இனப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாத இராணுவ பயிற்சி ஆபத்தானது -ரெலோ இளைஞர் அணி செயலாளர் சபா குகதாஸ் எச்சரிக்கை

இனப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாத இராணுவ பயிற்சி ஆபத்தானது என்கிறார் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் ரெலோ இளைஞர் அணி செயலாளருமான சபா குகதாஸ்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

இலங்கை அரசாங்கத்தின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறிய 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான இராணுவப் பயிற்சி இந்த நாட்டின் தமிழ் சிங்கள மக்களிடையே இன நல்லிணக்கம் ஏற்படாமல் தொடர்ந்தும் சந்தேகங்கள், முரண்பாடுகள், பரஸ்பரம் இனங்களிடையே உரிமைகளை பகிர்ந்து கொள்ளாமை, போர்க்குற்றங்கள் மனிதப் படுகொலைக்கான நீதி நியாயங்கள் கிடைக்கப் பெறாத வரை இராணுவ பயிற்சியை தமிழர் தலைமைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளுதல் இன ரீதியாக பாரிய ஆபத்துக்களை உருவாக்கும். இலங்கை அரசாங்கம் கட்டாயப் படுத்தலில் வடக்கு கிழக்கில் கொடுப்பது வேறு. அதனை தமிழர் தரப்பு தலைமைகளின் ஆதரவுடன் கொடுப்பது இனத்தின் நீதிக்கான பயணத்தில் பின்னடைவை உருவாக்கும்.

இலங்கை இராணுவம் போர் விதி முறைகளை மீறியுள்ளமை தொடர்பாக நீதி கேட்கும் தமிழர் தரப்பு அந்த குற்றங்களை புரிந்த இராணுவ தளபதியே பொறுப்பாக இருக்கும் போது இந்த இராணுவத்தை வழி நடாத்திய ஆட்சியாளர்களே ஆட்சிக் கதிரையில் இருக்கும் போது அவர்களின் பயிற்சியை நாமே ஏற்றுக் கொள்வது குற்றம் இழைத்தவர்களை நாமே பிணை எடுப்பதற்கு நிகரானதாகும் இங்கு தான் தமிழர்களுக்கு ஆபத்து உருவாகிறது.

இராணுவப் பயிற்சி தலைமைத்துவ பண்புகளை நன் நடைத்தைகளை உருவாக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இடம் இல்லை. ஆனால் அப் பயிற்சி கொடுக்கும் தரப்பிடம் அவ்வாறான எண்ணம் உள்ளதா என்பதை நாம் ஆராய வேண்டும் அவ்வாறு இலங்கை இராணுவத்திடம் உள்ளாதா? என்றால் தமிழர் தரப்பின் சாதாரண பிரஐை கூட சொல்லுவான் பதில் இல்லை என்று.

இராணுவப் பயிற்சியில் அடிப்படைப் பயிற்சி என்பது பாலர் பாடசாலை போன்றது பாலர் பாடசாலையில் கற்பிக்கப்படும மனப்பதிவை எப்படி ஒரு மாணவன் தன் வாழ்வில் நடைமுறைப்படுத்துகின்றானோ அதே போன்றது தான் இராணுவப் பள்ளியில் வழங்கப்படும் அடிப்படை பயிற்சியும் அமையும்.

இராணுவ பயிற்சி கல்லூரியில் 16 வயது மாணவனை அனுப்பி பயிற்சி பெற வைத்தால் அங்கு பயிற்றப்படும் கோசம், தேசியம் சார்ந்த விடையங்கள்,தேசியக் கொடியின் மகிமை , நாடு பற்றிய கொள்கைகள் என பல விடையங்கள் பயிற்று விக்கப்படும். தற்போது தமிழர்களின் பூர்விக அடையாளங்களை மாற்றியமைக்கும் இலங்கை அரசு தமிழ்த் தேசியம் தொடர்பாக பயிற்சி கல்லூரியில் மூச்சு விடுமா?

தமிழ்த் தேசியம் பேசி வாக்கு வேட்டையில் ஈடுபடும் தமிழர் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் இதனை புரிந்து கொள்ள வேண்டும் எழுந்த மானமாக தமிழில் பயிற்சி கொடுக்கலாம் முன்னாள் போராளிகளை பயிற்சி ஆசிரியர்களாக நியமிக்கலாம் எனவும் இல்லாவிட்டால் தென் இந்தியாவில் இருந்து பயிற்று விற்பாளர்களை வரவழைக்கலாம் என கூறுவது மிகவும் பொறுப்பற்ற கருத்துக்கள் மாத்திரமல்ல இனத்தின் விடுதலைக்கான தூர நோக்குப் பார்வை இல்லாததன் வெளிப்பாடாகவே இக் கருத்துக்கள் அமைந்துள்ளன.

முன்னாள் போராளிகளை தொடர்ந்தும் விசாரணையில் சந்தேக கண் கொண்டு புலனாய்வார்களின் கிடுக்குப் பிடியில் வைத்திருக்கும் இராணுவ இயந்திரத்திடம் , தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் நடவடிக்கையை ஒரு நிகழ்ச்சி நிரலாக செய்யும் அரசாங்கத்திடம், தென்னிந்திய தமிழர்களின் ஆதரவு ஈழத் தமிழர்கள் பக்கம் இருப்பதை பொறுத்துக் கொள்ளாமல் தமிழக மீனவர்களை ஈவிரக்கம் அற்ற வகையில் கொன்றேழித்த இலங்கை அரசாங்கத்திடம் நல்லெண்ண வெளிப்பாடுகளை எதிர்பார்க்க முடியுமா? தமிழர் தலைவர்கள் நிதானமான முடிவுகளை கருத்துக்களை முன் வைப்பதுடன் தமிழர் தேசம் பலம் இழக்கும் நிலைக்கு பாதை அமைக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

மகாத்மா காந்தியின் 73 ஆவது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

மகாத்மா காந்தியின் 73ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக உள்ள அவரது உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் இந்தியத் துணைதூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது.

நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர் கே.பாலசந்திரன்இ நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன்இ யாழ்ப்பாணம் மாநகர முதலவர் வி.மணிவண்ணன்,ரெலோ யாழ் மாவட்ட பிரதி தலைவரும், யாழ் மாநகரசபை துணை முதல்வருமான ஈசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மகாத்மா காந்தி என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் காந்தி 1869ஆம் ஆண்டு ஒக்டோபர் 2ஆம் திகதி குஜராத் மாநிலம் போர்ப்பந்தரில் கரம்சந்த் காந்தி-புத்லிபாய் தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.

இந்தியாவின் விடுதலைக்காக வித்திட்ட முக்கியத் தலைவர்களின் இவருடைய பெயர்தான் முதன்மையாக உச்சரிக்கப்பட்டது.

இந்திய விடுதலை போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழிவகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

அகிம்சை முறையில் போராடிய மகாத்மா காந்தி 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி புதுடில்லி பிர்லா மாளிகை காந்தி சமிதி தோட்டத்தில் நாதுராம் கோட்ஸே ஆல் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது. இவரது நினைவு நாளை தியாகிகள் தினமாக போற்றுகின்றனர்.

பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி மன்னார் விஜயம்!

பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான திருப்பீடப் பிரதி நிதி அருட்கலாநிதி பிறையன் உடைக்வே ஆண்டகை மன்னார் மறைமாவட்டத்திற்கு நேற்றைய தினம்(29-01-2021) வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் விஜயம் செய்திருந்தார்.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (29) மாலை 5.30 மணியளவில் மன்னார் நகரை வந்தடைந்த பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான திருப்பீடப் பிரதிநிதி அருட்கலாநிதி பிறையன் உடைக்வே ஆண்டகை அவர்கள் மன்னார் நகர பகுதியில் அமைந்துள்ள மடு அன்னையின் திருச் சொரூபத்தில் ஆசி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து மன்னாரிற்கு வருகை தந்த பிரதி நிதியை மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை தலைமையில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,சாள்ஸ் நிர்மலநாதன், ரெலோ மன்னார் நகர முதல்வர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஆகியோர் வரவேற்றனர்.

இதனையடுத்து மன்னார் நகர பகுதியில் இருந்து மன்னார் புனித செபஸ்தியார் பேராலயம் வரை திறந்த வாகனத்தில் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான திருப்பீட பிரதி நிதி மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை ஆகியோர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன் போது பாடசாலை மாணவர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள்,மன்னார் மறைமாவட்ட மக்கள் ஆகியோர் பவனியாக ஆலயம் நோக்கி சென்றனர்.

மன்னார் செபஸ்தியார் பேராலயத்தில் விசேட திருப்பலி இடம் பெற்றதோடு நற்கருனை ஆசீர்வதமும் இடம் பெற்றது.

சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான கவலைகொள்ளத்தக்க அறிகுறிகள் இலங்கையில் – பின்லாந்து தூதுவர்

சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான கவலைகொள்ளத்தக்க செயற்பாடுகளின் அறிகுறிகள் இலங்கையில் தென்படுவதாக இலங்கைக்கான பின்லாந்து தூதுவர் ஹரி கமரெய்னென் தெரிவித்துள்ளார்.

இலங்கை, பாகிஸ்தான், பூட்டான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான பின்லாந்து நாட்டின் தூதுவர் ஹரி கமரெய்னென் இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

அதன்படி இலங்கையில் வசிக்கும் மிகக்குறுகிய பின்லாந்து தமிழ்ச்சமூகத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கும் அவர், இலங்கையில் சிறுபான்மை தமிழ்ச்சமூகத்தின் நிலை தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.

இதுகுறித்து அவர் பின்வருமாறு டுவிட்டரில் பதிவுசெய்திருக்கிறார்:

‘இலங்கையில் வாழும் மிகக்குறுகிய பின்லாந்து தமிழ்ச்சமூகத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்தேன்.

இலங்கையின் சிறுபான்மைத் தமிழர்களின் நிலை தொடர்பில் சுருக்கமாக விளக்கமளித்தமைக்கு அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

துரதிஷ்டவசமாக சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான கவலைகொள்ளத்தக்க செயற்பாடுகளின் அறிகுறிகள் இலங்கையில் தென்படுகின்றன’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பேருந்து நிலையத்தில் தமிழுக்கு இரண்டாமிட விவகாரம்: ரெலோ துணை மேயர் பிரேரணை சமர்ப்பிப்பு!

யாழ். மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேருந்து நிலையத்தில் உள்ள பெயர் பலகைகளில் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி,ரெலோ யாழ் மாவட்ட பிரதி தலைவரும், யாழ் மாநகரசபை துணை முதல்வருமான ஈசன் யாழ் மாநகரசபையில் பிரேரணை சமர்ப்பித்துள்ளார்.

அடுத்த அமர்வில் இந்த விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அண்மையில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தின் அறிவிப்பு பலகைகளில், தமிழ் மொழி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள விடயத்தை ரெலோ பிரதி மேயர் ஈசன் வெளிப்படுத்தியிருந்தார்.

Posted in Uncategorized

8 கொரோனா மரணங்கள் பதிவு : இலங்கையில் 305ஆக அதிகரித்துள்ளது கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300 யை தாண்டியுள்ளது.

நாட்டில் இறுதியாக 8 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மொறட்டுவை, பிலியந்தலை, சாய்ந்தமருது, கொலன்னாவ, பாணந்துறை, காலி, களுத்துறை

மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 8 பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 4 ஆண்களும், 4 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொவிட் தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 305ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் வலியுறுத்தல்

இலங்கையில் தற்போது மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும் ஏற்றவகையிலான புதியதொரு தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் ஒன்றிணைந்து நிறைவேற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டதை அடுத்து மனித உரிமைகள் பேரவையினால் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, அதன் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைவாக செயலாற்றுவது அவசியமாகும்.

இலங்கையில் தற்போது மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும் ஏற்றவகையிலான புதியதொரு தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை நிறைவேற்ற வேண்டும்.

இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலைவரம் பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடிய மீறல்களை எதிர்கொள்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மனித உரிமைகள் பேரவை எடுக்கவேண்டும் என்றும் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிசெய்யும் வகையில் 2015 ஆம் ஆண்டில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் விலகுவதாக அறிவித்ததுடன் அடிப்படை மனித உரிமைகளை நிலைநாட்டுவதிலும் பொதுவான புறக்கணிப்பை வெளிப்படுத்தியது.

இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச சட்டங்களுக்கு முரணான குற்றங்கள் மற்றும் மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் வகையில் மனித உரிமைகள் பேரவை செயற்பட வேண்டும்.

இதுவிடயத்தில் உரிய நடவடிக்கையை மேற்கொள்வதற்கென ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்குப் பல தடவைகள் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களையும் வலுவற்ற குழுக்களையும் பாதுகாப்பதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக மாறியிருக்கிறது.

கடந்த 2009 மேமாதம் முடிவிற்கு வந்த இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போரின் போது இருதரப்புமே பாரிய மீறல்களைப் புரிந்ததுடன் அதன்விளைவாகப் பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இவை போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையாளர்களால் இனங்காணப்பட்டது.

எனினும் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வருகையைத் தொடர்ந்து மேற்படி மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பல உயரதிகாரிகள் மீண்டும் அரசாங்கத்திற்குள் உள்வாங்கப்பட்டனர்.

இவை தொடர்பில் விசாரணை செய்வதற்காகக் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களால் கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

எனினும் கடந்த காலங்களில் பல்வேறு ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தாலும், அவை உண்மையைக் கண்டறிவதிலிருந்தும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதிலிருந்தும் தவறியிருக்கின்றன என்று ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் எவ்வித சந்தேகங்களுக்கும் இடமளிக்காத வகையிலான மிகத்தெளிவான அறிக்கையொன்றையே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் முன்வைத்திருக்கின்றார்.

ஆகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் ஒன்றிணைந்து இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கும் நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதற்கும் ஏற்றவாறான வலுவானதொரு புதிய தீர்மானத்தை நிறைவேற்றுவது அவசியமாகும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையை நாம் உன்னிப்பாக அவதானிக்கின்றோம் – அமெரிக்கா

இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அறிக்கையை கவனமாக பரிசீலித்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் குறித்த அறிக்கையில் அரசாங்க செயற்பாடுகளை இராணுவமயமாக்குதல், பொது சமூகத்தை மிரட்டுதல் என்பவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அத்துடன் சர்வதேச சமூகத்தின் மேம்பட்ட கண்காணிப்பு மற்றும் வலுவான தடுப்பு நடவடிக்கைகளை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

இந்த நிலையில் இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை தாங்கள் கவனமாக பரிசீலித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் எதிர்காலம் மனித உரிமைகளை மதித்தல் மற்றும் கடந்த காலத்தை கையாள்வதில் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுப்பதைப் பொறுத்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை பொறுப்பேற்க நடவடிக்கை எடுத்த ‘மாத்தளை சஹ்ரான்’

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாத அமைப்பு நேரடியாக தொடர்புபடவில்லை என்பதும், தாக்குதலின் பின்னர் அதற்கான பொறுப்பை அவ்வமைப்பு ஏற்பதற்கான நடவடிக்கைகளை ‘மாத்தளை சஹ்ரான்’ எனும் சந்தேக நபரே முன்னெடுத்திருந்ததாகவும் விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது.

தனது ஆலோசனைகளின் கீழ், சி.ஐ.டி.யின் டிஜிட்டல், கணினிக்குற்றம் மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவினை மேற்பார்வை செய்யும் சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சர் தர்ஷிகா குமாரி , பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன ஆகியோரின் குழுவினர் முன்னெடுத்த விசாரணைகளில் இது தெரியவந்ததாக சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர கூறினார்.

உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் சாட்சியமளிக்கும் போது, அவர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமாரப்பெருமவின் கேள்விகளுக்கு பதிலளித்து சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை வெளிப்படுத்தினார்.

‘இவ்விசாரணைகளில் மாத்தளை சஹ்ரான் எனும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரே ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதலின் பின்னர் தொடர்புகொண்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்தது. தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்க அப்பயங்கரவாத அமைப்புக்கு கோரிக்கையானது அவர் ஊடாக சென்றுள்ளது.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தர்ஷிகா குமாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, ‘சொனிக் சொனிக் ‘ எனும் புனைப் பெயரில் செயற்படும் தேசிய உளவுச் சேவை அதிகாரி ஒருவரினால் குறித்து தகவல் வெளிப்பட்டது. குறித்த அதிகாரி மாத்தளை சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில் அவரிடம் வாக்கு மூலம் பெற சி.ஐ.டி. அதிகாரிகள் சென்ற போது, தேசிய உளவுச் சேவை பணிப்பாளர் உள்ளிட்டோர் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் சொனிக் சொனிக் எனும் புனைப் பெயர் கொண்ட அதிகாரியிடம் விசாரித்து வாக்கு மூலம் பெற நான் தலையீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.’ என தெரிவித்தார்.

முன்னதாக ஆணைக் குழுவில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஷானி அபேசேகர,

‘இந்த தாக்குதலுடன் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்புக்கு நேரடி தொடர்பு இல்லை என அப்போது விசாரணைகளில் தெரியவந்தது. வெளிநாட்டு உளவுச் சேவைகள், விசாரணைப் பிரிவுகள் மற்றும் இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் அவ்விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

எனினும் அத்தாக்குதலை நெறிப்படுத்தியவர் யார் எனும் கேள்வி இன்றும் தொடர்கிறது. காரணம், எந்தவொரு பயங்கரவாத அமைப்பினதும் தலைவர் முதல் அணியிலேயே தானும் தற்கொலை செய்துகொண்டதாக வரலாறு இல்லை. எனவே சஹ்ரானை இயக்கியவர் யார் என்ற கேள்வி இன்னும் உள்ளது.’ என தெரிவித்தார்.

Posted in Uncategorized

அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணியமாட்டோம்! கெஹலிய ரம்புக்வெல

“ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தின் அழுத்தங்களுக்கு இலங்கை ஒருபோதும் அடிபணியமாட்டாது. ஜோ பைடன், தமது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதலில் கவனம் செலுத்த வேண்டும்.

அதைவிடுத்து பிற நாட்டு விடயங்களில் அவர் தலையிடக்கூடாது.” என அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

‘இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ள புதிய ஆணைக்குழுவால் அனைத்தும் முறையாக நடந்துவிடப்போவதில்லை.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்குத் தொடர்ந்தும் அழுத்தங்களை வழங்கும்.

ஆட்சி மாறினாலும் அமெரிக்காவின் கொள்கைத்திட்டத்தில் மாற்றம் ஏற்படாது’ என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இலங்கையில் தற்போதைய ஆட்சியில் மனித உரிமைகள் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன.

கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்கள் மீறப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி நியமித்துள்ள புதிய ஆணைக்குழு ஆராய்ந்து நிரூபித்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை இந்த அரசு வழங்கியே தீரும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்காவோ அல்லது வேறெந்த நாடுகளோ தலையிட முடியாது.

அமெரிக்காவின் எல்லை மீறிய நடவடிக்கைகளால்தான் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை நெருக்குவாரங்களைச் சந்திக்க வேண்டி வந்தது.

இம்முறையும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் இலங்கை மீது மேலும் நெருக்குவாரங்களைப் பிரயோகிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

எனினும், இலங்கையின் நட்பு நாடுகள் இதனை எதிர்க்கும். இலங்கையும் தமது நிலைப்பாட்டை ஜெனிவாக் கூட்ட அமர்வில் தெளிவாக எடுத்துரைக்கும்” – என்றார்.