உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அறிக்கை கோரிய மிச்சல் பச்லட்

மனித உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதை இனங்கண்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பச்லட் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் கூடுதலாக ஈடுபடுவதை அண்மைக்காலத்தில் காணமுடிந்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான விவாதத்தின்போது அவர் நேற்று இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் உரிமைகளை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலமை தொடர்பில் விரைவில் தீர்மானிக்குமாறும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தேவையான இழப்பீடுகளை வழங்குமாறும் அவர் கேட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில ஏற்பாடுகளைத் திருத்தியமைப்பதற்கும் அந்தச் சட்டத்தின் கீழ் பல கைதிகளை விடுதலை செய்வதற்கும் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் மீண்டும் ஏற்டாமல் தவிர்ப்பதற்குத் தேவையான ஆழமான சட்ட, நிறுவன மற்றும் பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்களை எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்ட வேண்டும். எனினும், கடந்த வருடம் பொறுப்புக்கூறும் செயற்பாட்டில் தொடர்ந்தும் பின்னடைவைக் காண முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அனைவரினதும் மனித உரிமைகளுக்காக அரசாங்கம் குரல் கொடுக்க வேண்டும். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான நம்பத் தகுந்த வழிவகைகளை அரசாங்கம் இன்னமும் முன்வைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கான இழப்பீடு அதேபோல் தாக்குதல்களின் தன்மை, பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பு என்பனபற்றிய விரிவான அறிக்கையொன்றை அவர் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை இலங்கை அரசாங்கம் பாதுகாக்கின்றது – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களைப் பாதுகாப்பதுடன் சட்டத்தின் ஆட்சியைப் புறக்கணித்துச் செயற்பட்டுவரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கையின் சர்வதேச பங்காளிகளும் கடந்தகால மீறல்களுக்கான நீதிநாட்டப்படுவதற்கும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதற்குமான அழுத்தங்களைத் தொடர்ந்து வழங்குவார்கள் என்று பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள்.

எனவே மனித உரிமைகள் நிலைவரத்தில் உண்மையான முன்னேற்றம் அடையப்படுவதை இலக்காகக்கொண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் இலங்கை அரசாங்கத்தின்மீது பிரயோகித்துவரும் அழுத்தத்தை இருமடங்காக்கவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையானது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் கரிசனைக்குரிய மட்டத்தில் இருப்பதைக் காண்பிப்பதுடன் மனித உரிமைகள் நிலைவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்ற இலங்கை அரசாங்கத்தின் கருத்திற்கு முரணானதாகவும் அமைந்துள்ளது.

அதுமாத்திரமன்றி கடந்தகால மீறல்கள் குறித்து இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படாத நிலையில், இன, மத சிறுபான்மையினத்தவருக்கு எதிரான அடக்குமுறைகள், சிவில் சமூகப்பிரதிநிதிகளை இலக்குவைத்து பாதுகாப்புத்தரப்பினரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலும் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள், இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு எதிராகத் தடைகளை விதித்தல், இலங்கையில் இடம்பெற்ற மீறல்களுக்கு சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் நீதியை நிலைநாட்டுதல், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையர்களுக்குப் புகலிடம் வழங்கல் மற்றும் கடந்த ஆண்டு மனித உரிமைகள் பேரவையினால் உருவாக்கப்பட்ட பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கல் உள்ளடங்கலாக உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும்.

அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபையானது இலங்கையின் பாதுகாப்புப்படையினருடன் தொடர்புகளைப் பேணும்போதும் ஐ.நா அமைதிகாக்கும் படைக்கான இலங்கையின் பங்களிப்பு குறித்து மதிப்பீடுகளை மேற்கொள்ளும்போதும் மனித உரிமைகள் தொடர்பான அதன் (ஐ.நாவின்) தரநியமங்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்தவேண்டும்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் சர்வதேசத்தினால் முன்வைக்கப்பட்ட கருத்திற்கு, அரசாங்கம் பொய்யானதும் தவறாக வழிநடத்தக்கூடியவாறானதுமான பொதுத்தொடர்புகளின் மூலம் பதிலளிக்கின்றது.

ஆகவே மனித உரிமைகள் நிலைவரத்தில் உண்மையான முன்னேற்றம் அடையப்படுவதை இலக்காகக்கொண்டு உறுப்புநாடுகள் இலங்கை அரசாங்கத்தின்மீது பிரயோகித்துவரும் அழுத்தத்தை இருமடங்காக்கவேண்டும்.

கடந்த 1983 – 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நடைபெற்ற சிவில் யுத்தம் இருதரப்பிலும் பல்வேறு மீறல்கள் இடம்பெறுவதற்கு வழிவகுத்தது.

இறுதிக்கட்டப்போரின் போது அரசாங்கத்தினாலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தினாலும் பெருமளவில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களை ஐக்கிய நாடுகள் சபை ஆவணப்படுத்தியிருந்தது.

அந்த மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்குப் பதிலாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு எதிராக கொள்கைகளைப் பின்பற்றிவருகின்றது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற மிகமோசமான குற்றங்களையும் அதற்கான பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்வதற்குத் தாம் தயாரில்லை என்பதைத் தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக வெளிக்காட்டிவரும் அதேவேளை, போர்க்குற்றங்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இராணுவ அதிகாரிகள் சிலர் அரசாங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச்செயலாளர் கமால் குணரத்ன மற்றும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்டோர் மனித உரிமை மீறல் குற்றங்களுக்கான கட்டளை பிறப்பிக்கும் பொறுப்பை வகித்துள்ளனர்.

அதேபோன்று கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 பேர் வலிந்து காணாமலாக்கப்பட்ட விவகாரத்துடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு ஓகஸட் மாதம் சட்டமா அதிபரினால் வாபஸ் பெறப்பட்டமை குறித்தும் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் அவர் ஜனாதிபதியினால் வடமேல்மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

சட்ட அமுலாக்கம் உள்ளடங்கலாக அரசாங்கத்தின் சிவில் செயற்பாடுகளில் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கல் தொடர்பிலும் தாம் பாரபட்சமாக நடத்தப்படுவதாக முறைப்பாடுகள் அளிக்கப்பட்டதும் தமிழ்மக்கள் செறிந்துவாழும் பகுதியுமான வடமாகாணத்தில் குறித்த எண்ணிக்கையிலான இராணுவ சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளமை குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் அரச அதிகாரிகளுக்கும் சிறுபான்மையின சமூகத்தைச்சேர்ந்த நபர்களுக்கும் இடையிலான 45 கருத்து முரண்பாட்டுச்சம்பவங்களையும் ஐக்கிய நாடுகள் சபை பதிவுசெய்துள்ளது.

பௌத்த அடையாங்களைக் கண்டறிவதற்கும் பௌத்த தலங்களை நிர்மாணிப்பதற்கும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையின் மூலம் கிழக்கு மாகாணத்தின் பாரம்பரிய, பூகோள அடையாளம் மாற்றியமைக்கப்படக்கூடும் என்ற அச்சம் சிறுபான்மையின மக்கள் மத்தியில் காணப்படுவதாக மிச்சேல் பச்லெட் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களுக்கு முன்னர் இராணுவப்புலனாய்வு அதிகாரிகள் குண்டுதாரிகளைப் பாதுகாப்பதற்கு முயன்றதாக அந்த மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார் என்றும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் சிவில் சமூக இடைவெளியைப் பாதுகாப்பதற்கும் கடந்தகால மீறல்களுக்கான நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதற்குமான அழுத்தங்களைத் தொடர்ந்து வழங்குவார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மீறல்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலங்கையின் சர்வதேச பங்காளிகள்மீதே தங்கியிருக்கின்றார்கள் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

குறுகிய காலத்தில் அரசாங்கம் மக்களால் வெறுக்கப்படுவதற்கு நிதியமைச்சர் பஷிலே காரணம் – பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள்

நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு வழங்கிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தற்போது முழுமையாக இல்லாதொழித்து விட்டார்.

குறுகிய காலத்தில் அரசாங்கம் மக்களால் வெறுக்கப்படுவதற்கு நிதியமைச்சர் பொறுப்புக்கூற வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சி தலைவர்களும்,உறுப்பினர்களும் குறிப்பிட்டனர்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச,பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதயகம்மன்பில ஆகியோர் ஜனாதிபதியால் உடனடியாக அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சி தலைவர்கள்,உறுப்பினர்கள் ஒன்றினைந்து நேற்று கொழும்பில் விஷேட ஊடக சந்திப்பை நடத்தினர்.

இந்த ஊடக சந்திப்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச,பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார,விஜயதரணி தேசிய சபையின் தலைவர் அத்துரலியே ரத்ன தேரர்,லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன கம்யூனிச கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் டி.யு குணசேகர,கம்யூனிச கட்சியின் பதில் தலைவர் வீரசுமன வீரசிங்க,

சுதந்திர கட்சியின் பிரதிநிதியொருவர், இராஜங்க அமைச்சர் ஜயந்த சமரவீர,பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்பில் உட்பட பங்காளி கட்சிகளின் உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் முறையற்ற செயற்பாடுகளுக்கு பங்காளி கட்சியின் தலைவர்கள் தொடர்ந்து தடையாக செயற்படுவதால் அவர் பங்காளி கட்சிகளை அரசாங்கத்திலிருந்து வேறுப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுப்பட்டார்.

நிதியமைச்சரின் செயற்பாடுகள் பொருளாதார பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் காணப்படுகிறதே தவிர நெருக்கடியை சீரமைக்கும் தன்மையில் அமையவில்லை.

தனக்கு தான் அனைத்தும் தெரியும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு செயற்படுவதால் அவர் பிற தரப்பினரது ஆலோசனைகளுக்கு மதிப்பளிப்பதில்லை.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவ பதவி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பெயரளவில் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் பதவி அரசியல் குறித்து அனுபமில்லாத பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

முறையாக பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டுமாயின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் பதவி அமைச்சர் டலஸ் அழகப்பெருமளவிற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

அரசியல் புலமையின் அடிப்படையில் பொதுஜன பெரமுன கட்சியில் பதவி வழங்கப்படவில்லை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் கருத்திற்கு இசைபாடும் தரப்பினருக்கு மாத்திரம் கட்சியில் பதவி வழங்கப்பட்டன.

அரசாங்கததிற்கு நாட்டு மக்கள் வழங்கிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை மழுங்கடித்து குறுகிய காலத்தில் அரசாங்கத்தை மக்கள் வெறுக்கும் சூழலை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவே தோற்றுவித்தார் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

பொருளாதார பாதிப்பிற்கு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பொறுப்பு கூற வேண்டும்.பங்காளி கட்சிகளின் கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் அவர் மதிப்பளிப்பதில்லை. தன்னிச்சையாக செயற்பட்டு தீர்மானங்களை முன்னெடுப்பதால் நாடும்,நாட்டு மக்களும் தற்போது பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

நாட்டு மக்கள் குறித்து நிதியமைச்சர் அக்கறை கொள்ளவில்லை.மக்களின் பிரச்சினை குறித்து கருத்துரைத்ததால் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டோம்.

சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்திற்கு அமைய அரசாங்கம் செய்ற்படவில்லை.அமெரிக்காவின் ஆதிக்கத்தில் இருந்து நாட்டை பாதுகாக்கும் போராட்டத்தில் இனி ஈடுப்படுவோம் என முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்தார்.

Posted in Uncategorized

வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நீதி எங்கே ? – சர்வதேச மன்னிப்புச்சபை

நாட்டில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை நிலைநாட்டுவதில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் செயற்திறனான முறையில் இயங்கிவருவதாக சர்வதேச சமூகத்திற்குக் காண்பிக்கவேண்டும் என்பதில் அரசாங்கம் தெளிவாக இருக்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிபலிப்பு உள்ளிட்ட உண்மை நிலைவரங்களுடன் ஒப்பிடுகையில் சர்வதேச சமூகத்திற்குக் கூறப்படும் விடயங்கள் பொய்யானவை என்பதைப் புரிந்துகொள்ளமுடிவதாகவும் தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீதி வழங்கப்படாத நிலையில், ‘இன்னமும் பதில் வழங்கப்படவில்லை’ என்ற தலைப்பில் ஆவணப்படுத்தல் வடிவிலான அறிக்கையொன்றை சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களிடம் நடாத்தப்பட்ட நேர்காணல்கள் மற்றும் முதலாம், இரண்டாம்கட்ட ஆய்வுகளின் மூலம் திரட்டப்பட்ட தகவல்களை அடிப்படையாகக்கொண்டு மன்னிப்புச்சபை இவ்வறிக்கையைத் தயாரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உறுப்பினர்களிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தொடக்கம் இவ்வாண்டு பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் 28 நேர்காணல்கள் மேற்கொள்ளப்பட்டதாக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்களின் சுருக்கம் வருமாறு:

வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டுக்குழுவின் தரவுகளின்படி, இலங்கையில் 6,259 வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதுடன் ஈராக்கிற்கு அடுத்ததாக உலகிலேயே அதிகளவான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவான இரண்டாவது நாடாக இலங்கை இருக்கின்றது.

எனினும் இலங்கையில் கடந்த 1980 ஆம் ஆண்டிலிருந்து குறைந்தபட்சம் 60,000 அல்லது 100,000 வரையிலான வலிந்து காணாமலாக்கப்படல்கள் இடம்பெற்றிருக்கக்கூடும் என்று நாம் மதிப்பிட்டுள்ளோம்.

இலங்கையின் வடமாகாணத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உண்மையையும் நீதியையும்கோரி ஆரம்பித்த தொடர் போராட்டம் கடந்த பெப்ரவரி மாதத்துடன் 5 வருடங்களைப் பூர்த்திசெய்துள்ளது.

பலவருடகாலமாக பல்வேறு உள்ளகப்பொறிமுறைகள் நிறுவப்பட்டபோதிலும், சர்வதேச சட்டங்களின் பிரகாரம் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பதில்களை வழங்குவதற்கும் அதற்கான நீதியை நிலைநாட்டுவதற்கும் இலங்கை அரசாங்கம் தவறியிருக்கின்றது.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உண்மையை வெளிப்படுத்தல், நீதியை நிலைநாட்டல், இழப்பீடு வழங்கல் ஆகிய கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு ஏற்புடைய வகையில் காணாமல்போனோர் அலுவலகம் மிகவும் செயற்திறனான முறையில் இயங்கிவருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் ஏனைய உறுப்புநாடுகளுக்கும் காண்பிக்கவேண்டும் என்பதில் இலங்கை அரசாங்கம் தெளிவாக இருக்கின்றது.

இருப்பினும் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கம் காண்பிக்கின்ற பிரதிபலிப்பு உள்ளிட்ட உண்மை நிலைவரத்துடன் ஒப்பிடுகையில் அரசாங்கம் கூறுகின்ற விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை என்பதை நாம் முன்னெடுத்த ஆய்வின் மூலம் புரிந்துகொள்ளமுடிகின்றது.

போரின்போதும் அதன் பின்னரும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், தமது கேள்விகளுக்கான பதில்களைக்கோரி துணிச்சலுடன் தொடர்ந்து போராடுகின்றார்கள்.

அதேவேளை வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் நீதியைப் பெற்றுக்கொள்வதை முன்னிறுத்தி இயங்கிவரும் அமைப்புக்கள் தற்போது புதியதொரு பரிமாணத்திலான மனித உரிமை மீறல்களுக்கு முகங்கொடுத்துள்ளன.

அமைதியாகப் போராட்டங்களை மேற்கொள்வதற்கான சுதந்திரம், கருத்துவெளிப்பாட்டுச்சுதந்திரம், சுதந்திரமாகச் செயற்படுவதற்கான உரிமை மற்றும் தன்னிச்சையாகத் தடுத்துவைக்கப்படல் போன்றவற்றிலிருந்து பாதுகாப்புப்பெறுவதற்கான உரிமை உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட தரப்பினரின் சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினரை அரசாங்கம் அணுகும் முறை மற்றும் அதன் பிரதிபலிப்பு உள்ளடங்கலாக இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் மோசமடைந்துள்ளன என்று மன்னிப்புச்சபை அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஐ.நா அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது-சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கையில் மனித உரிமை நிலவரம் அச்சம் தரும் விதத்தில் வீழ்ச்சியடைகின்றது என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளதாவது

பெப்ரவரி 25ம்திகதி வெளியான அறிக்கை இன மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான பாரபட்சங்களையும் பாதுகாப்பு படையினர் சிவில் சமூகத்தை சேர்ந்தவர்களை இலக்குவைத்தல் மற்றும் கடந்தகால துஸ்பிரயோகங்களிற்கான பொறுப்புக்கூறல் முடக்கப்பட்டுள்ளது என்பதையும் பதிவு செய்கின்றது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சலே பச்செலெட் முன்வைத்துள்ள-இலங்கையில் மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுபவர்களிற்கு எதிரான தடைகள்,இலங்கையில் இழைக்க்பபட்ட சர்வதேச குற்றங்களிற்காக சர்வதேச நீதியாணையின் கீழ் நீதியை வழங்குவதற்காக முயற்சித்தல்,துன்புறுத்தலிற்கு உள்ளாக கூடிய இலங்கையர்களிற்கு புகலிடம் வழங்குதல்,2021ம் ஆண்டு ஐக்கியநாடுகள் மனிதஉரிமை பேரவை தீர்மானத்தின் மூலம் வழங்கப்பட்ட ஐக்கியநாடுகள் பொறுப்புக்கூறும் திட்டத்திற்கு ஆதரவளித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய பரிந்துரைகளை ஐக்கியநாடுகளின் உறுப்புநாடுகள் நிறைவேற்ற வேண்டும்.

ஐநா இலங்கை பாதுகாப்பு படைகளுடனான தனது ஈடுபாட்டின் போது மனித உரிமைகளின் தராதரங்களை பேணவேண்டும்.

இலங்கை அரசாங்கம் அதன் மனித உரிமை செயற்பாடுகள் குறித்த சர்வதேச சமூகத்தின் ஆய்விற்கு தவறான பிழையாக வழிநடத்தும் பிரச்சார நடவடிக்கைகள் மூலம் பதிலளித்துள்ளது.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர்களை பாதுகாப்பதுடன் சட்டத்தின் ஆட்சியை மீறும் அதேவேளை இலங்கை அரசாங்கம் சிறுபான்மையினத்தவர்களையும் சிவில் சமூகத்தினரையும் தீவிரமாக இலக்குவைக்கின்றது.

அழுத்தங்களை தொடர்ந்துபேணுவதற்காக மனித உரிமை துஸ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களும் பலவீனமான நிலையில் உள்ள குழுக்களும் ஐக்கியநாட்டினையும் இலங்கையின் சகாக்களையும் நம்பியுள்ளனர்” என்றுள்ளது.

Posted in Uncategorized

அமெரிக்க தூதுவரை சந்தித்தார் பசில் ராஜபக்ஸ

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் Julie J. Chung-ஐ சந்தித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, நெருக்கடியை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக சந்திப்பின் பின்னர் அமெரிக்க தூதுவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

அமைச்சரவையில் திடீர் மாற்றம் விமல், கம்மன்பில, வாசுதேவ மூவரும் நீக்கம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பல அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

விமல் வீரவன்ச வகித்து வந்த கைத்தொழில் அமைச்சர் பதவி, கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதய கம்மன்பில வகித்து வந்த மின்சக்தி அமைச்சர் பதவி, எரிசக்தி அமைச்சராக பதவி வகித்த காமினி லொக்குகேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோரின் அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் இழக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு கல்வி அமைச்சர் பதவியும், திலும் அமுனுகமவுக்கு போக்குவரத்து அமைச்சர் பதவியும், பவித்ரா வன்னியாராச்சிக்கு எரிசக்தி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்கள் அவசியம்: மிச்செல் பெச்சலட் வலியுறுத்தல்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் (Michelle Bachelet) முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான எழுத்து மூல சமர்ப்பணம் தொடர்பில் நாளைய (04) அமர்வில் கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை, அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பொன்றை உருவாக்கினால், இலங்கையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தூதுக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட்டை நேற்று சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ், நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன ஆகியோர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட்டை நேற்று பிற்பகல் சந்தித்துள்ளனர்.

இதன்போது, யுத்த குற்றங்கள் இலங்கையில் இடம்பெறவில்லை என்பதனை மனித உரிமை ஆணையாளருக்கு தெளிவுபடுத்தியதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியலமைப்பொன்றை உருவாக்கினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தூதுக்குழுவிடம் கூறியதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இலங்கை எடுத்துள்ள முயற்சி சிறந்தது என்ற போதிலும் மேலும் பல மாற்றங்கள் அவசியம் என மிச்செல் பெச்சலட் கூறியதாக அவர் கூறினார்.

இந்த நிலையில், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பில் தாம் மனித உரிமை ஆணையாளரை தௌிவுபடுத்தியதாகவும் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கூறினார்.

இதனிடையே, இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கு உடனடி தடை விதிக்க வேண்டும் எனவும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்க அதனை மீள் பரிசீலனை செய்து திருத்தம் மேற்கொள்ளுமாறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சட்டம் மக்களின் உரிமைகள் , சுதந்திரத்திற்கு பாரிய ஆபத்தை விளைவித்துள்ளதாகவும் விசேடமாக சிறுபான்மை மக்களுக்கு இதன் ஆபத்து அதிகமாக இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரை, பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கு உடனடித் தடை விதிக்க வேண்டும் எனவும் ஐ.நா மனித உரிமை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகம் தொடர்பான உதவிக்கான பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக பயங்கரவாத சட்டத்தை மறுசீரமைப்பிற்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் கடந்த மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், பிற பொறிமுறைகளால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உரிய வகையில் அதில் பின்பற்றப்படவில்லை எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிறுபான்மை சமூகங்கள், அரசியல் அதிருப்தியாளர்களை இலக்கு வைப்பதற்கும், சித்திரவதைகள் மூலம் பொய்யான வாக்குமூலங்களை பெறுவதற்கும், நீண்டகால தன்னிச்சையான தடுப்பு காவலில் வைப்பதற்கும், 40 ஆண்டுகளுக்கு மேலாக பயங்கரவாத சட்டம் இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக மனித உரிமை நிபுணர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Posted in Uncategorized

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமனம்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் செயற்பட்டு வரும் நிலையில், அவருக்கு எதிராகப் பல முறைப்பாடுகள் பிரதமர் அலுவலகத்திற்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம், பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகள் அனைத்தும் பிரதமரின் கட்டுப்பாட்டில் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்த உரிய தரப்பிற்கு அழுத்தம் பிரயோகியுங்கள் – பேராயர் கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவது குறித்து உரிய தரப்பினருக்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் , அது தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்படாமை, தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமை மற்றும் நியாயத்தைப் பெற்றுக் கொள்ள இலங்கை கத்தோலிக்கர்கள் முன்னெடுத்த நீதிக்கான போராட்டங்கள் உள்ளிட்ட முக்கிய காரணிகள் குறித்து பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.

இலங்கை நேரப்படி நேற்று புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பேராயர் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கிடையிலான சந்திப்பு ஆரம்பமாகி, 45 நிமிடங்கள் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போதே பேராயர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தமன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்தி , பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியை நிலைநாட்டுவது தொடர்பாக ஐ.நா. உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அதன் அறிக்கையை கடந்த ஆண்டு சமர்ப்பித்திருந்தது.

குறித்த அறிக்கையில் தாக்குதகல்கள் தொடர்பில் முன்னரே தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்த போதிலும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை மற்றும் தனது கடமையை நிறைவேற்றத் தவறியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

எவ்வாறிருப்பினும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அந்த பரிந்துரைகள் எவையும் இதுவரையிலும் நடைமுறைப்படுத்தப்படாமலுள்ளதோடு, இவ்விடயத்தில் அரசாங்கமும் அசமந்த போக்குடன் செயற்படுவதாக பேராயர் உள்ளிட்ட கத்தோலிக்க ஆயர் பேரவை தொடர்ந்தும் பகிரங்க விமர்சனங்களை முன்வைத்து வந்தது.

அத்தோடு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பல முக்கிய பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் , அதனையும் பகிரங்கப்படுத்துமாறும் தொடர்ந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் பேராயர் வத்திக்கான் விஜயத்தினை மேற்கொண்டிருந்த போது சுமார் 70,000 பக்கங்களைக் கொண்ட 80 பகுதிகளடங்கிய முழுமையான அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

எனினும் இதுவும் முழுமையான அறிக்கையாக இருக்காது என்று தாம் சந்தேகிப்பதாக பேராயர் இல்லம் தெரிவித்துள்ளது. காரணம் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் காணப்படுவதாகவும், அவை ஜனாதிபதி வசமுள்ளதாகவும் அண்மையில் அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்திருந்தமையாகும்.

இவ்வாறான நிலையில் வத்திக்கான் விஜயத்தினை மேற்கொண்டுள்ள பேராயர் பரிசுத்த பாப்பரசரிடமும் இது குறித்து தெளிவுபடுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து ஜெனீவா சென்று நேற்றைய தினம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கும் இவ்விடயத்தை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பில் துணை ஆயர் கலாநிதி ஜே.டீ.அன்தனி ஜயக்கொடி கேசரிக்கு தெரிவிக்கையில் ,

அண்மைக்காலமாக நாம் அனைவரிடமும் தெரிவித்தமைக்கமைய , அனைத்து மாற்று வழிகள் தொடர்பிலும் ஆராய்ந்து வேறு மாற்று வழிகள் எவையும் இன்மையினால் சர்வதேசத்தை நாடுவதற்கு நாம் தீர்மானித்தோம்.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பரிசுத்த பாப்பரசரை சந்தித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவது தொடர்பிலும் தெளிவுபடுத்தியிருந்தார்.

அதன் இரண்டாம் கட்டமாகவே நேற்று பிற்பகல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்துவதற்கும் , பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை நிலைநாட்டுவதற்குமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. சந்திப்பு குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்றார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பொறுப்பு கூறல் , நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை மீது தொடர் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த விவகாரம் இணைந்துள்ளது. ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்று நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகின்ற நிலையில் இவ்விடயங்கள் அதற்கு மேலும் வலு சேர்ப்பதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.