“நாட்டை சீரழிக்காதீர்கள் ” அவுஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்தில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்

“நாட்டை சீரழிக்காதீர்கள் ” எனத் தெரிவித்து கோட்டாபய அரசுக்கு எதிராக ஒன்றுதிரண்ட சர்வதேசத்திலுள்ள சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலுள்ள இலங்கையர்களாலும் இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் தற்போதைய நிலையை கண்டித்து அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண், சிட்னி, பிரிஸ்பேர்ன் மற்றும் பேர்த் போன்ற நகரங்களில் கூடிய சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

மக்களின் தேவைகளைப் புறக்கணித்து பொறுப்பில்லாது உணர்வற்று சுயநலமாக செயற்படுகின்றது அரசாங்கம் – பேராயர்

நாட்டின் அரசியல் தலைவரை மாற்றி அமைத்தால் மாத்திரம் போதாது. எமது நாட்டிலுள்ள சட்ட ஏற்பாடுகள் மற்றும் வியூகங்கள், கொள்கைகள் என அனைத்தையும் மாற்றி அமைக்க வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து புதிய பயணமொன்றை ஆரம்பிக்க வேண்டும். இல்லையென்றால் நாடு இன்று எதிர்கொண்டுள்ள தேசிய பிரச்சினைகள் மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியாது என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக பாரியளவில் சிக்குண்டு அல்லறும் மக்கள் மீது மேலும் அழுத்தங்களை திணிக்காதிருக்கும்படி அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதுடன், ஜனநாயக ரீதியாகவும் , அகிம்சை வழியிலும் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டும் மக்களின் முயற்சிகளை ஒடுக்காமல் இருக்குமாறும் மக்களுக்கான தேவைகளை தங்களது பொறுப்புணர்ந்து அரசாங்கம் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

“இந்நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் பலரும் துன்ப துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் எமது நிலைப்பாட்டை தெரிவிப்பது எனது தார்மீகக் கடமையாகும்.

நீண்ட காலமாக மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புறக்கணித்து வருகின்ற அரசாங்கமானது, பொறுப்பற்றதும் உணர்வற்றதுமான சுயநலமான விதத்தில் செயற்பட்டு வருகிறது.

மக்கள் பல்வேறு விதமான சோதனைகளையும் துன்பங்களையும் எதிர்கொண்டிருக்கின்ற இவ்வேளையில், கத்தோலிக்க திருச்சபையானது துன்பப்படுகின்ற மக்களுக்கும் ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கும் என்றென்றும் ஆதரவாக இருக்கும்.

அத்தியவசியப் பொருட்களில் விலையேற்றம் மற்றும் சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியாது நீண்ட வரிசைகளில் மக்கள் தவித்து வருகின்றமை கவலையளிக்கிறது. இந்த துரதிஷ்ட வசமான சூழலிலும், லஞ்சம், ஊழல் என்பன தொடர்ந்து கொண்டே உள்ளன.

பொதுச் சொத்துக்கள் , தேசிய வளங்கள் கண்டுகொள்ளப்படாமல் விற்கப்படுகின்றன. மக்களிடம் கருத்துக்களைகூட கேட்பதில்லை.

பொது மக்கள் பலரும் மனச்சோர்வடைந்து வாழ்க்கைச் சிக்கல்களால் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதால், ஆட்சியாளர்கள் சூழ்நிலையை உணர்ந்து விரைவில் தீர்வொன்றை கொண்டு வர வேண்டியது அவசியமாகும்.

சுதந்திர அரச நிறுவனமான மத்திய வங்கி, அரசியல் தலைவர்களது கைக்கூலிகளாக மாறியுள்ளது. வெளிப்படைத்தன்மை இல்லாத நியாமற்ற மற்றும் தன்னிச்சையான ஆட்சியையே இன்று நாம் பார்க்கின்றோம்.

அனைத்து அரச நிறுவனங்களையும் சுதந்திரமாக இயங்கச் செய்ய வேண்டும். இதில், அரசியல்வாதிகளின் கூட்டாளிகளை அகற்றி, துறைசார் நிபுணர்களை நியமித்து அரச நிறுவனங்களை சுதந்திரமாக இயங்க செய்ய வேண்டும்.

மேலும், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல், தன்னிச்சையான துன்புறுத்தல்கள் மற்றும் பொது மக்கள் மீதான தாக்குதல்களை எதிர்க்கின்றோம். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்களது கடமைகளை மேற்கொள்வதற்கு இடமளிக்க வேண்டியது அவசியமாகும் ” என்றார்.

Posted in Uncategorized

எதிர்ப்பு தெரிவிக்க இலங்கையர்களுக்கு உரிமை உண்டு: அமெரிக்க தூதுவர்

இலங்கையர்களுக்கு அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது, இது ஜனநாயக வெளிப்பாட்டிற்கு அவசியமானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்,

“நான் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன், மேலும் வரும் நாட்கள் அனைத்து தரப்பிலிருந்தும் கட்டுப்பாட்டைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன், அத்துடன் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைப்பது மிகவும் தேவையானது” என்று அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள நிலையிலேயே தனது டுவிட்டர் பக்கத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இதனைத் தெரிவித்துள்ளார்.

US ambasy

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவு

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, மக்களின் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், இலங்கையில் நேற்று நள்ளிரவில் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார் அந்நாட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. நேற்று முன்தினம் நள்ளிரவில் ஜனாதிபதி வீட்டின் முன் நடைபெற்ற மக்கள் போராட்டம் வன்முறையாக மாறிய ஒருநாளில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அவசரகால நிலைமை நிலவுவதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல், பொதுமக்கள் வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகள் என்பவற்றைப் பேணுவதற்காக இவ்வாறு செய்தல் உசிதமானது என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இலங்கையின் கடன் அதிகமாகி, அந்நியச் செலாவணி கையிருப்பு தீர்ந்துபோனதால் இலங்கை இத்தகைய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா போன்ற நாடுகளில் கூடுதலாகக் கடன் வாங்குகிறது. சர்வதேச செலாவணி நிதியத்திடம் கடன் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் இறக்குமதியை நம்பியிருப்பதால், அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு கோழித் தீவனம்கூட அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. பால்மாவு, சர்க்கரை, முட்டை, பெட்ரோல், டீசல், எரிவாயு என முக்கியமான பொருள்கள் அனைத்தும் விலை உயர்ந்திருக்கின்றன.

நாட்டின் முக்கியமான மின் உற்பத்தி நிலையங்கள் டீசலில் இயங்கக் கூடியவை என்பதால், அவையும் உற்பத்தியைக் குறைத்திருக்கின்றன அல்லது மூடப்பட்டிருக்கின்றன. இதனால் நீண்ட நேர மின்வெட்டும் ஏற்படுகிறது. அதிகபட்சமாக, வியாழக்கிழமை மாலையில் டீசல் கிடைக்காததால், பெரும்பாலான இடங்களில் அதிகபட்சமாக 13 மணி நேர மின்வெட்டுக்குள்ளாயினர். இந்த நெருக்கடி காரணமாக பல நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களை வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டன.

பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பொருளாதார நெருக்கடியைத் தடுக்கத் தவறியதாக, ஜனாதிபதி பதவி விலகக் கோரி நேற்று முன்தினம் இரவு இலங்கை நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதையடுத்து, அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி பிரயோகமும் செய்தனர்.

இந்த போராட்டம் தொடர்பாக ஒரு பெண் உட்பட இதுவரை 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறையில் காவல்துறை தரப்பில் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை ஜீப் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தையடுத்து, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொடை ஆகிய பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தைப் பிறப்பித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. இதுகுறித்து ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனாரத் நேற்று நள்ளிரவு வெளியிட்ட அறிவிப்பில், “பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரத்திற்கான பொருட்கள் மற்றும் சேவைகளை நிர்வகிக்கவும் இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று (ஏப்ரல் 1) நள்ளிரவில் வெளியானது.

நாட்டிலுள்ள சாதாரண சட்டம், இந்த அறிவித்தலின் ஊடாக இல்லாது செய்யப்படும் என சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தெரிவிக்கின்றார்.

இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதன் ஊடாக, கூட்டம் கூடுவதற்கான சுதந்திரம், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான சுதந்திரம் இல்லாது போகும் என அவர் குறிப்பிடுகின்றார்.

அவசரகால சட்டத்தின் ஊடாக, 3 மாத காலத்திற்கு சந்தேகநபராக அடையாளம் காணப்படும் ஒருவர் தடுத்து வைக்கப்படலாம் என அவர் கூறுகின்றார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதும் பட்சத்தில், எந்தவொரு நபரையும் கைது செய்யும் அதிகாரம் இந்த சட்டத்தின் ஊடாக பாதுகாப்பு பிரிவிற்கு கிடைக்கும்.

இந்த சட்டமானது, மிகவும் பாரதூரமான சட்டம் என வழக்குரைஞர் இளையதம்பி தம்பையா தெரிவிக்கின்றார்.

இதேவேளை, பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகள், பொதுமக்களுக்கான சேவைகளை உரிய முறையில் வழங்குவதே இந்த அறிவிப்பின் நோக்கம் என சிரேஷ்ட சட்டத்தரணியும், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான பிரதீபா மஹனாமஹேவா தெரிவிக்கின்றார்.

அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் தற்போது குறைபாடுகள் காணப்படுவதாக கூறிய அவர், அதை பெற்றுக்கொள்ள முடியாதமையினால் மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிடுகின்றார்.

இதனூடாக பொது சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.

ஒரு விதத்தில் இந்த அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டமையானது இந்த சந்தர்ப்பத்தில் சிறந்தது என அவர் குறிப்பிடுகின்றார்.

பொதுமக்களுக்கான சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உரிய முறையில் இந்த சட்டத்தின் ஊடாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறுகின்றார்.

எனினும், இந்த சட்டத்தின் ஊடாக பொதுமக்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்யும் சுதந்திரம் பறிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் பட்சத்தில், உயர்நீதிமன்றத்தை நாட முடியும் என சிரேஷ்ட சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா தெரிவிக்கின்றார்.

பிபிசி தமிழ்

Posted in Uncategorized

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் நானே: சுமந்திரனின் கருத்தை நிராகரித்தார் மாவை!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் நான். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். கூட்டமைப்பிலிருந்து எந்த கட்சியையும் வெளியேற்றுவது பற்றி நாம் சிந்திக்கவேயில்லை. மாறாக, பங்காளிக்கட்சிகள் மேலும் கூட்டாக எவ்வாறு முடிவெடுத்து செயற்படுவது என்பது தொடர்பாகவே 3 கட்சிகிளின் தலைவர்களும் பேசி வருகிறோம் என தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறினால் மகிழ்ச்சி என, அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

கூட்டமைப்பை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்ற நீண்ட விமர்சனங்கள் சுமந்திரன் மேல் உள்ள நிலையில், இந்த கருத்தும் வெளியாகியிருந்தது.

எனினும், அவரது கருத்தை கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா நிராகரித்திருக்கிறார்.

மாவை சேனாதிராசாவை தமிழபக்கம் தொடர்பு கொண்டு வினவியபோது,

கூட்டமைப்பிலிருந்து எந்த கட்சியும் வெளியேற வேண்டுமென நாம் எதிர்பார்க்கவில்லை. எந்த கட்சியையும் வெளியேற்ற நடவடிக்கையெடுக்கவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள மூன்று கட்சிகளும் ஒன்றுபட்டு தீர்மானங்கள் எடுக்க வேண்டுமென்றே நாம் கலந்துரையாடி வருகிறோம். இந்த விவகாரங்களை பகிரங்கமாக பேசி வீணாண சிக்கல்களை ஏற்படுத்த முனைபவர்கள் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் நான்தான். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். எந்த ஒரு கட்சியையும் வெளியேற்றி, கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதை பற்றி நாம் சிந்திக்கவில்லை. பேசவும் இல்லை என்றார்.

Posted in Uncategorized

புலிகளுடன் இணைந்து கூட்டமைப்பை நாமே உருவாக்கினோம்; கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தகுதி சுமந்திரனுக்கு உள்ளதா?: ரெலோ சுடச்சுட பதிலடி!

விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவ்கள் நாமே. விடுதலைப் புலிகளை வன்முறையாளர்கள் போல காட்டிக் கொள்ளும் சுமந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் அங்கம் வகிக்கும் தகுதியுள்ளதா என கேள்வியெழுப்பியுள்ளார் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குலைக்கிறார் என எம்.ஏ.சுமந்திரன் மீது நீண்டகாலமாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபயவை சந்திப்பதில்லையென ரெலோ எடுத்த முடிவை சுமந்திரன் பகிரங்கமாக விமர்சித்து வருகிறார். நேற்று வவுனியாவில் நடந்த நிகழ்வொன்றின் பின்னர் கருத்து தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறினால் சந்தோசமடைவேன் என கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாவை காப்பாற்ற எமது கட்சி வராததால் சுமந்திரன் ஏன் பதற்றமடைகிறார், கடந்த நல்லாட்சி காலத்திலும் ரணிலை காப்பாற்ற இதுபோலவே ‘விழுந்து விழுந்து’ பணியாற்றினார் என ரெலோ ஆதாரவாளர்கள் சமூக ஊடகங்களில் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், எம்.ஏ.சுமந்திரனின் கருத்திற்கு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று பதிலளித்துள்ளார்.

தமிழ்பக்கம் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது,

”தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழீழ விடுதலை இயக்கம் விலகிச் சென்றால் தமிழ் அரசு கட்சி சந்தோசப்படும் என சுமந்திரன் தெரிவித்திருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகி, 10 வருடங்களின் பின்னரே சுமந்திரன் கட்சிக்குள் வந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில் ரெலோ முக்கிய பங்காற்றியிரு;தது. கிழக்கில் உள்ள தமிழ் அரசு கட்சியின் பிரமுகர்கள் பலருக்கும் அது தேரியும்.

ஆயுதப் போராட்டத்தை வன்முறையென சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். வன்முறையை ஏற்கவில்லையென்றும் குறிப்பிட்டார்.

சுமந்திரன் வன்முறையென குறிப்பிடும் வே.பிரபாகரனின் ஆசீர்வாதத்துடனேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த கூட்டமைப்பில் சுமந்திரன் எப்படி அங்கம் வகிக்க முடியும்.

இதேவேளை, சுமந்திரனின் கருத்து தமிழ் அரசு கட்சியின் கருத்தா என்பதை அந்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், சுமந்திரனின் கருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தை என்பதை இரா.சம்பந்தன் தெளிவுபடுத்த வேண்டும்.

போராட்டத்திலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திலும் ஒரு துளியளவு பங்களிப்பையும் செலுத்தாதவர் சுமந்திரன். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் அனைவருக்கும் முன்பாகவே எமது முடிவை அறிவித்தோம். எமது முடிவு ஜனநாயகரீதியிலானது என இரா.சம்பந்தனும் தெரிவித்திருந்தார்.

சுமந்திரன் பல தடவைகள் சீண்டிய போதும், நாம் உருவாக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமை பாதிக்கப்பட கூடாது என்பதற்காக மௌனம் சாதித்தோம். இப்பொழுது சுமந்திரன் சொன்ன கருத்து பாரதூரமானது. அதற்கு பதிலடி கொடுப்போம்.

எம்மை துரோகிகள் போல சுமந்திரன் பொய்யான கருத்தை தெரிவித்திருந்தார். நாம் துரோகிகளாக புலிகளால் பார்க்கப்பட்டிருந்தால், கூட்டமைப்பை உருவாக்கும் பணியை புலிகள் எம்மிடம் தந்திருக்க மாட்டார்கள்.

விடுதலைப் புலிகளும், ரெலோவும் எப்படி அன்னியோன்யமாக செயற்பட்டார்கள் என்பது வரலாறு தெரிந்தவர்களிற்கும், விடுதலைப் புலிகளின் மூத்த போராளிகளிற்கும் நன்கு தெரியும். வவுனியாவில் புலிகளுடன் சேர்ந்து செயற்படுவதாக கூறி, எமது உறுப்பினர்களும், அலுவலகங்களும் தாக்கப்பட்டிருந்தன.

எம்மையும் புலிகளையும் பற்றி பேசும் தகுதி சுமந்திரனுக்கு கிடையாது” என்றார்.

Posted in Uncategorized

தரகராக செயற்பட வேண்டாம்! – லண்டனில் இருந்து சுமந்திரன் எம்.பிக்கு வேண்டுகோள்

இலங்கை அரசாங்கத்தின் தரகராக செயற்பட வேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து வெளியாகும் விடுதலைப் புலிகள் அமைப்பு சார்பான இணையத்தளம் ஒன்றினால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதான தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் சார்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எம்.ஏ.சுமந்திரனுக்கு அதிகாரம் இல்லை என குறித்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியல் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எம்.ஏ. சுமந்திரன் லண்டன் வந்த போது தமிழ் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிச் சென்றதாகவும் அந்த இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை முழுமையாக இழக்கப்பட்டுள்ளது : ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் – ஞானசார தேரர்

அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை முழுமையாக இழக்கப்பட்டுள்ளது. அதனை மீளக் கட்டியெழுப்ப முறையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஆளும் மற்றும் எதிர்தரப்பிலுள்ள சகல பொருளாதார நிபுணர்களையும் ஒன்றிணைத்து விசேட குழுவொன்றை நியமித்து, நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வழியை ஆராய வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

ராஜகிரியவிலுள்ள ஸ்ரீ சத்தர்ம ராஜினகா விகாரையில் நேற்று வியாழக்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளின் உண்மை நிலைவரம் என்ன என்பது தொடர்பிலும் , அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பிலும் அரசாங்கம் முழுமையான அறிவிப்பொன்றை வெளியிட வேண்டும். அதனை விடுத்து ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டிருப்பது பொறுத்தமற்றது,

எரிபொருளை விநியோகிப்பதற்கு முறையான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறில்லை என்றால் மக்கள் பதற்றமடைந்து, அவர்கள் வீதிக்கு இறங்கி போராட தொடங்கினால் பிரச்சினைகள் மேலும் உக்கிரமடையக் கூடும். அரசாங்கத்தின் மீது மக்களுக்கு தற்போது துளியளவும் நம்பிக்கை இல்லை. இது துரதிஷ்டவசமான நிலைமையாகும்.

கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்தியதைப் போன்று , இந்த நெருக்கடிகளையும் முறையாக கட்டுப்படுத்தி அரசாங்கம் மக்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு முடியாது என்றால் இயன்றவர்களிடம் பொறுப்பினை ஒப்படைத்துவிட்டு , ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.

அவ்வாறில்லை எனில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என அனைத்து தரப்பிலுமுள்ள பொருளாதாரத்தில் நிபுணத்துவமுடையவர்களை ஒன்றிணைத்து விசேட குழுவொன்றை நியமித்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வழிமுறைகளை ஆராய வேண்டும் என்றார்.

ராஜபக்ச யாழிற்கு தப்பி வந்தாரா? சந்தேகிக்கும் சிங்கள மக்கள்

ராஜபக்ச யாழிற்கு தப்பி வந்திருக்கலாம்…யாழ் வான் பரப்பில் உலங்கு வானூர்திகள் பறப்பது தெரிந்ததா? என பல சிங்கள ஊடகவியலாளர்களும் சிங்கள முற்போக்காளர்களும் எம்மிடம் வினவுவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ராஜபக்ச சகோதரர்கள் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை இராணுவத்தினூடாக கையகப்படுத்தி வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் ஜனாதிபதி மாளிகை ஒன்றை அமைத்திருக்கும் நிலையில் பல சிங்கள சகோதரர்களுக்கு இவ்வாறான சந்தேகம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிரும் கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லம் கொழும்பில் பரபரப்பு!- காணொளி

கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹானயில் தற்போது பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வசிக்கும் மிரிஹான, அம்புல்தெனிய பகிரிவத்த லேனுக்கு அருகில் பெருமளவு மக்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாக நுகேகொட 119 மஹரகம வீதி முற்றாக தடைப்பட்டதுடன் 500க்கும் மேற்பட்ட சிங்கள பொலிஸார் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோட்டாவின் இல்லத்துக்கு செல்லும் பாதையை மறித்தே போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்பங்கிரிவத்தை வீதியின் குறுக்கே போலீசார் தடுப்புகளை அமைத்து யாரும் உள்ளே செல்லாதவாறு பாதுகாப்பை பலப்படுத்தினர்

பாதுகாப்புக்காக சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டு மக்கள் தற்போது முகங்கொடுத்து வரும் எரிபொருள், எரிவாயு, மின்சாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராகவே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

காவல்துறையால் போடப்பட்டிருந்த தடுப்புச்சுவர் போராட்டக்காரர்களால் உடைக்கப்பட்ட நிலையில் விசேட அதிரடி படையினர் அழைக்கப்படுள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதியில் இணைய இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Posted in Uncategorized