இலங்கை வருகிறார் நரேந்திர மோடி !

இலங்கையில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள 5 ஆவது பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முயற்சி (பிம்ஸ்டெக்) மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பிம்ஸ்டெக் அமைப்பின் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் அரச தலைவர்களும் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அறிய முடிகிறது.

4 ஆவது பிம்ஸ்டெக் உச்சிமாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கையில் நடைப்பெறவுள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் பிம்ஸ்டெக் குழுவினர்களிடம் அறிவித்துள்ளார்.

கடந்த 6ஆம் திகதி இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜயசங்கருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது பிம்ஸ்டெக் மாநாடு குறித்தும்,மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பங்குப்பற்றல் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

பல்துறை தொழிநுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) மாநாடு இம்முறை இலங்கையில் நடைப்பெறவுள்ளதை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் டென்சின் லெக்ப்ஹெலிடம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்..

2018ஆம் ஆண்டு தொடக்கம் 2020ஆம் ஆண்டு வரை பிம்ஸ்டெக் மாநாட்டின் தலைமை பொறுப்பினை இலங்கை வகித்துள்ளது.

பிம்ஸ்டெக் பங்களாதேஷ்,பூட்டான்,இந்தியா,மியன்மார்,நேபாளம்,இலங்கை மற்றும் தாய்லாந்து போன்ற தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் ஏழினை கொண்ட பன்னாட்டு அமைப்பாகும்.வங்காள விரிகுடாவை அண்மித்த தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிடையில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவது இவ்வமைப்பின் நோக்கமாகும்.

பிம்ஸ்டெக் முக்கிய 14 துறைகளை உட்படுத்திய வகையில் நடைபெற்றதோடு தற்போது அது ஏழு துறைகளாக குறைக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கத்துறைக்கு இலங்கை தலைமை வகிக்கிறது.

பங்களாதேஷ் வியபாரம் மற்றும் முதலீட்டு துறைக்கும், பூட்டான் சுற்றாடல் மற்றும் காலநிலை சீர்கேடுட்டு துறைக்கும்,மியன்மார் விவசாயம் மற்றும் உணவுப்பாதுகாப்பு துறைக்கும்,இந்தியா பாதுகாப்பு துறைக்கும்,நேபாளம் தனிநபர் தொடர்பு மற்றும் தாய்லாந்து தொடர்பாடல் துறைக்கும் தலைமை வகிக்கிறது.

4ஆவது வங்காள விரிகுடாவின் பல்துறை தொழிநுட்பம் மற்றும் பொருளாதார உச்சி மாநாடு கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேபாளம் காத்மண்டு நகரில் இடம்பெற்றது.3ஆவது பிம்ஸ்டெக் உச்சிமாநாடு 2014ஆம் ஆண்டு மியன்மாரில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஞானசார தேரர் பள்ளிவாசல் விஜயம் : முஸ்லிம் தரப்புக்களுக்கிடையில் முறுகல்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் வேறு இனத்தை செந்தவர்களை அழைத்து பள்ளிவாசலில் வழிபாடுகளை நடத்தியதற்கு எதிராக முஸ்லிம்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

நிக்கவெரட்டிய தும்மல சூரிய பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் கடந்த 4ஆம் திகதி இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த பள்ளிவாசலில் வண.கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது.

விழா முடிந்ததும் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது, மோதலில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தொடர்ந்த நெருக்­கு­வா­ரங்கள் தற்போது புதிய வடி­வத்தை எடுத்துள்ளன.

இது­வரை முஸ்லிம்களை வெளிப்புற சக்திகள் மூலம் சீண்டி வந்த தரப்­பினர், தற்போது முஸ்லிம்களுக்கு மத்தியிலேயே கருத்து முரணபாடு­களைத் தோற்றுவிப்பதற்கான முயற்சிகளில் இறங்­கி­யுள்ளதை அவதானிக்க முடி­கி­றது. இந்த சந்­தே­கத்தை சமூ­கத்தில் உள்ள பலரும் தற்­போது எழுப்பத் தொடங்­கி­யுள்­ளனர்.

‘ஒரே நாடு ஒரே சட்டம் செய­லணி’ தோற்றுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முஸ்லிம் சமூகத்தின் உள்ளக விவ­கா­ரங்­களில் இந்த செய­லணி தீவிர அக்கறை காட்டுவதைக் காண முடிகிறது.

அரசாங்கத்தின் பூரண அனுசரணையோடு இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக முஸ்லிம்­களுக்குள் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் இந்த செயலணி மூலம் பூதாகரமாக்கப்படுகின்றன.

உலமா சபை­யினால் கடந்த காலங்­களில் வழங்­கப்­பட்ட பத்வா, காதி நீதி­மன்­றங்கள் மீதான விமர்­சனம் மற்றும் இஸ்லாம் பாட புத்­த­கங்­களில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் என்­ப­வற்றை உதா­ர­ண­மாகக் குறிப்­பி­டலாம்.

எதிர்­கா­லத்தில் மேலும் பல கருத்து முரண்­பாட்­டுக்­கு­ரிய விட­யங்கள் சந்­திக்குக் கொண்டு வரப்­ப­டலாம். இவற்றை முஸ்லிம் சமூகம் எவ்­வாறு சாது­ரி­ய­மாக எதிர்­கொள்ளப் போகி­றது என்­பதே விடை காணப்­பட வேண்­டிய விட­ய­மாகும்.

ஒரே நாடு ஒரே சட்டம் செய­ல­ணியின் தலை­வ­ராக ஞான­சார தேரர் நிய­மிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து குறித்த செய­லணி தொடர்பில் உள்­நாட்­டிலும் சர்­வ­தேச ரீதி­யா­கவும் பலத்த விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டன.

ஏற்­க­னவே நாட்டில் இனங்­க­ளுக்கு மத்­தியில் முரண்­பா­டு­க­ளையும் வன்­மு­றை­க­ளையும் தோற்­று­விப்­ப­தற்கு முன்­னின்ற ஒருவர் எவ்­வாறு இவ்­வா­றா­ன­தொரு செய­ல­ணிக்குத் தலைமை தாங்­கலாம் என்ற கேள்­வியை பலரும் முன்­வைத்­தனர். இன்றும் அதே கேள்­விகள் தொட­ரவே செய்­கின்­றன. இந்த செய­ல­ணிக்கு ஞான­சார தேரர் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டதன் கார­ண­மாக, அதன் முன் தோன்றி கருத்­துக்­களை முன்­வைக்க முஸ்­லிம்கள் முன்­வ­ர­வில்லை.

விரல்­விட்டு எண்ணக் கூடிய ஓரிரு முஸ்லிம் அமைப்­பு­களும் தனி நபர்­க­ளுமே இந்த செய­லணி முன் பிர­சன்­ன­மாகி தமது கருத்­துக்­களை முன்­வைத்­தனர். இதனை ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்­தி­னதும் கருத்­தாக செய­லணி கருத முடி­யாது.

இதே­வேளை இச் செய­லணி தொடர்­பான முஸ்லிம் சமூ­கத்தின் சந்­தே­கங்கள் மற்றும் அதி­ருப்­தி­களை வெளிப்­ப­டுத்தும் வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் கையெ­ழுத்து வேட்டை ஒன்­றையும் ஆரம்­பித்­துள்­ளது.

இக் கையெ­ழுத்­துக்கள் மகஜர் ஒன்­றுடன் இணைக்­கப்­பட்டு செய­ல­ணிக்கு அனுப்பி வைக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இந்த செய­ல­ணியை முஸ்­லிம்கள் புறக்­க­ணிக்கக் கூடாது என்றும் சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி தமது அபிப்­பி­ரா­யங்­களை முஸ்­லிம்கள் முன்­வைக்க வேண்டும் என்ற கோரிக்­கை­களும் ஆங்­காங்கே முன்­வைக்­கப்­பட்டு வரு­வ­தையும் காண முடி­கி­றது, எது எப்­ப­டி­யி­ருப்­பினும் இச் செய­லணி முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ரான செய­ல­ணி­யாக தன்னை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்ளக் கூடாது என்­பதே எமது கரி­ச­னை­யாகும்.

முஸ்லிம் சமூ­கத்­துடன் கலந்து பேசி தீர்­மா­னிக்க வேண்­டிய விட­யங்­களை அதி­கார பலம் கொண்டு நடை­மு­றைப்­ப­டுத்த முயற்­சிக்­கு­மாயின் அது இருக்­கின்ற நெருக்­க­டி­களை மேலும் பூதா­க­ர­மாக்­கவே வழி­வ­குக்கும். அதனை விடுத்து, சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­க­ளுடன் கலந்­து­ரை­யா­டு­வதன் மூலமே பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண முற்­பட வேண்டும்.

இதற்­கப்பால் , முஸ்லிம் சமூ­கத்­தினுள் நீண்ட கால­மாக நிலவும் மார்க்க ரீதி­யான கருத்து முரண்­பா­டு­களை பயன்­ப­டுத்தி சில தீய சக்­திகள் குளிர்­காய முற்­ப­டு­வ­தையும் வெளிப்­ப­டை­யா­கவே காண முடி­கி­றது. டாக்டர் சாபி விட­யத்தில் முன்­னின்று பொய்­களைப் பரப்­பி­ய­வர்கள் இன்று முஸ்லிம் சமூ­கத்தின் மனித உரி­மைகள் பற்றி பாடம் எடுக்கத் தொடங்­கி­யுள்­ளமை வேடிக்­கை­யா­னது. எவ்­வாறு தேர்­தலில் வாக்­கு­களை கொள்­ளை­ய­டிக்க டாக்டர் சாபியை எதி­ரி­யாக காட்டி முஸ்லிம் சமூ­கத்­தையே குற்­றவாளிக் கூண்டில் நிறுத்தினார்களோ அதேபோன்றுதான் அடுத்த தேர்தலுக்காகவும் முஸ்லிம் சமூகத்தையே தூண்டி, சீண்டி வேடிக்கை பார்க்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

எனவேதான் முஸ்லிம் சமூகத்தின் அங்கமாகவுள்ள சகல தரப்புகளும் இந்த யதார்த்தத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமக்கு விரோதமானவர்களைப் பழி தீர்க்கிறோம் என்ற போர்வையில் ஒட்டுமொத்த சமூகத்தையும் அழிவுக்குள் தள்ள களமமைக்க கூடாதென வினயமாக வேண்டுகிறோம்.

Posted in Uncategorized

பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்த முன்மொழிவுகளில் முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை – ஐரோப்பிய ஒன்றியம்

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பை வெளியிட்டிருக்கும் அதேவேளை, மிகமுக்கியமான பல்வேறு விடயங்கள் அந்தத் திருத்தங்களில் உள்ளடக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

அத்தோடு பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பயன்பாட்டைக் குறைக்குமாறும் எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி அச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை பிணையில் விடுதலை செய்வதற்குரிய சாத்தியமான நடவடிக்கைளை முன்னெடுக்குமாறும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியிருக்கின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 24 ஆவது கூட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை புருசேல்ஸில் நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய, பசுபிக் வெளிவிவகாரசேவையின் பிரதி நிறைவேற்றுப்பணிப்பாளர் பவோலா பம்பலோனி மற்றும் இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் தலைமையிலான பிரதிநிதிகளுக்கிடையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

அதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 24 ஆவது கூட்டம் நட்பானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான முறையில் நடைபெற்றதுடன் இதன்போது இருதரப்பு நல்லுறவு குறித்த மீளாய்வும் இடம்பெற்றது.

அதுமாத்திரமன்றி ஆட்சி நிர்வாகம், நல்லிணக்கம், மனித உரிமைகள் தொடக்கம் வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, காலநிலை மாற்றம், சுற்றாடல், பல்துறை ஒத்துழைப்பு, பாதுகாப்பு, பயங்கரவாத முறியடிப்பு வரை இருதரப்பினதும் அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாள்வதற்கான இலங்கையினால் செயற்திறனான முறையில் முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அதன் பாராட்டை வெளிப்படுத்தியது. அதேவேளை வைரஸ் தொற்றுப்பரவல் காரணமாக உருவாகியிருக்கும் இயலாமை மற்றும் சமத்துவமின்மை தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஐரோப்பிய ஒன்றியம், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளும் கொவிட் – 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்வதற்கான கடப்பாட்டைத் தாம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தது. அதனைக் கேட்டறிந்துகொண்ட இலங்கை, உலகின் அனைத்து நாடுகளுக்கும் சமத்துவமான முறையில் தடுப்பூசிகள் பகிரப்படுவதை உறுதிசெய்வதில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிவரும் தொடர்ச்சியான பங்களிப்பிற்குத் தனது பாராட்டை வெளியிட்டது.

அதேவேளை மேற்படி இருதரப்புக்கலந்துரையாடலின்போது ஜனநாயகம், நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி, சிறுபான்மையினர், பெண்கள், சிறுவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய தரப்பினரின் உரிமைகள் உள்ளடங்கலாக மனித உரிமைகள், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

மேலும் நல்லிணக்கப்பொறிமுறையிலும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீனக்கட்டமைப்புக்களின் நடவடிக்கைகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தெளிவுபடுத்தியது.

இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடனும் அதன் பொறிமுறையுடனும் நெருங்கிய தொடர்பையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து பேணுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை ஊக்குவித்தது.

அத்தோடு மேற்படி சுயாதீனக்கட்டமைப்புக்கள் சுதந்திரமாகவும் செயற்திறனுடனும் இயங்கவேண்டியதன் அவசியத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது. அதுமாத்திரமன்றி இக்கலந்துரையாடலின்போது சிவில் சமூக அமைப்புக்களை வலுப்படுத்துதல் மற்றும் அவற்றின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான இடைவெளியை உறுதிசெய்தல் என்பவற்றின் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் ஏற்றுக்கொண்டதுடன் இலங்கையில் நீதி மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க முயற்சிகளு;ககு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்தது.

அதேவேளை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத் திருத்தங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அதன் வரவேற்பை வெளியிட்டபோதிலும், மிகமுக்கியமான காரணிகள் வர்த்தமானி அறிவித்தல் வடிவில் வெளியிடப்பட்டுள்ள திருத்தங்களில் உள்ளடக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியது.

இதுவிடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் வெளிப்படுத்திய கரிசனை குறித்து அவதானம் செலுத்திய இலங்கை, சர்வதேச நியமங்களுக்கு அமைவாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் திருத்தியமைப்பதற்கு அவசியமான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தது.

மேலும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பயன்பாட்டைக் குறைக்குமாறு அறிவுறுத்திய ஐரோப்பிய ஒன்றியம், எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை பிணையில் விடுதலை செய்வதற்குரிய சாத்தியமான நடவடிக்கைளை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தியது.

அடுத்ததாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் வர்த்தகத்தொடர்புகள் குறித்து இதன்போது இருதரப்பும் அவதானம் செலுத்தின. அதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உற்பத்திகள் இலங்கையின் சந்தைக்குள் பிரவேசிப்பதைத் தடுக்கின்ற இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் வலுவாகக் கேட்டுக்கொண்டது.

அதற்குப் பதிலளித்த இலங்கை, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாட்டுக்கையிருப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியைக் கையாள்வதற்காக அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி தொடர்பில் தற்காலிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகத் தெளிவுபடுத்தியது. அத்தோடு இந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியான மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருவதாகவும் தெரிவித்தது.

மேலும் நாட்டின் நிலைபேறான அபிவிருத்திக்குப் பங்களிப்புச்செய்யக்கூடிய விதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் தமது வரவேற்பை இலங்கை வெளிப்படுத்திய அதேவேளை, கடந்த 2021 செப்டெம்பரில் முன்னெடுக்கப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் மீளாய்வு நடவடிக்கைகளின்போது இலங்கையைச் சேர்ந்த அனைத்துத்தரப்பினராலும் வழங்கப்பட்ட ஒத்துழைப்பை ஐரோப்பிய ஒன்றியம் நினைவுகூர்ந்தது.

அத்தோடு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைத்திட்டத்தின்கீழ் மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சூழல் பாதுகாப்பு, சிறந்த நிர்வாகம் உள்ளடங்கலாக இலங்கை கொண்டிருக்கக்கூடிய 27 சர்வதேசக்கடப்பாடுகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டதுடன் அவற்றை உரியவாறு நிறைவேற்றுவதற்கான தமது கடப்பாட்டை இலங்கை மீளவலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் மனித உரிமை துஸ்பிரயோகங்கள் முடிவிற்கு வராது-சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கை அரசாங்கத்தின் பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்கான முன்மொழிவுகள் மூலம் அரசாங்கத்தின் மனித உரிமை துஸ்பிரயோகங்கள் முடிவிற்கு வராது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மதிப்பிழந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் மோசமான துஸ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம், இந்த சட்டத்தை கைவிடுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையின் ஏனைய வர்த்தக சகாக்களும் நிதி வழங்குநர்களும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் இலங்கை அரசாங்கம் இந்த சட்டத்தை கைவிட வேண்டும் என அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்தோடு பரந்துபட்ட துஸ்பிரயோகங்களை முடிவிற்கு கொண்டுவருவதற்கு உதவாத உத்தேச திருத்தங்களை நிராகரிக்க வேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Posted in Uncategorized

ரிஷாட் வௌிநாட்டு செல்ல அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் இந்த அனுமதியை 3 மாத காலத்திற்கு வழங்கியுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமகி ஜன பலவேகே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றிலும், தனது வீட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய சிறுமி தீயில் எரிந்து உயிரிழந்த வழக்கு தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றமும் பாராளுமன்ற உறுப்பினருக்கு பிணை வழங்கியிருந்தது.

Posted in Uncategorized

13 ஆவது திருத்தத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்குவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சம்பந்தன்

“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வோர் தமிழ் மக்களின் நன்மை கருதிச் செயற்பட வேண்டும்.

தமது சுயலாப அரசியலுக்காகத் தமிழ் மக்களை நட்டாற்றில் விடும் வகையில் அவர்கள் செயற்படக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

13 ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது படுமுட்டாள்தனமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“அரசமைப்பில் முதன்முறையாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதைத் தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக ஏற்க முடியாது. இதைத் தீர்வுக்கான முதல் படியாக வைத்துக்கொண்டு நாங்கள் முன்னோக்கி நகர்ந்து வருகின்றோம்.

இந்நிலையில், 13ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது படுமுட்டாள்தனமானது.

இப்படியான செயற்பாடு, இருப்பதையும் இழப்பதற்குச் சமமானது. அதனால் தான் 13ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரி வருகின்றோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

47 உறுப்பு நாடுகளிற்கான கடிதத்தில் 13ஐ கோராமை சம்பந்தனின் பெருந்தவறு என்கின்றார் ஜயதிலக்க

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அதில் 13 ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தாது பெருந்தவறிழைத்து விட்டார் என்று கலாநிதி.தயான் ஜயத்திலக்க வீரகேசரியிடம் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

13 ஆவது திருத்தச்சட்டத்தினை மையப்படுத்தி பிரதமர் மோடிக்கு ஆறு தமிழ்க் கட்சிகளின் ஏழு தலைவர்கள் இணைந்து கடிதம் அனுப்பி சொற்ப நாட்களில் இவ்விதமாக சம்பந்தன் செயற்பட்டுள்ளமையானது முரண்நகையாக உள்ளதாக சுட்டிக்காட்டியதோடு இதனால் 13 ஆவது திருத்தச்சட்டத்தினை அரசாங்கம் புதிய அரசியலமைப்பினை பயன்படுத்தி ஒழிக்கும்போது தடுக்க முடியாத நிலைமைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது போகும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், தோற்கடிக்கப்பட்டாலும் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியதோடு அவ்விதமான விடயத்தினை குறிப்பிடாது கடிதமொன்றை அனுப்புவது பயனற்றதாகும் என்றும் கூறியுள்ளார்.

துமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் அனுப்பியமை தொடர்பில் தாயன் ஜயத்திலக்க மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளுக்கும் கடிதமொன்றை அனுப்புவதை நான் தவறு என்று கூறவில்லை. அந்தச் செயற்பாட்டினை தமிழ் மக்களின் தலைவராக அவர் செய்வது மிகவும் பொருத்தமானதொரு விடயமாகும்.

ஆனால், அவர் யதார்த்தமானதொரு விடயத்தினை தவிர்த்து விட்டிருக்கின்றார். 2009ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவான தீர்மானம் வெற்றி பெற்றது. அப்போதும் தீர்மானத்தில் 13ஆவது திருத்தச்சட்டம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பின்னர் 2012, 2013, 2014, 2015 (இலங்கைஇணைஅனுசரனை வழங்கியது), 2021 ஆகிய ஆண்டுகளில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் போதும் 13ஆவது திருத்தச்சட்டம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு 13 ஆவது திருத்தச்சட்டம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் ஆறு தீர்மானங்களில் காணப்படுகின்றது. அந்த ஆறுதீர்மானங்களில் ஒன்று மட்டும் இலங்கைக்கு ஆதரவானது. ஏனையவை எதிரானவை. ஆனால் தொடர்ச்சியாக தீர்மானங்கள் ஆதரவாக வந்தாலும் சரி எதிராக இருந்தாலும் சரி 13ஆவது திருத்தச்சட்ட விடயம் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது.

அவ்விதமானதொரு விடயத்தினை கவனத்தில் கொள்ளாது விடுவது பொருத்தமற்றது. அதேநேரம், சம்பந்தன் இம்முறை அனுப்பிய கடிதத்திலாவது 13ஆவது திருத்த விடயத்தினை கவனமாக கையாண்டிருக்க வேண்டும். ஏனென்றால் அவர் உள்ளிட்ட ஏழு தமிழ்த் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு 13 ஆவது திருத்தச்சட்டத்தினை வலியுறுத்தி கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்கள்.

அவ்விதமாக கடிதம் அனுப்பிய பின்னரும் ஐ.நா.வுக்கு அனுப்பிய கடிதத்தில் 13ஐ குறிப்பிடாது விடுவது பொருத்தமற்றது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களில் இந்தியாவின் முயற்சியால் தான் 13ஆவது திருத்தச்சட்டம் உட்புகுத்தப்பட்டுள்ளது என்பதை சம்பந்தன் அறியாதவர் அல்லர். ஆகவே அந்த விடயத்தினை அவர் குறிப்பிடாது விடுகின்றமையானது பாரதூரமான விடயமாகும்.

இதனைவிடவும், தற்போது இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு பொருளாதார நிதி உதவிகளை வழங்கியுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் மேலும் ஏற்படுகின்றபோது இந்தியாவின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கப்போகின்றது. இது இலங்கை இந்திய இருதரப்பு உறவுகள் சார்ந்த விடயம்.

ஆனால், இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட போன்றவர்கள் இந்திய அரசாங்கம் கோரும் முதலீட்டு மற்றும் அபிவிருத்தி திட்டங்களை வழங்குவதன் ஊடாக 13ஆவது திருத்தம், அரசியல் தீர்வு உள்ளிட்ட இந்தியாவின் கோரிக்கைகளை நீர்த்துப்போகச் செய்யலாம் என்று கணக்குப்போட்டிருக்கின்றார்கள்.

அதேநேரம், ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறைமைகளை நீக்கியுள்ளதாக தெரியவருகின்றது. அவ்வாறான நிலையில் புதிய அரசியலமைப்பில் 13 ஒழிக்கப்பட்டிருக்குமாக இருந்தால் அதன் பின்னர் தமிழர்களுக்கு கிடைக்கப்போவது என்ன ? ஐ.நா.தீர்மானத்தில் 13 குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதனை தமிழ்த் தரப்புக்களே கோராதபோது இலங்கை அரசாங்கம் அதுபற்றி கரிசனை கொள்ளும் என்று கூறவும் முடியாது.

ஆகவே 13 ஆவது திருத்தச்சட்ட விடயத்தினை சம்பந்தன் தனது கடிதத்தில் குறிப்பிடாது பெருந்தவறு இழைத்துவிட்டார். இது சந்தர்ப்பங்களை வலுவிழக்கச் செய்துள்ளது என்றார்.

Posted in Uncategorized

கறுப்புச் சந்தை மூலம் ஆயுதம் கொண்டு வந்ததை மறுக்காத பசில் : செய்தியாளர் சந்திப்பில் திக்குமுக்காடினார்

இலங்கையில் இறுதி யுத்தம் நடந்த போது கறுப்புச் சந்தையைப் பயன்படுத்தி வடகொரியாவில் இருந்து ஆயுதங்கள் கொண்டுவந்ததாக நிதியமைச்சர் தெரிவித்த கருத்து தற்போது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இன்று (02) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

சிக்கலான கேள்விகளை தவிர்ப்பது நல்லது என்று இதற்கு நிதியமைச்சர் பதிலளிக்க, நீங்கள் சொன்ன கருத்தினால் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று ஊடகவியலாளர் மீண்டும் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த பசில் ராஜபக்ச, இதற்குப் பதிலளித்தால் இன்னும் நிலைமை சிக்கலாகிவிடும் என்று கூறி முடித்தார். ஆனால் இந்தக் கருத்தை விளக்கப்படுத்துவதற்கான நல்ல சந்தர்ப்பம் இது என்று ஊடகவியலாளர் மீண்டும் குறிப்பிட, அப்படியொன்று நடக்கவில்லை என்று சொன்னால் கதை முடிந்துவிடும் என்று நழுவல் போக்கில் பதிலளித்தார்.

கறுப்புச் சந்தையின் மூலம் டொலர்களைப் பயன்படுத்தி வடகொரியாவில் இருந்து ஆயுதங்களைக் கொண்டுவந்ததாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, சிங்கள நாளிதழுக்கு சொன்ன கருத்து சர்ச்சையாகியுள்ளது.

இந்தக் கருத்தை மறுக்காத பசில் ராஜபக்ச, ஊடகவிலாளரின் அந்தக் கேள்வியால் திக்குமுக்காடிப் போனார்.

அத்துடன், யுத்த காலத்தில் நடந்த ஏராளமான விடயங்களைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றும் அவற்றை பேசாமல் இருப்பது நல்லது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அதனை மூடிமறைக்க முயற்சித்தாலும், வடகொரியாவுடன் கொடுக்கல் வாங்கல் செய்துகொண்டார் என்ற கருத்து தற்போது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், பணச் சலவையில் ஈடுபட்டதாக இதற்கு முன்னர் ராஜபக்ச குடும்பத்தில் சிலர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. பண்டோரா ஆவணங்களின் மூலம் இந்த தகவல்கள் வெளிவந்திருந்தன. இதுகுறித்து விசாரணைகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டாலும், அதுகுறித்து முழுமையான விசாரணைகள் நடத்தப்படுவதைக் காண முடியவில்லை என குற்றச்சாட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பணச் சலவை மற்றும் கறுப்புப் பயணத்தைப் பயன்படுத்தி, பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ள வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தத் தகவல்கள் அல்லது நடந்த சம்பவங்கள் குறித்து ஜெனீவா மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் சர்ச்சைகள் வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது.

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக மேலும் புதிய பிரச்சினைகளை இந்த அரசாங்கம் உருவாக்கி வருவதாக பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.

அனைவரும் அரசியல் கடந்து அணிதிரள அழைப்பு!

இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள்’ எனும் தொனிப்பொருளில் நாளை 4 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் மாபெரும் போராட்டத்துக்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

கரிநாள் போராட்டத்தில் அனைவரையும் பங்குகொள்ளுமாறு யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஏற்பாட்டாளர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது எமக்கான சுதந்திர தினம் அல்ல எமக்கான நீதி கிடைக்கப் பெறாத இடத்தில் எவ்வாறு சுதந்திரம் கிடைக்கும். பொதுமக்கள் இந்த விடயத்தில் அலட்சியமாக இருக்காது ஒன்று கூடி இந்த கருப்பு நாளை அனுஸ்டிக்க வேண்டும் என வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் அழைப்புவிடுத்துள்ளது.

சிறீலங்காவின் சுதந்திர தினம் என்பதை காலம் காலமாக தமிழர்கள் கரிநாளாக அனுஸ்டித்து வந்துள்ளனர். எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு இன அழிப்பு நடந்த முள்ளிவாய்க்கால் மண்ணிலே எவ்வித அரசியல் பின்னணியும் இன்றி அரசியல் நோக்கங்கள் இல்லாமல் ஒன்றிணைய வேண்டும். எமது இயக்கமும் இதற்கு பூரண ஆதரவை வழங்குகிறது என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்க இணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்திருந்தார்.

ஒரே நாட்டிலேயே ஒருபுறம் ஆரவாரம் வெற்றிக்கொண்டாட்டம் மகிழ்ச்சி என்பன காணப்படும் போது இன்னொரு புறத்தில் கவலை வறுமை பொருளாதார பின்னடைவு போன்றன காணப்படுகின்றதெவும் இதனை நாங்கள் இரண்டு நாளாக அனுஸ்டிக்கிறோமென மெதடிஸ்த திருச்சபையின் அருட்திரு றொபேர்ட் சசிகரன் அடிகளார் தெரிவித்தார்.

சிறீலங்கா அரசுக்கு தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக கொடுக்கப்பட்ட அனுமதிப்பத்திரமே சுதந்திர தினமாகும். 1956 சுதந்திர தினத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய திருமலை நடராஜன் படுகொலையோடு உயிர்ப்பலி என்பது ஆரம்பித்துவிட்டது. தமிழ் இன ஒடுக்குமுறைக்கு நூறு வருடங்கள் கடந்துவிட்டது. சுதந்திரத்திற்கு முன்னர் அனுமதிப்பத்திரம் இல்லாமல் எம்மை ஒடுக்கினார்கள் சுதந்திரத்துக்குப் பின்னர் அனுமதிப் பத்திரத்துடன் நம்மை ஒடுக்குகிறார்கள் என சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இணைப்பாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்திருந்தார்;.

அரசியல் கைதிகள் பிரச்சினை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர்பில் சரியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் அடுத்த வருடங்களில் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிக்க வேண்டிய தேவை இருக்காது. நாளைய தினத்தில் தனித்தனித் போராட்டங்களை முன்னெடுக்காமல் முள்ளிவாய்க்காலில் அணிதிரண்டு வலுச்சேர்க்க வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்திருந்தார்.

துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கறுப்பு உடையணிந்து அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதுடன் வாகன ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

இவ் ஊடக சந்திப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க யாழ் மாவட்ட தலைவி சிவபாதம் இளங்கோதை, உபதலைவி நிர்மலநாதன் மேரி ரஞ்சினி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்க இணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல்வருமான தவத்திரு வேலன் சுவாமிகள்,மெதடிஸ்த திருச்சபையின் அருட்திரு றொபேர்ட் சசிகரன்,சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இணைப்பாளர் சி.அ.யோதிலிங்கம்,

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் ஆகியோர் பங்கேற்றனர்.

சர்வதேச நாணய நிதியத்திடம் ஒத்துழைப்பு கோரும் அரசாங்கம்

நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ நேற்று (02) தெரிவித்த கருத்திற்கு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று பதிலளித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபுணத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நேற்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், இன்று காலை ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டிருந்தார்.

நிதி அமைச்சுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை பெறுவது வழமையான ஒன்றென அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நிதி அமைச்சர் வௌியிட்ட கருத்து தொடர்பிலானது. இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பிலான சர்வதேச நாணய நிதியத்தின் நிபுணத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்வதென்பது நிதி அமைச்சின் நிதி பிரிவின் மேம்பாட்டிற்காக தொழில்நுட்ப ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் வழமையான செயற்பாடாகும். அதனை விட வேறு ஒன்றும் இல்லை

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் நிதி அமைச்சரும் மத்திய வங்கியின் ஆளுநரும் இவ்வாறு கருத்துத் தெரிவிக்கும் போது, இலங்கை சீமெந்து மற்றும் அரிசி கொள்வனவிற்காக பாகிஸ்தானிடம் கோரியுள்ள 200 மில்லியன் டொலர் கடன் வசதியை அந்நாட்டிற்கு IMF மூலம் கிடைக்கவுள்ள கடனிலிருந்து வழங்குவதற்கு பாகிஸ்தான் தயாராகின்றது.

தேவையற்ற செலவுகளை குறைத்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு பாகிஸ்தான் காட்டும் சிறந்த ஆர்வத்தை கருத்திற்கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு பாகிஸ்தானுக்கு இந்த கடனை வழங்க தயாராகின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியம் ஒரு பில்லியன் டொலர் கடனை வழங்கிய பின்னர், இலங்கைக்கு சீமெந்து மற்றும் அரிசி கொள்வனவிற்கு தேவையான 200 மில்லியன் டொலரை வழங்குவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized