எம்.பி. பதவியிலிருந்து பஸில் விலகல்! அரசியல் பயணம் தொடரும்

“அரச நிர்வாகப் பணியிலிருந்து நான் விலகுகின்றேன். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கின்றேன். எனினும், எனது அரசியல் பயணம் தடைப்படாது. அது தொடரும்.”

– இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் தனது எம்.பி. பதவி விலகல் தொடர்பான கடிதத்தை இன்று கையளித்த பின்னர், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் நடத்திய விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஊடங்கள் முன்பாக ஆங்கிலத்தில் பதிலளித்தால் மறுபடியும் ‘கப்புடா’ சர்ச்சை வந்துவிடும். சிங்கள மொழியிலேயே கதைக்கின்றேன்.

அமைச்சுப் பதவியை வகித்த காலத்தில் என்னால் முடிந்தவற்றை மக்களுக்காகச் செய்தேன். எனினும், மக்கள் எதிர்பார்த்த அனைத்தையும் செய்ய முடியாமல்போனது.

அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலத்தை நான் எதிர்க்கின்றேன். இது எனது தனிப்பட்ட கருத்து.

21ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் பிரதமருடன் பேச்சு நடத்தினோம். அதில் உள்ள சரத்துகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டியது யார் எனத் தெரியவில்லை. தற்போதைய சூழ்நிலையில் சிறு அளவிலான திருத்தங்கள் தேவையில்லை. முழுமையான அரசமைப்பு மறுசீரமைப்பே அவசியம்.

எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தயாராகவே உள்ளது” – என்றார்.

ரஸ்யாவிடமிருந்து எரிபொருளை பெறுவதற்காக இரு தரப்பு பேச்சுவார்த்தைகளைஆரம்பிக்கவேண்டும் – 9 கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

தேசிய விடுதலை முன்னணி பிவித்துரு ஹெல உறுமய உட்பட 9 கட்சிகள் எரிபொருளை நீண்ட கால அடிப்படையில் பெறுவதற்காக ரஸ்யாவுடன் அரசாங்கம் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் 9 அரசியல் கட்சிகளும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.

நீண்டகால கடன் அடிப்படையில் எரிபொருளை பெறுவதற்காக ரஸ்யாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தயங்கினால் ரஸ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்று எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வை காணவேண்டும் என அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக மக்களை திரட்டி போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தயார் என அந்த கட்சிகள் தெரிவித்துள்ளன.

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை விடுத்த வேண்டுகோளிற்கு ரஸ்யா சாதகமாக பதிலளித்துள்ளது என தாங்கள் அறிந்துள்ளதாகவும் ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் நடவடிக்கைகளை எடுத்துள்ளதா என்பது தெரியவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மோதல்கள் இடம்பெறுகின்ற போதிலும் ஐரோப்பா ரஸ்யாவிடமிருந்து ஒரு மில்லியன் பரல்களை கொள்வனவு செய்கின்றது என தெரிவித்துள்ள ஒன்பது கட்சிகளின் தலைவர்கள் இது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி தங்களிற்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Posted in Uncategorized

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலிட்டால் அவற்றை இந்த அரசு முடக்கும்-ரெலோ தலைவர் செல்வம் எம்பி

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலிட்டால் அவற்றை இந்த அரசு முடக்கும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரவித்தார்.

இன்று (06) வவுனியாவில் அமைந்துள்ள ரெலோ கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

21 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தேசியத்தின்பால் செயற்படுகின்ற கட்சிகளின் தலைவர்களை கூட்டி இரண்டு மூன்று தினங்களாக விவாதித்து வருகின்றோம். இதில் உறுப்பினர்களும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை கூறிவருகின்றார்கள். பாராளுமன்றம் கூடியதும் தமிழ் பேசும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் இவ் விடயம் தொடர்பில் ஆராயலாம் என எண்ணுகின்றோம். கஜேந்நிரகுமார் பென்னம்பலத்துடனும் பேச இருக்கின்றோம்.

ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களுடைய குரலாக 21 வது திருத்த சட்டத்தில் எமது மக்களின் கோரக்கைகளை எவ்வாறு உள்ளடக்குவது என்பதுடன் இத் திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் முற்றாக ஒழிக்கப்படவில்லை என்பது இதில் காணப்படுகின்றது.

தற்போது மக்களுடைய கோரிக்கை ஜனாதிபதி வீட்டுக்கு செல்ல வேண்டும், ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்பதாகும். ஆனால் இந்த விடயத்தில் 19வது திருத்தச்சட்டத்தை கூடுதலாக பார்க்கலாம் என்ற எண்ணமும் ஏற்பட்டுள்ளது.

21 வது திருத்தச்சட்டம் தொடர்பாக ஒட்டுமொத்த குரலாக செயற்பட வேண்டும் என்பதே பிரதான நோக்கமாக இருக்கின்றது. அந்த ஒட்டுமொத்த குரலுக்குள் எங்களுடைய மக்களுடைய பிரச்சனைகள், எங்களுடைய தேசத்தின் பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்து ஒரே குரலாக தெரிவிக்க வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கமாக இருக்கின்றது.

குறிப்பாக தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே குரலாக இணைந்து எங்களுடைய பிரச்சனைகளை உள்ளடக்கின்ற வாய்ப்புக்கள் இருக்கும் என நம்புகின்றேன்.

21வது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் வருவதற்கு முன்னராக அமைச்சரவையிலே சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற விவதாத்திற்கு வருவதற்கு முன்னர் எங்களுடைய ஒருமித்த கருத்தினை சொல்கின்ற வாய்ப்பபை உருவாக்க வேண்டும்.

“ரணில் விக்கிரமசிங்க பிரதமர் ஆகியவுடன் புலம்பெயர் தமிழர்களுடைய உதவியை கோரி இருந்தார். தற்போது சில புலம்பெயர் அமைப்புக்களும் நிபந்தனையுடன் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?“ என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது,

இன்றைய சூழலிலே புலம்பெயர் உறவுகளிடம் பணம் கோருவது என்பது சந்தர்ப்பத்திற்காக அவர்களினை பயன்படுத்துவது போன்று தெரிகின்றது.

மேலும் இலங்கை அரசினால் புலம்பெயர் நாடுகளில் உள்ள எங்களுடைய அமைப்புக்கள் மீது ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது. இத்தடையானது இலங்கை அரசினால் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அத்துடன் மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை வழங்குவதுடன் அதற்குரிய நிதியதிகாரத்தினை குறிப்பாக மாகாண முதலமைச்சர் நிதியினை கையாளக்கூடிய வசதியினை பிரதமர் செய்வதன் மூலமாக இந்நாட்டினுடைய பிரச்சனையை தீர்க்க முடியும்.

ஆகவே பிரதமர் இவ்விடயங்களை கவனம் செலுத்த வேண்டும். இவ்விடயங்களில் கவனம் செலுத்தாத வரை புலம்பெயர்ந்த உறவுகள் முதலீடுகளை செய்வதற்கு நிச்சயமாக வரமாட்டார்கள்.

அத்துடன் தற்போதும் பயங்கரவாத தடைச்சட்டம் காணப்படுகின்றது. இச்சட்டம் நீக்கப்பட வேண்டும். இவ்வாறான நிலையில் புலம்பெயர் உறவுகள் தங்களுடைய முதலீடுகளை செய்த பின்னர் அரசாங்கம் திட்டமிட்டு விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்து அவர்களுடைய முதலீடுகளை முடக்குகின்ற சந்தர்ப்பங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களை நங்கள் காணலாம்.

ஆகவே மாகாண சபைகள் நிதியினை கையாள்வதற்கான வாய்ப்பு மற்றும் புலம்பெயர் அமைப்புக்களின் தடைகளை நீக்குதல் தொடர்பான விடயங்களை அரசு மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமாக எங்களுடைய மாகாண சபைகள் உட்பட அனைத்து மாகாணசபைகளும் இவ்விடயங்களை நேர்த்தியான முறையிலே கையாண்டு மக்களுடைய பஞ்சம் மற்றும் பொருளாதார நிலைமைகளில் இருந்து மீள் எழுவதற்கான வாய்ப்பினை முன்னெடுக்க முடியும்.

தற்போது பரவலாக துப்பாக்கி பிரயோகங்கள் இடம்பெற்று வருகின்றன. மேலும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் விடுதலைப்புலிகளின் அதிகாரங்களை மிகவும் சமாளிக்க முடியாது என்ற கருத்தினை வெளியிட்டிருந்தார். எவ்வாறு உயிர்த்த ஞாயிறு படுகொலை செய்யப்பட்டதை போன்று விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கம் என்ற ரீதியிலே இவ்வாறான துப்பாக்கி சூட்டு சம்பவங்களை இணைத்துக்கொண்டு காலி முகத்திடலிலே இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டத்தினை கலைக்கின்ற நோக்கத்துடன் இலங்கை அரசாங்கம் இந்த மீள் உருவாக்கம் என்ற சதித்திட்டத்தை தீட்டுகின்றதா என்ற சந்தேகம் எங்களிற்கு உருவாகின்றது.

அந்த வகையிலே துப்பாக்கி சூடு செய்பவர்கள் கைது செய்யப்படுவதில்லை என்பதுடன் அவர்கள் எங்கு போகின்றார்கள் என்பது தெரியவில்லை.

விடுதலைப்புலிகள் மீள் உருவாக்கம் என்ற சதித்திட்டத்தினை அரசாங்கம் செய்கின்றது. எனவே நாங்கள் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும். தமிழர்களின் கையிலே பிரச்சனையை திணித்து தமிழர்கள்தான் இதற்கு காரணம் என்ற சந்தர்ப்பத்தை செய்யக்கூடியவர்கள் தான் இன்று ஆட்சியில் இருக்கிறவர்கள். ஆகவே அவர்கள் இவ்விடயங்களை மிக சாதுர்யமாக கையாளக்கூடும் என தெரிவித்தார்.

இலங்கை பௌத்த பீடாதிபதிகள் இந்தியாவிற்கு நன்றி

புத்தர் பிறந்த பூமியை இந்தியாவில் புத்த பூர்ணிமா என்று பிரபலமாக அறியப்படும் வெசாக் போயா தினம், புத்தரின் பிறப்பு, வாழ்க்கை மற்றும் போதனைகளுடன் தொடர்புடைய மூன்று புனித ஸ்தலங்களில் பிரமாண்டமாகவும் அமைதியாகவும் கொண்டாடப்பட்டது.

லும்பினி, பௌத்கயா மற்றும் புது டெல்லி ஆகிய இடங்களில் சர்வதேச பௌத்த கூட்டமைப்பின் அனுசரணையுடன் இந்திய மத்திய கலாச்சார அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. பிரதமர் நரேந்திர மோடியின் பங்கேற்பு சிறப்பானதொரு விடயமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புத்தரின் பிறந்த இடமான நேபாளத்தின் லும்பினியில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு இடம்பெற்ற நிகழ்ச்சிகளில், துறவிகள், உயரதிகாரிகள் மற்றும் பௌத்த உலகத்துடன் தொடர்புடைய ஏராளமானோர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொண்டாட்டங்கள் பொதுவாக புத்தரின் வாழ்க்கை, பிறப்பு, ஞானம் மற்றும் போதனைகளைச் சுற்றி உருவானது, உரைகள் இன்றைய உலகத்தின் நிலை மற்றும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் அமைதியை அடைய புத்தர் போதித்த எட்டு வழிகளை உலகம் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதிபளிக்கும் வகையில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

புதுடில்லியில் உள்ள சர்வதேச பௌத்த கூட்டமைப்புக்கு சொந்தமான லும்பினியில் உள்ள இந்திய சர்வதேச புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மையத்தை நிர்மாணிப்பதற்கான ‘ஷிலான்யாஸ்’ விழாவில் பிரதமர் மோடி மற்றும் பிரதமர் டியூபாவுடன் கலந்து கொண்டனர்.

இதே வேளை நான்கு நிகாயாக்களின் பிரதம பீடாதிபதிகளான ஸ்ரீ அமரபுர மகா நிகாயா அதி வணக்கத்திற்குரிய அக் மகா பண்டித கலாநிதி தொடம்பஹல சந்திரசிறி மகா தேரர், சியாம் மஹா நிகாயாவின் மல்வத்தை பிரிவின் பிரதி பீடாதிபதி வணக்கத்துக்குரிய திம்புல்குபுரே விமலதர்ம மகா தேரர்.

அஸ்கிரிய பீடத்தின் பீடாதிபதி வெண்டுருவே உபாலி அனுநாயக்க தேரர் மற்றும் ஸ்ரீ ராமஞ்ஞ மகா நிகாயாவின் வணக்கத்திற்குரிய அக்க மஹா பண்டித மகுலேவே விமல மகாநாயக்க தேரர் ஆகியோர் விடுத்துள்ள செய்தியில், நெருக்கடி மிக்க சூழலில் உலகம் முழுவதும் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர அன்பிற்கு ஆசீர்வாதங்களைத் தெரிவித்துள்ளனர்.

கொந்தளிப்பு மற்றும் விரோதம். புத்த பூர்ணிமா தினத்தை நடத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசிற்கு நன்றிகளை தெரிவித்தனர்.

இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் மகத்தான மற்றும் சரியான நேரத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்காக மக்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் தங்கள் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

இலங்கையர்கள் தங்கள் மதம், கலாசாரம், பாரம்பரியம் மற்றும் நாகரீகத்தை இந்தியாவிடமிருந்து பெற்றவர்கள் என்றும், இந்த உறவும் சகோதரத்துவமும் வலுவிலிருந்து வலுவாக வளர வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் செய்திகளில் குறிப்பிட்டனர்.

பௌத்த தத்துவக் கருத்துக்கள் முழு உலகத்திற்கும் எல்லா நேரங்களிலும் சரியானவை மற்றும் மிகவும் பொருத்தமானவை என்றும், பௌத்தத்தை மேம்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடியின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் குறித்து மகா சங்கத்தினர் பெரிதும் பாராட்டத்தக்கது என்றும் அவர்கள் தங்கள் செய்திகளில் குறிப்பிட்டுள்ளனர்.

Posted in Uncategorized

வாக்காளர் இடாப்பு தயாரிக்கும் பணி ஆரம்பம்

2022 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பைத் தயாரிக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்காளர் இடாப்பில் பெயர் இடம்பெறாவிடத்து தாங்கள் வசிக்கும் பிரதேச கிராம உத்தியோகத்தரைச் சந்தித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆணைக்குழு வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, அரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல்கள் ஆணைக்குழு நாளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. தேர்தலுக்கு முன்னர் கட்சிகளின் செயலாளர்களை தெளிவூட்டும் வகையில் நாளைய கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவரான நிமல் புஞ்சிஹேவ தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு தயாரிப்புப் பணிகள் பற்றியும் இதன் போது ஆராயப்படவுள்ளன. வதிவிடங்களை மாற்றியவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தியானவர்களை வாக்காளர் இடாப்பில் உள்ளீர்ப்பது சம்பந்தமாக இதன் போது கவனம் செலுத்தப்படும். தேர்தல்கள் சட்டதிட்டங்களில் மேற்கொள்ள தீர்மானித்திருக்கும் திருத்தங்கள் பற்றியும் ஆராயப்படும்.

Posted in Uncategorized

பசளையை இறக்குமதி செய்தால் கஞ்சியையாவது மக்கள் குடித்து வாழ்வார்கள் – ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

பசளையை இறக்கி விவசாயிகளுக்கு கொடுக்கின்ற போது கஞ்சியாவது குடித்து மக்கள் இருக்கின்ற வாழ்க்கையை உண்டு பண்ணலாம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிலமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

விவசாயிகள் சேமித்து வைத்த அரிசிகள் அனைத்தும் இரண்டு , மூன்று மாதங்களில் முடிவடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. இனிவரும் காலங்களில் பட்டினி சாவுகள் வருவதற்கான வாய்ப்புகளே கூடுதலாக உள்ளது.

சாதாரணமாக உழைக்கின்ற அன்றாட கூலி செய்கின்ற மக்களுடைய நிலைமை மிகவும் மோசமாக, பரிதாபமாக இருக்கின்றது.

அரசாங்கம் முதலிலே பசளையை இறக்கி விவசாயிகளுக்கு கொடுக்கின்ற போது கஞ்சியாவது குடித்து மக்கள் இருக்கின்ற வாழ்க்கையை உண்டு பண்ணலாம்.

பசளையை இறக்கி விவசாயிகளுக்கு கொடுப்பதன் ஊடாக நெல் உற்பத்தி பெருகும். அதேபோல் தோட்டங்களை செய்கின்ற போது மரக்கறிகளை செய்கின்ற வாய்ப்புக்களும் ஏற்படும்.

அரசாங்கம் பசளையை விவசாயிகளுக்கு இறக்கி கொடுப்பதன் ஊடாக தான் பட்டினியில் இருந்து மக்களை மீட்க முடியும்.

இந்திய பாரத பிரதமர் இவ் விடயத்திலே கவனம் செலுத்தி உடனடியாக பசளையை தந்துதவுமாறு கேட்டிருக்கின்றேன். பசளை கிடைக்கின்ற போது ஓரளவிற்காவது பட்டினியை நிவர்த்தி செய்கின்ற வாய்ப்புகளை உண்டு பண்ணலாம் என்பது எனது ஆலோசனை என மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

தமிழருக்கு எதிரான அடக்குமுறையை எதிர்த்து மாணவர் சக்தியாக தியாகி சிவகுமாரன் போராடினார் – ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலி கிழக்கு தவிசாளருமான நிரோஷ்

போராட்டப் பயணப்பாதையில் இனத்திற்கான மாணவர் எழுச்சியின் வடிவமாக சிவகுமாரனின் புரட்சியை என்றும் நினைவில் கொள்கின்றோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

தியாகி பொன் சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இவ் அஞ்சலி நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும், தமிழ் மக்களுக்கு எதிரான அரச அடக்கு முறை இன்றும் நீட்சியாக காணப்படுகின்றது. எமது உரிமைகளுக்காக தன்னுயிரைத் தியாகம் செய்த சிவகுமாரனின் அர்ப்பணிப்பினை ஒட்டுமொத்த தமிழ் இனமும் நினைவுகூர்கின்றது.

அரச அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் அகிம்சை வழிலான அணுகுமுறைகள் பயனற்றுப் போன சூழ்நிலையில் அரச அடக்குமுறையை எதிர்கொண்டாக வேண்டும் என்ற ஓர் நிர்ப்பந்தத்தில் மக்களின் மனநிலை நின்ற விடுதலைப்போராட்ட வீரனாகவே பொன். சிவகுமாரன் செயற்பட்டார்.

பொன் சிவகுமாரன் இனத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக ஓர் இளையவனாக மாணவர் விடுதலைப் போராட்டத்தின் முன்னேடியாக கட்சி அரசியல் விடயங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்த் தேசிய விடுதலையை இலக்காகக் கொண்டு போராட்ட அமைப்புக்கள் நிறுவனமயப்படுத்தப்படாத காலகட்டத்தில் தனது தியாகத்தினை நிலைநாட்டியுள்ளார். எதிரியிடம் விடுதலைப்போராளிகள் உயிருடன் அகப்பட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில் தன் இன்னுயிரை சயனைட் அருந்தி மாய்த்துள்ளார்.

விடுதலைப்போராட்டம் ஒடுக்குமுறைகளுக்கு எதிரானது என்ற நியாயபூர்வமான யதார்த்தத்தினை பொன். சிவகுமாரன் அவர்களது தியாகம் என்றும் பறைசாற்றுகின்றது. தமிழ் மாணவர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட கல்வி ரீதியிலான தரப்படுத்தல்கள், உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் என நீண்டு செல்லும் இனத்திற்கு எதிரான அநீதிகளிற்கு எதிராக பொன். சிவகுமாரன் போராடியுள்ளார்.

எமது போராட்டங்களின் முன்னோடியாக தியாகி சிவகுமாரனை என்றும் நினைவில் கொள்கின்றோம். இவ்வாறு ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

பொன் சிவகுமாரனின் 48 ஆவது நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு

தியாகி பொன் சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் யாழ்ப்பாணம், உரும்பிராயில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது.

பிரதேச சபையின் அவைத் தீர்மானத்தின் பிரகாரம், இன்று காலை உரும்பிராயில் உள்ள தியாகி பொன். சிவகுமாரன் உருவச்சிலை வளாகத்தில் ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி நிகழ்வில் பொது ஈகைச் சுடரினை தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது சகோதரி சிவகுமாரி ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தியாகி சிவகுமாரனின் சிலைக்கான மலர் மாலையினை பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மலரஞ்சலியை அடுத்து தமிழ்த் தேசியத்தில் சிவகுமாரனின் பங்கு பற்றி உரைகள் நிகழ்த்தப்பட்டன.

வருடா வருடம் பொன். சிவகுமாரன் அவர்களது நினைவேந்தலை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் மேற்கொள்வது என பிரதேச சபையில் உறுப்பினர் இ.ஐங்கரனால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் அதிரடி உத்தரவு – இலங்கையை விட்டு வெளியேறிய ரஷ்ய சுற்றுலாப் பயணிகள்

சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்யர்கள், விலாதிமிர் புட்டின் தலைமையிலான அந்நாட்டு அரசாங்கத்தின் உத்தரவுக்கு அமைய, இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று ( 5) பிற்பகல் 12.50 மணிக்கு நாட்டிலிருந்த இறுதிக் கட்ட ரஷ்ய சுற்றுலா பயணிகள் கட்டுநாயக்கவிலிருந்து ரஷ்யாவின் மொஸ்கோ நோக்கி பயணித்தனர்.

ரஷ்யாவின் ‘ஏரோபுளோட் ‘ விமானம் ஒன்றினை இலங்கையில் இருந்து வெளியேற தடை விதித்து ,கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை மையப்படுத்தி உருவாகியுள்ள நிலைமையை அடுத்தே ரஷ்ய சுற்றுலா பயணிகள் நாடு திரும்பியுள்ளனர். இவ்வாறான நிலையில், இலங்கைக்கு சுற்றுலா வர எதிர்ப்பார்த்திருந்த சுமார் நான்கு இலட்சம் சுற்றுலா பயணிகளை இலங்கை இழக்கும் நிலை உருவாகியுள்ளதாக சுற்றுலாத் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் ரஷ்யா திரும்புவதற்காக இன்று ( 5) கட்டுநாயக்க விமான நிலையம் வந்த இறுதிக் கட்ட ரஷ்ய சுற்றுலா பயணிகளில் பலர், விமான நிலைய உள் நுழையும் பகுதியில் வைத்து ஊடகங்களிடம் பேசினர்.

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்யர்களை உடனடியாக நாடு திரும்புமாறு தமது அரசாங்கம் தமக்கு அறிவித்துள்ளதாகவும், அதன்படியே சுற்றுலாவை இடை நடுவே முடித்துக்கொண்டு நாடு திரும்ப, இறுதி விமானத்துக்கு விமான நிலையத்துக்கு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது ஊடகங்களிடம் பேசிய எலோனா மெசன்கோவா எனும் சுற்றுலா பயணி கருத்து தெரிவிக்கையில்,

‘ 14 நாட்கள் சுற்றுலா பயணமாக நாம் இலங்கை வந்தோம். எனினும் 7 நாட்களில் நாம் நாடு திரும்ப வேண்டி ஏற்பட்டுள்ளது. நாம் ஹிக்கடுவையில் இருந்தோம்.

அப்போது தான் இந்த துரதிஷ்டவசமான சம்பவம் பதிவாகியுள்ளது. இதனால் எம்மை நாடு திரும்புமாறு எமது அரசாங்கம் எமக்கு அறிவித்துள்ளது.

முன்னதாக எமக்கு எமது அரசாங்கம், இலங்கைக்கு சுற்றுலா பயணம் செல்ல முடியும் என கூறி எம்மை ஊக்குவித்தது. அரசாங்கமே எம்மை இவ்வாறு இங்கு சுற்றுலா பயணத்துக்காக அனுப்பினர்.

எரிபொருள், மின்சார பிரச்சினைகளிடையேயும் நாம் மிக விருப்பத்துடன் சுற்றுலா பயணத்தை அனுபவித்தோம். எனினும் திடீரென ஏற்பட்ட இந் நிலைமையை எம்மாலும் புரிந்துகொள்ள முடியவில்லை. நாமும் கவலையடைகிறோம்.

ரஷ்ய சுற்றுலா பயணிகளால், இலங்கைக்கு அந்திய செலாவணி மெருமளவு கிடைத்தது. எனினும் இப்போது இந்த நடவடிக்கையால் அது சாத்தியமற்று போயுள்ளது.

இந்த விமான தடை தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி கடுமையான தீர்மானம் ஒன்றை எடுப்பார் என நினைக்கின்றேன். இவ்வாறான நிலையில் தான் சுற்றுலா பயணத்தை உடனடியாக முடித்துக்கொண்டு நாடு திரும்புமாறு அரசாங்கம் எமக்கு அறிவித்தது.

இந்த சம்பவத்தால் எதிர் காலத்தில் கூட ரஷ்யர்கள் இலங்கைக்கு சுற்றுலா பிரயாணம் வர பின்வாங்கலாம்.

ரஷ்யாவின் விமானங்கள் எந்த காரணத்துக்காகவும் கைப்பற்றப்பட மாட்டாது அல்லது தடை செய்யப்படமாட்டாது என இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையே எழுத்து மூல உடன்படிக்கை இருக்கும் நிலையில், ஐரோப்பாவின் சிறிய காப்புறுதி நிறுவனம் ஒன்றுக்காக, ஆயிரக் கணக்கான ரஷ்யர்களை அசெளகரியப்படுத்தியது புதுமையளிக்கிறது.

எதிர்கால சுற்றுலாத் துறையையே சவாலுக்கு உட்படுத்தி இலங்கை தனது அந்திய செலாவணி மார்க்கத்தையே மூடியுள்ளமை வியப்பாக உள்ளது.

ரஷ்யாவுக்கு செல்லும் இறுதி விமானத்தில் நாமும் செல்வதற்காகவே வந்துள்ளோம்.’ என தெரிவித்தார்.

ரஷ்ய மொழியில் ஊடகங்களிடம் பேசிய அவரின் கருத்துக்களை, எலேனா மெசன்கோவா உள்ளிட்ட சுற்றுலா குழுவின் வழிகாட்டியா செயற்பட்ட முதித்த மெவன் குமார சிங்கள மொழியில் மொழி பெயர்த்திருந்தார்.

முன்னதாக ரஷ்யாவின் ‘ஏரோபுளோட் எயார் பஸ் ஏ 330’ விமானம் இலங்கையில் இருந்து வெளியேற தடை விதித்து ,கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் கடந்த 2 ஆம் திகதி உத்தரவிட்ட நிலையில் அதில் பயணிக்க தயாராக இருந்த 191 பேர் அருகே உள்ள ஹோட்டல்கலில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில், ரஷ்யாவிலிருந்து நேற்று (4) வெறுமையாக வந்த எஸ்.யூ. 289 எனும் விமானம் அந்த 191 பேர் உள்ளிட்ட 275 சுற்றுலா பயணிகளை தனது நாட்டுகே அழைத்து சென்றது.

இந் நிலையில் இன்று முற்பகல் 10.10 மணிக்கு வெறுமையாக கட்டுநாயக்கவை வந்தடைந்த விமானம் பிற்பகல் 12.50 மணிக்கு மேலும் 275 சுற்றுலா பயனிகலை ரஷ்யா நோக்கி அழைத்து சென்றுள்ளது.

அயர்லாந்தில் உள்ள செலஷ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்த முறைப்பாடொன்றினை விசாரித்த கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் அம்மனுவின் முதல் பிரதிவாதியான ஏரோபுளொட் ரஷ்ய விமான சேவை நிறுவனத்திற்கு கடந்த 2 ஆம் திகதி தடையுத்தரவொன்றினை பிறப்பித்தது.

அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள ரஷ்யாவின் ஏரோபுளோட் எயார் பஸ் ஏ 330 விமானத்திற்கு நாட்டிலிருந்து வெளியேற கொழும்பு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த தடையுத்தரவு எதிர்வரும் 16ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என நீதிபதி அறிவித்தார்

அயர்லாந்தில் உள்ள செலஸ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடெட், ஏரோபுளோட் ரஷியன் ஏர்லைன்ஸுக்கு எதிராக, இரு தரப்பினருக்கு இடையேயான குத்தகை ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியமைக்காக இவ்வாறு முறைப்பாட்டு மனுவை தாக்கல் செய்து இந்த தடை உத்தரவைப் பெற்றுக்கொண்டிருந்தது.

இந் நிலையிலேயே ரஷ்யா இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்தியுள்ளதுடன், ரஷ்யாவில் உள்ள இலங்கை தூதுவரையும் அந் நாட்டு வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து தமது அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தது. இதற்கு ஒரு படி மேலாகவே, இலங்கையிலிருந்து சுற்றுலா பயணிகளையும் ரஷ்யா உடனடியாக நாட்டுக்கு அழைத்துக்கொண்டுள்ளது.

பொன் சிவகுமாரனின் 48 ஆவது நினைவேந்தல் நாளை உரும்பிராயில் 10 மணிக்கு அஞ்சலி

தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் உரும்பிராயில் உள்ள நினைவிடத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

பிரதேச சபையின் அவைத்தீர்மானத்தின் பிரகாரம், பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அஞ்சலி நிகழ்வில் ஈகைச்சுடரினை பொன் சிவகுமாரனின் சகோதரி ஏற்றிவைக்கவுள்ளதுடன் அகவணக்கம், மலரஞ்சலி என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந் நிகழ்வுகளின் தொடர்ச்சியாக ஏற்பாடாக பொன் சிவகுமாரனின் காலத்தில் அவருடன் செயற்பட்ட அரசியல் தலைவர்கள், நண்பர்களினால் அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Posted in Uncategorized