ஆறுமுகநாவலரின் கனவுகளை நனவாக்கும் பணிகளில் யாழ்.பல்கலைக்கழகத் தமிழ்த்துறை

தமிழ்மொழியின் நவீனமயமாக்கலிற்கு ஈழத்தவர்களின் பங்களிப்பு என்று நோக்கும் போது முதன்முதலாக எங்கள் கண் முன்னே தோன்றுபவர் ஆறுமுகநாவலர். நாவலர் பிறந்து இந்த ஆண்டு 200 ஆவது ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்த 200 ஆவது ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஒரு தமிழியல் ஆய்வு மாநாட்டை நடாத்தி நாங்கள் ஆறுமுகநாவலரின் கனவுகளை நனவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும், மூத்த பேராசிரியருமான எஸ்.சிவலிங்கராஜா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் சிங்கப்பூர் எஸ்டேட் கந்தையா கார்த்திகேசன் அறக்கொடை நிதியத்தின் முழுமையான நிதிப் பங்களிப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கின் ஒரு பகுதியாக மூன்றாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு நேற்றுப் புதன்கிழமை(03.8.2022) மேற்படி பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் “ஈழத்துத் தமிழியல் மரபும் மாற்றமும்” (இருபதாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது) எனும் தொனிப் பொருளில் சிறப்பாக இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு ஆய்வரங்கைத் திறந்து வைத்து திறப்புரை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நவீனத்துவம் என்பது என்ன? இந்தக் கேள்விக்கான விடையளிப்பது மிகவும் கடினம். பொதுவாகக் கூறினால் பழமையிலிருந்து வேறுபட்டுப் புதுமையை நோக்கிச் செல்வது என இதற்குப் பொருள் கூறுவார்கள். அல்லது சம காலத்தையது அல்லது பழமை அல்ல என்றும் இதற்குப் பொருள் சொல்கிறார்கள். நவீனத்துவம் என்ற கருத்து நிலை முதன்முதலில் மேலைப் புலங்களிலேயே உருவானது.

உலகளாவிய ரீதியில் வேர்விட்டு வளரத் தொடங்கிய நவீனத்துவம் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, சமயம் முதலான பல்வேறு துறைகளிலும் செல்வாக்குச் செலுத்தியது. இந்தச் செல்வாக்கு மெல்ல மெல்ல எங்கள் தமிழ்ச் சூழலுக்குள்ளும் தலைவைக்கத் தொடங்கியது.
அதற்கு அனுகூலமாக அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாட்டுப் பின்னணிகள் காரணமாக அமைந்தன.

ஈழநாட்டில் நீண்டகாலமாக நிலவி வந்த வாழ்வியல் அம்சங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைப் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலம் ஏற்படுத்துகின்றது. எனினும், நாம் தற்போது காணும், அனுபவிக்கின்ற நவீனத்துவம் பெருமளவில் இக்காலங்களில் தான் தோன்றியது என்று கூற முடியாது.

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 20 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் ஈழத்தில் நவீனத்துவம் தனது கரங்களை அகல விரித்தது. 19 ஆம் நூற்றாண்டு பல வழிகளிலும் இதற்குச் சாதகமாக அமைந்தது.

ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரையில் பல சிறப்பியல்புகளை உடைய வரலாற்றுக் காரணங்களால் 19 ஆம் நூற்றாண்டு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. மேல்நாட்டுக் கலாசாரம், ஆங்கிலக் கல்வி ஆகியவற்றின் கடுமையான தாக்கமும் அதற்கு எதிரான நிலைப்பாடுகளும் இலக்கிய, இலக்கணச் சிந்தனைகளுக்கும், ஆக்கங்களுக்கும் புதிய உத்வேகத்தைக் கொடுத்ததாகப் பேராசிரியர் கைலாசபதி குறிப்பிட்டுள்ளார்.ஈழத்து நவீனத்துவத்தின் ஊற்றுக் கால்களை இந்த மேற்கோள் தெளிவாகக் காட்டுகிறது.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து நவீனத்துவம் குட்டி போட்டுப் பட்டி பெருகியது. பின் நவீனத்துவம் என்பது போல…ஈழத்தில் காலனித்துவ காலம் நவீனமயமாக்கத்தை உள்வாங்க, உருவாக்க உதவியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

19 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த மிஷனரிமார்களின் செயற்பாடுகள் பல வழிகளிலும் இவற்றின் பின்னணியாக அமைந்தன.

ஈழத்தவர்கள் நவீனத்துவத்திற்குள் பயணிக்க மிஷனரிமார்களின் பணிகளும் முக்கிய காரணங்களாக அமைந்தன என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியாது.

மிஷனரிமார்கள் வருவதற்கு முன்னர் எமது கல்வி, கலை, கலாசாரம், இலக்கியம், பண்பாடு, மொழி முதலானவை கட்டிறுக்கமான, நெகிழ்ச்சித் தன்மையற்ற, குறிப்பிட்ட சில எல்லைகளுக்கு உட்பட்டே விளங்கின. சமயம், கல்வி, பண்பாடு, அரசியல், பொருளாதாரம் போன்றவற்றில் ஏற்பட்ட மாற்றங்களை குறிப்பிட்ட கட்டிறுக்கங்களைத் தகர்த்தும், தளர்த்தியும் விட்டமை நவீனத்துவ செயற்பாடுகளுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தன.

ஈழத்தில் நவீனமயமாக்கல் எனக் குறிப்பிடும் போது நமக்கு முன்னே விஸ்வரூப தரிசனமாகத் தெரிவது அச்சுக் கலையே எனலாம். ஈழத்து அச்சு இயந்திரப் பயன்பாடு பற்றிப் பலரும் விஸ்தாரமாக எழுதியுள்ளனர். பேராசிரியர் கைலாசபதி ஈழத்து இலக்கிய முன்னோடிகள் என்ற தனது நூலில் அச்சுக் கலையில் நவீனத்துவத்தை எவ்வாறு வளர்த்தெடுத்தது என்பது தொடர்பில் விரிவாக எழுதியுள்ளார்.

அச்சுக் கலையின் உடன்பிறப்பாகப் பதிப்புத் துறை மேற்கிளம்புகிறது. தமிழ் நூல்களின் பதிப்புத் துறைக்கு அத்திவாரமிட்டவர் நாவலர்.சுவர் எழுப்பியவர் சி.வை.தாமோதரம்பிள்ளை, கூரை மேய்ந்தவர் உ.வை. சாமிநாத ஐயர். வையாபுரிப்பிள்ளை போன்ற பெரிய பதிப்புச் சூறாவளிகள் வீசத் தொடங்க அத்திவாரமும், சுவரும் அசையாமலிருக்க கூரை ஆட்டம் துறையாக விளங்குகிறது.கொடுக்கத் தொடங்கியது. எனவே, ஈழத்து நவீனமயமாக்கலிற்குப் பதிப்பு முயற்சி மிக முக்கிய துறையாக விளங்குகிறது.

நவீனத்துவம் என்பது முற்றிலும் மேற்கத்தைய வாதம் அல்ல. அது எங்களுடையது. அடிப்படையில் அது எங்களுக்கு உரியது என்பதை நாங்கள் மனதிற் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

இலங்கை நெருக்கடி அதிகளவு ஜனநாயக தன்மை கொண்ட அரசாங்கத்திற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது – அமெரிக்க இராஜாங்க செயலாளர்

இலங்கை நெருக்கடி அதிகளவு ஜனநாயக அரசாங்கத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது சவாலான நெருக்கடியான தருணத்தில் உள்ளது ஆனால் அந்த நாட்டிற்கு அதிகளவு ஜனநாயக தன்மை மிக்க அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை கம்போடிய தலைநகரில் ஆசிய வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் சந்தித்தவேளை அமெரிக்க இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியத்தின் உதவி கிடைப்பதற்கு அமெரிக்கா வழங்கும் உதவியை பாராட்டுவதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பூகோள அரசியல் மோதலில் சிக்கும் இலங்கை?

சீன ஆய்வுக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு இந்தியா கொண்டு வந்துள்ளதாக The Hindu இன்று செய்தி வௌியிட்டுள்ளது.

இந்த கப்பல் தொடர்பில் இந்தியா தௌிவான தகவலை வழங்கியிருந்த போதிலும், இலங்கை பாதுகாப்பு அமைச்சு கப்பலின் வருகையை உறுதிப்படுத்தியமையினால் இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Yuan Wang 5 கப்பல் சீன இராணுவத்தின் மூலோபாய ஆதரவுப் படைக்கு சொந்தமான செய்மதிகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கண்காணிக்க பயன்படுகிறது.

இந்தியா இதனை சீன உளவு பார்க்கும் கப்பல் என தெரிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த நீர்மூழ்கிக்கப்பலை விட இது ஆபத்தானது என இந்தியாவின் Economic Times இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.

Yuan Wang 5 கப்பல் மூலம் 750 கிலோமீட்டர் தூரத்திலுள்ள இடங்கள் தொடர்பிலான தரவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இதன்மூலம் இந்தியாவின் தெற்கு பிரதேசத்தின் பாதுகாப்பு நிலையங்கள், ஆறு துறைமுகங்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென Economic Times வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம், கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை முகாம் உள்ளிட்ட முக்கிய இடங்களும் இதில் அடங்குகின்றன.

இதன் காரணமாக சீன ஆய்வுக் கப்பலை இந்தியா மிகவும் ஆபத்தானது என்றே கூறுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் இந்தியா அதிக கவனம் செலுத்தியுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

Yuan Wang 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ள விடயம் குறித்து கடந்த வாரம் ஊடங்கள் மூலம் தகவல் வௌியானதும், அதனை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்ததாகவும் பின்னர் ஆகஸ்ட் 11 ஆம் திகதியில் இருந்து 17 ஆம் திகதி வரை இந்த கப்பலுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கியுள்ளமை உறுதியாகியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தன.

இதேவேளை, தாய்வானை அடிப்படையாகக் கொண்டு சீனா – அமெரிக்கா இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு வரும் நிலையிலேயே இந்திய – சீன சமுத்திர நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் Nancy Pelosi-யின் தாய்வான் விஜயத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

தமது நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதியாக சீனா தாய்வானை கருதுவதுடன், அமெரிக்கா தமது எதிர்ப்பையும் கருத்திற்கொள்ளாமல் செயற்பட்டால் ஆபத்துகள் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும், மலேஷியாவிற்கான விஜயத்தை நிறைவு செய்த அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் இன்று இரவு 10.30-க்கு தாய்வானை சென்றடையவுள்ளார்.

தாய்வானை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்டுள்ள இந்த முரண்பாடு காரணமாக அமெரிக்கா தமது பிரதான மூன்று யுத்த கப்பல்களை தாய்வானின் மேற்கு கடற்பகுதியில் நிறுத்தியுள்ளது.

தாக்குதல் கப்பல்களான USS, Ronald Reagan, Abraham Lincoln, USS Tripoli ஆகிய கப்பல்களே அவையாகும்.

அத்துடன், சீனாவும் தமது தாக்குதல் கப்பல்களை தென் சீன கடல் எல்லை , அதனை அண்டிய பகுதிகளில் நிலை நிறுத்தியுள்ளதுடன், யுத்தம் ஏற்பட்டால் அதற்கு பதில் வழங்க தயார் எனவும் கூறியுள்ளது.

தாய்வானை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருதற்கு தயாராகும் சீன கப்பல் தொடர்பில் இந்திய வௌிவிகார அமைச்சின் பேச்சாளரும் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்காக மேற்கொள்ள முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அவர் கூறியிருந்தார்.

இராஜதந்திர ரீதியில் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் அளவிற்கு இந்தியாவும் சீனாவும் இந்த நெருக்கடி நிலைமையில் நெகிழ்வுடன் செயற்படுமா?

இந்தியா தமது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என கருதும் விடயத்தினை இலங்கை கடற்பரப்பில் இடம்பெறுவதற்கு இடமளிக்குமா?

சீனா தமக்கு சொந்தமான ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகளுக்கு மற்றுமொரு நாடு அழுத்தம் விடுக்கும்போது மௌனம் காக்குமா?

தமக்குத் தேவையானவாறு வௌிநாடுகளுடன் செய்துகொண்ட கொடுக்கல் வாங்கல்கள் காரணமாகவே இன்று இந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

SEA OF SRI LANKA எனப்படும் இலங்கை கடலுக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படுத்தும் தீர்மானங்களை எடுத்தமையினால் இரண்டு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையின் போது தலையிட வேண்டி ஏற்பட்டுள்ளதல்லவா?

தாய்வானைப் போன்று இலங்கையும் பூகோள அரசியல் மோதலில் சிக்காமல் இருப்பதற்கு தற்போதேனும் கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் எடுக்கப்படுமா?

எமது நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், இன்னுமொரு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது.

Posted in Uncategorized

இன்று (04) நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் பணிப்பகிஷ்கரிப்பு

இன்று (04) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

பஸ்கள் ஒரு நாளேனும் முழுமையாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையால், இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

QR முறையினூடாக தனியார் பஸ்களுக்கு வாராந்தம் 40 லிட்டர் டீசல் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் நீண்ட தூர பஸ் பயணங்களுக்கு அது போதுமானது அல்ல எனவும் சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் குறிப்பிட்டார்.

அத்துடன், குறுந்தூர சேவைகளில் ஈடுபடும் பஸ்கள் 8 மணித்தியாலங்களே பயணிக்க முடியும் எனவும் அஞ்சன பிரியஞ்சித் சுட்டிக்காட்டினார்.

பஸ்களுக்கு போதுமானளவு டீசல் வழங்கும் வரையில் தமது பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் எனவும் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் குறிப்பிட்டார்.

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் எடுத்துள்ள தீர்மானம்

நேற்று (03) இரவு காலி முகத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சில கூடாரங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி முகத்திடலில் தங்கியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் நாளை மாலை 05 மணிக்கு முன்னர் குறித்த பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் வழங்கிய அறிவித்தலின் பேரில் கூடாரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனிடையே, ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு போராட்ட களத்தில் சுடர் ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டது.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டம் இன்று 118வது நாளாக தொடர்கிறது.

Posted in Uncategorized

சீன கப்பல் விவகாரம் – இந்தியா சீனாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீனாவின் கப்பல் வர அனுமதிதொடர்பில் சுமூகமான தீர்வை காண்பதற்கு இலங்கை அரசாங்கம் சீனாவுடனும் இந்தியாவுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது.

சீனாவின் யுவான் வான் 5 கப்பல் தொடர்பிலேயே இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது

ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்னரே குறிப்பி;ட கப்பல் இலங்கைக்கு வருகை தருவதற்கு வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் மற்றும் துறைமுகங்கள் அதிகாரசபையும் அனுமதிவழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன,கப்பல் 11 ம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ளது.

எனினும் இந்தியா இந்த நடவடிக்கைகுறித்து அதிருப்தியடைந்துள்ளது இது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கை குறித்தும் இந்தியா உன்னிப்பாக அவதானித்து என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இந்த வாரம் தெரிவித்திருந்தார்.

.இதனை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்துள்ளது இதுவே தெளிவான செய்தி எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இலங்கைக்கு அதிகளவு கடனையும் ஒத்துழைப்பையும் வழங்கிய சீனா இந்தியாவுடன் இலங்கை கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ள நிலையில் இந்த விவகாரத்திற்கு தீர்வை காணவேண்டிய நிலையில் இலங்கை உள்ளது.

Posted in Uncategorized

நல்லெண்ண செயற்பாடாக தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கும் பட்சத்தில் சர்வகட்சி அரசாங்கம் அமைய தமிழ் தரப்பினர் பரீசீலிக்கலாம். – முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

ஜனாதிபதி சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு அழைப்பு விடுத்திருக்கும் இந்தவேளையில் தமிழ் மக்கள் மத்தியில் புரையோடியிருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டுவதற்கு முதலில் நல்லெண்ண செயற்பாடாக தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதன் மூலம் தமிழ் கட்சி தரப்பினர் சர்வ கட்சி அரசு அமைவதற்கு சாதகமாக அமைய வாய்ப்பு ஏற்படும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் தூரநோக்கு சிந்தனையாளரும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் ஜனாதிபதி சர்வ கட்சி அரசாங்கம் அமைப்பதற்காக விடுத்திருக்கும் அழைப்பு தொடர்பாக தமிழ் தரப்பு அரசியல் கட்சிகளுக்கு விடுத்திருக்கும் செய்தியில்

நாட்டில் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதன் தொடர்பாக ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்

உண்மையிலேயே சர்வ கட்சி அரசாங்கம் அமைய பெறுவதற்கு சிங்கள பெரும்பான்மை கட்சிகள் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் அவற்றிற்கு ஆதரவு வழங்க இருக்கின்றனர்

அந்த வகையில் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவையும் அவர் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்து இருக்கின்றார்

உண்மையில் தமிழ் தரப்பு கட்சினர் அரசியல் கைதிகளின் விடுதலையை நோக்கிய செயல்பாடாக ஜனாதிபதியிடம் தெரிவித்து நல்லெண்ண வெளிப்பாடாக அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படும் பட்சத்தில் தமிழ் மக்களின் மத்தியில் நிலவும் உடனடி மற்றும் நீண்ட கால பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் பரிசீலிக்க கூடியதாக இருக்கும்

ஏனென்றால் தமிழ் மக்களின் உடனடி பிரச்சனைகள் பல தீர்க்கப்பட வேண்டி இருக்கின்றது

இதில் முதன்மையாக இருப்பது அரசியல் கைதிகளின் விவகாரம் இந்த அரசியல் கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படும்போது சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பான விடயத்தை தமிழர் தரப்பு பரீசீலிக்க முடியும்.

அந்த வகையில் பயங்கரவாத தடைச்சட்டம் காணி அபகரிப்பு மற்றும் வடகிழக்கு பகுதிகள; மட்டுமல்ல ஒட்டு மொத்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப புலம்பெயர்ந்தோரை இந்த நாட்டில் முதலீடு செய்வதற்கு ஒரு சாதகமான செயற்பாடாக அமையும் .

குறிப்பாக மாகாணங்களுக்கு உள்ள நிதி அதிகாரங்கள் சம்பந்தமாக பேசப்பட வேண்டும் அத்துடன் இதற்கான உடனடி தீர்வுகள் கிடைக்கப்பெற வேண்டும்

அத்துடன் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சனைகளுக்கு சர்வ கட்சி அரசாங்கத்தின் மூலம் ஒரு நிலையான அரசியல் தீர்வின் மூலம் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கான உடனடி தீர்வு எட்டப்பட வேண்டும்

இவ்வாறான சூழ்நிலை உருவாகும்போது தமிழ் தரப்பு சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பாக சாதகமாக பரீசீலிக்க கூடியதாக இருக்கும்

ஆகவே சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவற்றை சரியாக தமிழ் தரப்பினர் பயன்படுத்த வேண்டும். ஆகவே முதலில் அரசியல் தமிழ் கைதிகள் விடுதலை நல்லெண்ண வெளிப்பாடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நடைபெறுமாகில் தமிழ் மக்களின் நீண்டகால மற்றும் உடனடி பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மேற்கொள்வதன் மூலம் ஜனாதிபதியின் அழைப்பு சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு என இவ்வாறு தெரிவித்தார்.

Posted in Uncategorized

22ஆவது திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி !

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூல வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

திருத்தச்சட்டமூல வரைபினை இவ்வார காலத்திற்குள் பாராளுமன்றில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக நீதி,சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி, பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பலப்படுத்தும் வகையில் 22 ஆவது திருத்தச்சட்டமூல வரைபு மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நீதியமைச்சர் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூல வரைபினை சமர்ப்பித்தார்.

வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தில் ஒருசில விடயங்கள் திருத்தங்களுக்குட்படுத்தப்பட வேண்டும் என அரசியல் கட்சிகள் முன்வைத்த யோசனைகளுக்கமைய நீதியமைச்சர் சட்டமூல வரைபில் திருத்தங்களை முன்வைத்துள்ளார்.

நீதியமைச்சர் சமர்ப்பித்த சட்டமூல வரைபிற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.22ஆவது திருத்தச்சட்ட வரைபு திருத்தம் செய்யபட்டு வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து,இவ்வார காலத்திற்குள் பாராளுமன்றிற்கு சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக நீதியமைச்சர் குறிப்பிட்டார்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 22ஆவது திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துடனான அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சி தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அகிலம் போற்றும் நல்லூர்க் கந்தனுக்கு நாளை கொடியேற்றம்: கொடிச் சீலை பிரதம குருக்களிடம் கையளிப்பு

அகிலம் போற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழாவுக்கான கொடிச் சீலை எடுத்து வரும் பாரம்பரிய நிகழ்வு இன்று திங்கட்கிழமை(01.8.2022) காலை-9 மணிக்குப் பக்திபூர்வமாக
நடைபெற்றது.

ஆலய மரபிற்கு அமைய நல்லூர் கிழக்கு சட்டநாதர் ஆலயத்தை அண்மித்து அமைந்துள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை ஆராதனைகளைத் தொடர்ந்து கொடிச் சீலை தயாரிக்கும் மரபினை உடைய குடும்பத்தினர் சிறிய தேர் ஒன்றில் கொடிச் சீலையை எடுத்து வந்து நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பிரதம குருக்களிடம் கையளித்தனர்.

இதேவேளை, இவ்வாலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை(02.8.2022) முற்பகல்-10 மணியளவில் கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாக உள்ளது.

தொடர்ந்தும் 25 தினங்கள் வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழா சிறப்பாக இடம்பெற உள்ளது.

இவ்வாலயப் பெருந் திருவிழாவில் எதிர்வரும்-11 ஆம் திகதி மாலை-4.45 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை-4.45 மணிக்கு கார்த்திகை உற்சவமும், 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை-4.45 மணிக்கு கைலாசவாகன உற்சவமும், 22 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-6.45 மணிக்கு கஜவல்லி மஹாவல்லி உற்சவமும், அன்றையதினம் மாலை-4.45 மணிக்கு வேல்விமான(தங்கரதம்) உற்சவமும், 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-6.45 மணிக்கு தெண்டாயுதபாணி உற்சவமும், அன்றையதினம் மாலை-4.45 மணிக்கு ஒருமுகத் திருவிழாவும், 24 ஆம் திகதி புதன்கிழமை மாலை-4.45 மணிக்குச் சப்பரத் திருவிழாவும், 25 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-6.15 மணிக்குத் தேர்த் திருவிழாவும், 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-6.15 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் மாலை-5 மணிக்கு கொடியிறக்க உற்சவமும், மறுநாள் சனிக்கிழமை மாலை-4.45 மணிக்குப் பூங்காவன உற்சவமும் இடம்பெறும்.

கோட்டாபய ராஜபக்ஸ இலங்கை வர உகந்த சந்தர்ப்பம் இதுவல்ல: ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இலங்கைக்கு வருகை தருவதற்கான உகந்த சந்தர்ப்பம் இது அல்லவென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவின் Wall Street Journal பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

அவர் வருகை தரும் பட்சத்தில், நாட்டிற்குள் அரசியல் நெருக்கடி ஏற்படலாம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விரைவில் இலங்கைக்கு வருகை தருவதற்கான சாத்தியம் தென்படவில்லையென அமெரிக்காவின் Wall Street Journal பத்திரிகையுடனான நேர்காணலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குள் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு மேலும் சில காலங்கள் செல்லும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதத்தின் இறுதி பகுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க Wall Street Journal பத்திரிகைக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.