பாரிய திட்டத்தை கைவிட்டு இலங்கையில் இருந்து நகரும் சீனா!!

யாழ்ப்பாணம் – தீவகத்தில் மேற்கொள்ளப்படவிருந்த சூரிய சக்தி மின்நிலைய திட்டத்தை சீனா இடைநிறுத்தியுள்ளது.

இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இந்தத் தகவலைப் பதிவு செய்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய இடங்களில் இந்தச் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான வேலைத் திட்டத்தைச் சீனா முன்னெடுக்கவிருந்ததுடன், இதற்கான அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக இந்தியா தனது கரிசனையை வெளியிட்டுள்ளதுடன், தமிழ் அரசியல் கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தின.

தற்போது இந்த வேலைத்திட்டம் சம்பந்தமாக மூன்றாம் தரப்பு ஒன்றிலிருந்து எழுந்துள்ள பாதுகாப்புக் கரிசனை கருதி, இத்திட்டம் இடைநிறுத்தப்படுவதாக சீனா அறிவித்துள்ளது.

இதேவேளை, இதே மாதிரியான 12 தீவுகளில் கலப்பு மின்னுற்பத்தி மையங்களை அமைக்கும் வேலைத் திட்டம் ஒன்றுக்காக மாலைதீவு அரசாங்கத்துடன் கடந்த 29ஆம் திகதி சீனாவின் நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் கைச்சாத்திட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.