போராளிகளை விசாரிக்காமல் மாபியாக்களை கண்டுபிடியுங்கள் – புலனாய்வு பிரிவினருக்கு ரெலோ தலைவர் செல்வம் எம்.பி. அறிவுரை

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை தொந்தரவு செய்யாமல் எரிபொருளை பதுக்கும் மாபியாக்களை கண்டுபிடிப்பதற்கு புலனாய்வு பிரிவினர் முன்வரவேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (28) ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அத்தியவசிய தேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிப்பது என்ற அரசின் அறிவிப்பானது குழந்தை பிள்ளைத்தனமானது. இதனால் கடற்றொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட பல தரப்பினர் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவர்.

ஏசிரூமில் இருக்கும் அமைச்சர் பந்துல குணவர்த்தன சாதாரண மக்கள் வரிசையில் நிற்கும் பரிதாபத்தை உணர்ந்திருப்பாரோ என்று தெரியவில்லை.

அதிலும் பெண்கள் இந்த விடயத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒருநேர சாப்பாட்டுடன் வாழ்வை கழிக்கும் அவல நிலை பலருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே அந்த மக்களின் பரிதாப நிலையை அறியாது அமைச்சர் பந்துல இவ்வாறு அறிவித்திருப்பது ஏற்க்க முடியாத கருத்தாகவே உள்ளது. எனவே இந்த நடைமுறையை அவர் உடனடியாக வாபஸ் பெறவேண்டும்.

அத்துடன் அனைத்து மக்களுக்கும் எரிபொருளை பெற்று கொடுப்பதற்கான வசதியினை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். எமதுமக்களை எள்ளி நகையாடுபவர்கள், துன்பப்படுத்துபவர்கள், இந்த அரசாங்கத்திலே இருக்கக்கூடாது .

இந்த அரசிடம் எந்த திட்டமும் இல்லை. ஜனாதிபதி எடுத்துள்ள முடிவில் மாற்றம் ஏற்ப்பட்டது போல எமக்கு தெரியவில்லை.

எனவே புதியவர்கள் வந்தபின்னரும் சரியான திட்டமிடல் இல்லை என்றால் எமது மக்களே எல்லாவிதத்தாலும் பாதிக்கப்படுவார்கள். இன்று அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் எரிபொருளை கோரி ரஸ்யாவிற்கும் கட்டாருக்கும் செல்லும் அமைச்சர்கள் அந்த முஸ்தீபை முன்னமே செய்திருக்க வேண்டும்.

மக்களை நாட்கணக்கில் வீதிகளிலே காத்திருக்க செய்துவிட்டு தற்போது செல்கின்றமையானது அவர்களிடம் சரியான திட்டமிடல் இன்மையையே புலப்படுத்துகின்றது. இவர்களால் ஏன் சரியான ஒரு வழிமுறையை காணமுடியாமல் போனது என்ற கேள்வி எழுகின்றது.

இதேவேளை களவு செய்பவர்களிற்கும், பதுக்குபவர்களுக்கும் தாராளமாக எரிபொருள் கிடைக்க பெறுகின்றது. புனர்வாழ்வு பெற்ற விடுதலை புலி உறுப்பினர்களை இலங்கை புலனாய்வுபிரிவினர் ஒவ்வொருநாளும் சென்று விசாரணை மேற்கொள்கின்றனர். நான் அவர்களுக்கு ஒன்றை சொல்கிறேன்.

இவற்றை எல்லாம் இடைநிறுத்திவிட்டு எரிபொருளை பதுக்குபவர்களை கண்டறிவதற்காக இந்த புலனாய்வு உத்தியோகத்தர்களை பயன்படுத்து முடியும். என்றார்.

Posted in Uncategorized

மூன்று பகுதிகளால் வாகரைப் பிரதேச செயலக நிலங்களைப் பிரித்தெடுக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன – ஜனா

வாகரைப் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நிலங்களை மூன்று பகுதிகளால் பிரித்தெடுக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு எதிராக தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்ற மாவட்டத்தின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்துச் செயற்பட வேண்டும். அரசுடன் இணைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைக்கு பூரண ஆதரவு வழங்கத் தயார் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தோணிதாண்டமடு பிரதேசத்தின் ஒரு பகுதி பொலநறுவை மாவட்டம் வெலிகந்தை பிரதேச செயலாளர் பிரிவினுள் இணைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் வாகரைப் பிரதேச செயலாளருடன் இது தொடர்பில் சந்திப்பினை மேற்கொண்டிருந்தார். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில நாட்களாக வாகரைப் பிரதேசத்தில் இருந்து தோணிதாண்டமடு என்கின்ற பிரதேசத்தின் ஒரு பகுதி பொலநறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படப் போவதாகக் தகவல்கள் வந்தன. அந்த வகையில் இன்றைய தினம் வாகரைப் பிரதேச செயலாளரைச் சந்தித்து இது விடயமாக கலந்துரையாடி விபரங்களைப் பெற்றுக் கொண்டேன். எல்லை நிர்ணய சபையினால் வாகரைப் பிரதேசத்தில் நாங்கள் பாரியதொரு பிரச்சனையை எதிர்கொள்ள இருப்பதாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

அதாவது வாகரைப் பிரதேசத்தில் இருந்து மூன்று பகுதியால் பிரதேசங்கள் பிரித்து எடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலாவதாக தோணிதாண்டமடு தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தின் ஒரு பகுதி தமிழ் மக்களுடன் சேர்த்து வெலிகந்தை பிரதேசத்துடன் சேர்க்கப்பட இருப்பதாகவும், அதே போன்று ஓட்டமாவடி மத்தி பிரதேச செயலகப் பிரிவுடன் புணானை கிழக்கு, கிருமிச்சை, காயான்கேணி, வட்டவான் உள்ளிட்ட சில பிரதேசங்கள் இணைக்கப்படுவதற்கான முயற்சிகளும், மறுபக்கம் வடக்கிலே வெருகல் இரட்டை ஆற்றை ஒட்டிய பிரதேசம் வெருகல் பிரதேச செயலகத்துடன் இணைக்கப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் அறிகின்றேன்.

மூன்று பக்கத்தினால் வாகரைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களைப் பிரித்தெடுப்பதற்கான அழுத்தங்களைக் கொடுத்து ஒரு பகுதியையாவது முழுமையாகக் கைப்பற்றக் கூடிய முயற்சியாகவே நான் இதனைக் கருதுகின்றேன். அது ஓட்டமாவடி மத்தி பிரதேச செயலகத்துடன் காயான்கேணி, வட்டவான், புணானை கிழக்கு, கிருமிச்சை போன்ற பாரியதொரு நிலப்பரப்பினை இணைத்து ஓட்டமாவடி மத்தி பிரதேச செயலகத்தினை வெலிகந்தை வரை விஸ்தரிப்பதற்கான செயற்பாடாகவே இதனைக் கருதுகின்றேன்.

அந்த வகையில் தமிழ்ப் பிரதேசம் என்பதற்கும் அப்பால் காலாகாலமாக வாகரைப் பிரதேச செயலக நிருவத்திற்குட்பட்டு வாழும் மக்களும், நிலங்களும் வாகரைப் பிரதேச செயலகத்துடன் இருந்தவாறே இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர் அரசுடன் இணைந்திருக்கின்றார்கள். ஒருவர் கடந்த காலத்தில் இராஜாங்க அமைச்சராக இருந்தவர் தற்போதும் அப்பதவியை எதிர்பாத்துக் காத்துக் கொண்டிருக்கின்றார். மற்றையவர் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்தவர். தமிழ் மக்களுக்காகப் போரடிய போராட்ட இயக்கத்தில் இருந்தவர் தற்போது இந்த அரசின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவராக இருக்கின்றார்.

இவர்கள் இந்த விடயத்தில் கூடுதலான கவனத்தைச் செலுத்த வேண்டும். தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள். குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் இந்தப் பிரதேசத்திலே இந்த மக்களின் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர். அவர் இந்த விடயத்திலே இன்னும் அதிகமான கவனம் செலுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய எங்களைப் பொருத்த மட்டில் நாங்கள் இவ்விடயத்திற்கு எதிராக எப்போதும் குரல் கொடுப்போம்.

என்னைப் பொருத்த மட்டிலே இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கின்றது. ஓட்டமாவடி மத்தி என்கின்ற பிரதேச செயலகப் பிரிவு நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட பிரதேச செயலகமல்ல என நான் அறிகின்றேன். குறைந்த கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளுடன் ஒரு பிரதேச செயலகம் இருக்க வேண்டிய தேவையும் இல்லை. 7 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய ஓட்டமாவடி மத்தி பிரதேச செயலகத்தை ஓட்டமாவடி மேற்குப் பிரதேச செயலகத்துடன் இணைத்துவிட்டால் அவர்களுக்கான காணிப் பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வு வரும் என்பதே என்னுடைய எண்ணப்பாடு.

எனவே நாங்கள் நான்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுடம் இந்த விடயத்தில் உறுதியாக இருக்க வேண்டும். குறிப்பாக மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் இதில் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். இந்த விடயத்தில் அவர்களுக்கு நாங்கள் என்றுமே பக்க துணையாக இருப்போம். வாகரைப் பிரதேசம் பிரிக்கப்படக் கூடாது. வாகரைப் பிரதேசம் சீரழிந்து போகக் கூடாது. அது இருந்த மாதிரியே அந்தப் பிரதேச செயலகத்தில் உள்ள மக்களும் அந்த நிலங்களும் அந்தப் பிரதேச செயலகத்தின் கீழேயே இருப்பதற்கு நாங்கள் அனைவருமாக ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட வேண்டும் என்று தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜூலை முதலாம் திகதி முதல் விமான சேவை மீள ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜூலை முதலாம் திகதி முதல் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான போக்குவரத்து நடவடிக்கை கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

எனினும், COVID தொற்று காரணமாக அதன் நடவடிக்கைகள் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து தென்னிந்திய விமான நிலையம் வரையில் சேவைகளை முன்னெடுக்க சர்வதேச மற்றும் உள்ளூர் விமான நிறுவனங்களால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைவாக, எதிர்வரும் முதலாம் திகதி முதல் விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வழமை போன்று அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எரிபொருளை விநியோகம் செய்வதாக அறிவித்தது Lanka IOC!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

டோக்கன் பெற்ற போதிலும், மறு அறிவித்தல் வரும் வரை எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் இருப்பு கிடைத்தவுடன், டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு அதன் இருப்பு குறித்து தெரியப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோக நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவை பெற்றோலிய எண்ணெய் களஞ்சியசாலையினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிலையங்கள் அத்தியாவசியமற்ற சேவை வாகனங்களுக்கான எரிபொருளை தொடர்ந்து விநியோகிக்கும் என அதன் பொது முகாமையாளர் இன்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அதன் எரிபொருள் நிலையங்கள் ‘டோக்கன் முறை’ மூலம் செயற்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் கிடைக்கப்பெற்றதும், எரிபொருளைப் பெற விரும்பும் வாடிக்கையாளரை இராணுவம் தொலைபேசியில் அழைத்து பேசுவார்கள் எனவும், டோக்கன் முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

இதனை செய்ய, வாடிக்கையாளர் முதலில் டோக்கனைப் பெற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சுமந்திரன், சாணக்கியன், கப்பல் கருணா, பிள்ளையான், அமலுக்கு கல்முனையிலிருந்து கட்டப்பன் எழுதும் பகிரங்க மடல்! -kalmunainet.com

சுமந்திரன், சாணக்கியன், கப்பல் கருணா, பிள்ளையான், அமலுக்கு கல்முனையிலிருந்து கட்டப்பன் எழுதும் பகிரங்க மடல்!

அன்புள்ள சட்டச் சக்கரவர்த்தி சுமந்திரன், சாணக்கியன் உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

கல்முனையான் நான் இங்கு நலமில்லை. வீதியோர வரிசைகளிலேயே எங்கள் காலம் கடக்கிறது. ஆனாலும், உங்களுக்கு உணவு தொடக்கம் அனைத்துமே மானியம் என்பதால் நீங்கள் நலமாகவே இருக்கிறீர்கள் என்பதை நானறிவேன்.

ஆண்டுகள் பல உருண்டோடியும் கல்முனையில் என் சமூகம் படும் நெருக்குவாரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. எங்கள் பிரதேச செயலகத்தின் 33 ஆண்டுகால வரலாற்றுப் பயணம் இன்னும் தொடர்கிறது.
நாடே ஒருவேளை உணவுக்கு என்ன செய்வதென்று சிந்திக்கும் இந்த நேரத்திலும் கல்முனையில் தமிழருக்கு எதிராக முஸ்லிம் இனவாதிகளால் கேவலமாக சூழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

நல்லாட்சி காலத்தில், சட்டம்பி என பெயர்பெற்ற நீங்கள் நிழல் அமைச்சராக இருந்தது என் கண்முன்னே நிழலாடுகிறது. அதனால் என் சமூகம் கண்ட நன்மைதான் என்னவென எண்ணிப் பார்க்கிறேன்.

நீங்க கடிதத்தோடு உண்ணாவிரத மேடை வந்ததும் எங்களை கடுப்பாக்கிய காரணத்தால் அதுக்காக பெற்ற வரவேற்பும் பழைய கதையானாலும் அதை அன்று ஏற்காத பலரும் இன்று ஏற்கின்றனர்.
அச்சுப் புத்தகம் ஏற இருந்த கல்முனை பிரதேச செயலக நிர்வாக அலகு இறுதி நேரத்தில் நீங்கள் ஹக்கீமுக்கு வழங்கிய தகவலால் தடுக்கப்பட்டது எங்களுக்கு தெரிந்த இரகசியம்தான். தொப்பியுடன் உங்கள் விசுவாசம் சொல்ல முடியாதளவு உள்ளதை நாங்கள் நன்கு அறிவோம். நீங்கள் மேய்ப்பர் வழி வந்தத்தாலோ தெரியவில்லை எங்களை நன்றாகவே மேய்க்கிறீர்கள்.

கோட்டாவை இலங்கை மக்கள். புறக்கணித்து விட்டார்கள்,கோட்டாவை விமர்சிப்பதாலோ ரணிலை வசை பாடுவதாலோ என் சமூகத்திற்கு நீங்கள் பெற நினைக்கும் நன்மை என்ன? உங்களின் பால்ய நண்பர்கள் கோட்டாவுடனும், ரணிலுடனும் கொண்ட காதல் இன்னும் மாறவில்லை. இருபதுக்கும் உயர்த்தி இருபத்தொன்றுக்கும் உயர்த்துவர். நீங்கள் நாங்கள் சட்டம்பி என கொக்கரிக்கக் கொக்கரிக்க எங்கள் சமூகம் முட்டை போட்டதுதான் மிச்சமானது.

அண்மையில் “கோட்டா கோ” வுக்கு கல்முனைக்கு வந்தபோதும் தொப்பியணிந்து சகனில் மதிய உணவை பகிந்தவேளை கல்முனை தமிழர்களின் எந்த விடயங்களும் நிறைவேறாதென தாங்கள் உத்தரவாதம் வழங்கியதாக காத்து வாக்கிலே என் காதுக்கும் வந்தது. உங்கள் செயலை நீங்கள் கடிதத்துடன் வந்தபோதே கண்ணூடாகக் கண்டுவிட்டோம்.

நீங்கள்தான் அப்படியென்றால் மொழிச் சக்கரவர்த்தி சாணக்கியனும் தன்னை பாராளுமன்றம் அனுப்பிய சமூகம் சோத்துக்கும் கஞ்சிக்கும் மாரடிக்கையில் ஏற்கனவே பஞ்சு மெத்தையில் கிடப்பவர்களுக்கு பிரியாணி போடும் கதையாக தமிழினத்தையே மலினப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழர் உரிமைகளையும், பாரம்பரியங்களையும் காக்கவேண்டுமென பட்டிருப்பு தொகுதியில் இருந்து பாராளுமன்றம் அனுப்பப்பட்ட சாணக்கியன் அங்கே ஜனாசா எரிப்புக்கும் ஹலால் உணவுக்குமாக தனது மும்மொழித் திறமையில் முழக்கமிடுகிறார். அரபு சமூகத்தை காக்கவும் கட்டியெழுப்பவும் பாராளுமன்றத்தில் அவர்களில் பலர் இருக்கையில் நீங்கள் அரச விரோத போக்கை வெளிப்படுத்தி தமிழர்கள் மீது அரச குரோதத்தை தூண்டுகிறீர்கள். ஆனால் அவர்கள் அம்சடக்கிகளாக இருந்து அனைத்தையும் சாதிக்கின்றனர். இதனால் என் இனமும் தேசமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி நீங்கள் உணர்வீர்களா?

நீங்கள் இருவருமாக இணைந்து உங்களுடைய அதீத திறமைகளை உங்கள் சார் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்துவதை விடவும் நீங்களே அறியாமல் அச்சமூகத்தை படுகுழியிலிட்டு கொழுத்தவற்கொப்பான செயற்பாடுகளையே செய்கிறீர்கள் என்பதை அறிவீர்களா?

சுமந்திரன், சாணக்கியன் நீங்கள் உங்கள் வல்லமையை எனது இனத்திற்கு தேசத்திற்கு ஆதரவாக பயன்படுத்ததாவிட்டாலும் பரவாயில்லை, எதிராக பயன்படுத்த வேண்டாம். எனது இனத்திற்கு யார் துரோகம் செய்கின்றனரோ அவர்களுடன் கைகோர்த்து என் இனத்தை கேவலப்படுத்தாதீர்கள்.

நீங்கள் இருவரும் இற்றைக்கு பிற்பட்ட குறைந்தது 40 வருட வரலாற்றையாவது புரட்டிப்பார்க்க வேண்டும். குறிப்பாக நீங்கள் கைகோர்க்கும் முஸ்லிம் சமூக அரசியல் தலைவர்களாலும், ஆயுதம் தரித்த அந்த இன ஊர்காவற்படை என்ற பெயரில் இயங்கிய அரச பயங்கரவாதத்தாலும் எம் இனம் நசுக்கப்பட்ட வரலாறுகளை நீங்கள் படிக்க வேண்டும்.

அம்பாரையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற வரலாற்றுப் படுகொலைகள், பூர்விக தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்ட, கபளீகரம் செய்யப்பட்ட, செய்யப்படுகின்ற விதங்களை நீங்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை. ஏனெனில், எங்கள் வலிகளுக்கும் உங்களுக்கும் வெகு தூரம். என் இனத்தின் வரலாறும் வடுக்களும் அறியாத நீங்கள் எங்கும் என் இனம் பற்றி பேசும் அருகதை அற்றவர்கள்.

சாணக்கியன் அவர்களே உங்களுக்கும் முஸ்லிம் தலைவர்களுக்கும் இடையேயான உறவு உங்கள் பாட்டன் காலத்து உறவு என்பதை நானறிவேன். அம்பாரை மாவட்டத்திற்கு துரோகம் இழைத்த முதல் அரசியல்வாதி உங்கள் பாட்டனார் இராசமாணிக்கம் என்பதை அம்பாரை மாவட்ட தமிழர்கள் இன்னும் மறக்கவில்லை.

காரியப்பருடன் ஒப்பந்தம் செய்து தனித் தமிழ்க் கிராமமான துறைநீலாவணையை பட்டிருப்பு தொகுதியுடன் இணைத்ததன் மூலம் கல்முனையிலும், அம்பாரையிலும் தமிழர் பரம்பலை மட்டுப்படுத்த துணைபோனவர் உங்கள் பாட்டனார். அந்த வழி வந்த உங்களிடம் எவ்வாறு எனது சமூகம் தனக்கு சார்பான சாணக்கியத்தை எதிர்பார்க்க முடியும். ஆனாலும் உங்கள் பாட்டனாரால் பயனடைந்த சமூகம் இன்று உங்களையும் பயன்படுத்துகிறது.

காட்டிக் கொடுத்து, விற்றுப் பிழைத்தவர்கள் பரம்பரையில் வரலாற்றில் மாறுதல்கள் ஏற்படுமா? இனிமேல் கல்முனை விடயத்தில் உங்கள் நாடகம் வேண்டாம். தமிழ் தேசியம் என்கின்ற ஒற்றை வார்த்தையில் எங்களது நியாயமான அபிலாசைகளை சிதைத்து சின்னாபின்னமாக்கியது போதும். நாங்கள் தலை நிமிர வேண்டும். நாங்கள் தொப்பி அணியத் தயாரில்லை. விபூதியும், உரித்திராட்க்ஷமும், சிலுவையும் எங்களுக்கு போதும்.

சுமந்திரன் கட்சி தலைவர் கனவிலும் சாணக்கியன் முதலமைச்சர் கனவிலும் மிதக்கின்றபோது தமிழர் கனவுகள் மெய்படுவதெப்படி என்பதை என் இனம் உணரைகின்றபோது நீங்கள் தமிழர் அரசியலில் இருந்து துடைத்தெறியப்படவீர்கள் என்பது திண்ணம்.

ஒரு காலம் இருந்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் துடைப்பத்தின் பெயர் இடப்பட்டாலும் வெற்றி நிச்சயம் என்பார்கள். இது அம்பரைக்கும் பொருந்தியது. ஆனால் இன்று நிலைமை வேறு. தமிழ் தேசிக் கூட்டமைப்புக்கு எதிராக வேட்பாளர் பட்டியலில் துடைப்பம் பெயரிடப்பட்டாலும் அவர் வெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் விரக்தியின் வெளிப்பாடே கடந்த பொதுத் தேர்தல் முடிவு. கருநாகம் கனவு காணக்கூடாது அது அவருக்கான வாக்கு என அந்த சூழ்நிலையில் ஒரு துன்புத்தடிக்கும் மக்கள் வாக்களிக்க தயாராக இருந்தனர்

இதையே இறுதியாக நடந்த பொதுத் தேர்தல் உணர்த்தியது. கப்பலேறி அம்பாரை வந்த விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா தழிழ் தேசியக் கூட்டமைப்பை விடவும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றார். இது ஒருபோதும் கருணாவுக்கு அம்பாரையில் வழங்கப்பட்ட அங்கீகாரமல்ல என்பதை மீண்டும் கூறுகின்றேன்.கருணா கையிலெடுத்த முஸ்லிம் விரோத பிரச்சாரமும், வடக்கு பிரதேச செயலக விவகாரமும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின்பால் இருந்த வெறுப்பும் தமிழர்களின் நாளத்தில் உதிரத்தின் ஓட்டத்தை வேகப்படித்தியதால் வந்த விளைவு. இருந்தாலும் துரோகி என்ற நிலையில் இருந்து கருணா மீட்சி பெற அவர்பெற்ற முப்பதாயிரம் வாக்குகளை பயன்படுத்த சந்தர்ப்பம் இருந்தும் அம்பாரையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்து தனது கடமை முடிந்தென வெளியேறிவுடன் அவர் பழைய நிலையிலிருந்தும் கீழே சென்றார்.

கருணாவுக்கு மட்டுமல்ல கல்முனை தமிழர்கள் வரலாற்றில் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான், சதாசிவம் வியாளேந்திரன் போன்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனியான இடமுண்டு.

கறுப்புச்சட்டை காவலர்களுடன் ஒரு காலத்தில் கல்முனையை சுற்றி வலம்வந்தவர்தான் இந்த வியாளேந்திரன். ஆ உ என்றதும் உண்ணாவிரதம், கிளம்பிவிடும் அவர் வடக்கு பிரதேச செயலக உண்ணாவிரத மேடையிலும் பிரசன்னமானதை நாங்கள் மறக்கவில்லை. எல்லாப் பசப்பு வார்த்தைகளும் அந்த கதிரைக்காகத்தான் என கல்முனையானுக்கு கச்சிதமாக உறைக்க வைத்த பெருமைக்குரியவர்.

பிள்ளையான் என்றால் சும்மாவா. மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர். பக்கத்து மாவட்டத்தின் பாரம்பரிய தமிழ் கிராமம் ஒன்றின் மக்கள் படும்பாடு அவருக்கு தெரியவில்லை. இதில் வருகின்ற தேர்தல்களில் அம்பாறையில் குதிக்க எண்ணம்வேற இருக்காம். பிள்ளையானையும் கூட்டிற்று பிரதேச செயலகப் பக்கம் வந்ததுகள் சில இன்னும் பிதற்றலோடதான் திரியிதுகள் என்று அறியக்குள்ள ஆக்களப் பிடிச்சி நச்செண்டு உமிழத்தான் எண்ணம்.

இப்படி எமது கல்முனை மண்ணை வைத்து, பிரதேச செயலக விவகாரத்தை வைத்து அரசியல் செய்த, செய்கின்ற வடக்கு, கிழக்கு மட்டுமல்ல முழு இலங்கையிலுமுள்ள அரசியல் வாதிகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது.

ஆனாலும் எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் எள்ளளவும் தீரவும் இல்லை ; தீர்க்க முயற்சிக்கப்படவுமில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

என் இனத்திற்கு பயன்படாத உங்கள் அரசியல் எமக்கு வேண்டாம். சொந்தக் காலில் எமது பிரதேசத்தில் என் இனம் தலைநிமிரும். எதிர்வரும் நாட்களில் களத்தில் சந்திப்போம்.

Posted in Uncategorized

சொந்த செலவில் குடிவரவு – குடியகல்வு அலுவலகமொன்றை திறக்கும் தம்மிக்க

யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு – குடியகல்வு அலுவலகமொன்றை தனது தனிப்பட்ட செலவில் திறந்து வைக்க எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு (27) தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 360 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐந்து மாகாணங்களில் மேலும் ஐந்து குடிவரவு – குடியகல்வு அலுவலகங்களைத் திறக்குமாறு ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் முதலாவதாக தனது சொந்தப் பணத்தில் யாழ்ப்பாணத்தில் அலுவலகமொன்றை திறப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தயாராவதாகவும் இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை பொறுக்க வேண்டுமென இலங்கை போக்குவத்து சபை வட பிராந்திய ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ் ஊடக அமையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் விசேட ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில், 27 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு பாடசாலை மாணவர்கள் அரச அரசசார்பற்ற உத்தியோகத்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

வடமாகாணத்திலுள்ள ஏழு டிப்போவில் உள்ள ஊழியர்களும் டிப்போவிற்கு கடமைக்கு செல்வதற்கே பெற்றோல் கிடையாது. பெற்றோலை பெறுவதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம்.

எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிற நிலையில் பொதுமக்களை அவர்களது வேலைக்கு கொண்டு செல்வதற்கு நாம் பாரிய பணியாற்றுகிறோம்.

வீட்டில் இருந்து பணியாற்றுபவர்களுக்கு பெற்றோல் வழங்கப்படுகிறது. அத்தியாவசிய சேவை ஊழியர்களின் பட்டியலில் இலங்கை போக்குவரத்து சபையை உள்ளடக்கவில்லை.

நாம் எரிபொருளை கடமை நேரத்தில் வரிசையில் நின்று பெறமுடியும்.

ஆனால் நாம் வரிசையில் நின்று எரிபொருளை நிரப்புவதற்கு கடமை லீவை யாரும் தரப்போவதில்லை. நாம் பயணிகளை இடைநடுவில் விட்டுவிட்டு பெற்றோல் நிரப்ப செல்ல முடியாதே! எமது சேவை தொடர்ந்து நடக்க வேண்டுமாக இருந்தால் எமது வாகனங்களுக்கு இரவு 6மணிக்கு பின்னர் எரிபொருளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட வேண்டும் என்றனர்.

Posted in Uncategorized

இலங்கையின் பொருளாதார நிலைமை மனித உரிமை நிலவரத்தின் முன்னேற்றத்தை திசைத்திருப்பக்கூடாது- பிரித்தானியா

இலங்கையின் மனித உரிமை நிலவரத்தின் முன்னேற்றத்தை சவாலான பொருளாதார நிலைமை திசைத்திருப்பக்கூடாது என்று பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் விக்கிபோர்ட் பிரிட்டிஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சர்வதேச நாணயநிதியத்தின் பிரிவுகள் பொருளாதார கொள்கைகள் தொடர்பாக நிபந்தனைகளை விதிப்பதற்கு அனுமதிக்கின்ற போதிலும் அரசியல் அல்லது மனித உரிமை தொடர்பான நிபந்தனைகளை விதிப்பதற்கான ஏற்பாடுகள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச கடன் மன்றங்களின் ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கையின் கடன் பிரச்சினைக்கு தீர்வொன்றை காணமுயல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இலங்கை அரசாங்கத்துடனும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுடனும் பேச்சுக்களை நடத்துவோம் என்றும் யுத்தத்திற்கு பிந்திய பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பாக பிரித்தானியா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு, ஐ.நா. மனித உரிமை பேரவையின் தீர்மானம் குறித்து இலங்கை ஆக்கபூர்வமான ஈடுபாட்டை காண்பிக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டைச் சீரழித்த முட்டாள்களிடமிருந்து அதிகாரத்தை உடன் மீளப்பெறவேண்டும்; பேராயர் கர்தினால்!

“நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமான முட்டாள்களிடமிருந்து அதிகாரத்தை உடனடியாக மீளப்பெற வேண்டும்.”

– இவ்வாறு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தற்போதைய சந்தர்ப்பத்தில் நாட்டுக்கு சகோதரத்துவமும், ஒத்துழைப்பும் அவசியமாகும்.

நாடு என்பது அரசியல் தலைவர்கள் அல்லர், மக்களாவர். மக்களுக்குத்தான் உதவி செய்ய வேண்டும். அரசியல்வாதிகளுக்கு உதவி செய்வது பொய் வேலையாகும்.

ஏனெனில், பல ஆண்டுகளாக இந்த நாட்டின் வளங்களை வீணடிக்கும் செயல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. ஒரு தரப்பு அல்ல, பல தரப்பினர் இதில் தொடர்புபட்டுள்ளனர்.

7, 8 பில்லியன் என்ற பாரிய கையிருப்பு எவ்வாறு பூச்சியமானது? மத்திய வங்கியிலிருந்த தங்கம் எவ்வாறு காணாமல்போனது?

ஏன் இவை பொறுப்பற்ற முறையில் வீணாக்கப்பட்டன என்பது குறித்து எப்போதேனும் ஒரு நாளில் விசாரிக்கப்பட வேண்டும்.

அதுதான், மக்களுக்குத் தற்போது ஏற்பட்டுள்ள துன்பத்துக்கு ஒரு தீர்வாகும்.

இந்தப் பணத்தை வீணடித்தவர்கள் யார் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

இந்த முட்டாள்தனமான தீர்மானத்தை எடுத்தவர்கள் யாவர்? மக்களை சௌபாக்கியத்தை நோக்கி கொண்டுசெல்லத்தான், தலைவர் ஒருவருக்கு அதிகாரம் வழங்கப்படுகின்றது. அந்த வாக்குறுதிதான் வழங்கப்பட்டது.

எனவே, 2, 3 ஆண்டுகளில் நாட்டை முழுமையாகக் கையேந்தும் நிலைக்குக் கொண்டு சென்றவர் யார் என்பது குறித்து முழுமையாக விசாரித்து, அவர்களிடமிருந்து அதிகாரத்தை மீளப்பெற்றுக்கொள்ள முடியுமாயின் உடனடியாக மீளப்பெற வேண்டும்” – என்றார்.

ஒருவர் தன்வசம் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவு தொடர்பாக மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் வசிக்கும் ஒருவர் தன்வசம் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவை 15,000 அமெரிக்க டொலர்களிலிருந்து 10,000 அமெரிக்க டொலர்களாகக் குறைப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

பொதுமக்களின் கைகளிலுள்ள வெளிநாட்டு நாணயத்தை முறைசார் வங்கி முறைமைக்குள் கொண்டுவரும் நோக்கில் 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச்சட்டத்தின் 8 ஆவது பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள கட்டளைக்கு அமைவாக இத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கையில் வசிக்கும் ஒருவர் தன்வசம் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவு 15,000 அமெரிக்க டொலர்களிலிருந்து 10,000 அமெரிக்க டொலர்களாகக் குறைக்கப்படவுள்ளது. அதுமாத்திரமன்றி ஏனைய வெளிநாட்டு நாணயங்களும் இதற்குச் சமனான அளவில் குறைக்கப்படவுள்ளது.

அதேவேளை மேற்குறிப்பிட்ட தொiகையை விடவும் அதிகளவிலான வெளிநாட்டு நாணயத்தை கைகளில் வைத்திருப்பவர்கள் கடந்த 16 ஆம் திகதியிலிருந்து 14 வேலைநாட்களுக்குள் தம்வசமுள்ள வெளிநாட்டு நாணயத்தை தனிநபர் வெளிநாட்டு நாணயக்கணக்கில் அல்லது வர்த்தக வெளிநாட்டு நாணயக்கணக்கில் வைப்பிலிடவேண்டும். இல்லாவிட்டால் உரிமம்பெற்ற வர்த்தக வங்கி அல்லது தேசிய சேமிப்பு வங்கி போன்ற அதிகாரமளிக்கப்பட்ட வர்த்தகருக்கு விற்பனை செய்யவேண்டும்.

மேற்குறிப்பட்ட காலப்பகுதியின் பின்னர் எவரேனும் 10,000 டொலர்களுக்கு மேற்பட்ட வெளிநாட்டு நாணயத்தைத் தம்வசம் வைத்திருந்தால் வெளிநாட்டு நாணயச்சட்டத்தின் பிரகாரம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்த மேலதிக தகவல்களை ஏதேனுமொரு உரிமம்பெற்ற வர்த்தக வங்கி மூலமோ, தேசிய சேமிப்பு வங்கி மூலமோ அறிந்துகொள்ளமுடியும். இல்லாவிட்டால் வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.dfe.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் ஊடாகவோ அல்லது 011-2477255/011-2398511 ஆகிய இலக்கங்களின் மூலம் வெளிநாட்டுச்செலாவணித்திணைக்களத்தைத் தொடர்புகொள்வதன் ஊடாகவோ அறிந்துகொள்ளமுடியும்.