தமிழருக்கு எதிரான அடக்குமுறையை எதிர்த்து மாணவர் சக்தியாக தியாகி சிவகுமாரன் போராடினார் – ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலி கிழக்கு தவிசாளருமான நிரோஷ்

போராட்டப் பயணப்பாதையில் இனத்திற்கான மாணவர் எழுச்சியின் வடிவமாக சிவகுமாரனின் புரட்சியை என்றும் நினைவில் கொள்கின்றோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

தியாகி பொன் சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இவ் அஞ்சலி நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும், தமிழ் மக்களுக்கு எதிரான அரச அடக்கு முறை இன்றும் நீட்சியாக காணப்படுகின்றது. எமது உரிமைகளுக்காக தன்னுயிரைத் தியாகம் செய்த சிவகுமாரனின் அர்ப்பணிப்பினை ஒட்டுமொத்த தமிழ் இனமும் நினைவுகூர்கின்றது.

அரச அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் அகிம்சை வழிலான அணுகுமுறைகள் பயனற்றுப் போன சூழ்நிலையில் அரச அடக்குமுறையை எதிர்கொண்டாக வேண்டும் என்ற ஓர் நிர்ப்பந்தத்தில் மக்களின் மனநிலை நின்ற விடுதலைப்போராட்ட வீரனாகவே பொன். சிவகுமாரன் செயற்பட்டார்.

பொன் சிவகுமாரன் இனத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக ஓர் இளையவனாக மாணவர் விடுதலைப் போராட்டத்தின் முன்னேடியாக கட்சி அரசியல் விடயங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்த் தேசிய விடுதலையை இலக்காகக் கொண்டு போராட்ட அமைப்புக்கள் நிறுவனமயப்படுத்தப்படாத காலகட்டத்தில் தனது தியாகத்தினை நிலைநாட்டியுள்ளார். எதிரியிடம் விடுதலைப்போராளிகள் உயிருடன் அகப்பட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில் தன் இன்னுயிரை சயனைட் அருந்தி மாய்த்துள்ளார்.

விடுதலைப்போராட்டம் ஒடுக்குமுறைகளுக்கு எதிரானது என்ற நியாயபூர்வமான யதார்த்தத்தினை பொன். சிவகுமாரன் அவர்களது தியாகம் என்றும் பறைசாற்றுகின்றது. தமிழ் மாணவர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட கல்வி ரீதியிலான தரப்படுத்தல்கள், உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் என நீண்டு செல்லும் இனத்திற்கு எதிரான அநீதிகளிற்கு எதிராக பொன். சிவகுமாரன் போராடியுள்ளார்.

எமது போராட்டங்களின் முன்னோடியாக தியாகி சிவகுமாரனை என்றும் நினைவில் கொள்கின்றோம். இவ்வாறு ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

பொன் சிவகுமாரனின் 48 ஆவது நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு

தியாகி பொன் சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் யாழ்ப்பாணம், உரும்பிராயில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது.

பிரதேச சபையின் அவைத் தீர்மானத்தின் பிரகாரம், இன்று காலை உரும்பிராயில் உள்ள தியாகி பொன். சிவகுமாரன் உருவச்சிலை வளாகத்தில் ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி நிகழ்வில் பொது ஈகைச் சுடரினை தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது சகோதரி சிவகுமாரி ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தியாகி சிவகுமாரனின் சிலைக்கான மலர் மாலையினை பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மலரஞ்சலியை அடுத்து தமிழ்த் தேசியத்தில் சிவகுமாரனின் பங்கு பற்றி உரைகள் நிகழ்த்தப்பட்டன.

வருடா வருடம் பொன். சிவகுமாரன் அவர்களது நினைவேந்தலை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் மேற்கொள்வது என பிரதேச சபையில் உறுப்பினர் இ.ஐங்கரனால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் அதிரடி உத்தரவு – இலங்கையை விட்டு வெளியேறிய ரஷ்ய சுற்றுலாப் பயணிகள்

சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்யர்கள், விலாதிமிர் புட்டின் தலைமையிலான அந்நாட்டு அரசாங்கத்தின் உத்தரவுக்கு அமைய, இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று ( 5) பிற்பகல் 12.50 மணிக்கு நாட்டிலிருந்த இறுதிக் கட்ட ரஷ்ய சுற்றுலா பயணிகள் கட்டுநாயக்கவிலிருந்து ரஷ்யாவின் மொஸ்கோ நோக்கி பயணித்தனர்.

ரஷ்யாவின் ‘ஏரோபுளோட் ‘ விமானம் ஒன்றினை இலங்கையில் இருந்து வெளியேற தடை விதித்து ,கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை மையப்படுத்தி உருவாகியுள்ள நிலைமையை அடுத்தே ரஷ்ய சுற்றுலா பயணிகள் நாடு திரும்பியுள்ளனர். இவ்வாறான நிலையில், இலங்கைக்கு சுற்றுலா வர எதிர்ப்பார்த்திருந்த சுமார் நான்கு இலட்சம் சுற்றுலா பயணிகளை இலங்கை இழக்கும் நிலை உருவாகியுள்ளதாக சுற்றுலாத் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் ரஷ்யா திரும்புவதற்காக இன்று ( 5) கட்டுநாயக்க விமான நிலையம் வந்த இறுதிக் கட்ட ரஷ்ய சுற்றுலா பயணிகளில் பலர், விமான நிலைய உள் நுழையும் பகுதியில் வைத்து ஊடகங்களிடம் பேசினர்.

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்யர்களை உடனடியாக நாடு திரும்புமாறு தமது அரசாங்கம் தமக்கு அறிவித்துள்ளதாகவும், அதன்படியே சுற்றுலாவை இடை நடுவே முடித்துக்கொண்டு நாடு திரும்ப, இறுதி விமானத்துக்கு விமான நிலையத்துக்கு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது ஊடகங்களிடம் பேசிய எலோனா மெசன்கோவா எனும் சுற்றுலா பயணி கருத்து தெரிவிக்கையில்,

‘ 14 நாட்கள் சுற்றுலா பயணமாக நாம் இலங்கை வந்தோம். எனினும் 7 நாட்களில் நாம் நாடு திரும்ப வேண்டி ஏற்பட்டுள்ளது. நாம் ஹிக்கடுவையில் இருந்தோம்.

அப்போது தான் இந்த துரதிஷ்டவசமான சம்பவம் பதிவாகியுள்ளது. இதனால் எம்மை நாடு திரும்புமாறு எமது அரசாங்கம் எமக்கு அறிவித்துள்ளது.

முன்னதாக எமக்கு எமது அரசாங்கம், இலங்கைக்கு சுற்றுலா பயணம் செல்ல முடியும் என கூறி எம்மை ஊக்குவித்தது. அரசாங்கமே எம்மை இவ்வாறு இங்கு சுற்றுலா பயணத்துக்காக அனுப்பினர்.

எரிபொருள், மின்சார பிரச்சினைகளிடையேயும் நாம் மிக விருப்பத்துடன் சுற்றுலா பயணத்தை அனுபவித்தோம். எனினும் திடீரென ஏற்பட்ட இந் நிலைமையை எம்மாலும் புரிந்துகொள்ள முடியவில்லை. நாமும் கவலையடைகிறோம்.

ரஷ்ய சுற்றுலா பயணிகளால், இலங்கைக்கு அந்திய செலாவணி மெருமளவு கிடைத்தது. எனினும் இப்போது இந்த நடவடிக்கையால் அது சாத்தியமற்று போயுள்ளது.

இந்த விமான தடை தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி கடுமையான தீர்மானம் ஒன்றை எடுப்பார் என நினைக்கின்றேன். இவ்வாறான நிலையில் தான் சுற்றுலா பயணத்தை உடனடியாக முடித்துக்கொண்டு நாடு திரும்புமாறு அரசாங்கம் எமக்கு அறிவித்தது.

இந்த சம்பவத்தால் எதிர் காலத்தில் கூட ரஷ்யர்கள் இலங்கைக்கு சுற்றுலா பிரயாணம் வர பின்வாங்கலாம்.

ரஷ்யாவின் விமானங்கள் எந்த காரணத்துக்காகவும் கைப்பற்றப்பட மாட்டாது அல்லது தடை செய்யப்படமாட்டாது என இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையே எழுத்து மூல உடன்படிக்கை இருக்கும் நிலையில், ஐரோப்பாவின் சிறிய காப்புறுதி நிறுவனம் ஒன்றுக்காக, ஆயிரக் கணக்கான ரஷ்யர்களை அசெளகரியப்படுத்தியது புதுமையளிக்கிறது.

எதிர்கால சுற்றுலாத் துறையையே சவாலுக்கு உட்படுத்தி இலங்கை தனது அந்திய செலாவணி மார்க்கத்தையே மூடியுள்ளமை வியப்பாக உள்ளது.

ரஷ்யாவுக்கு செல்லும் இறுதி விமானத்தில் நாமும் செல்வதற்காகவே வந்துள்ளோம்.’ என தெரிவித்தார்.

ரஷ்ய மொழியில் ஊடகங்களிடம் பேசிய அவரின் கருத்துக்களை, எலேனா மெசன்கோவா உள்ளிட்ட சுற்றுலா குழுவின் வழிகாட்டியா செயற்பட்ட முதித்த மெவன் குமார சிங்கள மொழியில் மொழி பெயர்த்திருந்தார்.

முன்னதாக ரஷ்யாவின் ‘ஏரோபுளோட் எயார் பஸ் ஏ 330’ விமானம் இலங்கையில் இருந்து வெளியேற தடை விதித்து ,கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் கடந்த 2 ஆம் திகதி உத்தரவிட்ட நிலையில் அதில் பயணிக்க தயாராக இருந்த 191 பேர் அருகே உள்ள ஹோட்டல்கலில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில், ரஷ்யாவிலிருந்து நேற்று (4) வெறுமையாக வந்த எஸ்.யூ. 289 எனும் விமானம் அந்த 191 பேர் உள்ளிட்ட 275 சுற்றுலா பயணிகளை தனது நாட்டுகே அழைத்து சென்றது.

இந் நிலையில் இன்று முற்பகல் 10.10 மணிக்கு வெறுமையாக கட்டுநாயக்கவை வந்தடைந்த விமானம் பிற்பகல் 12.50 மணிக்கு மேலும் 275 சுற்றுலா பயனிகலை ரஷ்யா நோக்கி அழைத்து சென்றுள்ளது.

அயர்லாந்தில் உள்ள செலஷ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்த முறைப்பாடொன்றினை விசாரித்த கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் அம்மனுவின் முதல் பிரதிவாதியான ஏரோபுளொட் ரஷ்ய விமான சேவை நிறுவனத்திற்கு கடந்த 2 ஆம் திகதி தடையுத்தரவொன்றினை பிறப்பித்தது.

அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள ரஷ்யாவின் ஏரோபுளோட் எயார் பஸ் ஏ 330 விமானத்திற்கு நாட்டிலிருந்து வெளியேற கொழும்பு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த தடையுத்தரவு எதிர்வரும் 16ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என நீதிபதி அறிவித்தார்

அயர்லாந்தில் உள்ள செலஸ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடெட், ஏரோபுளோட் ரஷியன் ஏர்லைன்ஸுக்கு எதிராக, இரு தரப்பினருக்கு இடையேயான குத்தகை ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியமைக்காக இவ்வாறு முறைப்பாட்டு மனுவை தாக்கல் செய்து இந்த தடை உத்தரவைப் பெற்றுக்கொண்டிருந்தது.

இந் நிலையிலேயே ரஷ்யா இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்தியுள்ளதுடன், ரஷ்யாவில் உள்ள இலங்கை தூதுவரையும் அந் நாட்டு வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து தமது அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தது. இதற்கு ஒரு படி மேலாகவே, இலங்கையிலிருந்து சுற்றுலா பயணிகளையும் ரஷ்யா உடனடியாக நாட்டுக்கு அழைத்துக்கொண்டுள்ளது.

பொன் சிவகுமாரனின் 48 ஆவது நினைவேந்தல் நாளை உரும்பிராயில் 10 மணிக்கு அஞ்சலி

தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் உரும்பிராயில் உள்ள நினைவிடத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

பிரதேச சபையின் அவைத்தீர்மானத்தின் பிரகாரம், பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அஞ்சலி நிகழ்வில் ஈகைச்சுடரினை பொன் சிவகுமாரனின் சகோதரி ஏற்றிவைக்கவுள்ளதுடன் அகவணக்கம், மலரஞ்சலி என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந் நிகழ்வுகளின் தொடர்ச்சியாக ஏற்பாடாக பொன் சிவகுமாரனின் காலத்தில் அவருடன் செயற்பட்ட அரசியல் தலைவர்கள், நண்பர்களினால் அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Posted in Uncategorized

21ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் கட்சிகளுக்கிடையில் பொது இணக்கம் ஏற்பட்டுள்ளது – மனோ

21ஆம் திருத்தச் சட்டம் தொடர்பாக கட்சிகளுக்கு இடையில் பொது இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தலைமையில் இன்று இடம்பெற்ற அனைத்து கட்சி தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தின் போது இந்த இணக்கம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பிரதமரை பதவி நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும் என்ற இணக்கமும் எட்டப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி மட்டுமே பாதுகாப்பு அமைச்சு பதவியை வகிக்கலாம் என்ற இணக்கப்பாடும் எட்டப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

Posted in Uncategorized

தமிழ் முன்னணியை உருவாக்க வேண்டும்; சொல்ஹெய்ம் வலியுறுத்தல்!

‘தமிழ்த் தேசியவாத அரசியல் தரப்புகள் அர்த்தபூர்வமான மாற்றங்களுக்காக பொதுவான தமிழ் முன்னணியை உருவாக்க வேண்டும்’, – இவ்வாறு நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொருளாதார நெருக்கடி மற்றும் இனப்பிரச்னைக்கு கூட்டுத்தீர்வுகளை காண்பதற்கு சிங்கள, முஸ்லிம்கள் மத்தியில் உள்ள முற்போக்கான தரப்புக்களை நோக்கி நேசக்கரங்களை நீட்டுங்கள் என்பதும் இந்த தருணத்தில் தமிழ்த் தேசியவாத அரசியலுக்கான எனது ஆலோசனை என்றும் அவர் கூறியுள்ளார்.

திருகோணமலையில் இயங்கும் சிந்தனைக்கூடம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அந்த நேர்காணலில், அவரிடம் ‘தற்போதைய தருணத்தில் தமிழ் தேசியவாத அரசியலுக்கான உங்கள் ஆலோசனை என்ன? இந்த நெருக்கடிகள் காரணமாகஇலங்கை அரசியலில் ஆழமான மாற்றங்கள் ஏற்படும் என கருதுகின்றீர்களா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

இவற்றுக்கு பதிலளித்த அவர்,

‘அமைதியான வழிமுறைகைளை தொடர்ந்தும் பின்பற்றுங்கள் -அர்த்த பூர்வமான மாற்றங்களுக்காக பொதுவான தமிழ் முன்னணியை உருவாக்குங்கள்,

பொருளாதார நெருக்கடி மற்றும் இனப்பிரச்னைக்கு கூட்டுத்தீர்வை காண்பதற்கு சிங்கள, முஸ்லிம்கள் மத்தியில் உள்ள முற்போக்கான தரப்புகளை நோக்கி நேசக்கரங்களை நீட்டுங்கள்’,என்றார்.

மேலும், இலங்கை விவகாரத்தை உன்னிப்பாக அவதானிப்பவர் என்ற அடிப்படையில் ராஜபக்ஷ பரம்பரையின் எதிர்பாராத வீழ்ச்சி குறித்த உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,

‘ராஜபக்ஷக்களின் வீழ்ச்சியின் வேகம் பல அவதானிகளுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. அவர்கள் மிகப்பெரும் பெரும்பான்மையை பெற்று மூன்று வருடங்களே ஆகின்றன. அதிகாரத்தை ஒரே குடும்பத்திடம் அதிகளவு குவித்தமையும், பொருளாதாரத்தை திறமையற்ற விதத்தில் கையாண்டமையும் இந்த வீழ்ச்சிக்கு காரணம். கோவிட் பரவலால் சுற்றுலாப்பயணிகள் வராததால் பெருமளவு வருமானத்தையும், வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களின் வருமானத்தையும் அவர்கள் இழந்தனர். அந்த வகையில் அவர்கள் துரதிர்ஷ்டசாலிகள்.

இறுதியில் வாழ்க்கை செலவீனங்கள் நாளாந்தம் அதிகரித்ததும் எரிபொருள் பற்றாக்குறையையும் இலங்கையர்கள் தாங்கிக்கொள்ள முடியாத விடயங்களாகக் காணப்பட்டன’ – என்றார்.

யுத்தத்துக்கு பிந்திய இலங்கை முடிவற்ற விதத்தில் நிச்சயமற்றதாக – ஸ்திரமற்றதாக காணப்படுகின்றது. 2015இல் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் இலங்கை யில் ஜனநாயக கட்டமைப்புகள் மீண்டும் வலுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது, எனினும் 2019 இல் ராஜபக்ஷக்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தவுடன் அது முழுமையாக தோல்வியடைந்தது, நாடு தற்போது மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ? இலங்கை ஏன் தொடர்ந்தும் அரசியல் ரீதியில் நோயுற்றதாக காணப்படுகின்றது? என்ற கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

‘பல தசாப்த கால நெருக்கடிகளுக்கு பின்னரும் சிங்கள – பௌத்தர்கள் ஆதிக்கம் செலுத்தும் கொள்கையில் சிறுபான்மை தமிழர்கள் முஸ்லிம்களுக்கான சுயாட்சி என்ற விடயத்துக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. அனைத்து மக்களுக்கும் ஏற்ற விதத்தில் இந்த விவகாரத்துக்கு தீர்வை காணவேண்டும் என இலங்கை பிடிவாதம் பிடிக்கின்றது.

இதற்கப்பால் சிங்கப்பூரின் லீ குவான் யூ அல்லது இந்தியாவின் நரேந்திரமோடி போன்றவர்கள் வழங்கிய தொலைநோக்குடன் கூடிய தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய தலைவர்கள் இலங்கைக்கு கிடைக்கவில்லை. ஸ்திரமான அபிவிருத்தியடையும் பொருளாதாரம் அனைவருக்கும் நன்மையளிக்கும். அரசாங்கங்கள் நிதியை செலவிடுவதை மாத்திரம் முன்னெடுக்கமுடியாது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு உறுதியான தனியார துறையை கட்டியெழுப்பவேண்டும், வரவு – செலவுதிட்டத்தை சமப்படுத்தக்கூடிய வரிகளை அறிமுகப்படுத்தவேண்டும்’, என்றார்.

இதேபோல, ‘ரணில் விக்கிரமசிங்கமீண்டும் ஆளும் அரசியலில் நுழைந்துள்ளார். இதனை எப்படி பார்க்கிறீர்கள் – சமாதான அனுசரணையாளர் என்ற அடிப்படையில் நீங்கள் அவருடன் நெருங்கிபணியாற்றினீர்கள் – விமர்சனங்களிற்கு அப்பால் தற்போதைய நெருக்கடியை கையாளக்கூடியவர் அவர்தான் என சிலர்கருதுகின்றனர். பொருளாதார நிலையை ரணில் விக்கிரமசிங்கவால் திறமையான விதத்தில் கையாள முடியும் என நீங்கள் கருதுகின்றீர்களா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு,

‘மிகவும் நெருக்கடியான தருணத்தில் எனது நண்பர் ரணிலுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். ரணிலை விட தற்போதைய பொருளாதாரத்தை சிறப்பாக புரிந்துகொள்ளக் கூடிய – பேச்சுக்களில் சிறப்பாக ஈடுபடக் கூடிய வேறு ஒரு தற்போதைய இலங்கை தலைவரை நினைத்துப் பார்ப்பது கடினம். இதற்கு அப்பால் ரணில் ஒரு சிறந்த பண்பார்ந்த மனிதர்.

ஆனால், ராஜபக்ஷக்களை வீழ்த்தியவர்களின் நம்பிக்கையை பெறுவதற்கு அவர் இன்னமும் நீண்டதூரம் செல்ல வேண்டும். இலங்கையின் இளைஞர்களின் கரிசனைகளை செவிமடுப்பதற்கும், நீண்ட கால தீர்வுகளுக்கு அவர்களின் பலத்தை உள்வாங்குவதற்கும் அவர்களை நோக்கி ரணில் விக்கிரமசிங்க தனது நேசக்கரத்தை நீட்டவேண்டும் – என்றும் கூறினார்.

Posted in Uncategorized

மனோவை சந்தித்த போராட்டக்கள அனைத்து கட்சி போராளிகள்

“தம்பி, இந்நாட்டில் ஜனாதிபதியாக, பிரதமராக நாம் துடிதுடிக்கவில்லை. அப்படி துடியாய் துடிக்கும் பெருங்கட்சிகளை ஒரு கூடையில் போடுங்கள். எம்மை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் முற்போக்கு கட்சிகளை வேறு விதமாக பாருங்கள். இந்நாட்டில் ஜனாதிபதியாக. பிரதமராக எமக்கு தகுதி இல்லாமல் இல்லை. அவை நிச்சயமாக எமக்கு இருக்கின்றன. ஆனால், நாம் பேரினவாதத்தால் ஒடுக்கப்பட்டுள்ள எமது மக்களை விடுவிக்கவே இன்று துடிக்கிறோம்.” என தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்தித்த போராட்டக்கள அனைத்து கட்சி போராளிகள் குழுவிடம் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி- அனைத்து கட்சி போராளிகள் குழு சந்திப்பு, இன்று கூட்டணி தலைவர் மனோ கணேசன் இல்லத்தில் நிகழ்ந்தது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் பழனி திகாம்பரமும் இச்சந்திப்பில் கலந்துக்கொண்டார். இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது,

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், காலிமுகதிடல், “அனைத்து கட்சி போராளிகள்” (அகபோ) தூதுக்குழுவினக்கும் இடையில் எனது இல்லத்தில் நிகழ்ந்தது. இந்த சந்திப்பில் திகாம்பரம் எம்பியும் கலந்துக்கொண்டார். அனைத்து கட்சி போராளிகள்” (அகபோ) சார்பில், விபீதக பொத்துவகே, நிராஷான் விதானகே, மனிஷ் கலப்பத்தி, கெலும் அமரதுங்க ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இன்றைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் நடைபெற்ற பேச்சுகளின் போது, தொடர்ந்து தமுகூ-அகபோ இடையில் பரஸ்பர தொடர்புகளை பேணி செயற்படுவது என்று முடிவானது. மலையக மக்கள், இலங்கை தேசிய தளத்தில் உள்வாங்கப்படுவது தொடர்பான, தமுகூ யின் மலையக அபிலாஷை ஆவணமும் அனைத்து கட்சி போராளிகளுக்கு வழங்கப்பட்டது.

இவர்களிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நான் எடுத்து கூறியது, “தம்பி, நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் ஆக வேண்டும் என துடியாய் துடிக்கும் பெருங்கட்சிகளை ஒரு கூடையில் போடுங்கள். எம்மை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் முற்போக்கு கட்சிகளை வேறு விதமாக பாருங்கள்”

“தமிழர்களாகிய எங்களுக்கு உணவு இல்லை, மின்சாரம் இல்லை,.. என்பவை பழகிப்போன பிரச்சினைகள். போர் காலத்தில் பல்லாண்டுகளாக தமிழ் மக்கள் இப்படி வாழ்ந்தார்கள். மலை நாட்டில் போர் இல்லாமலேயே நம் மக்கள் தோட்ட சிறைகளுக்குள் இப்படிதான் வாழ்கிறார்கள்.”

“கலவர காலங்களில் எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன. எம் மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆகவே இவை எமக்கு சகஜம். ஆகவே புதிய இலங்கையை உருவாக்குவோம். இவை அனைத்திற்கும் தீர்வு தேடுவோம். மாற்றத்தை கொண்டு வர சொல்லிவிட்டு, நீங்கள் ஓரமாய் ஒதுங்கி நிற்காதீர்கள். அந்த தேடலில் நீங்களும் நேரடியாக பங்களியுங்கள். அந்த தீர்வு உணவு, மின்சாரம், எரிவாயு ஆகியவற்றுக்கு அப்பால் இருக்க வேண்டும்.”

“மலையக தமிழ் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தோட்டங்களில் பின்தங்கி வாழ்கின்றனர். அவர்களை தேசிய தளத்தில் உள்வாங்க அரசு இயந்திரத்தில் பெரும் தயக்கம் காணப்படுகிறது. அதை நாம் முறியடிப்போம். நீங்களும் உதவ வேண்டும்.”

இவற்றுக்கு, அனைத்து கட்சி போராளிகள் (அகபோ) சார்பில் பதிலளித்த பேச்சாளர் கெலும் அமரதுங்க கூறியதாவது, “நாம் உங்களை தேடி வந்து சந்தித்தமைக்கு காரணம் உண்டு. ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகளையும், ஜனநாயக கட்சிகளையும் நாம் சந்திக்கிறோம். இன்று விலகி போக இருந்த கோதாபய ராஜபக்ச, ரணில் விகிரமசிங்கவின் உள்நுழைவால் கொஞ்சம் மூச்சு வாங்குகிறார். நாம் எதிர்பார்க்கும் மாற்றம் நீங்கள் கூறுவது போன்று, உணவு, மின்சாரம் ஆகியவற்றுக்கு அப்பால் ஆனது. அதில் நாம் இந்நாட்டின் அனைத்து இன, மத மக்களுடன் பயணிக்க விரும்புகிறோம். நாம் பலரை சந்தித்தோம். மாற்றத்துக்காக எம்மை நேரடியாக பங்களிக்கும்படி இதுவரை யாரும் கூறவில்லை. நீங்கள்தான் திறந்த மனதுடன் அதை கூறுகிறீர்கள். உங்களுடன் தொடர்புகளை பேண விரும்புகிறோம். மலையக தமிழ் மக்களையும் நாம் சரிசமமாக கவனத்தில் எடுப்போம்.”

Posted in Uncategorized

பிரகீத் எக்னெலிகொட வழக்கு: பிணையில் விடுவிக்கப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின் 09 பேர் விளக்கமறியல் நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு பிணை வழங்கப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின் 09 பேரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று உத்தரவிட்டது.

சஞ்சீவ மொராயஸ் , தமித் தொடவத்த , மஹேன் வீரமன் உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கில் சாட்சி வழங்குவதற்காக மன்றில் ஆஜராகியுள்ள சுமதிபால சுரேஷ் எனும் சாட்சியாளர், இதற்கு முன்னர் சாட்சி வழங்குவதற்காக மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை என்பதுடன், பின்னர் அவரை கைது செய்வதற்காக நீதிமன்றத்தினூடாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும மன்றில் சுட்டிக்காட்டினார்.

சாட்சியாளருக்கு அழுத்தம் விடுக்கப்படுவதால், அது தொடர்பில் விசாரணையொன்றை நடத்த கட்டளையிடுமாறு சட்டத்தரணி மன்றில் கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கில் சாட்சியாளர்களுக்கு அழுத்தம் விடுக்கப்படுகின்றமை தமக்கும் விளங்குவதால், விடயம் தொடர்பில் நீதிமன்றம் கவனம் செலுத்த வேண்டும் என மனுதாரர் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மன்றில் சுட்டிக்காட்டினார்.

அதன் பின்னர் சாட்சிகள் விசாரிக்கப்பட்டதையடுத்து, மேலதிக வழக்கு விசாரணை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

1.8 பில்லியன் ரூபா COVID நிதியை மருந்து இறக்குமதிக்கு பயன்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

COVID-19 நிதியத்திலுள்ள 1.8 பில்லியன் ரூபா நிதியை அத்தியாவசிய மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்ய வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

COVID கட்டுப்பாட்டிற்காக நன்கொடையாளர்களால் இந்த நிதி வழங்கப்பட்டதாகவும் தற்போது COVID நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், அந்த நிதியை சுகாதார தேவைக்காக பயன்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

சுகாதார துறையில் துரிதமாக கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் குறித்து, கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

வைத்தியசாலைகளுக்கு தேவையான 234 மருந்துகள் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதுடன், உலக சந்தையில் மருந்துப்பொருட்களின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையை கருத்திற்கொண்டு, உள்நாட்டு மருந்து உற்பத்தியை மேம்படுத்துவதற்கு தேவையான மூலப்பொருட்களை இந்திய கடனுதவியின் கீழ் பெற்றுக்கொள்வதற்குள்ள இயலுமை தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது தௌிவுபடுத்தியுள்ளார்.

ஒயாமடுவ மற்றும் ஹொரணை – மில்லவ பகுதிகளை மையப்படுத்தி மருந்துப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கு 12 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மருந்து உற்பத்தி நடவடிக்கைகளை எதிர்வரும் மாதங்களில் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், 200 வகையான மருந்துகளை தயார் செய்வதற்குரிய உற்பத்தித்திறன் குறித்த பகுதிகளில் காணப்படுவதாகவும் அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றம் சென்ற ரிஷாட்!

வில்பத்து, கல்லாறு பிரதேசத்தில் காடழிக்கப்பட்ட பகுதிகளை மீளக் காடுகளாக மாற்றுமாறு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளார்.

தமக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, குறித்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வில்பத்து கல்லாறு சரணாலயத்தில் காடழிப்பை மேற்கொண்டதற்காக மீண்டும் மரங்களை நடுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

Posted in Uncategorized