யாழ்ப்பாணத்திலுள்ள மீனவ மக்களுக்கு மண்ணெண்ணெய்

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பெறப்பட்ட 15,000 லீற்றர் மண்ணெண்ணெய் யாழ்ப்பாணத்திலுள்ள மீனவ மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் ராகேஷ் நட்ராஜ் ஆகியோரின் தலைமையில் இந்த விநியோக நிகழ்ச்சி இடம்பெற்றதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு மீனவர்கள், ஊர்காவற்றுறை மீனவர்கள் மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் நயினாதீவு மீனவர்களுக்கு இந்த மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது.

Posted in Uncategorized

என்னையும், குடும்பத்தையும் இந்தியாவுக்கு அழைத்து பாதுகாப்பு தருக – மோடியிடம் இலங்கை கோரிக்கை

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையான பாதுகாப்பு இதுவரையிலும் வழங்கப்படவில்லை என்பதால், தன்னையும் தன்னுடைய குடும்பத்தினரையும் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று, பாதுகாப்பு வழங்குமாறு இந்தியப் பிரதமர் ​ந​ரேந்திர மோடியிடம், இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான விமலவீர திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு தொடர்பில், தான் திருப்தி அடையவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மே 9 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் ஆளும் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 75 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளும் சொத்துக்களும் சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாகோகம போராட்டத்திற்கு 50 நாட்கள் பூர்த்தி: ஆர்ப்பாட்டப் பேரணியை கலைக்க பொலிஸார் நடவடிக்கை

கொழும்பு – கோட்டை உலக வர்த்தக மையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

கோட்டாகோகம போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் 50 நாட்களாகின்றன.

கட்சி சார்பற்ற மக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், கலைஞர்கள் மற்றும் வல்லுநர்கள் உள்ளிட்ட குழுவினர் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இன்று பேரணியொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போதே அவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

ஜனாதிபதி உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என கோரி தொடர்ச்சியாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

பல்வேறு தரப்பினரின் பங்குபற்றுதலுடன், கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து கோட்டாகோகம போராட்டக்களம் நோக்கிய பேரணி இன்று முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட அனைத்து வீதிகளிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதனிடையே, சுதந்திர சதுக்கத்திற்கு அருகிலிருந்து மற்றுமொரு எதிர்ப்பு பேரணி இன்று பிற்பகல் ஆரம்பமானது

கோட்டகோகம போராட்டத்தின் 50 ஆவது நாள் நிறைவை முன்னிட்டு உலக வர்த்தக மையத்திற்கருகிலுள்ள லோட்டஸ் வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர்.

இதன்போது போராட்டக்காரர்கள் மும்மொழிகளிலும் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கோட்டா – ரணில் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும், மஹிந்த மற்றும் தேஷபந்து உள்ளிட்ட மே 9 தாக்குதலின் சூத்திரதாரிகளாக செயல்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுதலை செய்ய வேண்டும், மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் எனும் கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.

இதேவேளை, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் பல நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்று காலை காலி பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக அமைந்துள்ள போராட்டக்களத்தில் மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றதுடன், நகரின் மத்தியில் போராட்டம் வலுப்பெற்றது.

கண்டி, மாத்தளையிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மே 9 தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கோட்டா – ரணிலின் கூட்டு சதியைத் தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளிலும் குருநாகல் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றது .

இதனைத் தவிர திகன, எம்பிலிப்பிட்டிய, பொலன்னறுவை , வலஸ்முல்ல ஆகிய பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

தமிழக நன்கொடை உதவித்திட்டம் ஆரம்பித்து வைப்பு!

இந்தியாவின் தமிழ் நாட்டு அரசினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 15, 857 குடும்பங்களுக்கு அரிசியும் மற்றும் 3, 964 குடும்பங்களுக்கு பால்மா பைக்கட்டுக்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் “அன்புடனும் அக்கறையுடனும் இந்தியாவிடமிருந்து வடக்கு மாகாண மக்களுக்கான அட்சய பாத்திர உதவிகள்” எனும் தொனிப்பொருளில் அமைந்த குறித்த நன்கொடை உதவித்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் விநியோகிக்கும் பணி (27) மாலை 3.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், யாழ். இந்திய துணைத்தூதுவர் ஜெ. ராகேஷ் நடராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த உதவித்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

இதன் முதற்கட்டமாக இன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கள்ளப்பாடு தெற்கு மற்றும் செல்வபுரம் கிராம சேவகர் பிரிவுகளைச சேர்ந்த முப்பது பேருக்கான உதவி வழங்கி வைக்கப்பட்டது.

துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகங்களைத் தொடர்ந்து ஏனையவர்களுக்கு அந்தந்த பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்படும்.குறித்த நன்கொடை உதவித்திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு இருபது கிலோகிராம் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதன் முதற்கட்டமாக ஒரு குடும்பத்திற்கு பத்து கிலோகிராம் அரிசி வழங்கப்படவுள்ளது. இரண்டாம் கட்டத்தில் மிகுதி வழங்கப்படவுள்ளது.

ஒரு கிலோகிராம் நிறையுடைய பால்மா பைக்கட்டுக்கள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் கர்ப்பிணி பெண்கள் அல்லது பாலூட்டும் தாய்மார்கள் அல்லது 5 அகவைக்கு உட்பட்ட குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன் இதில் ஒரு குடும்பத்தில் குறிப்பிட்ட ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் இருந்தால் ஒரு பால்மா பை மட்டும் வழங்கப்படும்.

21 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படவில்லை ; ஐ.ம.ச. சுட்டிக்காட்டு

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டத்தை வெகுவிரைவில் நிறைவேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் ஒருமித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

21ஆவது திருத்தத்தை தொடர்ந்து பாராளுமன்ற தெரிவு குழு ஊடாக புதிய அரசியலமைப்பினை உருவாக்கவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சகல கட்சிகளின் யோசனைகளையும் பெற்று அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபினை எதிர்வரும் மாதம் 6ஆம் திகதி திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரட்டை குடியுரிமை உடையவர் அரசியலில் மாத்திரமல்ல அரச உயர் பதவிகள் வகிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் யோசனைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று பிரதமர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்த்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும்,இரட்டை குடியுரிமையுடைய நபர் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதற்கு தடை விதித்தல்,சுயாதீன ஆணைக்குழுக்கள் மீள் ஸ்தாபிப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் விவகாரத்தில் ஏதேனும் சூட்சமம் உள்ளதா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது.குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மக்களை ஏமாற்ற நினைத்தால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை நீக்குதல் அல்லது இரத்து செய்யல் விவகாரத்தில் பொதுஜன அபிப்ராயத்தை கோருவது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறாயின் நிறைவேற்று அதிகார விவகாரத்தை இருகட்டமாக செயற்படுத்த வேண்டும்.பொதுசன அபிப்ராயத்தை கோருவதும் சாதகமாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதன்போது குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பிலான விவகாரம் தற்போது உயர்நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே அவ்விடயம் குறித்து எவ்வித நிலைப்பாட்டையும், அடுத்தக்கட்ட நகர்வுனையும் தற்போது முன்னெடுக்க முடியாது என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் உள்வாங்கப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம்.

மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படாவிடின் அமைச்சு பதவிகளை வகிக்கும் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளில் இருந்து விலகுவார்கள்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரம் மட்டுப்படுத்தல், இரட்டை குடியுரிமை உடையவர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதற்கு தடை விதித்தல் உள்ளிட்ட பிரதான யோசனைகளுக்கு சுதந்திர கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இதன்போது குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நிறைவேற்றத்தில் சகல தரப்பினரது யோசனைகளையும் பெற்றுக்கொள்வதும் அவசியமாகும்.புதிய அரசியலமைப்பு உருவாக்க பாராளுமன்ற தெரிவு குழுவை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டது.

இரட்டை குடியுரிமை கொண்டவர் அரசியலில் மாத்திரமல்ல அரச உயர் பதவிகள் வகிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

சகல கட்சிகளினதும் யோசனைகளை பெற்று எதிர்வரும் 6ஆம் திகதி அமைச்சரவையில் 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபினை சமர்ப்பித்து விரைவாக நிறைவேற்றிக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் பங்குப்பற்றலுடன் எதிர்வரும் 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிறிதொரு கூட்டத்தை நடத்தி அரசியலமைப்பு வரைபு யோசனை பெறலை நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியினர் தமது யோசனைகளை நீதியமைச்சரிடம் கையளிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

Posted in Uncategorized

’யாழ்ப்பாணத்துக்கு சென்ற முதலாவது இந்திய பிரதமர்’

வணக்கம் என்று சொல்லி தனது உரையை தொடங்கினார் மோதி.

மீண்டும் தமிழ் நாட்டிற்கு வருவது என்பது எப்போதுமே அருமையாக இருக்கும் ஒன்று. இது மிகவும் சிறப்பான ஒரு பூமி. இந்த மாநிலத்தின் மக்கள், கலாசாரம், மொழி என அனைத்தும் சிறப்பானவை.

பாரதியார் அவர்கள் செந்தமிழ் நாடு எனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என மிக அழகாக பாடியுள்ளார்.

நண்பர்களே ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டை சேர்ந்த யாராவது ஒருவர் தலைசிறந்து விளங்குகிறார்.

அண்மையில் காது கேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ் குழுவினருக்கு என் இல்லத்தில் வரவேற்பு அளித்தேன். தமிழ் மொழி நிலையானது, தமிழ் கலாசாரம் உலகம் முழுவதும் பரந்துள்ளது. சென்னை முதல் கனடா வரை, மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை, சேலம் முதல் தென் ஆப்ரிக்கா வரை பொங்கல் மற்றும் புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தில் மேலும் ஒரு சிறப்பான அத்தியாயத்தை கொண்டாட நாம் அனைவரும் இங்கே கூடியிருக்கின்றோம். 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட திட்டங்கள் இங்கே ஒன்று தொடங்கி வைக்கப்பட இருக்கின்றன அல்லது அவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட இருக்கின்றன.

ஐந்து ரயில் நிலையங்கள் சீரமைக்கப்படுவது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு நவீனமயமாக்கலும் மேம்பாடும் செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் இது உள்ளூர் கலை, கலாசாரத்துக்கு ஏற்படையதாகவும் இருக்கும்.

மதுரைக்கும் தேனிக்கும் இடையேயான பாதை மாற்றம் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.

திருவள்ளூர் முதல் பெங்களூர் வரை, எண்ணூர் முதல் செங்கல்பட்டு வரையுமான இயற்கை எரிவாயு குழாய் தொடக்கம் காரணமாக தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகம், ஆகிய மாநில மக்களுக்கு இயற்கை எரிவாயு கிடைப்பது எளிதாக இருக்கும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், சென்னை துறைமுகத்தை பொருளாதார வளர்ச்சியின் மையமாக்கும் தொலைநோக்கு பார்வையோடும், சென்னையில் ஒரு பல்நோக்கு ஏற்பாட்டியல் பூங்காவிற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டிருக்கிறது.

உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்த நாடுகள் எல்லாம் வளரும் நாடுகள் என்ற நிலையில் இருந்து வளர்ந்த நாடுகள் என்ற நிலைக்கு உயர்ந்தன என்பதை வரலாறு நமக்கு கற்பிக்கிறது.

தலைசிறந்த தரமும் நீடித்த தன்மையும் உடைய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் இந்திய அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. நான் உள்கட்டமைப்பு பற்றி பேசும்போது சமூக மற்றும் புற கட்டமைப்பு பற்றியே குறிப்பிடுகின்றேன்.

தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் மேலும் பிரபலப்படுத்துவதற்கு இந்திய அரசு முழு அர்ப்பணிப்போடு செயல்படுகிறது. செம்மொழி தமிழாய்வு மையத்திற்கு புதிய வளாகம் ஒன்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த புதிய வளாகத்திற்கு முழுக்க முழுக்க மத்திய அரசே நிதி வழங்குகிறது.

பனாரஸ் பல்கலைக்கழத்தில் தமிழ் படிப்பிற்காக சுப்ரமணிய பாரதி பெயரில் ஒரு இருக்கை அண்மையில் அறிவிக்கப்பட்டது என மோதி உரையாற்றினார்.

மேலும் அவர் தனது உரையில் இலங்கை குறித்தும் குறிப்பிட்டார்.

“இலங்கை குறித்து நீங்கள் கவலை கொள்வீர்கள் என்று எனக்கு தெரியும். நட்பு ரீதியாகவும், அண்டை நாடு என்ற காரணத்தினாலும் இந்தியா, தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறது.” என்று தெரிவித்தார் மோதி.

இலங்கை சிரமான சூழ்நிலையை கடந்துகொண்டு இருக்கிறது எனவும் ஒரு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும் அண்டை நாடு என்ற ரீதியிலும் இந்தியா அனைத்துவிதமான உதவிகளையும் வழங்கிவருகிறது என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு விஜயம் செய்த பிரதமர் நரேந்திர மோடி அங்கு நடைபெற்ற வைபவத்தில் மேலும் உரையாற்றுகையில்,

உணவு, எரிபொருள், மருந்து ஏனைய அத்தியாவசிய பொருட்கள் போன்ற உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பல இந்திய அமைப்புகளும் தனி நபர்களும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்காக உதவிகளை வழங்கியுள்ளனர்.

இலங்கைக்கு ஆதரவு வழங்குவதில் சர்வதேச அமைப்புகள் மத்தியில் இந்தியா உரக்க பேசியுள்ளது. ஜனநாயம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்பு ஆகியவற்றுக்காக இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும். யாழ்ப்பாணத்துக்கு சில ஆண்டுகளுக்குமுன் சென்றதை என்னால் மறக்கமுடியாது. யாழ்ப்பாணத்துக்கு சென்ற முதலாவது இந்திய பிரதமரும் நானே என்று தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே உகந்த தருணம்: தமிழக முதல்வர் தெரிவிப்பு

தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே உகந்த தருணம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் இன்று கலந்துகொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இந்த கருத்தினை வௌியிட்டார்.

தமிழகம் பல்வேறு துறைகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, திறன்மிகு மனித ஆற்றல் என பல்வேறு வகைகளில் தமிழ்நாடு மகத்தான வளர்ச்சியை அளித்து வருகிறது.

மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை காட்டிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவமானது.

தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சி பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக உள்ளது.

நமது நாட்டின் வளர்ச்சியிலும் ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களிலும் தமிழ்நாடு முக்கிய பங்களிப்பை தருகிறது என இந்திய பிரதமருக்கு தெரியும்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு.

ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 8.4 விழுக்காடு. ஜவுளித்துறை ஏற்றுமதியில் 19.4 விழுக்காடு. தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 விழுக்காடு.

ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்

தமிழகத்தின் கடலோர மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.

15.5.2022 தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை தொகை 16 ஆயிரத்து 6 கோடி ரூபாய். இத்தொகையை விரைந்து வழங்க வேண்டும்

பழமையான தமிழ் மொழியை இந்திக்கு நிகரான அலுவல் மொழியாகவும், உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்

நீட் விலக்கிற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும்.

நிதி அமைச்சராக பதவியேற்கிறார் பிரதமர் ரணில்?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சராக பதவியேற்கவுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரொருவர் நியமிக்கப்படும் வரை பதில் நிதியமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, செயற்படுவார் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கஞ்சன விஜேசேகர, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி மீண்டும் நிதியமைச்சராக நியமிக்கப்படுவதற்கான அழைப்பை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் நிதியமைச்சை பொறுப்பேற்க விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்தாக தெரியவருகிறது.

23 அமைச்சரவை அமைச்சர்கள் இதுவரை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கான செயலாளர்களும் இன்றையதினம் நியமனக் கடிதங்களை பெற்றுள்ளனர்.

ஆனால் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இதுவரை நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்படவில்லை என்று சர்வதேசம் உட்பட பல்வேறு தரப்பினராலும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

இந் நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்த அமைச்சை பொறுப்பேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

நிதியமைச்சர் நியமனம், நாளை (25) இடம்பெறலாம் என்று அரசாங்க வட்டாரங்களின் மூலம் அறிய முடிகிறது.

மட்டக்களப்பிற்கான தமிழக நிவாரண பொதிகள்!

இந்தியாவின் தமிழ்நாட்டு அரசினால் வழங்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் பொதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்

இந்திய நிவாரணப் பொதிகள் தொடர்பாக கருத்து தெரிவத்த மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவின் தமிழ்நாட்டு அரசினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள் இலங்கையில் வறுமையில் வாடும் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர்களை இணையவழியில் சந்திப்பு நடத்திய உயர் அதிகாரிகள், மாவட்டத்தில் வறுமையில் உள்ள மக்களின் புள்ளி விபரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளதுடன், மாவட்டத்திற்கான உலர் உணவு பொதிகளின் எண்ணிக்கையை கேட்டறிந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 84 ஆயிரம் குடும்பங்களுக்கு இதில் முதற்கட்டமாக தலா 10 கிலோ நிறை கொண்ட 50 ஆயிரம் நிவாரண பொதிகள் கிடைக்கவுள்ளதுடன் அதனை வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு குடும்பம் ஒன்றிற்கு தலா ஒரு பொதி வழங்கவுள்ளதுடன் அதன் பின்னர் வரும் நிவாரணப் பொதிகள் ஏனையவர்களுக்கு வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

எரிபொருள் இன்மையால் தடைப்பட்ட காரைநகர்- ஊர்காவற்துறைப் பாதைச் சேவை!

யாழ். காரைநகருக்கும் ஊர்காவற்துறைக்கும் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு கடந்த ஒரு வாரகாலமாக சேவையில் ஈடுபடுத்தப்படாமையால் அரச உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.

மண்ணெண்ணெய் இன்மையாலேயே மேற்படி சேவை இடம்பெறவில்லை என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பாதைச் சேவையை நடத்துவதில் வீதி அபிவிருத்தி அதிகார சபை தொடர்ந்தும் அசமந்தப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது என இதனூடாகப் பயணிப்போர் குற்றம் சாட்டுகின்றனர்.

பொறுப்புடைய ஒரு அரச நிறுவனம் மண்ணெண்ணெயைத் தேவைக்கு ஏற்ப பெற்று வைத்திருந்து மக்களுக்குச் சீரான சேவையை வழங்க வேண்டும். இதை விடுத்துக் கடல் கடந்து போக்குவரத்துச் செய்யும் அரச பணியாளர்களைச் சிரமத்திற்கு உள்ளாக்குகின்றமை குறித்து அரச பணியாளர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

பாதைச் சேவை இடம்பெறாமையால் தனியார் படகுகளில் மோட்டார்ச் சைக்கிள்களை ஏற்றும்போது அவை சேதமடைகின்றன எனவும், உதிரிப்பாகங்களை அதிக விலைக்குப் பெற்றுச் சீர் செய்தாலும் அவை மீண்டும் சேதமடைகின்றன எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயத்தில் யாழ்.அரசாங்க அதிபர் உடனடிக் கவனம் செலுத்திப் பாதைச் சேவை இடம்பெறுவதை உறுதிப்படுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.