சிறிநகர் கிராம மக்களின் 25 வருட கோரிக்கையான விளையாட்டு மைதானம் திறந்து வைப்பு

வவுனியாவில் சிறிநகர் மக்களின் 25 வருட கோரிக்கையாக இருந்த விளையாட்டு மைதானம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா சிறிநகரில் ரெட்ஸ்ரார் விளையாட்டு மைதானம் இன்று (12) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் விளையாட்டு போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .

இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான குறித்த விளையாட்டு மைதானம் கடந்த 25 வருடங்களாக பல்வேறு தரப்பினரின் கவனத்திற்குக்கொண்டு செல்லப்பட்டது.

இங்குள்ள வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களையும், அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்து கடந்த காலங்களில் போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர் .

நிலையில் இன்று அவர்களின் தேவையான விளையாட்டு மைதானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமை குழு உறுப்பினருமான வினோநோகதாரலிங்கத்தினால் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டு திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் ரெலோ மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமான செந்தில்நாதன் மயூரன் , தமிழ் தெற்கு பிரதேச சபை தவிசாளர் யோகராசா , இந்து மத குருமார் , பிரதேச சபை உறுப்பினர் , அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம பொது அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

அமெரிக்க புலனாய்வு அறிக்கை – கூறுவது? ஈழநாடு Editorial

அமெரிக்க தேசிய புலனாய்வு பணியகம் ஒவ்வோர் ஆண்டும்
வெளியிடும் உலகளாவிய அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கை (Annual Threat Assessment of the U.S Intelligent Community) வெளியாகி யிருக்கின்றது. இந்த அறிக்கையின்படி – சீனாவே முதல் அச்சுறுத்தலாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ரஷ்யா இரண்டாம் நிலையிலும், ஈரான் மூன் றாம் நிலையிலும் மதிப்பட்டிருக்கின்றது. வடகொரியா நான்காவது நிலை யில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதற்கு அடுத்த நிலையில் உலக சுகாதார நிலைமைகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

29 பக்கங்களை கொண்டிருக்கும் இந்த புலனாய்வு அறிக்கையில்,
28ஆவது பக்கத்தில், தெற்காசிய நிலைமைக்ள தொடர்பில் சுட்டிக்காட்டப்
படுகின்றது. தெற்காசியாவை பொறுத்தவரையில், முதலாவது அச்சுறுத்த
லாக ஆப்கானிஸ்தான் நிலைமைகள் குறிப்பிட்டிப்பட்டிருக்கின்றன.
இதற்கு அடுத்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் முறுகல் நிலைமை
சுட்டிக்காட்டப்படுகின்றது. அடுத்ததாக, இந்தியாவிற்கும் – சீனாவிற்கும்
எல்லைப்புறங்களில் காணப்படும் பதற்றங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருக்
கின்றன. இலங்கை தொடர்பிலோ ஏனைய தெற்காசிய நாடுகள் தொடர்
பிலோ எந்தவொரு தகவலும் குறிப்பிட்ட அறிக்கையில் இல்லை. அடிப்
படையில் தெற்காசியா தொடர்பான அமெரிக்க அவதானம் இந்தியாவை
மையப்படுத்தியிருப்பது தெளிவாகின்றது. இந்தியாவை அடிப்படையாகக்
கொண்டு ஏற்படும் முரண்பாடுகள் பதற்றங்களின் அடிப்படையிலேயே,
அமெரிக்காவின் தெற்காசியா தொடர்பான முடிவுகள் அமைந்திருக்கின்றன
என்பதையும் குறித்த அறிக்கை தெளிவாக பதிவு செய்கின்றது.

சர்வதேச அரசியலில் இலங்கை ஒரு விடயமே அல்ல என்பதை
இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். உலகமே
இலங்கையை அவதானித்துக் கொண்டிருப்பதான ஒரு தோற்றம் நமது
சூழலில் வலிந்து திணிக்கப்படுகின்றது. தேர்தல் காலங்களில் உலக
அதிகாரமான அமெரிக்காவும் பிராந்திய சக்தியான இந்தியாவும் ஈழத்
தமிழர்களை அண்ணார்ந்து நோக்கிக் கொண்டிருப்பதான ஒரு கதை
சொல்லப்படுவதுண்டு. கடந்த பொதுத் தேர்தலின்போது, பிராந்திய
சக்தியான இந்தியா தங்களுக்கு பின்னால் இருப்பதாக கூட்டமைப்பின்
தலைவர் சம்பந்தன், தெரிவித்திருந்தார். ஒரு பிராந்திய சக்தி கூட்டமைப்
புக்கு பின்னால் இருந்திருந்தால் – ஏன் கூட்டமைப்பால் எதனையும்
சாதிக்க முடியவில்லை? மக்கள் இப்படி கேள்வி கேட்கமாட்டார்கள்
என்னும் துணிவில்தான் தேர்தல் காலத்தில் இவ்வாறான பிரசாரங்களை
அரசியல்வாதிகள் துணிந்து கூறுகின்றனர்.

ஓர் உலகளாவிய அணுகுமுறை என்னும் அடிப்படையில், இலங்கை
யின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பில் அமெரிக்கா
அதன் கரிசனையை வெளிப்படுத்தி வருகின்றது. அந்த அடிப்படையில்
தான், ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ஊடாக இலங்கையின்மீது
கொடுக்கப்படும் அழுத்தங்களில் அமெரிக்கா அக்கறை செலுத்திவருகின்
றது. இதுதவிர, இலங்கையை ஒரு பிரதான விடயமாக அமெரிக்கா
கருதவில்லை. அதற்கான உலகளாவிய அவசியங்களும் இல்லை.
தெற்காசியாவில் ஏனைய சிறிய நாடுகளை நோக்குவது போன்றுதான்,
இலங்கைகையும் நோக்குகின்றது.

இந்தப் பின்புலத்தில் நோக்கினால் அமெரிக்காவின் தெற்காசியா
தொடர்பான கொள்கைத் தீர்மானங்கள், இந்தியாவின் கரிசனைகள்,
ஆர்வங்களின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகின்றன. ஏனெனில்,
இந்தியாவை அடிப்படையாகக் கொண்டுதான் அமெரிக்கா தெற்காசியா
வின் ஏனைய நாடுகளின் விடயங்களை உற்று நோக்குகின்றது. பொது
வாக ஒரு பிராந்தியத்தில் பெரியதொரு நாடு இருக்கின்றபோது, அந்த
பெரிய நாட்டை தவிர்த்து, புறம்தள்ளி உலக நாடுகள் செயல்பட முடியாது.
இந்த பின்புலத்தில்தான், இலங்கையின் மீதான அமெரிக்க ஈடுபாட்டை
நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விடயங்களை புரிந்து கொண்டு
தான், கொழும்பும் தற்போது, இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்
திக் கொள்வதில் கூடுதல் கரிசனையுடன் செயல்பட்டுவருகின்றது.

மக்கள் திண்டாட்டம் ! தட்டுப்பாட்டுக்கு மத்தியில் எரிபொருள் விலை அதிகரிப்பு : சமையல் எரிவாயுக்கு மக்கள் வரிசையில்

நாட்டில் பெற்றோல் , டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றுக்கு நிலவும் தட்டுப்பாடு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

எதிர்வரும் நாட்களில் இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு கிட்டும் என்று பொறுப்பு கூற வேண்டிய தரப்பினர் தெரிவித்த போதிலும் , நாடளாவிய ரீதியில் எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு

இவ்வாறான நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

அனைத்து வகையான டீசலின் விலைகளை 75 ரூபாவாலும் , அனைத்து வகையான பெற்றோலின் விலைகளை 50 ரூபாவாலும் அதிகரித்துள்ளதாக ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி ஒரு லீற்றர் டீசலின் விலை 15 ரூபாவாலும் , ஒரு லீற்றர் பெற்றோல் விலை 20 ரூபாவாலும் ஐ.ஓ.சி. அதிகரித்தது.

பெப்ரவரியில் இரண்டாவது தடவையாக இவ்வாறு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. அதற்கு முன்னர் பெப்ரவரி 6 ஆம் திகதியும் ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடியின் காரணமாக இறக்குமதி நிறுவனங்களுக்கு கடன் கடிதங்கள் விடுவிக்கப்படாமையின் காரணமாக கடந்த இரு வாரங்களாக சமையல் எரிவாயுவிற்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் நாடளாவிய ரீதியிலுள்ள பல உணவகங்களுக்கும் , பேக்கரிகளும் , சிற்றுண்டிசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் சமையல் எரிவாயு விநியோகத்தை ஆரம்பித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

எரிவாயு இறக்குமதிக்கான கொடுப்பனவுகள், கடன் கடிதங்களை விடுவித்துக் கொள்வதில் காணப்பட்ட சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டதையடுத்து எரிவாயு விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்றிலிருந்து கெரவலப்பிட்டி லிட்ரோ எரிவாயு சேமிப்பு முனையத்திலிருந்து இறக்குதல் , நிரப்;புதல் மற்றும் விநியோகம் ஆகியவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாகனங்களின் வரிசைகளில் மாற்றம் இல்லை

பெற்றோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு கடந்த திங்கட்கிழமை முதல் தீர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் , எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்னாள் வாகனங்கள் நீண்ட வரிசை இன்னும் குறைவடையவில்லை.

நாட்டின் சில பிரதேசங்களில் நள்ளிரவு வேளைகளிலும் வாகனங்கள் எரிபொருளுக்காக காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. சுமார் இரு கிலோ மீற்றரை விட நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

‘எரிபொருள் விலை 254 ரூபாவாகக் காணப்படுகிறது. நாம் எவ்வாறு வாழ்க்கையைக் கொண்டு செல்வது?’ , ‘மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நடந்து செல்வதே பொறுத்தமானதமாக இருக்கும்’ , ‘நாட்டின் பொருளாதாரத்தை முறையாக முகாமைத்துவம் செய்யாமையே இதற்கான காரணமாகும்.’ , ‘இதே போன்ற ஆட்சி தொடர்ந்தால் யுத்தத்தை விட மோசமான நிலைமையே ஏற்படும்.’ என்று வாகனங்களில் வரிசையில் காத்திருந்த சாரதிகள் விசனம் வெளியிட்டனர்.

பொதுமக்கள் அசௌகரியம்

சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியாமையால் ஹோட்டல் உரிமையாளர்கள் மாத்திரமின்றி சாதாரண மக்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பெருநகர்ப்பகுதிகளில் தொடர்மாடி குடியிருப்புக்களில் வாழும் மக்களே இதனால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்மாடி குடியிருப்புக்களில் மண்ணெண்ணெய் அடுப்பு மற்றும் விறகு அடுப்பு பாவனைக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்பதால் இந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையால் உணவு விலைகளும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக சமைத்த உணவை கொள்வனவு செய்வதிலும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அது மாத்திரமின்றி புறநகர் பகுதிகளில் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எரிவாயு இன்மையின் காரணமாக விறகு அடுப்புக்களில் உணவை சமைப்பதால் , சில சந்தர்ப்பங்களில் புகை மணம் வருவதால் சுற்றுலாப்பயணிகள் உணவை வாங்குவதில் பின்வாங்குவதாக சுற்றுலாத்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களுக்கு நாட்டில் பிரச்சினையிருக்கின்றது என்பதை ஜனாதிபதி முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்: கோவிந்தன் கருணாகரம்

தமிழர்களுக்கு இந்த நாட்டில் பிரச்சினையிருக்கின்றது என்பதை ஜனாதிபதி முதலில் ஏற்றுக்கொண்டு அதன் பின்னரே அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் பேச வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 15ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக அறிகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்திப்பதற்கு முயற்சிக்கின்றார்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பின்னர் அவரே அதனை இரத்து செய்து வேறு திகதியை வழங்குவதாக உறுதியளித்திருந்தார். அதன் பின்னர் எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை.

இருந்தபோதிலும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வடக்கு, கிழக்கில் நடைபெறும் காணி அபகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் இயங்கும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தபோது ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றினை கையளிக்க முயற்சித்தோம்.

ஆனால் அந்த நேரத்தில் ஜனாதிபதி இல்லை, பிறிதொரு திகதியைத் தருகின்றோம் என ஜனாதிபதி செயலகத்தினால் அன்று கூறப்பட்டிருந்தது.

அந்த வகையில் காணி அபகரிப்பு தொடர்பில் பேசவேண்டுமாகயிருந்தால் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரமல்லாமல் அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் அவர் பேசவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இனப்பிரச்சினை தொடர்பாக அவர் பேசவேண்டுமாக இருந்தால் சில விடயங்களை அவர் மக்களுக்குக் கூறவேண்டும். இந்த ஜனாதிபதி எங்கு சென்றாலும் தான் 69இலட்சம் சிங்கள மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி, தான் சிங்கள மக்களுக்காகக் கடமையாற்றக்கூடிய ஜனாதிபதி என்று கூறிவருகின்றார்.

கடந்த 18ஆம் திகதி நாடாளுமன்ற சிம்மாசன உரையில்கூட இந்த ஜனாதிபதி, தமிழ் மக்களுக்கு ஒரு இனப்பிரச்சினையிருக்கின்றது, அதற்கு ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்றுகூடக் கூறமுடியாதவர். இன்று ஐக்கிய நாடுகள் சபை உட்படப் பல இடங்களில் தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினையில்லை, அவர்களுக்குப் பொருளாதார பிரச்சினையென அவரின் பிரதிநிதிகள் கூறிவருகின்றனர்.

முதலில் அரசியல் தீர்வு, இனப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசவேண்டுமாக இருந்தால் தமிழினத்திற்கு ஒரு பிரச்சினையிருக்கின்றது, அவர்களுக்கு ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்று என்பதை முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு அவர்களுக்குத் தேவையில்லை, பொருளாதாரம் சார்ந்த தீர்வுதான் தேவையென்று கூறிக்கொண்டு அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசவேண்டிய தேவையில்லை. கடல் இல்லாத ஆப்கானிஸ்தானுக்கு கடற்றொழில் அமைச்சர் எதற்கு என்று அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்கள்.

நீதியில்லாத இலங்கைக்கு நீதி அமைச்சர் எதற்கு என்பதைப் போல ஜனாதிபதி இங்கு இனப்பிரச்சினையில்லை என கூறிக்கொண்டு இனப்பிரச்சினை தொடர்பான தீர்வு தொடர்பில் பேசவேண்டிய தேவையில்லை. முதலில் ஜனாதிபதி இங்குள்ள தமிழர்களுக்குப் பிரச்சினையிருக்கின்றது, அவர்களுக்கான ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை முதலில் அவர் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அதன் பின்னர் அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசவேண்டும். அதற்கும் மேலாகக் கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல தடவைகள் ஏமாற்றியுள்ளார்கள்.

2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் 13வது திருத்தச் சட்டத்திற்கு மேலாகச் சென்று தீர்வினை வழங்குவேன் என்று கூறிக்கொண்டு 18சுற்றுப் பேச்சுவார்த்தைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடாத்தி அவர்களாகவே முறித்துக்கொண்டார்கள்.

அதனைப்போன்ற பல அனுபவங்கள் எங்களுக்கு உண்டு. அதன் காரணமாக ஜனாதிபதி இந்த இனப்பிரச்சினை தொடர்பாகத் தமிழர்களின் அபிலாசைகள் தொடர்பாக ஒரு நல்லெண்ண வெளிப்பாட்டைக் காட்டவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் 15 அடிப்படை பிரச்சினைகளை அடையாளப்படுத்தியுள்ளது. காணி அபகரிப்பு, பயங்கரவாத தடைச்சட்டம், அரசியல் கைதி விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை ஆகிய 15 பிரச்சினைகளை அடையாளப்படுத்தியுள்ளது.

அரசியல் கைதிகளில் ஒரு தொகுதியினை விடுதலை செய்துவிட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவேன் என்ற உறுதிமொழியை வழங்கிவிட்டு, தொல்பொருள் திணைக்களம், வன இலாகா போன்ற திணைக்களங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புகளை உடனடியாக நிறுத்திவிட்டு நல்லெண்ண வெளிப்பாட்டைக் காட்டிவிட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதுதான் நியாயமாகும்.

அவ்வாறான நல்லெண்ணத்தினை அவர் வெளிப்படுத்திய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்குச் செல்வதுதான் தமிழ் மக்களின் நலன் சார்ந்ததாகவிருக்கும் என்பது தமிழீழ விடுதலை இயக்கத்தின் நிலைப்பாடாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

சர்வதேச பொறியிலிருந்து தங்களை விடுவிப்பதற்கு எம்மை பயன்படுத்த இடமளிக்க முடியாது -ரெலோ

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று அழைப்பு விடுத்திருந்தார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (15) மாலை 3.30 மணிக்கு சந்திப்பிற்கான நேரமும் ஒதுக்கியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு ரெலோவின் அரசியல்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களின் பின்னர், இது தொடர்பில், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனால், இரா.சம்பந்தனிற்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை அவரமாக பேச்சுவார்த்தைக்கு குறுகிய கால அவகாசத்தில் அழைத்திருக்கிறார். இது சம்பந்தமாக எமது கட்சியின் அரசியல் உயர்பீடம் நடாத்திய ஆய்வின் அடிப்படையில் பின்வரும் கருதுக்களை முன்வைக்கிறோம்.

இலங்கை அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது அவசியம் என்பதை ஏற்றுக் கொண்ட பொழுதிலும் இந்த நேரத்திலே அரசாங்கம் எம்மை அழைத்து இருப்பதென்பது எங்களை ஒரு பகடைக் காயாகப் பாவித்து சர்வதேச மற்றும் உள்ளக அரசியல் அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நடவடிக்கையாக அமைந்துவிடும் என்று நாங்கள் கருதுகிறோம்,.

ஜனாதிபதி அவர்கள் பதவியேற்ற காலத்திலிருந்து தான் சிங்கள-பௌத்த மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர் எனவும் அவர்களுடைய கருத்துக்களுக்கும் அபிலாசைகளுக்குமே முன்னுரிமை வழங்குவேன் என்றும் தெரிவித்து வருவதோடு மட்டுமல்லாமல் அந்த வகையிலே தான் அவருடைய நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன. குறிப்பாக தமிழர்களுடைய காணிகளை பல்வேறு திணைக்களங்களின் ஊடாக கையகப்படுத்தி வருவதோடு நவீன முறையிலே குடிப்பரம்பல் சிதைப்பையும் திட்டமிட்ட வகையில் ஒரு காலமும் இல்லாத வகையில் நிறைவேற்றி வருகிறார். எமது கோரிக்கைகள் போராட்டங்கள் எல்லாம் பயனற்றவையாகவே போயிருக்கின்றன.

ஓரினத்தின் தலைவரே தாமும் இந்த அரசும் என்ற அவரின் நிலைப்பாடு நல்லிணக்கதிற்கோ பொறுப்புக் கூறலுக்கோ வழியமைக்காது. அத்துடன் மற்றைய இனங்களின் அங்கீகாரத்தையும் மறுதலிப்பதோடு இனப்பிரச்சினை தீர்வுக்கான கதவுகளையும் மூடி நிற்கிறது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு இனபிரச்சனை இல்லை பொருளாதாரப் பிரச்சனையே இருக்கின்றது என்று ஐநா வரையில் ஜனாதிபதியும் மற்றும் பல இடங்களில் அவர் சார்ந்தோரும் தெரிவித்து வருகிறார்கள். இலங்கையில் தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சனை உண்டு என்பதையும் அதற்கான தீர்வு அவசியம் என்பதையும் ஜனாதிபதி தனது நிலைப்பாடாக வெளிப்படுத்துவது அவசியம் என நாம் கருதுகிறோம்

அத்தோடு பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமை ஆகிய விடயங்களில் அரசாங்கம் எந்தவித அக்கறையும் செலுத்தாமல் செயல்பட்டு வருகிறது. கடந்த ஐநா மனித உரிமை பேரவை அமர்வில் மனித உரிமைக்கான உயர்ஸ்தானிகர், இலங்கை அரசாங்கம் மனித உரிமை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகிய விடயங்களில் பாரிய பின்னடைவை சந்தித்து வருகிறது என்று தெரிவித்து இருப்பதோடு சர்வதேச நீதிப் பொறிமுறையின் முன் இலங்கையை பாரப்படுத்துமாறு மனித உரிமை பேரவை அங்கத்துவ நாடுகளுக்கு வலியுறுத்தியிருக்கிறார். எமக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் நாடுகளும் அந்த நிலைப்பாட்டிலே கவனம் செலுத்துகிறார்கள். குறிப்பாக இந்தியா, ஐநா மனித உரிமைப் பேரவையின் நடந்துமுடிந்த கூட்டத்தொடரில் காத்திரமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

தங்கள் தலைமையிலே தமிழ்தேசிய பரப்பில் செயலாற்றும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்ட அனைத்து கட்சிகளும் ஒருமித்து அண்மையில் இந்தியாவிற்கு முன்வைத்த கோரிக்கைக்கு பின்னர் இந்திய தரப்பில் ஏற்பட்டிருக்கும் பாரிய மாற்றத்தினை இது எடுத்துக்காட்டியுள்ளது. தமிழ் மக்களுடைய நியாயமான அபிலாசைகளை தீர்க்கக்கூடிய அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமை விடயங்களிலும் இலங்கையை தாங்கள் வலியுறுத்துவதாக இந்தியா தெரிவித்திருப்பது எம்மக்களுக்கு நம்பிக்கை தரும் விடயமாக இருக்கிறது.

இந்தச் சூழல் ஒருபுறமிருக்க, சர்வதேச அரசியலிலும் உள்ளக பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கும் அரசாங்கம் முகம் கொடுத்து இருக்கின்றது.

எமது மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் எமது இனப்பிரச்சினை சம்பந்தமாகவும் முடிவுகளை எடுப்பதற்கு பல தடவைகள் நாங்கள் கோரிக்கைகளை விடுத்தும் எங்களை உதாசீனம் செய்த ஜனாதிபதி இன்று எங்களை அழைத்திருப்பதானது அவர்கள் முகம் கொடுத்து இருக்கக்கூடிய சிக்கல்களில் இருந்து தங்களை விடுவிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை பயன்படுத்த நாங்கள் இடமளிக்க முடியாது. அது எங்களுடைய மக்களும் எமது மக்களுக்காக இந்தியாவும், சர்வதேசமும், நாங்களும் எடுத்து வரும் முயற்சிகளுக்கு பின்னடைவாக அமைந்துவிட ஒருபோதும் இடமளித்து விடக்கூடாது என்பதில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்.

மேலே குறிப்பிட்ட நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களை அரசாங்கம் நிராகரித்தும் அதை செயல்படுத்த முடியாது என்றும் உறுதிபட தெரிவித்து வருகிறார்கள். எனவே இந்த சந்திப்பு எந்த அளவிற்கு தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதில் நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம்.

இந்தப் பின்னணியில் நல்லிணக்க நடவடிக்கையாக அரசாங்கம் தமது தரப்பில் செயற்படுத்தக் கூடிய விடயங்களான காணி அபகரிப்பை முற்றாக நிறுத்துதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், அரசியல் கைதிகள் உடனடி விடுதலை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான பதில் உட்பட, குறிப்பாக ஐநா மனித உரிமைப் பேரவையின் பிரேரணையில் கூறப்பட்ட பல விடயங்களில் ஏதாவது ஒரு சில விடயங்களை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு காத்திரமான எமது மக்களுக்கு நம்பகத்தன்மையான சூழலை ஏற்படுத்துவதே பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல வழிவகுக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். அப்படிப்பட்ட நல்லிணக்க நடவடிக்கையை அரசாங்கம் நிறைவேற்றிய பின்னர் இந்த சந்திப்பில் கலந்து கொள்வது எமது இனத்துக்கு ஆதரவாக செயற்பட்டு கொண்டிருக்க கூடிய இந்தியா உட்பட சர்வதேச நாடுகளுடைய முயற்சிக்கு வலுசேர்த்து எமது மக்களுக்கு காத்திரமான அரசியல் தீர்வையும் நீதியையும் பெற்றுத் தருவதற்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம்.
.
கடந்தகாலங்களில் ராஜபக்க்ஷ தலமையிலான அரசோடு பேச்சுவார்த்தை நடாத்திய அனுபவங்களையும் இங்கு நினைவு கூருவது பொருத்தமானது.

ஆகவே தாங்கள் இவற்றை கருத்தில் கொண்டு அரச தரப்பில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க சமிக்ஞையின் செயற்பாட்டின் அடிப்படையில் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதே ஆக்கபூர்வமானதாக அமையும் என்பதை அரச தரப்பிற்கு தற்போதைய சூழலில் எமது நிலைப்பாடாக தெரிவிப்பதே எமது மக்கள் நலன் சார்ந்ததாக அமையும்.

தாங்கள், மேற்கூறிய விடயங்களை கவனத்தில் எடுத்து இவ்விடயத்தில் செயலாற்ற வேண்டுமென மிக அக்கறையுடன் கோருகிறோம்.

இப்படிக்கு
அ. அடைக்கலநாதன் பா.உ
தலைவர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்.

Posted in Uncategorized

யாழ் மாநகரத்தின் மின்சாரத் துண்டிப்பை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்! மாநகர பிரதி முதல்வர் ஆளுநரிடம் கோரிக்கை

யாழ் நகரப் பகுதிகளில் மின்சார சிக்கனம் என்ற போர்வையில் மின் துண்டிப்பை மேற்கொள்வதை வடமாகாண ஆளுநர் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என ரெலோ யாழ் மாவட்ட பிரதி தலைவரும் யாழ் மாநகர பிரதி முதல்வருமான துரைராசா ஈசன் வேண்டுகோள் விடுத்தார்.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ் மாநகர சபையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் உள்ளுராட்சி மன்றங்களில் மின்சார சிக்கனத்தை பேணுமாறு சுற்றுநிறுபம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை வலியுறுத்தி வடமாகாண ஆளுநர ஜீவன் தியாகராஜா உள்ளூராட்சி மன்றங்களுக்கு வீதி மின்விளக்குகளின் மின்சார சிக்கனத்தை பேணுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ் நகரப் பகுதிகளில் ஐந்துக்கு மேற்பட்ட எரிபொருள் நிலையங்கள் மற்றும் மொத்த வியாபார வர்த்தக நிலையங்கள் காணப்படுகின்றன நிலையில் மக்கள் இரவு நேரங்களில் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

ஏனெனில் எரிபொருளுக்காக மக்கள் இரவு நேரங்களில் எரிபொருள் நிலையங்களில் காத்திருக்கின்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறான நிலையில் வீதி மின் விளக்குகளை அணைக்கும்போது வீதி விபத்துக்கள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அசௌகரியத்தையும் ஏற்படுத்துகிறது.

நாட்டில் இராணுவ அதிகாரிகளின் ஆலோசனைப்படி நிர்வாகங்களை நடத்துவதால் தேவையற்ற முடிவுகளை தேவையற்ற நேரங்களில் மேற்கொள்கிறார்கள்.

அமைச்சர்கள் மற்றும் அரசாங்க பிறவிகள் தமது சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வருகின்ற நிலையில் சாதாரண மக்களை நெருக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.

எரிபொருள் விலையேற்றம் சமையல் எரிவாயுக்குத் தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு என மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்ற நிலையில் மின்சாரத்தையும் துண்டித்து அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது.

யாழ் நகரப் பகுதிகளில் பல மின் விளக்குகள் துண்டிக்கப்பட்டதாக அறியக் கிடைக்கும் நிலையில் அதனை மீள பொருத்துவதற்கு வடமாகாண ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்க வேண்டும்.

ஆகவே குறித்த விடயம் தொடர்பில் வட மாகாண ஆளுநருக்கு எழுத்து மூலமான கடிதம் ஒன்றை அனுப்புவதற்கு தயாராக இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்கத் தூதுவர் அஞ்சலி !

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்ட ஜூலி சங் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

அங்கு விஜயம் மேற்கொண்ட தூதுவர் ஜூலி சங், உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த 5 அமெரிக்கர்கள் உளிட்ட ஏனையவர்களையும் நாம் இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூருகின்றோம். அத்துடன் அமைதிக்காக நாம் அனைத்து மதத்தினருடனும் இணைந்து நிற்கின்றோம்.

இந்த ஆலயம் இலங்கையின் மத பன்முகத் தன்மையை வெளிப்படுத்துவதாக திகழ்வதுடன் நாட்டின் நெகிழ்ச்சித் தன்மைனை வெளிக்காட்டுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இந்தியப் பெருங்கடல் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் : கொழும்பு மாநாட்டில் அஜித் தோவல்

கடல்சார் பயங்கரவாதம் உள்ளிட்ட பகிரப்பட்ட பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் அண்டை நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தினார்.

மாலைதீவில் இடம்பெற்ற 5 ஆவது கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அஜித் தோவல் இதனைத் தெரிவித்தார்.

புதன்கிமை ஆரம்பிக்கப்பட்டு இரு நாட்களாக இடம்பெற்ற இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை, மாலைதீவு, மொரிஷியஸ், பங்களதேஷ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பகிரப்பட்ட பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள கடல்சார் அண்டை நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தினார்.

மாநாட்டில் உரையாற்றிய மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா தீதி கூறுகையில், போதைப்பொருள் கடத்தல், மனித கடத்தல், கடற்கொள்ளையர், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் வன்முறை தீவிரவாதம் போன்ற மாலைத்தீவு எதிர்கொள்ளும் பிராந்திய பாதுகாப்பு சவால்களை எடுத்துரைத்ததோடு ரஷ்யா-உக்ரைன் மோதலின் தாக்கங்களையும் குறிப்பிட்டார்.

உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை 4 ஆக உயர்த்தப்பட்டதுடன் பார்வையாளர் நாடுகள் விரைவில் மாநாட்டில் சேரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பங்களாதேஷ் மற்றும் சீஷெல்ஸ் ஆகியவை பார்வையாளர் நாடுகளாகும்.

கடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு, மனித கடத்தல், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இணைய பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு தூண்களான பாதுகாப்பு ஒத்துழைப்புடன் இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையே ஒரு முத்தரப்பு பாதுகாப்பு கட்டமைப்பாக கொழும்பு பாதுகாப்பு மாநாடு நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) அடுத்த மாதம் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க இலங்கை தீர்மானித்துள்ளது.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகளிடம் இலங்கையின் பிரேரணையை கையளிப்பதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வொஷிங்டன் செல்ல உள்ளார்.

இந்த விஜயம் ஏப்ரல் நடுப்பகுதியில் இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் சில வாரங்களில் இலங்கை அதிகாரிகளுக்கும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெறவுள்ள சந்திப்பு கடன் மறுசீரமைப்பு நோக்கத்திற்காக அல்ல என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சில செய்தி நிறுவனங்கள் வௌியிட்டு செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு மீண்டும் 500 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது இந்தியா

இலங்கையில் எழுந்துள்ள எரிபொருள் நெருக்கடியை நிவர்த்திக்க ஒத்துழைப்பு வழங்குவதற்கு இந்தியா தயாராகி வருகின்றது.

இதற்கமைய, இந்தியாவின் EXIM வங்கி இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடன் வழங்கவுள்ளது.

இந்த கடன் வசதியின் கீழ் கொள்வனவு செய்யப்படும் முதலாவது எண்ணெய் தொகை இந்த மாதம் 15 ஆம் திகதி கிடைக்கவுள்ளது.

500 மில்லியன் டொலரில் 75 வீதத்தை இந்தியாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்த வேண்டும் என இந்திய EXIM வங்கி தெரிவித்துள்ளது.

25 வீதத்தை மூன்றாவது தரப்பிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்த முடியும்.

இந்த கடனை மீள செலுத்துவதற்கான கால அவகாசத்தை 12 மாதங்களை விட நீடிக்க முடியாது என இந்திய EXIM வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியா ஏற்கனவே அத்தியாவசிய பொருள் கொள்வனவிற்காக வழங்கிய 500 மில்லியன் டொலர் கடன் , 400 மில்லியன் டொலருக்கான வட்டியை மீளச் செலுத்துவதற்கு இலங்கை கால அவகாசம் கோரியுள்ள பின்புலத்திலேயே இந்தியா இந்த கடன் தொகையை வழங்குகின்றது.

மருந்து, அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மேலும் ஒரு பில்லியன் டொலர் கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

இதன் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக நிதி அமைச்சர் அடுத்து வரும் சில வாரங்களில் இந்தியா செல்லவுள்ளார்.

இதேவேளை, இந்தியா கடனை வழங்குவதற்காக கடும் நிபந்தனைகளை விதித்துள்ளதாக அண்மையில் தகவல் வௌியானது.