நிலைப்பாட்டை இந்தியா இதுவரை தெரிவிக்கவில்லை. இந்தியாவுடன் கூட்டாக கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான முன்னைய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் இருந்து தற்போதைய அரசாங்கம் விலகியுள்ளமை தொடர்பாக இலங்கை – இந்தியா இடையே நெருடல்கள் உள்ளன.

மேலும், யாழ்ப்பாணத் தீவுகளில் மூன்று தீவுகளை மின் உற்பத்தித் திட்டத்துக்காகச் செயற்படுத்த சீன நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளமை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவின் தெற்கு கடலோரப் பாதுகாப்புக் கவலைகளை மேற்கோளிட்டு சீன நிறுவனம் இலங்கையின் வடக்கில் கால்பதிப்பதை இந்தியா எதிர்க்கிறது.

இதேவேளை, இந்தியாவின் இந்தத் தலையீட்டைக் கடுமையாக எதிர்க்கும் சீன நிறுவனம் கடந்த திங்களன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், சர்வதேச ரீதியிலான போட்டி மற்றும் ஏல செயன்முறை மூலம் இந்தத் திட்டத்தை வென்றதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது- Daily Mirror.

இதேவேளை, வடக்கின் யாழ்ப்பாணத் தீவுகளில் சீனாவின் ஆதிக்கம் இருக்கக் கூடாது என்பதையும் இந்தியா, ஈழத் தமிழருடன் இணைந்து செயற்படுவதன் மூலம் இந்தியாவின் தென்முனையை நிரந்தரமாகப் பாதுகாக்க முடியும் என்பதையும் வடக்கில் தமிழர் தரப்பு வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter

Posted in Uncategorized

இலங்கை வௌிவிவகார அமைச்சரின் பதிலுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் வௌிவிவகார அமைச்சர் அளித்த பதில் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இலங்கையின் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சர்வதேசக் குற்றங்களை மறுப்பதாகவும் பொறுப்புக்கூறலை நிராகரிப்பதாகவும் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை திட்டமிட்ட பிரசாரம் என கூறி நிராகரிப்பதாகவும் கூறியதாக கண்காணிப்பகத்தின் ஜெனிவாவிற்கான பணிப்பாளர் ஜோன் பிஷர் குறிப்பிட்டுள்ளார்.

இதைக்கேட்ட பின்னர், நீதியை பின்தொடர்வதற்கான நோக்கம் இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை எவராலும் நம்ப முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, சர்வதேச பொறுப்புக்கூறல் தற்போது அவசியமாகியுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவாவிற்கான பணிப்பாளர் ஜோன் பிஷர் வலியுறுத்தியுள்ளார்.

Posted in Uncategorized

ஐ.நாவின் பூச்சிய வரைவு தீர்மானத்திற்கு பதிலளிக்கவுள்ள வடக்கு – கிழக்கு சிவில் அமைப்பு

ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் 46ஆவது மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய கோர்-குழு உறுப்பினர்கள் முன்வைத்த இலங்கை மீதான பூச்சிய வரைவு தீர்மானத்திற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ் சிவில் அமைப்புத் தலைவர்கள் ஊடக சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர்.

இது தொடர்பில் வடக்கு – கிழக்கு சிவில் சமூகம் விடுத்துள்ள அறிக்கையில்,

ஐக்கிய நாடுகள் பூச்சிய வரைவு தீர்மானம் மற்றும் தமிழ் சிவில் சமூகத்தின் பதில் என்னும் கருப்பொருளில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.

கொழும்பு, மருதானை, டீன் வீதியில் அமைந்துள்ள சமூகம் மற்றும் மதத்திற்கான மையத்தில் இச்சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றவுள்ளது.

இப் பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தலைவர்கள், தமிழ் பாதிக்கப்பட்ட குழுக்கள், தமிழ் மதத் தலைவர்கள் மற்றும் தமிழ் சிவில் சமூகங்களின் உறுப்பினர்களை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

இறுதிப்போரில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கும், இலங்கை பாதுகாப்புப் படையினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தமிழ் பெண்களுக்கும் நீதி கோரி தமிழ் சமூகம் அயராது பிரச்சாரம் செய்து வருகிறது.

இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றிற்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி) பரிந்துரைக்குமாறு சிவில் சமூகம் வலியுறுத்தியது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்குமாறு வலியுறுத்தி தமிழர்கள் ஒற்றுமையாக கோர் – குழு நாடுகளுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளனர். அதனை வலியுறுத்தி பாரிய பேரணி ஒன்றை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் முன்னெடுத்தனர்.

தற்போதைய மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் 2021 ஜனவரி 27 என திகதியிட்ட தனது அறிக்கையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளை இலங்கையின் நிலைமையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐ.சி.சி) பரிந்துரைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஐ.நாவின் முன்னாள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர்கள், ஒன்பது சுயாதீன ஐ.நா வல்லுநர்கள் மற்றும் இலங்கை தொடர்பான ஐ.நா. பொதுச்செயலாளர் வல்லுநர்கள் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் உட்பட இருபதற்கும் மேற்பட்டவர்கள் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி) பரிந்துரைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

உண்மை என்னவென்றால், இலங்கை தனது சொந்த நீதிமன்றங்களினூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கவில்லை. ஆகவே, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து உலகளாவிய அல்லது வேற்று அதிகார வரம்பு மூலம் நீதியைப்பெறுவதற்கான உயர் ஸ்தானிகரின் பரிந்துரைகளை நாங்கள் எதிரொலிக்கிறோம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி) போன்ற பொறுப்புக்கூறலுக்கான தற்போதைய சர்வதேச வழிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சில சர்வதேச நெருக்கடிகளின் எடுத்துக்காட்டுகள்:

1) இலங்கையில் ஐ.நா. பொதுச்செயலாளரின் பொறுப்புக்கூறல் நிபுணர் குழுவின் 2011 மார்ச் அறிக்கையின்படி, ஆயுதபோராட்டத்தின் இறுதிக் கட்டங்களில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் பல செய்யப்பட்டன என்றும் இறுதி ஆறு மாதங்களில் சுமார் 40,000 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

2) இலங்கையில் ஐ.நா. செயலாளர் தொடர்பான ஐ.நா. பொதுச்செயலாளரின் உள் ஆய்வுக் குழுவின் 2012 நவம்பர் மாத அறிக்கையின்படி, மே 2009 இல் முடிவடைந்த போரின் இறுதி ஆறு மாதங்களில் எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட (70,000) தமிழர்கள் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

3) இலங்கைப் படைகள் பலமுறை மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சு மற்றும் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு வலயங்களுக்குள் குண்டு வீசியதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள் மற்றும் உணவு விநியோக மையங்களில் கூட குண்டுகள் வீசப்பட்டுள்ளன. பட்டினி மற்றும் மருத்துவ சிகிச்சை இன்மை போன்ற காரணங்களால் பலர் உயிரிழந்துள்ளனர்.

4) சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ஐ.டி.ஜே.பி) 2017 பிப்ரவரி மாதம் இலங்கை இராணுவம் தமிழ் பெண்கள் “பாலியல் அடிமைகளாக” தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பிலான விவரங்களைஐ.நா.விடம் ஒப்படைத்துள்ளது.

5) 2013 ஏப்ரல் அன்று இங்கிலாந்து வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக அறிக்கையின்படி, இலங்கையில் 90,000 க்கும் மேற்பட்ட தமிழ் பெண்கள் போரினால் விதவைகளாகியுள்ளனர்.

6) குழந்தைகள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போயினர். அமல்படுத்தப்பட்ட காணாமற்போனோர் தொடர்பான ஐ.நா. செயற்குழு, உலகில் இரண்டாவது முறையாக காணாமல் போன வழக்குகள் இலங்கையிலிருந்து வந்தவை என்று கூறியது.

இலங்கை அரசாங்கம் செயற்படுத்தத் தவறிய வாக்குறுதிகள்

1) அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்கள் யு.என்.எச்.ஆர்.சி தீர்மானங்கள் எதையும் செயல்படுத்தத் தவறிவிட்டன, அவை தானாக முன்வந்து இணைந்து வழங்கியவை உட்பட.

2) முந்தைய அரசாங்கம் இணைந்து வழங்கிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்த எந்தவொரு அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறியது மட்டுமல்லாமல், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் பலமுறை மற்றும் திட்டவட்டமாக யு.என்.எச்.ஆர்.சி தீர்மானத்தை செயல்படுத்த மாட்டோம் என்று கூறியுள்ளனர்.

3) தற்போதைய புதிய அரசாங்கம் ஒரு படி மேலே சென்று, 30/1, 34/1 மற்றும் 40/1 தீர்மானங்களின் இணை அனுசரணையிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியதுடன், யு.என்.எச்.ஆர்.சி பொறுப்புக்கூறல் செயல்முறையிலிருந்து விலகிச் சென்றது.

4) மேலும் குழந்தைகள் உட்பட பொதுமக்களைக் கொன்றதற்காக எப்போதும் தண்டிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு சிப்பாய் மட்டுமே தற்போதைய ஜனாதிபதியால் மன்னிக்கப்பட்டுள்ளார்.

5) போர்க்குற்றங்களைச் செய்ததாக நம்பத்தகுந்த பல மூத்த இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு “போர்வீரர்கள்” என்று கருதப்படுகிறது. ஐ.நா. அறிக்கைகளில் போர்க்குற்றவாளி என சந்தேகிக்கப்படும் ஒரு அதிகாரி நான்கு நட்சத்திர ஜெனரலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் இந்தியாவின் நிலைப்பாடு எப்படி அமையும்?

கடந்த ஓராண்டு கால நடைமுறைகளைத் தொகுத்துப் பார்த்தால் இலங்கை அரசாங்கம் இந்தியா தொடர்பாக ஒரு ஸ்திரமான அணுகுமுறையைக் கொண்டுருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை நிர்மாணிக்கும் வேலைகளை இந்தியா மற்றும் ஜப்பானுடன் சேர்ந்து செய்வதற்கு இலங்கை அரசாங்கம் 2019இல் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது. ஆனால், கோட்டாபய ஆட்சிக்கு வந்தபின்னர் அது தொடர்பான முடிவுகள் தடுமாறத் தொடங்கின.

இந்தியாவின் அதானி குழுமத்திடம் அந்த முனையத்தை நிர்மாணிப்பதற்கான பணிகள் ஒப்படைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், துறைமுக ஊழியர்கள் சங்கம் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறப்பட்டது. துறைமுக ஊழியர் தொழிற் சங்கங்களின் பின்னணியில் சீனத் தூதரகம் இருப்பதாக ஒரு தகவல் கொழும்பில் உண்டு.

இவ்வாறு, தொழிற் சங்கங்கள் எதிர்ப்பதனால் கிழக்கு முனையத்தைத் தரவில்லை. மேற்கு முனையத்தைத் தருகிறோம் என்று இலங்கை அரசாங்கம் பின்னர் கூறியது. ஆனால், அதன்பின்னர் அதையும் தரமாட்டோம் என்று கூறியது. இந்நிலையில், கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் கிழக்கு முனைய விவகாரத்தில் அரசாங்கம் உறுதியாக இல்லை என்பது மட்டும் தெரிகிறது.

அடுத்த பிரச்சினை யாழ்ப்பாணத்தில் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் கலாசார மண்டபம். இந்த மண்டபத்தை இந்தியா கட்டிக் கொடுத்தது. அதை நிர்வகிப்பதற்குரிய ஊழியர் பலமும் அதற்கு வேண்டிய தொழில் திறனும் நிதி வளமும் தன்னிடம் இல்லை என்று முன்னாள் யாழ். மாநகர சபை முதல்வர் கூறிவிட்டார். எனவே, அந்த மண்டபத்தை மத்திய அரசாங்கமே பராமரிக்கக் கூடும் என்ற ஊகங்கள் எழுந்தன.

எனினும், அது யாழ்ப்பாணத்துக்கு என்று கட்டப்பட்ட ஒரு கலாசார மண்டபம் என்பதனால் அதனை துறைசார் தமிழர்களே நிர்வகிக்க வேண்டும் என இந்தியா விரும்பியதாகத் தெரிகிறது. எனவே, அதற்குரிய ஒரு குழுவை உருவாக்கி அதற்குத் தேவைப்பட்ட ஏற்பாடுகளையும் செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கேட்டதாக ஒரு தகவல் உண்டு. இந்தியத் தூதுவரை சந்தித்த சம்பந்தரும் அந்த மண்டபத்தை இந்தியப் பிரதமரே வந்து திறந்து தம்மிடம் கையளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

ஆனால், இடையில் வந்த ஒரு செய்தியின்படி அந்த மண்டபத்தை மத்திய அரசாங்கத்தின் கலாசார அமைச்சு பொறுப்பேற்கப் போவதாக தகவல்கள் தெரிவித்தன. இதனிடையே, யாழ். மாநகரசபை முதல்வராக இருந்த ஆர்னோல்ட் பதவியிழந்தார். மணிவண்ணன் புதிய முதல்வராக வந்தார். பதவியேற்றதும் அவர் கலாசார மண்டபம் தொடர்பான ஒரு சந்திப்புக்கு கொழும்புக்குச் சென்றார். அச்சந்திப்பில், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரும் மணிவண்ணனும் மத்திய அரசாங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பங்குபற்றினார்கள்.

கலாசார மண்டபத்தை நிர்வகிப்பதற்குத் தேவையான நிதி ஆளனி என்பவற்றோடு உரிய தொழில்சார் பயிற்சிகளை மாநகர சபைக்கு வழங்கினால் தன்னால் அதை நிர்வகிக்க முடியும் என மணிவண்ணன் உறுதியளித்துள்ளார். அருகிலிருந்த இந்தியத் துணைத்தூதுவர் அவ்வாறு ஐந்து ஆண்டுகளுக்கு யாழ். மாநகரசபைக்கு உதவி புரிய இந்தியா தயார் என்றும் உறுதி கூறியுள்ளார்.

இந்நிலையில், அங்கே பிரசன்னமாகியிருந்த மத்திய அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர், மணிவண்ணனைப் பார்த்து நீங்கள் இந்தியாவை நம்பக்கூடாது. அரசாங்கத்தை நம்பவேண்டும் என்ற தொனிப்படக் கருத்துக் கூறியுள்ளார்.

மண்டபம் திறக்கப்படும் நிகழ்வை பிரம்மாண்டமாக ஒழுங்கு செய்யவிருப்பதாகவும் அதில், இசையமைப்பாளர் ரஹ்மான் தன்னுடைய இசைக் குழுவோடு பங்குபற்றுவார் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், கலாசார மண்டபத்தைப் படைத் தரப்பிடம் ஒப்படைக்கப் போவதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இத்தகவல்கள் வெளியாகிய சில நாட்களில் தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்த இந்தியப் பிரதமர் ஆற்றிய தனது உரையில் கலாசார மண்டபத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். மாநகரசபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. இதன்படி, கலாசார மண்டபத்தை மாநகர சபையே நிர்வகிக்கப்போவதாக அறவித்துள்ளது.

அடுத்த விடயம் பலாலி விமான நிலையம். ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் அவசர அவசரமாக அது திறக்கப்பட்டது. அரசாங்கம் மாறினால் அதைத் திறப்பது கடினமாக இருக்கலாம் என்று கருதியே அவ்வாறு அது அவசரமாகத் திறக்கப்பட்டது. ஆனால், கொவிட்-19 சூழலைக் காட்டி அது மூடப்பட்டது. இன்றுவரை திறக்கப்படவில்லை. அரசாங்கம் அதைத் திறக்குமா, இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

அடுத்த விடயம் காங்கேசன்துறையில் இருந்து காரைக்காலுக்கு கப்பல் சேவை. மறவன்புலவு சச்சிதாநந்தனின் கற்பனையாகவே அது இன்று வரை காணப்படுகிறது. அவ்வாறு பயணிகள் சேவையை தொடங்குவதற்குத் தேவையான பெரிய பயணிகள் கப்பல் இலங்கையிடமும் கிடையாது இந்தியாவிடம் கிடையாது. அதை வேறு நாட்டிடமிருந்து வாடகைக்குப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்திய அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அவ்வப்போது கருத்துக் கூறிவருகிறார்கள். ஆனால், நடைமுறையில் கப்பல் ஓடவில்லை.

இதைப் போன்ற மற்றொரு விடயம், மன்னாரில் பியர் துறைமுகத்திலிருந்து இந்தியாவுக்கு போவதற்குரிய ஒரு பயணிகள் கப்பல் சேவை. இதுவும் இந்தியாவின் விருப்பத் திட்டங்களில் ஒன்றாக உள்ளதே தவிர நடைமுறையாகவில்லை.

இதில் ஆகப் பிந்திய விடயம் யாழ்ப்பாணத்தின் தீவுகளில் காற்றாலை மின் உற்பத்திக்காக சீன நிறுவனம் ஒன்றுக்கு இடங்கள் வழங்கப்படும் என்று அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தமையாகும். அதற்கு வேண்டிய அமைச்சரவை ஒப்புதலும் பெறப்பட்டது. ஆனால், சில தினங்களுக்கு முன்பு கிடைத்த செய்திகளின்படி அத்திட்டத்தை இந்தியாவிடம் கையளிக்கப் போவதாக கூறப்படுகிறது. அதற்கு வேண்டிய 12 மில்லியன் டொலர் பணத்தை இந்தியா இலங்கைக்கு உதவியாக வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில அத்திட்டத்தை சீனாவுக்கு வழங்கும் முடிவில் மாற்றமில்லை என சில நாட்களுக்கு முன்னர் கூறியுள்ளார்.

இவ்வாறான, ஒரு பின்னணியில்தான் அண்மையில் நடந்துமுடிந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணியை சிலர் இந்தியாவின் ஏற்பாடு என்றும் கூறிவருகிறார்கள். இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அது புலம்பெயர் தமிழர்களின் ஏற்பாடு என்று கூறுகிறார். ஆனால், அரசாங்கத்தின் கிழக்குக்கான முகவரான பிள்ளையான் அணியைச் சேர்ந்த அரங்கம் பத்திரிகை அந்தப் பேரணி இந்தியாவின் ஏற்பாடு என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறது.

இந்தியாவின் ஏற்பாடு என்றபடியால்தான் பொலிஸாரும் அரச படைகளும் பேரணியைத் தடுக்கவில்லை என்றும் அக்கட்டுரை ஒரு தர்க்கத்தை முன்வைக்கின்றது. கிழக்கு முனையம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்த்து அரசாங்கத்துக்கு அழுத்தத்தை பிரயோகிக்கும் ஒரு உத்தியாக மேற்படி பேரணியின் பின்னணியில் இந்தியாவே நின்றதாக அரங்கம் பத்திரிகை கூறுகிறது.

எனவே, மேற்கண்ட அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. இலங்கை அரசாங்கம் இந்தியா முதலில் என்று தனது வெளியுறவுக் கொள்கையைப் பிரகடனப்படுத்திய பின்னரும்கூட நடைமுறையில் நிலைமைகள் அவ்வாறு இல்லை. சீனாவை நோக்கிப் போவது போல அல்லது இந்தியாவிடமிருந்து விலகிச் செல்வது போல அல்லது இந்தியாவுக்குப் பாதகமான கேந்திர முக்கியத்துவம் மிக்க சில நடவடிக்கைகளை எடுப்பது போல ஒரு தோற்றத்தைக் காட்டி அதன்மூலம் அரசாங்கம் தன்னுடைய பேரத்தை அதிகப்படுத்தி வருகிறதா என்ற கேள்வி இங்கு முக்கியமானது.

இதன் விளைவாகத்தான் கடந்த கிழமை தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்த இந்திய பிரதமர், ஈழத் தமிழர்கள் தொடர்பாகப் பேச வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டதா? அது போலவே இந்திய அமைச்சர் ஒருவர் பாரதிய ஜனதாக் கட்சியை இலங்கைக்கும் விஸ்தரிக்கப் போவதாகக் கூறியதை மறவன்புலவு சச்சிதானந்தன் ஆமோத்தித்துள்ளார் என்பதும் எதைக் காட்டுகிறது? இலங்கை மீதான இந்திய அழுத்தப் பிரயோக உத்தியின் பிந்திய வடிவமா இது?

ஆயின், நடக்கவிருக்கும் ஜெனீவா கூட்டத் தொடரில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு அமையும்? இது தொடர்பாக அரசாங்கம் இந்தியாவுக்கு அனுப்பிய கடிதத்துக்கு இந்தியா இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் பதிலளித்திருக்கவில்லை.

இந்தியாவின் நிலைப்பாடு எப்படியும் அமையலாம். இந்தியப் பேரரசு தனது நலன்களின் நோக்கு நிலையிலிருந்தே அதை முடிவெடுக்கும். ஆனால், ஈழத் தமிழர்கள் தமது நலன்களின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதற்கு வேண்டிய தயாரிப்புக்களுடன் காணப்படுகிறார்களா என்பதே இங்குள்ள முக்கியமான கேள்வியாகும்.

இந்தியா – சீனா என்ற இரண்டு துருவ இழுவிசைகளுக்கும் இடையே சுழித்தோடி அரசாங்கம் தனது பேரத்தை அதிகப்படுத்திவரும் ஒரு பின்னணியிலும் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த அடுத்த ஐ.நா. தீர்மானத்தின் முதல் வரைபானது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையிலிருந்து பாரதூரமான விதங்களில் வேறுபட்டிருக்கும் ஒரு சூழலிலும் தமிழ் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்