அரசியல் தீர்வில் அமெரிக்க – இந்திய கூட்டு?

சுமந்திரன் பங்குகொள்ளும் விடயங்களில் சர்ச்சைகள் ஏற்படுவது சாதாரணமான ஒன்று. இப்படித்தான் இப்போது ஏற்பட்டிருக்கும் சர்ச்சைகளையும் நோக்க வேண்டும். சுமந்திரன் தலைமையிலான குழுவொன்று அமெரிக்கா செல்லவுள்ளதாக செய்திகள் வெளியான நாளிலிருந்தே இவ்வாறான சர்ச்சைகள் ஆரம்பித்துவிட்டன. பின்னர், சுமந்திரன் தரப்போடு, உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் இணைந்த போது, மேலும் புதிய சர்ச்சைகள் ஏற்பட்டன. இறுதியில் கூட்டமைப்பினரின் அமெரிக்க பயணமே ஒரு சர்ச்சைக்குரிய ஒன்றாக நோக்கப்படுமளவிற்கு நிலைமைகள் மாறியது.

சுமந்திரன் என்னும் தனிநபர் தொடர்பான சர்ச்சைகளை ஓரு புறமாக வைத்துவிட்டு – விடயங்களை ஆழமாக நோக்க வேண்டியதே இப்போது முக்கியமானது.
சுமந்திரன் தலைமையில் ஒரு குழுவினர் அமெரிக்கா செல்லவுள்ளதான செய்தி வெளியான சூழலில்தான், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான டெலோ, டி.பி.எல்.எப் (புளொட்) மற்றும் விக்கினேஸ்வரன் தரப்பு ஆகியோர் இணைந்து, இந்தியப் பிரதமர் மோடியிடம் – அதாவது இந்தியாவிடம் ஒரு கோரிக்கையை முன்வைப்பது தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் கூடி ஆராய்ந்திருந்தனர். தமிழரசு கட்சியையும் இணைத்துக் கொண்டு அடுத்த கட்டம் தொடர்பில் ஆராயும் முடிவுடன் குறித்த சந்திப்பு கலைந்தது.

இதனடிப்படையில் உடனேயே ஒரு கொன்ஸ்பிரசி (சதிக் கோட்பாடு) அரசியலும் மெதுவாக எட்டிப்பார்த்தது. அதாவது, இந்தியாவிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கும் முயற்சியை மழுங்கடிக்கும் வகையிலேயே, சுமந்திரனின் அமெரிக்க பயணம் இடம்பெறுகின்றது. இது இந்தியாவை விட்டுவிட்டு தனித்து ஓடுவதற்கான முயற்சியென்றும் சிலர் பேச முற்பட்டனர். தமிழ் சூழலில் எப்போதுமே இ;வ்வாறான கொன்ஸ்பிரசி அரசியலுக்கு பஞ்சமிருந்ததில்லை.

ஆனால் சுமந்திரன் கனடாவில் பேசுகின்ற போது, இந்திய – அமெரிக்க கூட்டின் மூலம் அரசியல் தீர்வொன்றை காணும் முயற்சியில் தாம் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்;திருக்கின்றார். அதே வேளை தமது பயணம் தொடர்பிலும், தங்களுடைய கலந்துரையாடல்கள் தொடர்பிலும் அமெரிக்காவிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். அதே வேளை சுமந்திரன் குறிப்பிட்டிருக்கும் பிறிதொரு கருத்து முக்கியமானது. அதாவது, இந்தியா ஒன்றுதான் ஈழத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எவ்வாறானதாக அமைந்திருக்க வேண்டுமென்பது தொடர்பில் பேசிவருகின்றது. இந்த அடிப்படையில் உலக வல்லரசான அமெரிக்காவும் பிராந்திய வல்லரசானா இந்தியாவும் அரசியல் தீர்வு விடயத்தில் சேர்ந்தியங்கும் வகையிலான முயற்சிகளிலேயே தாம் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஆனால் இங்குள்ள கேள்வி – அது எப்படியான தீர்வு? ஒரு வேளை இந்திய – அமெரிக்க கூட்டில் ஒரு புதிய தீர்வாலோசனை முன்வைக்கப்படுமானால் அதனை கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா – ஏற்றுக்கொள்ளாவிட்டால் அமெரிக்காவும் இந்தியாவும் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்? இந்த கேள்விகளுக்கு நிச்சயமாக சுமந்திரனிடம் பதில் இருக்காது. ஒருவேளை ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் செயற்படுகின்றோம் என்னும் பதிலில் அவர் சரணடையலாம். அது ஒரு இலகுவான பதில்.

இந்தியா ஒன்றுதான் ஈழத் தமிழர் விடயத்தில் ஒரு உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்திவருகின்றது. இதற்கு பக்கபலமாக இருப்பது இந்திய-இலங்கை ஒப்பந்தமாகும். இதன் காரணமாகத்தான் ஈழத் தமிழர் விவகாரம் என்று வருகின்ற போதெல்லாம் – இந்தியாவின் பார்வை, 13வது திருத்தச்சட்டத்தின் மீது மட்டுமே இருக்கின்றது. ஏனெனில் 13இற்கு அப்பால் ஒரு விடயத்தை வலியுறுத்துவதற்கான உரித்தை இந்தியா கொண்டிருக்கவில்லை. அப்படியான ஒன்றை புதுடில்லி வலியுறுத்த வேண்டுமாயின் – இந்தியா அதன் பலத்தை பிரயோகிக்க வேண்டும்.

ஏனெனில், அப்படி பலத்தை பிரயோகித்ததன் மூலம் வந்ததுதான், இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அவ்வாறான பலத்தை பிரயோகித்த போதும் அது சிங்கள – தமிழ் இரண்டு தரப்புக்களதும் எதிர்ப்பையே இறுதியில் சம்பாதித்தது. ஆனால் இன்றைய நிலைமை அப்படியான ஒன்றல்ல. எனவே, இந்த நிலையில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து ஒரு தீர்வாலோசனையை முன்வைப்பதென்பது, மேடையில் பேசுவது போன்று சாதாரணமான ஒரு விடயமல்ல.

ஒருவேளை, ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில், இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்படுவதாக இருந்தாலும் கூட, அங்கும் இந்திய- இலங்கை ஒப்பந்தம்தான் ஒரு அரசியல் அஸ்திபாரமாக இருக்க முடியும். இல்லாவிட்டால், அமெரிக்க – இந்திய கூட்டு முயற்சியில் இலங்கையுடன், ஒரு புதிய ஒப்பந்தம் இடம்பெற வேண்டும். அது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் இரண்டாம் பாகமாக இருக்க வேண்டும். அதாவது, இன்றைய புதிய உலக அரசியல் போக்கிற்கு அமைவாக ஒரு புதிய இந்திய-இலங்கை ஒப்பந்தம் இடம்பெற வேண்டும். அதில் அமெரிக்காவின் நலன்களும் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.

இப்படியான ஒரு விடயம் இடம்பெறுகின்ற பட்சத்தில் மட்டும்தான், அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தலையீடு செய்கின்ற நிலைமை ஏற்படும். ஆனால் இவ்வாறானதொரு நிலைமை தற்போதைக்கு ஒரு போதையூட்டக் கூடிய கற்பனையாக மட்டுமே இருக்க முடியும்.

ஏனெனில் கொழும்பின் ஆட்சியாளர்களை – முக்கியமாக சிங்கள – பௌத்த கருத்தியல் ஆதிக்கத்தின் பிடிக்குள் சிக்குண்டிருக்கும் தென்னிலங்கை மக்களை பாரதூரமாக விரோதித்துக் கொள்ளும் வகையில் அமெரிக்காவோ, இந்தியாவோ எந்தவொரு முடிவையும் எடுக்கப் போவதில்லை. அமெரிக்கா, அதன் மனித உரிமை சார்ந்த அழுத்தங்களை தொடரும். அதேவேளை, அரசியல் தீர்வு விடயத்தில் அதிகம் தலையீடு செய்யாது. ஏனெனில், அமெரிக்காவின் அணுமுறைகள், இருதரப்பு உறவுகளை பாதிக்காத வகையிலேயே அமைந்திருக்கும். ஈழத் தமிழர்களுக்காக அமெரிக்கா அதன் மூலோபாய நலன்களை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்? இந்த கேள்வியிலிருந்துதான் விடயங்களை தமிழர் தரப்புக்கள் நோக்க வேண்டும்.

அரசியல் தீர்வை ஒரு ஆசையாகவும் அல்லது வெறும் நம்பிக்கையாகவும் நோக்கக் கூடாது. ஆனால் தமிழ் சூழலில் காணப்படும் அரசியல் தீர்வு தொடர்பான உரையாடல்களை நோக்கும்போது – எங்குமே ஆசையும் வெறும் நம்பிக்கையுமே மேலோங்கியிருக்கின்றது. இதன் காரணமாகவே அமெரிக்கா, இந்தியா தொடர்பில் அளவுக்கதிகமான கற்பனைகள் வெளிப்படுகின்றன.

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் முன்னரைவிடவும் நெருக்கமான உறவு இருப்பது உண்மை. குறிப்பாக, மோடி தலைமையிலான அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களைவிடவும் அமெரிக்காவுடன் நெருங்கிச் செயற்படுகின்றது. இந்த பின்புலத்தில்தான், இந்தோ-பசுபிக் குவாட் நகர்வுகளை நோக்க வேண்டும். அதே வேளை இந்தியா அதன் அணிசாரா வெளிவிவகாரக் கொள்கை பாரம்பரியத்தை முற்றிலுமாக இழந்துவிடக் கூடாதென்பதிலும் எச்சரிக்கையுடன் இருக்கின்றது.

அமெரிக்கா சவாலாக பார்க்கும் நாடுகளுடன் கூட இந்தியா தொடர்புகளை பேணிவருகின்றது. உதாரணமாக ரஸ்யா. அதே வேளை முற்றிலும் சீன எதிர்ப்பு கொள்கைக்குள்ளும் இந்தியா இல்லை ஆனால், இந்தியாவின் பிராந்திய செல்வாக்கை கேள்விக்குள்ளாக்கும் வகையிலான சீன நகர்வுகள் தொடர்பிலும் இந்தியா எச்சரிக்கையுடன் இருக்கின்றது.

ஆசியாவில் சீனாவின் எழுச்சியென்பது இந்தியாவிற்கு நெருக்கடியான ஒன்றுதான். சீன எழுச்சியின் இலக்கு தெளிவானது, அதாவது, ஆசியாவில் ஒரு ஒரு மேலாதிக்க அதிகாரமாக தங்களை நிலைநிறுத்திக் கொள்வது. சீன ஜனாதிபதி சி-ஐpன்பிங்கின் இலக்கு இதுதான். சீனாவின் ஆசிய மேலாதிக்க கனவானது, ஒரு உறையில் இரண்டு ஈட்டிகளை போன்ற உபாமாகவே இருக்கும். முதல் ஈட்டியில், அதன் இலக்கு ஆசியாவின் மீதான அமெரிக்க செல்வாக்கை நிர்மூலமாக்குவது.

இரண்டாவது ஈட்டியில் இந்தியாவின் பிராந்திய செல்வாக்கை நிர்மூலமாக்குவது. இந்தியாவின் பிராந்திய செல்வாக்கை பேணிப்பாதுகாக்க வேண்டுமாயின், ஆசியாவில் அமெரிக்க செல்வாக்கு வீழ்ச்சியுறக் கூடாது. ஆசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கு வீழ்சியுறுமாக இருந்தால், அதன் பின்னர் இந்தியாவினால் தனித்து சீனாவை எதிர்கொள்ள முடியாமல் போகும். இந்த மூலோபாய இலக்கின் அடிப்படையில்தான் இன்றைய அமெரிக்க – இந்திய கூட்டு நகர்வுகளை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இந்த இடத்தில்தான் இலங்கை விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது. இலங்கையில், சீனாவின் செல்வாக்கு அதிகரித்திருக்கின்ற நிலையில்தான், இந்திய-அமெரிக்க கூட்டு வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையும் உள்ளடங்குகின்றது. இலங்கைக்கு விஐயம் செய்த, அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ, கொழும்பில் வைத்து சீனா தொடர்பில் காட்டமான கருத்துகளை வெளியிட்டிருந்தார். இலங்கையின் இறைமையை சீனா நிலத்திலும் கடலிலும் மோசமாக மீறி வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கூற்றானது, இலங்கையும் அமெரிக்க-சீன அதிகாரப் போட்டிக்குள் வந்துவிட்டது என்பதையே உணர்த்துகின்றது.

அண்மையில் வெளியான பென்ரகன் அறிக்கையில், சீனா ஒரு இராணுவ தளத்தை இலங்கைக்குள் நிறுவ முற்படுகின்றது என்று, குறிபிடப்பட்டிருப்பதையும் நாம் இணைத்தே வாசிக்க வேண்டும். பைடன் நிர்வாகத்தின் ஆசிய விவகாரங்களை கையாளும் உயர் அதிகாரியான ஹேர்ட் ஹம்பல், அண்மையில் தெரிவித்திருந்த கருத்தொன்று அமெரிக்க-சீன மேலாதிக்க போட்டியை தெளிவாக எடுத்துரைக்கின்றது. அதாவது, அமெரிக்க-சீன ஊடாட்ட காலம் முடிவுக்கு வந்துவிட்டது. அதிகாரப் போட்டியே இனி மேலாதிக்கம் பெறும்.

அமெரிக்க – சீன போட்டியென்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே எழுச்சிபெற்றுவருகின்ற நிலையில், இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்திருக்கின்ற நிலையில் – ஈழத் தமிழர் விவகாரம் சர்வதேச அரங்கில் ஒரு மனித உரிமை விவகாரமாக கவனம் பெற்றிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் இந்தியா வலியுறுத்திவருகின்றது. அதே வேளை புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டுவரப் போவதாக கோட்டபாயவின் அரசாங்கம் கூறிவருகின்றது. அரசியல் யாப்பின் பிரதான இலக்கு தமிழர்களுக்கு விசேட சலுகைகளை இல்லாதொழிப்பதுதான்.

13வது திருத்தம் ஓரளவு விசேட சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த விடயங்களை துல்லியமாக கணித்தால், தென்னிலங்கையின் நகர்வுகள் அடிப்படையிலேயே ஈழத் தமிழர்களுக்கு ஆபத்தானது. புதிய அரசியல் யாப்பின் ஒன்றை இலக்கு, 13வது திருத்தத்தை இல்லாமலாக்குவதுதான் என்றால், அமெரிக்க – இந்திய கூட்டின் மூலம் அரசியல் தீர்வை பெறலாம் என்பது ஒரு கவர்சியான மேடைப் பேச்சாக மட்டுமே இருக்க முடியும். இந்த நிலைமைகளை விளங்கிக்கொண்டு தமிழ் தலைமைகள் பயணிக்க வேண்டும். இப்போதுள்ள நிலையில், ஒன்றில் இருப்பதை பாதுகாப்பது – முன்னோக்கிப் பயணிப்பது, இரண்டையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகவே நோக்க வேண்டும். இதுதான் சரியானதொரு அரசியல் தந்திரோபாயமாக இருக்க முடியும்.

வரலாற்றில் முதல் தடவையாக லண்டனில் தமிழுக்கு கிடைத்த அங்கீகாரம்!

பிரித்தானிய தலைநகர் லண்டன் பெருநகரபிராந்தியத்தில் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், தமிழ் மரபுரிமைத் திங்கள் கருப்பொருளை கடைப்பிடிக்கும் செயற்திட்டத்துக்காக லண்டன் அஸெம்பிளி எனப்படும் பெருநகர அவையில் இன்று ஏகமனதாகவும் அவையில் நூறுவீத ஆதரவுடனும் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள வரலாற்று பதிவு உருவாகியுள்ளது.

பெருநகர அவையின் இருந்த கென்சவேட்டிவ் கட்சிஉறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்தபிரேரணைக்கு அவையில் இருந்த ஆளும்தரப்பான தொழிற்கட்சி உட்பட்ட அனைத்துவ உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர்.

கனடாவை போல லண்டன் பெருநகரபிராந்தியத்திலும் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், தமிழ் மரபுரிமைத் திங்கள் கருப்பொருளை எதிர்வரும் தைமாதம் முதல் கடைப்பிடிக்கப்படும் வகையில் ஒரு செயற்திட்டத்தை உருவாக்கும் வகையில் ஒரு வரலாற்றுத்தருணம் உருவாகியுள்ளது.

லண்டன் அஸெம்பிளி எனப்படும் பெருநகர அவையில் இன்று ஏகமனதாகவும் அவையின் நூறுவீதஆதரவுடனும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த பிரேரணை மூலம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு வருடம் ஜனவரி மாதத்திலும் லண்டன் பெருநகரப்பிராந்தியத்தில் தமிழ் மரபுத் திங்கள் கடைப்பிடிக்கும் வகையிலான சாத்தியப்பாடுகள் உருவாகியுள்ளன.

லண்டன் பெருநகர அவையின கென்சவேட்டிவ் உறுப்பினர் நிக் றொஜர்ஸ் அவர்களால் இன்று பிற்பகல் இந்தபிரேரணை முன்மொழியப்பட்டு அதன் பின்னர் இது விவாதத்துக்கு விடப்பட்டிருந்தது.

இந்த விவாதத்தில் அனைத்து உறுப்பினர்களும் பிரேரணைக்கான ஆதரவினைத் தெரிவித்த பின்னர், ஜனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அதாவது Tamil Heritage Month ஆக பிரகடனப்படுத்தும் பிரேரனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் நாட்களில் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் இந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையிலான பேச்சுக்களும் செயற் திட்டங்களும் நகர்த்தப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த நர்வுகள் வெற்றியளித்தால் ஜனவரி மாதத்தில், தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வகையிலும் அதனை பகிரும் வகையிலும் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படுமென எதிர்பார்க்ப்படுகின்றது

ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு நாடாளுமன்றத்தில் தமிழ் எம்.பிக்கள் கண்டனம்

முல்லைத்தீவில் செய்தி சேகரிக்கச் சென்ற  ஊடகவியலாளர் ஒருவர் இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் எம்.பிக்கள் சபையில் கடும் கண்டனங்களை வெளியிட்டனர்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மின்சக்தி அமைச்சு, வலுசக்தி அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பிக்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பியான செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டனர்.

கடந்த சனிக்கிழமை காலை முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளரான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் என்பவர் முள்ளியவாய்க்கால் கிழக்கில் காலை செய்தி சேகரிப்புக்காகச் சென்று அங்கிருந்து வீடு திரும்பிய நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் பெயர்ப்பலகையை ஒளிப்படம் எடுத்துள்ளபோது அந்தப் பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட நான்கு இராணுவத்தினர் குறிப்பிட்ட ஊடகவியலாளர் மீது முள்ளுக்கம்பி சுற்றப்பட்ட பச்சைப் பனை மட்டையால் தாக்குதல் நடத்தியமை மிருகத்தனமானது எனவும் இவர்கள் குற்றஞ்சாட்டினர்.

அத்துடன் தாக்குதல் நடத்திய  3 இராணுவத்தினர் கண்துடைப்புக்காகக் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில்கூட ஆஜர்செய்யப்படாது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்று குற்றஞ்சாட்டிய தமிழ் எம்.பிக்கள், நாட்டில் இராணுவ ஆட்சி நடப்பதற்கு இந்தத் தாக்குதல் சிறந்த உதாரணம் எனவும் குறிப்பிட்டனர்.

மொட்டு தம்மை புறக்கணித்துவிட்டதாக 12 சிறு அரசியல் கட்சிகள் விசனம்

அரசாங்கத்தின் வெற்றிக்காக செயற்பட்ட தாம் தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கிய 12 சிறு அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.

ஐக்கிய இலங்கை பொதுஜன கட்சி, அருணலு மக்கள் முன்னணி, எமது மக்கள் உரிமை கட்சி, சமூக அபிவிருத்தி கட்சி, தேசிய பொதுஜன கட்சி, மக்கள் அபிவிருத்தி கட்சி, ஹெலபிம ஜனதா கட்சி, ஐக்கிய இலங்கை மக்கள் சக்தி கட்சி, இலங்கை இந்திய பிரஜைகள் கட்சி, ஐக்கிய சுதந்திரக் கட்சி, ஐக்கிய ஜனநாயக மக்கள் கட்சி, இலங்கை ஜனநாயக தேசியக் கட்சி ஆகியன இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அரசாங்கம் தொடர்பான தமது அதிருப்தியை வௌிப்படுத்தின.

மொட்டுடன் கைகோர்த்து தற்போதுள்ள அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் உருவாக்க ஒத்துழைப்பு வழங்கிய போதும், தமது கருத்துக்கள் செவிமடுக்கப்படுவதில்லை என ஐக்கிய இலங்கை பொதுமக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ருவன் திலக்க பேதுருஆரச்சி குறிப்பிட்டார்.

இந்த நிலை தொடர்ந்தால் அரசாங்கமும் நாடும் நாட்டு மக்களும் கஷ்டத்தில் வீழ்வார்கள் என அவர் குறிப்பிட்டார்.

இது நாட்டு மக்களின் துரதிர்ஷ்டம் என கூறி மெளமாக இருக்க தாம் தயாரில்லை என கூறிய ருவன் திலக்க, சரியான பாதையில் பயணிக்க முடியாவிட்டால் அரசுடனான நட்புறவை கைவிட வேண்டிய நிலை தமக்கு ஏற்படும் என கூறினார்.

உகாண்டாவின் நிலை இலங்கைக்கு ஏற்படும்: சரத் பொன்சேகா

உகாண்டாவை போலவே சீனாவின் கடன் இலங்கையை விழுங்கிக்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

சீனாவிடமிருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமையால் உகாண்டாவிலுள்ள ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்தையும் சீனா கையகப்படுத்தியதாக ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

தேசிய திட்டமிடலொன்று இல்லாமல் சீனாவிடமிருந்து பாரியளவில் கடன் வாங்கும் ஊழலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் முறையற்ற முடிவு இதுவென்பதே சரத் பொன்சேகாவின் நிலைப்பாடாகும்.

இதனிடையே, மேற்குலகின் கடன் வலையிலிருந்து இலங்கையை சீனா காப்பாற்றியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்து, அத்தியாவசிய டொலர்களை திரட்ட அரசாங்கம் தீர்மானித்ததாகவும், அந்த பணம் சீனாவின் EXIM வங்கிக்கு திருப்பி செலுத்துவதற்கு பயன்படுத்தப்படவில்லை எனவும் சர்வதேச இறையாண்மை பத்திரங்களை திருப்பி செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டது எனவும் சீன தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Posted in Uncategorized

அரசியல் கைதிகளை வாழ விடுங்கள் அல்லது வழியை விடுங்கள் -அருட்தந்தை மா.சத்திவேல்

அரசியல் கைதிகளாக நீண்ட நாட்கள் தடுப்புக் காவலில் இருந்து விடுதலையானவர்களை வாழவிடுங்கள் அல்லது வழியை விடுங்கள் என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளாக நீண்ட நாட்கள் தடுப்புக் காவலில் இருந்து விடுதலையானவர்களையும், ஒட்டு மொத்த தமிழர்களையும் வாழ விடுங்கள் அல்லது வழியை விடுங்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு நாடு என பிரகடனப்படுத் தப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் என்பன உண்டு. இதனை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கும் , அரசு அதிகாரிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும், பொலிசாருக்கும் உள்ளது. இத்தகைய சுதந்திரமும், பாதுகாப்பும் அரசியல் கைதிகளாக சிறையில் இருந்து விடுதலை பெற்றவர்களுக்கும் முழுமையாக கிடைக்க வேண்டும்.

இதனை விடுத்து விசாரணை என அழைப்பு விடுப்பது, தங்களை இரகசிய பொலிசாரும், புலனாய்வாளர்களும் பின்தொடர்கிறார்கள் என்று உணரச் செய்வதும் அடிப்படை உரிமை மீறல் ஆகும். இது தொடரக்கூடாது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு ஆட்சியாளரிடம் வேண்டுகோள் விடுக்கின்றது.

முன்னாள் அரசியல் கைதியான வவுனியாவை சேரந்த செல்வநாயகம் ஆனந்தவர்ணன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ம் திகதி விசாரணைக்கென கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது அரசியல் கைதியாக இருந்து விடுதலை பெற்றவர்களுக்கு பின்னால் புலனாய்வாளர்கள் கழுகு கண்களோடு உள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

அரசியல் கைதிகளை வாழ விடுங்கள் அல்லது வழியை விடுங்கள் -அருட்தந்தை மா.சத்திவேல்அரசியல் கைதிகளாக நீண்ட காலம் சிறை வாழ்க்கையை அனுபவித்த பின்னர் விடுதலையானோர் தன் குடும்ப உறவுகளோடு சந்தோஷமாகவும், சுதந்திரமாகவும் நடமாடி விடுதலையை முழுமையாக அனுபவிக்க வேண்டும். நாம் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றோம் எனும் உணர்வுக்குள் அவர்களை தள்ளுவதும், விசாரணைக்கு அழைப்பதும் அவர்களின் மகிழ்வை இல்லாதொழித்து திறந்தவெளி சிறைக்குள் நாம் இருக்கின்றோம் எனும் மனநிலையை தோற்றுவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

புலிப் பயங்கரவாதிகளை தோற்கடித்து விட்டோம், பயங்கரவாதத்தை இல்லாதொழித்து விட்டோம் என வெற்றிவிழா எடுப்பவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் அரசியல் கைதிகள் தன் குடும்ப உறவுகளோடு வாழ்வை தொடர அனுமதிக்க வேண்டும். இது மறுக்கப்பட்டு நாம் அடிமை நிலையில் இருக்கின்றோம் என உணர்வு தூண்டப்படுமாயின் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என ஆட்சியாளர்கள் உணரத் தவறுவது ஏன்? போர் வெற்றி என்பது மக்களை அடிமையாக்குவதல்ல.

மக்களது சுதந்திரமானதும், கௌரவமானதுமான வாழ்வை உறுதி செய்வதாகும். அது இன்றும் முன்னாள் அரசியல் கைதிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் கிடைக்கவில்லை என்பதனையே விசாரணைக்கான அழைப்பு வெளிப்படுத்துகின்றது.

அரசியல் கைதிகளாக நீண்ட நாட்கள் தடுப்புக் காவலில் இருந்து விடுதலையானவர்களையும், ஒட்டு மொத்த தமிழர்களையும் வாழ விடுங்கள் அல்லது வழியை விடுங்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வேண்டுகோள் விடுப்பதோடு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ஐநா மனித உரிமை ஆணையகம் வருடாந்த திருவிழாவை நடத்துவதோடு நின்றுவிடாமல் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாக்க முனைப்பு காட்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றது.

Posted in Uncategorized

அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு ஒத்துழைக்கவும் – பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன்

அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு, ஏனைய கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு, பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் என, தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளமை தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, த.சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்,  தாம் தொடர்ச்சியாக அரசியல் தலைமைகளின் ஒற்றுமைக்கு முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் மற்றவர்களுடன் பேசி பல முயற்சிகளை எடுத்து வருவதாகவும் கூறினார்.

தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள அனைத்து கட்சிகளும்  ஒற்றமைபட்டு ஒன்றுபடுவோமாக இருந்தால், அடுத்த கட்டமாக ஒரு பலமான தேசிய அரசியல் அமைப்பாக வந்து, தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை முன்னெடுப்பதற்கு வசதியாக இருக்கும் எனவும், அவர் தெரிவித்தார்.

ஆகவே மாவை,  சுரேஷ், செல்வம் போன்ற அனைவரும் இணைந்து, இந்த முயற்சியை எடுக்க வேண்டும் என்பதே எனது  கோரிக்கை எனவும், சித்தார்த்தன் கூறினார்.

பாதீடு தோல்வி: வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளரின் பதவி பறிபோகும்?

வல்வெட்டித்துறை நகர சபையின் வரவு-செலவுத் திட்டம், இரண்டாம் முறையும் இன்றைய தினமும் (30) ஒரு வாக்கால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபை வரவு-செலவுத் திட்டம் கூட்டம், இன்றைய தினம், தவிசாளர் என். செல்வேந்திரா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, கடந்த 17ஆம் திகதி, சபையில் முன்வைக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் திருத்தங்களுடன் சபையில் முன்வைக்கப்பட்ட போது, அதுவும் தோற்கடிக்கப்பட்டு உள்ளது. வாக்களிப்பின் போது முன்னரைப் போல எதிராக ஒன்பது வாக்குகளும் ஆதரவாக எட்டு  வாக்குகளும் கிடைத்தன.

இதனால் ஒரு வாக்கினால்  வரவு – செலவுத் திட்டம்  மீண்டும்  தோல்வி அடைந்தது.

இதனையடுத்து சபைக்கு புதிய தவிசாளர், உபதவிசாளர் தெரிவு  செய்யப்பட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளார் கே. கருணாந்தராசா (வயது 76) கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, கடந்த ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதியன்று உயிரிழந்தார்.

அதனை அடுத்து, புதிய தவிசாளராக என். செல்வேந்திரா, கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதியன்று, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில் அவரால் முன்வைக்கப்பட்ட இரு வரவு-செலவுத் திட்டமும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிவாயு பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற சிறப்பு ஆலோசனைக் குழு

உள்நாட்டு எரிவாயு தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு ஆலோசனைக் குழு ஒன்று கூட்டப்பட்டுள்ளது.

நாளை (01) காலை 9.00 மணிக்கு பாராளுமன்றத்தில் இந்த கூட்டம் கூடவுள்ளது.  பாராளுமன்றத்தில் இன்று (30) உரையாற்றும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.

இதே நேரம்,  நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்று வரும் எரிவாயு விபத்துக்கள் தொடர்பான அறிக்கைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குழுவொன்றை நியமித்துள்ளார்.

வர்த்தக மற்றும் விற்பனை நிலையங்களில் எரிவாயு (LPG) சிலிண்டர் தீ விபத்துக்கு உள்ளாகின்றமை,​ைவெடிப்புகள் ஏற்படுகின்றமைக்கான காரணங்களை ஆராய்ந்து தீர்வுகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி குறித்த குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.

Posted in Uncategorized

வரலாற்றின் முதல் தடவையாக யாழ் மாநகரசபையில் செங்கோல்

வரலாற்றின் முதல் தடவையாக யாழ் மாநகரசபை அமர்வு செங்கோலுடன் மாநகர முதல்வர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது

மாநகர முதல்வர் வி. மணிவண்ணனின் வேண்டுகோளுக்கு அமைய அண்மையில் குகபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம் யாழ்.மாநகர சபைக்கு செங்கோல் ஒன்றினை வழங்கியது.

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 11ஆவது நிர்வாக அதிகாரி குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட செங்கோலுடன் வரலாற்றில் முதல் தடவையாக இன்றைய மாநகர அமர்வு மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றது.