அரசியல் யாப்பில் உள்ள அதிகாரங்களை 21 இன் மூலம் நிரந்தரமாக்க நாம் முயல வேண்டும் – ரெலோ

தெற்கின் அரசியல் நகர்வுகளில் கருத்து தெரிவிப்பதில் நேரத்தை வீணடிப்பதை தவிர்ப்பதே சிறந்தது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான இருபத்தியோராம் திருத்த சட்ட மூல பரிந்துரைகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட இருக்கின்றன.

ஒருவரிடத்தில் அனைத்து அதிகாரங்களும் குவிந்து இருப்பதை எதிர்த்து தமிழ்த் தேசியத் தரப்புகள் ஒருமித்த அறிக்கை ஒன்றையும் அண்மையில் வெளியிட்டிருந்தோம். ஜனாதிபதியின் எதேச்சாதிகாரப் போக்கை இல்லாதொழிக்க இது உதவும். நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்குவது ஜனநாயகத்தை உறுதி செய்யும்.

ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அல்லது பாராளுமன்றம் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வினை கடந்த காலங்களில் வழங்கத் தவறியுள்ளன. இந்த திருத்தங்கள் ஊடாகத் தமிழ் மக்களுக்கு உறுதியாகப் பெற்றுத் தரக்கூடிய அதிகார விடயங்களை தமிழ் அரசியல் தரப்பினர் கையாள முன்வர வேண்டும்.

சமர்ப்பிக்கப்பட இருக்கும் இருபத்தியோராம் சட்டத் திருத்தம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதோடு ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கக்கூடிய அதிகாரப் பகிர்வினை நிரந்தரமாகவும் மீீளப் பெறப்பட்ட அதிகாரங்களை மீண்டும் வழங்குவதற்கும் வழி செய்ய வேண்டும். ஏற்கனவே அரசியல் யாப்பில் கூறப்பட்ட அதிகாரங்களை வலுப்படுத்தி, மீள் நிறுத்தி முற்றாகப் பகிர்வதற்கு முன்மொழியப்பட இருக்கும் 21 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழ்த் தரப்புக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

புதிய அரசியல் யாப்பின் மூலமே இதைச் செய்யமுடியும், மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற பல சாக்கு போக்கினை ஆளும் தரப்பினர் சொல்ல முற்படுவார்கள். ஆனால் ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள விடயங்களை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்துவதற்கு புதிய அரசியல் யாப்பு அல்லது மக்கள் வாக்கெடுப்பு அவசியமில்லை. திருத்தங்களின் மூலமே அவற்றை செய்து கொள்ள முடியும்.

அரசியல் யாப்பில் இல்லாத நிறைவேற்று அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு 20 ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய போது மக்கள் வாக்கெடுப்பு தேவைப் படவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள விடயங்களை நடைமுறைப் படுத்துவதற்கு அல்லது அதிகாரங்களை வலுப் படுத்துவதற்கு மக்கள் வாக்கெடுப்பு தேவை எனக் கூறி தப்பித்துக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்?

புதிய அரசியல் யாப்பு, பொதுஜன வாக்கெடுப்பு என்பன நாம் கோருகின்ற நிரந்தரமான சமஸ்டி முறையான அரசியல் தீர்வை வழங்குவதற்கே அவசியம் என்பதை தமிழர் தரப்பு வலியுறுத்த வேண்டும்.

தெற்கிலே ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலைகளில் ஆர்வத்தோடு தினமும் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்து வருவது தமிழ் மக்களுக்கு நலன் பயக்காது. அங்கு ஆக்ரோஷத்தோடு எதிர்ப்பு கருத்து தெரிவிப்பதும் பிரேரணைகளை முன்வைப்பதும் அவர்களோடு கலந்துரையாடல்களில் ஈடுபடுவதும் ஒருபுறம் இருக்க கொண்டு வரப்பட இருக்கும் 21ம் திருத்தத்தில் ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள அதிகாரங்களை முற்றாக பகிர வலியுறுத்த நாம் முயல்வது ஆக்கபூர்வமானதாக அமையும்.

ஏற்கனவே அரசியல் யாப்பில் அதிகாரங்கள் பல வழங்கப் பட்டு உள்ளன. அவை நிரந்தரமாக்கப் படவும் இல்லை. பகிரப் படவும் இல்லை. முற்றாக நடைமுறைப் படுத்தப் படவும் இல்லை. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால் அரசியல் யாப்பில் உள்ள விடயங்கள் நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளியை காண்கிறோம். ஜனாதிபதி முறைமையில் அரசியல் யாப்பில் சொல்லப்பட்ட விடயங்களை அரசாங்கம் முற்றுமுழுதாக நடைமுறைப் படுத்துகிறது. ஆனால் அதிகாரப் பகிர்வு என்று வருகின்ற பொழுது இருப்பதையே நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் பின் நிற்கின்றது.

ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ளவற்றுக்கும் நடைமுறைப் படுத்துவதற்குமான இடைவெளியை சீராக்கி முற்றாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதை கையாள்வது எமது கடமை. ஏனெனில் எதிர்காலத்தில் சமக்ஷ்டி முறையான தீர்வு அரசியல் யாப்பில் கொண்டு வரப் பட்டாலும் அது நடைமுறைப் படுத்துதில் பாரிய சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ள நேரிடும்.

இந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில், சிறப்பாக ஒருமித்து நின்று கையாள்வதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் தயவுடன் அழைக்கின்றோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் – ரெலோ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த பிரதமர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

நிவாரணப் பொருட்கள் இன்று இலங்கை வந்தடைந்துள்ளன . அரசிடம் நிவாரணப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் இந்நாட்டு மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு சார்பில் அரிசி, பால் மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இலங்கைக்கு அனுப்புவதற்காக அரிசி, பால் மா , மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை தயார் செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன.

தமிழ்நாடு சார்பில் அரிசி, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் ´தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அன்புடன்´ எனும் வாசகங்கள் அச்சிடப்பட்ட மூட்டைகளில் பொட்டலமிடப்பட்டன. பின்னர் சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனைத்தும் கப்பல் மூலம் கடந்த 18ஆம் திகதியன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற கப்பல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

இலங்கையின் கடன்மீள்செலுத்துகை ஆற்றல் ‘டி’ நிலைக்குத் தரமிறக்கம்

வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகைகளை இடைநிறுத்துவதாகக் கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதையடுத்து இம்மாதம் 18 ஆம் திகதியுடன் சலுகைக்காலம் முடிவடையும் சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செய்யத்தவறியமையால் ஃபிட்ச் ரேட்டிங் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையைக் கடன்களை மீளச்செலுத்தமுடியாத ‘டி’ நிலைக்குத் தரமிறக்கியுள்ளது.

வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையை இடைநிறுத்துவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 12 ஆம் திகதி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் இலங்கையை ‘சி’ நிலைக்குத் தரமிறக்கியிருந்துது.

இந்நிலையில் தற்போது நாட்டை ‘சி’ நிலையிலிருந்து ‘டி’ நிலைக்குத் தரமிறக்கியுள்ள ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மீளச்செலுத்தப்படவேண்டிய வெளிநாட்டுப்பிணையங்களுக்கான கொடுப்பனவு மீளச்செலுத்தப்படாமையே அதற்குக் காரணம் என்றும் விளக்கமளித்துளளது.

அதேவேளை நியூயோர்க் நகரைத் தளமாகக் கொண்டியங்கும் மற்றுமொரு பிரபல கடன் தரப்படுத்தல் நிறுவனமான மூடீஸ் தரப்படுத்தல் நிறுவனம் கடந்த 19 ஆம் திகதி இலங்கையின் கடன் மீள்செலுத்துகை ஆற்றல் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி மீளச்செலுத்துவேண்டிய சர்வதேச பிணையங்களுக்கான சலுகைக்காலம் இம்மாதம் 18 ஆம் திகதியுடன் முடிவிற்கு வந்திருக்கும் நிலையில், அதற்குரிய கொடுப்பனவைச்செய்யத் தவறியிருப்பதன் காரணமாக இலங்கை முதன்முறையாக அதன் சர்வதேச பிணையங்களைச் மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.

வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையை இடைநிறுத்துவதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் பொருத்தமான செயற்திட்டத்துடன் இணைந்ததாக வெளிநாட்டுக்கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவிருப்பதாகவும் கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி இலங்கை அரசாங்கம் அறிவித்தைத்தொடர்ந்து, இலங்கை கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்படும் என்று நாம் எதிர்பார்த்தோம் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

21ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் நாளை(23) அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டமூலம் நாளை(23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இதில் இரட்டை பிரஜாவுரிமையை கொண்டவர்கள், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாத வகையில் திருத்தம் மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனைத்தவிர, தற்போதுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு மேலதிகமாக தேசிய கணக்காய்வு ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்வனவு ஆணைக்குழு என்பன சுயாதீன ஆணைக்குழுக்களாக திருத்தப்படும் எனவும் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை சுதந்திரமாகவும் பலப்படுத்தும் வகையிலும் 21ஆவது அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.

அரசியலமைப்பு சபையினூடாகவே மத்திய வங்கியின் ஆளுநரை நியமிப்பதற்கும் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது ​மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மக்களின் மனிதாபிமான நன்கொடை பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன

இலங்கைக்கு இந்தியா நன்கொடையாக வழங்கிய மேலும் 2 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான பொருட்கள் தாங்கிய கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளன.

மனிதாபிமான உதவியாக இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பால் மா, அரிசி மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் உட்பட 2 பில்லியன் ரூபா பெறுமதியான முதலாவது கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

குறித்த பொருட்கள் இலங்கையை இன்று வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்திய தமிழக மக்களால் வழங்கப்பட்டதும் இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பாரிய மனிதாபிமான உதவிப்பொருட் தொகுதியினை உயர் ஸ்தானிகர், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் இன்று கொழும்பில் கையளித்தார்.

இப்பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு.செந்தில் தொண்டமான், பிரதமரின் பணிக்குழாம் பிரதானி திரு.சாகல ரத்நாயக்க மற்றும் உணவுத்துறை ஆணையாளர் திருமதி ஜே.கிருஸ்ணமூர்த்தி உட்பட சிரேஸ்ட உத்தியோகத்தர்களும் ஏனைய பலரும் கலந்துகொண்டனர்.

9000 மெட்ரிக்தொன் அரிசி, 50 மெட்ரிக்தொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான மருந்து வகைகளும் ஏனைய மருத்துவப் பொருட்களும் இத்தொகுதியில் உள்ளடங்கியுள்ளன.

கடந்த மே 18ஆம் திகதி தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இந்த உதவிப்பொருட்களை சென்னை துறைமுகத்திலிருந்து கொடியசைத்து வழியனுப்பிவைத்தார். தமிழக அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் 16 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 40000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய பாரிய உதவித் திட்டத்தின் கீழ் இது முதற்தொகுதியாக அனுப்பி வைக்கப்படுகின்றது.

தற்போது கையளிக்கப்பட்டுள்ள இத்தொகுதி உதவிப்பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் உள்ளடங்கிய நாடளாவிய ரீதியிலுள்ள நலிவான மற்றும் தேவைகளை எதிர்கொண்டிருக்கும் பிரிவினருக்கு இலங்கை அரசாங்கத்தால் எதிர்வரும் நாட்களில் விநியோகிக்கப்படும்.

அத்துடன் இன்னும்பல மனிதாபிமான உதவித்திட்டங்களும் ஏனைய உதவிகளும் இந்தியாவிடமிருந்து வழங்கப்படவுள்ளன. இந்திய மக்களாலும் அரசாங்கத்தாலும் முன்னெடுக்கப்பட்டும் இவ்வாறான பல்பரிமாண திட்டங்கள், இலங்கைக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தினை சுட்டிக்காட்டுவதுடன் இலங்கை மக்களின் நலன்கள் மீது அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையினையும் பிரதிபலிக்கின்றன.

3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருளாதார உதவிகள், தடுப்பூசிவிநியோகம், சோதனை அலகுகள், கொவிட்-19 பெருநொய்க்கு எதிரான போராட்டத்துக்காக கிட்டத்தட்ட 1000 மெட்ரிக்தொன் திரவநிலை ஒட்சிசன் வழங்கியமை, கடல் அனர்த்தங்களை தணிப்பதற்காக இந்திய கடற்படை மற்றும் கரையோரக் காவல் படையால் வழங்கப்படும் உடனடி பதிலளிப்பு நடவடிக்கைக்கள் முதலான ஆதரவுகள் இலங்கைக்கு வழங்கப்படுகின்றன.

Posted in Uncategorized

இனப்படுகொலை நினைவு நாளாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கனடா அங்கீகரித்தமையை வரவேற்கிறோம் – ரெலோ

கனடா பாராளுமன்றம் கடந்த 19ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18 ம் திகதியை இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நாளாக ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.

உலகத்திலேயே முதல் அங்கீகாரம் வழங்கிய நாடாக கனடா அமைந்துள்ளது. இதை நாம் வரவேற்கிறோம். இந்த முயற்சிக்கு பின்னணியில் இருந்த புலம்பெயர் உறவுகளுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பிரேரணையை கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கரி ஆனந்தசங்கரி அவர்கள் பாராளுமன்றில் சமர்ப்பித்த வேளை ஏகமனதாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழிய குற்றங்களுக்கான நீதிக்கான போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரத்தின் முதல் படியாக இதை நாம் கருதுகிறோம்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் மற்றும் அட்டூழிய குற்றங்களுக்காக நீதியைக் கோரி பல வருடங்களாக எமது இனம் போராடி வருகிறது. கனடியப் பாராளுமன்றத்தின் இந்த அங்கீகாரம் எமது முயற்சிக்கு நம்பிக்கை தருவதோடு ஊக்கம் அளிப்பதாகவும் அமைந்திருக்கிறது.

இது போன்று ஏனைய நாடுகளில் வாழும் புலம்பெயர் உறவுகளும் எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழியக் குற்றங்களுக்கான சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை ஒருமித்து முன்னெடுக்க வேண்டும் என கோரி நிற்கிறோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் ரெலோ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Posted in Uncategorized

எதிரணி உறுப்பினர்களை விலைக்குவாங்கும் கலாசாரத்தை அரசாங்கம் நிறுத்த வேண்டும் – ஹக்கீம்

யுத்தத்தினால் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூறுவதற்கு கடந்த வருடம் தடை விதிக்கப்பட்ட போதும் இம்முறை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாலே நினைவேந்தல் நடைபெற்றது .இது ஒரு புதிய சமிக்ஜையை காட்டுகிறது . இதனை அங்கீகரிக்க வேண்டும்.

அத்துடன் அமைச்சு பதவிகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் அரசியல் கலாசாரத்தை அரசாங்கம் நிறுத்திக்கொள்ளவேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) மூன்றாவது நாளாக இடம்பெற்ற கடந்த 9ஆம் திகதி கலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்கவேண்டும் என பிரதமர் தெரிவித்திருந்தார். அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயார். அதேபோன்று அரசியல் தாமிகத்தையும் ஆளும் எதிர்க்கட்சியினர் பின்பற்றவேண்டும். குறிப்பாக அமைச்சு பதவிகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.

புதிய பிரதமரின் அரசாங்கத்தில் ஆரம்பத்தில் 15 அமைச்சர்கள் என்றார்கள் அதன் பின்னர் 18 என்றார்கள் ஆனால் தற்போது 22 அமைச்சர்கள் என கேள்விப்படுகின்றது. எதிர்க்கட்சியில் இருந்து உறுப்பினர்களை விலைக்கு வாங்கிக்கொண்டே இதனை செய்யப்பாேவதாகும் தெரியவருகின்றது.

பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி சபை ஒன்றை ஏற்படுத்தி நாட்டின் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம். அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயார். ஆளும் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு நாட்டை கட்டியெழுப்புவோம். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் அரசியல் கலாசாரத்தை நிறுத்தவேண்டும். இதந்த அறிவிப்பை ஜனாதிபதிக்கு தெரிவிக்குமாறு சபை முதல்வரை கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் கடன் செலுத்த முடியாமல் போயிருப்பதால் நேற்றில் இருந்து நாடு வங்குராேத்து என சட்டரீதியிலாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் யுத்தம் வெற்றிகொண்டு 13ஆவது வருடத்தை நாங்கள் கொண்டாடுகின்றோம். ஆனால் அதிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

காலிமுகத்திடலில் போராடும் மக்கள் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தி இருக்கின்றார்கள். புலிகள் அமைப்பில் இறந்தவர்கள் அதேபோன்று உயிர் நீத்த ராணுவ வீரர்களையும் ஒரே நேரத்தில் நினைவு கூர்ந்தனர்.

கடந்த வருடம் முள்ளவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றபோது ராணுவத்தினர் அதனை தடுத்து, அவர்களை சிறையில் அடைத்தார்கள்.

ஆனால் இந்த வருடம் காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவே உயிரிழந்தவர்களை நினைகூரும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதுதான் யுகமாற்றம், புதிய சமிக்ஜை. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த வழியில் நாங்கள் செல்வோம்.

அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவரின் உரைக்கு பின்னர் உரையாற்றியவர்களே ஆதரவாளர்களை தூண்டிவிடும் வகையில் செயற்பட்டனர்.

வன்முறையை தடுக்க தவறியது தொடர்பில் பொலிஸ்மா அதிபரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தென்னகோனும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி கொண்டிருக்கிறார்கள் .

அத்துடன் நீதிபதி தடை உத்தரவு பிரப்பிக்கவில்லை என தெரிவித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரதம நீதியரசருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இது நீதிமன்ற அவமதிப்பு என தெரிவித்து செயலாளருக்கு எதிராக வழக்கு தொடுக்குமாறு பிரதம நீதியரசர் சட்டமா அதிபருக்கு தெரிவித்திருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருக்கின்றது. இவை தவறான முன்மாதிரியாகும் என்றார்.

Posted in Uncategorized

இலங்கை உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவது அவசியம் – பிரிட்டன் அமைச்சர் தாரிக் அஹமட்

போரில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவது அவசியம் என்றும், இதுகுறித்து தமது அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட், அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதையும் முன்னிறுத்தி முக்கிய தரப்புக்களுடன் கலந்துரையாடுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் சுமார் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்றுவந்த யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டில் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர், மேமாதம் 11 – 18 ஆம் திகதி வரையான ஒருவாரகாலப்பகுதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாகவும், அவ்வாரத்தின் இறுதிநாளான 18 ஆம் திகதி போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாகவும் தமிழ்மக்களால் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது. அந்தவகையில் நேற்றைய முன்தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு காணொளியொன்றின் ஊடாகக் கருத்து வெளியிட்டிருக்கும் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கையில் தமிழர்கள் உள்ளடங்கலாக நாட்டுமக்கள் அனைவருக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்திய சிவில் யுத்தம் முடிவிற்குவந்து இன்றுடன் (நேற்று முன்தினத்துடன்) 13 வருடங்கள் பூர்த்தியடைகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் போரில் கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட மக்களுக்குரிய நீதியையும் பொறப்புக்கூறலையும் நிலைநாட்டுமாறு வலியுறுத்துவதில் நானும் பிரிட்டன் அரசாங்கமும் கொண்டிருக்கின்ற ஸ்திரமான நிலைப்பாட்டை மீளுறுதிப்படுத்துகின்றேன்.

பாதிக்கப்பட்ட தரப்பினர்மீது, குறிப்பாக அவர்களின் அன்பிற்குரியவர்கள் மற்றும் குடும்பத்தினர்மீது நாம் கரிசனைகொண்டிருக்கின்றோம். இவ்விடயத்தில் எமது 46ஃ1 தீர்மானம் முன்வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளடங்கலாக அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவது குறித்த பிரிட்டனின் நிலைப்பாட்டையும் மீண்டும் சுட்டிக்காட்டுகின்றேன். இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தும் அதேவேளை, போரின்போது இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்னேற்றகரமானதும் செயற்திறனானதுமான பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறும் வலியுறுத்துவோம்.

தற்போது இலங்கை பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றது. நாம் இலங்கையின் தற்போதைய நிலைவரங்களைத் தொடர்ச்சியாக அவதானித்துவரும் அதேவேளை, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமான உதவிகளை வழங்குவதையும் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதையும் முன்னிறுத்தி முக்கிய தரப்புக்களுடன் கலந்துரையாடுவதற்கும், இலங்கை அரசாங்கத்துடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கும் பிரிட்டன் அரசாங்கம் தயாராக இருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு ஜனநாயக ரீதியிலான செயற்திறன்வாய்ந்த தீர்வுகள் குறித்து ஒன்றிணைந்து ஆராயுமாறு அனைத்துக் கட்சிகளிடமும் வலியுறுத்துகின்றோம். அதேவேளை உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிசெய்வதில் விசேட அவதானம் செலுத்தியிருப்பதுடன், இலங்கை மக்கள் அனைவரினதும் சுபீட்சமான எதிர்காலத்தை உறுதிசெய்வதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும், அதனை முன்னிறுத்தி இணைந்து பணியாற்றுவதற்கும் தயாராக இருக்கின்றோம் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியில் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் உயர் அழுத்தம் மிகுந்த கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

‘கோட்டா – ரணில் சதி அரசாங்கத்தை விரட்டுவோம், முறைமையை மாற்றுவோம்’ எனும் தொனிப்பொருளிலான பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி அழகியற்கலை பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஆரம்பமானது.

ஆர்ப்பாட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் பொலிஸார் அவ்விடத்திற்கு சென்று அதனை நிறுத்துமாறு அறிவுறுத்தல் விடுத்தனர்.

எனினும், கொழும்பு நகர மண்டபம் , மருதானை, தொழில்நுட்ப சந்தியை தாண்டி ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு கோட்டையை சென்றடைந்தது.

இதற்கிடையில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கொழும்பு கோட்டை பகுதியிலுள்ள எந்தவொரு அரச நிறுவனங்களுக்குள்ளும் 5 வீதிகளுக்குள்ளும் பிரவேசிக்க முடியாதவாறு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கோரிக்கைக்கு அமைய, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய உத்தியோகபூர்வ இல்லங்களுக்குள் பிரவேசிப்பது , பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது, பொருட்களுக்கு சேதம் விளைவிப்பது, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது.

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாகக் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பொலிஸார் இதனைக் கூற
முற்பட்டபோது அங்கு இரு தரப்பினருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டதால், பொலிஸார் அங்கிருந்து ஓடிச்சென்றனர்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் உலக வர்த்தக மைய வளாகத்தை அடைந்தனர்.

இதன்போது, பொலிஸாரால் உயர் அழுத்தம் மிகுந்த கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் பல சந்தர்ப்பங்களில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டதை அவதானிக்க முடிந்தது.

அப்பகுதியில் தமது வேலைகளில் ஈடுபட்டிருந்த சாதாரண மக்களும் பொலிஸாரின் கண்ணீர்ப்புகை, நீர்தாரை பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டனர்.

மஹிந்த 2 ஆவது தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின் ஓய்வுபெற்றிருக்க வேண்டும் – சமல்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, இலங்கையின் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என அவரது சகோதரரும் பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவ்வாறு செய்யத் தவறியதன் விளைவாகவே தற்போதைய நிலைமைக்கு மஹிந்த ராஜபக்ஷ முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

“கிட்டத்தட்ட 50 ஆண்டுகால அவரது சிறப்பான அரசியல் சாதனைகள் மற்றும் பயணம் தற்போது தொலைந்து போயுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

அரசியலில் பிரவேசிப்பது மற்றும் ஈடுபடுவதுடன், மக்கள் சரியான நேரத்தில் விட்டுக்கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“நாம் அதிகாரம் மற்றும் அரசியல் பதவிகளுக்கு பேராசை கொண்டால், இன்று நாம் காணும் இத்தகைய விளைவுகளை சந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்று அவர் சுட்டிக்காட்டினார்.