போர்க்குற்றம் சாட்டப்பட்ட ஜகத் ஜயசூரியவை தடை செய்யுங்கள் – அவுஸ்திரேவியாவிடம் கோரிக்கை!

அவுஸ்ரேலியா வந்த சிறிலங்கா ஜெனரல் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த அவுஸ்ரேலிய காவல்துறையினர் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதேநேரம், அவுஸ்ரேலியாவின் புதிய மக்னெஸ்கி சட்டத்தின் கீழ் அவரை தடை செய்யும் நேரம் இதுவென மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

சிறிலங்காவின் ஓய்வுபெற்ற ஜெனரல் ஜகத் ஜயசூரிய சிறிலங்காவில் நடந்த கொடூர செயல்களுக்கு தலைமை தாங்கி நடாத்தியமைக்காகவும், அவுஸ்ரேலியாவிற்குள் அவரை விஜயம் செய்ய அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரை அவுஸ்ரேலிய காவல்துறை விசாரணை செய்யத் தவறியதைத் தொடர்ந்தும் அவர் மீது தடைவிதிக்குமாறு அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அவுஸ்ரேலியத் தமிழர்களும் மனித உரிமை அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அந்த அமைப்புக்கள் இணைந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரித்தானியாவுக்கும் ஏனைய அரசாங்கங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளைத் தொடர்ந்தே ஜயசூரியாவைத் தடைசெய்யவேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. மக்னிஸ்கை தடைகள் என்று அறியப்படும் அவுஸ்ரேலியாவின் புதிய மனித உரிமைகள் தடைச்சட்டத்தினைப் பயன்படுத்தி ஜயசூரியாவைத் தடைசெய்யுமாறு அவுஸ்ரேலிய அரசாங்கத்தை வலியுறுத்தும் 100 பக்கங்களைக் கொண்ட முதலாவது வேண்டுகை கடந்த 2022 மார்ச் 4ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.

2019ஆம் ஆண்டு மே இல் போர்க்குற்றவாளி என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஜகத் ஜயசூரியா தன் குடும்ப உறுப்பினர்களைச் சந்திப்பதற்காக அவுஸ்ரேலியாவுக்கு வந்ததுடன் மட்டுமன்றி மெல்போணில் நடந்த பொது நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கானசெயற்திட்டம், நீதி சர்வதேச நீதிக்கான அவுஸ்ரேலிய மையம், மனித உரிமைகள் சட்ட மையம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து அவுஸ்ரேலியச் சட்டத்திலுள்ள சர்வதேச சட்டஅதிகார வரம்பின் கீழ் ஜயசூரியா மீது அவசர குற்ற விசாரணையை நடத்துமாறு அவுஸ்ரேலிய கூட்டாட்சி காவல்துறைக்கு எழுதின.

தொடர்ந்து, கொடுமைகள், சித்திரவதைகளிலிருந்து உயிர்தப்பியவர்கள், சாட்சிகள் 40 பேருடைய ஒருதொகுதி வாக்குமூலங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை வரைவினையும் அவர்கள் சமர்ப்பித்திருந்தர்கள். குற்றஞ்சாட்டப்பட்டவர் சட்ட அதிகார வரம்பிற்குள் இருந்தும், அவர் மீண்டும் திரும்பவும் வருவதற்கான சாத்தியங்கள் இருந்தும் பாரதூரமான சர்வதேசக் குற்றச்செயல்கள் தொடர்பான அறிக்கைகளை சிரத்தை எடுத்து விசாரணை செய்யத் தவறியதன் ஊடாக பொறுப்புக்கூறலை சிறுமைப்படுத்துவதாக அவுஸ்ரேலிய கூட்டாட்சி காவல்துறை மீது இவ்வமைப்புக்கள் குற்றம் சுமத்துகின்றன.

கடந்த 2019 ஒக்ரோபர் பிற்பகுதியிலும் நவம்பரிலும் ஜயசூரியா மீண்டும் அவுஸ்ரேலியாவுக்கு வந்திருந்தார் என்றும், பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார் என்பதும் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அவுஸ்ரேலிய கூட்டாட்சி காவல்துறை, அவுஸ்ரேலிய உள்நாட்டு அலுவல்கள் திணைக்களம், கொழும்பிலுள்ள அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகரகம் ஆகியவற்றின் தவறான நடவடிக்கைள் மீது விசாரணை நடத்துமாறு இவ்வமைப்புக்கள் அழைப்பு விடுக்கின்றன.

அவுஸ்ரேலியாவில் விசாரணைக் குழு ஒன்று அவசரமாகத் தேவைப்படுகின்றது என்பதையே இப்பாரதூரமான தவறுகள் வெளிப்படுத்திக் காட்டுகின்றன. அதன் மூலமாக சர்வதேச குற்றச்செயல்கள் தொடர்பில் நிபுணத்துவம் வாய்ந்த விசாரணையாளர்கள் இவ்வாறான சூழ்நிலைகளில் விரைந்து செயற்பட்டு உடனடியாக பதில்தரமுடியும்.

2009 மே மாதத்தில் முடிவடைந்த சிறிலங்காவின் உள்நாட்டுப்போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றின் பாரதூரமான மீறல்களுக்கும் போர்க் குற்றங்களுக்கும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கும் இட்டுச்சென்ற பரவலான நடவடிக்கைகளுக்கு அல்லது தவறுகளுக்கு ஜயசூரியா பொறுப்பானவராவார்.

பின்வரும் நடவடிக்கைகளுக்கு அவர் அங்கீகாரம் வழங்கி, மேற்பார்வை செய்துள்ளார்:

-சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள்,

-பாதுகாக்கப்பட்ட நபர்கள், பொருட்கள் மீதான தாக்குதல்கள் கொலைகள் உட்பட சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் பாரதூரமான மீறல்கள்,

-பொதுமக்கள் கொலைகள்,

-வலிந்து காணாமல் ஆக்குதல் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள்,

2017 ஆகஸ்டில் ஜயசூரியா இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்குரிய தூதுவராகப் பணியாற்றிக்கொண்டிருந்த நேரத்தில் பிரேசில், சிலி, கொலம்பியா ஆகிய நாடுகளிலுள்ள வழக்குத் தொடுனர்களுடன் இணைந்து சர்வதேசஉண்மை மற்றும் நீதிக்கானசெயற்திட்டம் அவர் மீது குற்றவியல் வழக்குகளைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து அவர் சிறிலங்காவுக்குத் தப்பியோடினார்.

ஜயசூரியாவின் உடனடி குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகவும் தடைகளை நியமிக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் இந்த தடைக்கோரிக்கையில் உள்ளடங்கும். இது அவுஸ்ரேலியாவின் மக்னிஸ்கை சட்டத்தின் கீழ் உள்ளது.

ஜயசூரியாவின் குடும்ப உறுப்பினர்கள் அவுஸ்ரேலியாவில் தங்கியிருந்து இங்கு மூன்றாம் நிலை படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. சிறிலங்காவில் உள்நாட்டுப்போர் முடிந்து ஒரு தாசாப்தம் கடந்த நிலையிலும், போரில் இழைக்கப்பட்ட கொடூரங்களுக்குக் காரணமென எந்தவொரு சூத்திரதாரிகளும் தண்டிக்கப்படவில்லை. உலகளாவிய சட்ட அதிகார வரம்புக் கோட்பாடு என்பதைத் தாண்டி பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிர் தப்பியவர்களுக்கு எந்தவொரு பொறுப்புக்கூறும் பொறிமுறைகளும் இல்லை. ஆகவே, பொறுப்புக்கூறலில் காணப்படும் இவ்வெற்றிடத்தை நிரப்புவதற்கும், இந்த ஜெனரல்கள் அனுபவித்துவரும் தண்டனையிலிருந்து விலக்களிப்பினை இல்லாமல் செய்வதற்கும் இத்தடைகள் உதவும். இது சிறிலங்காவின் ஜெனரல்களைத் தடைசெய்யவேண்டிய நேரம் இது.

வன்னியின் பாதுகாப்பு வலயத்திலிருந்து உயிர்தப்பி வந்த செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பின்வருமாறு கூறினார்:

‘போரின் இறுதிக்கட்ட நேரத்தில் நான் ‘பாதுகாப்பு வலயத்தில்| இருந்தேன். நான் பயங்கர நிகழ்வுகளை நேரில் கண்டேன். போர் முடிந்து ஒரு தசாப்தம் கடந்துவிட்ட போதிலும், அதன் ஆறா வடுக்களும் மனப்பாதிப்புக்களும் இன்னமும் என்னுடைய வாழ்க்கையைப் பாதித்துக்கொண்டுதான் இருக்கின்றன. குற்றமிழைத்தவர்கள் எவ்விதமான வருத்தமும் இன்றி அல்லது தாம் செய்த தவறுகளுக்கு விமோசனம் தேடாமல், சுதந்திரமாகச் சுற்றித்திரிய முடியும் என்பதை நினைக்கும்போது எனக்கு வலிக்கின்றது. நீதிக்கான வேட்கையில், தவறு செய்பவர்களுக்குரிய இச்சலுகைகள் மறுக்கப்படவேண்டும்.’

தமிழ் அகதிகள் சபையைச் சேர்ந்த திரு. அரண் மயில்வாகனம் பின்வருமாறு கூறினார்:

‘சிறிலங்காவின் போரிலிருந்தும் அங்கு நடந்த சித்திரவதைகளிலிருந்தும் உயிர்தப்பி வந்த பல நூற்றுக்கணக்கானோர் எங்கள் சமூகத்தில் இருக்கின்றார்கள். இவர்களில் சிலர் அவுஸ்ரேலியக் குடிமக்களாக இருக்கின்றார்கள். இவர்களில் பலர் ஜகத் ஜயசூரியாவின் தலைமையின் கீழ் சிறிலங்கா இராணுவத்தின் குற்றச்செயல்களுக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து வந்து அகதித் தஞ்சம் கோரியவர்கள். அவர் செய்த குற்றச்செயல்களுக்கு எவ்விதமான விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படாமல் சுதந்திர மனிதராக அவுஸ்ரேலியாவில் அவரை அனுமதித்தது அபத்தமானது.

உயிர்தப்பியர்வகளுக்கு அவுஸ்ரேலியா செவிமடுத்து, ஒன்றில் அவரைத் தடைசெய்யவேண்டும் அல்லது அவர் மீது விசாரணை தொடரவேண்டும். சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா பின்வருமாறு கூறினார்:

‘சிறிலங்காவிலிருந்து வரும் போர்க் குற்றவாளிகள் என்று குற்றச்சாட்டப்பட்டவர்களுக்கு அவுஸ்ரேலியா ஒரு சொர்க்கபூமியாக இருக்கக்கூடாது – குறிப்பாக இங்கே வாழும் பெரியளவிலான தமிழ்ச்சமூகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனித உரிமைக் கடப்பாட்டினை மதிக்கவேண்டும் என்று தமது அரசாங்கத்தை எதிர்பார்க்கும் வேளையில் இது நிகழ்ந்துவிடக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது சொந்த நாடு நீதிவழங்க விருப்பமின்றி இருக்கும் நேரத்தில் அவர்களுக்கு உண்மையை நிலைநாட்டுவதற்கு சர்வதேச சமூகத்திற்கு முக்கியமான கருவியாக மக்னிஸ்கை சட்டங்கள் காணப்படுகின்றன.

‘சர்வதேச நீதிக்கான அவுஸ்ரேலிய மையம் அமைப்பின் நினைவேற்றுப் பணிப்பாளர் றவான் அரவ் பின்வருமாறு கூறினார்: ‘

ஜகத் ஜயசூரியா தான் இழைத்த குற்றங்களுக்காக ஒரு நாள் நீதிமன்றத்திற்கு பதில்சொல்ல வேண்டிவரும் என்று நாம் நம்புகின்ற அதேவேளையில், அவர் சிறிலங்காவில் நடந்த கொடுமைகளில் அவர் வகித்த வகிபாகத்திற்காக அவரை தடைசெய்ய வேண்டும் என்று நாங்கள் அவுஸ்ரேலியா அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கின்றோம். அவருடைய குற்றச்செயல்களில் பாதிகப்பட்டு உயிர்தப்பி வந்த பலர் அவுஸ்ரேலியாவை தாயகம் என்று அழைக்கின்றார்கள். இப்பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதுடன், பிரித்தானிய மற்றும் இதர நாடுகளுடன் இணைந்து சர்வதேசக் குற்றங்களுக்குப் பொறுப்பான ஜயசூரியா மீதும் இதர சிறிலங்காவின் ஜெனரல்கள் மீதும் தடைகளை விதிக்கவேண்டும்.’

‘பாரதூரமான ஒரு குற்றவியல் பரிந்துரையையும் அவுஸ்ரேலியாவில் போர்க்குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் சுதந்திரமாக நடமாடுகின்றார் என்ற எங்களது எச்சரிக்கையையும் கையாண்ட விதத்திற்கும் அவர்கள் இழைத்த தவறுக்கும் அவுஸ்ரேலிய ஃபெடரல் காவல்துறை பதில்கூறவேண்டும். அவர்களது இக்குழப்பத்தின் மீது ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும். பல தடவைகள் எவ்வாறு ஜயசூரியாவால

அவருடைய ஆட்பரிசோதனையைத் தாண்டி பல தடவைகள் அவுஸ்ரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார் என்பதற்கு உள்நாட்டு அலுவலகம் பதிலளிக்கவேண்டும்.

‘நாங்கள் அவுஸ்ரேலிய ஃபெடரல் காவல்துறையை எச்சரிக்கை செய்து ஐந்து மாதங்களின் பின்னரும் அவர் மீண்டும் அவுஸ்ரேலியாவுக்குள் வந்துள்ளார் என்பது மனித குலத்திற்கு எதிரான மிகக் கடுமையான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்து விசாரணை நடத்துவற்கான அவுஸ்ரேலியாவின் பொறுப்புக்கு விழுந்த ஒரு அவமானமாகும்.

அவுஸ்ரேலிய வாழ் தமிழ்ச் செயற்பாட்டாளராக மருத்துவர் சாம் பாரி பின்வருமாறு கூறினார்:

‘சிறிலங்காவில் நடந்த கொடுமைகளிலிருந்து உள்ளாகி உயிர்தப்பி இங்கு வந்துள்ள தமிழர்கள் அவுஸ்ரேலியாவை தயாகமாகவே அழைக்கின்றார்கள். இக்குற்றச்செயல்களில் ஈடுபட்ட சூத்திரதாரிகளை நீதியின்முன் கொண்டுவருமாறு அவுஸ்ரேலியத் தமிழ்ச் சமூகம் பல வருடங்களாக அறைகூறவல் விடுத்துவருகின்றது. இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்காக ஜயசூரியாவை விசாரணைக்குட்படுத்தத் தவறியதன் மூலமாக, பொறுப்புக்கூறலுக்கான உண்மையான ஒரு கட்டமைப்பினை ஒருபோதுமே ஏற்படுத்தாத சிறிலங்காவில் எப்படி அவர்கள் தண்டனைவிலக்கினை அனுபவிக்கின்றார்களோ அதேபோன்றே அவுஸ்ரேலியாவிலும் குற்றச்சாட்டப்பட்ட சூத்திரதாரிகள் தண்டனைவிலக்கினை அனுபவிக்கலாம் என்ற செய்தியையே அவுஸ்ரேலியா வெளியுலகுக்கு அனுப்புகின்றது.’

‘தனது சர்வதேச கடப்பாடுகளுடன் இணங்கிக்செல்வதற்காக ஒரு உண்மையான செயற்றிறன் மிக்க கட்டமைப்பினை அவுஸ்ரேலியா ஏற்படுத்தவேண்டும். விசாரணை செய்வதற்கான தன்னுடைய கடப்பாட்டிலிருந்து தவறியதன் ஊடாக, அவுஸ்ரேலிய அரசாங்கம் சிறிலங்காவில் கொடுஞ்செயல்களில் ஈடுபட்டார்கள் என்பதை காட்டும் நம்பகரமான ஆதாரங்கள் உள்ள ஜயசூரியா போன்ற நபர்களைத் தடைசெய்யவேண்டும்.

Posted in Uncategorized

ஜெய்சங்கர் சொல்லாமல், சொன்னது? – Elanadu Editorial

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய் சங்கர், கூட்டமைப்புடனான சந்திப்பின்போது, வழக்கத்திற்கு மாறாக ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கின்றார். அதாவது. அரசாங்கத்தின் அரசியல் யாப்பு முயற்சிகளுக்குள் சிக்கிவிடாதீர்கள். அண்மையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடிய விடயங்களை சம்பந்தன் பகிர்ந்து கொண்டபோதே, அவர் மேற்கண்ட வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

ரணில் – மைத்திரி ஆட்சிக் காலத்தில், புதியதோர் அரசியல் யாப்பு தொடர்பில் சம்பந்தன் தரப்பு, காலத்தை விரயம் செய்திருந்தது. சம்பந் தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஒருமுறை கூட சம்பந் தன் இந்தியாவுக்கு செல்லவில்லை. புதிய அரசியல் யாப்பு முயற்சி வெற்றியளிக்காது – காலத்தை விரயம் செய்யாமல், அரசியலமைப்பில் இருக்கின்ற 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்து, ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலான முயற்சிகளை செய்யுமாறு பலரும் கோரியிருந்தனர்.
பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. குறிப்பாக டி. பி. எல். எவ் தலைவர் சித்தார்த்தன், புதிய அரசியல் யாப்பில் தனக்கு நம்பிக் கையில்லை என்று தொடர்ச்சியாக கூறிக்கொண்டிருந்தார். ஆனால், சம்பந்தனும் சுமந்திரனுமே புதிய அரசியல் யாப்பு தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கையூட்டிக் கொண்டிருந்தனர்.

ரணில் – மைத்திரி கால சம்பந்தனின் அணுகுமுறை முற்றிலும் கொழும்பு மட்டும் போதுமானது என்னும் அடிப்படையில்தான் இருந் தது. இந்தியாவின் உதவி தேவையில்லை என்னும் அடிப்படையிலேயே சம்பந்தனும் சுமந்திரனும் செயல்பட்டுவந்தனர். ஆனால், அனைத்தும் தோல்விடைந்த நிலையிலேயே மீளவும் இந்தியாவின் தயவை நாடினர். இந்த அனுபத்திலிருந்தே ஜெய்சங்கர் இவ்வாறானதொரு கருத்தைத் தெரிவித்திருக்கின்றார்.

ஏற்கனவே, ரணில் – மைத்திரி கால அரசியலமைப்பு திட்டத்துக்குள் சிக்குப்பட்டு காலத்தை விரயம் செய்ததுபோல் மீளவும் செய்யாதீர்கள் – என்பதுதான் அவர் சொல்லா மல், சொன்ன செய்தி.

இலங்கையின் அரசியலமைப்பு பிரச்னையை வெறுமனே சட்டக் கண்கொண்டு நோக்கினால் அதிக விடயங்கள் விளங்காமலேயே போய்விடும். இலங்கையின் அரசியலமைப்பு விடயம் வெறும் சட்ட ரீதியில் தீர்க்கக் கூடிய பிரச்னையென்றால் பிரச்னைகள் எப்போதோ தீர்ந்திருக்கும். எனவே, விடயங்களை ஆழமாக விளங்கிக் கொண்டு, கூட்டமைப்பு, சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப விடயங்களைக் கையாள வேண்டும். முன்னைய அரசாங்கத்தில் எதிர்பார்த்த விடயங்கள் எவையும் நடைபெறாமல்போன பின்னர், இந்தியாவிடம் சென்றது போன்றல்லாமல், இந்தியா என்ன கூறுகின்றது – என்பதைத் துல்லிய மாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படுவது தொடர்பிலேயே கூட்டமைப்பினர் சிந்திக்க வேண்டும். ஜெய்சங்கர் அவ்வாறு கூறிய தற்கு பின்னால் பிறிதொரு விடயமும் உண்டு. அதாவது, அரசாங்கம்
தமிழர் பிரச்னையை ஓர் உள்நாட்டு பிரச்னையென்றவாறு வாதிட முயற்சிக்கின்றது.

தமிழர் பிரச்னையில் இந்தியாவின் தலையீட்டை நுட்பமாக தவிர்க்க விரும்புகின்றது. அரசாங்கத்தின் நகர்வுகளுக்குள் சிக்கிவிடாதீர்கள் – சிக்கிக் கொண்டால், எங்களால் எதுவும் செய்ய முடியாமல் போய்விடும். ஜெய்சங்கர் சொல்லாமல் சொன்ன இன் னொரு செய்தி இது.

புதிய அரசமைப்பு தொடர்பில் கவனமாக இருங்கள் – கூட்டமைப்புக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை!

புதிய அரசமைப்பு விடயத்தில் கவனமாக இருக்கவேண்டும் – எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்”, என்று தம்மை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர்.

மேலும், “13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமரிடம் கடிதம் மூலம் கோரிய 6 தமிழ்த் தேசியக் கட்சிகளின் விடயத்தையும் இந்தியா அங்கீகரிக்க வேண்டும்” என்று இதன்போது செல்வம் அடைக்கலநாதன் எம். பி. வலியுறுத்தினார் என்றும் ஈழநாடுவுக்கு அறியவந்தது.

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று சந்தித்தபோதே மேற்கண்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்திருந்தது. இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன், பங்காளிக் கட்சிகளான புளொட்டின் தலைவர் த. சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்திய தரப்பில் வெளிவிவகார அமைச்சருடன், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, அரசியல் விவகாரங்களுக்கான செயலர் பானு ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

சந்திப்பின் ஆரம்பத்திலேயே ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் கேட்டார்.

சந்திப்பு விடயங்களை விளக்கிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் 13ஆவது திருத்தத்தைக்கூட முழுமையாக நடைமுறைப்படுத்த அரச தரப்பு பின்னடிக்கிறது என்று சுட்டிக்காட்டினார். அத்துடன், சுமந்திரனை அது தொடர்பில் விளக்கமளிக்குமாறும் கூறினார்.

ஜனாதிபதியுடனான பேச்சின் அடிப்படை அம்சங்களான வடக்கு, கிழக்கு காணிகள் அபகரிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, அரசமைப்பு மூலமான தீர்வு, காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் விவகாரம், புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகள் என 5 விடயங்களையும் விவரித்தார்.

இதைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், “புதிய அரசமைப்பு விடயத்தில் கவனமாக இருங்கள். அதற்காகக் காத்திருக்காதீர்கள். அது முன்னரைப்போன்று இல்லாமலும்கூட இருக்கலாம். அத்துடன், புதிய அரசமைப்பு மூலம் தீர்வு காண முடியாத சூழல் கூட உருவாகலாம்”, என்று அறிவுறுத்தினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட சித்தார்த்தன் எம். பி., “புதிய அரசமைப்பு உருவாகும் என்று நம்பவில்லை. அப்படியே வந்தாலும் அது பழையதை விட மோசமாகவே இருக்கும். ஆனால், அரசியல் கைதிகள் விடுதலை, காணி அபகரிப்பு விடயங்கள் சாத்தியமாகும் என்று நம்புகிறோம். இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட விடயங்களை தொடர்ந்து முன்னெடுப்போம்”, என்றார்.

“இதுவே சரியான முறைமை”, என்று கூறி ஜெய்சங்கர் அதை ஆமோதித்தார்.

தொடர்ந்து செல்வம் அடைக்கலநாதன் எம். பி.“13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமரிடம் கடிதம் மூலம் கோரிய 6 தமிழ்த் தேசியக் கட்சிகளையும் இந்தியா அங்கீகரிக்க வேண்டும். இது தொடர்பாக இந்தியா இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை. எனவே, இதற்கு தகுந்த பதிலை வழங்கி ஆறு கட்சிகளுக்கும் அங்கீகாரம் வழங்கும் பட்சத்திலேயே, அவை தொடர்ச்சியாக ஒற்றுமையாக பயணிக்க முடியும் – இது தொடர்பில் அரசாங்கத்துக்கும் அழுத்தம் உருவாகும்”, என்று கூறினார்.

“இந்த விடயத்தில் அவதானம் செலுத்தப்படும்”, என்று ஜெய்சங்கர் இதன்போது உறுதியளித்தார்.

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம் – இந்திய வெளிவிவகார அமைச்சர் கூட்டமைப்பிடம் தெரிவிப்பு

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டாம், ஆனால் 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம் என இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.

பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் திங்கட்கிழமை (28) பிற்பகல் தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

பிற்பகல் 4.30 மணிக்கு கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

சுமார் அரைமணிநேரம் இடம்பெற்ற சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சளார் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொண்டனர்.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்க விடயங்களில் தாம் கூடிய அக்கறை செலுத்துவதாகவும், அதேபோல் அரசியல் அமைப்பு உருவாக்கம் தவிர்ந்து, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விடயங்களில் உண்மையை கண்டறிதல், வடக்கு கிழக்கு பகுதிகளில் காணி விடுவிப்பு மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்தும் அரச தரப்புடன் பேசியதாகவும் இது குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தியதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் எம்.பி ஆகியோர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அதேபோல் 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும், ஆனால் நீண்ட காலமாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் மீறப்பட்டு வருவதாகவும் சம்பந்தன் அவர்கள் எடுத்துக்கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு வழங்கிய கடிதம் தொடர்பில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் எனவும், அதற்கு பதில் தெரிவிக்க வேண்டும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து எம்மத்தியிலும் நம்பிக்கை இல்லை எனவும், ஆனால் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், ஒரு சில அரசியல் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படலாம் எனவும் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி கூறியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்துகொண்ட இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர், திங்கட்கிழமை காலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவை சந்தித்த வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து ஜனாதிபதி முழுமையாக தெளிவுபடுத்தியதாக சம்பந்தன் தரப்பிடம் தெரிவித்ததுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இப்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு நகர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் கூடிய நம்பிக்கை வைக்க வேண்டாம் எனவும், புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கும் இல்லையெனவும், 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தெரிவித்ததாக தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி வீரகேசரிக்கு தெரிவித்தார்.

அதேபோல் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்திலும் சில மாற்றங்கள் ஏற்படும் என்பது தமக்கும் தெரிவதாக கூறியுள்ள வெளிவிவகாரத்துறை அமைச்சர், தமிழர் தரப்பு இந்தியாவிற்கு அனுப்பிய கடிதம் குறித்து கேட்டறிந்துகொண்ட போதிலும் அதற்கு பதில் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இப்படியும் நடக்கிறது…! ஊர்க்குருவி

நேற்றைய தினம் இந்தப் பத்தியில் ஜனாதிபதி – கூட்ட மைப்பினருக்கிடையே நடைபெற்ற பேச்சு வரவேற்கப் படவேண்டிய ஒன்று என்ற கருத்தில் எழுதியிருந்தேன்.
அதனைப் படித்துவிட்டு, ஊர்க்குருவியின் தீவிர வாசகர்களில் ஒருவர், அரசியல்வாதி மாத்திரமல்ல, சிரேஷ்ட சட்டத்தரணிகளில் ஒருவர், தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

‘சந்திப்பின் மூலம் தமிழ் மக்களுக்கு நல்லது நடந்தால், நல்லதுதான். ஆனால், அது நடக்கும் முன்னர் இப்படி எழுதி நம்பிக்கையை வளர்க்காதீர்கள். நம்பிக்கைகள் பின் னர் தகர்ந்து கொட்டும்போது அதன் வலி இன்னும் அதிகமாகும்” என்று எச்சரித்தார்.

ஜனாதிபதி முன்னர் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்திலிருந்து அவரை அறிந்த ஒருவர், அவரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.

அவர் சொன்னது, நம்பிக்கை தருவதாக இருந்தது. அதுதான் அந்த நம்பிக்கை என்று விளக்கம் தந்தேன்.

‘பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாப யவுக்கும் ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் எத்தனை வித்தியாசம். அவரின் உடல்மொழியே மாறியிருந்தது’ என்று அந்த பிரமுகர் சொல்லியிருந்தார்.

‘சந்திப்பில் பல விடயங்கள் பேசப்பட்டன. சம்பந்தன் மேசையில் தட்டி பொங்கி எழுந்தார் என்று நீங்கள் மாத்திரமல்ல, எல்லா ஊடகங்களுமே வர்ணித்திருந்
தனவே” என்ற அவர், எதற்காக அவர் அவ்வாறு ஆத்திரமடைந்தார் என்பதை கவனித்தீர்களா? என்று கேட்டார்.

பதின்மூன்றை முழுமையாக நடைமுறைப்படுத்த அவர் கோரியபோது, அதில் சில பிரச்னைகள் இருக்கின்றன என்று வெளிவிவகார அமைச்சர் போராசிரியர் பீரிஸ், மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் விளக்க மளித்தபோது அவர் கோபமடைந்தது நியாயமான துதானே – என்றேன்.
நியாயமானதுதான், ஆனால், பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் என்பவற்றை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக அவர்கள் சொன்னபோதுதான் சம்பந் தனுக்கு கோபம் வந்திருக்கின்றது. இதில் ஏன் அவருக்கு கோபம் வந்தது?

இதை அன்றுதான் முதன்முதலாக ஆளும்தரப்பு சொன் னதா என்ன? இதைத்தானே முப்பது ஆண்டுகளுக்கும் மோலாக சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இப்போது மட்டும் ஏன் அவருக்கு கோபம் வந்தது?

நல்லாட்சி அரசாங்கம் இருந்த காலத்தில், புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருகின்றோம் என்று ஐந்து ஆண்டுகளை காலம்கடத்திய சம்பந்தன், அப்போதுஅதுவும் மைத்திரி பதவியேற்ற உடன் அந்த நூறுநாள் ஆட்சிக் காலத்திலேயே பதின்மூன்றை முழுமையாக நடைமுறைப்படுத்த அழுத்தம் கொத்திருக்கலாமே. அப் போதெல்லாம் இதனைக் கண்டுகொள்ளாத சம்பந்தன், இப்போது மாத்திரம் பொங்கி எழுவது ஏன் என்பதை யுமல்லவா ஊடகங்கள் கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என்று அந்த சட்டத்தரணி கேட்டபோது, அதற்கு இந்த ஊர்க்குருவியிடம் பதில் இருக்கவில்லை.

அது மாத்திமரமல்ல, மேசையில் ஓங்கி தட்டி, ‘எங் களை நாய்கள் என்று நினைக்கிறீர்களா? அப்படியெனில் நாங்கள் தனியாகச் செல்லவேண்டிவரும்’ என்று எச்சரிக்கை விடுத்தபோது, முன்னால் இருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அதுக்கென்ன போறதெண்டால் போகவேண்டியதுதானே என்பதுபோல சம்பந்தனைப் பார்த்தது அவருக்கு புரிந்திருக்குமோ என்னவோ?

அதுசரி, அது என்ன தனியாகச் செல்லவேண்டிவரும்? அப்படியெனில் தனியாகச் செல்லக்கூடிய நிலைமை இருந்தும், அவர் அப்படி தனியாக செல்லாமல் இப்போது இருந்துகொண்டிருக்கிறாரோ? என்று கேட்டுவிட்டு அந்தச் சட்டத்தரணி விடைபெற்றார்.
விடைபெற முன்னர், அவர் கேட்டதும் நியாயமானது தான், மிருசுவிலில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த இராணுவ சிப்பாயை பொதுமன்னிப்பில் விடுதலை செய்த ஜனாதிபதி, ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரையாவது உடன் பொதுமன்னிப்பில் விடுதலை செய்து தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கூட்டமைப்பினர் கேட்டிருக்கலாமே என்று கேட்டார். இப்படியும் நடக்கிறது…!

Posted in Uncategorized

இந்திய வெளிவிவகார அமைச்சர் கூட்டமைப்பு சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் அவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று பிற்பகல் இந்திய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

இதன் போது சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

தமிழரசுக்கட்சி , புளொட் – கோட்டாபய சந்திப்பின் உள்ளே வெடித்தது சர்ச்சை! பேசுவதற்கு அனுமதியில்லை

கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் போது அரசாங்கத்தினை சார்ந்தவர்கள் கூட்டமைப்பின் தலைவருக்கும், சுமந்திரனுக்கும் மாத்திரம் கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தினை வழங்கியிருந்ததுடன்,ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் தமிழரசுக்கட்சி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான பல விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சில விடயங்களை கூட்டத்தில் தெரிவித்து பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏனைய விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவிப்பார் என்று கூறிய கருத்தினை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருத்து தெரிவிப்பார்கள் என்றே தெரிவித்திருக்க வேண்டும்.

கூட்டத்தில் தனிநபரொருவரின் பெயரை மாத்திரம் குறிப்பிட்டமையானது கூட்டத்தில் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் குறித்து தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து ஒரு குழப்பமான சூழலை ஏற்படுத்த கூடும் என்பதற்காகவே இவ்வாறு செயற்பட்டதாகவே நான் கருதுகின்றேன்.

இதன்போது தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கருத்து தெரிவிக்க முற்பட்ட வேளையிலும் கூட ஒலிவாங்கி கொடுக்கப்படவில்லை,ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்க முற்படும் போது அதற்கு சுமந்திரன் தடை விதித்திருந்தமை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பதவி விலகும் எண்ணமில்லை – மஹிந்த பகிரங்க அறிவிப்பு!

தாம் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக சமூக வலைத்தளங்களில் தற்போது பரப்பப்படும் பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு பதவியை இராஜினாமா செய்யவோ அல்லது மாற்றவோ தேவையில்லை என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள், அரசாங்கத்தின் மீது கடுமையான விரக்தியில் உள்ளனர்.

போராட்டங்களை முன்னெடுத்துள்ள மக்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகுமாறு கோரியுள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக போவதாக செய்திகள் பரப்பப்பட்டன.

இதனிடையே, மஹிந்த ராஜபக்ஷவே அடுத்த பிரதமராக வர வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மார்ச் 24ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனாதிபதி தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்த நிலையில் அதனைத் தொடர்புபடுத்தி குறித்த செய்திகள் பரப்பப்பட்டன.

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் எளிமையான முறையில் திறந்து வைப்பு!

இலங்கை – இந்திய நட்புறவின் சின்னமாக இந்திய அரசின் 1.6 பில்லியன் நிதியுதவியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று எளிமையான முறையில் திறந்து
வைக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் பிற்பகல் ஒரு மணியளவில் காணொளி முறையில் திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்கள் மதகுருமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண பண்பாட்டு மையம் வெகுவிமரிசையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்ட பின்னரே பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவிடம் இருந்து மேலும் ஒரு பில்லியன் டொலர் கடன்?

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனாக இந்தியாவிடம் கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விடயம் இரண்டு தரப்பினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ரெய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனவரி 2020 முதல் இன்று வரை, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் 70% குறைந்துள்ளது.

இதனால், டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது.