ஆறு முக்கிய அமைச்சர்களின் பொறுப்புக்களில் மாற்றம்

ஜனாதிபதியால் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதிய நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது ஆறு முக்கிய அமைச்சர்களில் பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.

அத்துடன் ராஜாங்க அமைச்சர்களின் பதவிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ச  நேற்றைய தினம் நாடு திரும்பினார்.

அவரது வருகையின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

புதிய ஆண்டில், புதிய மாற்றங்களுடன் புதிய பயணத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,  ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அமைச்சரவை மாற்றமும் இதன் பிரதிபலனே எனக் கூறப்படுகிறது.

இதனிடையே செயற்திறனில் பலவீனமாக இருக்கும் அரசாங்கத்தின் 8 முன்னணி நிறுவனங்களின் தலைமை பதவிகளிலும் மாற்றங்களை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம், புதிய ஆண்டில் புதிய பயணத்தை ஆரம்பிக்கும் அடிப்படை நடவடிக்கையாக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படடவுள்ளன.

கோவிலில் சிலைகள் உடைப்பு! குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் : இராதாகிருஷ்ணன்

அக்கரப்பத்தனை நகரிலுள்ள கோவிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் எனவும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கிடையிலான கூட்டமொன்று இன்று (02.01.2022) தலவாக்கலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

“புதுவருடம் பிறந்தாலும் இன்னமும் வழி பிறக்கவில்லை. இன்று எந்த வரிசையில் நிற்கவேண்டி வருமோ என்ற அச்சத்துடன் தான் பொழுது விடிகின்றது. அரசு வங்குரோத்து நிலைக்கு வந்துள்ளது. நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனது 32 வருடகால அரசியல் வாழ்வில் எந்தவொரு அரசும், இப்படியானதொரு வீழ்ச்சியைக் கண்டதில்லை. ஜனாதிபதி செயலாளரை மாற்றினர். தற்போது மேலும் பல அரச அதிகாரிகளை மாற்ற தயாராகிவருகின்றனர். இதற்கிடையில் அமைச்சரவையும் மாற்றப்படவுள்ளதாம். இப்படி ஆட்சிகளை மாற்றிக்கொண்டிருந்தால் தீர்வு கிட்டுமா?

அக்கரப்பத்தனையில் உள்ள கோவில் உடைக்கப்பட்டுள்ளது. சுமார் 60, 70 சிலைகள் இனந்தெரியாத நபர்களால் தேசமாக்கப்பட்டுள்ளன. இது மிகவும் மோசமான செயலாகும். இதற்கு முன்னர் லிந்துலை பகுதியில் மாதா கோவிலின் சிலை சேதமாக்கப்பட்டது. தற்போது இந்து கோவில் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தவா இவ்வாறான சம்பவங்கள் திட்டமிட்ட அடிப்படையில் இடம்பெறுகின்றன என்ற சந்தேகமும் எழுகின்றது.

யாழ்ப்பாணத்தில் சிலைகள் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. எனவே, இதன் பின்னணியில் குழுவொன்று செயற்படுகின்றதா என்பதும் கண்டறியப்பட வேண்டும். அரவிந்தகுமார் நல்லவர் தான். ஆனால் அவர் இருக்கும் இடம்தான் சரியில்லை. 2013 இல் மாகாணசபைத் தேர்தலில் தோற்றார்.

ஆனால் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். அதற்கு அவர் அங்கம் வகித்த மலையக மக்கள் முன்னணியும், ஐக்கிய தேசியக்கட்சியுமே காரணம். 2020 இலும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதற்கும் அவர் மலையக மக்கள் முன்னணியில் அங்கம் வகித்ததே காரணம்.

செந்தில் தொண்டமானுக்கு செல்வாக்கு இருந்தும், பண பலம் இருந்தும் நாடாளுமன்றம் தெரிவாகவில்லை. ஏனெனில் அவர்கள் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சி தொடர்பில் மக்கள் மத்தியில் விமர்சனம் இருக்கின்றது. இந்நிலையில் நுவரெலியாவில் வந்து போட்டியிடுவேன் என அரவிந்தகுமார் அறிவித்துள்ளார். வரட்டும் பார்ப்போம்.

தமிழக மீனவர்களுக்கும், யாழ்ப்பாண மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து மீன்பிடிக்க வருபவர்கள் தமிழர். அதேபோல யாழ்ப்பாணத்தில் இருந்து மீன்பிடிக்க செல்பவர்கள் தமிழர்.

எனவே, தமிழர்கள் மோதிக்கொண்டால் அதன்மூலம் மற்றைய தரப்புக்குதான் நன்மை. இந்த விடயத்தையும் அரசு திட்டமிட்டு செய்கின்றதா என்ற சந்தேகமும் எமக்கு இருக்கின்றது. எனவே, நாம் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

பேராயர் டெஸ்மண்ட் டுட்டு – அநீதிக்கெதிரான ஒரு குரல் மௌனித்தது

தென்னாபிரிக்க நிறவெறி நிறுவனக் கட்டமைப்பிற்கெதிராக, கறுப்பின அடக்குமுறைக்கெதிராக முற்போக்குச் சிந்தனையோடு போராடிய ஒரு விடுதலைப் போராளியின் பயண நிறைவில் நீதிக்கும் அமைதிக்குமான குருக்கள், துறவிகள் வடக்கு-கிழக்கு ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றது.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“’அநீதியான சூழ்நிலையில் நடுநிலையாளனாக இருப்பது என்பது ஒடுக்குமுறையாளனின் பக்கம் நிற்பதாகும். யானை எலியின் வாலில் தனது காலை வைத்துக் கொண்டு தான் நடுநிலையாளன் என்று சொல்லுவதை, எலி ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.’ -டெஸ்மண்ட் டுட்டு

நிறுவன மயப்படுத்தப்பட்ட நிறவெறி அடக்குமுறைக்கெதிராக 1970 களிலிருந்து அடக்குமுறைக்குட்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்களின் குரலாகவும், அம்மக்களோடு பயணித்து மக்களின் விடுதலைக்காக உழைத்து ‘வானவில் தேசமான’ தென் ஆபிரிக்காவை கட்டியெழுப்பிய தேசப்பிதாக்களில் ஒருவரான டுட்டுவின் மறைவு நிரப்பீடு செய்யப்படமுடியாதது.

தனது பட்டறிவின் மூலம் அடக்கப்பட்ட மக்களின் அரசியல் வேணவாவை விளங்கிக் கொண்டு அதற்காகவே கொள்கை ரீதியான நிலை எடுத்து தன்னை அடக்குமுறைக்குட்படுத்தப்பட்ட மக்களின் ஒரு பொதுப்படிமமாக கட்டமைத்துக் கொண்டவர். டுட்டுவின் அரசியல், அடக்குமுறைக்கெதிராக பல்வகை உத்திகளை விடுதலையை நோக்கிப் பயணிப்பதற்கு கையாண்டாலும் அவரது விமர்சனப் பகுப்பாய்வு நகைச்சுவையும், வன்முறையற்ற அணுகுமுறையும் மிகவும் முக்கியமானது. அதே உத்தியை விடுதலைக்குப் பின்னர் தென்னாபிரக்க தலைவர்கள் ஊழல்களில் சிக்கிய போதும் கையாண்டார் என்பது அவரது தலைமைத்துவத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.

நிறவெறி, கிட்லரின் நாசிசத்திற்கு சமமானது எனக் குறிப்பிடடு;, ஐ.நா.சபையில் (1988) நிறவெறிக்கெதிராக தண்டனை அமுல்படுத்தாத மேற்குலக அரசியல்வாதிகளை நிறவெறியவர்கள் என சாடியதையும் வரலாறு நினைவு கூரும். பாதிக்கப்பட்ட-மக்கள்-மைய நீதிப் பொறிமுறை அணுகுமுறையே எதிர்காலத்தில் மீள் நிகழாமையை உறுதிப்படுத்தும் என்பது அவரது பட்டறிவாக இருந்ததை அவருடைய கருத்துக்களிலிருந்து அவதானிக்க முடிகின்றது.

சர்வதேச மூதவையின் தலைவராக இருந்த போது 2013 நவம்பரில் பொதுநலவாய மாநாடு சிறிலங்காவில் நடத்தமுடியாது என குரல் கொடுத்தவர்களில் டெஸ்மன் டுட்டுவும் ஒருவர். ]தமிழ்த்தேசிய நோக்கில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதைப் பொறுத்தே ‘தான் வழிநடத்தப்பட விரும்புவதாக’ குறிப்பிட்டு அவ்வாறே ஏனைய அரசாங்க தலைவர்களும் பொதுநலவாய மாநாட்டிற்கு போகக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, பொதுநலவாய மாநாடு சிறிலங்காவில் நடத்தப்படக்கூடாது என்ற பகிஸ்கரிப்புக்கு சர்வதேச மூதவை ஊடாக வலுச் சேர்த்ததையும் ஈழத்தமிழினம் ஒரு போதும் மறக்காது.

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் ‘சிறிலங்கா அரசாங்கம் நேர்மையாக செயற்படவில்லையெனில் சர்வதேச சமூகம் தன்னாலான முழு முயற்சிகளையும் முடுக்கி விட வேண்டும்’ என ஆணித்தரமாக இடித்துரைத்தவர். ‘அவ் உத்திகளில் பொதுநலவாய மாநாட்டு பகிஸ்கரிப்பும் ஒரு தந்திரோபாயம்’ எனக் குறிப்பிட்டார்.

தென்னாபிரிக்கா நாட்டின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழவின் தலைவராய் இருந்த போது, நிறுவனமயப்படுத்தப்பட்ட நிறவெறியில் நிகழ்ந்த, நிகழ்த்தப்பட்ட குற்றங்களை ஏற்றுக் கொள்ளுதலே எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கான ஒரே வழி எனக் குறிப்பிட்டதை தென்னாபிரிக்க வரலாறு சொல்லித் தந்திருக்கின்றது.

ஈழத்தமிழினப்படுகொலை மறுப்பு ஒரு போதுமே நல்லிணக்கத்திற்கு இட்டுச் செல்லமுடியாது. ஏனெனில் இனப்படுகொலை மறுப்பில் உண்மை சாகடிக்கப்படுகின்றது. உண்மையை ஏற்றுக் கொள்வதோடு அதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென்பதில் மிகவும் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்த பேராயர், பல அரசியல் தலைவர்கள் நிறவெறி அரசோடு கைகோர்த்த போது அதை கடுமையாகச் சாடினார் என்பதற்கு 1984ல் அப்போதை ஐக்கிய இராச்சிய பிரதமராகவிருந்த மார்கிரட் தட்சருக்கு அவர் எழுதிய கடிதம் முழுச்சான்றாக அமையும். ‘ஐக்கிய இராச்சியம் தென்னாபிரிகக் பிரதமரை அரசியல் நோக்கங்களுக்காக உத்தியோகபூர்வமாக அழைத்திருப்பது, நாளாந்தம் நிறவெறி வன்முறைக்குப் பலியாகும் பல்லாயிரக்கணக்கான மக்களின் முகத்திலடிப்பதைப் போன்றது’ எனக் குறிப்பிட்டார்.

நடுநிலை அரசியலில் நம்பிக்கை இழந்த அவர் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பான நிலைப்பாட்டில் உறுதியாயிருந்தார். ஈழத்தமிழினப்படுகொலைக்கு சுயாதீன சர்வதேச விசாரணை மூலமே நீதி கிடைக்க முடியும் என்ற ஈழத்தமிழரின் கோரிக்கைக்கு வலுச் சேர்த்ததையும் ஈழத்தமிழினம் நினைவுகூரும்.

குறுகிய வரையறைகளைக் கடந்து மதத்திற்கு அப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உண்மையாகவும் நேர்மையாகவும் ஈழத் தமிழருக்காக செயற்பட்ட ஒரு நண்பரை ஈழத்தமிழினம் இழந்து நிற்கின்றது.

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தது மட்டுமல்லாது சர்வதேச அரங்கில் அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தமையை நாம் நன்றியுடன் நினைவு கூருகின்றோம். அரசியல் தலைமைத்துவ வெறுமையில் அடக்குமுறைக்குட்பட்டோரின் குரலாக எழுந்த ஒரு குரல் மௌனித்துப் போய்விட்டது.”

Posted in Uncategorized

புதிய ஆவண நகல் இன்று தயார்! – தலைவர்களின் முடிவுக்கு காத்திருப்பு

வடக்கு – கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய தமிழ் பேசும் தரப்புக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை, பொதுவான அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் பொது ஆவணத்தைத் தயாரிக்கும் முயற்சியில் புதிய நகல் ஒன்று இன்றைய கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் தரப்புக் கட்சித் தலைவர்களின் பரிசீலனைக்கு அது வழங்கப்பட்ட பின்னர் தீர்மானம் எடுக்கப்படும். இன்று எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்திலுள்ள அவரது அலுவலகத்தில் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை புதிய நகல் ஆவணம் தயாரிக்கும் முயற்சியில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த முயற்சியில் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிஸாம் காரியப்பர், புளொட் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி., ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., ரெலோவின் பேச்சாளரும் இந்த முயற்சியின் இணைப்பாளருமான சுரேந்திரன் குருசாமி ஆகியோர் பங்குபற்றினர்.

புதிய ஆவண நகல் தயாரிப்புக்காக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. அனுப்பிவைத்த குறிப்பும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

* இந்த ஆவணத்தில் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதற்கு அப்பாலும் செல்வோம் என 1987 முதல் இலங்கை – இந்தியத் தலைவர்கள் வழங்கிய உறுதிமொழிகள் நினைவூட்டப்பட்டுள்ளன.

* 13ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்டு, பின் கைவாங்கப்பட்ட, நடைமுறைப்படுத்தப்படாத அதிகாரப் பகிர்வு விடயங்களை நடைமுறைப்படுத்துவது இந்திய – இலங்கை அரசுகளின் கடப்பாடு என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

* சமஷ்டி அடிப்படையிலான தீர்வே இறுதி இலக்காக அமைய வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுமார் மூன் று பக்கங்களைக் கொண்ட இந்த நகல் ஆவணத்தின் பிரதிகள் அனைத்துத் தமிழர் தரப்புக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அவர்களின் பிரதிபலிப்பை கவனத்தில் எடுத்து ஆவணம் இறுதி செய்யப்படும் எனத் தெரிகின்றது.

இன்றைய கூட்டத்துக்கு மனோ கணேசன் வராத நிலையில் இந்த ஆவணம் தொடர்பில் அவரின் அவதானிப்பு முக்கியமாக எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆவணத்தின் பிரதியைத் தம்முடன் எடுத்துச் சென்ற ரவூப் ஹக்கீம் எம்.பி., தமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களுடன் விரிவாக உரையாடிய பின்னர் தமது பக்கக் கருத்துக்களைத் தெரிவிப்பார் எனவும் கூறப்பட்டது.

தமிழ் – முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலத்தின் கட்டாயம்: சம்பந்தன்

அரசியல் தீர்வை வென்றெடுக்கத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலத்தின் கட்டாயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் திட்டமிட்ட வகையில் இனமுறுகலை ஏற்படுத்தி சிங்களக் கடும் போக்குவாதிகள் முன்னெடுத்த அரசியலை மறக்க கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆகவே வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்கள் கடந்தகாலத் துன்பியல் நிகழ்வுகளை மறந்துவிட்டு தீர்வை வென்றெடுக்க ஓரணியில் பயணிக்க வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்தார்.

இதன் அவசியத்தை உணர்ந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் என்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம்!

தெற்காசிய பிராந்தியத்திலேயே அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது.

2021 நவம்பரில் 9.9% ஆக இருந்த நாட்டின் பணவீக்க விகிதம் 2021 டிசம்பரில் 12.1% ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சர்வதேச நாடுகளின் பணவீக்க விகிதத்தில் இலங்கை 20ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

வடக்கு, கிழக்கை ஒருபோதும் இணைக்க முடியாது; அமைச்சர் தினேஷ்

இந்தியப் பிரதமருக்கு ஆவணம் அனுப்புவதால் வடக்கு, கிழக்கை ஒருபோதும் இணைக்க முடியாது என்றும் இதற்கு முஸ்லிம் மக்கள் அனுமதி வழங்கமாட்டார்கள் எனவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தைச் சுட்டிக்காட்டி தமிழ்க் கட்சிகள் பாரத பிரதமருக்கு ஆவணம் ஒன்றினை அனுப்ப திட்டமிட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகமோ அல்லது முஸ்லிம்களின் தாயகமோ அல்ல என குறிப்பிட்ட அமைச்சர், இரு மாகாணங்களும் ஒரே நாட்டுக்குள்ளேயே அமைந்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.

எனவே, மாகாணங்களைப் பிரித்து எந்த இனத்தவர்களும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் அனைவரும் ஒரே நாட்டின் பிள்ளைகள் என்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அன்று இணைந்திருந்தமையினாலேயே இனக்கலவரம் வெடிக்க ஆரம்பித்தது என்றும் வன்முறைகள் தொடங்கின என்றும் அவர் கூறினார்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற இந்தத் துன்பியல் நிகழ்வுகளைத் தமிழ்க் கட்சிகள் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்

வடக்கு – கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 5ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான வழமையான இடமாற்ற நடைமுறையின்கீழ் இந்த இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ்சாந்தன் சூசைதாஸன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Posted in Uncategorized

மலையக பிரச்சினைகளை சர்வதேச மட்டம்வரை உயர்த்த கூட்டு செயற்பாட்டிற்கு இறுதி பேச்சு – மனோ கணேசன்

இந்நாட்டில் வாழும் வடகிழக்கு, முஸ்லிம் தேசிய இனங்களுடன் கரங்கோர்த்து, சிங்கள சகோதர மக்களுக்கும் ஒரு செய்தியை சொல்லி, மலையக மக்களின் அபிலாஷைகளை தேசிய மற்றும் சர்வதேசிய மட்டங்களுக்கும் உயர்த்த வேண்டிய வரலாற்று கடமை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் எனக்கு இருக்கிறது.

சமீபத்து இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர்களின் விவகாரங்களை தொடர்ந்தும் தோட்ட, பிரதேச, மாவட்ட பிரச்சினைகளாக மட்டும் முடக்காமல், ஏனைய சகோதர சமூகங்களது பிரச்சனைகளை போல் தேசிய மற்றும் சர்வதேசிய மட்டங்களுக்கு கொண்டு செல்வதே, இன்றைய தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கூட்டு செயற்பாட்டில் எங்கள் நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. இதை சரியாக புரிந்துக்கொண்டு மலையக இளைய தலைமுறையும், படித்த தலைமுறையும் எமது கரங்களை பலப்படுத்த வேண்டும்.

நாளை 31ம் கொழும்பில் ததேகூ தலைவர் சம்பந்தன் அவர்களது இல்லத்தில் நடைபெறும் இறுதி சுற்று பேச்சுகளில் இனிய இறுதி முடிவு எட்டப்படும் என நான் நம்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பில், மனோ எம்பி தெளிவுப்படுத்தியதாவது,

இந்த கூட்டு செயற்பாட்டில் நாம் இடம்பெறாமல் இருந்திருந்தாலும்கூட நான் இதை வேறு அடிப்படைகளை செய்தே இருப்பேன். ஐநா அவைக்கு மலையக விவகாரங்களை கொண்டு செல்ல தீர்மானித்துள்ளேன் என நான் மூன்று மாதங்களுக்கு முன்பே சொன்னேன். இன்று இந்தியாவுக்கு ஞாபகப்படுத்தி, அமெரிக்கா, ஐரோப்பா, ஐநா என சகோதர மக்களுடன் கரங்கோர்த்து மலையக மக்களும் பயணிக்க வேண்டிய காலம் உதயமாகி உள்ளது.

இன்றைய நடவடிக்கை இலங்கையின் உற்ற நட்பு நாடான இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவதில் ஆரம்பிக்கிறது. இந்நாட்டின் சமீபத்து இந்திய வம்சாவளி மக்களையும் சேர்க்காமல் அல்லது இந்திய வம்சாவளி மக்களின் பிரதான அரசியல் இயக்கத்தின் பங்கு பற்றல் இல்லாமல், இந்திய பிரதமருக்கு கடிதம் எழுத முடியுமா?

ஆகவே, நாம் எங்கே இருக்க வேண்டுமோ, அங்கேயே இருக்கிறோம். அதுவும் நன்றாகவே இருக்கிறோம். நாம் எதை செய்ய வேண்டுமோ, அதையே செய்கிறோம். அதையும் நன்றாகவே செய்கிறோம். இந்நோக்கில் எம்முடன் கரங்கோர்க்கும் எவரையும் அரவணைக்க தயாராகவும் இருக்கிறோம்.

எழுபதுகளில் மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான் தமிழ் கட்சிகளுடன் தமிழர் கூட்டணி கூட்டு தலைமையில் இடம் பெற்றார். வட்டுக்கோட்டை தீர்மானத்தை எடுக்கும் நிலைமைக்கு ஈழத்தமிழ் உடன்பிறப்புகள் தள்ளப்பட்ட பிறகு, தன்னிலை விளக்கம் அளித்து அந்த கூட்டில் இருந்து நாகரீகமாக பெரியவர் தொண்டமான் விலகினார். அதேபோல் பிற்காலத்தில் வடகிழக்கு சகோதரர்களின் தலைமையின் அழைப்பை ஏற்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் நண்பர் சந்திரசேகரனும், நானும் வடகிழக்கு சகோதரத்துடனான எங்கள் உறவுகளை தொடர்ந்தும் கட்டி வளர்ந்து வந்தோம்.

கட்சி மாறுபாடுகளுக்கு அப்பால் பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமானை நான் எப்போதும் மதிக்கிறேன். அவர் அன்று எடுத்த முடிவு சரியானதே. தனிநாடு என்ற இலக்கை மலையக தமிழ் மக்கள் ஏற்க முடியாது என அவர் முடிவெடுத்தார். அதேவேளை, பொது நோக்கங்களில் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் முடிவெடுத்து செயற்பட்டார்.

தனிநாடு” என்பதால் கூட்டு செயற்பாட்டில் இருந்து
தொண்டமான் விலகியதை கணக்கில் எடுப்பவர்கள், அவர் அதுவரை தமிழ் கட்சிகளுடன் ஒருங்கிணைந்து
செயற்பட்டதையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

இது தொடர்பில் செளமியமூர்த்தி தொண்டமான் கடை பிடித்த கொள்கைகளையே நானும் கடை பிடிக்கிறேன். அதேபோல் நண்பர் சந்திரசேகரன் கடைபிடித்த கொள்கைகளையே நான் கடைபிடிக்கிறேன்.

நானும் நேற்று பொதுவாழ்வுக்கு வந்தவனல்ல. எனக்கும் இவை தொடர்பில் நீண்ட வரலாறு இந்நாட்டில் கடந்த இருபத்தி ஐந்து வருடங்களாக இருக்கிறது.

இன்று எமது பொது நோக்கு நிகழ்ச்சி நிரலில் தனிநாடு என்ற இலக்கு இல்லை. ஆயுத போராட்டம் என்பதும் இங்கில்லை. எங்கள் தந்தை நாடான இந்தியா, எங்கள் தாய் நாடான இலங்கையுடன், பிரிபடாத நாட்டுக்குள் எங்கள் பிரச்சினைகள் தொடர்பில் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்படுத்திகொண்ட கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் என நாம் இன்று கோருகிறோம். இது எமது பிரச்சினைகளுக்கு முழுமையான அரசியல் தீர்வு அல்ல எனவும் கூறுகிறோம்.

இதை எப்படி சிங்கள மக்களுக்கு, சிங்கள மொழியில் எடுத்து கூற வேண்டும் என்பதும் எனக்கு தெரியும். இன்று மாகாணசபைகளை இடைநிறுத்தி ஆளுநர்கள் மூலம் இந்த அரசு அராஜகம் செய்வதும், ஒரு தேர்தல் மூலம் இந்த அரசுக்கு கடும் செய்தி ஒன்ற சொல்ல சிங்கள மக்கள் காத்திருப்பதும் எனக்கு தெரியும். ஆகவே இதையிட்டு எவரும் கலவரமடைய தேவையில்லை.

இந்தியாவை நோக்கி முன்வைக்கப்படவிருக்கும் கூட்டுக்கோரிக்கை எது? நிலாந்தன்

தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் நோக்கத்தோடு டெலோ இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒருங்கிணைப்பு முயற்சிகள் கடந்த செவ்வாய்க்கிழமையோடு புதிய திருப்பத்தை அடைந்திருப்பதாக தெரிகிறது. டெலோ இயக்கம் அந்த நகர்வை முன்னெடுத்த பொழுது 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது என்பதே பிரதான கோரிக்கையாக காணப்பட்டது. அக்கோரிக்கையை தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளில் தமிழரசுக்கட்சி ஈடுபட மறுத்தமைக்கு அது மட்டும்தான் காரணமல்ல. அதைவிட ஆழமான காரணங்கள் உண்டு.

சிறிய பங்காளிக் கட்சியான டெலோ அவ்வாறான ஒருங்கிணைப்பு முயற்சியை ஏனைய கட்சிகளுடன் இணைந்து முன்னெடுக்கிறது என்றால் அதன் பொருள் அது ஏதோ ஒரு விகிதமளவிற்கு தலைமை தாங்க முற்படுகிறது என்பதுதான். தலைமை தாங்க வேண்டிய மூத்த கட்சியான தமிழரசுக் கட்சியை மேவி டெலோ முன்கை எடுக்கிறது என்றுதான் பொருள். கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக கூட்டமைப்புக்குள் ஒரு அப்பாவிப் பங்காளியாகக் காணப்பட்ட டெலோ இயக்கம்  இவ்வாறு திடீரென்று முன்கை எடுக்க காரணம் என்ன ?

முதலாவது காரணம், கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு அதன் ஏகபோகத்தை இழந்தமை. இரண்டாவது காரணம்,டெலோ இயக்கத்துக்கு 3 ஆசனங்கள் கிடைத்தமை. மூன்றாவது காரணம், சுமந்திரனின் தொடர்ச்சியான அவமதிப்புக்களால் ஏற்பட்ட கோபமும் ரோஷமும். நான்காவது காரணம் டெலோ இயக்கத்தின்  பேச்சாளரும் கடந்த பொதுத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டவருமான குருசாமி சுரேந்திரன்.

அப்பாவியாக காணப்பட்ட டெலோ இவ்வாறான ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு தலைமை தாங்க முடியும் என்பது சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த ஜெனிவாக் கூட்டத்தொடரில் அனுப்பப்பட்ட ஒரு கூட்டுக் கடித்தில் நிரூபிக்கப்பட்டது.அதில் தமிழரசுக் கட்சி இணையவில்லை. எனினும் தமிழரசுக் கட்சியை தவிர்த்துவிட்டு ஏனைய கட்சிகள் ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்ப முடியும் என்பது கடைசியாக நடந்த ஜெனிவா கூட்டத்தொடரில் நிரூபிக்கப்பட்டது.

அதன் அடுத்த கட்டமாக இவ்வாறு இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையைக் முன்வைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறு டெலோ இயக்கம் முன்கை எடுப்பதை தமிழரசுக்கட்சி ரசிக்கவில்லை.டெலோவின் பின்னணியில் இந்தியா இருக்கிறது என்று ஒரு பகுதியினர் குற்றம் சாட்டினார்கள். பசில் ராஜபக்ச இருக்கிறார் என்று மற்றொரு பகுதியினர் குற்றம் சாட்டினார்கள்.

குறிப்பாக டெலோவின் முன்னெடுப்புக்களில் சுமந்திரன் இணைக்கப்படவில்லை.ஏனெனில் அது கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் என்று காரணம் கூறப்பட்டது. ஆனால் சுமந்திரன் தொடர்ச்சியாக பங்காளிக் கட்சிகளை அவமதித்தமையும் ஒரு காரணம்தான். எனினும் சுமந்திரனை ஒதுக்கியது ஒரு தந்திரோபாயத தவறாக காணப்பட்டது. ஏனெனில் தமிழரசுக் கட்சிக்குள்ளும் கூட்டமைப்புக்குள்ளும் அடுத்தகட்டத் தலைவராக சுமந்திரனே காணப்படுகிறார். அவரை மீறி செல்லத்தக்க தகைமை தங்களுக்கு இருப்பதாக கட்சிக்குள் வேறு யாரும் இதுவரையிலும் நிரூபித்திருக்கவில்லை. எனவே கூட்டமைப்பினதும் தமிழரசுக்கட்சியினதும் செயற்படு தலைவராக காணப்படும் சுமந்திரனை ஒதுக்கிவிட்டு அப்படி ஒரு ஒருங்கிணைப்பை முன்னெடுத்தமை தந்திரோபாய ரீதியாக பலவீனமானது. அதன் விளைவுகளே கடந்த பல வாரங்களாக ஏற்பட்டுவரும் குழப்பங்கள் ஆகும்.

இதனால்தான் டெலோ இயக்கம் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவைக்கு கொடுத்த அழைப்புகளை மாவை வெளியில் கூறாமல் மறைத்திருக்கிறார். ஏனெனில் கட்சியின் தலைவராக அவர் காணப்பட்டாலும் சுமந்திரனை பகைத்துக்கொண்டு முடிவெடுக்க முடியாதவராக அவர் காணப்படுகிறார். அதுபோலவே சம்பந்தரை தமது முன் முயற்சிகளுக்கு தலைமை தாங்குமாறு டெலோ இயக்கம் பல தடவை கேட்டும் அவர் அதை மறுத்து விட்டார். சுமந்திரனை ஒதுக்கும் அந்த முயற்சிகளை சம்பந்தரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதே சமயம் சுமந்திரன் தனது முதன்மையை நிரூபிக்கும் விதத்தில் ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கி அமெரிக்காவுக்கு போனார்.அதோடு கூட்டமைப்பை புதுடில்லிக்கு வருமாறு இந்தியா அழைத்தபோது சம்பந்தர் அதை ஒத்திவைத்தார். இவை அனைத்தினதும் தொகுக்கப்பட்ட சித்திரமானது சம்பந்தர் இந்தியாவை இனப்பிரச்சினைக்குள் முழு அளவுக்கு சம்பந்தப்படுத்த விரும்பவில்லை என்ற தோற்றத்தை வெளிக்கொண்டு வந்தது. எனவே அவ்வாறு இந்தியாவை முரண் நிலைக்குத் தள்ள விரும்பாத சம்பந்தர் முடிவில் டெலோவின் முன்னெடுப்புக்களுக்கு ஒத்துழைக்க முன்வந்தார். இதன் விளைவாக கடைசியாக நடந்த இரண்டு சந்திப்புகளில் தமிழரசுக் கட்சி பங்குபற்றியிருக்கிறது.

தமிழரசுக்கட்சியின் உள்நுழைவோடு கூட்டுக் கோரிக்கையின் வடிவம் மாற்றப்படும் நிலைமைகள் தெரிகின்றன.கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இரண்டாவது சந்திப்பில் கூட்டுக் கோரிக்கையின் ஆரம்ப வடிவத்திலிருந்து அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிகள் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. அது இயல்பான ஒன்றுதான். ஏனென்றால் எந்த ஒரு கூட்டுக் கோரிக்கையும் தொடக்கத்தில் இருப்பதைப் போல முடிவில் அமைவதில்லை. பல கட்சிகள் சம்பந்தப்படும் ஒரு முன்னெடுப்பில் அப்படித்தான் மாற்றங்கள் ஏற்படும். அது இயல்பானது, இயற்கையானது, தவிர்க்க முடியாதது.

கடந்த ஜனவரி மாதம் ஜெனிவாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலும் அது நடந்தது. அந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளின் முதலாவது சந்திப்பு கிளிநொச்சியில் இடம் பெற்றது. அதில் சுமந்திரனும் சிவாஜிலிங்கமும் ஏற்றுக்கொண்ட அடிப்படைகள் வேறு.  ஆனால்,வவுனியாவில் நடந்த இரண்டாவது சந்திப்பில் கஜேந்திரகுமார் இணைந்தபின் முடிவெடுக்கப்பட்ட கோரிக்கை வேறு. அக்கோரிக்கை பின்னர் கிளிநொச்சியில் நடந்த கடைசிச் சந்திப்பில் வேறு அம்சங்களை இணைத்து இறுதியாக்கப்பட்டது. எனவே பல கட்சிகள் சம்பந்தப்படும்போது கூட்டு கோரிக்கை மாற்றம் காணும்.

அதுதான் இப்பொழுது நடக்கிறது. தமிழரசுக்கட்சி உள்நுழைந்த பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விட இந்திய-இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் கோரிக்கையை முன் வைப்பது என்ற அம்சம் முதன்மை பெறுவதாக தெரிகிறது. எனினும் எல்லா தரப்புக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இறுதி வரைபு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாதவரையிலும் அது தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியாது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதில் வெளியே நிற்கிறது. அக்கட்சியை உள்ளே கொண்டு வந்திருந்தால் கூட்டுமுயற்சி அதன் முழுமையான வடிவத்தை அடைந்திருக்கும். எனினும் அக்கட்சியை உள்ளே கொண்டு வரும் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஒருங்கிணைப்பு முயற்சிகளின் தொடக்கத்திலிருந்து கஜேந்திரகுமாருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுக்கு அவர் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் மனோ கணேசன்,ரவூப் ஹக்கீம்,செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் அவரை அணுகி நேரடியாக அழைப்பு விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதோடு அவர் அண்மை வாரங்களாக ஊடகங்களுக்கு தெரிவித்துவரும் கருத்துக்கள் மேற்படி ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு எதிரானவைகளாகவும் காணப்படுகின்றன. எனவே அவரை இந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்குள் கொண்டுவர முடியவில்லை என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை இந்த ஒருங்கிணைப்புக்குள் இணைத்திருந்தால் புவிசார் அரசியல் தொடர்பிலும் பூகோள அரசியல் தொடர்பிலும் அக்கட்சியானது துலக்கமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கும். அதோடு இப்பொழுது தயாரிக்கப்பட்டுவரும் இறுதியாவணம் வேறொரு வடிவத்தை அடைந்திருக்கும்.

கிடைக்கும் தகவல்களின்படி அந்த இறுதிவரைபு பெரும்பாலும் வரும் புதன்கிழமை கையெழுத்திடப்படலாம் என்று தெரிகிறது. அந்த இறுதிவரைபு எப்படியும் அமையலாம். ஆனால் அது ஒப்பீட்டளவில் ஆகப்பெரிய ஒரு கூட்டு முயற்சியாக அமையும். மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளை இணைத்து தமிழ்க் கட்சிகள் இவ்வாறாக ஓர் ஒருங்கிணைப்புக்குப்  போனமை என்பது ஒரு முக்கிய திருப்பம். இது ஒரு விதத்தில் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது காணப்பட்ட நிலைமைக்கு நிகரானது.

மிகக் குறிப்பாக கூட்டமைப்புக்குள் கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக அப்பாவியாக காட்சியளித்த இரு கட்சிகள் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய கட்சிகள் மற்றும் தலைவர்களோடு இணைந்து இவ்வாறான ஒர் ஒருங்கிணைப்பு முயற்சியில் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேறியிருப்பது என்பது கூட்டமைப்பின் அக ஜனநாயகத்தை பலப்படுத்துவதில் ஒரு முக்கிய அடைவுதான்.அதேசமயம் கட்சிகளுக்கிடையிலான போட்டாபோட்டிகள் மற்றும் முரண்பாடுகளுக்கு ஊடாக ஒரு மக்கள் கூட்டத்தின் வெளியுறவுக் கொள்கையை அணுகக் கூடாது என்பதிலும் சம்பந்தப்பட்ட கட்சிகள் தெளிவாகவும் விழிப்பாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும்.