இலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மேலும் பாதிக்கப்படலாம் – UNICEF எச்சரிக்கை

இலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மேலும் மோசமாக பாதிக்கப்படலாம் என UNICEF எச்சரித்துள்ளது.

UNICEF அமைப்பின் இலங்கைக்கான பேச்சாளர் பிஸ்மார்க் சுவாங்ஜின் இதனை தெரிவித்துள்ளார்.

உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மோசமாக பாதிக்கப்படலாம் என நாங்கள் அச்சமடைகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலையும் காலிமுகத்திடலும்

-நிலாந்தன் –

நாட்டில் பொருளாதார நெருக்கடி என்ற ஒன்று உண்டா என்று ஐயப்படும் அளவுக்கு திருவிழாக்களும் கொண்டாட்டங்களும் விமரிசையாக நடக்கின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் திருவிழாக்களில் கூடுகிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கொண்டாட்டங்களில் கூடுகிறார்கள்.வல்லிபுர ஆழ்வார் கோவில், பாசையூர் அந்தோணியார் கோவில், வற்றாப்பளை அம்மன் கோயில் போன்றவற்றில் திருவிழாக்கள் அமோகமாக நடந்தன. இக்கட்டுரை எழுதப்படும் நாளில் கண்டியில் கிரிக்கெட் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது.திருவிழாக்கள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் சனங்கள் அணியும் ஆடைகள்,எடுப்புச் சாய்ப்பு எதிலுமே பொருளாதார நெருக்கடியைக் காணமுடியவில்லை.

ஆனால் யாழ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர் கூறினார் 12 மாணவர்களைக் கொண்ட ஒரு வகுப்பில் 11 பேருக்கு உணவுத் தட்டுப்பாடு இருப்பதாக.அவர்கள் ஒரு வேளை அல்லது இரு வேளை உணவையே உட்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். இம்மாணவர்கள் பெருமளவுக்கு கிழக்கு, மலையகம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் சொன்னார்.எனவே மாணவர்களுக்கு உணவு கொடுக்கும் விதத்தில் “கொம்யூனிட்டி கிச்சின்களை” உருவாக்கியிருப்பதாகவும்அவர் தெரிவித்தார்.

அவ்வாறான சமூகப்பொதுச் சமையலறைகளை குறித்து ஏற்கனவே மனோகணேசன் பேசிவருகிறார்.நகர்ப்புறத் தொடர்மாடிக் குடியிருப்பாளர்களுக்கு அவ்வாறு பொதுச் சமையல் அறைகளை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார்.கடந்தகிழமை அக்கரைப்பற்றில் அவ்வாறான முயற்சிகளை சில முஸ்லீம் நண்பர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள்.“வீட்டிலிருந்து ஒரு பார்சல்” என்ற பெயரில் அது மருதமுனை,சாய்ந்தமருது,மாளிகைக்காடு,கல்முனைக்குடி,பாலமுனை போன்ற கிராமங்களுக்கு வேகமாகப் பரவுவதாகக் கூறப்படுகிறது.

அதாவது சமூகப் பொதுச்சமையலறை மூலம் உணவூட்டப்பட வேண்டிய ஒரு தொகுதியினர் உருவாகி வருகிறார்கள் என்று பொருள்.இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்க முன்பிருந்ததைவிடவும் நிலைமை பாரதூரமானதாக மாறிவருகிறது என்று பொருள்.அவர் பதவியேற்க முன்பிருந்ததை விடவும் இப்பொழுது எரிபொருளுக்கான வரிசைகள் அதிகரித்த அளவிலும் மிக நீண்ட வகைகளாகக் காணப்படுகின்றன. கடந்த 16 ஆம் திகதி வியாழக்கிழமை எரிபொருளுக்காக யாழ்ப்பாணத்தில் பல கிலோ மீட்டர் நீளமான வரிசைகள் காணப்பட்டன. யாழ்ப்பாணத்தின் நவீன வரலாற்றில் இவ்வாறான மிக நீண்ட வரிசைகள் காணப்பட்ட ஒரு நாள் அது.எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சிலர் சைக்கிள்களை வாடகைக்கு எடுத்து அதில் வேலைக்கு வருகிறார்கள்.ஒரு நாளைக்கு சைக்கிள் வாடகை 150 ரூபாய்.

ஆனால் நாட்டின் பிரதமரும் அமைச்சர்களும் குறிசொல்வோராக மாறி விடடார்கள் என்று கடந்த வியாழக்கிழமை ஐலன்ட் பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் விமர்சித்திருந்தது.பிரதமர்,அமைச்சர்கள்,எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எனைய அரசியல்வாதிகளை, அந்த ஆசிரியர் தலையங்கம் ஞானா அக்காவின் மச்சான்கள் என்று வர்ணித்திருந்தது.

அதாவது கோட்டா கோகம,மைனா கோகம,ஹிரு கோ கம போன்ற போராட்ட கிராமங்கள் உருவாக்கப்படுவதற்கு காரணமாக இருந்த பொருளாதார நெருக்கடிகளை இப்பொழுது மேலும் தீவிரமாகியிருக்கின்றன.இப்படிப் பார்த்தால் இப்பொழுதுதான் போராட்டமும் அதிகரிக்கவேண்டும். ஒன்றல்ல பல கிராமங்களை நாடு முழுவதும் உருவாக்க வேண்டும். ஆனால் இருக்கின்ற கோட்டா கோகம கிராமமும் தற்பொழுது சோர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்பு ஒவ்வொரு நாளும் பிற்பகலில் அக்கிராமத்தை நோக்கி ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்தார்கள்.இப்பொழுது அவ்வாறான திரட்சி காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவு செய்யப்பட்ட பின் நிகழ்ந்த மாற்றங்களில் அதுவும் ஒன்று. போராட்டக் கிராமங்கள் சோரத் தொடங்கி விட்டன என்பது.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச்செயலர் குமார் குணரட்னம் அதை ஏற்றுக் கொண்டார். கோட்டா கோகம கிராமத்தில் வினைத்திறனோடு செயற்படும் பல்வேறு அமைப்புக்கள் மத்தியில் முன்னிலை சோசலிசக் கட்சியின் மாணவர் அமைப்பும் காணப்படுகிறது. போராட்டத்தில் எழுச்சியும் வீழ்ச்சியும் உண்டு என்று குமார் குணரட்னம் கூறுகிறார்.

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் சோரத் தொடங்கியதற்கு பல்வேறு காரணங்களைக் கூறலாம். அவற்றுள் முக்கியமானவை வருமாறு.

முதலாவது காரணம் ரணில் விக்கிரமசிங்கவின் வருகை.அவர் பிரதமராக நியமிக்கப்பட்டதோடு நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் ஒப்பீட்டளவில் நம்பிக்கைகள் அதிகரித்துள்ளன.தென்னிலங்கையில் படித்த நகர்ப்புற நடுத்தர வர்க்கம் எனப்படுவது பெருமளவுக்கு யு.என்.பிக்கு ஆதரவானது.அதில் ஒரு சிறு பகுதி ஜேவிபியினால் ஈர்க்கப்படுகிறது. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக் கிராமங்களுக்கு மேற்படி நகர்ப்புற படித்த,நடுத்தர வர்க்கத்தின் ஆசீர்வாதம் அதிகளவு உண்டு என்று குமார் குணரட்னம் கூறுகிறார். ரணில் பிரதமராக நியமிக்கப்பட்ட பின் மேற்படி நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் போராட்டத்துக்கான உத்வேகம் குறைந்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. இது ஒரு காரணம்.

இரண்டாவது காரணம்.அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்து தலைமை தாங்கவல்ல பலமான கட்டமைப்புக்கள் எவையும் அங்கே கிடையாது. ஒரு சித்தாந்த அடித்தளத்தின் மீது கட்டியெழுப்பப்பட்ட அமைப்போ கட்சியோ அங்கு இல்லை. போராட்டக்களத்தில் காணப்படும் அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட செயற்பாட்டாளர்கள் தங்களுக்கிடையே இறுக்கம் குறைந்த இணைப்புகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் என்ற ஒரு ஒற்றைப் புள்ளியில் அவர்கள் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள்.ஆனால் அந்தப்பிணைப்பு மேலிருந்து கீழ்நோக்கிய ஒரு மையத்திலிருந்து நிர்வகிக்கப்படுகின்ற, ஒரு தலைமைத்துவத்துக்கு கீழ்ப்பட்ட பிணைப்பு அல்ல.மாறாக பக்கவாட்டில் ஒருவர் மற்றவரோடு கொள்ளும் சுயாதீனமான பிணைப்புக்கள். இவ்வாறு பலமான தலைமைத்துவமோ அல்லது பலமான நிறுவனக் கட்டமைப்போ இல்லாத ஒரு பின்னணியில் இதுபோன்ற போராட்டங்கள் காலப்போக்கில் சோர்ந்து போகும் ஆபத்து உண்டு. இது இரண்டாவது காரணம்.

மூன்றாவது காரணம்.சனங்கள் நெருக்கடிகளுக்கு இசைவாக்கம் அடைந்து வருவது. நெருக்கடியின் தொடக்க காலத்தில் அவர்களுக்கு அது பாரதூரமாகத் தெரிந்தது.ஆனால் இப்பொழுது அது அவர்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது.இயல்பின்மையே இயல்பானதாக மாறிவிட்டது. இதுதான் யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கும் நடந்தது. ஏன் ஆயுத மோதல்களுக்கு பின்னரான காலங்களிலும் அதுதானே நிலைமை?அந்தக் கூட்டு அனுபவம்தான் பின் வந்த வைரஸ் பிரச்சினை,இப்பொழுதுள்ள பொருளாதாரப் பிரச்சனை போன்றவற்றை தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பொழுதும் அவர்களுக்கு உதவுகின்றது. இப்பொழுது தமிழ் மக்களைப் போலவே சிங்கள மக்களும் நெருக்கடிகளுக்கு பழக்கப்பட்டு வருகிறார்களா?அதனால்தான் போராட்டத்தின் தீவிரம் குறைந்து வருகிறதா?

நாலாவது காரணம், மக்கள் எரிபொருளுக்கும் எரிவாயுவுக்குமாக நீண்ட நேரம் மிக நீண்ட வரிசைகளில் காத்துக் கிடக்கிறார்கள். தமது வயிற்றுப்பாட்டுக்காக இவ்வாறு நீண்டநேரம் காத்திருப்பதால் அவர்களுக்கு போராடுவதற்கு நேரம் குறைவாகவே கிடைக்கிறது.

ஐந்தாவது காரணம், எரிபொருள் விலை உயர்வினால் போக்குவரத்து ஒரு பிரச்சினையாக மாறியிருப்பது.நாட்டின் ஏனைய பாகங்களில் இருந்து காலிமுகத்திடலை நோக்கிப் பயணம் செய்வதற்குப் பெருந்தொகை பணத்தைச் செலவிட வேண்டியிருக்கிறது. இதுவும் ஒரு காரணம்.

மேற்கண்ட காரணங்களின் தொகுக்கப்பட்ட விளைவாக போராட்ட கிராமங்களில் ஒருவித தொய்வு ஏற்பட்டிருக்கிறது.போராட்டங்களின் விளைவாக மஹிந்த வெளியேறிவிட்டார்.பஸில் வெளியேறிவிட்டார்.இது போராடும் தரப்புக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்க வேண்டும். மஹிந்தவையும் பசிலையும் அகற்றியது போல கோட்டாபயவையும் அகற்றலாம் என்ற நம்பிக்கை இப்பொழுதுதான் அதிகரிக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படியாகத் தெரியவில்லை.

எனினும் போக்குவரத்துச் செலவு காரணமாக காலிமுகத்திடலில் கூடுவோரின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைந்திருந்தாலும்,சிறிய பரவலான ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.மக்கள் தாங்கள் வாழும் இடங்களில் ஆங்காங்கே சிறியளவில் எதிர்ப்புகளை அவ்வப்போது காட்டிவருவதாக கோட்டா கோகம கிராமத்தை சேர்ந்தவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.அதாவது ஒரு மையமான இடத்தில் பெருந்தொகையானவர்கள் கூடுவதற்கு பதிலாக சிதறலாக பரவலாக சிறிய அளவில் எதிர்ப்புக்கள் காட்டப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

கடந்தவாரம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த குமார் குணரட்னம் தமிழ் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான செயற்பாட்டாளர்கள் காலிமுகத்திடலுக்கு வந்தால் போராட்டத்தின் பரிமாணம் வேறு விதமாக அமையும் என்று எதிர்பார்ப்பதாக தெரிகிறது. குமார் குணரட்ணம் வடக்கிற்கு வந்த அதே காலப்பகுதியில்தான் குருந்தூர் மலையில் புதிய தாதுகோப கலசத்தை பிரதிஷ்டை செய்யும் வேலைகள் முடுக்கிவிடப்பட்டன.தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களின் எதிர்ப்பினால் அது கைவிடப்பட்டது.

ஆனால் அந்த மரபுரிமை ஆக்கிரமிப்பை குறித்து கண்டியிலும் காலிமுகத்திடலிலும் கோட்டா கோகம கிராமங்களில் எதிர்ப்புகள் காட்டப்படவில்லை. மாறாக இந்தியப் பெரு வணிக நிறுவனமான அதானி குழுமத்துடன் கோட்டாபாய அரசாங்கம் செய்து கொண்ட டீலுக்கு எதிராக காலிமுகத்திடலில் எதிர்ப்புக் காட்டப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் விசாரித்தபொழுது அது தொடர்பான செய்திகள் தமக்கு உரிய காலத்தில் கிடைக்கவில்லை என்று கொழும்பு கோட்டா கோகம கிராமத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் தென்னிலங்கையில் போராடும் தரப்புக்கள் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு கிடைத்த மிகப்பிந்திய தருணங்களில் அதுவும் ஒன்று.

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டா கோகம கிராமத்திலிருந்து செயற்பாட்டாளர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார்கள்.கோட்டா கோகம கிராமத்திலிருந்து யாழ்.நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நூல்களை கையளிப்பது அவர்களுடைய வருகையின் நோக்கம்.அது ஒரு நன்நோக்கம் என்பதில் சந்தேகமில்லை. தமிழ்மக்களின் கூட்டுக்காயங்களை சுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் அதில் உண்டு. அதேசமயம் தமிழ் மக்களின் கூட்டுக்காயங்கள் இதுபோன்ற நற்செயல்களால் மட்டும் சுகப்படுத்த முடியாத அளவுக்கு ஆழமானவை,தொடர்ந்து புதுப்பிக்கப்படுபவை என்பதைத் தமிழ் செயற்பாட்டாளர்கள் அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். குருந்தூர்மலை ஆக்ரமிப்பு அதை நிரூபிக்கக் கிடைத்த ஆகப்பிந்திய உதாரணங்களில் ஒன்று.

அமெரிக்க நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யுமாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை

1.5 பில்லியன் அமெரிக்க நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை திருத்துவதற்கு இலங்கை சீனாவுடன் பேச்சுவார்த்ததையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“பரிமாற்ற ஏற்பாட்டிற்காக சீனாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, இலங்கையிடம் மூன்று மாதங்களுக்கு போதுமான வெளிநாட்டு கையிருப்பு இருந்தால் தவிர, அதைப் பயன்படுத்த முடியாது.

இலங்கைக்கு தேவையான அளவு இருப்புக்கள் குறைவாக இருப்பதால் இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த பரிமாற்ற ஒப்பந்தம் இலங்கைக்கு இறக்குமதிகளை செலுத்துவதற்காக கடனைப் பெற உதவுகிறது.

இந்த நிலையில், இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நாணய வசதியை பயன்படுத்திக்கொள்ள ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட ஷரத்தை திருத்துமாறு இலங்கை அதிகாரிகள் தற்போது சீன தரப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பரிமாற்ற ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்தானது. இந்தச் சரத்தின் திருத்தமானது சீனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குப் பயன்படுத்தப்படுவதால் அது சீனாவுக்குப் பயனளிக்கும் என்று இலங்கைத் தரப்பு தெரிவித்ததாக அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த மகா பருவத்துக்கான இரசாயன உரத்தை கடனில் கொள்வனவு செய்வதற்கு பல சீன நிறுவனங்களுடன் இலங்கை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.” எனக் கூறப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பொருளாதார நெருக்கடி தொடர்பில் எம்.பிக்களுடன் பிரதமர் முக்கிய கலந்துரையாடல்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களை நேற்று புதன்கிழமை மாலை சந்தித்து தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளித்தார்.

நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன, தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் குறுகிய கால மற்றும் நடுத்தர கால இலக்குகள் பற்றிய விளக்கத்தை வழஙகினார்.

விளக்கக்காட்சியைத் தொடர்ந்து, பொருளாதாரப் பேரழிவைத் தணிக்கப் பயன்படுத்தக்கூடிய சாத்தியமான வழிமுறைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் யோசனைகளை முன் முன்வைக்க அனுமதிக்கும் வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் விளக்கினார்.

எதிர்க்கட்சி சார்பில் ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, குமார் வெல்கம, ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு பணிகளில் ஈடுபடும் புலம் பெயர் தமிழர் கூட்டு

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படும் தமிழ் மக்களை மீட்கும் பொருத்தமான வழிமுறைகள் பற்றி ஆராய இளையவர்களின் தலைமைத்துவம் கொண்ட புலம் பெயர் தமிழர் கூட்டு Tamil Diaspora Alliance பிரித்தானியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 12 ஆம் திகதி ஒரு கூட்டத்தை நடத்தி இருந்தது. இந்த கூட்டத்தில் பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தவுடன் Zoom வழியாகவும் பல நாடுகளில் இருந்தும் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

தாயகத்தில் பொருளாதார நெருக்கடியை எதிர்பார்த்து கடந்த வருடத்திலிருந்து தாம் பரீட்சார்த்தமாக முன்னெடுத்து வந்த உற்பத்தி நடவடிக்கை முறைமைகள் பற்றி எடுத்துரைத்தனர். கற்றுக் கொண்ட பாடத்திலிருந்து தாயகத்திற்கு பொருத்தமான தாம் உருவாக்கிய முறைமை பற்றி விளக்கமளித்தனர்.

உற்பதிக்குழுக்கள், நுண் சமூகம், கூட்டு மூலதன உருவாக்கம், சமூக மூலதனத் திட்டம், சமூக நிறுவன வடிவம் பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டது. இவற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட புதிய கட்டமைப்பு சபையில் முவைக்கப்பட்டது. இவை தமது பரீட்சார்த்த முயற்சிகளிலிருந்து பெறப்பட்ட அனுபவங்களை இணைத்து எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும் விளக்கினர்.

மீன்பிடி மற்றும் விவசாயம் சார்ந்த உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து இக்கட்டமைப்பு இயங்கவைக்கப்படுகின்ற போதும் ஏனைய உற்பதிகளும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. மேலும் கூட்டத்தில் தம் அமைப்பு (Tamil Diaspora Alliance) புலம் பெயர் தேசத்திலும் தாயகத்திலும் முன்னெடுக்கும் பல்வேறு வகையான செயல் திடங்களையும் முன்வைத்தனர்.

தம்மோடு இணைந்து இந்த பொருளாதார மீட்சிக்கு பயணிக்க விரும்பும் அமைப்புகள் ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுத்தனர். ஏற்கனவே முப்பத்தி ஆறு அமைப்புகள் தங்களது கூட்டில் பல்வேறு பணிகளில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

சசி, சங்கீத், காயத்திரி, வேந்தன், ராகேஷ் மற்றும் கௌரிபரா ஆகியோர் கூட்டத்தில் விளக்கமளித்தனர். பொருளாதார நெருக்கடியின் அரசியல் பற்றி சிறப்பு பேச்சாளராக குணா கவியழகன் உரையாற்றினார்.

Posted in Uncategorized

கல்முனை கடற்கரை சூழலில் முன்னெடுக்கப்பட்ட சிரமதானப்பணி

கல்முனை கடற்கரை சூழலில் மாநகர சபை உறுப்பினர் என்ற கென்றி மகேந்திரனின் ஏற்பாட்டில் கல்முனை 3 கோயில் வீதி தொடக்கம் கல்முனை பாண்டிருப்பு தாழவெட்டுவான் எல்லை வீதி வரை உள்ள 2 km கடற்கரை அதனை அண்டிய பிரதேசங்களில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை மாநகரசபை, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஆகியவற்றின் இயந்திரங்கள், ஊழியர்கள் , சமுத்தி பயனாளிகள் ஆகிய வளங்கள் பங்கெடுத்தன.

கடந்த சனிக்கிழமை இந்த சிரமதான பணியை திறன்பட செய்து முடிக்க சகல விதத்திலும் உதவிகள், ஒத்தாசை வழங்கிய கல்முனை வடக்கு பிரதேச செயலக செயலாளர் ரி. ஜே.அதிசயராஜ், சமுத்தி முகாமையாளர் இதயராஜா, கிராம உத்தியோகத்தர், அருள்ராஜா, சமுத்தி அதிகாரிகள், சமுத்தி பயனாளிகள், கல்முனை மாநகரசபை முதல்வர், ஆணையாளர், சுகாதார பிரிவு அதிகாரிகள், மாநகர சபை உறுப்பினர் செலஸ்றினா , ஊழியர்கள் ஆகியோருக்கு இவ்வேலை திட்டத்தை சிறப்பாக செய்து முடிப்பதற்கு உதவியமைக்காக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் நன்றிகளைத் தெரிவித்தார்.

விசாயத்தினைப் பாதுகாக்க அரசாங்கம் தவறுவது  ஒட்டுமொத்த மக்களையும் அபாயத்திற்குள் தள்ளிவிடும் – அச்சுவேலி போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ்

அரசாங்கம் உடனடியாக விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகத்தை சீர்செய்வதுடன் விவசாயத்தினைப் பாதுகாப்பதற்கு முட்டாள் தீர்மானங்களை விடுத்து சிறந்த தீர்மானங்களை எடுக்க வேண்டும் என ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

அச்சுவேலி பிரதேச கமக்காரர்கள் விவசாயத்திற்கான எரிபொருள் தேவையினை வலியுறுத்தி புதன்கிழமை (15.06.2022) காலை அச்சுவேலி சந்தையில் கையெழுத்துப் போராட்டத்தினை ஆரம்பித்தனர்.

அப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும்,

நாடு மிகவும் நெருக்கடியான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டக்கணிப்பின் பிரகாரம் எதிர்வரும் வாரங்களில் உணவுப்பொருட்கள் கிடைக்கிமோ என்ற அச்சத்தில் மக்கள் வாழ்கின்றனர். அரசாங்கம் உணவுப் பாதுகாப்பினையும் அத்தியவசிய உணவுப் பொருட்களை மக்களுக்கு நியாய விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற பொறுப்பினையும் நிறைவேற்ற தவறியுள்ளது. அடிப்படையில் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கான கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது.

இத் துர்ப்பாக்கிய நிலைமைக்கு உரக்கொள்கை போன்ற விடயங்களில் அரசாங்கம் பின்பற்றிய தவறான நடவடிக்கைகள் பிரதான காரணமாகும். நாம் இயற்கை வழி உரப்பாவனையுடன் கூடிய விவசாய முயற்சிகளை நாம் வரவேற்கும் அதேவேளை குறுங்காலத்தில் இயற்கை உரப்பாவனையை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்தினை நாட்டில் வெற்றியடையச் செய்ய முடியுமா என படித்தவர்களிடமும் ஆய்வாளர்களிடமும் ஜனாதிபதி ஆலோசனை கேட்டிருக்க வேண்டும். விவசாயிகளுடன் கலந்துரையாடியிருக்கவேண்டும்.

இன்று எமது நிலங்களில் நாம் விவசாயத்தினை முன்னெடுப்பதற்கு உரிய தடைகள் இன்றி எரிபொருளை விநியோகிக்கக் கோருகின்றோம். காரணம் விவசாயிகள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் அவர்களது தொழில் முயற்சிகளை மேற்கொள்வற்கான குறைந்த பட்ச எரிபொருள் விநியோகத்தை ஏனும் பெற முடியாது திண்டாடுகின்றனர் என்பதை வெளிப்படுத்தவதற்காகவே திரண்டுள்ளோம்.

விவசாயிகள் தொழில் முயற்சிகளை மேற்கொள்ள முடியாத சூழல் விவசாய உற்பத்தியாளர்களை மாத்திரம் பாதிக்கும் தொழில்சார் பிரச்சினை கிடையாது. மாறாக அத்தனை மக்களது வயிற்றுப்பசியைப் போக்குவது சார்ந்த பிரச்சினையாகும். அரசாங்கம் தாமதமின்றி இவ்விடயத்தில் பொறுப்புச் சொல்லவேண்டும்.

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலின் பின்னர் உரிய அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு அனைத்து தரப்பினருடனும் இறுதி இணக்கப்பாடு எட்டப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன் அரசியலமைப்பின் 21வது திருத்தம் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியை தீர்ப்பதற்கு சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது அல்லது தேர்தலுக்கு செல்வது அத்தியாவசியமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் மாலை 4.00 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு Quad நாடுகள் உதவி செய்ய வேண்டும்-அமெரிக்கா

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண Quad நாடுகள் அதிக பங்களிப்பை வழங்க வேண்டும் என அமெரிக்காவின் வௌியுறவு தொடர்பிலான செனட் குழு (Senate Foreign Relations Committee) வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் Antony Blinken, ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் Yoshimasa Hayashi, இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சர் Penny Wong ஆகியோருக்கு செனட் சபை உறுப்பினரும் வௌியுறவு தொடர்பிலான செனட் குழுவின் தலைவருமான Bob Menendez அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் இந்தியாவின் பங்கை பாராட்டுவதாகவும் அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நெருக்கடிகளைத் தீர்க்க இதுவரை எவ்வித திட்டமும் தீட்டப்படவில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிக்கை

எரிபொருள், எரிவாயு, உணவுப்பொருட்கள் தொடர்பில் நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக இந்தியா சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அரிசி, எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய மருந்துப்பொருட்கள், பசளை போன்றவற்றை வழங்கி வருவதாகவும், அந்த உதவிகள் அடுத்த சில நாட்களில் முடிவடையும் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதன் பின்னர் ஏற்படப்போகின்ற தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு இதுவரை எத்தகைய திட்டமும் தீட்டப்பட்டுள்ளதாக தெரியவில்லை எனவும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த வாரங்களுக்கு எரிபொருள், எரிவாயு, மின்சாரம், அத்தியாவசிய உணவுப்பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் தடையின்றி கிடைக்குமா என்பது குறித்த நிச்சயமற்ற நிலையில், அச்சமூட்டும் சூழலே நிலவுவதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் எதனையும் திட்டமிட முடியாத நிலையில், அரசாங்கத்தின் மோசமான நிர்வாக சீர்கேடுகளினால் பொதுமக்களால் எதனையும் திட்டமிட முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் தற்போதைய ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்கு தகுதியானவர்களா என்பதை அவர்களது மனச்சாட்சியிடம் கேட்க வேண்டியுள்ளதாக அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் நிலவுகின்ற நெருக்கடியை தீர்த்து, அந்நிய முதலீடுகளை உள்வாங்கி, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேசிய இன பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு கண்டறியப்பட வேண்டியது முதற்படியாகும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized