இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து பிரிட்டன் கவலை!

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பிரிட்டன் கவலை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் ருவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டு, இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களைக் கட்டாயமாக எரிக்கும் நடைமுறை உட்பட இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் பிரிட்டன் அவதானமாக உள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான ஐ.நா. அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது எனவும், பிரிட்டனின் அணுகுமுறைகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு அறிவிக்கப்படும் என்றும் தூதுவர் சாரா ஹல்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம், பிரிட்டனின் பொதுநலவாய, அபிவிருத்தி விவகார அமைச்சர் தாரிக் அஹ்மட் இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரை முன்னிட்டு, கொரோனாத் தொற்றால் உயிரிழந்த மதக் குழுக்களின் உடல்களைக் கட்டாய எரிப்புக்கு உட்படுத்துவதன் தாக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களை இலங்கை வெளிவிவகார அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததாகப் பிரிட்டன் அமைச்சர் தாரிக் அஹ்மட் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. அறிக்கை இலங்கை வெளி விவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அதற்குப் பதிலளிப்பதற்கு இம்மாதம் 27 ஆம் திகதி வரை கால வரையறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

’சுரேஷ் ஓர் அரசியல் விபச்சாரி’

ஈபீஆர்எல்எப் அமைப்பின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அரசியல் விபச்சாரி என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – கொக்குவிலில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது, ஐ.நாவுக்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வரைபில் இனப்படுகொலை என்ற வசனத்தை உள்ளடக்கவில்லை என்றும், சர்வஜன வாக்கெடுப்பை கNஐந்திரகுமார் விரும்பவில்லை என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுரேஷ் பிரேமச்சந்திரன் முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், இன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நடத்திய ஊடக சந்திப்பின் போது சுரேஷ் பிரேமச்சந்திரனின் மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கேள்வி எழுப்பிய போது, அந்தக் குற்றச்சாட்டக்களை கஜேந்திரகுமுhர் நிராகரித்தார்.

அது மட்டுமல்லாமல் சுரேஷ் பிரேமச்சந்திரன் மீது பல்வெறு குற்றச்சாட்டகளையும் சுமத்தியிருந்தார்.

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய முதலீட்டு வேலைத்திட்டம் இறுதிப்படுத்தப்பட்டது

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இலங்கை துறைமுக அதிகாரசபை,இந்தியா – ஜப்பான் நாடுகளுடன் இணைந்து 51-49 வீத உரிமத்தில் அபிவிருத்தி செய்யும் முத்தரப்பு உடன்படிக்கை இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை அமைச்சரவைக்கு வழங்கப்படவுள்ளதுடன், 23 தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை முழுமையாக நிராகரிக்கவும் அமைச்சரவை உபகுழு தீர்மானித்துள்ளது. கிழக்கு முனைய அபிவிருத்தியில் இந்தியா – ஜப்பான் நாடுகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மாற்ற முடியாதுள்ளமையும் இந்த தீர்மானத்திற்கு பிரதான காரணம் என்பதை அமைச்சரவை உபகுழு சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய முதலீட்டு அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பல்வேறு நெருக்கடிகள் எழுந்துள்ளதை அடுத்து இந்த விடயம் குறித்து ஆராய ஜனாதிபதியினால் ஏழுபேர் கொண்ட அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது. துறைமுக அதிகார சபையின் செயலாளர் யு.டி.சி ஜெயலால் தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த குழு இன்று திங்கட்கிழமை ஐந்தாவது தடவையாகவும் கூடி துறைமுக முதலீட்டு வேலைத்திட்டம் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

இதன்போது துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிர்ப்பை தெரிவித்து துறைமுகத்தின் 23 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்வைத்த எழுத்து மூல கோரிக்கை, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பரிந்துரைகள் மற்றும் துறைமுக அதிகார சபையின் பிரதான கோரிக்கை உள்ளிட்ட விடயங்களை இன்று ஆராய்ந்ததுடன் இறுதி தீர்மானத்தையும் எட்டியுள்ளனர்.

இன்றைய பேச்சுவார்த்தை குறித்து அமைச்சரவை உபகுழுவின் தலைவர் யு.டி.சி. ஜெயலால் தெரிவிக்கையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து ஆராய ஜனாதிபதி குழுவொன்றை நியமித்தமைக்கு இந்த வேலைத்திட்டத்தின் உடன்படிக்கைகள், இந்தியா – ஜப்பான் ஆகிய நாடுகளின் கோரிக்கைகள், முதலீடுகள் குறித்து அவர்களின் நிலைப்பாடுகள் மற்றும் இலங்கை துறைமுக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து முழுமையாக ஆராயப்பட்டது.

இதில் கிழக்கு முனையத்தை எக்காரணம் கொண்டும் இந்தியாவிற்கு கொடுக்கக்கூடாது எனவும் துறைமுக அதிகார சபையே இதனை தன்வசப்படுத்த வேண்டும் என துறைமுகத்தில் அங்கம் வகிக்கும் 23 தொழிற்சங்கங்களும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஆனால் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.

தற்போது துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள காரணத்தினாலும், இதில் 51 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் 49 வீதம் சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் வழங்கப்படும் என்ற தீர்மானம் இறுதித் தீர்மானமாக உள்ள நிலையில் தொழிற்சங்கங்களின் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல் இலங்கைக்கு வரும் முதலீடுகளில் துறைமுகத்தின் அபிவிருத்தியை முழுமையாக மேற்கொள்ள கிடைத்துள்ள வாய்ப்பாக இருக்கின்ற காரணத்தினால் 51-49 வீத உரிமம் என்ற ரீதியிலேயே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

அதேபோல் இந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் இந்தியாவின் நிறுவனமான அதானி நிறுவனம் தமது பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர், அதேபோல் ஜப்பான் நாட்டின் ஜய்க்கா நிறுவனமும் அவர்களின் பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். இந்த இரண்டு தரப்பும் இணைந்தே 49 வீத உரிமத்தில் முதலீடுகளை செய்து துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

எனவே அவர்களின் பரிந்துரைகளை முழுமையாக ஆராய்ந்துள்ளோம். இந்த துறைமுகம் 35 ஆண்டுகால முதலீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ள காரணத்தினால் மூன்று நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்த உடன்படிக்கைகளையும் ஆராயும் கடமை எம்மிடமே உள்ளது. எனவே தற்போது இறுதிக்கட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது குறித்த இறுதி அறிக்கையை இந்த வாரம் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்படும். அதேபோல் தொழிற்சங்கங்களுடன் இனிமேல் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப்படாது. அதற்கான அவசியங்கள் ஏற்படாது.

மேலும் இந்த முதலீட்டு அபிவிருத்தி வேலைத்திட்டமானது கடந்த ஆட்சியில் செய்து கொள்ளப்பட்டுள்ள முத்தரப்பு உடன்படிக்கைகள் என்ற காரணத்தினால் உடனடியாக ஒப்பந்தத்தை இரத்து செய்ய முடியாது. எனவே முன்னைய ஆட்சியில் உள்ள பலவீனமான கோரிக்கைகளை நீக்கி, இலங்கைக்கு சாதகமான விதத்திலும், துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் ஆதிக்கம் அதிகமாக உள்ள விதத்திலும் இந்த உடன்படிக்கையை செய்துகொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Posted in Uncategorized

நல்லூர் பிரதேச சபையின் 2021 பட்ஜெட்டை ஆதரித்தமைக்கு இதுதான் காரணம்: ரெலோ மதுசுதன்

மக்கள் நலன்சார்ந்த வரவுசெலவுத் திட்டம் என்ற வகையில் அதனை எப்போதும் தோற்கடிப்பதற்கு நாங்கள் துணைபோகக் கூடாது என நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் குமாரசாமி மதுசுதன் தெரிவித்தார்.

அந்தவகையில் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 45 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களின் அவாக்களையும், அவர்களின் அன்றாடத் தேவைகளையும், அபிவிருத்திகளையும் கருத்திற் கொண்டு தான் நல்லூர் பிரதேசசபையின் நடப்பாண்டுக்குரிய வரவுசெலவுத் திட்டத்தை ஆதரித்துள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு சமர்ப்பித்தல் தொடர்பான கூட்டம் புதிய தவிசாளர் பத்மநாதன் மயூரன் தலைமையில் அண்மையில் சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

மேற்படி கூட்டத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட பின்னர் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து வரவு செலவுத் திட்டங்களுக்கும் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) எப்போதும் தனது ஆதரவைத் தெரிவித்து வந்தமை இங்கே பதிவு செய்யப்பட வேண்டிய விடயம்.

2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவதற்கு எப்போதும் எங்களின் ஆதரவிருக்கும்.

நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் நலன்சார்ந்த வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டமைக்கு மகிழ்ச்சியையும், முன்னைய தவிசாளரை விட இன்னும் சிறப்பாகச் செயற்பட என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பயணத்தடை விதிக்கப்படலாம் சொத்துக்கள் முடக்கப்படலாம் ஐ.நா ஆணையாளர் அதிரடி அறிவிப்பு

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படலாம் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், யுத்த குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை பெறுவதற்கான சர்வதேச பொறிமுறையொன்று குறித்தும் பரிந்துரை செய்துள்ளார்.

இந்நிலையில், ஆதாரங்கள் எவையும் நிருப்பிக்கப்படாதவர்களிற்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே அவர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

“அவசியமற்ற சில விடயங்கள் அந்த அறிக்கையில் இந்த தருணத்தில் காணப்படுவதாக நாங்கள் கருதுகின்றோம் எங்களுக்கு அவதூறு கற்பிக்கமுனையும் நாடுகள் சிலவற்றை விட இலங்கையர்களான நாங்கள் அமைதியாகவும் ஸ்திரதன்மை மிக்கவர்களாகவும் காணப்படுகின்றோம்” என்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

முன்னைய அறிக்கைகளை விட இந்த அறிக்கை மோசமானது இலங்கையில் ஆபத்தான போக்கு தென்படுகின்றது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள ஜயனத் கொலம்பகே, அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தீர்மானித்ததும் அதனை பகிரங்கப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

புதிய ஆணைக்குழு மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளைத் திசைதிருப்புவதற்கான போலியான முயற்சி – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளைத் திசைதிருப்புவதற்கான போலியானதொரு முயற்சி என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் சாடியிருக்கிறது.

அத்தகைய முயற்சிகளால் திசைதிரும்பி விடக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கும் அவ்வமைப்பு, இலங்கையைக் கண்காணிப்பதற்கான புதிய தீர்மானமொன்றை மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றுவது மிகவும் அவசியமாகும் என்றும் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் இன்று சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

குருந்தூர் மலை தமிழர் பிரதேசம் தொடர்பில் 88 வருடங்களுக்கு முன்னர் வெளியான வர்த்தமானி! சபையில் ரெலோ தலைவர் அடைக்கலநாதன் காட்டம்

1933ஆம் ஆண்டில் குருந்தூர் மலைக்காடு என தமிழில் பெயர் வரும்படி தொல்பொருள் ஆராய்வுக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

88 வருடங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட வர்த்தமானி விடயத்தில் தற்போது எதற்காக கவனம் செலுத்தப்படுகிறது என ரெலோ தலைவரும் தமிழ்த் தேசியகூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது குருந்தூர் மலைப்பகுதி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைக்கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

முல்லைத்தீவு – குருந்தூர் மலைப்பகுதியில் சிவன் ஆலயம் ஒன்று காணப்பட்டது.அங்கு பொங்கல் வைத்து வழிபாடும் முன்னெடுக்கப்பட்டு வந்தது.பிக்கு ஒருவரின் தலையீட்டினால் இவ்விடயம் நீதிமன்றத்திற்கு சென்றது.

இவ்வழக்கின் தீர்ப்பில் இங்கு வழிபாடுகளை நடத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Posted in Uncategorized

தமிழ் கட்சிகள் அவரச சந்திப்பு!

தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் நில அடையாளங்களை சிதைத்து, வாழ்வுரிமையை பறிக்க இந்த அரசு மேற்கொண்டு வரும் அசுர வேக நடவடிக்கைகளிற்கு எதிராக தமிழ் தேசிய கட்சிகளைளும், அரச சாராத தமிழ் கட்சிகளையும், மத பெரியார்களையும், சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைகழக மாணவர்களையும் உள்ளடக்கிய விரிவான கலந்துரையாடலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் (24) காலை 10.00 மணிக்கு நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறும்.

அரசின் இந்த நடவடிக்கைகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆராயவே இந்த கூட்டம் இடம்பெறும்.

இன்று யாழிலுள்ள தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடலை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தமிழ் அரசு கட்சி சார்பில் கலையமுதன், புளொட் சார்பில் ப.கஜதீபன், ரெலோ சார்பில் தி.நிரோஷ், தமிழ் தேசிய கட்சி சார்பில் பேராசிரியர் சிவநாதன், ஈ.பி.ஆர்.எல் சார்பில் குகன், அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்களும் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். கூட்டத்திற்கு வருபவர்கள் உரிய சுகாதார நடைமுறையை பின்பற்ற அறிவறுத்தப்பட்டுள்ளனர்.

Posted in Uncategorized

இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிப் பொறிமுறையை இம்முறை நிறுவ வேண்டும் ஐ.நா! மன்னிப்புச்சபை வலியுறுத்து

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களை சேகரிப்பதற்கும் சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை எதிர்வரும் 46ஆவது கூட்டத்தொடரின் போது அறிமுகப்படுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் மாதம் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதன்போது இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும், அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும் சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும்.

இலங்கையில் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஊடகங்கள் மீதான அடக்குமுறையில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பு, முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் மீதான தாக்குதல்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 30/1 தீர்மானத்தில் உள்ளவற்றில் மிகவும் வரையறுக்கப்பட்ட தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டு உள்ளமை மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளடங்கலாக 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதாக இலங்கை அறிவித்தமை ஆகியவற்றின் பின்னணியில் இத்தகையதொரு சர்வதேச நீதிப் பொறிமுறை அவசியமாகும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒருமுறையான பொறிமுறையின் கீழ் இலங்கை அரசு செயற்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

கடந்த சில வருடங்களில், குறிப்பாகக் கடந்த வருடம் இலங்கையின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளடங்கலாக சிவில் சமூகக் குழுக்களுக்கான இடைவெளி பாதகமான முறையில் மட்டுப்படுத்தப்பட்டமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஊடகவியலாளர் தரிஷா பாஸ்டியன்ஸ் மீதான அடக்குமுறை, சமூகவலைத்தள செயற்பாட்டாளர் ரம்ஸி ரஸீக் மற்றும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோரின் கட்டாய தடுத்துவைப்பு, எழுத்தாளர் ஷக்திகசத்குமாரவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஆகியவை தொடர்பில் நாம் ஏற்கனவே விசேடமாகச் சுட்டிக்காட்டியிருந்தோம்.

இத்தகைய அடக்குமுறைகளின் விளைவாகப் பல செயற்பாட்டாளர்கள் நாட்டைவிட்டுத் தப்பி சென்றிருக்கின்றார்கள்.

அதுமாத்திரமன்றி இலங்கையில் தொடர்ந்தும் சிறுபான்மையினத்தவர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் பெரிதும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

weddingman
எளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்

நல்லூர் பிரதேச சபை தவிசாளரின் செயற்பாட்டிற்கு மதுசுதன் கடும் கண்டனம்

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் பராமரிப்பற்ற காணிகள் சபை உடைமையாக்கப்படும் என்ற அறிவித்தலை சபையின் தவிசாளர் ப.மயூரன் 22.01.2021 அன்று அறிவித்தல் விடுத்துள்ளதாக ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. உண்மையில் சபை கூட்டப்பட்டு பிரதேசத்தில் பராமரிப்பற்ற காணிகள் தொடர்பாக எந்தவொரு கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் எந்தவித தீர்மானங்களும் எட்டாமல் எமது மக்களின் காணிகள் அரசுடமையாக்கப்படும் என்ற அறிவித்தலை விடுத்தலானது ஏற்றுக்கொள்ள முடியாதது என நல்லூர் பிரதேச சபையின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் குமாரசாமி மதுசுதன் தெரிவித்துள்ளதுடன் குறித்த செயற்பாட்டிற்கு எதிராகத் தனது கடும் கண்டனங்களையும் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பில் இன்று(23) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த அறிவித்தலினால் மக்கள் அதிக சினம் கொண்டு எம்மிடம் தெரிவிக்கிறார்கள். கொரோனா காரணமாகவும், அடைமழை காரணமாகவும் வருமானமற்ற நிலையிலேயே துப்பரவுப் பணிகள் இடம்பெறவில்லை எனவும் சபை ஊழியர்களால் தங்களுக்கு உரிய அறிவித்தல் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கிறார்கள்.

எனினும்,பிரதேசத்தில் பராமரிப்பற்ற காணிகளினால் பார்த்தீனியம்,மற்றும் டெங்கு அபாயங்கள் ஏற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

அதனைத் தடுப்பதற்கும், உரிய முறையில் பராமரிப்பதற்கும் பிரதேச சபை சட்ட ஏற்பாட்டுகளின் படி பல முறைகள் உள்ளன . எம்மிடம் அதிகாராங்கள் உள்ளன. எமது சபை மூலம் சிவப்பு எச்சரிக்கை விடுதல்,தண்டம் அறவிடல் போன்ற செயற்பாடுகள் அல்லது நீதிமன்றத்தினூடான நடவடிக்கைகள் போன்றன காணப்படுகின்றன. அத்துடன் உள்ளூராட்சி மன்றக் காணி கையாளல் சம்பந்தமான அதிகாரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

காணி உடமையாளர்களின் காணிகளை உரிய முறையில் பராமரிக்கச் செய்வதற்கு எமது சபையிடம் போதிய வரம்புகளும், சக்திகளும், ஏதுக்களும் இருக்கும் போது அதனைத் தவிசாளருக்குரிய அதிகாரத்தினைப் பயன்படுத்தி அமுல்படுத்தாமல் எமது தமிழ்மக்களின் காணிகளினை அரச உடைமையாக்கப்படும் என அறிவித்தமையானது எமது நிலங்களை அரசுக்குத் தாரைவார்க்கும் செயற்பாடாகும்.

ஏற்கனவே, பல திணைக்களங்கள் மூலம் எமது தமிழர் நிலங்கள் கபளீகரம் செய்யப்படும் தறுவாயில் அதற்கான எதிர்ப்புக்களும் கோசங்களும் எம்மிடையே வலுப்பெற்று வரும் இந்நாட்களில் எமது தமிழர் காணிகள் அரசுடமையாக்கப்படும் என விடுத்த அறிவிப்பானது இன்னும் பேரினவாதத்திற்கு தூபம் போடும், அவர்களை ஊக்குவிக்கும் செயலாகும். இதனை அரசே இனிச் செயற்படுத்த வழி வகை செய்வதாக அமைந்துவிடும். இதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

பிரதேசத்தில் காணி விற்றல் ,வாங்கல் மூலம் சபைக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. அந்த வருமானங்களைக் கொண்டு பராமரிப்பற்ற காணிகளினை பராமரிக்க சில முன்மாதிரியான நடவடிக்கைகளினை நாம் எடுக்க வேண்டும்.

இருக்கும் அதிகாரங்களை சிறப்பாக பயன்படுத்தி மக்கள் சேவையாற்ற வேண்டுமே ஒழிய மக்கள் வரிப் பணத்தில் சபை நடாத்திக் கொண்டு அவர்களுக்கு எதிராக நாம் செயற்படுவது சிறப்பான ஒன்றல்ல.

எனவே, மக்கள் விரோத நிலைப்பாடுகளை எடுக்காமல் இனிச் சபையில் கூடி கலந்துரையாடி ஆக்கபூர்வமான, இனத்திற்கு நலன் சேர்க்கும் பிரதேசத்தின் வளர்ச்சிக்குமுரிய நடவடிக்கைகளினை மேற்கொள்ளாமல் இப்படிச் செயற்படுவதனை வன்மையாக கண்டிக்கிறோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.