தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாயாக அதிகரிப்பு!

பல வருடங்களாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் கோரிய நாளொன்றுக்கான அடிப்படை சம்பளமான 1000 ரூபாயை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படை சம்பளத்தை 900 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மேலதிக கொடுப்பனவாக 100 ரூபாயினை பெற்றுக் கொடுக்க சம்பள நிர்ணய சபை அனுமதி வழங்கியுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் தோட்ட முதலாளிமார் சம்மேளத்தின் சார்பில் 08 பேரும், தோட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் 08 பேரும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 03 பேரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

Posted in Uncategorized

ஜெனிவாவில் எத்தகைய நெருக்கடிகள் வந்தாலும் நாட்டின் சுயாதீன தன்மையை விட்டுக்கொடுக்க போவதில்லை – பிரதமர்

யுத்தத்தை வெற்றிக் கொண்ட இராணுவத்தினரை நல்லாட்சி அரசாங்கம் ஜெனிவாவில் குற்றவாளியாக்கியது. பல நெருக்கடிகளை எதிர்க்கொள்ள நேரிடும் என்பதை நன்கு அறிந்து நாட்டுக்கு எதிரான பிரேரணையில் இருந்து விலகினோம். எவ்வாறான நெருக்கடி ஏற்பட்டாலும் நாட்டின் சுயாதீனத்தன்மையை விட்டுக் கொடுக்கமாட்டோம். நாட்டின் உரிமை நாட்டு மக்களுக்கே வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சியம்பலான்டுவ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற மத நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமர் மேலும் குறிப்பிடுகையில்,

பௌத்த சாசனத்தை முன்னிலைப்படுத்தி அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படுகிறது.நாட்டின் நன்மைக்கு சர்வ மதங்களின் ஆசிர்வாதம் அவசியமாகும். அனைத்து மதத்தின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளது பௌத்த சாசனத்துக்கு எதிராக நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டது. இதனால் கடந்த காலங்களில் மதங்களுக்கிடையில் பாரிய பிணக்கு ஏற்பட்டது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் ராஜபக்ஷ பெயருடன் தொடர்புடையவர்களையும், எமது ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகளையும் நல்லாட்சி அரசாங்கம் அரசியல் பழிவாங்களுக்குட்படுத்தியது.பௌத்த மதத்துக்கும்,பௌத்த மத தலைவர்களுக்கும் எதிராக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட பௌத்த சாசனத்தை பாதுகாக்க வேண்டிய எதிர்பார்ப்பு அனைத்து தரப்பிலும் காணப்பட்டது. இவ்வாறான நிலையில் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பௌத்த சாசனத்தை பாதுகாக்க புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. பிக்குகளின் பெற்றோருக்கு வீடு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

30 வருட கால யுத்தம் பொருளாதாரம், சமூகம், நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. முடிக்க முடியாது என்று குறிப்பிட்ட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து குறுகிய காலத்தில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, பொருளாதாரம் ஆகியவற்றை ஒருசேர முன்னேற்றமடைய செய்தோம்.

யுத்தத்தை வெற்றிக் கொண்ட இராணுவத்தினரை நல்லாட்சி அரசாங்கம் ஜெனிவாவில் குற்றவாளியாக்கியது. நெருக்கடிகளை எதிர்க் கொள்ள நேரிடும் என்பதை நன்கறிந்து நாட்டுக்கு எதிரான பிரேரணையில் இருந்து விலகினோம்.நாட்டின் சுயாதீனத்தன்மைக்கான நெருக்கடியான பல தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

நாட்டின் உரிமையை நாட்டு மக்களுக்கே வழங்குவோம். தற்போதும் கூட நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் சுயாதீன முறையில் தீர்மானம் எடுத்துள்ளோம். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மத தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள். ஆகவே மத தலைவர்கள் அரசாங்கத்தின் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி ஆட்சியை நல்வழிப்படுத்த தொடர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

பேரணி இலக்கைச் சென்றடைந்தது- பொலிகண்டியில் இறுதிப் பேரெழுச்சிப் போராட்டம்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி பல்லாயிரக் கணக்கானோரின் ஆதரவுடன் பொலிகண்டியைச் சென்றடைந்ததுடன் ஐந்து நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பேரணி நிறைவுக்கு வருகிறது.

பல தடைகளை உடைத்து ஐந்தாம் நாளான இன்று தனது இலக்கை அடைந்தது பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் பேரணி.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியைத் தடுக்க யாழ். மந்திகை மடத்தடியில் வீதி மறியல் செய்து பொலிஸார் தடை ஏற்படுத்திய போதும் மக்கள் எழுச்சி பேரணி அதனை உடைத்து முன்னேறி இன்று மாலை தனது இலக்கான பொலிகண்டியை அடைந்தது.

பேரணியில் கலந்துகொண்டோரை பதிவு செய்தே அனுமதிக்க முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் பெரும் திரளான மக்கள் எதிர்ப்பை வெளியிட்டதால் பொலிஸார் குறித்த இடத்தில் இருந்து விலகிச்சென்றனர்.

இந்நிலையில், அங்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பேரெழுச்சிப் போராட்டம் இடம்பெறுவதுடன், பேரணியின் நினைவாக குறித்த பகுதியில் மரக்கன்றும் நடப்பட்டுள்ளது.

வாழ விடு வாழ விடு தமிழினத்தை, அழிக்காதே அழிக்காதே வாழ்விடங்களை அழிக்காதே என்ற வாசகங்கள் விண்ணதிரச் சிங்களத்தின் செவிப்பறை கிழிய ஐந்து நாள் பேரணி இன்று மாலை மணியளவில் வந்தடைந்துள்ளது.

பொத்துவிலில் கடந்த 3 ம் திகதி கொட்டும் மழையில் பல விசேட அதிரடிப்படையினர், பொலிஸாரின் பல்வேறுபட்ட தடைகளை உடைத்து , அரசியல் சமூக ஆர்வலர்களின் நீதிமன்ற தடையுத்தரவுகளை வழங்கப்பட்டு மக்கள் உணர்வெழுர்சி பாரிய போராட்டமாக வடக்கு, கிழக்கு தாயகங்களில் உணர்வோடு அனைவரும் தங்களை ஈடுபடுத்தினர்.

அம்பாறை பொத்துவில் ஆரம்பித்த நீதிக்கான பேரணி மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஊடாக இன்று 7 ம் திகதி யாழ் பொலிகண்டி முற்றத்தை வந்தடைந்துள்ளது.

தமிழர்களுக்கு அநீதி இழைத்து சிங்களத்திற்கும், தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், உள்ளிட்ட தமிழருக்கு இந்த தேசத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்குச் சர்வதேச விசாரணையை வலியுறுத்திய போராட்டம் உலகைச் சற்று இலங்கை தீவை உற்றுப் பார்க்க வைத்துள்ளது.

சிங்கள – பௌத்த மக்களைச் சீற்றமடையச் செய்யாதீர்!-எச்சரித்த கோட்டா அரசு

“சிங்கள – பௌத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களால் பேரணியில் கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இது சிங்கள மக்களை சீற்றமடையச் செய்யும் செயலாகும்.”

இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது

“ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையுடன் செயற்படும் அரசு நாட்டு மக்களை சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று வேறுபடுத்திப் பார்க்கவில்லை.

ஆனால், தமிழ், முஸ்லிம் சமூகம் தான் நாட்டின் சட்ட திட்டங்களை மீறி, நீதிமன்ற உத்தரவுகளை மீறி போராட்டங்களை நடத்தி இன்று இரண்டு இனங்களுக்கிடையில் பிளவுகள் இருக்கின்றன என்று சர்வதேசத்துக்குப் பொய்ப்பித்தலாட்டம் ஆடுகின்றன.

இந்த நாட்டில் பிரச்சினை இருந்தால் அதனை அரசுதான் தீர்க்க வேண்டுமே தவிர சர்வதேசத்தால் அதனைத் தீர்க்க முடியாது. பேரணி ஏற்பாட்டாளர்கள் இதனைக் கவனத்தில்கொள்ள வேண்டும்” – என்றார்.

யாழ். நல்லூரைச் சென்றடைந்தது பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியை யாழ்ப்பாணம் மாநகருக்குள் செம்மணி நல்லூர் அலங்கார வளைவில் வைத்து மக்கள் அணிதிரண்டு வரவேற்றனர். இந்த வரவேற்பில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் பங்கேற்றார்.

ஐந்தாம் நாளான இன்று காலை கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

முகமாலையை வந்தடைந்த போது மக்கள் அணிதிரண்டு குறித்த பேரணியை யாழ்ப்பாணத்துக்கு வரவேற்றனர். இதேவேளை, சாவகச்சேரி நகரிலும் வரவேற்பளிக்கப்பட்டு தீப்பந்தங்கள் ஏந்தி போராட்டம் இடம்பெற்றது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகருக்குள் வரவேற்கும் வகையில் செம்மணி நல்லூர் அலங்கார வளைவில் வைத்து மக்கள் பேரணிக்கு வரவேற்பளித்தனர்.

வடக்கு – கிழக்கு மாகாண, சமயத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து மக்களை அணி திரட்டி இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.

தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடகிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Posted in Uncategorized

பொத்துவில் – பொலிகண்டி வரையிலான இறுதிநாள் போராட்டத்திற்கு அணிதிரளுங்கள் – யாழ் மாநகர துணை மேயர் ஈசன் அழைப்பு

நீதிக்கான போராட்டத்திற்கு அணிதிரள யாழ் மக்களுக்கு யாழ் மாநகர துணை முதல்வர் ஈசன் அழைப்பு விடுத்துள்ளார் அவர் மேலும் தெரிவித்ததாவது

தமிழ் பேசும் மக்களின் வாழும் உரிமையை உறுதி செய்யும் வகையில் நீதிகோரி பொத்துவிலில் ஆரம்பித்து வடக்கு கிழக்கு சிவில் அமைப்பினரால் முன்னெடுத்துவரும் மக்கள் எழுச்சிப் பேரணி நாளை யாழ்ப்பாண எல்லையை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது

வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தின் உயிர்நாடி வழியே உரிமைக்கு வழிசமைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் குறித்த பேரணியை வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணத்தில் வரவேற்க அணி திரண்டு வாருங்கள்.

இது கட்சி, அரசியல் கடந்த இனத்திற்கான அழைப்பு.

எமது உணர்வு! எமது உரிமை! என்ற பொதுமை அடையாளத்தில் தமிழர்களாய் அணிதிரள்வோம்

யாழ்ப்பாணத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்கள், இளையோர் அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் நாளை ஞாயிற்றுக் கிழமைஒன்றிணைய ஆயத்தமாகுங்கள்.

குறித்த வழித்தடத்தில் உள்ள ஆர்வலர்களும் நீதிக்கான பேரணியை வரவேற்கவும், அணி சேர்ந்து பலம் சேர்க்கவும் முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்

எமது உணர்வு! எமது உரிமை!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை இணைவோம் தமிழர்களாய்! என யாழ் மாநகர துணை முதல்வர் ஈசன் தெரிவித்துள்ளார்

Posted in Uncategorized

இலங்கையில் கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 350ஐத் தாண்டியது

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 351 ஆக அதிகரித்துள்ளது.

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிப்பதற்கான கல்வி அமைச்சின் அனுமதி ஆளுநரிடம் கையளிப்பு

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிப்பதற்கான கல்வி அமைச்சின் எழுத்து மூலமான அனுமதியினை வட மாகாண ஆளுநரிடம் கல்வி அமைச்சலர் ஜி.எல். பீரிஸ் அவர்கள் நேற்று (05) கையளித்துள்ளார்.

யாழ் பல்கலைழக கிளிநொச்சி விவசாய பீடத்தின் ஆய்வு பயிற்சி கட்டடத் தொகுதியினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் வட மாகாண ஆளுநரிடம் இதற்கான அனுமதி கடிதத்தையும் கையளித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம் கிளிநொச்சி கல்வி வலயம் என இதுவரை காலமும் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பளை என நான்கு கோட்டக் கல்வி பிரிவுகளாக 104 பாடசாலைகளுடன் 32,028 மாணவர்கள் 2,035 ஆசிரியர்கள் 28 உயர்தர வகுப்புகளைக் கொண்ட பாடசாலைகள், என இயங்கி வருகிறது.

எனவே கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் மாவட்டம் மற்றும் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், தற்போது மத்திய கல்வி அமைச்சின் அனுமதியும் கிடைத்துள்ளது.

இனி குறித்த அனுமதியுடன் அமைச்சரவைக்கு விடயம் கொண்டு செல்லப்பட்டு, அங்கும் அனுமதி பெறப்பட்ட பின்னர் வலயப் பிரிப்புக்கான பணிகள் உத்தியோகப் பூர்வமாக முன்னெடுக்கப்படும் எனவும் கிளிநொச்சி கல்வி வலயம் தெரிவித்துள்ளது.

அத்தோடு கரைச்சி பூநகரி ஒரு வலயமாகவும், பளை, கண்டாவளை ஒரு வலயமாகவும் இரண்டு வலயங்கள் பிரிக்கப்படவுள்ளன.

பொத்துவில் – பொலிகண்டி பேரெழுச்சிப் பேரணி கிளிநொச்சி நகரை அடைந்தது!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி மன்னாரில் இருந்து கிளிநொச்சி நகரை அடைந்துள்ளது.

பேரெழுச்சிப் பேரணியின் நான்காம் நாளான இன்று வவுனியாவில் இருந்து காலையில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி, கொறவப் பொத்தான வீதி ஊடாக மன்னார் மாவட்டத்துக்குச் சென்றிருந்தது.

அங்கு ஆயிரக்காணக்கானோரின் ஆதரவுடன் தொடர்ந்த பேரணி வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகருக்குச் சென்று அங்கிருந்து தற்போது கிளிநொச்சி நகரை அடைந்துள்ளது.

இதன்போது குறித்த பேரணியை ஆதரிக்கும் வகையில் கிளிநொச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியின் இரு மருங்கிலும் திரண்டு நிற்பதாக கூறப்படுகிறது.

இந்தப் போராட்டத்திற்கு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் எனப் பெரும் திரளான மக்கள் தமது ஆதரவினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Posted in Uncategorized

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டம் மன்னாரைச் சென்றடைந்தது

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி இன்று சனிக்கிழமை காலை 7.45 ம‌ணி‌க்கு வவுனியா புதிய பேருந்து நிலையத்தின் முன்பு ஆரம்பமாகிய நடைபவனியானது வவுனியா நகரின் ஊடாக மன்னாரை நோக்கி சென்றடைந்துள்ளது.

காலை 9.00 மணிக்கு பண்டார வன்னியின் சிலை அருகே வாகன பேரணியாக புறப்பட்டு பட்டாணிச்சூர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன்பாக நடைபவனியாகச்சென்று நெளுக்குளம், புவரசக்குளம் ஆகிய பகுதிகளை கடந்து மன்னார் பரையநாளன் குளம் வீதியைச் சென்றடைந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து 12 மணியளவில் மடுவீதியை சென்றடைந்து குறித்த ஊர்வலம் மடுவ சந்தியிலிருந்து முருங்கன் ஊடாக மன்னரை சென்றது.

குறித்த ஊர்வலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சர்வமதத் தலைவர்கள் உள்ளடங்கலாக இளைஞர்களும், முஸ்லீம் மக்களும் ஊர்வலத்தில் கைகோர்த்துள்ளனர்.

பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டபோதும் சோதனைச் சாவடிகளை தகர்த்தெரிந்து குறித்த ஊர்வலம் மன்னார் நோக்கிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.