ஆளும் கட்சி கூட்டத்தில் சலசலப்பு

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆளும் கட்சியின் கூட்டத்தில் ஒருவகையான சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனிப்பட்ட விஜயமாக சிங்கபூருக்கு சென்றுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டைக்குச் சென்றுள்ளார்.

இதனிடையே, ஆளும் கட்சியின் கூட்டம் அலரிமாளிக்கையில் நடைபெறுகின்றது. அதனை நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையேற்று நடத்தி​க்கொண்டிருக்கின்றார். இதனால், சலசலப்பு ஏற்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

சாணக்கியன்,சுமந்திரன் எம்.பிக்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது – செல்வராசா கஜேந்திரன்

சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாத சாணக்கியன் எம்.பி மக்களை  ஏமாற்றுவதற்காக வடகிழக்கு இணைந்த முதலமைச்சர்  சொல்கின்ற ஒரு விடயத்தை தெரிவித்து தொடர்ந்து ஏமாற்ற மக்கள் ஏமாளிகள் அல்லர் என   என பாராளுமன்ற உறுப்பினரும்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான  செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்  அலுவலகத்தில்   இன்று   இடம்பெற்ற  விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது

தமிழ் தாயகத்தில் இடம்பெறுகின்ற பௌத்தமயமாக்கம் சிங்கள மயமாக்கம் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்தாவிடின் தமிழ் தேசத்தின் இருப்பினை நாங்கள் பாதுகாக்க முடியாது என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறான விடயங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமாயின் தமிழ் தேசத்தின் இறைமை என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்.தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போன்று ஒரு சுயாட்சி எட்டப்பட வேண்டும்.இவ்வாறு இல்லாமல் வெறுமனே வடக்கு கிழக்கினை இணைப்பதன் ஊடாக மாத்திரம் இந்த குடியேற்றங்களையோ அல்லது பௌத்த மயமாக்க விடயங்களையோ தடுத்து நிறுத்த முடியாது.

ஏனெனில் அதிகாரம் முழுவதும் அவர்களது (அரசு) கைகளிளே உள்ளது.அதே வேளை வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டிருந்தாலும் அங்கு ஆளுநருக்கு தான் அதிகாரம்.அதே போன்று அந்த ஆளுநருக்கு கீழ் உள்ள உத்தியோகத்தர்கள் ஆளுநரின் கட்டளை படி தான் நடப்பார்கள்.மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபையில் கூட முதலமைச்சரின் செயலாளரையும் ஆளுநர் தான் நியமிப்பார்.அங்கே சகல கட்டுப்பாடுகளும் ஆளுநரின் கீழ் தான் இருக்கும்.ஆகவே மக்களின் வாக்குகளை பெறுவதற்காக பல்வேறு கருத்துக்களை கூற முடியும்.
ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக ஒரு போதும் சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாது.இது 1987 1988 ஆண்டுகளில் இருந்து மாகாண சபை உருவாக்கப்பட்ட நாளில் இருந்து இந்த மாகாண சபை நடைமுறையில் தான் இருக்கின்றது.இச்சபை இணைந்தும் இருந்தது.குடியேற்றம் அந்த வேளையிலும் இடம்பெற்றிருந்தது.அப்போது ஆயுதப்போராட்டத்தினால் குடியேற்றங்கள் தடுக்கப்பட்டு கொண்டிருந்ததே தவிர இந்த மாகாண சபையின் நிர்வாகத்தின் ஊடாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை.இது தான் உண்மையான விடயம்.சாணக்கியன் எம்.பி  மக்களை ஏமாற்றுவதற்காக சொல்கின்ற ஒரு விடயமாகும்.
என்னை பொறுத்தமட்டில் அவர்கள் தேர்தல் காலங்களில் பல வாக்குறுதிகளை வழங்கி வந்தமை வரலாறு.2015 ஆண்டு எமக்கு கடைசி சந்தர்ப்பம் ஒன்றினை தாருங்கள் என்று கூறினார்கள்.அதாவது வடக்கு கிழக்கு இணைந்த  தாயகத்தில் ஒரு சமஸ்டி தீர்வு ஒன்றினை பெற்றுத்தருவோம் என்றெல்லாம் கூறினார்கள்.அதே போன்று 2016 ஆண்டு இறுதிக்குள் யுத்த குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என்று கூறினார்கள்.மக்களை அதனை நம்பி பெருவாரியாக வாக்குகளை இவர்களுக்கு வழங்கி இருந்தார்கள்.வென்ற மறு வாரமே சுமந்திரன் எம்.பி சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்று  கூறினார்கள்.ஜெனிவாக்கு சென்று உள்ளக விசாரணைக்கு வாய்ப்பு பெற்று கொடுத்தார்கள்.இப்படி இவர்களது ஏமாற்றுக்களை தேர்தலை மையப்படுத்தி செய்கின்றார்கள்.இவர்களது இவ்வாறான நாடகங்களை மக்களும் அறிவார்கள்.முழுக்க முழுக்க ஏமாற்றும் விடயங்களே இவர்களிடம் உள்ளன.மக்கள் இவர்களது பசப்பு வார்த்தைகளை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதை கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்ட பகுதியில் கிளிநொச்சி நீதவான்

எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்ட பகுதியினை நேற்றைய தினம் (13) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் பார்வையிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (10) வெடிபொருட்களை அகற்றி கொண்டு செல்லும் போது மண் அணை பகுதியில் இருந்து துப்பாக்கிகளும் எலும்புக்கூடுகளும் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் இடம்பெற்ற துப்பரவு பணியை நிறுத்துமாறு பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் தகவல் வழங்கப்பட்டது.

தொடர்ந்து குறித்த பகுதி பொலிசாரின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் குறித்த விடயம் பாரப்படுத்தபட்டது.

இந்த நிலையில் நேற்று குறித்த இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான், கிளிநொச்சி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தனுசன், பளை பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் பரிசோதகர் இராணுவத்தினர் கலோரஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் என பலரும் பார்வையிட்டனர்.

துப்பரவு செய்யப்பட்ட பகுதியில் உள்ள எச்சங்களை பகுப்பாய்வு செய்ததன் பின்னர் மேற்கொண்டு அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.

இன்றைய தினம் காலை 8 மணிக்கு அகழ்வு பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு விடுதலை புலிகளுடன் தொடர்பா?

அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு கொம்புச்சந்தி   பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் 2 மகசின்களை பொலிஸார்  செவ்வாய்க்கிழமை மாலை  மீட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவிற்கு  கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விடுதலைப்புலிகளினால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு தயாரிப்பான மைக்ரோ 9 எம்.எம்.  கைத்துப்பாக்கியே இவ்வாறு  மீட்கப்பட்டுள்ளது.

காரைதீவு கொம்புச்சந்திக்கருகாமையில்  உள்ள வீடொன்றில் பொலிஸ்  குழுவினர் தேடுதலை மேற்கொண்டு   இந்த கைத்தூப்பாக்கி மற்றும் மகசின்களை  மீட்டுள்ளனர்.

குறித்த வீட்டினுள்  குறித்த துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்ததாக  தெரிவிக்கப்படும் 44 வயது மதிக்க தக்க மகாலிங்கசிவம் அசோக் என்ற சந்தேக கைதாகியுள்ளதுடன் அங்கிருந்து  கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் மகசின்கள் சம்மாந்துறை  பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை  பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்  முன்னெடுத்து வருகின்றனர்.

கைதாகிய சந்தேக நபர் சிறிது காலம் தாதிய உத்தியோகத்தராகவும் விடுதலைப்புலிகளுடனும் கடந்த காலங்களில் நெருங்கி செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : கைது செய்யப்பட்ட 10 பேரும் பிணையில் விடுதலை

மட்டக்களப்பு  – வாழைச்சேனையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு மட்டக்களப்பு கிரான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட 10பேரும் இன்று புதன்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு எதிராக லவக்குமாருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.

இந்தநிலையில், அவர் உட்பட 10 பேர் அன்றைய தினம் நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி, கடலில் பூக்களைத் தூவி, அஞ்சலி செலுத்திய அதனை படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த நிலையில் அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கல்குடா பொலிஸார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.
வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பசீல் முன்னிலையில் இவ்வழக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி க.சுகாஸ் விண்ணப்பித்த பிணை மனுவின் அடிப்படையில் 10 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Posted in Uncategorized

நோர்வே தூதுவருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு

இலங்கைக்கான நோர்வே தூதுவர் ட்ரைன் எஸ்கடெல் அம்மையார் மற்றும் துணைத் தூதுவர் ஹில்டே பேர்க் ஹான்சன் அம்மையார் ஆகியோருடனான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர்.

இன்று புதன்கிழமை பிற்பகல் கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் (ரெலோ) பாராளுமன்ற உறுப்பினருமான கோ. கருணாகரம் மற்றும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது இலங்கைக்கான நோர்வே தூதுவருக்கு இலங்கையின் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள், எதிர்கால நடவடிக்கைகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. தமிழ் மக்களின் அரசியல் உரிமை சார்ந்து தொடர்ந்து உறுதியான ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள நாடான நோர்வேயுடன் தமிழ் தரப்பின் மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்பு ஒரு மணி நேரம் நடைபெற்றதாக ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்தார்.

 

Posted in Uncategorized

எமது நாட்டு பாதுகாப்புக்கு வெளிநாட்டு அச்சுறுத்தல் உள்ளதா?. – ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா

எமது நாட்டின் பாதுகாப்புக்கு ஏதாவது வெளிநாட்டு அச்சுறுத்தல் உள்ளதா?. அல்லது உள்நாட்டுக் கிளர்ச்சி ஏற்படலாம் என்ற ஆதாரபூர்வ புலனாய்வுத் தகவல் உள்ளதா?. தாக்குதல் நடக்கும் என்ற புலனாய்வுத் தகவல்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தும் கூட அந்தத் தாக்குதல்களைத் தடுக்க முடியாத ஒரு நாட்டுக்கு இந்தளவு பாதுகாப்புச் செலவீனம் தேவைதானா? என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவரது உரையின் முழு வடிவம்,

இந்த உயரிய சபை எத்தனையோ ஆளுமைகள் கொண்ட நிதி அமைச்சர்களின் வரவு செலவுத்திட்ட உரைகளைச் செவிமடுத்துள்ளது.

சுதந்திரமடைந்த காலத்திலிருந்து சிம்மாசனப் பிரசங்கள் மூலம் அரச கொள்கைகள் வெளிக்கொணர்ந்த முறைமை குடியரசு அரசியலமைப்புக்குப் பின்னர் வரவு செலவுத்திட்டம் ஊடாகவே வெளிப்படுத்தும் முறை ஆரம்பமாகியது.

ஒரு நாட்டின் வரவு செலவுத்திட்டம் வெறுமனே இலக்கங்களும் எழுத்துக்களும் கொண்ட அறிக்கையல்ல. அடுத்த வருடத்துக்கான நாட்டின் வருமான மூலங்கள், அதன் செலவின மதிப்பீடுகள், வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறைகள், அதனைக் குறைநிரப்பும் வழிமுறைகளை தெளிவான முறையில் வெளிப்படுத்தும் கூற்றாக அமைய வேண்டும்.

எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது. அந்த நாட்களில் வரவு செலவுத்திட்ட உரைகளைச் செவிமடுப்பதற்காக கிராமங்கள் தோறும் மக்கள், வானொலிப்பெட்டியருகில் காதை வைத்துக் கொண்டு செவிமடுத்துக் கொண்டிருப்பார்கள், பாராளுமன்றக் கலரிகள் கூட பொருளாதார வல்லுனர்கள், முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள், தனியார் துறையினர், அரச அலுவலர்கள், ஆர்வமுள்ள நாட்டின் பொது மக்கள் ஏன் வெளிநாட்டு இராஜதந்திரகள் கூட சபாநாயகரின் கலரியினை நிறைத்திருந்து அதனை அவதானிக்கும் நிலை இருந்தது. ஆனால், இந்த வரவு செலவுத்திட்டத்தில் முற்றிலும் நிலைமை தலைகீழாகவே இருந்ததை நோக்க முடிகின்றது.

குறிப்பாக உப்புச்சப்பற்ற ஒரு சம்பிரதாயபூர்வ நிகழ்வாக இது நிகழ்ந்தேறியுள்ளது. இதுவே இந்த வரவு செலவுத்திட்ட உரைமீதான எனது ஒரு வரி விமர்சனம்.

இந்த அரசாங்கம் மூன்று விம்பங்களைக் கொண்ட பெரும் தூண்களின் மேல்தான் கட்டியெழுப்பப்பட்டது. அது மஹிந்த ராஜபக்ச எனும் பிம்பம், கோட்டபாய ராஜபக்ச என்னும் பிம்பம், பௌத்த சிங்கள  பேரினவாதம் எனும் பிம்பம்.

ஆனால் கடந்த இரு வருட காலத்தில் மஹிந்த  ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச எனும் இரு பிம்பங்கள் கொண்ட தூண்களும் ஆட்டம் காணத் தொடங்க நான்காவது தூணின் அவசியம் உணரப்பட்டு அது எண்ணை விலை உணர்வு என்ற நாடகம் மூலம் பசில் ராஜபக்சவினை பாராளுமன்ற உறுப்பினராக்கி நிதி அமைச்சர் என உயர்த்தி அரசைத்தாங்கும் நான்காவது தூணாக  இருத்த முனைந்தது.

அலாவுதீனின் அற்புத விளக்கோடு பொருளாதார அற்புதங்களையும் நிகழ்த்துவார் என்ற பெரும் எதிர்பார்க்களுடன் பாராளுமன்றம் வந்து நிதியமைச்சராகி இன்று இந்த வரவு செலவுத்திட்டத்தினை வெற்றுப் பானையாக வெறும் எழுத்துக்களுடனும் இலக்கங்களுடனும் சமர்ப்பித்துள்ளார்.

இந்த வரவு செலவுத்திட்டத்தினை எதிர்க்கட்சியினர் மாத்திரமல்ல நடுநிலை நின்று ஆய்வு மேற்கொள்ளும் பொருளாதார நிபுணர்கள் வர்த்தகர்கள், பொது மக்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என அனைத்துத் தரப்பினருமே தத்தமது துறைகளில் உப்புச்சப்பற்ற வரவு செலவுத்திட்டம் என்றே உரைக்கின்றனர். விமர்சிக்கின்றனர். அரச அமைச்சர்கள், அரசின் பங்காளிக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது வரவு செலவுத்திட்ட உரை மீது தமது விமர்சனத்தினை முன்வைத்து வருகின்றனர்.

இந்த வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் மீதான எனது உரை, பாதுகாப்பு அமைச்சு, அரச பாதுகாப்பு அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு என்பவற்றின் மீதானதாகும். இந்த அமைச்சுக்களுக்கான மொத்த ஒதுக்கீடு வரவு செலவுத்திட்டத்தின் மொத்தச் செலவீனத்தின் 19.56வீதமாகும். இது ஏறக்குறைய வரவு செலவுத்திட்டத்தின் ஐந்தில் ஒருபங்காகும். உலக வல்லரசாகவும் உலக யுத்த வலுச்சமநிலையை தக்க வைப்பதும் உலக பொருளாதார நிலைமையினை தீர்மானிக்கும் சக்திவாய்ந்த வல்லரசு நாடான ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவீனம் அதன் மொத்த வரவு செலவுத்திட்டத்தின் 39சதவீதமாகும். இது உலக அரங்கில் அந்நாட்டின் நிலை பொறுத்து ஏற்கத்தக்கதேயொழிய, வியக்கத்தக்கதல்ல.

தென்னாசியப் பிராந்தியத்தின் வல்லரசு எனவும் தென்னாசியாவின் அரசியல் பொருளாதார வெளி விவகாரங்களைத் தீர்மானிக்கும் இந்தியாவின் 2020-21ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புச் செலவீனங்களுக்கான ஒதுக்கீடு மொத்த வரவு செலவுத்திட்டத்தின் 14.5 வீதமாகும். இத்தனைக்கும் இந்தியா தனது இருபுற எல்லைகளிலும் யுத்த நிலைமையினை நித்தமும் எதிர் கொள்ளும் ஒரு நாடாகும்.

பிராந்திய வல்லரசான இந்தியாவோடு நித்தமும் முட்டிமோதுவது மாத்திரமன்றி நாடு உருவான காலம் முதல் இந்தியாவோடு பகைமையினை வெளிக்காட்டும் பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்புச் செலவீனமோ 2021ஆம் ஆண்டில் அதன் மொத்த வரவு செலவுத்திட்டத்தில் 18.4 வீதமாகும்.

இவை உலக நாடுகள் பாதுகாப்புச் செலவீனங்கள் தொடர்பான ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்று சிறிய உதாரணமேயாகும்.

எமது நாட்டின் தற்போதைய நிலைமையில் அதாவது, உலகளாவிய கொவிட்- 19 பெருந்தொற்று அவலம் அது ஏற்படுத்திய பொருளாதார வீழ்ச்சி அதிலிருந்து மீள முடியாத எமது அரசின் தவறான கொள்கைகள், அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் வீழ்ச்சியடைந்த உற்பத்தித் துறை, திட்டமிடாத முறையில் எழுந்தமானமாக ஒரே மூச்சில் மேற்கொள்ளப்பட்ட சேதன உரக் கொள்கையினால் பெருந்தோட்ட விவசாயம், நெல் உற்பத்தி, உப உணவு உற்பத்தி என்பன வீழ்ச்சியடைந்து சோமாலியா போல் மாறுவது தவிர்க்க முடியாத ஒரு நிலை.

சென்மதி நிலுவை பற்றாக்குறை, டொலர் நெருக்கடி, வானைத் தொடும் அளவுக்கு விலைவாசி உயர்வு, இவற்றை திட்டமிட்ட முறையில் தீர்ப்பதற்கான எந்தவிதமான தீர்க்கதரிசனம் கொண்ட முன்மொழிவுகள் இல்லாத இந்த வரவுசெலவுத்திட்டத்தில், ஒட்டு மொத்த  பாதுகாப்புத் துறைகளுக்கு நாட்டின் மொத்த வரவு செலவுத்திட்டத்தில் ஐந்தில் ஒரு பங்கினை ஒதுக்கீடு செய்வது அவசியமா?. அல்லது இதை ஏற்றுக் கொள்ளத்தான் முடியுமா?.

இன்று எமது நாட்டின் பாதுகாப்புக்கு ஏதாவது வெளிநாட்டு அச்சுறுத்தல் உள்ளதா?. அல்லது உள்நாட்டுக் கிளர்ச்சி ஏற்படலாம் என்ற ஆதாரபூர்வ புலனாய்வுத் தகவல் உள்ளதா?. தாக்குதல் நடக்கும் என்ற புலனாய்வுத் தகவல்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தும் கூட அந்தத் தாக்குதல்களைத் தடுக்க முடியாத ஒரு நாட்டுக்கு இந்தளவு பாதுகாப்புச் செலவீனம் தேவைதானா?

உள்நாட்டு யுத்தம் நிகழ்ந்த காலத்தில் அந்த யுத்தத்திற்கான காரண காரியம் உணராது அதன் தார்ப்பரியம் புரியாது, போராடியவர்கள் நம்நாட்டவர்கள் என்பதையும் உணராது பேரினவாத முனைப்பில் யுத்தத்தை நடத்தினீர்கள். அதற்காகப் பாதுகாப்புச் செலவீனத்தை உயர்த்தினீர்கள். பாதுகாப்புத்துறையின் மூலதனச் செலவீடு அதிகரித்துச் சென்றது. அதனையொட்டி அதற்கான நடைமுறைச் செலவுகளும் அதிகரித்துச் சென்றது.

எம்மால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் உங்கள் பார்வையில், நீங்கள் அதனை நியாயப்படுத்தினீர்கள். ஆனால் இன்று இந்த அளவு பாதுகாப்புச் செலவீனம் அதிகரிப்பதற்கு நீங்கள் எந்த நியாயத்தைக் கற்பிக்கப் போகின்றீர்கள்.

அரசாங்கத்தின் தேவை ஆட்சியைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளுதல். பெரும்பான்மை இனத்தின் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிகொண்டோம் என்று பெருமை பேசிய நீங்கள் இன்று பெரும்பான்மை இனத்தின் பெரும்பான்மையினரால் படுமோசமாக விமர்ச்சிக்கப்படுகின்றீர்கள்.

இன்று உங்களுக்குத் தேவை இந்த நாட்டில் மீண்டும் பேரினவாதிகளின் ஆதரவுத் தளத்தைத் தக்கவைத்துக் கொள்வது ஒன்றேயாகும். அதற்காக இல்லாத பயங்கரவாதத்தை இல்லாத இனத்துவ வாதத்தை இல்லாத மொழிப்பிரச்சினையினை இருப்பதாகக் காட்டி அமைதியாக வாழும் பௌத்த சிங்கள,  பௌத்த கத்தோலிக்க, இந்து, இஸ்லாமிய மக்களிடையே பகைமையினையும் பிணக்கினையும் ஏற்படுத்த முயல்கின்றீர்கள். மத முரண்பாடு, இன முரண்பாடு, மொழி முரண்பாடு என்பவற்றை ஏற்படுத்தி அதன் நெருப்பில் குளிர் காய்ந்து ஆட்சி அதிகாரத்தைத் தொடர்ந்து சுவைப்பதற்கு முயற்சிக்கின்றீர்கள். இதற்கு எதிராக ஜனநாயக ரீதியாக கிளர்ந்தெழும் மக்களை பாதுகாப்புத் துறை கொண்டு நசுக்க முயல்கின்றீர்கள். இதற்காகவா பாதுகாப்புத் துறைக்கு இந்தளவு நிதியினை ஒதுக்கியுள்ளீர்கள்.

சொந்த நாட்டு மக்கள் மீதா உங்கள் பாதுகாப்பு பலத்தினைப் பிரயோகிக்க முயல்கின்றீர்கள். இதற்காகவா, இத்தனை பாதுகாப்புச் செலவினை ஒதுக்கியுள்ளீர்கள்.

நாட்டில் அமைதியான சூழல் நிலவுவதை ஆட்சியாளர்களான நீங்கள் விரும்பவில்லை. யுத்தம் நடைபெறும் நாடொன்றில் இரு தரப்புக்களிலும் உயிரிழப்புக்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாது என நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறு ஏற்பட்ட உயிரிழப்புக்களை நினைவுகூருவதற்கு ஒரு தரப்புக்கு மாத்திரம் மறுக்கப்படுகின்றது. மீண்டும் ஒரு இருண்ட யுகம் போல வெள்ளை வான் மாத்திரம் இல்லாது ஊடக அடக்கு முறையும் ஆரம்பமாகிவிட்டது. இதையெல்லாம் இருப்பதாகக் காட்டிக் கொண்டால்தான் பேரினவாதிகளின் பேராதரவு உங்களுக்கு இருக்கும் என்ற எண்ணத்தில் இவற்றை மேற்கொள்கின்றீர்கள்.

கொவிட் – 19 பெருந்தொற்றினை உங்களது தவறான கொள்கைகளால்  கட்டுப்படுத்த முடியாது தமது உயிரினைக் கூட துச்சமென மதித்து கடமையாற்றிக் கொண்டிருக்கும் அலுவலர்களைக் கொண்ட சுகாதாரத்துறைக்கு ஒதுக்கீடு 6.13 வீதம். உற்பத்தித் துறைக்கு முக்கிய பங்களிக்கும் விவசாயத்துறைக்கு 0.97 வீதம்.

ஒட்டு மொத்த பாதீட்டு ஒதுக்கீட்டை நோக்கும் போது இது மக்கள் நலன் சார்ந்த, நாட்டு நலன் சார்ந்த பாதீடாக நோக்க முடியவில்லை. சில ஒதுக்கீடுகளின் அதிகரிப்பினை நோக்கும் பொழுது அது பேசன்ரேஜ் பெறுவதற்கான ஒதுக்கீடாகவே நோக்க முடிகிறது.

ஒரு வகையில் இது மக்கள் நலன் சார்ந்த பாதீடு என்பதை விட, நாட்டின் பொருளாதார நலன் சார்ந்த பாதீடு என்பதை விட, ஆட்சியாளர்களுக்கான பேர்சன்ரேஜ் பாதீடு என்பதே பொருத்தம் என்பது எனது கருத்தாகும்.

பாதுகாப்புத் தொடர்பாக நான் கூற விரும்புவது இந்து சமுத்திரத்தில் நமது நாட்டின் கேந்திர மையம், பிராந்திய ஒத்துழைப்பு, பிராந்திய அபிவிருத்தி, மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு என்பன தொடர்பாக நம் நாட்டுக்குத் தேவையான தெளிவான கொள்கை ஒன்று இன்னும் இல்லை. அதை உருவாக்கவும் நீங்கள் முனையவில்லை. தவறான வெளிநாட்டுக் கொள்கைகளை மேற்கொண்டு  நமது நாட்டிற்கே பெருமையுடன் இருந்த அணிசேராக் கொள்கையினை அழித்துவிட்டு தென்னாசியப் பிராந்திய வல்லரசான இந்தியாவுக்கு சவால் விடு;ம் அளவுக்கு கொள்கைகளை வகுப்பதிலேயே நீங்கள் கவனம் செலுத்துகின்றீர்கள். உங்களது அமைச்சரவையின் சில அமைச்சர்களது அறிவீனமான உரைகள் புத்திஜீவித்துவமற்ற உரைகள் இவற்றையே தெளிவாகக் காட்டுகின்றது.

அண்டை நாடான இந்தியாவுடனான வரலாற்று, கலாசார, பாரம்பரிய, மதத்  துறைகளில் இரு நாடுகளுக்குமிடையே பிரிக்க முடியாத பிணக்குகள் ஏற்பட முடியாத இணைப்பு வரலாற்றுக் காலம் முதல் உள்ளது என்பதை நீங்கள் இலகுவாக மறந்து விடுகிறீர்கள். சீனாவை நண்பனாக்கி இந்தியாவைச் சீண்டிக் காரியமாற்ற விளைகின்றீர்கள். ஆபத்தில் காப்பாற்றுவான் என நம்பிய சீனா சேதனப் பசளை விவகாரத்தில் உங்களுக்கு நல்லதொரு பாடத்தைக் கற்றுத் தந்துள்ளது. அதிலிருந்தாவது உங்கள் வெளிநாட்டுக் கொள்கை, தேசிய பாதுகாப்புக் கொள்கைகளின் மீதான தவறுகளைத் திருத்த விளையுங்கள்.

சீனாவை நண்பனாக்குவதற்காக இந்தியாவை எதிரியாக்கும் கொள்கையினை மறந்து இந்தியாவும் சீனாவும் எமது நண்பர்கள் என்ற நிலைமைக்கு உங்களது கொள்கையினை மாற்றுங்கள்.

எமது நாட்டின் பாதுகாப்பு முக்கியம். எமது நாட்டில் மக்கள் இன, மத, மொழி, பால் வேறுபாடு கடந்து சரிநிகர் சமானமாக ஏற்றத்தாழ்வின்றி இணக்கப்பாட்டுடன் வாழவேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மை. இப்போது நான் உங்களது ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பாக ஓரிரு வார்த்தைகள் கூற விரும்புகின்றேன்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. அது ஒரு நாடு இலங்கை என்பதாகவும், ஒரு சட்டம் என்பது இலங்கை மக்களுக்கான சட்டமாகவும் இருக்க வேண்டும். ஆனால் உங்கள் ஒரு நாடு ஒரு சட்டத்தின் கீழ் நடப்பது என்ன?. உங்களது பார்வையில் நீங்கள் கூறும் ஒரு நாடு ஒரு சட்டம் சொல்வதென்ன.? இது சிங்களப் பௌத்த நாடு. இங்கு சட்டமும் சிங்கள பௌத்த சட்டமே.

இந்த இடத்திலே நாம் எமது நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கௌரவ அலி சப்ரி அவர்களை நினைத்து கவலைப்படுகின்றேன். ஒரு திறமையான இளமையான புத்திகூர்மை கொண்ட அமைச்சர். அவருடைய திறமைக்கு களங்களத்தை ஏற்படுத்தி அவருக்கு சட்டவாக்கம் பற்றி ஆலோசனை வழங்குவதற்கு ஜனாதிபதியவர்கள் நியமித்த ஆலோசனைக் குழுவினை நோக்கும் பொழுது நான் உண்மையில் எமது நீதியமைச்சர் குறித்துக் கவலைப்படுகிறேன்.

அன்று ஆட்சிக் கட்டிலில் ஏறும் நோக்கம் ஒன்றையே இலக்காகக் கொண்டு எஸ்.டப்ளியூ. ஆர்.டி.பண்டாரநாயக்கா ஆட்சியமைத்து 24 மணி நேரத்தில் சிங்களம் மட்டும் சட்டத்தினைக் கொண்டு வருவேன் எனக் கூறி  பௌத்த சிங்கள மக்களினை உணர்ச்சி வசப்படுத்தி அவர்களது உணர்ச்சியினை தான் ஆட்சியமைப்பதற்கான அத்திவாரமாக்கினார். அன்று அவர், ஆட்சிக்காக மூட்டிய தீப்பொறி 6 தசாப்த காலமாக இந் நாட்டில் கொழுந்து விட்டெரிந்தது. அது முறையாக அணையமுன்பு ஒரு நாடு ஒரு சட்டமென்று இன்னொரு தீப்பொறியினை ஏற்றுவதற்கு முயல்கின்றீர்கள்.

ஆட்சியதிகாரத்தினைத் தக்க வைக்க வேண்டும் என்ற உங்களது இந்த ஆர்வத்தால் நீங்கள் மூட்டும் இரண்டாவது தீப்பொறி இன்னும் எத்தனை தசாப்தங்களுக்கு நாட்டை எரிய வைக்கப் போகின்றதோ, வரலாற்றிலிருந்து நீங்கள் பாடம் எதனையும் கற்கவில்லை. மீண்டும் மீண்டும் வரலாற்றுத் தவறுகளை இழைத்துக் கொண்டு செல்கின்றீர்கள்.

இதே போன்றுதான் கிழக்குத் தொல்பொருள் ஜனாதிபதி செயலணி என்று ஒன்றை அமைத்து கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம்களது பாரம்பரிய வழிபாட்டிடங்களையும், பாரம்பரிய நிலங்களையும் கபளீகரம் செய்ய முயற்சிக்கின்றீர்கள்.

யுத்தம் முடிவடைந்து 12 வருடங்களுக்கு மேலாகியும் வடக்குக்கிழக்கில் இராணுவ முகாம் அமைப்பதும், புதிய படையணிகளை உருவாக்கி அவற்றை வடக்குக் கிழக்கில் இருந்தி வைப்பதும் இன்னமும் முன்னர் கையகப்படுத்திய தனியார் நிலங்களினை மீளக் கொடுக்காது புதிதாக படைத்துறை முகாம் அமைப்பதற்காக பொதுமக்களின் காணிகளை கபளீகரம் செய்வதும் நாளாந்தம் நடக்கும் நிகழ்வுகளேயாகும்.

உங்களை ஆட்சி பீடம் ஏற்றி அலங்கரித்து அழகுபார்த்த பெரும்பான்மை இனத்தின் பெரும்பான்மை மக்கள் இன்று உங்களைச் சரியாhக இனங்கண்டுள்ளார்கள். முறையானதும் சரியானதும், பொருத்தமானதுமான  தீர்மானம் எடுக்க முடியாதவர்கள் என்பதனை அவர்கள் இனங்கண்டுவிட்டார்கள். இன்று நாட்டில் எழுந்துள்ள வெகுசனக் கிளர்ச்சி இதனை நன்கு வெளிக்காட்டி நிற்கின்றது.

வெளிநாட்டில் விலையுயர்வு ஏற்படின் உள்நாட்டில் விலையும் உயரவேண்டுமென்றால், ஜனாதிபதி எதற்கு, நிதியமைச்சர் எதற்கு. அமைச்சரவை எதற்கு என்று ஓங்கி ஒலித்து லிப்ரன் சுற்றுவட்டத்தை அன்று கலவர பூமியாக்கிய விமல் வீரவன்ச, உதய கமம்பம்பில, வாசுதேவ நாயக்கார போன்றவர்கள் இன்று எங்கே.?

எரிபொருள் விலை ஐந்து ரூபாவால் உயர்த்தப்பட்ட போது பாராளுமன்றத்துக்கு மிதி வண்டியில் படை குடி சகிதம், இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச சகிதம் வந்த போராட்ட வீரர்கள் எங்கே. 2500 ரூபாவுக்கு ஒருமாதம் ஒரு குடும்பம் வாழ முடியும் என்ற பொருளாதார நிபுணர் பந்துள குணவர்த்தன எங்கே?

இறுதியாக,

மக்கள் கிளர்ச்சி ஆரம்பித்து விட்டது. அது ஆட்சி மாற்றத்தில் மட்டுமே முடியும். அது வரை வேண்டுமானால் உங்கள் அராஜகத்தைத் தொடரலாம். ஆனால், இறுதி வெற்றி நாட்டுக்கும் எமது மக்களுக்குமேயாகும். நீங்கள் அனுபவிக்கும் வெற்றி ஒரு சிறிய காலமாகவே அமையும்.

Posted in Uncategorized

கனேடிய உயர்ஸ்தானிகருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு

கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினான் மற்றும் உதவியாளர் டானியல் பூட் ஆகியோருடனான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை முன்பகல் கொழும்பிலுள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோ. கருணாகரம், மத்திய குழு உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச் சந்திப்பின் போது தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள், எதிர்கால நடவடிக்கைகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. ஐநா மனித உரிமை பேரவையின் 46/1 பிரேரணைக்கு பிரதான பங்கு வகித்த நாடான கனடாவுடனான இச் சந்திப்பு தமிழ் தரப்பின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்பு என்று ரெலோவின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்தார்.

 

Posted in Uncategorized

பாரிய திட்டத்தை கைவிட்டு இலங்கையில் இருந்து நகரும் சீனா!!

யாழ்ப்பாணம் – தீவகத்தில் மேற்கொள்ளப்படவிருந்த சூரிய சக்தி மின்நிலைய திட்டத்தை சீனா இடைநிறுத்தியுள்ளது.

இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இந்தத் தகவலைப் பதிவு செய்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய இடங்களில் இந்தச் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான வேலைத் திட்டத்தைச் சீனா முன்னெடுக்கவிருந்ததுடன், இதற்கான அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக இந்தியா தனது கரிசனையை வெளியிட்டுள்ளதுடன், தமிழ் அரசியல் கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தின.

தற்போது இந்த வேலைத்திட்டம் சம்பந்தமாக மூன்றாம் தரப்பு ஒன்றிலிருந்து எழுந்துள்ள பாதுகாப்புக் கரிசனை கருதி, இத்திட்டம் இடைநிறுத்தப்படுவதாக சீனா அறிவித்துள்ளது.

இதேவேளை, இதே மாதிரியான 12 தீவுகளில் கலப்பு மின்னுற்பத்தி மையங்களை அமைக்கும் வேலைத் திட்டம் ஒன்றுக்காக மாலைதீவு அரசாங்கத்துடன் கடந்த 29ஆம் திகதி சீனாவின் நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் கைச்சாத்திட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் காணிகளை பிடிக்கும் அரச படைகளுக்கான முகவரா? ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ்

வடமாகாண ஆளுநர் ஜீவன் பொது மக்களின் காணிகளை பிடிக்கும் அரச படைகளுக்கான முகவரா? என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித்தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

வடமாகாணத்திலுள்ள காணிகளை அரச படையினரால் கைப்பற்றப்பட:டு வருகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

வடக்கு மாகாணத்தில் பொது மக்களின் காணிகளை அரச படைகள் பிடிக்கும் நிகழ்ச்சி அண்மைய நாட்கள் முல்லைத்தீவு , வடமராட்சி கிழக்கு, மண்டைதீவு, காரைநகர், மாதகல் , வடமராட்சி வடக்கு வவுனியா வடக்கு, என தீவிரமாக முன்னகர்த்தப்படுகிறது. இதற்கு நில அளவைத் திணைக்கள அதிகாரிகளும் ஆயுதம் தரித்த படைகளும் பயன்படுத்தப்படுகின்றனர்.

காணி அபகரிக்கும் செயற்பாட்டிற்கு இடையூறாக யாரும் இருந்தால் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக வடமாகாண ஆளுநர் அறிக்கை ஒன்றை 01/12/2021 வெளியிட்டுள்ளார். இது மிக வேதனையான விடயம் காரணம் காணி சுவீகரிப்பு என்பது பிரதேச செயலங்களின் ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் தீர்மானங்களாக எடுத்தே மேற்கொள்ள முடியும் என்ற ஒழுங்கு முறை இருக்கும் போது சட்ட முறையற்ற வகையில் தனியாருக்கு சொந்தமான காணிகளை சுவீகரித்தல் என்ற பெயரில் படை முகாம்கள் அமைக்க அபகரிக்க முடியாது.

மக்கள் பிரதிநிதிகளை மக்கள் அழைக்கும் போது அதில் கலந்து கொண்டு அதற்காக நியாயம் கேட்பது மக்கள் பிரதிநிதிகளின் கடமை அவர்கள் அதனை செய்யும் போது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என கூறும் போது நீங்கள் ஆளுநரா? இல்லை பொது மக்களின் காணிகளை அரச படைகளுக்கு முகாம் அமைப்பதற்கு பிடித்துக் கொடுக்கும் முகவரா?