கடதாசி இல்லை – பரீட்சைகளும் இல்லை

கடதாசி உள்ளிட்ட அச்சிடலுக்கு தேவையான பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக தவணை பரீட்சைகளை நடாத்தும் திகதிகளில் மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் இறுதி ஆண்டு பரீட்சையை நடாத்துவதற்கான வினாத்தாள்களை அச்சிடுவதற்கு கடதாசி உள்ளிட்ட அச்சிடலுக்கு தேவையான பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேல் மாகாண கல்வி பணிப்பாளரால் ஏனைய அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் இது தொடர்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு ஏனைய மாகாண கல்வி பணிப்பாளர்களிடம் குறித்த கடிதம் மூலம் மேல் மாகாண கல்வி பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கமைய 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புக்களுக்கான இறுதி தவணை பரீட்சைகளை நடத்துவதற்கான திகதிகளில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய மேல் கல்வி திணைக்களம் வினாத்தாள்களுக்கமைய நடத்தக் கூடிய அனைத்து பாடசாலைகளிலும் குறித்த நேர அட்டவணைக்கமைய பரீட்சையை நடத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4,9,10 மற்றும் 11 ஆம் வகுப்புக்களுக்கான ஆண்டிறுதி பரீட்சையை ஏப்ரல் விடுமுறையின் பின்னர் நடாத்துவதற்கு மேல் மாகாண கல்வி திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Posted in Uncategorized

தமிழர்களின் அச்சம்? ஈழநாடு ஆசிரியர் தலையங்கம்

இந்தியாவின் உதவியைப் பெறும் நோக்கில் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ புதுடில்லி சென்று, இந்திய பிரதமரை சந்தித்தி ருக்கின்றார். இந்திய பிரதமர் ஸ்ரீநரேந்திர மோடி, விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யக்கூடுமென்று எதிர்பார்க்கப்படும் சூழ லில்தான், பஸில் ராஜபக்ஷ – பிரதமர் மோடி சந்திப்பு இடம்பெற்றி ருக்கின்றது. ஓர் உடனடி அயல் நாடென்னும் வகையில், இந்தியா விடம் செல்லுதல் என்பது, கொழும்பின் பாரம்பரிய இராஜதந்திர மாகும்.
இந்தியா மறுக்கின்ற சூழலிலேயே ஏனைய நாடுகளின் உத வியை கொழும்பு பெற முயற்சிப்பதுண்டு. இதனை ஒரு வெற்றிகர மான தந்திரோபாயமாகவே சிங்கள ஆட்சியாளர்கள் பின்பற்றி வந்திருக்கின்றனர். ஆனால், தற்போதைய நிலைமை வேறு. ஏனெனில், வேறு நாடுகளிடம் சென்றாலும்கூட, இலங்கை எதிர் கொண்டிருக்கும் நெருக்கடிநிலைமையை சரி செய்யக்கூடிய
நிலையில் கொழும்பு இல்லை.

இவ்வாறானதொரு சூழலில்தான்,இந்தியாவின் உதவியை பெற்று, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளுவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வரு கின்றது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சில கசப் புணர்வுகளையும் விரிசல்களையும் போக்கிக் கொள்ளும் வகை யிலும் அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது. தமிழ் சூழலில் இது அச்சத்துடன் நோக்கப்படுகின்றது. அதாவது, கொழும்பு புதுடில்லி யுடன் நெருக்கமாகினால், இந்தியா ஒருவேளை ஈழத் தமிழர் பிரச்னையில் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாமல் போய்விட
லாமென்று, தமிழ் தேசிய தரப்புக்கள் சிந்திக்கின்றன. கொழும்பு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் பிரச்னைகளை புறம்தள்ளிவிடலாமென்றும் அவர்கள் எண்ணு கின்றனர். இந்த அச்சத்தை முழுமையாக நிராகரிக்க முடியாவிட்டா லும்கூட, தமிழ் தேசிய தரப்புக்களின் அரசியல் முன்னெடுப்புகளில் தான் இந்தியாவின் ஈடுபாடும், தலையீடும் தங்கியிருக்கின்றது.

வெறுமேன ஒரு கடிதத்தை அனுப்பிவிடுவதன் மூலம் – இந்தி யாவின் தலையீட்டை ஏற்படுத்த முடியாது. புதுடில்லியை நோக்கி தொடர்ந்தும் செயல்பட வேண்டும். புதுடில்லியை நோக்கி செயல்படு வதென்பது – அங்குள்ள ஊடகங்களை நோக்கி – அயலுறவுக் கொள்கையில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய சிந்தனைக் கூடங்களை நோக்கி செயல்படுவதாகும். இதனைத்தான் மொறகொட செய்து கொண்டிருக்கின்றார். மஹிந்த காலத்தில் ஏற்பட்ட விரிசல்களை அவர்களால் எவ்வாறு வெற்றிகொள்ள முடிகின்றது? அரசிடம் வசதிகளும் வாய்ப்புக்களும் அதிகம் – எங்களிடம் அவ்வாறான
வசதிகள் இல்லையென்று கூறிவிட்டு அமைதியடைய முடியாது.

அரசிடம் இருக்கின்ற வசதிகள் ஒருபோதுமே தமிழ் தேசிய தரப்பு களுக்கு கிட்டப் போவதில்லை. அப்படியாயின் வெறுமனே புதுடில் லிக்கும், ஐ. நா. மனித உரிமைகள் பேரவைக்கும் கடிதங்களை அனுப்பிவிட்டு, தேர்தலில் போட்டியிடுவது மட்டும்தான் தமிழ்த் தேசிய கட்சிகள் என்போரின் பணியாக இருக்கப் போகின்றதா?

இப்படித்தான் தமிழர்களின் அரசியல் பயணிக்கப் போகின்றது என்றால், ஒருபோதுமே தமிழர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைக்கப் போவதில்லை. இந்தியாவின் அழுத்தத்தை முன்வைத்து, களத்திலும் தமிழ்நாட்டிலும், புதுடில்லியிலும் ஒரே குரலில், ஒரே கோரிக்கையின் கீழ், செயலாற்ற வேண்டும். அந்தக் கோரிக்கை கடிதத்தில் முன்வைத்த கோரிக்கையிலிருந்து விலகிச் செல்லக் கூடாது. இதற்கு முதலில் களத்தில் தமிழ் தேசிய தரப்புக்கள் ஓர்
ஐக்கிய முன்னணியாக மாற வேண்டும். ஆனால், அதற்கான வாய்ப்புக்கள் தென்படவில்லை. தமிழர்கள் தங்களை தயார்படுத்தா மல், மற்றவர்களின் தலையீட்டை கோருவதில் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை.

சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு – அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள் : பலரும் தொழில் வாய்ப்பினை இழக்கும் அபாயம்!

நாட்டில் அடுத்தடுத்து சமையல் எரிவாயுவிற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்களும், சிறு அளவிலான உணவு விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுவருகின்றமையினை அவதானிக்க முடிகின்றது.

எதிர்காலத்திலும் எரிவாயுவிற்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் ஹோட்டல் தொழில் துறையிலுள்ள சுமார் 5 லட்சம்பேர் பாதிக்கப்படக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய சூழலில் பலர் தொழில்களை இழந்துள்ளனர் எனவும், ஹோட்டல்களுக்கான வாடகைப் பணத்தைகூட செலுத்த முடியாமல், உரிமையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் எனவும் ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சில ஹோட்டல்கள் திறக்கப்பட்டிருந்தாலும் அங்கு கொத்து ரொட்டி, ரைஸ் போன்ற உணவுகள் தயாரிக்கப்படுவதில்லை எனவும், விறகை பயன்படுத்தியே கடும் சவால்களுக்கு மத்தியில் சமையல் இடம்பெறுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொறுப்பற்ற செய்திகளுக்கு சம்பந்தர் ஐயா கருத்து தெரிவிப்பது வருத்தமளிக்கிறது- ரெலோ தலைவர் செல்வம்

வீரகேசரி தேசிய பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் தலைைர் சம்பந்தன் ஐயா தெரிவித்த கருத்து முற்றிலும் கவலைக்குரியது.
ஜனாதிபதியின் சந்திப்பு சம்பந்தமாக எமது கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களைத் தவிர வேறு எவையும் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படாத நிலையில், பொறுப்பற்ற முறையில் உண்மைக்குப் புறம்பான கருத்தை ஊடகச் செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளமை அவதானிக்க முடிகிறது. அதுவும் பாராளுமன்றக் குழு கூட்டத்தில் “திட்டமிடாமல் ஜனாதிபதியை சந்திக்க செல்லக் கூடாது என்ற கருத்தை நான் தெரிவித்திருப்பதாக” ஊடகவியலாளர் கூறியிருப்பது பொறுப்பற்றதும் உண்மைத் தன்மை அற்றதுமாகும்.

அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் யாராவது குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஊடக செய்தியாளருக்கு கருத்து தெரிவித்து இருந்தால் அதறகு நான் பொறுப்பாளியாக முடியாது.

பாரம்பரியமான தேசிய ரீதீயாக மக்கள் மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்ற தமிழ் பத்தி்ரிகை ஊடகம் ஒன்றில் பொறுப்பற்ற முறையில் உண்மைக்குப் புறம்பான சொல்லப்படாத கருத்துக்களையும் பதிவு செய்த ஊடகவியலாளரின் செயல்பாடு கவலை அளிக்கிறது. அப்படிப்பட்டவர்களுடைய செய்திகளுக்கு செவி சாய்த்து சம்பந்தன் அவர்கள் கருத்து தெரிவித்திருப்பது மேலும் கவலையளிக்கின்றது.

ஜனாதிபதியை கட்சிகள் சந்திப்பது அந்தந்த கட்சிகளின் தீர்மானம். எமது கட்சியின் நிலைப்பாட்டை தெளிவாக எழுத்து வடிவத்தில் நேரடியாக சம்பந்தன் அவர்களுக்கு அறிவித்திருந்த நிலையில் பொறுப்பற்ற ஊடகவியலாளர் ஒருவரின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து பதில் வழங்குவதில் அவதானம் கொள்ள வேண்டும் என்று, மிக நீண்ட காலமாக அவருடன் பயணிப்பவனாக, என்னை நன்கு அறிந்தவர் என்ற நம்பிக்கை இன்றுவரை கொண்டவனாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

செல்வம் அடைக்கலநாதன்
தலைவர் – ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

இலங்கைக்கு நிபந்தனைகளை விதிக்க வேண்டும் : சர்வதேச நாணய நிதியத்திடம் 5 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கோரிக்கை

பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடவிருக்கும் நிலையில், கடன் உள்ளிட்ட உதவிகளை வழங்குவதற்குப் பதிலாக போர்க்குற்றங்கள் மற்றும் கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல், உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை நிலைநாட்டல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட நிபந்தனைகளை விதிக்கவேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்திடம் 5 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

வட அமெரிக்க தமிழ்ச்சங்கங்கள் பேரவை, இலங்கை தமிழ்ச்சங்கம், தமிழ் அமெரிக்கர் ஒன்றியம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஐக்கிய அமெரிக்க தமிழ் செயற்பாட்டுக்குழு மற்றும் உலகத்தமிழ் அமைப்பு ஆகிய 5 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இணைந்து சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவாவிற்கு கூட்டாக அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இலங்கையின் பொருளாதார நிலைவரம் மிகமோசமடைந்துவரும் நிலையில், அதனை சீரமைப்பதற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடவிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் மூலம் அறிந்துகொள்ளமுடிந்தது.

தற்போதைய பொருளாதாரநிலையின் காரணமாக இலங்கை மக்கள் முகங்கொடுத்திருக்கக்கூடிய நெருக்கடிகளை நாம் உணர்ந்துகொண்டிருக்கும் அதேவேளை, இதுகுறித்து எமது கரிசனையையும் வெளியிடுகின்றோம்.

எவ்வாறிருப்பினும் இலங்கைக்கு எவ்வித நிபந்தனைகளுமற்ற உதவிகளை வழங்குவதன் மூலம் தற்போது மக்கள் அனுபவித்துவரும் துன்பத்தை நீக்கமுடியாது என்றே நாம் கருதுகின்றோம்.

அதுமாத்திரமன்றி தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாதக்கொள்கைகளால் நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் இது பங்களிப்புச்செய்யாது.

இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் தமிழ் மக்களின் உரிமைகளை மறுதலித்து வந்திருக்கின்றன என்பதற்கான வலுவான ஆதாரங்கள் காணப்படுவதுடன், அவை கடந்த 2009 ஆம் ஆண்டில் முடிவிற்குக்கொண்டுவரப்பட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினர் போர்க்குற்றங்களிலும் மனிதகுலத்திற்கு எதிரான மீறல்களிலும் இனப்படுகொலையிலும் ஈடுபடுவதற்கு வழிவகுத்தது.

குறிப்பாக இலங்கை தொடர்பில் ஆராய்வதற்கென ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவானது, இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரின்போது சுமார் 40,000 பொதுமக்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று நம்பத்தகுந்த தரப்பினரால் மதிப்பிடப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோன்று கடந்த 2012 ஆம் ஆண்டில் சார்லஸ் பெட்ரியினால் தலைமைதாங்கப்பட்ட ஐ.நா உள்ளகக்குழுவின் மதிப்பீட்டு அறிக்கையில், இறுதிக்கட்டப்போரின்பேர்து சுமார் 70,000 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு என்ன நேர்ந்தது என மதிப்பிடப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு போர்க்குற்றங்களும் மனிதகுலத்திற்கு எதிரான மீறல்களும் இடம்பெற்றிருப்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் காணப்படுவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் இடம்பெற்றதாகக்கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் உரியவாறான விசாரணைகளை மேற்கொண்டு, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தும் 30/1 தீர்மானம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும் தற்போதைய அரசாங்கம் அந்தத் தீர்மானத்தை நிராகரித்துவிட்டது. தற்போதுவரை இறுதிக்கட்டப்போரின்போது நிகழ்த்தப்பட்ட குற்றங்களுடனும் மனித உரிமை மீறல்களுடனும் தொடர்புடைய ஒருவர்கூட கைதுசெய்யப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை.

பல்வேறு கட்டமைப்புக்களிலும் நிலவும் தண்டனைகளிலிருந்து விடுபடும்போக்கு அதற்குக் காரணம் என்பதுடன் அது சிங்கள, பௌத்த மத அடிப்படைவாதம் எழுச்சியடைவதற்கு வழிவகுத்துள்ளது.

எனவே பொருளாதாரமீட்சிக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் உதவிகள் வழங்கப்படும்பட்சத்தில், தாமாகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உதவியை நாடவேண்டும் என இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர் நிலங்களின் பூர்வீக, பாரம்பரியக் கட்டமைப்பை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது.

அமெரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் ஒக்லான்ட் நிலையத்தினால் ‘என்ட்லஸ் வோர்’ என்ற தலைப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் வலுகட்டாயமாக இடம்பெறும் சிங்கள குடியேற்றங்கள் மற்றும் அவற்றினூடாக தமிழ் மக்களின் பாரம்பரிய, கலாசார அடையாளங்களை அழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் மற்றும் மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறும் நீங்கள் (சர்வதேச நாணய நிதியம்) இலங்கை அரசாங்கத்திற்கு நிபந்தனை விதிக்கவேண்டும்.

மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப்பயங்கரவாதத்தாக்குதல்கள் குறித்தும் இன்னமும் நீதிநிலைநாட்டப்படவில்லை. எனவே சர்வதேச நாணய நிதியம் போன்ற கட்டமைப்புக்கள் இலங்கைக்குக் கடன்வழங்கும்போது நிபந்தனைகளை விதிப்பதன் ஊடாகவே பொறுப்புக்கூறலை நோக்கிய நகர்வுகளை வலுப்படுத்தமுடியும்.

அதேபோன்று சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழுவினால் மிகவும் மோசமான சட்டமாகச் சுட்டிக்காட்டப்பட்டதும் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கக்கூடியதுமான பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பிலும் உங்களது கவனத்திற்குக் கொண்டுவரவிரும்புகின்றோம்.

தற்போதைய அரசாங்கம் அச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகளைச் செய்திருந்தாலும், சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைவாக அச்சட்டத்தை மாற்றியமைப்பதற்கு அத்திருத்தங்கள் குறைந்தளவான பங்களிப்பையே வழங்குவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

எனவே கடனுதவிகளை வழங்குவதெனின், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குமாறும் நிபந்தனை விதியுங்கள் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தமிழாராய்ச்சி மாநாடும் அரை உண்மைகளும் – தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

ஈழத்தமிழர் வரலாற்றில், உணர்ச்சிமிக்கதாகப் பேசப்படுவது யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாளில் நிகழ்ந்த வன்முறை பற்றிய கதைகளுமாகும்.
செவிவழிக் கதைகள் போல, இக்கதைகள் அரை உண்மைகளாகச் சொல்லப்பட்டு, இன்று சமூகத்தில் அவை நிலைபெற்றுள்ளன. அச்சம்பவங்களும் அதைச் சூழ்ந்த நிகழ்வுகளும் பற்றிய முழுமையான தேடலோ விசாரணையோ இல்லாமல், இன்றுவரை அக்கதை திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது.

ஈழத்தமிழர் வரலாற்றின் முக்கியமான திருப்புமுனை அச்சம்பவம். ஆனால், ஏனைய நிகழ்வுகளுக்குக் கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் இதற்குக் கொடுக்கப்படுவதில்லை. காரணம் சொல்லப்பட்டுள்ள கதைகளில் உள்ள கோளாறும் அதன் நியாயமற்ற தன்மையுமாகும். தேடி விசாரித்தறியத் தவறும் சமூகம், எத்தகையதொரு கொடிய தண்டனையை எதிர்நோக்க வேண்டிவரும் என்பதற்கு, இச்சம்பவம் நல்லதொரு சான்று.

சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையில், தமிழருக்கு எதிரான தொடர்ச்சியான நடவடிக்கைகளை, அரசாங்கங்கள் மேற்கொண்டு வந்த நிலையில், தமிழ்த் தலைவர்களுக்கும் அரச தலைவர்களுக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்படிக்கைகள், தொடர்ச்சியாகத் தோல்வியடைந்தன.

குறிப்பாக, பண்டாரநாயக்க செல்வநாயகம் உடன்படிக்கைப்படி, குடியேற்றத் திட்டங்கள் மீதான அதிகாரம் உடைய மாவட்ட சபைகள் நிறுவப்படும் என ஏற்கப்பட்டது. அதே அடிச்சுவட்டில், டட்லிசெல்வா உடன்படிக்கை தோற்றம் பெற்றது. இரண்டும் செயல்வடிவம் பெறவில்லை.

இவற்றின் மூலம், குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வுக்குக் கூட, பேரினவாதக் கட்சிகள் தயாராக இல்லை என்பதை மிகத் தெளிவாகக் காட்டின. ஆனால், இந்நிலைப்பாடு ஐக்கிய தேசிய கட்சியோடு தொடர்ந்தும் நல்லுறவைப் பேணுவதற்கு, தமிழரசுக் கட்சிக்குத் தடைகள் இருக்கவில்லை. இவ்வுறவு 1960களில் புதிய பரிமாணம் கண்டது.

1970ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில், சிறிமா தலைமையிலான ஐக்கிய முன்னணி, மூன்றில் இரண்டுக்கும் மேலான பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. அப்போது தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ். ஜே. வீ. செல்வநாயகம், “தமிழரை இனிமேல் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொன்னார்.

இது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியை, பேரினவாத ஆட்சியாகக் கண்டதை மட்டுமன்றி, அரசாங்கத்தை அமைப்பதில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையை தமிழரசுக் கட்சி இழந்த ஏமாற்றத்தையும் குறித்தது. புதிய அரசாங்கத்துடன் செயற்படவியலாத வகையில், தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசிய கட்சியோடு தன்னை நெருக்கமாகப் பிணைத்துக் கொண்டது. இதனால் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய ஒரு நிலையை இழந்தது.

இதில் கவனிப்புக்கு உரியது. யாதெனில், தமிழ் மக்களின் தெரியப்பட்ட பிரதிநிதிகளையுடைய தமிழரசுக் கட்சியோடு அலட்சியமான முறையிலேயே அரசாங்கம் நடந்து கொண்டது. குறிப்பாக, யாழ்ப்பாண மாநகர மேயராக இருந்த அல்பிரட் துரையப்பாவுக்கு அரசாங்கம் கொடுத்த முக்கியத்துவம், தமிழரசுக் கட்சிக்குச் சினமூட்டியது.

இதன் தொடர்ச்சியாக அரசியலில் அறிமுகமில்லாத, மக்களால் அறியப்படாத செல்லையா குமாரசூரியர் என்ற பொறியியலாளரை, மூதவையான செனட் சபைக்கு நியமித்த அரசாங்கம், அவரை தபால் தொலைத்தொடர்பு அமைச்சராக்கியது. இச்செயல்கள் மூலம், தமிழர் நலன்களைத் தங்களது தமிழர்கள் மூலமே கவனித்துக்கொள்ளவியலும் என்பதைக் கோடுகாட்டியதோடு, தமிழரசுக் கட்சியினரைப் புறக்கணித்தது.

இக்காலப்பகுதியில், சிறுபான்மையினரது நலன்கள் தொடர்ச்சியாக நெருக்குதலுக்கு உள்ளாகின. தமிழ் மக்களுக்கு குமாரசூரியர் அமைச்சரானது போல, பதியூதின் மஹ்மூத்தை கல்வி அமைச்சராக்கி, அவரூடாக முஸ்லிம்கள் நலன்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதாக அரசு காட்டிக் கொள்ள முயற்சி செய்தது.
சிறிமாவின் அரசு தொடர்ச்சியாக, சிறுபான்மையினரின் நலன்களைப் புறக்கணித்து வந்தது என்பதும் இந்த அமைச்சரவை நியமனங்கள் சிறுபான்மையின நலநோக்கில் செய்யப்பட்டவையல்ல என்பதும் வெளிப்படையானது.

இவ்வாறு, 1970களில் தமிழ்ப் பாரளுமன்றப் பிரதிநிதிகளும் அரசாங்கமும் தொடர்ச்சியான மோதற்போக்குடன் தொடர்ந்த நிலையில், 1972ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பு, சிறுபான்மையினருக்கான பேரினவாத நிகழ்ச்சிநிரல் ஒன்றை, அரசாங்கம் முன்னெடுக்கிறது என்பதைக் காட்டியது.

ஈழத்தின் முன்னோடியான தமிழ் அறிஞர்களில் ஒருவராகிய தனிநாயகம் அடிகளாரின் அயராத முயற்சியால், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாக்கப்பட்டு, 1966இல் கோலாலம்பூரில் முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்த இரண்டாவது மாநாடு, 1968இல் சென்னையிலும் மூன்றாவது 1970இல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் நடைபெற்றன. பாரிஸ் மாநாட்டைத் தொடர்ந்து, நான்காவது மாநாட்டை இலங்கையில் நடத்துவது என்று முடிவானது.

மாநாடுகள் தொடர்ச்சியாக, இரண்டாண்டு கால இடைவெளியில் நடத்தப்பட்ட நிலையில், இலங்கையில் 1972இல் இம்மாநாட்டை நடத்தத் திட்டமிடப்பட்டது. அரசியல் தலையீடுகள் காரணமாக, இது 1974 ஜனவரியிலேயே சாத்தியமானது.
இம்மாநாட்டை நடத்துவதற்குப் பொறுப்பான தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இலங்கை கிளை, இம்மாநாட்டை கொழும்பிலேயே நடத்தத் திட்டமிட்டது. ஆனால், தமிழரசுக் கட்சியினர் இதை யாழ்ப்பாணத்தில் நடத்த விரும்பினர். இலங்கை கிளையில் இருந்த தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களின் அழுத்தத்தால், இம்மாநாடு யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டது.

அமைச்சராக இருந்த குமாரசூரியர், இம்மாநாட்டை கொழும்பில் நடத்த விரும்பினார். அதன்மூலம், தனக்கு அரசியல் இலாபம் தேடலாம் எனக் கணித்தார். எனவே, மாநாட்டை எங்கே நடத்துவது என்ற இழுபறி தொடர்ந்தது. இதனால் இம்மாநாடு ஓர் அரசியல் பிரச்சினையானது.

உலகளாவிய தமிழ் அறிஞர்கள் பங்குகொள்ளும் ஒரு மாநாட்டை, அரசியல் பிரச்சினையாக்கக் கூடாது என்பது, பலரது கருத்தாக இருந்தது. பல தமிழறிஞர்கள் இக்கருத்தோடு உடன்பட்டார்கள். சிலர், இதனை அரசியலாக்குவதன் ஆபத்துகள் குறித்து எச்சரித்தனர்.

தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்த தமிழரசுக் கட்சி, தங்கள் செல்வாக்கை மீட்பதற்கான வாய்ப்பாக, இதைப் பயன்படுத்த முயன்றது என்பதை, மாநாடு சார்ந்த நடவடிக்கைகள் உணர்த்தின.

யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு எட்டப்பட்ட முடிவை, அரசாங்கம் பகையாகக் கண்டது. இதனால், மாநாட்டுக்கு வருகை தருவோருக்கான விசாக்கள் தாமதமாகின. அரசியல் பிரமுகர்களுக்கு விசா மறுக்கப்பட்டது. அரசுக்குரிய பாடசாலை மண்டபங்கள் மறுக்கப்பட்டன. அரசாங்கத்தின் ஆதரவுடைய அல்பிரட் துரையப்பா, யாழ்ப்பாண மேயராக இருந்தது ஒழுங்கமைப்பாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

அரசாங்கம் நெருக்கடிகளைக் கொடுத்தாலும், இம்மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு சிங்கள மக்கள் மத்தியிலும் ஆதரவு இருந்தது. சிங்களப் பொதுமக்கள், அறிஞர்கள் எனப் பலர் இந்த மாநாட்டை வரவேற்று ஆதரவு வழங்கினார்கள். இந்தத் தகவலை, இலங்கை கிளைக்குத் தலைவராக இருந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன், அம்மாநாட்டு நினைவுமலருக்கு எழுதிய செய்திக்குறிப்பில் விதந்துரைத்துள்ளார்.

இம்மாநாடு, அறிஞர்கள் பங்குகொள்கின்ற தமிழாய்வை முன்னெடுக்கும் ஒரு நிகழ்வு. ஆனால், இதைப் பொது மக்களுக்கான நிகழ்வாக மாற்றுவது என்ற யோசனை, தமிழரசுக் கட்சியினரால் முன்மொழியப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் இருந்தபோதும், இறுதியில் இம்முன்மொழிவு ஏற்கப்பட்டு, இறுதிநாள் நிகழ்வானது பொதுமக்களுக்கான நிகழ்வாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடத்த முடிவானது.

இந்நிகழ்வு நோக்கிய நகர்வுகள், ஏட்டிக்குப் போட்டியானவையாக மாறின. அரசாங்கம் என்னவகையில் தடுத்தாலும், நிகழ்வை நடத்தியே தீருவது என்று தமிழரசுக் கட்சி கங்கணம் கட்டிக்கொண்டது.

இதன் ஒருபகுதியாக, விசா மறுக்கப்பட்ட தமிழ்த் தேசியவாதியான ஜனார்த்தனனைக் களவாகக் கொண்டு வந்து, மேடையேற்றுவது என்று தமிழரசுக் கட்சித் தலைவர்கள் சிலரும் இளைஞர்களும் முடிவெடுத்தனர். இதன்மூலம் அரசாங்கத்தின் முகத்தில் அறைவது என்று முடிவானது.

இதன்படி, படகுவழியாகக் கள்ளமாக யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டம் குறித்த செய்திகள், பொலிஸாருக்குத் தெரிந்திருந்தன. ஒருவேளை, ஜனார்த்தனனை மேடையேற்ற முயன்றால், அதைத் தடுப்பதென்றும் தேவையேற்படின் அவரைக் கைது செய்வதென்றும் அரசாங்கம் முடிவெடுத்தது. இவை, ஓர் ஆராய்ச்சி மாநாடு, எவ்வாறு அரசியலானது என்பதற்கான சாட்சியங்கள்.

ஜனார்த்தனன் மேடையேற, அதைத்தடுக்க பொலிஸார் மேடையை நோக்கி விரைந்தனர். பொலிஸாரை இளைஞர்கள் தடுத்தனர். பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

கூட்டத்தைக் கலைக்க, பொலிஸார் வானத்தை நோக்கிச் சுட்டனர். பெருமளவில் முற்றவெளியில் கூடியிருந்த மக்கள் சிதறி ஓடினர். மின்சாரக் கம்பிகள் சரிந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி ஏழு பேர் உயிரிழந்தனர். இவ்வுயிரிழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆரம்பம் முதலே, இம்மாநாடு குறித்த பகையுணர்வும் சட்டம், ஒழுங்கை பொலிஸ் பேணத்தவறியமையும் ஏற்புடையதல்ல. அதேவேளை, இந்த உயிரிழப்புகள் குறித்த எந்தவொரு விசாரணையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

இதேவேளை, இந்த அனர்த்தத்துக்கு தமிழரசுக் கட்சியும் பொறுப்பு என்பதை மறுக்கவியலாது. தமிழரசுக் கட்சியின் பொறுப்பற்ற செயல்குறித்து யாரும் பேசுவதில்லை. இவ்வாறு, மக்களைக் குறிவைப்பதனூடாக, அரசியல் ஆதாயம் பெறும் புதிய யுத்தியை, தனது தேர்தல் அரசியலுக்காக தமிழரசுக் கட்சி தொடங்கியது.

இந்நிகழ்வுகள் தமிழரசுக் கட்சியின் உணர்ச்சிகர அரசியலுக்கு வலுவூட்டி, அரசியல் வன்முறைகளை இளைஞர்கள் கையிலெடுப்பதற்கு வழிகோலியது. இவ்வகையான வன்முறைகளுக்கு, மௌன அங்கிகாரத்தை வழங்கின. இதைத் தொடர்ந்து, துரையப்பாவில் தொடங்கியது கொலைக் கலாசாரம். அது, ஈழத் தமிழர் வரலாற்றின் கறைபடித்த பக்கங்கள்.

Posted in Uncategorized

இந்திய வௌியுறவு செயலாளரை சந்தித்த நிதி அமைச்சர் பசில்

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் அந்நாட்டு வௌியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தின் போது, அந்நாட்டு வௌிநாட்டலுவல்கள் அமைச்சர், கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் உதவி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்திய பிரதமர் – நிதி அமைச்சர் பசில் இடையே சந்திப்பு

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ புது டெல்லியில் வைத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவையும் சந்தித்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நிதியமைச்சர் நேற்று (15) இந்தியா சென்றுள்ளார்.

மக்கள் சக்தியின் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டது!

அரசாங்கத்திற்கு எதிராக, சஜித் பிரேமதாச தலைமையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரிய போராட்டம் இன்று(15) பிற்பகல் 2 மணிக்கு கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.

‘நாடு நாசம், மீட்டெடுப்போம்’ – எனும் தொனிப்பொருளின் கீழ் இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட இப் போரட்டத்திற்கு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவான பொது மக்கள் கொழும்பு நோக்கி படையெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி ஹட்டன், பொலன்னறுவை, காலி ஆகிய பிரதேசங்களிலிருந்தும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இப் போராட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.

கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு அருகிலிருந்தும், பி.டி.சிரிசேன மைதானத்திற்கு அருகிலிருந்துமென இரு இடங்களில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணிகள் ஆரம்பமாகியிருந்தன.

இந்த நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச மக்களுடன் ஆர்ப்பாட்டப் பேரணியில் இணைந்துள்ளார்.

இதன்போது மக்கள் சவப்பெட்டியை சுமந்து வருவதை காணக்கூடியதாக இருப்பதுடன், பலர் நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச போன்று வேடமிட்டு இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பசில் போன்று வேடமிட்டவர்கள் “என்னால் நாட்டை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது, மன்னித்து விடுங்கள்” என ஒப்பாரியுடன் கூறிக்கொண்டு பேரணியில் இணைந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்பின் முக்கிய பகுதியான காலிமுகத் திடலிலுள்ள ஜனாதிபதி செயலக முன்றலில் திரண்டு அப்பகுதியை முற்றுகையிட்டுள்ளனர்.

அதேவேளை ஜனாதிபதி செயலகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் வகையில் விசேட அதிரடிப்படையினர், கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட மக்கள் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தை அடைந்துள்ள நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டகாரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வெளியே வருமாறு அழைப்பதுடன், ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைவதற்கான பலத்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இப் போராட்டம் ஆரம்பிக்க காரணமாக அமைவது,

நாட்டில் பொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்துவருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மக்களுக்கு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது.

இதனையடுத்து அந்நிய செலாவணி கையிருப்பும் சடுதியாக குறைவடைந்துள்ளது. பொருளாதாரமும் சிதைவடைந்துள்ளது.

எனவே, இவற்றை சீர்செய்வதற்கு அரசாங்கத்திற்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படவுள்ளது.

இன்றைய போராட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த காலக்கெடுவுக்குள் தீர்வு இல்லையேல் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும், மக்களும் மற்றும் கட்சி ஆதரவாளர்களும் கலந்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி சந்திப்பு இரத்து

ஜனாதிபதி கோட்டாபாய ராயபக்சாவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமான இன்றைய சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை 3.30ற்கு இடம்பெறவிருந்த சந்திப்புத் தொடர்பில் கூட்டமைப்பினர் இன்று கலந்துகொளவது தொடர்பான நெருக்கடி தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

எனினும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அறிவித்திருந்தது.

பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வதெனில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சில பிரச்சனைகளிற்கு தீர்வை அறிவித்து பேச்சுக்குரிய சூழலை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.

இந்நிலையில் இன்று சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது, ரெலோ வின் நிலைப்பாடு மற்றும் எதிரணி இன்று திட்டமிட்டுள்ள போராட்டம் காரணமாக சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறும் என, ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.