21 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படவில்லை ; ஐ.ம.ச. சுட்டிக்காட்டு

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டத்தை வெகுவிரைவில் நிறைவேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் ஒருமித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

21ஆவது திருத்தத்தை தொடர்ந்து பாராளுமன்ற தெரிவு குழு ஊடாக புதிய அரசியலமைப்பினை உருவாக்கவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சகல கட்சிகளின் யோசனைகளையும் பெற்று அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபினை எதிர்வரும் மாதம் 6ஆம் திகதி திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரட்டை குடியுரிமை உடையவர் அரசியலில் மாத்திரமல்ல அரச உயர் பதவிகள் வகிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் யோசனைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று பிரதமர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்த்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும்,இரட்டை குடியுரிமையுடைய நபர் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதற்கு தடை விதித்தல்,சுயாதீன ஆணைக்குழுக்கள் மீள் ஸ்தாபிப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் விவகாரத்தில் ஏதேனும் சூட்சமம் உள்ளதா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது.குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மக்களை ஏமாற்ற நினைத்தால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை நீக்குதல் அல்லது இரத்து செய்யல் விவகாரத்தில் பொதுஜன அபிப்ராயத்தை கோருவது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறாயின் நிறைவேற்று அதிகார விவகாரத்தை இருகட்டமாக செயற்படுத்த வேண்டும்.பொதுசன அபிப்ராயத்தை கோருவதும் சாதகமாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதன்போது குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பிலான விவகாரம் தற்போது உயர்நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே அவ்விடயம் குறித்து எவ்வித நிலைப்பாட்டையும், அடுத்தக்கட்ட நகர்வுனையும் தற்போது முன்னெடுக்க முடியாது என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் உள்வாங்கப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம்.

மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படாவிடின் அமைச்சு பதவிகளை வகிக்கும் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளில் இருந்து விலகுவார்கள்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரம் மட்டுப்படுத்தல், இரட்டை குடியுரிமை உடையவர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதற்கு தடை விதித்தல் உள்ளிட்ட பிரதான யோசனைகளுக்கு சுதந்திர கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இதன்போது குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நிறைவேற்றத்தில் சகல தரப்பினரது யோசனைகளையும் பெற்றுக்கொள்வதும் அவசியமாகும்.புதிய அரசியலமைப்பு உருவாக்க பாராளுமன்ற தெரிவு குழுவை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டது.

இரட்டை குடியுரிமை கொண்டவர் அரசியலில் மாத்திரமல்ல அரச உயர் பதவிகள் வகிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

சகல கட்சிகளினதும் யோசனைகளை பெற்று எதிர்வரும் 6ஆம் திகதி அமைச்சரவையில் 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபினை சமர்ப்பித்து விரைவாக நிறைவேற்றிக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் பங்குப்பற்றலுடன் எதிர்வரும் 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிறிதொரு கூட்டத்தை நடத்தி அரசியலமைப்பு வரைபு யோசனை பெறலை நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியினர் தமது யோசனைகளை நீதியமைச்சரிடம் கையளிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

’யாழ்ப்பாணத்துக்கு சென்ற முதலாவது இந்திய பிரதமர்’

வணக்கம் என்று சொல்லி தனது உரையை தொடங்கினார் மோதி.

மீண்டும் தமிழ் நாட்டிற்கு வருவது என்பது எப்போதுமே அருமையாக இருக்கும் ஒன்று. இது மிகவும் சிறப்பான ஒரு பூமி. இந்த மாநிலத்தின் மக்கள், கலாசாரம், மொழி என அனைத்தும் சிறப்பானவை.

பாரதியார் அவர்கள் செந்தமிழ் நாடு எனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என மிக அழகாக பாடியுள்ளார்.

நண்பர்களே ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டை சேர்ந்த யாராவது ஒருவர் தலைசிறந்து விளங்குகிறார்.

அண்மையில் காது கேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ் குழுவினருக்கு என் இல்லத்தில் வரவேற்பு அளித்தேன். தமிழ் மொழி நிலையானது, தமிழ் கலாசாரம் உலகம் முழுவதும் பரந்துள்ளது. சென்னை முதல் கனடா வரை, மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை, சேலம் முதல் தென் ஆப்ரிக்கா வரை பொங்கல் மற்றும் புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தில் மேலும் ஒரு சிறப்பான அத்தியாயத்தை கொண்டாட நாம் அனைவரும் இங்கே கூடியிருக்கின்றோம். 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட திட்டங்கள் இங்கே ஒன்று தொடங்கி வைக்கப்பட இருக்கின்றன அல்லது அவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட இருக்கின்றன.

ஐந்து ரயில் நிலையங்கள் சீரமைக்கப்படுவது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு நவீனமயமாக்கலும் மேம்பாடும் செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் இது உள்ளூர் கலை, கலாசாரத்துக்கு ஏற்படையதாகவும் இருக்கும்.

மதுரைக்கும் தேனிக்கும் இடையேயான பாதை மாற்றம் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.

திருவள்ளூர் முதல் பெங்களூர் வரை, எண்ணூர் முதல் செங்கல்பட்டு வரையுமான இயற்கை எரிவாயு குழாய் தொடக்கம் காரணமாக தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகம், ஆகிய மாநில மக்களுக்கு இயற்கை எரிவாயு கிடைப்பது எளிதாக இருக்கும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், சென்னை துறைமுகத்தை பொருளாதார வளர்ச்சியின் மையமாக்கும் தொலைநோக்கு பார்வையோடும், சென்னையில் ஒரு பல்நோக்கு ஏற்பாட்டியல் பூங்காவிற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டிருக்கிறது.

உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்த நாடுகள் எல்லாம் வளரும் நாடுகள் என்ற நிலையில் இருந்து வளர்ந்த நாடுகள் என்ற நிலைக்கு உயர்ந்தன என்பதை வரலாறு நமக்கு கற்பிக்கிறது.

தலைசிறந்த தரமும் நீடித்த தன்மையும் உடைய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் இந்திய அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. நான் உள்கட்டமைப்பு பற்றி பேசும்போது சமூக மற்றும் புற கட்டமைப்பு பற்றியே குறிப்பிடுகின்றேன்.

தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் மேலும் பிரபலப்படுத்துவதற்கு இந்திய அரசு முழு அர்ப்பணிப்போடு செயல்படுகிறது. செம்மொழி தமிழாய்வு மையத்திற்கு புதிய வளாகம் ஒன்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த புதிய வளாகத்திற்கு முழுக்க முழுக்க மத்திய அரசே நிதி வழங்குகிறது.

பனாரஸ் பல்கலைக்கழத்தில் தமிழ் படிப்பிற்காக சுப்ரமணிய பாரதி பெயரில் ஒரு இருக்கை அண்மையில் அறிவிக்கப்பட்டது என மோதி உரையாற்றினார்.

மேலும் அவர் தனது உரையில் இலங்கை குறித்தும் குறிப்பிட்டார்.

“இலங்கை குறித்து நீங்கள் கவலை கொள்வீர்கள் என்று எனக்கு தெரியும். நட்பு ரீதியாகவும், அண்டை நாடு என்ற காரணத்தினாலும் இந்தியா, தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறது.” என்று தெரிவித்தார் மோதி.

இலங்கை சிரமான சூழ்நிலையை கடந்துகொண்டு இருக்கிறது எனவும் ஒரு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும் அண்டை நாடு என்ற ரீதியிலும் இந்தியா அனைத்துவிதமான உதவிகளையும் வழங்கிவருகிறது என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு விஜயம் செய்த பிரதமர் நரேந்திர மோடி அங்கு நடைபெற்ற வைபவத்தில் மேலும் உரையாற்றுகையில்,

உணவு, எரிபொருள், மருந்து ஏனைய அத்தியாவசிய பொருட்கள் போன்ற உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பல இந்திய அமைப்புகளும் தனி நபர்களும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்காக உதவிகளை வழங்கியுள்ளனர்.

இலங்கைக்கு ஆதரவு வழங்குவதில் சர்வதேச அமைப்புகள் மத்தியில் இந்தியா உரக்க பேசியுள்ளது. ஜனநாயம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்பு ஆகியவற்றுக்காக இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும். யாழ்ப்பாணத்துக்கு சில ஆண்டுகளுக்குமுன் சென்றதை என்னால் மறக்கமுடியாது. யாழ்ப்பாணத்துக்கு சென்ற முதலாவது இந்திய பிரதமரும் நானே என்று தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே உகந்த தருணம்: தமிழக முதல்வர் தெரிவிப்பு

தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே உகந்த தருணம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் இன்று கலந்துகொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இந்த கருத்தினை வௌியிட்டார்.

தமிழகம் பல்வேறு துறைகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, திறன்மிகு மனித ஆற்றல் என பல்வேறு வகைகளில் தமிழ்நாடு மகத்தான வளர்ச்சியை அளித்து வருகிறது.

மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை காட்டிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவமானது.

தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சி பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக உள்ளது.

நமது நாட்டின் வளர்ச்சியிலும் ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களிலும் தமிழ்நாடு முக்கிய பங்களிப்பை தருகிறது என இந்திய பிரதமருக்கு தெரியும்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு.

ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 8.4 விழுக்காடு. ஜவுளித்துறை ஏற்றுமதியில் 19.4 விழுக்காடு. தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 விழுக்காடு.

ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்

தமிழகத்தின் கடலோர மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.

15.5.2022 தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை தொகை 16 ஆயிரத்து 6 கோடி ரூபாய். இத்தொகையை விரைந்து வழங்க வேண்டும்

பழமையான தமிழ் மொழியை இந்திக்கு நிகரான அலுவல் மொழியாகவும், உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்

நீட் விலக்கிற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும்.

நிதி அமைச்சராக பதவியேற்கிறார் பிரதமர் ரணில்?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சராக பதவியேற்கவுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரொருவர் நியமிக்கப்படும் வரை பதில் நிதியமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, செயற்படுவார் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கஞ்சன விஜேசேகர, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி மீண்டும் நிதியமைச்சராக நியமிக்கப்படுவதற்கான அழைப்பை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் நிதியமைச்சை பொறுப்பேற்க விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்தாக தெரியவருகிறது.

23 அமைச்சரவை அமைச்சர்கள் இதுவரை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கான செயலாளர்களும் இன்றையதினம் நியமனக் கடிதங்களை பெற்றுள்ளனர்.

ஆனால் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இதுவரை நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்படவில்லை என்று சர்வதேசம் உட்பட பல்வேறு தரப்பினராலும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

இந் நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்த அமைச்சை பொறுப்பேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

நிதியமைச்சர் நியமனம், நாளை (25) இடம்பெறலாம் என்று அரசாங்க வட்டாரங்களின் மூலம் அறிய முடிகிறது.

Posted in Uncategorized

மட்டக்களப்பிற்கான தமிழக நிவாரண பொதிகள்!

இந்தியாவின் தமிழ்நாட்டு அரசினால் வழங்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் பொதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்

இந்திய நிவாரணப் பொதிகள் தொடர்பாக கருத்து தெரிவத்த மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவின் தமிழ்நாட்டு அரசினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள் இலங்கையில் வறுமையில் வாடும் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர்களை இணையவழியில் சந்திப்பு நடத்திய உயர் அதிகாரிகள், மாவட்டத்தில் வறுமையில் உள்ள மக்களின் புள்ளி விபரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளதுடன், மாவட்டத்திற்கான உலர் உணவு பொதிகளின் எண்ணிக்கையை கேட்டறிந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 84 ஆயிரம் குடும்பங்களுக்கு இதில் முதற்கட்டமாக தலா 10 கிலோ நிறை கொண்ட 50 ஆயிரம் நிவாரண பொதிகள் கிடைக்கவுள்ளதுடன் அதனை வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு குடும்பம் ஒன்றிற்கு தலா ஒரு பொதி வழங்கவுள்ளதுடன் அதன் பின்னர் வரும் நிவாரணப் பொதிகள் ஏனையவர்களுக்கு வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

எரிபொருள் இன்மையால் தடைப்பட்ட காரைநகர்- ஊர்காவற்துறைப் பாதைச் சேவை!

யாழ். காரைநகருக்கும் ஊர்காவற்துறைக்கும் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு கடந்த ஒரு வாரகாலமாக சேவையில் ஈடுபடுத்தப்படாமையால் அரச உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.

மண்ணெண்ணெய் இன்மையாலேயே மேற்படி சேவை இடம்பெறவில்லை என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பாதைச் சேவையை நடத்துவதில் வீதி அபிவிருத்தி அதிகார சபை தொடர்ந்தும் அசமந்தப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது என இதனூடாகப் பயணிப்போர் குற்றம் சாட்டுகின்றனர்.

பொறுப்புடைய ஒரு அரச நிறுவனம் மண்ணெண்ணெயைத் தேவைக்கு ஏற்ப பெற்று வைத்திருந்து மக்களுக்குச் சீரான சேவையை வழங்க வேண்டும். இதை விடுத்துக் கடல் கடந்து போக்குவரத்துச் செய்யும் அரச பணியாளர்களைச் சிரமத்திற்கு உள்ளாக்குகின்றமை குறித்து அரச பணியாளர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

பாதைச் சேவை இடம்பெறாமையால் தனியார் படகுகளில் மோட்டார்ச் சைக்கிள்களை ஏற்றும்போது அவை சேதமடைகின்றன எனவும், உதிரிப்பாகங்களை அதிக விலைக்குப் பெற்றுச் சீர் செய்தாலும் அவை மீண்டும் சேதமடைகின்றன எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயத்தில் யாழ்.அரசாங்க அதிபர் உடனடிக் கவனம் செலுத்திப் பாதைச் சேவை இடம்பெறுவதை உறுதிப்படுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Posted in Uncategorized

சீன நாட்டுத் தூதுவர் கிழக்கு ஆளுநரை சந்தித்து பேச்சு

சீன மக்கள் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் QI Zenhong இன்று (24) காலை திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை சந்தித்தார்.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஆளுநருக்கும் சீனத் தூதுவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஆளுநரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

ஆளுநர் அலுவலகத்திற்கு வந்த சீன தூதுவருக்கு உற்சாக வரவேற்பேற்களிக்கப்பட்டது .

அதனைத் தொடர்ந்து சீனத் தூதரகத்தினால் கிழக்கு மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 உலர் உணவுப் பொதிகளை தூதுவர் உத்தியோகபூர்வமாக விநியோகித்தார்.

பின்னர் கிழக்கு மாகாணத்தில் புதிய முதலீடுகள் மூலம் அபிவிருத்தி செய்யக்கூடிய வளங்கள் குறித்து சீனத் தூதுவர் மற்றும் அவரது குழுவினருக்கு விளக்கமளித்தார். மேலும், புதிய முதலீடுகளை மேற்கொள்ளக்கூடியதுமான மாகாணத்தின் வளங்கள் தொடர்பான விசேட கையேட்டை ஆளுநர் அவர்கள் தூதுவரிடம் இதன் போது வழங்கினார்.

இதில் திருகோணமலை மாவட்ட செயலாளர் உட்பட பல உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

யாழில் தொடரும் எரிபொருளுக்கான நீள் வரிசைகள்: விலை அதிகரிப்புத் தொடர்பில் மக்கள் கடும் விசனம்

கடும் பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக யாழிலும் பொதுமக்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்தநிலையில் மீளவும் எரிபொருட்களின் சடுதியான விலை அதிகரிப்பு பொதுமக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமையும்(24.5.2022) யாழ்.மாவட்டத்தில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காகப் பரவலாகப் பல்வேறு இடங்களிலும் மிக நீண்ட வரிசைகளில் மோட்டார்ச் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். நீண்ட நேரம் காத்திருந்தே எரிபொருளைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகத் தெரிவித்த பொதுமக்கள் இன்று அதிகாலை முதல் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரித்தமை தொடர்பிலும் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச கடன் மறுசீரமைப்பிற்கான செயற்பாடு முன்னெடுப்பு; 2 நிறுவனங்கள் தெரிவு

எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட நெருக்கடிகளால் மக்கள் துன்பப்படுகின்ற நிலையில், அரசாங்கம் பெற்றுக்கொண்ட சர்வதேச கடனை மறுசீரமைப்பதற்கான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாட்டிற்கான நிதி ஆலோசனை சேவைகளுக்காக உலகின் முன்னணி ஆலோசனை நிறுவனங்கள் இரண்டை தெரிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்வைக்கப்பட்டுள்ள சர்வதேச யோசனைகள் தொடர்பில் ஆராய்ந்து, அதற்கான புள்ளிகள் வழங்கப்பட்டு, பிரான்ஸின் Lazard என்ற நிறுவனமே கடன் மறுசீரமைப்பிற்கான ஆலோசனை நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

இந்த ஆலோசனை சேவைகளுக்கான கட்டணமாக 5.6 மில்லியன் டொலரை செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சட்ட ஆலோசனைகளை வழங்க Clifford Chance நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜபக்ஸ குடும்பத்தாரை நாட்டிலிருந்து வௌியேற்ற மொஹமட் நஷீட் முயல்வதாக சர்வதேச அரங்கில் சந்தேகம்

மாலைத்தீவுகளின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் இலங்கைக்கான வௌிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்கும் விடயத்தில் மேற்கொண்டுள்ள தலையீடு குறித்து தற்போது அதிகம் பேசப்படுகிறது.

மொஹமட் நஷீட் இலங்கையில் தங்கியிருந்து மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது குடும்பத்தவர்கள் பாதுகாப்பாக நாட்டிலிருந்து வௌியேறுவதற்கான பொறிமுறையை தயாரித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளதென The Maldives Journal இணையத்தளம் இன்று செய்தி வௌியிட்டுள்ளது.

சர்வதேச உதவிகள் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு தன்னார்வமாக முன்வந்து கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்த மொஹமட் நஷீட், அத்தகைய பணிகளில் எவ்வித அனுபவமும் இல்லாதவர் என இணையத்தள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக மாலைத்தீவுகளின் சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷீட் முன்வைத்த யோசனையை கடந்த 19 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டார்.

பிரதமரின் அனுமதியுடன் 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த மொஹமட் நஷீட், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோரை சந்தித்தார்.

இந்த சந்திப்புகளுக்கு மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவையும் அவர் கடந்த 21 ஆம் திகதி சந்தித்தார்.

சர்வதேச உதவிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக எவ்வித அனுபவமும் இல்லாத மொஹமட் நஷீட், கடந்த சில தினங்களாக உயர் மட்ட அரசியல் தலைவர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டு, ராஜபக்ஸ குடும்பத்தினர் மாலைத்தீவுகளுக்கு செல்வதற்கான பாதுகாப்பு வழிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கு அழுத்தம் பிரயோகித்துள்ளதாக The Maldives Journal இணையத்தளம் தெரிவித்துள்ளது.

பதவி விலகிய மஹிந்த ராஜபக்ஸ, மொஹமட் நஷீட்டை தொடர்புகொண்டு இலங்கையின் நிலைமை தணியும் வரை தமது குடும்பத்தவர்கள் மாலைத்தீவுகளில் தங்கியிருப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்ததாக மாலைத்தீவுகள் அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி இந்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மொஹமட் நஷீட், ராஜபக்ஸ குடும்பத்தினருக்காக மாலைத்தீவுகளில் உள்ள இந்திய பிரஜை ஒருவருக்கு சொந்தமான 12 மில்லியன் டொலர் பெறுமதியான மாளிகையொன்றையும் மூன்று மில்லியன் டொலர் பெறுமதியான மற்றுமொரு சிறிய மாளிகையையும் விற்பனை செய்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் The Maldives Journal செய்தி வௌியிட்டுள்ளது.

இணையத்தளத்தில் வௌியிடப்பட்டுள்ள செய்தி தொடர்பாக மலைத்தீவுகளின் சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷீட்டிடம் வினவியபோது,

இலங்கை அரசியல் தலைவர்களின் வௌியேற்ற உபாயத்தின் ஒரு பாத்திரத்தை வகிப்பதாக வௌியிடப்பட்டுள்ள பக்கசார்பான செய்திகளை முற்றாக நிராகரிக்கின்றேன். இந்த கடினமான காலகட்டத்தில் எப்போதும் நண்பர்களாக செயற்படுகின்ற நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் உதவிகளை பெற்றுக்கொடுப்பதுடன் மாத்திரம் எனது பொறுப்பு வரையறுக்கப்படுகிறது

என பதில் அளித்தார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தனது தந்தைக்கு நாட்டில் இருந்து வௌியேறவோ மாலைத்தீவுகளில் மாளிகை கொள்வனவு செய்யவோ எவ்வித நோக்கமும் இல்லை என நாமல் ராஜபக்ஸவின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized