43 பேரின் விடுதலையை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை விடுதலை செய்ய கோரி நாளை முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 400க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்ற மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள்  சென்றனர்.

மீனவர்கள்  நேற்று சுமார் 9 மணியளவில் நெடுந்தீவுக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து பணியியல் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர்  மீன்பிடிக்க சென்ற சக்தி, பிரபு, காளிமுத்து, குமார் உள்ளிட்ட 43 மீனவர்களை படகுடன்  கைது செய்து யாழ்ப்பாண மாவட்ட மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் மீனவர்களுக்கு பரிசோதனை செய்து யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.

இதனை கண்டித்து இன்று ராமேஸ்வரம் விசை படகு மீனவர்கள் மீன் பிடி துறைமுகத்தில் உள்ள  மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

கூட்டத்தில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள  43 ராமேஸ்வரம் மீனவர்களையும் படகுடன் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் செய்ய முடிவு செய்தனர்.

மேலும் ராமேஸ்வரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே சிறைபிடித்து செல்லப்பட்ட மீனவ குடும்பத்தினருடன்  ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

மீனவர்களின் இந்த திடீர் வேலை நிறுத்தப்போராட்டத்தால் சுமார் 800க்கும் மேற்பட்ட மீன் பிடி விசைப்படகுக் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தால் 50 ஆயிரம் மீனவர்களும் ஒரு இலட்சம் மீன் பிடி சார்பு தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளனர்.