அரசாங்கத்தின் பெரும்பான்மையை இழக்கச் செய்வோம்: கம்மன்பில, விமல் வீரவன்ச மகாநாயக்க தேரர்களிடம் தெரிவிப்பு

அரசாங்கத்தின் பெரும்பான்மையை இழக்கச் செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள் மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களிடம் இன்று தெரிவித்துள்ளனர்.

அதற்காக அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு மேலும் சிலர் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, கெவிந்து குமாரதுங்க, டிரான் அலஸ், பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச உள்ளிட்ட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று காலை தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் மல்வத்து பீட மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, இந்தியாவுடனான உடன்படிக்கையில், அமைச்சரவைக்கு அதனை சமர்ப்பிக்கும் முன்னரே கையொப்பம் இடப்பட்ட விடயத்திற்கு அதிருப்தி வௌியிட்டார்.

சர்வதேச நாணய நிதியம் தற்போது அமெரிக்க வௌிநாட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஆயுதமாக மாறியுள்ளதாகவும் அது தொடர்பில் தாம் அச்சமடைந்துள்ளதாகவும் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, குறித்த குழுவினர் மல்வத்து பீட அனுநாயக்கரையும் அஸ்கிரிய பீட மகாநாயக்கரையும் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டனர்

கப்ராலின் கருத்திற்கு அதிருப்தி வெளியிட்டார் ரணில் : மன்னிப்புக் கோரினார் ஜனாதிபதி

பொருளாதார நெருக்கடிக்கு நல்லாட்சி அரசாங்கம் காரணம் என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொருளாதார பாதிப்பிற்கு அனைத்து அரசாங்கமும் காரணம் என்று குறிப்பிடுவதாயின் விஜயன் காலத்தில் இருந்து குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டும்.

May be an image of 1 person, standing and indoor

அரசியல் நோக்கமில்லாத வகையில் தான் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ளோம். என்பதை முதலில் தெளிவாக குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அஜித் நிவார்ட் கப்ராலின் கருத்திற்கு அதிருப்தி வெளியிட்டார்.

அரசியல் காரணிகள் பற்றி பேசும் தருணம் இதுவல்ல. உண்மையான நோக்கில் சர்வகட்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநரது கருத்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கோருகிறேன் என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் புதன்கிழமை இடம்பெற்ற சர்வகட்சி கூட்டத்தின் போது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து தெளிவுப்படுத்துமாறு ஜனாதிபதி மத்திய வங்கி ஆளுநரிடம் வலியுறுத்தினார்.

கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் பொருளாதார தாக்கம் தீவிரமடைவதற்கு நல்லாட்சி அரசாங்கம் காரணம் என தரப்படுத்தல்கள் ஊடாக நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளை எடுத்துரைத்தார்.பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதற்கு கடந்த அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் குற்றஞ்சாட்டினார்.

மத்திய வங்கியின் ஆளுநரது உரையாடல் முடிவடைந்ததை தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க திறந்த பொருளாதார கொள்கையினை அரசாங்கம் முறையாக செயற்படுத்தியுள்ளதா என்பதை முதலில் குறிப்பிடுங்கள்.

அரசியல் நோக்கமற்ற வகையில் சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டுள்ளோம்.இவ்விடயத்தில் அரசியல் பேசுவதை முதலில் தவிர்த்துக்கொள்ளுங்கள்.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது.இவ்விடயத்தில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விளையாடுவது பொருத்தமற்றது.

கடந்த அரசாங்கத்தினால் தான் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளமை வருந்தத்தக்கது.அரசியல் பேசுவதற்காக இங்கு வரவில்லை.பொருளாதார நெருக்கடிக்கு இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கமும் பொறுப்பு கூற வேண்டுமாயின் விஜயன் காலத்தை பற்றியும் குறிப்பிட்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டும்.

மத்திய வங்கி ஆளுநரின் கருத்தினை கடுமையாக விமர்சித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நோக்கி ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷஅரசியல் நோக்கிற்காக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்படவில்லை.மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்ட கருத்து ரணில் விக்ரமசிங்கவிற்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்குமாயின் அதற்கு மன்னிப்பு கோருகிறேன் என்றார்.

Posted in Uncategorized

வங்கிக் கட்டமைப்பு அபாயத்தில்: ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ பாராளுமன்றம் தொடர்பில் கரிசனை கொள்ளாது செயற்படுவதாக எதிர்க்கட்சியினர் இன்றும் சபையில் குற்றம் சுமத்தினர்.

சேவைகள் பிரிவின் VAT திருத்தம் தொடர்பிலான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நிதி அமைச்சர் சபையில் இருக்கவில்லை.

அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், தெரிவுக்குழுவின் தலைவர் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலும் நாணய சபை உறுப்பினர்களும் சபைக்கு சமூகமளிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.

பிரச்சினைகளை மாநாடுகள் மூலம் அல்லாது பாராளுமன்றத்தில் விவாதித்தே தீர்த்துக்கொள்ள முடியும் எனவும் அதுவே நாட்டின் அரசியலமைப்பில் உள்ளதாகவும் ஹர்ஹ டி சில்வா தெரிவித்தார்.

சட்டங்களை வகுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என சுட்டிக்காட்டிய அவர், வரிகளை அதிகரிப்பதாக இருந்தாலோ, குறைப்பதாக இருந்தாலோ அதனை பாராளுமன்றத்திற்குள் மாத்திரமே செய்ய முடியும் என கூறினார்.

இன்று நிதி தெரிவுக்குழுவிற்கு நிவாட் கப்ராலும் நாணயக் குழுவினரும் வருகை தராமை, பாராளுமன்றத்தை முழுமையாக நகைப்பிற்குட்படுத்தும் செயல் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்கு நிதி அமைச்சர் வருவதும் இல்லை, கேள்விகளுக்கு பதில் அளிப்பதும் இல்லை என தெரிவித்த ஹர்ஷ டி சில்வா, பிரச்சினைகளை யாரிடம் கூறுவது எனவும் கேள்வி எழுப்பினார்.

வங்கிக் கட்டமைப்பு வீழ்ச்சியடையும் என தாம் முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்த போதும், அது குறித்து எவரும் அக்கறைகொள்ளவில்லை எனவும் தற்போது அரச வங்கியொன்று பணத்தை மீள செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக அறியக்கிடைத்திருப்பதாகவும் உடனடியாக அது குறித்து ஆராயுமாறும் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.

டொலரை 200 ரூபாவிற்கு மேல் விற்க முடியாது என முட்டாள்தனமான சட்டமொன்றை பிறப்பித்திருந்தனர். வங்கிகள் 200 ரூபாவிற்கு மேல் கறுப்பு சந்தையில் அதனை கொள்வனவு செய்வதற்கும் வாய்ப்பில்லை. ஆனால், அவர்களுக்கு டொலர் தேவை. சில வங்கிகள் 200 ரூபா வீதம் அதனை கொள்வனவு செய்து, மூன்று மாதங்களில் 185 ரூபாவிற்கு அவற்றை விற்பனை செய்வதாக தெரிவித்து Swap செய்தனர். பணவீக்கம் அதிகரித்துள்ளது, இவ்வளவு பணம் அச்சிடுகின்றனர், அதனால் ரூபாவின் பெறுமதி குறைவடையும் என்பதை நாம் அறிவோம். அப்படியாயின், 200 ரூபாவிற்கு கொள்வனவு செய்யும் போது 201 ரூபா அல்லது 202 ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவே உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் 185 ரூபாவிற்கு விற்பனை செய்வதாக அந்த வங்கிகள் அறிவித்தன. இதன் மூலம் ஒட்டுமொத்த வங்கிக் கட்டமைப்பும் வீழ்ச்சி காணும் அபாயம் உள்ளதாக நான் அன்றே தெரிவித்தேன்

என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இன்று பிற்பகல் நிதி அமைச்சர் பாராளுமன்றத்திற்கு சமூகமளித்திருந்தாலும் கேள்விகளுக்கு பதிலளிக்கவோ கருத்துக்களை வௌியிடவோ இல்லை.

இதேவேளை, வங்கிக் கட்டமைப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வௌியிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய வங்கி அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

வங்கி கட்டமைப்பு நிலையாக உள்ளதாகவும் அரச வங்கிகளின் செயற்பாடுகள் சுமூகமாக இடம்பெற்று வருவதாகவும் மத்திய வங்கி உறுதிப்படுத்துவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனோ கணேசன் தலைமையில் த.மு.கூ குழு – இந்திய தூதுவர் சந்திப்பு

பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கான, இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் சார்பான அபிலாசை ஆவண கடிதத்தை, தமிழ் முற்போக்கு கூட்டணி, இன்று (23) கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் இந்திய தூதுவர் கோபால் பாக்லேயிடம் கையளித்தது.

கொழும்பு இந்திய இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் வே. ராதாகிருஷ்ணன், உதயகுமார் எம்பி, கே.டி. குருசாமி, பேராசிரியர் சோ. சந்திரசேகரம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இந்திய தரப்பில் தூதுவர் கோபால் பாக்லே, துணை தூதர் வினோத் கே. ஜேகப், அரசியல் துறை செயலாளர் பானு பிரகாஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளதாவது,

மனம் திறந்த கலந்துரையாடலுடன் இந்த சந்திப்பு மிகவும் திருப்திகரமாக அமைந்தது. இலங்கையில் வாழும் தமிழர் ஜனத்தொகையில் சுமார் சரிபாதியான இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் தொடர்பான கூடிய அக்கறையை செலுத்த பாரத பிரதமர் நரேந்திர மோடியின் இந்திய ஒன்றிய அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

இந்த பின்னணியில், இலங்கையின் முழுமைமிக்க குடிமக்களாக ஏனையோருடன் சமத்துவமாக வாழ விரும்பும் மலையக தமிழ் இலங்கையர் தொடர்பான இந்த அதிகாரபூர்வ ஆவணம் மிகவும் பயன்தருகிறது என அவர் மேலும் கூறினார்.

மலையக தமிழ் மக்களின் அனைத்து அபிலாசைகளையும் ஒருசேர பிரதிபலிக்கும் கோரிக்கைகள் உள்ளடங்கிய இத்தகையை ஆவணத்தை தயாரித்து முன்வைத்துள்ளமை தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு தந்து மகிழ்ச்சிகளையும், பாராட்டுகளையும் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

இதன் அபிலாசை ஆவண கடிதத்தை உடனடியாக பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அவதானத்துக்கு முறைப்படி அனுப்பி வைப்பதாக தூதுவர் கோபால் பாக்லே, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழுவுக்கு உறுதியளித்தார்.

மேலும் இனி வரும் எதிர்காலத்தில், இந்திய மற்றும் தமிழக அரசியல், சமூக, பரப்புகளில் இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் அதிக கவனத்தை பெற வேண்டும் எனவும், அதற்கான ஒத்துழைப்புகளை இந்த அரசு சார்பில் இந்திய தூதகரம் வழங்கும் எனவும் அவர் மேலும் கூறினார்.

அடுத்த வாரம் இலங்கை வருகைதரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர், தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்திக்கும் போது இது தொடர்பில் மேலும் கலந்துரையாடப்படும். பிம்ஸ்டெக் (BIMSTEC) மாநாடு முடிந்த உடன், இந்த ஆவண கோரிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாட விரும்புவதாகவும் தூதுவர் கோபால் பாக்லே மேலும் தெரிவித்தார்.

கூட்டணி தலைவர் மனோ கணேசன், இந்திய தூதுவர் கோபால் பாக்லேயிடம் கூறியதாவது, இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் தொழிலாளர்களாக, இலங்கை தீவுக்கு முதன்முதலில் 1823ம் ஆண்டு கொண்டுவரப்பட்டனர். நிதி வர்த்தகம் உட்பட ஏனைய தொழில் நடவடிக்கைகளுக்காகவும் மென்மேலும் தமிழர்கள் அதன் பின் இலங்கை வந்தனர்.

அடுத்த ஆண்டு 2023 உடன் இந்த வரலாறு, இருநூறு ஆண்டுகளை தொடுகிறது. அதை நாம் விரிவாக நினைவு கூற உள்ளோம். இந்த இருநூறு ஆண்டுகளில் ஒரு சமூகமாக நாம் பெற்றுள்ள வளர்ச்சி, பெறாத வளர்ச்சி, முகம் கொடுக்கின்ற இன்னல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து ஆவன செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணி திடசங்கற்பம் பூண்டுள்ளது. அதன் ஆரம்பமே இந்த ஆவணமாகும்.

1823ம் ஆண்டு வேளையில் இலங்கை, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளையும் ஆண்ட பிரித்தானிய அரசின் கவனத்துக்கும் இதை நாம் கொண்டுவர உள்ளோம். பிரித்தானிய அரசுக்கும் எமது மக்கள் தொடர்பில் கடப்பாடு இருக்கிறது.

1823ம் ஆண்டுக்கு, எட்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் 1815ல் கண்டி ராஜ்யத்தை ஆண்ட இந்திய வம்சாவளி மதுரை நாயக்க மன்னர் வம்சத்தின் சுமார் 300 ஆண்டுகால ஆட்சி, பிரித்தானியரால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நாட்டில் உழைக்க மட்டுமல்ல ஆளவும் நாம் வந்துள்ளோம் என்பதை இது காட்டுகிறது.

இலங்கையில் வட கிழக்கில் வாழும் ஈழத்தமிழர்களுடன் நாம் பிரிக்க முடியாத நல்லுறவு கொண்டுள்ளோம். அவர்களின் இன்னல்களை துடைக்க இந்தியா பலதும் செய்கிறது. அது தொடர வேண்டும். அதேவேளை அதே அக்கறையை எமது மக்கள் மீதும் இந்திய உட்பட உலகம் காட்ட வேண்டிய வேளை இன்று வந்து விட்டது.

சுமார் பதினைந்து இலட்சம் இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையரில் பத்து விகிதமே தோட்ட தொழிலாளர்கள் ஆவர். ஒட்டு மொத்த மலையக தமிழ் இலங்கையரும் தோட்ட தொழிலாளர்கள் அல்ல என்பதையும், எமது சமூகத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியையும் இந்திய உட்பட உலகம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

அதேவேளை பத்து விகிதமான சுமார் ஒன்றரை இலட்சம் தோட்ட தொழிலாளர்களும் அவர்களது குடும்ப உறவுகள் மற்றும் தோட்டங்களில் இன்னமும் வாழ்பவர்கள் உள்ளிட்ட சுமார் நான்கு இலட்சம் மக்களே இலங்கையிலேயே மிகவும் பின்தங்கிய பிரிவினர்.

அவர்களை கைத்தூக்கி தேசிய மட்டத்துக்கு உயர்த்த இந்தியா, பிரிட்டன் உட்பட உலகத்துக்கு கடப்பாடு இருக்கின்றது. இதை வலியுறுத்தி உரிய செயற்பாடுகளை முன்னெடுக்க தமிழ் முற்போக்கு கூட்டணி திடசங்கற்பம் பூண்டுள்ளது. எமது உறுதிப்பாட்டை நாம் எந்த சவால்களுக்கும் முகம் கொடுத்து செய்து முடிப்போம்.

Posted in Uncategorized

சர்வக்கட்சி மாநாடு! – ஹக்கீம், ரிசாத் புறக்கணிப்பு

நாளை இடம்பெறும் சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்ற தீர்மானத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று எடுத்துள்ளது.

இன்று இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அதியுயர்பீடக் கூட்டம் இடம்பெற்றபோதே இந்தத்தீர்மானம் எடுக்கப்பட்டது. Zoom தொழில்நுட்பத்தினூடாகவே இந்த உயர்பீடக் கூட்டம் இடம்பெற்றதாக கட்சியின் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் கடந்த காலங்களில் சர்வகட்சி மாநாட்டின் அவசியம் தொடர்பில் இந்த அரசாங்கத்திற்கு சிறுபான்மைக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுருத்தி வந்த போதும் இந்த அரசாங்கம் இது தொடர்பில் எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசாங்கம் தன்னுடைய பிரச்சினைகளை இந்த சந்தர்ப்பத்தில் மூடி மறைத்துக்கொள்வதற்காகவே இந்த சர்வகட்சி மாநாட்டை கூட்டுவதற்கு முனைந்திருப்பது தொடர்பிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் நாளைய கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன் தெரிவித்தார்.

இதேவேளை, நாளை (23) நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் தமது கட்சிகள் கலந்து கொள்ளாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் அறிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட் உள்ளிட்ட குழுவினர் இலங்கை வருகை

இலங்கை அரசாங்கத்துடனும் அதேபோல், வர்த்தக மற்றும் சிவில் சமூகத் தலைவர்களுடனுமான சந்திப்புகளின் நிமித்தம் அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட் பல்வேறு முகவரமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய தூதுக்குழுவொன்றுடன் கொழும்பை வந்தடைந்துள்ளார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ, இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவி பாதுகாப்பு செயலாளர் அமண்டா டோரி உள்ளிட்டோர் இந்த தூதுக்குழுவின் ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்களில் அடங்குகின்றனர்.

ஜனநாயக நிறுவனங்களை பலப்படுத்தல், மனித உரிமைகள், நிலையான பொருளாதார அபிவிருத்தி, காலநிலை மாற்றத்தைத் தணித்தல், வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தல், பிராந்திய பாதுகாப்பு, மற்றும் கல்வி சம்பந்தமான கூட்டுறவு போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ள நான்காவது அமெரிக்க – இலங்கை பங்காண்மை உரையாடலுக்கு (U.S.-Sri Lanka Partnership Dialogue) துணை இராஜாங்க செயலாளர் நூலண்டும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் காமினி லக்ஷ்மன் பிரிஸும் இணை- தலைமை வழங்கவுள்ளனர்.

உலகளாவிய தொற்றுப்பரவலால் ஏற்பட்டுள்ள சவால்கள் பற்றியும் அமெரிக்க – இலங்கை பங்காண்மையை பலப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் கலந்துரையாடும் நிமித்தம் துணை இராஜாங்க செயலாளர் நூலண்ட், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சங் மற்றும் அமெரிக்க தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர்.

அனைத்து இலங்கையர்களும் செழிப்படையக்கூடிய சூழலொன்றை உருவாக்குவதில் சிவில் சமூக மற்றும் தனியார்துறை பிரதிநிதிகளின் முக்கிய வகிபாகங்கள் குறித்து கலந்துரையாடும் நிமித்தம் அவர்களையும் துணை இராஜாங்க செயலாளர் நூலண்ட் உள்ளிட்ட அமெரிக்க தூதுக் குழுவினர் சந்தித்து பேசவுள்ளனர்.

Posted in Uncategorized

பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலம் நிறைவேறியது – பிள்ளையான், திலீபன் ஆதரவு !!

சிவநேசதுரை சந்திரகாந்தன், திலீபன் ஆகியோரின் ஆதரவுடன் பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேறியது.

குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் நாடாளுமன்றில் கிடைத்தன.

இதனை அடுத்து பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததுடன் அச்சட்டம் குறித்து இன்று நாடாளுமன்றில் கடும் அதிருப்தியும் வெளியிட்டன.

இதனையடுத்து குழுநிலை அமர்வின்போது திருத்தங்கள் செய்யப்பட்ட நிலையில் திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

கொண்டு வரப்பட்ட திருத்தம் போதுமானதல்ல, அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டம் ரத்துச்செய்யப்படவேண்டும் என்ற அடிப்படையில் திருத்தத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன வாக்கெடுப்பை கோரின.

இதனையடுத்து பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார்.

இருப்பினும் குறித்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பங்குபற்றவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Posted in Uncategorized

காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி போராடிய ரெலோ யாழ் மாவட்ட தலைவர் விசாரணைக்கு அழைப்பு

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைத்த நிலையில், அங்கு காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்களுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையின் உப தவிசாளர் செல்வரட்ணம் மயூரன் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தமக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் நாளை மறுதினம் வியாழக்கிழமை (24 ஆம் திகதி) காலை 9 மணிக்கு நுணாவிலில் உள்ள சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைகளுக்காக சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் யாழ். விஜயத்தின் போது காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக மட்டுவில் பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

அவ்வாறாக வருகை தந்த தாய்மாரை பொலிசாரும் இராணுவத்தினரும் கடுமையாக தாக்குவதை அறிந்து அப் பகுதிக்குச் சென்ற வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் உள்ளிட்டவர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினருடன் இணைந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகோரியும் தாய்மார் தாக்கப்பட்டதை கண்டித்தும் பொருளாதார மத்திய நிலைய வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் அங்கு பதாதைகள் எரிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பொலிசாரினால் வலி. கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் உள்ளிட்டவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் கண்காணிப்பு பணியில் இராணுவத்தினர் – இலங்கையில் தொடரும் இராணுவமயமாக்கல்!

எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கருகில் இராணுவத்தினரை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் அதிருப்பதி வெளியிட்டுள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கருகில் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன இன்று தெரிவித்திருந்தார்.

அதற்கமைய ஒவ்வொரு எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கருகில் இரு இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியிருந்தார்.

இந்நிலையில் நாட்டில் இராணுவமயமாக்கல் என்பது பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான இந்த அரசாங்கத்தின் உத்தி என அம்பிகா சற்குணநாதன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“போருக்குப் பிந்தைய இராணுவமயமாக்கல், குறிப்பாக 1வது ராஜபக்ச ஆட்சியின் போது வடக்கு மற்றும் கிழக்கில் அதிகரித்தது. யஹபாலன அரசாங்கத்தின் போது 2019 நவம்பருக்குப் பின்னர் இராணுவமயமாக்கல் தீவிரப்படுத்தப்படவில்லை.

தற்போது, பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12வது பிரிவின் மூலம் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்க ஆயுதப் படைகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஜனாதிபதி ஒவ்வொரு மாதமும் வர்த்தமானியை வெளியிட்டு வருகிறார்.

கடைசியாக 21 மார்ச் 2022 இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சிறைச்சாலைகள் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு, தடுப்புக்காவல் & புனர்வாழ்வு ஆகியவற்றின் இராணுவமயமாக்கலையும் நாங்கள் கண்டுள்ளோம், இவை அனைத்தும் உரிமை மீறல்களில் விளைந்துள்ளன.” என அவர் கூறியுள்ளார்.

சர்வகட்சி கூட்டத்தை பகிஷ்கரிக்க விக்னேஸ்வரனும் முடிவு

கொழும்பில் நாளை மறுதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச மேற்கொள்ளவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் தாம் பங்குபற்றமாட்டேன் என்பதை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் முன்னாள் நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் எம்.பி ஜனாதிபதி செயலகத்துக்கு அறிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கான தீர்வும் அதிகாரப் பகிர்வில் தான் தங்கியுள்ளது என்பதை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும்,

இம்மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், தற்போதைய பொருளாதாரச் சூழல் தொடர்பில் எனது கருத்துக்களை எழுதுமாறு தொலைபேசி மூலம் உங்களின் பணியாளர் என்னை வலியுறுத்தினார்.

எனவே எனது கருத்துக்களை மிகச் சுருக்கமாகக் கீழே தருகிறேன்.

இன்று நாடு எதிர்நோக்கும் இனப்பிரச்சினையும் பொருளாதாரப் பிரச்சினையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன என்பது சற்றே அசாத்தியமான விடயம்தான்.

நாட்டை தன் சக்திக்கு மீறி செலவு செய்ய வைத்துள்ளது இந்தப் போர். பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் கடன் வாங்கப்பட்டது.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கும் தீர்வு காண்பதற்கான ஒரே சாத்தியமான வழி, கூட்டாட்சி அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை ஏற்படுத்துவதுதான் என்பது எனது புரிதல்.

அவ்வாறு செய்வது தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு வழி வகுக்கும் என்பது மட்டுமன்றி, இலங்கையை நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு ஒரு வளமான மற்றும் அமைதியான நாடாக மாற்றுவதற்கும் வழி வகுக்கும்.

நீங்கள் சிந்திக்கும் அரசமைப்பு மாற்றத்தின் ஊடாக உண்மையான அதிகாரப்பகிர்வைத் தைரியமாக நிறைவேற்ற முடிந்தால் சர்வதேச சமூகத்தின் பூரண பொருளாதார ஆதரவையும் புலம்பெயர் தமிழர்களின் முழு மனதுடன் ஆதரவையும் பெற முடியும்.

அவ்வாறு செய்வதன் மூலம், இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மிகக் குறுகிய காலத்திற்குள் மீண்டு தெற்காசியாவின் சொர்க்கமாக மாறும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.

இனப்பிரச்சினை தொடர்பில் நாம் அனைவரும் முன்னர் தெரிவித்த கருத்துக்கள் எமது மனங்களிலிருந்து துடைக்கப்படட்டும்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வந்து இந்த நாட்டை தெற்காசியாவில் மட்டுமன்றி முழு உலகிலும் ஒரு சிறந்த, வளமான, ஒன்றுபட்ட நாடாக மாற்றுவோம். இது வெறும் கனவு அல்ல; அது நிஜத்தில் நடக்கலாம்.

நீங்கள் துணிச்சலுடன் செயற்பட்டு இந்த நாட்டில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவீர்களாயின் இலங்கை வரலாற்றில் உங்கள் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். ஜனாதிபதியே! உங்களுக்கு இப்போது கிடைத்திருக்கும் இந்தப் பொன்னான வாய்ப்பை தவறவிடாதீர்கள். நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized