இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை அடிப்படையாகக்கொண்டு செயற்படத் தயார்: பிரித்தானியா, கனடா

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை மிக முக்கியமானதெனச் சுட்டிக்காட்டியிருக்கும் பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள், இலங்கையில் நல்லிணக்கத்தையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதை அடிப்படையாகக்கொண்டு செயற்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்ப்பிக்கவிருக்கும் 16 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை நேற்று ஐக்கிய நாடுகள் சபையினால் பகிரங்கப்படுத்தப்பட்டது.

அதன்படி ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரித்தானியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஜுலியன் பிரெய்த்வெய்ட் இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில், ‘இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் மிக முக்கியமான புதிய அறிக்கை தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியிருக்கிறோம். எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரின் போது இலங்கையில் மனித உரிமைகளையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி நாம் ஆதரவு வழங்குவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இது குறித்து கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னே அவரது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவொன்றைச் செய்திருக்கின்றார்:

‘இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதி செய்வதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை அமைந்துள்ளது. இலங்கையில் அமைதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு கனடா தயாராக இருக்கின்றது’ என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் விசாரணைகள் அவசியம் – மிச்சேல் பச்லெட்

இலங்கையின் தமிழ்ப்பிரிவினைவாத மோதல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார்.

ஜெனிவாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கையொன்றை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்ப்பிக்கவிருக்கிறார்.

அவ்வறிக்கையில், சுமார் 37 வருடங்களாக நடைபெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கான நீதியை உறுதிசெய்வதற்குத் தவறியுள்ளமை தொடர்பில் அவர் இலங்கை மீது குற்றஞ்சுமத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் உறுதிசெய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட உள்ளகப்பொறிமுறைகள் அவற்றுக்கான சிறந்த தீர்வைப் பெற்றுத்தருவதற்குத் தொடர்ந்தும் தவறியிருப்பதுடன், தண்டனைகளிலிருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புக்களை மேலும் அதிகரித்திருக்கிறது என்றும் மிச்சேல் பச்லெட் சுட்டிக்காட்டியிருப்பதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக முன்னைய நிர்வாகங்களினால் மேற்கொள்ளப்பட்ட சில முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் தற்போதைய கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கம் நிறுத்தியிருக்கிறது என்றும் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மனித உரிமை செயற்பாட்டாளர்கள், விமர்சகர்கள் மீதான கண்காணிப்புக்களும் சுயதணிக்கைக்கான அவசியமும் அதிகரித்திருப்பதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கைப்படைகள் மருத்துவமனைகளின் மீதும் வான்வழி ஊடாகவும் கண்மூடித்தனமாகக் குண்டுவீச்சுக்களை நடத்தியதாகவும் சரணடைந்தவர்களைப் படுகொலை செய்ததாகவும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமலாக்கப்பட்டதாகவும் மிச்சேல் பச்லெட் அவரது அறிக்கையில் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முதற்தடவையாகப் பரிந்துரைத்திருக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், தமிழ் கிளர்ச்சியாளர்கள் உள்ளடங்கலாக போர்க் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமைமீறல் குற்றங்கள் சுமத்தப்பட்டவர்கள் மீது பயணத்தடை விதிப்பதற்கும் அவர்களது சொத்துக்களை முடக்குவதற்கும் மிச்சேல் பச்லெட்டின் அறிக்கையில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் ஆணைக்குழு நீதியை திசைத்திருப்பும் செயல் – சர்வதேச ஜுரிகள் ஆணைக்குழு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையைத் திசைதிருப்பும் நோக்கில் ஜனாதிபதியினால் விசேட ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளதா என்று சந்தேகம் வெளியிட்டிருக்கும் சர்வதேச ஜுரிகள் ஆணைக்குழு, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான சர்வதேச பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் மூவரடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டமை தொடர்பில் சர்வதேச ஜுரிகள் ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் ஏற்கனவே ஆராய்ந்த குழுக்களின் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை மீள ஆராய்வதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.நவாஸ் தலைமையில் மூவரடங்கிய விசேட குழுவொன்றை நியமித்திருக்கின்றார்.

பொறுப்புக்கூறல் மற்றும் நியாயமற்ற விசாரணைப்பொறிமுறை தொடர்பில் இலங்கை மிகமோசமான பதிவுகளைக் கொண்டிருக்கிறது. இது இவ்வாறிருக்க தற்போது புதிய குழுவொன்றை நியமிப்பதென்பது, பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரின் போது மேற்கொள்ளப்படத்தக்க நடவடிக்கைகளைத் திசைதிருப்பும் நோக்கத்தைக் கொண்டதா என்ற சந்தேகம் எழுகின்றது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரின் போது, இலங்கை தொடர்பான அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிப்பார். 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரின் போது 30/1, 34/1, 40/1 ஆகிய தீர்மானங்களிலிருந்து விலகுவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள விசேட குழு மற்றும் இதனையொத்த ஏனைய குழுக்கள் செயற்திறனற்றவையாகவும் தமக்கு வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள் உரிய பொறுப்புக்களை நிறைவேற்றும் இயலுமை அற்றவையாகவுமே இருந்துவந்திருக்கின்றன. இத்தகைய கட்டமைப்புக்கள், அரசியல் ரீதியில் தமக்கு எதிரானவர்களைத் தண்டிப்பதற்கும் தமக்கு வேண்டியவர்களைப் பொறுப்புக்கூறலில் இருந்து பாதுகாப்பதற்கும் உதவுகின்றன என்று எமது அறிக்கையொன்றில் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தோம்.

எனவே உள்ளகப் பொறுப்புக்கூறல் பொறிமுறையை உறுதிசெய்வதற்கான இயலுமை இலங்கைக்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள்வதுடன், உள்நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு சர்வதேசப் பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடமும் ஆணையாளரிடமும் கேட்டுக்கொள்கின்றோம் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

தமிழர்கள் என்பதாலேயே தமிழக மீனவர்களும் இலக்கு வைக்கப்படுகின்றனர்- யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம்

நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் படகுடன் மோதுண்டு, மீன்பிடிப் படகு விபத்துக்குள்ளாகியதில் கடலில் மூழ்கி உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று (புதன்கிழமை) அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு இன்று முற்பகல் 10.15 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த அஞ்சலி நிகழ்வின் இறுதியில் கண்டன அறிக்கை ஒன்றும் மாணவர்களால் வாசிக்கப்பட்டு, ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர் என்று கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராக புதியதொரு தீர்மானம் அவசியம் – சர்வதேச மன்னிப்புச்சபை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரின் போது இலங்கையின் மனித உரிமை நிலைவரங்களைத் தொடர்ந்து கண்காணித்தல், மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களைத் திரட்டுதல், ஆராய்தல் ஆகியவற்றுக்கு ஏதுவான புதியதொரு தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் என்று ஜேர்மனி உள்ளிட்ட உறுப்புநாடுகளிடம் சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மிகமுக்கிய அமர்வு விரைவில் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதன்போது ஒருமித்த தீர்வொன்றை அடையமுடியும் என்று நம்புகின்றோம்’ என்று ஜேர்மனியத்தூதுவர் ஹோல்கர் சீபர்ட் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார்.

அந்தப் பதிவை மேற்கோள்காட்டி மீள்பதிவொன்றைச் செய்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, அதில் மேலும் கூறியிருப்பதாவது:

சர்வதேச சட்டங்களுக்கு முரணாக இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு ஏற்றவாறான, தேசிய ரீதியில் நம்பகத்தன்மை வாய்ந்த பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறவில்லை. ஒருமித்த தீர்மானத்திற்கு வரமுடியும் என்பதைப் பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை கேட்டுவிட்டார்கள்.

எதிர்காலத்தில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதையும் தண்டனைகளிலிருந்து தப்பிப்பதைத் தடுப்பதையும் நோக்காகக்கொண்ட சர்வதேச பொறிமுறை ஒன்றுக்கு ஆதரவு வழங்குவதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவிக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில் ‘ஒருமித்த தீர்மானம்’ ஒன்றினால் எவ்வித நன்மைகளும் ஏற்படப்போவதில்லை.

ஆகவே இலங்கையின் மனித உரிமை நிலைவரங்களைத் தொடர்ந்து கண்காணித்தல், மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களைத் திரட்டுதல், ஆராய்தல் மற்றும் அவற்றைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு ஏதுவான புதியதொரு தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் என்று ஜேர்மனி உள்ளிட்ட உறுப்பு நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றை வலியுறுத்துகின்றோம் என்று மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியமைக்கு கவலை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம்..!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்திருக்கும் அதேவேளை, பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் உள்ளடக்கங்களில் சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டிணைந்த ஆணைக்குழுவின் 23 ஆவது சந்திப்பு இணையவழியின் ஊடாக கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போது இருதரப்பினரதும் அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது, இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் மக்களுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விருப்பத்தை இருதரப்பினது பிரதிநிதிகளும் பகிர்ந்துகொண்டதுடன் வர்த்தக ரீதியான உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது. அதுமாத்திரமன்றி மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் சார்ந்த பிரச்சினைகளில் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

இதன்போது, இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் மக்களுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விருப்பத்தை இருதரப்பினது பிரதிநிதிகளும் பகிர்ந்துகொண்டதுடன் வர்த்தக ரீதியான உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது. அதுமாத்திரமன்றி மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் சார்ந்த பிரச்சினைகளில் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தல் மற்றும் சுகாதாரம், விவசாயம், சுற்றுலா ஆகிய துறைகளை மீண்டும் மேம்படுத்தல் ஆகியவற்றை இலக்காகக்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட 22 மில்லியன் அமெரிக்க டொலர் உதவிக்கு நன்றியை வெளிப்படுத்திய இலங்கையின் பிரதிநிதிகள், தொற்றுநோய்ப்பரவலினால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்கு ஒன்றிணைந்த பல்தரப்பு முறைமையின் அவசியம் தொடர்பிலும் எடுத்துரைத்தனர்.

அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இலங்கையின் பொருளாதாரத்திற்கு நேர்மறையான பங்களிப்பை வழங்கியதாகக் கூறிய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், இலங்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி 2.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியிருப்பதுடன், இதன் விளைவாக இலங்கையின் 2 ஆவது மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக ஐரோப்பிய ஒன்றியம் மாறியிருப்பதாகவும் குறிப்பிட்டனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இலங்கையில் இறக்குமதித்தடைகள் விதிக்கப்பட்டமையின் விளைவாக ஐரோப்பிய வணிகங்களில் குறித்தளவான வீழ்ச்சியொன்று ஏற்பட்டமை தொடர்பிலும் இக்கலந்துரையாடலின்போது சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியமைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் வருத்தம் தெரிவித்தனர்.

Posted in Uncategorized

யாழில் இந்தியத் துணை தூதரகத்தில் இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்..!

72வது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 9 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற்றன.

முன்னதாக துணை தூதுவர் ச.பாலசந்திரன் இந்திய தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வில் தூதரக அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

பலவந்தமாக சடலங்களை தகனம் செய்வதை இலங்கை உடனடியாக நிறுத்த வேண்டும் – ஐ.நா. அதிரடி

கொவிட் வைரஸ் தொற்றில் மரணிப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதே இலங்கை அரசாங்கத்தின் தீர்மானமாக இருப்பது மனித உரிமையை மீறும் செயலாகும். இதனை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து செயற்படுத்தக்கூடாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் விசேட நிபுணர் குழு விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொவிட்19 தொற்றில் மரணிக்கும் நபர்களின் சடலங்களை கட்டாய தகனம் செய்வதன் மூலம் இலங்கையில் இருக்கும் சிறுபான்மை மக்களுக்கு அநீதி ஏற்படுவதுடன் வன்முறைகள் ஏற்படுவதற்கு இடமிருக்கின்றது.

தகனம் செய்வது ஒரே தீர்மானமாக ஏற்றுக்கொள்வது மனித உரிமை மீறலாகும். கொவிட் தொற்றுக்குள்ளாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதனூடாக வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக இலங்கையிலோ வேறு நாடுகளிலோ மருத்துவ ரீதியில் அல்லது விஞ்ஞான ரீதியிலான எந்த ஆதாரமும் இலலை.

மேலும் இலங்கையில் கொவிட்டி மரணித்தவர்களில் குறிப்பிடத்தக்க அளவானவர்கள் முஸ்லிகளாகும். அவர்களின் பூதவுடல்கள் உள்நாட்டு சுகாதார வழிகாட்டலுக்கமைய தகனம் செய்யப்பட்டிருக்கின்றன.

தொற்று நோய் தடுப்பு பிரிவின் பிரதானியின் நிலைப்பாட்டுக்கமைய கொவிட் சடலங்களை தகனம் செய்ய தீர்மானிக்கப்பட்டிருப்பது, சடலம் அடக்கம் செய்வதால் நிலத்தடி நீரினுடாக தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதனாலாகும்.

என்றாலும் உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து சுட்டிக்காட்டி இருப்பது, சடலங்களை தகனம் செய்வது தொற்று பரவலை தடுக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாகும்.

இலங்கை வைத்தியர் சங்கம் அண்மையில் விடுத்திருந்த அறிக்கையிலும் இதனை உறுதி செய்திருக்கின்றது. தொற்று நோய் நிலைமையின்போது மரணித்தவரின் கெளரவத்துக்கும் அதேபோன்று அவர்களின் உறவினர்களின் உணர்வுகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது.

இந்த நிலையில் இலங்கையில் முஸ்லிம் மக்கள் மற்றும் வேறு சிறுபான்மை மக்கள் குழுவை பிரித்து செயற்படுவது இனவாத வன்முறை நிலைமை ஏற்படுத்துவதற்கு மற்றும் வர்க்க பேதத்தை வெளிப்படுத்தி காட்டுவதற்கு காரணமாகும் வகையில் தீர்மானங்களுக்கு வருவதை கண்டிக்கின்றோம்.

மேலும் கொவிட் 19 தொடர்பான இறுதி அறிக்கையை உறவினர்களால் பரிசோதித்து பார்ப்பதற்கு முன்னரே சில சடலங்கள் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றன.

கொவிட்டில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியுமா என ஆராய்ந்து பார்க்குமாறு இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சுக்கு ஆலாேசனை வழங்கிய பின்னர், சுகாதார ராஜாங்க அமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர்குழு , அதுதொடர்பான ஆலாேசனைகளை வழங்கி இருந்தும் அரசாங்கம் அதனை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றது.

எனவே பலவந்தமாக கொவிட் சடலங்களை தகனம் செய்வதை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும். அத்துடன் முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்பட்ட தகனங்களுக்காக எந்தமுறையிலாவது நிவாரண முறைமையொன்றை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Posted in Uncategorized

பைடனின் நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் – அமெரிக்கத் தூதுவர்

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் என இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மீண்டும் மனித உரிமை பேரவையில் இணைந்துகொள்ளுமா என்பது குறித்து தற்போதைக்கு தெரிவிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ஏனைய நாடுகள் மூலமாக இலங்கையில் உண்மையான அமைதி காணப்படுவதை உறுதிசெய்வதற்காக பாடுபடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின்போதும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியிலும் மனித உரிமை விடயங்களில் முன்னேற்றம் மிகவும் மந்தகதியிலேயே காணப்படுகின்றது எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மனித உரிமைக்கு ஆதரவளிப்பதை இலங்கையுடன் வலிந்து மோதலில் ஈடுபடுவதாக கருதக்கூடாது எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

யாழில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேருந்து நிலையத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு – மாநகர பிரதி முதல்வர் ரெலோ ஈசன்

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுதூர பேரூந்து நிலையத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்தோடு தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படாது விட்டால் தான் பேரூந்து நிலைய திறப்பு விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் து.ஈசன் தெரிவீத்துள்ளார்.

குறித்த விடையம் தொடர்பில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே து.ஈசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

புதிய பேருந்து நிலையமானது கடந்த ஆட்சியின் போது முன்னாள் முதல்வர் ஆனல்ட் காலத்தில் அடிக்கல் நாட்டட்டிருந்தது. தற்போது இதன் வேலைகள் நிறைவடைந்து 27 ஆம் திகதி காலை திறப்பதற்கான வேலைகள் இடம்பெற்றுக்கொண்டு வருகின்றது.

இந்த நேரத்தில் இருக்கும் ஒரு பிரச்சினை வடகிழக்கின் நிருபாக மொழியான தமிழ் மொழி புறக்கனிக்கப்பட்டு பெயர் பலகையில் இரண்டாவது இடத்தில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

அத்தோடு இங்கு இருக்கும் வர்த்தக நிலையங்கள் சகல நிறுவனங்களிலும் எங்களுடைய மொழிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நாங்கள் ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றோம். அவ்வாறான இடங்களை நாங்கள் திருத்தி அமைத்துக்கொண்டு வருகின்ற சூழ்நிலையில் இவ்வாறு இடம்பெற்றுள்ளது மன வருத்தத்திற்குரியது.

அந்த வகையில் இதன் பெயர் மாற்றத்தை செய்யாத பட்சத்தில் யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் என்ற அடிப்படையில் நான் கலந்துகொள்ள போவதில்லை. ஏன் எனில் எங்ளுடைய மொழி புறக்கனிக்கப்படும் இடத்தில் நான் கலந்துகொள்வது பொருத்தம் இல்லை.

இதற்கு மேலதிகமாக சபையில் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து இந்த பெயரை மாற்றுவேன் என கூறிக் கொள்ளுகின்றேன் என தெரிவித்துள்ளார்.