இலங்கையர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் தொடர்பாக விசாரணை

தமிழக கடல் வழியாக கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று (4) மாலை ராமநாதபுரத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

புத்தளம் பகுதியைச் சேர்ந்த 24 ஆண்கள், 2 பெண்கள், ஒரு குழந்தை என 27 பேர் படகு ஒன்றின் மூலம் கடல் வழியாக கடந்த ஜூன் மாதம் 11 ஆம் திகதி தூத்துக்குடி வந்தனர்.

கேரளா வழியாக கனடா செல்ல திட்டமிட்டு மதுரையில் தங்கியிருந்த 27 பேரையும் ராமநாதபுரம், மதுரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் இலங்கையில் இருந்து கனடா தப்பிச் செல்ல மங்களூருவில் பதுங்கியிருந்த இலங்கை தமிழர் 32 பேரை மங்களூர் கியூ பிரிவு பொலிஸார் ஜூன் மாதம் 11ஆம் திகதி மாலை கைது செய்தனர்.

இவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர் பட்டணத்தில் சிலர் அடைக்கலம் கொடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து மர்மப் படகில் இலங்கைக்கு தப்பிச் செல்ல உதவியதாக விசாரணையில் தெரிய வந்தது.

அதன்படி தமிழர்கள் சிலரை மங்களுரூ தனிப்படையினர் ஜூன் மாதம் 20ஆம் திகதி அழைத்து வந்து வேதாளை கடல் பகுதியில் நேரடி விசாரணை மேற்கொண்டனர்.

பல்வேறு கோணங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு சமீபத்தில் மாற்றப்பட்டது.

இதை தொடர்ந்து அதிகாரி சண்முகம் தலைமையில் ஒரு குழுவினர் நேற்று (4) ராமநாதபுரம் வந்தனர்.

மண்டபம் அருகே வேதாளை, சீனியப்பா தர்கா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை பார்வையிட்டனர். இலங்கை தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகிக்கப்பட்ட ஒருவரை பிடித்து ராமநாதபுரத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

10 ஆயிரத்தைக் கடந்தது கொரோனா மரணங்கள்

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் இதனை உறுதிப்படுத்தினார்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் மேலும் 189 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,140 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 462,023 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 384,557 ஆக அதிகரித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் இறுக்கமாக்கப்படும் – நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்

பயங்கரவாத தடைச்சட்டத்தை இறுக்கமாக்குவதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் உறுதியளித்துள்ளார்.

ஒக்லாண்ட் நகரில் இலங்கையர் ஒருவரால் நேற்று (03) கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதையடுத்தே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுப்பதற்காக இந்த மாற்றங்களை மேற்கொள்ள இயலுமான நிலையில் தாம் இருக்க வேண்டுமென ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை சேர்ந்த நபரொருவர் ஒக்லாண்டிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் 6 பேரை நேற்றைய தினம் கத்தியால் குத்தியுள்ளார்.

கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளதுடன், IS அமைப்பின் ஆதரவாளர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்த மூவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டின் பயங்கரவாத தடைச்சட்டத்தில் பிரதமர் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதுடன், அந்த மாற்றங்களுக்கு பாராளுமன்றம் இம்மாத இறுதியில் ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நேற்றைய கத்திக்குத்து தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் பல தடவைகள் குறித்த தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டிருந்ததாகவும் சட்டத்தின் இடைவௌிகளை பயன்படுத்தி அவர் ஒவ்வொரு முறையும் வெளியே வந்ததாகவும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

இரகசியமாக எதனையும் செயற்படுத்த வேண்டிய தேவை கிடையாது – ஜி.எல்.பீரிஸ்

நாட்டில் சட்டத்துறை, நீதித்துறை மற்றும் ஊடகத்துறை ஆகியன சுயாதீனமாக செயற்படுகின்றன. எனவே இரகசியமாக எதனையும் செயற்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஒருபோதும் கிடையாது என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இம்முறை நடைபெறவுள்ள மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பாக அதிகளவில் பேசப்படும். எனினும் அதனை சிறந்த முறையில் கையாள்வதற்கான நடவடிக்கைகள், இலங்கையின் பொதுச்சட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளன என ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், யுத்த காலத்தில் காணாமல் போனார் விவகாரம், மீள்குடியமர்த்தல், வடக்கு- கிழக்கு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பினுடைய போராளிகளின் விடுதலை உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் அரசாங்கம் சிறந்த நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்  தொடர்பாக  ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்காக, முன்னாள் பிரதம நீதியரசர் தலைமையில் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலான ஆலோசனை சபை நியமிக்கப்பட்டுள்ளது.  எனவே இந்த ஆலோசனை சபையின் ஊடாக எதிர்காலத்தில் சிறந்த தீர்மானங்கள் எடுக்கப்படும் என ஜி.எல்.பீரிஸ் உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் ரஷ்யா

ரஷ்ய விமான சேவை நிறுவனமான எரோஃப்ளொட், (Aeroflot) இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவையை எரோஃப்ளொட் ஆரம்பிக்கவுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) ரஷ்யாவின் எரோஃப்ளொட் விமான நிறுவனத்துக்கும் இலங்கையின் விமான நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது ரஷ்ய எரோஃப்ளொட் நிறுவனம், நேற்று முதல் இலங்கைக்கான விமான சேவைகளை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தது. ஆனாலும் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக இந்த தீர்மானம் பிற்போட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

3,333 பேருக்கு கொவிட் தொற்று: 145 பேர் உயிரிழப்பு

நாட்டில் இன்று இதுவரை 3,333 பேருக்கு கொவிட் தொற்று   உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 459,459 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 382,476 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,951 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் மேலும் 145 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,951 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

தமிழ் தேசிய கட்சிகள் ஒருமித்ததாக ஐ.நாவுக்கு அறிக்கை

வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கின்ற மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் 46/1 பிரேரணை  பற்றிய   மனித உரிமை ஆணையாளரின் வாய்மூல  அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.  46/ 1 பிரேரணையை  இலங்கை அரசாங்கம் நிராகரித்து இருக்கிறது.  முக்கியமாக ஆதாரங்களைத் திரட்டுவதற்கான அதிகாரத்தை மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துக்கு கடந்த கூட்டத்தொடரில் மனித உரிமை  பேரவை வழங்கியிருந்தது.
இதற்கான நிதி ஒதுக்கீடு இடம்பெற்று அலுவலர்கள் நியமிக்கப்பட்ட நிலையிலே ஆதாரங்களை திரட்டுவதற்கு மனித உரிமை ஆணையம் தயாராகி உள்ளமையை தெரிவித்துள்ளது.
 அதன் அடிப்படையில் முக்கியமாக கருதப்படுகின்ற  எதிர்வரும் மனித உரிமை பேரவையின் அமர்வில் நீதி பொறிமுறைக்கான நடவடிக்கைகள் காத்திரமான முன்னேற்றத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வேளையில் 46/1 பிரேரணைக்கு பின்னராக  அரசாங்கம் தமிழர் தாயகப் பரப்பில்  கட்டவிழ்த்துவிட்ட தமிழ் இனத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அறிக்கையிடுவது என தமிழ் தேசிய கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாடாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் தமிழ் மக்கள் கூட்டணியின்  செயலாளர் நாயகம் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன்,  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற மன்றஉறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,  ஜனநாய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சித்தார்த்தன்,  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,  தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா  மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம்  பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்  பாராளுமன்ற மன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம்  ஆகியோரின் கையொப்பத்துடன் விரிவான அறிக்கை ஒன்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில்  46/1 பிரேரணைக்கு பின்னராக   தமிழர் தாயகத்தில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தமிழினத்துக்கு எதிரான  விடயங்களான  காணி அபகரிப்பு,  தொல்லியல் சார்ந்த நடவடிக்கைகள், நினைவேந்தல்களுக்கான தடைகள், பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையிலான கைதுகள்,  சட்ட நடவடிக்கைகள், தடுத்து வைத்தல்,  காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகங்களில் இராணுவ அதிகாரிகளை நியமித்தல்,  காணாமல் ஆக்கப்பட்டோரை தேட வேண்டிய அவசியம் இல்லை என்ற அரசாங்கத்தினுடைய நிலைப்பாடு,  பொத்துவில் இருந்து பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி பயணத்தின் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள், கைதுகள்,  அன்மையில் அரசினால் அறிவிக்கப்பட்ட அவசரகாலச் சட்டத்தினாலும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அபாயநிலைகள் என்ற விடயங்களை உள்ளடக்கப்பட்டுள்ளன.
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Posted in Uncategorized

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம்  கிடைக்கும் – சரத் வீரசேகர 

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்படுவார்கள். பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டுள்ளது.

இலங்கையின் பொலிஸ் சேவை 155 ஆவது வருடத்தை பூர்த்தியாக்கியுள்ளது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க பொலிஸார் தங்களின்  பாதுகாப்பை பொருட்படுத்தாமல் சேவையில் ஈடுப்படுகிறார்கள்.

வீதியில் சேவையில் ஈடுப்படும் பொலிஸாரின் மனநிலையை பொது மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். பொலிஸார் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதற்காக பொது மக்கள் பொறுப்பற்ற வகையில் செயற்பட முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர  தெரிவித்தார்.

இலங்கையின் பொலிஸ் சேவை 155 ஆவது வருடத்தை பூர்த்தி செய்ததை முன்னிட்டு ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் வீதியில் சேவையில் ஈடுப்படும் பொலிஸாரின் மனநிலையை  பொது மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

பொலிஸார் பொறுப்புடன் செயற்பட வேண்டும். என்பதற்காக பொது மக்கள் பொறுப்பற்ற வகையில் செயற்பட முடியாது. இரு தரப்பினரும் ஒத்துழைப்புடன் செயற்பட்டால் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளயில் பொலிஸார் திறம்பட செயற்படவில்லை. என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம் பெற்று இரண்டு வருட காலப்பகுதியில் பொலிஸ் திணைக்களம் சிறந்த முறையில்செயற்பட்டு பல சாட்சியங்களை திரட்டியுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்  32 பேருக்கு எதிராக 9 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.அத்துடன் 25 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம்தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன்,  விசாரணை நடவடிக்கைகளுக்காக மூவர் அடங்கிய நீதியரசர் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

இவையனைத்தும் பொலிஸாரின் துரிதகர செயற்பாடுகளினால் சாத்தியமானது என்பதை குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நியாயம் வழங்கப்படும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிச்சயம் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்.  என்றார்.

Posted in Uncategorized

மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடுகளை அரசாங்கம் செய்யக்கூடாது- செல்வம் அடைக்கலநாதன் பா.உ.

அரசாங்கம் அறிவிக்கும் நிர்ணய விலையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான நடை முறையினை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும். மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடுகளை அரசாங்கம் செய்யக்கூடாது. மக்கள் தற்போதைய அரசாங்கம் மீது நம்பிக்கை இன்றி உள்ளனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று (3) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் அவசர காலச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ள அதே நேரத்தில் அவசரகாலச் சட்டத்தின் ஊடாக முழு அதிகாரங்களையும் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி அவசரகால சட்டத்தை கொரோனா தொற்றுக்கு அதை நீக்குவதற்காக சாட்டாக வைத்துக் கொண்டு சட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

இராணுவத்தினருடைய அதிகாரங்களை இராணுவத்திற்கு வழங்கி இப்போது உள்ள போராட்டங்கள் ஜனநாயக ரீதியாக இடம் பெறுகின்ற போதும், போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களை கைது செய்வதற்கான ஒரு அத்திவாரமாக இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஜனநாயக நாடு என கூறிக் கொண்டு ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்துவதற்கான அத்திவாரத்தை இந்த சட்டத்தின் ஊடாக ஜனாதிபதி நிரூபித்துள்ளார்.

அண்மைக்காலமாக இந்த சட்டத்தின் ஊடாக ஓய்வு பெற்ற ராணுவ தளபதியை குறித்த குழுவிற்கு ஜனாதிபதி நியமித்துள்ளார்.

பொருட்களின் விலையை நிர்ணயம் செய்கின்ற சட்டம் உள்ளது. இந்த சட்டங்களை வழுக்காமல் அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் கையில் எடுத்ததன் காரணம் ஜனநாயக போராட்டங்களை மழுங்கடிப்பதற்கான திட்டமாக அமைந்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பார்க்கிலும் அவசரகால சட்டம் அன்றாடம் குரல் கொடுக்கின்ற எமது மக்களின் குரல் வளையை நசுக்குகின்ற ஒரு சட்டமாக அமைந்துள்ளது.

எனவே மக்களை பாதிப்புக்கு உள்ளாக்குகின்ற அவசர காலச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். ஜனநாயக நாட்டில் மக்கள் சுதந்திரமாக செயல்பட வழி முறைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

அவசரகாலச் சட்டம் மிக மோசமானது. ஜனநாயக ரீதியில் போராடுகிறவர்களை கைது செய்வதற்கான சட்டமாகவே இச்சட்டம் எதிர் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் மேலும் அரசாங்கம் கூறுகிறது சதொச மற்றும் விற்பனை நிலையங்களில் பொருட்களை மலிவு விலையில் கொள்வனவு செய்ய முடியும் என்று.

வெளிப்படையாக ஊடகங்கள் கூடாக அரசாங்கம் அறியப்படுத்தி உள்ள போதும் உரிய முறையில் நடைமுறையில் இல்லை.மக்கள் ஏமாறும் நிலை காணப்படுகின்றது.

சதொச வில் 130 ரூபாவிற்கு சீனியை பெற்றுக்கொள்ள முடியும் என ஏற்கனவே அறிவித்த போதும், அதனை உரிய முறையில் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சீனி உரிய முறையில் மக்களுக்கு பகிர்ந்து வழங்கப்படவில்லை. வன்னி மாவட்டத்தில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மக்கள் உரிய முறையில் சதொச ஊடாக சீனியை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்பட்டுள்ளது.

தற்போது அரசாங்கம் சீனி உட்பட அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றிற்கு நிர்ணய விலையை அமுல் படுத்தியுள்ளனர். எனினும் நிர்ணய விலைக்கு பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படுவது இல்லை.

அரசாங்கம் அறிவிக்கும் நிர்ணய விலையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான நடைமுறை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும். மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடுகளை அரசாங்கம் செய்யக்கூடாது. மக்கள் தற்போதைய அரசாங்கம் மீது நம்பிக்கை இன்றி உள்ளனர்.

எனவே அரசாங்கம் அமுல் படுத்தியுள்ள விலை நிர்ணயத்தை மக்கள் உரிய முறையில் பயனடைய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

விசாக்களுக்கான செல்லுபடிக்காலம் நீடிப்பு

தற்போது நாட்டில் தங்கியுள்ள வௌிநாட்டவர்களின் அனைத்து விதமான விசாக்களினதும் செல்லுபடிக்காலம் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, 2021 மே மாதம் 11 ஆம் திகதி முதல் 2021 ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் விசாக்களுக்கு அக்காலப் பகுதிக்கான விசா கட்டணங்கள் மாத்திரமே அறவிடப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், எவ்வித தண்டப்பணமும் அறவிடப்படமாட்டாது என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.