நல்லெண்ண செயற்பாடாக தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கும் பட்சத்தில் சர்வகட்சி அரசாங்கம் அமைய தமிழ் தரப்பினர் பரீசீலிக்கலாம். – முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

ஜனாதிபதி சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு அழைப்பு விடுத்திருக்கும் இந்தவேளையில் தமிழ் மக்கள் மத்தியில் புரையோடியிருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டுவதற்கு முதலில் நல்லெண்ண செயற்பாடாக தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதன் மூலம் தமிழ் கட்சி தரப்பினர் சர்வ கட்சி அரசு அமைவதற்கு சாதகமாக அமைய வாய்ப்பு ஏற்படும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் தூரநோக்கு சிந்தனையாளரும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் ஜனாதிபதி சர்வ கட்சி அரசாங்கம் அமைப்பதற்காக விடுத்திருக்கும் அழைப்பு தொடர்பாக தமிழ் தரப்பு அரசியல் கட்சிகளுக்கு விடுத்திருக்கும் செய்தியில்

நாட்டில் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதன் தொடர்பாக ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்

உண்மையிலேயே சர்வ கட்சி அரசாங்கம் அமைய பெறுவதற்கு சிங்கள பெரும்பான்மை கட்சிகள் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் அவற்றிற்கு ஆதரவு வழங்க இருக்கின்றனர்

அந்த வகையில் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவையும் அவர் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்து இருக்கின்றார்

உண்மையில் தமிழ் தரப்பு கட்சினர் அரசியல் கைதிகளின் விடுதலையை நோக்கிய செயல்பாடாக ஜனாதிபதியிடம் தெரிவித்து நல்லெண்ண வெளிப்பாடாக அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படும் பட்சத்தில் தமிழ் மக்களின் மத்தியில் நிலவும் உடனடி மற்றும் நீண்ட கால பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் பரிசீலிக்க கூடியதாக இருக்கும்

ஏனென்றால் தமிழ் மக்களின் உடனடி பிரச்சனைகள் பல தீர்க்கப்பட வேண்டி இருக்கின்றது

இதில் முதன்மையாக இருப்பது அரசியல் கைதிகளின் விவகாரம் இந்த அரசியல் கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படும்போது சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பான விடயத்தை தமிழர் தரப்பு பரீசீலிக்க முடியும்.

அந்த வகையில் பயங்கரவாத தடைச்சட்டம் காணி அபகரிப்பு மற்றும் வடகிழக்கு பகுதிகள; மட்டுமல்ல ஒட்டு மொத்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப புலம்பெயர்ந்தோரை இந்த நாட்டில் முதலீடு செய்வதற்கு ஒரு சாதகமான செயற்பாடாக அமையும் .

குறிப்பாக மாகாணங்களுக்கு உள்ள நிதி அதிகாரங்கள் சம்பந்தமாக பேசப்பட வேண்டும் அத்துடன் இதற்கான உடனடி தீர்வுகள் கிடைக்கப்பெற வேண்டும்

அத்துடன் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சனைகளுக்கு சர்வ கட்சி அரசாங்கத்தின் மூலம் ஒரு நிலையான அரசியல் தீர்வின் மூலம் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கான உடனடி தீர்வு எட்டப்பட வேண்டும்

இவ்வாறான சூழ்நிலை உருவாகும்போது தமிழ் தரப்பு சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பாக சாதகமாக பரீசீலிக்க கூடியதாக இருக்கும்

ஆகவே சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவற்றை சரியாக தமிழ் தரப்பினர் பயன்படுத்த வேண்டும். ஆகவே முதலில் அரசியல் தமிழ் கைதிகள் விடுதலை நல்லெண்ண வெளிப்பாடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நடைபெறுமாகில் தமிழ் மக்களின் நீண்டகால மற்றும் உடனடி பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மேற்கொள்வதன் மூலம் ஜனாதிபதியின் அழைப்பு சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு என இவ்வாறு தெரிவித்தார்.

22ஆவது திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி !

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூல வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

திருத்தச்சட்டமூல வரைபினை இவ்வார காலத்திற்குள் பாராளுமன்றில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக நீதி,சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி, பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பலப்படுத்தும் வகையில் 22 ஆவது திருத்தச்சட்டமூல வரைபு மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நீதியமைச்சர் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூல வரைபினை சமர்ப்பித்தார்.

வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தில் ஒருசில விடயங்கள் திருத்தங்களுக்குட்படுத்தப்பட வேண்டும் என அரசியல் கட்சிகள் முன்வைத்த யோசனைகளுக்கமைய நீதியமைச்சர் சட்டமூல வரைபில் திருத்தங்களை முன்வைத்துள்ளார்.

நீதியமைச்சர் சமர்ப்பித்த சட்டமூல வரைபிற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.22ஆவது திருத்தச்சட்ட வரைபு திருத்தம் செய்யபட்டு வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து,இவ்வார காலத்திற்குள் பாராளுமன்றிற்கு சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக நீதியமைச்சர் குறிப்பிட்டார்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 22ஆவது திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துடனான அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சி தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அகிலம் போற்றும் நல்லூர்க் கந்தனுக்கு நாளை கொடியேற்றம்: கொடிச் சீலை பிரதம குருக்களிடம் கையளிப்பு

அகிலம் போற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழாவுக்கான கொடிச் சீலை எடுத்து வரும் பாரம்பரிய நிகழ்வு இன்று திங்கட்கிழமை(01.8.2022) காலை-9 மணிக்குப் பக்திபூர்வமாக
நடைபெற்றது.

ஆலய மரபிற்கு அமைய நல்லூர் கிழக்கு சட்டநாதர் ஆலயத்தை அண்மித்து அமைந்துள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை ஆராதனைகளைத் தொடர்ந்து கொடிச் சீலை தயாரிக்கும் மரபினை உடைய குடும்பத்தினர் சிறிய தேர் ஒன்றில் கொடிச் சீலையை எடுத்து வந்து நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பிரதம குருக்களிடம் கையளித்தனர்.

இதேவேளை, இவ்வாலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை(02.8.2022) முற்பகல்-10 மணியளவில் கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாக உள்ளது.

தொடர்ந்தும் 25 தினங்கள் வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழா சிறப்பாக இடம்பெற உள்ளது.

இவ்வாலயப் பெருந் திருவிழாவில் எதிர்வரும்-11 ஆம் திகதி மாலை-4.45 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை-4.45 மணிக்கு கார்த்திகை உற்சவமும், 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை-4.45 மணிக்கு கைலாசவாகன உற்சவமும், 22 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-6.45 மணிக்கு கஜவல்லி மஹாவல்லி உற்சவமும், அன்றையதினம் மாலை-4.45 மணிக்கு வேல்விமான(தங்கரதம்) உற்சவமும், 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-6.45 மணிக்கு தெண்டாயுதபாணி உற்சவமும், அன்றையதினம் மாலை-4.45 மணிக்கு ஒருமுகத் திருவிழாவும், 24 ஆம் திகதி புதன்கிழமை மாலை-4.45 மணிக்குச் சப்பரத் திருவிழாவும், 25 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-6.15 மணிக்குத் தேர்த் திருவிழாவும், 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-6.15 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் மாலை-5 மணிக்கு கொடியிறக்க உற்சவமும், மறுநாள் சனிக்கிழமை மாலை-4.45 மணிக்குப் பூங்காவன உற்சவமும் இடம்பெறும்.

கோட்டாபய ராஜபக்ஸ இலங்கை வர உகந்த சந்தர்ப்பம் இதுவல்ல: ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இலங்கைக்கு வருகை தருவதற்கான உகந்த சந்தர்ப்பம் இது அல்லவென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவின் Wall Street Journal பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

அவர் வருகை தரும் பட்சத்தில், நாட்டிற்குள் அரசியல் நெருக்கடி ஏற்படலாம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விரைவில் இலங்கைக்கு வருகை தருவதற்கான சாத்தியம் தென்படவில்லையென அமெரிக்காவின் Wall Street Journal பத்திரிகையுடனான நேர்காணலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குள் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு மேலும் சில காலங்கள் செல்லும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதத்தின் இறுதி பகுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க Wall Street Journal பத்திரிகைக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

மடு ஆவணித் திருவிழா தொடர்பில் விசேட கலந்துரையாடல் – பல்வேறு தீர்மானங்கள் முன்வைப்பு

எதிர்வரும் ஆவணி மாதம் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள மடு ஆவணி திருவிழா தொடர்பாகவும் முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் முன் ஆயத்த கலந்துரையாடல் இன்று முதலாம் திகதி திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் கிறிஸ்து நாயகம் அடிகளார், மடு திருத்தல பரிபாலகர் எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளார், சுகாதார திணைக்கள அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், பொலிஸ், ராணுவ அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பாக ஆராயப்பட்டது.

தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தினாலும் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருவார்கள் என்ற காரணத்தால் அதற்கு அமைவாக திணைக்களங்கள் தொடர்பான சேவைகளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விசேட புகையிரத சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கொழும்பில் இருந்து மடு புகையிரத நிலையத்திற்கும் ,அநுராத புரத்தில் இருந்து மடு புகையிரத நிலையத்திற்கும் எதிர்வரும் 13ஆம், 14ஆம், மற்றும் 15 ஆம் திகதிகளில் வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

மடு புகையிரத நிலையத்தில் இருந்து மடு திருத்தலத்திற்கு பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று மீளவும் ஆரம்பித்துள்ள மையினால் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து திருவிழா திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

Posted in Uncategorized

மஹிந்த மற்றும் பசிலின் பயணத்தடை நீடிப்பு

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவருக்குமான பயணத்தடையை ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் என குறித்த இருவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள காரணத்தினால் இவ்வாறு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கூட்டமைப்பின் இராஜதந்திர நம்பகத்தன்மை ? ELANADU Editorial

தமிழ் மக்கள் ஒரு அரசு இல்லாத தரப்பு. அரசு இல்லாத தரப்புக்களுக் கான இராஜதந்திர வாய்ப்புக்கள் மிகவும் பலவீனமானவை. இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றவை எனக் கூறப்படும், மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள்தான், தமிழ் மக்களுக்கான அரசியலை சர்வதேச அரங்கு களில் நீர்த்துப்போகாமல் பாதுகாத்துவருகின்றன. கொழும்பின் விடாப்படியான அணுகுமுறைகளும் இதற்கொரு காரணமாகும். கொழும்பின் ஆட்சியாளர்கள் சில விடயங்களில் முன்னேற்றத்தை காண்பிப்பார்களாயின், சர்வதேச அவதானமும் நாளடைவில் நீர்த்துப் போய்விடும். இன்றைய நிலை யில், தமிழர் களின் சர்வதேச குரலாக தொழில்படும் புலம்பெயர் சமூகமும் குறிப்பிடத்தக்களவு செல்வாக்கை செலுத்திவருகின்றது.

ஆனால், மறபுறமாக தாயகத்தில் இயங்கும் அரசியல் தரப்புக்களின், இராஜதந்திர அணுகுமுறைகள் எவ்வாறிருக்கின்றன? சில தினங்களாக இடம் பெற்ற சம்பவங்களின் அடிப்படையில் சிந்திப்பதாயின், ‘பனையால் விழுந்த வரை மாடு ஏறி மிதித்த’ – கதையாகவே தமிழ் தேசியவாத தரப்புக்களின் இராஜ தந்திர அணுகுமுறை இருக்கின்றது. ஜனாதிபதியை தெரிவு செய்வதற் கான வாக்கெடுப்பின்போது, ஏற்பட்ட சில சம்பவங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. எமக்கு கிடைக் கும் தகவல்களின்படி, இந்திய தூதரக சர்ச்சையால், ஏனைய இராஜதந்திரிகள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். அவர்கள் மத்தியில், கூட்ட மைப்பின் நம்பகத்தன்மை, பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

இராஜதந்திர தொடர்புகள் என்பவை பரஸ்பர நம்பகத்தன்மையின் அடிப் படையில் இடம்பெறும் விடயங்களாகும். நம்பகத்தன்மை போய்விட்டால், அதன் பின்னர் அதனை மீளவும் கட்டியெழுப்புவது மிகவும் சவாலானதொரு விடயமாகும்.

2009இற்கு பின்னரான காலத்தில், சம்பந்தன் தலைமையில் கடந்த 13 வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட அரசியல் முன்னெடுப்புக்களில், பல்வேறு இராஜதந்திர சறுக்கல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதில், பாரதூரமானது இந்திய பிரதமர் சிறி நரேந்திர மோடியுடனான சந்திப்பை அற்ப காரணங்களை கூறி நிகராகரித்தமை. கடவுசீட்டைக் காணவில்லை, தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகனின் திருமணம் என்று கூறியே, சம்பந்தன் அதனை நிராகரித்திருந்தார். 134 கோடி மக்களின் தலைவர், உலகளவில் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவர், தமிழ் மக்களின் பிரச்னைகள் தொடர்பில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியபோது, அதனை ஒருவர் நிராகரிக்கின்றார் என்றால், அவரின் இராஜந்திர ஆற்றல் தொடர்பில் என்ன கூறமுடியும்?

சில மாதங்களுக்கு முன்னர், கூட்டமைப்பின் நிபுணர் குழுவென்னும் பெயரில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு, சுமந்திரன் தலை மையில், மூவரடங்கிய குழுவினர் சென்றிருந்தனர். அதில் சென்ற இருவர், நாடு திரும்பியதும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேசியதில்லை. அவர்கள் எதற்காக சென்றார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. இந்தப் பயணம் தொடர்பில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு தெரியப்படுத்தப் படவில்லை. நாடு திரும்பியதைத் தொடர்ந்து, ஜனவரி மாதம் நடுப்பகுதிக்குள் அமெரிக்கா கடுமையான முடிவுகளை எடுக்கவுள்ளதாகக் கூறப்பட் டது. ஆனால், அப்படியெதுவும் இடம்பெறவில்லை. ஏனெனில், அனைத்துமே தேர்தல் பிரசார நோக்கம் கொண்ட கதைகளேயேன்றி உண்மை களல்ல.

இப்போதும் தங்களுடைய திட்டம் வெற்றியளிக்க வேண்டும் என்பதற்காக, இராஜதந்திர தொடர்புகள் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சீனத் தூதரக சந்திப்பு தொடர்பில் கூட்டமைப்பில் எவருமே தெரிந்திருக்கவில்லை. உண்மையில், என்ன அடிப்படையில் இராஜதந்திரிகளை கூட்டமைப்பின், பாராளுமன்ற உறுப்பினர்கள் அணுகுகின்றனர்? கூட்டமைப்பின் இராஜதந்திர தொடர்புகள் எவருடைய அனுமதியின் கீழ் கையாளப்படுகின்றன? பதில் இலகுவானது. கூட்டமைப்பில் இராஜதந்திர நெறிமுறையென்று ஒன்றில்லை.
தனிப்பட்ட நபர்களின் விருப்புவெறுப்புக்களின் அடிப்படையிலேயே அனைத்தும்
இடம்பெறுகின்றன. கூட்டமைப்பில் அக்கறையுள்ளவர்கள், இந்த நிலைமையை
மாற்றியமைப்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

Posted in Uncategorized

குட்டிமணி, தங்கதுரையின் 39 ஆவது நினைவு நாள் வவுனியா மாவட்ட காரியாலயத்தில் அனுஸ்டிப்பு!

1983ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை கலவரத்தின்போது, வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி உள்ளிட்ட 53 பேரின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் தேசிய வீரர்கள் தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட காரியாலயத்தில் மாவட்ட பொறுப்பாளர் புரூஸ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது குட்டிமணி, தங்கத்துரை மற்றும் ஜெகன் ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கட்சியின் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் மயூரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு : வெளியானது அதிவிசேட வர்த்தமானி

பாராளுமன்ற கூட்டத்தொடரை இன்று (28) நள்ளிரவு முதல் ஒத்திவைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, புதிய பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, 9 ஆவது பாராளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடர் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது. புதிய கூட்டத்தொடர் ஜனாதிபதின் கொள்கை விளக்க உரையுடன் ஆரம்பமாகும்.

ஜனாதிபதியுடன் பிரித்தானி உயர்ஸ்தானிகர் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும் இடையில் இன்று (28) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் டுவிட்டர் குறிப்பொன்றை வெளியிட்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர், பல விடயங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தொடர்பான செயல்முறை மற்றும் மனித உரிமைகளுக்கு இணங்குவது உட்பட பல விடயங்களில் கவனம் செலுத்தியதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இறுதியாக, அவர் தனது ட்விட்டர் பதிவில், அமைதியான மற்றும் ஜனநாயக இடத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized