பிராந்தியத்தின் கல்விக் கேந்திர மையமாக இலங்கையை மாற்றுவதற்கு உதவி

இலங்கையை பிராந்தியத்தின் கல்விக் கேந்திர மையமாக மாற்றுவதற்கு உதவுவதாக அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் திருமதி கெரன் அன்ட்ரூஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்புகளைப் படிக்க விரும்பும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பொருத்தமான பாடநெறிகளின் ஆரம்ப கட்டத்தை இலங்கையில் தொடர்வதற்குத் தேவையான கல்வி நிறுவனங்களை இலங்கையில் நிறுவுவதன் மூலம் இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக அன்ட்ரூஸ் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (20) பிற்பகல் நடைபெற்ற சந்திப்பின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சுடன் இணைந்து தொழில் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 12 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் ஆகும்.

இலங்கையில் தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய உற்பத்திகளை இலங்கைக்கு கொண்டுவந்து பெறுமதி சேர்த்து, மீள் ஏற்றுமதி செய்வதற்கும் அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக கெரன் அன்ட்ரூஸ் தெரிவித்தார்.

பசுமை விவசாயம் தொடர்பான இலங்கையின் கொள்கையைப் பாராட்டிய அமைச்சர், அவுஸ்திரேலியாவும் நிலைபேறான விவசாயத்தில் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 2022ஆம் ஆண்டில், 75 வருடங்கள் நிறைவடைகின்றன. அந்த நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த நடவடிக்கைகளை அன்ட்ரூஸ் பாராட்டினார்.

11.7 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் உதவியை இலங்கையில் கொவிட் தடுப்புச் செயல்முறைக்கு வழங்கியதை ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, மனித கடத்தலை நிறுத்துவதற்கு அப்போதைய அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஸ்கொட் மொரிசனுடன் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது. அவுஸ்திரேலியாவின் தற்போதைய பிரதமராக ஸ்கொட் மொரிசன் செயற்படுவதையிட்டு தமது மகிழ்ச்சியைத் தெரிவித்த ஜனாதிபதி, போதைப்பொருள் வியாபாரம், கடற்கொள்ளையர்களின் செயற்பாடுகள் மற்றும் மனித கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கான வலுவான பொறிமுறையை இரு நாடுகளும் மேலும் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியப் பெருங்கடலின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான பணிகளுக்கு தனது அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும், பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் ஆண்ட்ரூஸ் கூறினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில பிரிவுகளைத் திருத்தம் செய்வதற்கு புலம்பெயர் மக்களுடன் புரிந்துணர்வுடன் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்

முல்லைத்தீவு உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் சட்டவிரோத கருக்கலைப்புக்கு முயற்சித்தபோது கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மூங்கிலாறு கிராம மக்களால் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மூங்கிலாறு கிராமத்தில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 15ஆம் திகதி குறித்த சிறுமி காணாமல்போனதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாயாரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதற்கு அமைவாக நான்கு நாட்கள் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் பின்னர், கைவிடப்பட்ட வளவு ஒன்றில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

குறித்த சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் அறிக்கை நேற்றையதினம் வெளியாகியிருந்தது. பிறப்புறுப்பில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இறப்பு சம்பவித்துள்ளதோடு, இரண்டுமாதம் சிறுமி கருவுற்றும் இருந்துள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி கருத்தரித்த பின்னர் சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்புக்கு முயற்சித்து அதிக இரத்த போக்கு ஏற்பட்டு சிறுமி உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரியும் சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த கோரியும் உயிரிழந்த சிறுமியின் கிராமமான மூங்கிலாறு கிராமத்தின் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் அரசியல் செயற்பாட்டாளர்கள் என பலரும் ஒன்றிணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

மூங்கிலாறு சந்தியிலிருந்து உடையார்கட்டு மகா வித்தியாலயம் வரை பேரணியாக சென்று கறுப்பு கொடிகள் மற்றும் கறுப்பு பட்டிகளை அணிந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மற்றும் கிழக்கில் சீனாவின் ஆதிக்கத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும் – இரா.துரைரெட்ணம்

வடக்கு மற்றும் கிழக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா முன்னெடுக்கும் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என பாத்மநாபா மன்றத்தின் தலைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

வடகிழக்கு தமிழர்கள் இந்தியா மீது வைத்திருக்கும் நம்பிக்கையினை குழப்புவதற்காகவே சீனாவின் இந்த செயற்பாடு அமைவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “குறிப்பிட்ட காலமாக யாழ். குடா நாட்டிலும் வடகிழக்கிலும் முன்னெடுக்கப்படும் இராஜதந்திர செயற்பாடுகளின் அடிப்படையில் வடக்கினை சீனாவுக்கு தாரைவார்த்துவிட்டது போன்று உள்ளது. வடக்கில் சீனாவின் மேலாதிக்கம் தொடர்ந்து வருகின்றது.

இலங்கை அரசாங்கம் பொருளாதார ரீதியாக வலுவடைவதற்காக யாழ். குடாவில் இந்தியாவுக்கு ஆபத்தாக வரக்கூடிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்கின்ற சந்தேகம் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளன.

கடந்தவாரம்கூட சீனாவின் தூதுவர்கள் யாழ். குடாவில் இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய கேந்திர நிலையத்திற்கு சென்ற விடயம் என்பது இலங்கை ஊடாக இந்தியாவுக்கு செய்தி ஏதும் வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இலங்கை அரசாங்கம் அயல்நாடுகளுக்கு அச்சுறுத்தலையும் பாதுகாப்பு நெருக்கடியையும் ஏற்படுத்தக்கூடிய இராஜதந்திர செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கின்றதா என்ற சந்தேகம் வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

வரலாற்று ரீதியாக வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு ஒரு இறையான்மையுள்ளது. வடகிழக்கு பூர்வீகமாக தமிழர்கள் வாழும் பிரதேசம். தனியான கலைகலாசார விழுமியங்களை கொண்ட பகுதி. இந்த கலை கலாசார விழுமியங்களுடன் இந்தியா அங்குள்ள தமிழ் நாட்டுடன் உள்ள உறவு, தமிழர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தக்கூடிய செயற்பாடுகள் என பல விடயங்களில் வடகிழக்கு தமிழர்கள் இந்தியா மீது கடந்த காலத்தில் கரிசனை காட்டியுள்ளார்கள், எதிர்காலத்தில் காட்டுவார்கள், காட்டக்கூடிய சூழ்நிலையுள்ளது.

இந்த சூழ்நிலையினை குழப்புவதற்காக சீனாவின் ஆதிக்கத்தை கொண்டுவருவதை இலங்கை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும். அதுவே ஆரோக்கியமான செயற்பாடு.

இலங்கை அரசாங்கம் தனது பொருளாதார நலனுக்காக வடகிழக்கினை சீனாவுக்கு தாரைவார்த்துக்கொடுப்பது என்பதும் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடியவாறும் அயல்நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடியவாறும் இலங்கை அரசாங்கம் செயற்படுவதை வன்மையாக கண்டிக்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டுகளில் பாரிய கடன் நெருக்கடியைச் சந்திக்கப்போகும் இலங்கை!

புதிய வெளிநாட்டு உதவிகள் மற்றும் கடன்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ள காரணத்தினால், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கடன்களை செலுத்துவதில் பாரிய நெருக்கடி நிலைமையை எதிர்கொள்ளவுள்ளதாகவும், 2022ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் கடன்கள் மற்றும் கடனுக்கான வட்டியென வெளிநாட்டு மொத்த நாணயக்கடனாக 26 பில்லியன் டொலர்களை இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டி வரும் என சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான ‘ஃப்ட்ச் ரேட்டிங்’ (Fitch Ratings) நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு இலங்கையை தமது தரவரிசையிலிருந்து ஒரு படி குறைத்துள்ளதாகவும், அதற்கமைய ‘சி.சி.சி’ தரப்படுத்தலில் இருந்து ‘சி.சி’ தரப்படுத்தலுக்கு இலங்கை பின்தள்ளப்படுவதாகவும் அறிவித்துள்ளது. கொவிட் -19 வைரஸ் பரவல் மூலமாக தாக்கங்களின் பின்னர் இலங்கையின் அந்நிய செலாவணி பற்றாக்குறையினால் இலங்கை இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 1.5 வீத வீழ்ச்சியை அறிவித்துள்ள நிலையில், தற்போது குறித்த நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கையை தரவரிசையில் பின்தள்ள அவர்கள் கூறியுள்ள காரணமானது, அந்நிய செலாவணியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, உணவு, எரிபொருள் மற்றும் மருந்து ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு காணப்படுவதாகவும், அதேபோல் இலங்கையின் அன்னிய செலாவணி கையிருப்பானது, இலங்கை மத்திய வங்கியின் அதிக இறக்குமதி கட்டணம் மற்றும் வெளிநாட்டு நாணய தலையீடு ஆகியவற்றின் காரணமாக தமது இறுதி மதிப்பீட்டிற்கு அமைய எதிர்பார்த்ததை விடவும் மிக மோசமாக குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளதுடன், அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களினால் குறைவடைந்துள்ளதுடன், நவம்பர் மாதத்தின் இறுதியில் இது 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளது.

ஒரு மாதத்திற்கும் குறைவான தற்போதைய வெளிப்புறக் கொடுப்பனவுகளுக்கு (CXP) சமமானதாக காணப்படுகின்றது எனவும், ஒப்பீட்டளவில் இது 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களினால் அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சியைக் வெளிப்படுத்தியுள்ளது என்பதையும் ‘ஃப்ட்ச் ரேட்டிங்’ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், புதிய வெளிநாட்டு உதவிகள் மற்றும் கடன்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையில் இலங்கை உள்ள காரணத்தினால், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கடன்களை செலுத்துவதில் பாரிய நெருக்கடி நிலைமை இருக்கும் என்பதையும் தாம் அவதானித்துள்ளதாக குறித்த நிறுவனம் கூறியுள்ளதுடன், தற்போதுள்ள நிலைமையில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு கடந்த நவம்பர் மாத இறுதியில் 1.58 பில்லியன் டொலர் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 500 மில்லியன் டொலரையும், 2022ம் ஆண்டு ஜுலை மாதம் 1.0 பில்லியன் டொலரையும் மீள செலுத்த வேண்டியுள்ள காரணத்தினால் இலங்கைக்கு இது பாரிய சவாலை ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோல், 2022ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் கடன்கள் மற்றும் கடனுக்கான வட்டியென வெளிநாட்டு மொத்த நாணயக்கடனாக 26 பில்லியன் டொலர்களை இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டி வரும் எனவும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்திய நிவாரணப்பொதி, கட்டார் மத்திய வங்கியுடனான பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையிலான கடன், பிராந்திய ஒத்துழைப்புகள் மூலமாக நாணய பரிமாற்றல், சீன வங்கியின் கடன் வசதிகளை பெற்றுக்கொண்டாலும் கூட 2022 ஆம் ஆண்டில் முழுமையான கடன்களை அடைக்க போதுமான வேலைத்திட்டம் இல்லாதமை அரசாங்கத்திற்கு சவாலாக இருக்கும் என தாம் கருதுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல் இலங்கை தனது தேசிய வருவாயை கூட்டிக்கொள்ளும் துறைகளிலும் பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்துள்ளத்து. குறிப்பாக கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு பின்னர் இலங்கையின் பிரதான வருவாய் துறையான சுற்றுலாத்துறை போன்றன வீழ்ச்சி கண்டுள்ளன. 2021 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பற்றாக்குறை 5.7 வீதமாக காணப்பட்ட நிலையில், 2022 ஆம் ஆண்டில் இது 2.1 வீதத்தால் மேலும் குறைவடைவதுடன், 2022 ஆம் ஆண்டில் 4 வீதமாக பற்றாக்குறை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளது.

அரசாங்கம் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் – சிவாஜிலிங்கம் வலியுறுத்து

போர் முடிந்து 13ஆவது ஆண்டில் காலடி வைக்கும்போதாவது அரசு இந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பது தான் நாங்கள் ஆட்சியாளர்களுக்கு சொல்லக்கூடிய ஒன்று என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கீரிமலையில் இன்று காணி சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

நில அளவைத் திணைக்களம் கீரிமலையில், ஜனாதிபதி மாளிகை உள்ளடங்கிய 34 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதற்கு பொது மக்களுக்கு அறிவித்து தற்போது அதனை அளப்பதற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் மக்களும் மக்கள் பிரதிநிதிகளான நாங்களும், கட்சிகளின் தலைவர்களும் மற்றும் கட்சிகளின் தொண்டர்களும் இணைந்து அதற்கு கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளோம்.

அரசாங்கம் தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட்டு வருகின்றது. இப்போது சட்டத்தின் புதிய பிரிவுகளை பாவித்து காணிகளை சுவீகரிப்பு செய்வதற்கு முயல்கின்றது.

சீனாவின் வருகை போன்றவற்றிலே இங்கு பல காணிகள் 600 ஏக்கர்களாக பிரித்து சீனாவின் கடற்படைகளுக்கு கொடுக்க போகின்றீர்களா? என இன்று நேற்று அல்ல நான்கு ஆண்டுகளாக நாங்கள் கேட்கின்றோம்.

வட்டுவாகலில் கடற்படை முகாம் அமைந்துள்ள 616 ஏக்கர் காணிகளை அளக்க முடிவு எடுத்தபோது நாங்கள் அதற்கு தடையாக இருந்ததால் எங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நில அளவைத் திணைக்களத்தின் வாகனத்தை சேதப்படுத்தினோம் என்றும், தடுத்து நிறுத்தினோம் என்றும், சட்டவிரோதமாக கூடினோம் என்றும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே தொடர்ந்து நாங்கள் இதனை தடுத்து கொண்டிருக்க முடியாது. அரசாங்கம் இதற்கு சரியானதொரு முடிவை எடுக்க வேண்டும்.

சில தினங்களுக்கு முன்னர் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசா தனது காணியை விற்பதற்கு இங்கு வந்து போனதாக தெரியவருகின்றது.

இதன் அடிப்படையில் பார்க்கும்போது நீங்கள் உங்களது சொந்த காணிகளை பற்றியோ மக்களது பிரச்சினைகளை பற்றியோ கருத்தில் எடுக்கவில்லை எனத்தான் தோன்றுகிறது.

ஆகவே அரசு இந்தக் காணிகளை விடுவித்து மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டால் மட்டுமே நாட்டுக்கு எதிர்காலம் உண்டு!

“தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டால் மட்டுமே இந்நாட்டுக்கு எதிர்காலம் உண்டு. இன ஐக்கியம் இல்லாவிட்டால் ஒருபோதும் நாட்டை அபிவிருத்தி நோக்கி அழைத்துச்செல்ல முடியாது.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்திக்கொள்வதற்கு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ், முஸ்லிம் மக்களுடன் நாம் எவ்வளவு சகோதரத்துவத்துடன் வாழ்கின்றோம் என்பதில்தான் இந்த நாட்டின் வளர்ச்சி தங்கியுள்ளது. இன ஐக்கியம் இல்லாவிட்டால் எந்தவொரு நாட்டையும் கட்டியெழுப்ப முடியாது. 1956 இல் தனிச்சிங்கள மொழி சட்டம் கொண்டுவரப்பட்டு எமது நாட்டில் அழிவுக்கான பாதை ஆரம்பித்துவைக்கப்பட்டது. ஒரு மொழியென்றால் இரு நாடுகள், இரு மொழிகளென்றால் ஒரு நாடு என அன்றே கொல்வின் ஆர்.டி.சில்வா எடுத்துரைத்தார். அவர் கூறியது போன்று இங்கு நடந்தது.

சிங்கப்பூரின் தந்தையென போற்றப்படும் லீகுவான், முதலில் இன ஐக்கியத்தையே கட்டியெழுப்பினார். சிங்கப்பூரில் 75 வீதம் சீனர்கள் வாழ்ந்தாலும் மலேசிய மொழியில் தேசிய கீதம் எழுதப்பட்டது. இந்தியருக்கு வெளிவிவகார அமைச்சு பதவி வழங்கப்பட்டது. இப்படிதான் இனங்களுக்கிடையில் நம்பிக்கையை ஏற்படுத்தி, இன ஐக்கியம் மூலம் சிங்கப்பூரை லீ குவான் கட்டியெழுப்பினார்.

ஆனால், எமது நாட்டில் இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தினர். அதனால்தான் நாடு முன்னேறவில்லை. எனவே, இனியாவது பொது இணக்கப்பாட்டுக்குவந்து பேச்சு நடத்தி, பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. இதனை நான் 70 முதல் வலியுறுத்தி வருகின்றேன். அதற்காகக் குண்டுத் தாக்குதலும் நடத்தினர். இன்றும் அதையே சொல்கின்றேன்” – என்றார்.

Posted in Uncategorized

அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட வைத்தியர்கள் தீர்மானம்!

24 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளைய தினம்(திங்கட்கிழமை) மன்னார், திருகோணமலை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

காலை 8 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டாலும், அவசர சிகிச்சைப் பிரிவுகளின் நடவடிக்கைகள் முன்னெடுக்கடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

43 பேரின் விடுதலையை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை விடுதலை செய்ய கோரி நாளை முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 400க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்ற மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள்  சென்றனர்.

மீனவர்கள்  நேற்று சுமார் 9 மணியளவில் நெடுந்தீவுக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து பணியியல் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர்  மீன்பிடிக்க சென்ற சக்தி, பிரபு, காளிமுத்து, குமார் உள்ளிட்ட 43 மீனவர்களை படகுடன்  கைது செய்து யாழ்ப்பாண மாவட்ட மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் மீனவர்களுக்கு பரிசோதனை செய்து யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.

இதனை கண்டித்து இன்று ராமேஸ்வரம் விசை படகு மீனவர்கள் மீன் பிடி துறைமுகத்தில் உள்ள  மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

கூட்டத்தில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள  43 ராமேஸ்வரம் மீனவர்களையும் படகுடன் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் செய்ய முடிவு செய்தனர்.

மேலும் ராமேஸ்வரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே சிறைபிடித்து செல்லப்பட்ட மீனவ குடும்பத்தினருடன்  ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

மீனவர்களின் இந்த திடீர் வேலை நிறுத்தப்போராட்டத்தால் சுமார் 800க்கும் மேற்பட்ட மீன் பிடி விசைப்படகுக் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தால் 50 ஆயிரம் மீனவர்களும் ஒரு இலட்சம் மீன் பிடி சார்பு தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளனர்.

மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்படாது என்கிறது அரசாங்கம்!

மாகாண சபை தேர்தலினை ஒத்திவைக்கும் தீர்மானம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கெலிஓயா பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13வது திருத்தம் தமிழர்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் வழங்கவில்லை – காணாமல் போனவர்களின் உறவுகள்!

13வது திருத்தம் தமிழர்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் வழங்கவில்லை என வவுனியாவில் கடந்த 1767 வது நாளாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடந்த 74 வருடங்களாக ஒற்றையாட்சி அரசில், தமிழர்கள் பல உரிமைகளை இழந்தனர் மற்றும் ஒரு அரசியல் ஆதாயம் பெறவில்லை. ஆக்கிரமிப்பு மற்றும் ஒடுக்குமுறையுடன் யுத்தம் மற்றும் இனப்படுகொலையின் தொடர்ச்சியின் பின்னர், தமிழர்கள் வடக்கு கிழக்கில் ஒரு தமிழ் இனமாக வாழ்வதற்கு மூன்று அடிப்படை கட்டமைப்புகள் தேவை.

பாதுகாப்பான தாயகம் வேண்டும், கொலைகள், கடத்தல், பயங்கரவாதச் சட்டம், நில அபகரிப்பு, தமிழர்களின் கலாச்சாரத்தைப் சீரழிப்பு போன்றவற்றிலிருந்து தமிழர்களுக்குப் பாதுகாப்பு தேவை. உளவுத்துறையினரால் ஆதரிக்கப்படும் போதைப்பொருள் மற்றும் கும்பல் வன்முறையில் இருந்து எங்கள் இளைய தலைமுறையைக் காப்பாற்ற வேண்டும்.

அத்துடன் தமிழர்களுக்குப் பாதுகாக்கப்பட்ட தாயகம் வேண்டும். சிங்களவர்களிடமிருந்து நமது வடக்கு கிழக்குப் பாதுகாக்கப்பட வேண்டும், கொடூரமான இராணுவத்துடன் எங்கள் நிலத்தைக் கைப்பற்றி, அவர்களின் சொந்த வரலாற்றின் பொய்யான அல்லது சூழ்ச்சியின் பெயரால், சிங்களப் புத்திஜீவிகளின் பெளத்த அடிப்படை வாத பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும்.

திரும்ப பெறமுடியாத அரசியல் தீர்வு, சிங்கள அரசால் பறிக்க முடியாத அரசியல் தீர்வு தமிழர்களுக்குத் தேவை. எமது அரசியல் உரிமைகள் பலவற்றை இலங்கை பறித்ததை நாம் பார்த்திருக்கின்றோம்.

உதாரணமாக, 1944 இல், சோல்பரி அரசியலமைப்பின் 29 (2) வது சரத்தின் மூலம் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு ஒரு அரசியலமைப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டது, 1972 இலங்கை அரசியலமைப்பிலிருந்து ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவால் தமிழர்களுக்கான அரசியலமைப்பு பாதுகாப்பு அழிக்கப்பட்டது.

13 திருத்தத்தின்படி, இலங்கை வடக்கு கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நிராகரித்தது. பல பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் பல நிறுவனங்கள் கொழும்பு அரசாங்கத்தால் மாகாண சபையிடமிருந்து எடுக்கப்பட்டன. எந்த ஒரு அரசியலமைப்பு ஏற்பாடுகளையும் சிங்களவர்கள் ⅔ பெரும்பான்மையுடன் எப்போது வேண்டுமானாலும் எங்கும் எடுக்க முடியும் என்பதை இவை அனைத்தும் காட்டுகின்றன.

எனவே உலகம் இலங்கையில் ஒரு முறை மட்டுமே அரசியல் தீர்வுக்கு வழி வகுக்கும், 13வது திருத்தத்திற்குப் பதிலாக, திரும்பப் பெற முடியாத, பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தீர்வு தேவை என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும்.

செல்வம் அடைக்கலநாதன் சகல கட்சிகளையும் கூட்டி 13வது திருத்தத்தை முன்வைப்பது ஏன்? 13வது திருத்தம் 1987 இல் வந்தவுடன் இறந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் இந்தியா 13வது திருத்தத்தை பயன்படுத்தி இலங்கையை கட்டுப்படுத்த மாத்திரம் பயன்படுத்தியது. இந்தியா 13 ஐ நடைமுறைப்படுத்த நினைத்ததில்லை, வெறும் பேச்சு மாத்திரமே. செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அவரது பேச்சாளர் சுரேன் குருசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

வவுனியா நெடுங்கேணியில் சிங்களவர்களுக்கு 4000 உறுதி பத்திரங்களை தனது நட்பு ரணிலின் அரசாங்கம் வழங்கிய போது செல்வம் என்ன செய்தார், பிரதிநாடாளுமன்ற குழுக்களின் தலைவராக இருக்கும் போது, அடைக்கலநாதன், ரணில் அரசாங்கத்தை விமர்சித்ததில்லை. தமிழர் தாயகத்தில் 1000 பௌத்த விகாரைகள் கட்டுவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கியதற்கு ஆதரித்து வாக்களித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் நாங்கள் நம்பவில்லை. ஒரு எம்.பி எதிரியிடம் பணம் வாங்கினால், தயவுசெய்து அவர்களை நம்ப வேண்டாம். 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த பல சக்தி வாய்ந்த நாடுகள் மற்றும் ஐ.நா. ஆகியன முயற்சித்தன.

அதை இந்தியா ஒருபோதும் செயல்படுத்தாது. 13வது திருத்தத்தை இலங்கையை கட்டுப்படுத்தும் துரும்பாக மட்டுமே பயன்படுத்தும். எல்லாவற்றிற்கும் மேலாக, மேற்கூறிய 3 காரணங்களுக்காக 13 வது திருத்தம் தமிழர்களுக்கு பயனற்றது.13வது திருத்தத்திற்கு பதிலாக, போஸ்னியா பாணியிலான பேச்சுவார்த்தைதான் எமக்கு தேவை.

எனவே அனுபவமிக்க அரசியலமைப்பு அறிஞர்களைக் கொண்டு அரசியல் மத்தியஸ்தம் செய்யுமாறு அமெரிக்காவை கேட்டு கொள்கிறோம். தமிழர்கள் விரும்பும் பரஸ்பர இணக்கமான தீர்வுகள் மட்டுமே என்ற முடிவுக்கு அனைவரும் வருவார்கள் என நம்புகிறோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களாகிய நாம் ஒரு வாக்கெடுப்பை கேட்கிறோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Posted in Uncategorized