எரிவாயு கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்

நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இன்று (14) பல பிரதேசங்களில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாவின்ன, கொம்பனித்தெரு, மட்டக்குளி ஆகிய பகுதிகளில் எரிவாயு வழங்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எரிவாயு விநியோகம் செய்யப்படும் என பொலிசார் அறிவித்ததையடுத்து, கொம்பனித்தெரு காவல் நிலையம் முன்பு ஏராளமானோர் திரண்டதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

SLPP ரணில் தலைமையிலான அரசுக்கு ஆதரவு!

ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதியுடன் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் சூழ்நிலை குறித்து அநுரவுடன் கலந்துரையாடினார் அமெரிக்கத் தூதர்

அமெரிக்கத் தூதர் ஜூலி சங்க மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அமெரிக்க தூதர், நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து இதன்போது கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது ஜே.வி.பி.யின் விஜித ஹேத்தும் உடனிருந்தார்.

Posted in Uncategorized

ரணில் விடயத்தில் தீர்மானமில்லை : மாவை, செல்வம், சித்தார்த்தன் தெரிவிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணை தலைவர்களான மாவை.சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் தத்தமது கட்சிகளும், கூட்டமைப்பும் பிரதமராக ரணில் நியமிக்கப்பட்டமை தொடர்பில் தாம் எவ்விதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா, குறிப்பிடுகையில்,

தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடத்திலும், அதன் பின்னர் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுவிலும் இவ்விடயம் ஆராயப்படும் என்று கூறினார்.

அதேவேளை, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமது கட்சியின் தலைமைக்குழு இவ்விடயம் தொடர்பில் கரிசனையைக் கொண்டுள்ளதாகவும் விரைவில் கூடித் தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்னர் கூட்டமைப்பாக தீர்மானம் அறிவிக்கப்படும் என்றார்.

மேலும், புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர், தத்தமது அரசியல் மற்றும் தலைமைக் குழுக்கள் இவ்விடயம் தொடர்பில் எவ்விதமான தீர்மானத்தினை எடுப்பது என்பது குறித்து கூடி ஆராயவுள்ளதோடு, கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் கூட்டத்திற்குப் பின்னர் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன ரணிலுக்கு ஆதரவில்லையாம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் புதிய பிரதமர் ரணிலுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ‘சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுக்கே ஆதரவளிப்பதென்று தீர்மானித்துள்ளோம். அதனை அவரிடத்தில் வெளிப்படுத்தியும் உள்ளோம்’ என்றார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை தொடர்பு கொள்வதற்கு எடுத்த முயற்சி பலனளிக்காத நிலையில் அக்கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஷாம் காரியப்பர் தமது கட்சியின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தினார்.

அவர், ‘ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக்கட்சியாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளநிலையில் அதே நிலைப்பாட்டுடன் பயணிக்கும். அத்துடன் ஜனநாயக விரோத நிலைப்பாடுகளை எமது கட்சி என்றும் எடுக்காது’ என்றும் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

மஹிந்தவுக்கு ஏற்பட்ட கதியே ரணிலுக்கும் – “கோட்டா கோ கம” ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கைகளை முன்வைத்து எச்சரிக்கை !

காலி முகத்திடல் ‘கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் முதன் முறையாக தங்களின் கோரிக்கைகளை பகிரங்கப்படுத்தியுள்ளனர்.

காலி முகத்திடல் தாய்நாடு பிரஜைகளின் வலியுறுத்தல் யோசனை என சமூக நீதிக்கான இளைஞர் அமைப்பு குறித்த கோரிக்கைக்கு பெயரிட்டுள்ளனர்.

பல்வேறு காரணிகளை அடிப்படையாகக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இவரது அரசியல் வரலாற்றை நன்கு அறிவோம். முன்வைத்துள்ள கோரிக்கைகளை விரைவாக செயற்படுத்த வேண்டும் அதனை விடுத்து கடந்த காலங்களில் செயற்பட்டதை போன்று செயற்பட்டால் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஏற்பட்ட கதியே ஏற்படும் எனவும் குறிப்பிட்டனர்.

காலி முகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டக்களத்தில் நேற்று ஊடகசந்திப்பை நடத்தி தங்களின் கோரிக்கைகளை பகிரங்கப்படுத்தினர்.

குறித்த கோரிக்கையில் பல பிரதான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என்பது குறித்த கோரிக்கையில் பிரதானமாக உள்ளது.

வரையறுக்கப்பட்ட காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்தலுடன் அமைச்சரவையின் எண்ணிக்கையை குறைந்தப்பட்சம் 15 ஆக மட்டுப்படுத்தல் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்களை மீளாய்வு செய்தல் இரண்டாவது கோரிக்கையாகும்.

அரசியலமைப்பில் தேவையான திருத்தங்களை விரைவாக முன்னெடுத்தல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை முழுமையாக இரத்து செய்து அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை இரண்டு மாத காலத்திற்குள் அமுல்படுத்தல், 06 மாத காலத்திற்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்தல் முக்கியமானதாகும்.

பொருளாதார நெருக்கடியை விரைவாக முகாமைத்துவம் செய்தல், சொத்து விசாரணை மற்றும் வெளிப்படுத்தல் ,ராஜபக்ஷர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளினதும், அவர்களின் உறவினர்களின் சொத்து விபரங்கள் பகிரங்கப்படுத்தல்,வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்தல்,

சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தல்,வாழும் உரிமையை அடிப்படை உரிமையாக அரசியலமைப்பிற்குள் உள்ளடக்குதல் மற்றும் இடைக்கால அரசாங்கத்தை தொடர்ந்து இடம்பெறும் சகல தேர்தல்களும் சுதந்திரமாகவும், நீதியானதாகவும் நடத்தும் சட்ட திருத்தங்களை மேற்கொள்ளல் அவசியமாகும்.

Posted in Uncategorized

பொதுஜன பெரமுனவினர் ரணிலுக்கு ஆதரவு ? : மஹிந்தவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி ?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க கட்சியின் உயர் பீடம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கும் யோசனையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் சமர்ப்பிக்க பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பினர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க பொதுஜன பெரமுன கட்சி மட்டத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Posted in Uncategorized

10 கட்சிகள் தொடர்ந்தும் சுயாதீனமாக செயற்படும்

கடந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்த 10 கட்சிகளும் விசேட கலந்துரையாடல் ஒன்றை இன்று (13) நடத்தியிருந்தன.

ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் புதிய பிரதமருக்கு ஆதரவளிப்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் எதிர்க்கட்சியில் தொடர்ந்தும் இருந்து சுயாதீனமாக செயற்படுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அமையப்போகும் அரசாங்கத்தை சீர்குலைக்கும் எண்ணம் இல்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ரணிலின் அரசாங்கத்தில் பங்குதாரராக தயாரில்லை: சுதந்திரக் கட்சி அறிவிப்பு

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் அரசாங்கத்தின் பங்குதாரராக தாம் தயாரில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அமைச்சுப் பதவியோ அல்லது வேறு எந்த பதவியை பெற்றுக்கொள்ளும் எண்ணமில்லை என கட்சியின் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

புதிய அமைச்சுகளுடன் இணைந்து, அரசாங்கத்திற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடமிருந்தும் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்தும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் தமக்கு அழைப்பு கிடைத்ததாகவும் அது தொடர்பில் கட்சியினருடன் கலந்துரையாடி குறித்த தீர்மானத்திற்கு வந்ததாகவும் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறினார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ள தற்போதைய அரசாங்கத்தில் எவ்வகையிலும் பங்குதாரர் ஆவதில்லை கலந்துரையாடலின் போது தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

11 கட்சி உறுப்பினர்களும் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து தமது நிலைபாட்டை தெளிவுபடுத்தினர்.

இதன்போது கருத்து வௌயிட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச,

ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்த திடீர் பதவி கிடைத்தமைக்கு எதிர்க்கட்சிகளும் பொறுப்புக்கூற வேண்டும். ஆனால், ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படுவதன் மூலம் நாட்டின் தற்போதைய நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்ற முட்டாள்தனமான நம்பிக்கை எமக்கில்லை. பசில் ராஜபக்ஸ என்பவர் சால்வை அணியும் ரணில் விக்ரமசிங்க, ரணில் விக்ரமசிங்க என்பவர் Tie-Coat அணியும் பசில் ராஜபக்ஸ என்பதே எனது நிலைப்பாடு

என தெரிவித்தார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பிரதி தலைவர் டொக்டர் ராஜித சேனாரத்ன கூறினார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

ஜனாதிபதியை பதவி விலகுமாறு மக்கள் கோரி வரும் நிலையில், மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை பிரதமராக நியமித்தமை நாட்டிற்கு பாதகமானது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதியின் விசேட உரை

பாராளுமன்றில் பெரும்பாலான தரப்பினரது நம்பிக்கையை பெற்றுக்கொள்ளும் அதேபோல் நாட்டு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பிரதமரையும், அமைச்சரவையினையும் இவ்வாரத்திற்குள் நியமிப்பேன்.

அதேபோல் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீண்டும் செயற்படுத்தும் வகையிலான அரசியலமைப்பினை திருத்தவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார்.

நாடு தொடர்ந்து வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்க முடியாது.தேசிய பாதுகாப்பையும்,அரசியல் ஸ்தீரத்தன்மையை பேண்வதற்கும் பல தீர்மானங்களை முன்னெடுத்துள்ளேன்.பொது மக்கள் அமைதியான முறையிலும்,சிறந்த சிந்தனையுடனும் செயற்பட வேண்டும் என்பதை பொறுப்புடன் வலியுறுத்துகிறேன் எனவும் குறிப்பிட்டார்.

அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார்.

ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டதாவது,

நாடு வரலாற்று என்றுமில்லாத வகையில் பல சவால்களை எதிர்க்கொண்டுள்ளது.பொருளாதார நெருக்கடியினயால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் மற்றும் பொருளதார ஸ்தீரத்தன்மையற்ற நிலைமை தோற்றம் பெற்றுள்ளது.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளையும் ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு பல்வேறு தரப்பினர் தொடர்;ந்து வலியுறுத்தினார்கள்.குறித்த யோசனைகளுக்கு அமைய கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு பல தீர்மானங்களை முன்னெடுத்தேன்.

; அதற்கமைய கடந்த மாதம் ராஜபக்ஷர்கள் இல்லாத இளைஞர்களை உள்ளடக்கிய தற்காலிக அமைச்சரவையை ஸ்தாபித்தேன் அத்துடன் பிரதமரை நீக்கி புதிய பிரதமர் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தையும் ஸ்தாபிக்க இணக்கம் தெரிவித்தேன்.

இவ்வாறான பின்னணியில் கடந்த திங்கட்கிழமை எதிர்பாராத அசம்பாவிதம் இடம்பெற்றதை தொடர்ந்து நாடுதழுவிய ரீதியின் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றதால் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

குறுகிய நேரத்திற்குள் பலர் உயிரிழக்கும் வகையில் சம்பவங்கள் இடம்பெற்றதுடன், அரசியல்வாதிகளின் வீடுகளும் தீக்கிரையானது.

இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சி பேதமற்ற வகையில் கண்டனம் வெளியிட்டு முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்தேன்.

இச்சம்பவத்தினை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் சமூக கட்டமைப்பில் வன்முறை சம்பவங்கள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான சூழ்நிலையில் முப்படைகளின் தளபதிகளின் ஒத்துழைப்புடன் நாட்டின் அமைதியை பேண தீர்மானித்துள்ளேன்.நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தீர்மானங்களை செயற்படுத்துமாறு முப்படையினருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆகவே பொது மக்கள் வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட கூடாது.

நாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்,போராட்டங்களை தூண்டிவிடும் தரப்பினருக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.இதுவரையில் பதிவான விளைவுகள் மற்றும் இழப்புக்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன்,அரசியல் ஸ்தீரத்தன்மையினை தொடர்ந்து பேணுவதற்கு சகல கட்சிகளை தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளேன்.

நடைமுறையில் காணப்படும் நிலைமையை கட்டுப்படுத்தவும்,நாடு ஸ்தீரத்தன்மையற்ற நிலைமையில் இருந்து மீள்வதற்கும்,அரச கட்டமைப்பை முன்கொண்டு செல்வதற்கும் புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளேன்.

பாராளுமன்றில் பெரும்பாலான தரப்பினரது நம்பிக்கையை பெற்றுக்கொள்ளும் அதேபோல் நாட்டு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பிரதமரையும்,அமைச்சரவையினையும் இவ்வாரத்திற்குள் நியமிப்பேன்.

அதேபோல் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை மீண்டும் செயற்படுத்தும் வகையிலான அரசியலமைப்பினை திருத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.புதிய அரசாங்கத்தின் பிரதமருக்கு புதிய செயற்திட்டத்தை வழங்கி நாட்டை முன்கொண்டு செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பேன்.

அதேபோல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்யுமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டு நாடு ஸ்தீரமான நிலைமையினை அடைந்ததை தொடந்து அதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பேன்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டை தொடர்ந்து வீழ்ச்சிக்கு கொண்டு செல்லாமல் நாட்டு மக்களினதும்,அவர்களின் உடமைகளையும் பாதுகாத்து பொதுத்தன்மையுடன் செயற்படுமாறு அரச செயலொழுங்கின் சகல துறையினரிடனும் வலியுறுத்துகிறேன்.அதேபோல் அமைதியானவும்,சிறந்த சிந்தனையுடன் செயற்படுமாறு நாட்டு மக்களிடம் பொறுப்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.