பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாடல்

2009 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தத்தின் போதான வலிகள், தாக்கங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களுடன் பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் (Rishi Sunak) கலந்துரையாடல்.

பிரித்தானிய தமிழ் கன்சர்வேட்டிவ் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சந்திப்பில், அதன் இணைத்தலைவரும் கவுன்சிலருமாகிய ஜெய், செயலாளர் கயன்,அருச்சுனா சிவானந்தன்,ஜனனி ஜெகநாயகம்,ரெலோ பிரித்தானிய கிளையின் அமைப்பாளார் சாம் சம்பந்தன், தென்மராட்சி TDA தலைவர் டாக்டர் புவி ,ரகு தவறாஜ், கவுன்சிலர் பரம் நந்தா, கரன் போல் மற்றும் பல பிரித்தானிய புலம்பெயர் தமிழ் மக்களின் முக்கிய செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழர்களின் நீதிக்கான போராட்டத்திலும் இறுதி யுத்தத்தின் போதும் தமிழர்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளுக்கும், அவை குறித்த பொறுப்புக்கூறல் தொடர்பிலும் ரிஷி சுனக் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை வேட்பாளர் ரிஷி சுனக், தமிழ் தரப்பினரை சந்தித்துள்ளதுடன், பிரித்தானியாவில் தமிழர்களின் பங்களிப்பிற்காகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் இருந்து விலகியமை காரணமாக, இலங்கை மீது கடுமையான நிலைப்பாட்டை பிரயோகிப்பதில் சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்களுக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பிலான ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு தனது ஆதரவை வழங்கியுள்ள ரிஷி சுனக், எதிர்கால தீர்ப்பாயத்தில் பயன்படுத்தக்கூடிய போர்க்குற்ற சான்றுகளை சேகரிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, ரஷ்யர்கள் மீது இங்கிலாந்து விதித்துள்ள தடைகளைப் போன்று, இலங்கை அதிகாரிகள் மீது தடை விதிப்பதற்கான சாத்தியம் தொடர்பிலும், பிரித்தானியவாழ் தமிழர் பிரதிநிதிகளுடன் ரிஷி சுனக் கலந்துரையாடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பிலும் ரிஷி சுனக் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடி, எல்லையில்லா பணவீக்கம் , அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறை தொடர்பிலும் அவர் கவனம் செலுத்தியுள்ளார்.

Posted in Uncategorized

நிபந்தனைகளுடன் இலங்கைக்கு உதவுங்கள்! சர்வதேசத்திடம் கர்தினால் கோரிக்கை

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, நேர்மை மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தெளிவான நிபந்தனைகளுடன் இலங்கைக்கு உதவிகளை வழங்குமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மூன்று காரணிகளால், இலங்கையின் ஜனநாயகம் பாரியளவில் சிதைவடைந்துள்ளதாக மல்கம் ரஞ்சித் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டத்தின் ஆட்சி படிப்படியாக சீர்குலைந்து, நீதித்துறையில் அரசியல் தலைவர்களின் தலையீடானது, நீதியை ஒரு பிரச்சினையாக மாற்றியுள்ளது.

ஊழல்களை மேற்கொண்டு ஒரு சில குடும்பங்கள் மட்டுமே முடிவில்லாமல் சம்பாதித்து வருகின்றன. பல குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது, அவை அடக்குமுறைக்கு ஆளாகின்றன. எனவே இந்த தவறுகளை சரி செய்யப்படுவதை உறுதிப்படுத்த சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கர்தினால் கோரியுள்ளார்.

தவறான கொள்கைகளாலும், தவறான பொருளாதார நிர்வாகத்தாலும், நிதி நெருக்கடி, கடுமையாக மாறியுள்ளது. அரசாங்கங்களின் தவறான திட்டங்களால் நாட்டில் பெரும் கடன் பிரச்னை ஏற்பட்டு, அதிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியவில்லை.

அதனால், தேசிய வருமானமும், உற்பத்தித் திறனும் குறைந்துள்ளதால், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபயவின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் பொதுஜன பெரமுன வலியுறுத்தல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு இடம் வழங்கப்பட வேண்டுமென பொதுஜன பெரமுனவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்று பிற்பகல் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்த்து நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பூரண ஆதரவை வழங்கும் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு இடம் வழங்கப்பட வேண்டுமெனவும் பசில் ராஜபக்ஷ இந்த கலந்துரையாடலில் தெரிவித்தார்.

இது, ஜனாதிபதி உட்பட அரசாங்கத்திடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வைக்கும் மிக முக்கியமான கோரிக்கையாகும் என பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பிரசன்ன ரணதுங்க, சாகர காரியவசம், ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, நாமல் ராஜபக்ஷ மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

யுவோன் ஜோன்சன் என்ற 19 வயது யுவதியை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை அனுபவித்து வந்த ஜூட் ஷமன் அந்தோனி ஜயமஹா, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த போது பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டார்.இதன்போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்சம் ஊழல் தொடர்பான விசாரணையின் ஒரு அம்சமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று வியாழக்கிழமை சுமார் 03 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

அத்துரலியே ரதன தேரர் செய்த இரண்டு முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் வைத்து மைத்திரிபால சிறிசேனவிடம் இது தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

”மீண்டும் ஜனாதிபதியுடன் பேசத் தயார்”: சஜித்

பயனளிக்கும் மறுசீரமைப்பு செயற்பாட்டின் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தான் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

வரப்பிரசாதங்கள் சலுகைகளைப் பெறுவதற்குப் பதிலாக பிரயோக ரீதியாக தலையிட்டு நாட்டைக் கட்டியெழுப்புவதே தமது நோக்கமாகும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கம் கொண்டு வரும் நேர்மறையான, முற்போக்கான முன்மொழிவுகளை ஆதரிக்கும் வகையில் ஒரு வேலைத்திட்டம் வடிவமைக்கப்படும் எனவும், ஒருபோதும் மக்களின் எண்ணங்களுக்கும், விருப்பங்களுக்கும் துரோகம் இழைக்கமாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு கையிருப்பில் எஞ்சியுள்ள டொலர்களை அழிக்கும் செயற்பாட்டிற்கு ஒருபோதும் பங்களிக்கப்போவதில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,தற்போது அனைத்து துறைகளிலும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை கட்டியெழுப்ப பதவிகள் அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மறுசீரமைப்புகளுக்கான புத்திஜீவிகள் ஒன்றியத்தின் விசேட கூட்டம் இன்று (19) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.

தற்போது நிலவும் சூழ்நிலையில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இதன்போது இடம்பெற்றது.

பா.உ ஜனாவின் நிதி ஒதுக்கீட்டில் அமைப்புகள், கழகங்களுக்குஉபகரணங்கள் வழங்கிவைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்( ஜனா) அவர்களின் 2022ம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைப்புகள் மற்றும் கழகங்கள் சிலவற்றுக்கான தளபாடங்கள், விளையாட்டு உபகரணங்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.

கோரளைப்பற்று வாழைச்சேனை, மண்முனை மேற்கு வவுணதீவு, மண்முனைப் பற்று ஆரயம்பதி பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழ் இயங்கும் அமைப்புகள், கழகங்களுக்கான உபகரணங்களே இன்று வழங்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் அவர்களிடம் மேற்படி கழகங்களால் மேற்கொள்ளப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் 2022ம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் உரிய பிரதேச செயலங்களினூடாக உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டது. இருப்பினும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனைகள், அரசியல் குழப்பங்கள் போன்றவற்றின் காரணமாக உபகரணங்கள் கையளிக்கும் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்து தற்போது அவை உரிய அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் இன்றைய தினம் மேற்குறிப்பிட்ட மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழுள்ள அமைப்புகளுக்கு தளபாடங்கள், உபகரணங்கள் கையளிப்பட்டது.

இந்நிகழ்வில்  முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் வேணு ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிரதிநிதி – யாழ் மாவட்ட செயலாளர் சந்திப்பு

ஐ.நா. அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் கடந்த ஓகஸ்ட் 16 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்ததுடன் பல்வேறு தரப்புக்களையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.

இன்று காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் மகேசனை டேவிட் மெக்லாக்லன்-கார் சந்தித்தார்.இதன்போது இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரும் உடனிருந்தார்.தற்போதைய பொருளாதார சூழ்நிலையின் காரணமாக வாழ்வாதாரம் மற்றும் கடற்றொழிலுக்கு உள்ள சவால்கள் குறித்து இதன்போது இவர்கள் விரிவாக அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்துக் கொண்டனர்.

Posted in Uncategorized

இலங்கைக்கு இந்தியா அதிகபட்ச ஆதரவை வழங்கியுள்ளது என்கிறார் ஜெய்சங்கர்

இலங்கைக்கு இந்தியா அதிகபட்ச ஆதரவை வழங்கியுள்ளது நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து விடுபட இலங்கைக்கு இந்தியா அதிகபட்ச ஆதரவை வழங்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் மாத்திரம் இலங்கைக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறுகிறார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் தாய்லாந்தில் உள்ள சூலாங்கோர்ன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உரையில் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதிய திட்டத்தில் இலங்கைக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐநா பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணிலை சந்தித்தனர்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்விற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (18) பிற்பகல் இடம்பெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கான பெங்கொக் அலுவலகத்தின் பணிப்பாளர் டேவிட் மஸ்னெக்யன் கார் (David Mclachlan-Karr), ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி ஹெனா சிங்கர் (Hanaa Singer) மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் பிரதானி ஆண்ட்ரியாஸ் கர்பாதி (Andreas Karpati) ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் தினுக் கொழம்பகே, ஜனாதிபதியின் இளைஞர் மற்றும் நிலையான அபிவிருத்தி விவகாரப் பணிப்பாளர் ரந்துல அபேதீர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

மே 9 வன்முறை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணை

கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பான விசேட விசாரணை நாளை ஆரம்பிக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தெரிவித்துள்ளது.

குறித்த தினத்தில் பதிவாகிய சொத்து சேதம் தொடர்பான விசாரணைகளுக்காக ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை முதல் HRCSL வளாகத்திற்கு நாளாந்தம் வரவழைக்கப்படுவார்கள் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி உச்ச நீதிமன்ற நீதிபதி (ஓய்வு பெற்ற) ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரியின் தலைமையில் விசாரணைக் குழுவை நியமித்துள்ளது.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதற்குப் பிந்தைய நாட்களில் மனித உரிமை ஆணையத்திற்கு 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் மே 15 ஆம் திகதி வரை நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தமக்கு மொத்தம் 521 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்திலிருந்து 107 முறைப்பாடுகளும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 88 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் புவனேக ஹேரத் தெரிவித்துள்ளார்.

86 முறைப்பாடுகள் குருநாகல் மாவட்டத்திலிருந்தும், 26 முறைப்பாடுகள் களுத்துறை மாவட்டத்திலிருந்தும் கிடைத்துள்ளன.

வீடுகளுக்கு தீ வைத்தல் , கட்சி அலுவலகங்களுக்கு தீ வைத்தல் , பஸ்களுக்கு தீ வைத்தது, வீடுகளை சேதப்படுத்தியது போன்ற புகார்கள் இந்த புகார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் சேதங்களை மதிப்பிடுவதற்கு அதிகாரிகள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர்.