”நோ ஃ.பையர் ஸோன்” ஆவணப்படத்தைப் பார்வையிடுமாறு சிங்கள மக்களை ஊக்குவிக்க இது சரியான தருணம் – கெலம் மக்ரே

பல்லின மக்களும் ராஜபக்ஷாக்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் அடங்கிய ‘நோ ஃபையர் ஸோன்’ என்ற ஆவணப்படத்தின் சிங்கள மொழிபெயர்ப்பை அனைவரையும் பார்க்கச்செய்யவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் அப்படத்தின் இயக்குநர் கெலம் மக்ரே, உண்மையே நீதிக்கான முதற்படி என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரின்போது தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றக்காணொளிகளுடன் கூடியதாக கெலம் மக்ரேவினால் தயாரிக்கப்பட்ட ‘நோ ஃபையர் ஸோன்’ என்ற ஆவணப்படம் 9 வருடங்களுக்கு முன்னர் ‘சனல் 4’ என்ற தொலைக்காட்சி சேவையில் வெளியாகி பாரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்திருந்தது.

தற்போது அந்த ஆவணப்படத்தை சிங்கள மக்களும் பார்வையிடவேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அப்பதிவில் அவர் மேலும் கூறியருப்பதாவது:

‘இலங்கையில் ராஜபக்ஷாக்களுக்கு எதிராக அனைத்துச் சமூகங்களும் கிளர்ந்தெழுந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், ‘நோ ஃபையர் ஸோன்’ (யுத்த சூனியவலயம்) என்ற ஆவணப்படத்தின் சிங்கள மொழிபெயர்ப்பை அனைத்து மக்களையும் பார்க்கச்செய்வதற்கு ஊக்குவிப்பது வரவேற்கத்தக்கதாகும். அதனை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும். உண்மை எதிர்காலத்திற்கு உதவும்’ என்று கெலம் மக்ரே அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து நேற்றைய தினம் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மற்றுமொரு பதிவைச் செய்திருக்கின்றார். ‘நோ ஃபையர் ஸோன்’ ஆவணப்படத்தின் சிங்களமொழிபெயர்ப்பை முதன்முதலாகப் பார்வையிடுகின்ற பலர் டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டுவருவதாக அப்பதிவில் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், ‘உண்மையே நீதிக்கான முதற்படி’ என்ற வசனத்துடன் அந்த ஆவணப்படத்தில் லிங்கைப் பதிவேற்றம் செய்திருக்கின்றார். அதனை அனைவருக்கும் பகிருமாறும் கேட்டுக்கொண்டிருக்கின்றார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் 4 ஆவது நாளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் வேலைத்திட்டம் மூங்கிலாறுப் பகுதியில் முன்னெடுப்பு

“கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்” என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மே 12 தொடக்கம் மே 18 வரை முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் வேலைத்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது .

அதன் நான்காவது நாளில் வடக்கு கிழக்கு வலிந்து காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டிலும் பொது அமைப்புகழும் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கு செயற்பாடு இன்று (15)முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

மே 12-மே 18 வரை தமிழினப்படுகொலை வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை யுத்தத்தில் தமிழ் மக்கள் உணவாக உட்கொண்ட உப்பு கஞ்சியை இந்த வாரத்தில் அனைத்து மக்களுக்கும் வழங்கி முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் கதையை கடத்துவதோடு இனப்படுகொலைக்கு நீதி கோரும் அங்கமாக இந்த கஞ்சி பரிமாறும் வேலைத்திட்டம் வடக்கு கிழக்கு மாகாணம் எங்கிலும் கடந்த 12 ஆம் திகதிமுதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .

Posted in Uncategorized

பொலிஸ் மா அதிபர் நேரில் அழைக்கப்பட்டு பொதுஜன பெரமுனவினர் கடும் விசனம் : ஜனாதிபதி கோட்டாவும் பாய்ச்சல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் உறுப்பினர்களுக்கும் இடையில் சனிக்கிழமை (14) நடைபெற்ற சந்திப்பின்போது பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன நேரில் அழைக்கப்பட்டு அவர் மீது கடுமையான விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற தொனியில் பொலிஸ்மா அதிபரைக் கடிந்து பேசியுள்ளார்.

இது தொடர்பில் தெரியவந்துள்ளதாவது,

கடந்த திங்கட்கிழமை அப்போது பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக ஒன்றுகூடியவர்கள் காலிமுகத்திடலுக்குச் சென்று அங்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக போரடிக்கொண்டவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியதால் பாரிய வன்முறைகள் ஏற்பட்டிருந்தன.

இந்த வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் தாமதித்து விட்டனர் என்ற குற்றச்சாட்டு பொலிஸ் மா அதிபர் முன்னிலையில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அசலுவலகங்கள் என்பன அடித்து நொருக்கப்பட்டதோடு, தீக்கிரையாக்கப்பட்ட நிகழ்வுகளும் அரங்கேறின.

அதனைவிடவும், முக்கியமான பொருட்கள் சூறையாடப்பட்டும் இருக்கின்றன.

இவ்வாறு நிலைமைகள் பாரதூரமடைகின்றபோது பொலிஸ்துறை அதனைக் கட்டுப்படுத்துவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுஜனபெரமுனவின் உறுப்பினர்கள் பொலிஸ்மா அதிபரிடத்தில் கேள்விகளைத் தொடுத்துள்ளனர்.

அதனையொத்த வினாவையே ஜனாதிபதி கோட்டாபயவும் பொலிஸ்மா அதிபரிடத்தில் கோரியுள்ளார்.

20-க்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர்

20 ஆம் திருத்தம் உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவளித்த நான்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று சந்தித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹாரிஸ், பைசல் காசிம், எம்.எஸ் தௌஃபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் நாட்டின் சமகால விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துரையாடியுள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்திற்கு இனி ஆதரவு வழங்குவதில்லையென இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் அறிவித்திருந்த நிலையில், எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக இதன்போது கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌஃபீக் தெரிவித்தார்.

Posted in Uncategorized

புதிய அமைச்சர்கள் 4 பேர் பதவியேற்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் 4 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

இதற்கமைய தினேஷ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர, ஜி.எல்.பீரிஸ் ஆகியோரே இவ்வாறு அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர்களாக புதிய பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

முழு அமைச்சரவை நியமிக்கப்படும் வரை பாராளுமன்றம் மற்றும் நாட்டின் பிற செயல்பாடுகளின் சட்டபூர்வமான தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி,

பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் – வெளிவிவகார அமைச்சர்,

தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்.

பிரசன்ன ரணதுங்க – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்.

காஞ்சனா விஜேசேகர – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்.

Posted in Uncategorized

எரிவாயு கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்

நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இன்று (14) பல பிரதேசங்களில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாவின்ன, கொம்பனித்தெரு, மட்டக்குளி ஆகிய பகுதிகளில் எரிவாயு வழங்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எரிவாயு விநியோகம் செய்யப்படும் என பொலிசார் அறிவித்ததையடுத்து, கொம்பனித்தெரு காவல் நிலையம் முன்பு ஏராளமானோர் திரண்டதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

Posted in Uncategorized

SLPP ரணில் தலைமையிலான அரசுக்கு ஆதரவு!

ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதியுடன் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

அரசியல் சூழ்நிலை குறித்து அநுரவுடன் கலந்துரையாடினார் அமெரிக்கத் தூதர்

அமெரிக்கத் தூதர் ஜூலி சங்க மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அமெரிக்க தூதர், நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து இதன்போது கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது ஜே.வி.பி.யின் விஜித ஹேத்தும் உடனிருந்தார்.

ரணில் விடயத்தில் தீர்மானமில்லை : மாவை, செல்வம், சித்தார்த்தன் தெரிவிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணை தலைவர்களான மாவை.சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் தத்தமது கட்சிகளும், கூட்டமைப்பும் பிரதமராக ரணில் நியமிக்கப்பட்டமை தொடர்பில் தாம் எவ்விதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா, குறிப்பிடுகையில்,

தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடத்திலும், அதன் பின்னர் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுவிலும் இவ்விடயம் ஆராயப்படும் என்று கூறினார்.

அதேவேளை, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமது கட்சியின் தலைமைக்குழு இவ்விடயம் தொடர்பில் கரிசனையைக் கொண்டுள்ளதாகவும் விரைவில் கூடித் தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்னர் கூட்டமைப்பாக தீர்மானம் அறிவிக்கப்படும் என்றார்.

மேலும், புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர், தத்தமது அரசியல் மற்றும் தலைமைக் குழுக்கள் இவ்விடயம் தொடர்பில் எவ்விதமான தீர்மானத்தினை எடுப்பது என்பது குறித்து கூடி ஆராயவுள்ளதோடு, கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் கூட்டத்திற்குப் பின்னர் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன ரணிலுக்கு ஆதரவில்லையாம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் புதிய பிரதமர் ரணிலுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ‘சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுக்கே ஆதரவளிப்பதென்று தீர்மானித்துள்ளோம். அதனை அவரிடத்தில் வெளிப்படுத்தியும் உள்ளோம்’ என்றார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை தொடர்பு கொள்வதற்கு எடுத்த முயற்சி பலனளிக்காத நிலையில் அக்கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஷாம் காரியப்பர் தமது கட்சியின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தினார்.

அவர், ‘ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக்கட்சியாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளநிலையில் அதே நிலைப்பாட்டுடன் பயணிக்கும். அத்துடன் ஜனநாயக விரோத நிலைப்பாடுகளை எமது கட்சி என்றும் எடுக்காது’ என்றும் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized