”சர்வகட்சி அரசாங்கமே பிரச்சினைகளுக்கு தீர்வு”: கண்டி ஜனாதிபதி மாளிகையில் இருந்து ரணில்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒரே வழி சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் இருந்து விசேட உரையொன்றை ஆற்றிய போது இதனை தெரிவித்திருந்தார்.

நீங்கள் அனைவரும் கடந்த மே 9 ஆம் திகதி முதல் எதிர்கொண்ட துன்பங்களை நான் அறிவேன். சிலருக்கு வீடு இல்லாமல் போனது. சிலருக்கு கிராமத்தில் இருந்து செல்ல வேண்டி ஏற்பட்டது. அச்சுறுத்தல் இருந்தது. அழைத்து கூறினார்கள் உங்கள் அனைவரையும் கொலை செய்வோம் என்று. அந்த காலம் தற்போது நிறைவடைந்துள்ளது. நாம் ஒன்றிணைய முயற்சிப்போம். நாம் ஒன்றிணைந்து நாட்டுக்காக உழைப்போம்.

அவ்வளவுதான் நான் கேட்கிறேன். இந்த இடத்தில் ஐக்கிய தேசிய கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரண்டு கட்சியினரும் உள்ளனர். இந்த அரங்கில் மீதமுல்ல பகுதியும் நிரம்பி இருப்பதை பார்க்க எனக்கு விரும்பம் உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்களையும் அழைத்து வரை முடியாதா?

இதை நிரப்புவோம். இதை ஐக்கிய தேசிய கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் மாத்திரம் மட்டுப்படுத்த வேண்டியதில்லை.சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதே தற்போதைய நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு ஒரே வழி என்று தெரிவித்துள்ளார்.

எரிபொருள் அனைத்து தரப்புக்கும் வழங்கப்பட வேண்டும்: செ.மயூரன்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் படும் வேதனையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட வேண்டும் என தமிழ் ஈழவிடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான செ.மயூரன் வலியுறுத்தியுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் சந்திக்கும் துயரங்கள் பற்றி இன்று(28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் படுகின்ற துயரங்கள் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாதவை. பெண்கள் சிறுவர்கள் முதியவர்கள் என பலதரப்பட்டோரும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாழ்க்கை செலவு அதிகரிப்பு, தொழிலின்மை ஆகியவற்றால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள சாதாரணமக்கள் எரிபொருளையும் பெற்றுக்கொள்ள முடியாமல் நாட்கணக்கில் வீதிகளில் கிடக்கின்றனர்.

இந்த அவலத்துக்கு மத்தியில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அவர்களின் வேதனையை நேரிலே சென்று பார்ப்பதற்க்கு சக்தியற்று போயுள்ளனர்.

தங்களை தெரிவுசெய்த மக்கள் மனித அவலத்தை எதிர் நோக்கியுள்ள நிலையில் அவர்களின் துன்பத்தில் பங்கெடுக்காமல் இருப்பது வேதனையாக இருக்கின்றது.

அங்கு நடக்கும் அராஜகங்களை மக்களுடன் நின்று தட்டி கேட்பதற்கு ஒருவருக்காவது சக்தி இருக்கின்றதா? என அவர்களிடம் கேட்க விரும்புகின்றேன்.

தெற்கில் கொலைக்களங்களாக மாறிவரும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் போல வடக்கிலும் தோன்ற வேண்டும் என்பது தானா உங்களது விருப்பம்? எத்தனை காலங்கள்தான் வேடிக்கை மனிதர்களைபோலவே இவர்கள் செயற்பட போகின்றார்கள்? மக்கள் இனியாவது இவர்களை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் நிரப்பு நிலையங்களில் பொலிஸாரின் செயற்பாடு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி நிற்கின்றது.

வரிசையில் நிற்கும் பொதுமக்களுடன் முரண்படுவது, அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவது என பொலிஸாரின் அடக்குமுறைக்கு வரைமுறையே இல்லாமல் போய்விட்டது.

எரிபொருள் அனைத்து தரப்புக்கும் வழங்கப்பட வேண்டும்: செ.மயூரன் | Fuel Should Be Provided All Parties

நாட்கணக்கில் வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் எரிபொருள் வழங்கப்படும் தினத்தில் வருகைதரும் பொலிஸாரால் முன்னுரிமை அடிப்படையில் தமது வாகனங்களில் முழுமையாக எரிபொருளினை நிரப்பி செல்கின்றனர்.

இதற்கு நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களும் உடந்தையாக செயற்படுகின்றனர். மக்களை காக்க வேண்டிய பொலிஸார் அதனை புறம் தள்ளி சட்டமும் நீதியும், சாதாரண மக்களுக்காகத்தான் என்பதுபோல அவர்களின் செயற்பாடு உள்ளது.

இவை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனமெடுக்க வேண்டும். உங்களை தெரிவுசெய்த சாதாரண மக்களின் அவலங்களை தீர்ப்பதற்கு முன்வரவேண்டும்.

எரிபொருள் என்பது அனைவருக்கும் அத்தியவசியமானது. அதனை அனைத்து தரப்புகளிற்கும் வழங்க வேண்டியது அரசின் கடமை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கைக்கு எந்த அரசியல் நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை-சீனா

இலங்கை சீனா ஒத்துழைப்பு எப்போதும் இலங்கை தலைமையிலான – இலங்கையின் கொள்கைகளையே பின்பற்றுகின்றது என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உட்கட்டமைப்பிற்கு வெளிப்படைத்தன்மையற்ற கடனுதவியை வழங்கியமையே இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கான முக்கிய காரணி என அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா பவர் நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சமந்தா பவரின் கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அனைத்து ஒத்துழைப்பு திட்டங்களும் முழுமையான விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சி மற்றும் முழுமையான மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ள அவர் எந்த அரசியல் நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை – சீன ஒத்துழைப்பு இலங்கையின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்துள்ளது, இலங்கை மக்களுக்கு குறிப்பிடத்தக்க அனுகூலங்களை வழங்கியுள்ளது என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிநாட்டுக் கடன்கள் பல கூறுகளைக் கொண்டது எனத் தெரிவித்துள்ள அவர் இலங்கையின் கடன்களுக்கான சீனாவின் பங்களிப்பு சர்வதேச மூலதனச்சந்தை பல்தரப்பு அபிவிருத்தி வங்கிகளை காட்டிலும் குறைவானது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு புதிய நிதியை வழங்கத் திட்டமிடவில்லை – உலக வங்கி கவலை!

இலங்கைக்கு புதிய நிதியை வழங்கத் திட்டமிடவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அது இலங்கை மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், போதுமான பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்படும் வரை இலங்கைக்கு புதிய நிதியை வழங்கத் திட்டமிடவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

முன்னிலை சோஷலிச கட்சி அலுவலகம் பொலிஸாரால் தீவிர சோதனை!

பத்தரமுல்லை பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைமை அலுவலகம் பொலிஸாரால் சோதனையிடப்பட்டுள்ளது.

இரண்டு குழுக்கள் வருகை தந்து அலுவகத்தை சோதனையிட்டதாக முன்னிலை சோசலிசக் கட்சி  கல்வி செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.

வௌ்ளை வேனில் அவர்கள் வருகை தந்து சோதனையிட்டதாக முன்னிலை சோசலிசக் கட்சி  கல்வி செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.

அவர்களில் சீருடையுடன் பொலிஸ் அதிகாரி ஒருவும் இருந்ததாக அவர் கூறினார்.

வௌ்ளை வேனுக்கு மேலதிகமாக நுகேகொடை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான சில வாகனங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

பாராளுமன்ற கூட்டத்தொடர் எவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்படும்? – சரியாகாத் தெரிந்துகொள்வோம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 ஜூலை 28 ஆம் திகதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகும்.

பாராளுமன்ற வரலாற்றில் இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடப்புப் பாராளுமன்றக் கூட்டத்தொடர்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய கூட்டத்தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டமையைக் காணமுடியும். இவ்வாறு பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரொன்றை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டரீதியான ஏற்பாடுகள் தொடர்பில் வரலாற்றுரீதியான மற்றும் பிரயோகரீதியான பின்னணி பற்றிக் கண்டறிவது முக்கியமானதாகும்.

கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் அதிகாரம் யாருக்குக் காணப்படுகின்றது?

அரசியலமைப்பின் 70(1) உறுப்புரைக்கு அமைய பாராளுமன்றத்தை கூடுமாறு அழைக்கும், கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் மற்றும் கலைக்கும் பூரண அதிகாரம் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது.

புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் தினம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது?

அரசியலமைப்பின் 70(3) உறுப்புரைக்கு அமைய பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் பிரகடனத்திலேயே (வர்த்தமானி அறிவித்தல்) புதிய கூட்டத்தொடருக்கான திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும். அந்தத் திகதி கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் பிரகடனத் திகதியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு மேற்படாத ஒரு தினமாக இருக்க வேண்டும்.

எனினும், பாராளுமன்றக் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவந்து மீண்டும் ஆரம்பிக்கும் திகதியை பிரகடனப்படுத்தியிருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் குறித்த திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கூடுமாறு அழைப்பதற்கு அரசிலமைப்பின் 70(3)(i) உறுப்புரைக்கு அமைய ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, மீண்டும் பிரகடனம் (வர்த்தமானி அறிவித்தல்) ஒன்றின் மூலம் அவ்வாறு பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு எதிர்பார்க்கும் தினத்தைப் பிரகடனப்படுத்தப்படுவதுடன், குறித்த பிரகடனத்தின் திகதியிலிருந்து மூன்று நாட்களுக்குப் பிந்திய ஒரு தினத்தில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாபதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவருவதனால் பாராளுமன்றத்தின் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்படுகின்றனவா?

பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரும் போது, அதன் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்படுவதாக பலர் கருதுகின்றனர். எனினும் அது அவ்வாறு இடம்பெறுவதில்லை.

கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் போது, சபாநாயகர் தொடர்ந்தும் தனது பணிகளை மேற்கொள்வார். அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்கள் அமர்வுகளில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அவர்களது உறுப்பினர் பதவிகள் அவ்வாறே காணப்படுகின்றது. எனினும், கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் போது அதுவரை பாராளுமன்றத்தில் காணப்பட்ட அனைத்து அலுவல்களும் இடைநிறுத்தப்படுவதுடன் குற்றப்பிரேரணை (Impeachment) தவிர்ந்த அதுவரை சபையில் இடம்பெற்றுவந்த அனைத்து செயற்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

எனினும், குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பாக சட்ட மூலமொன்று, பிரேரணையொன்றோ அல்லது கேள்வியொன்றோ ஒரே கூட்டத்தொடரில் இரண்டாவது முறையாக முன்வைக்க முடியாது. ஆனால், கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவந்ததன் பின்னர் எதிர்வரும் கூட்டத்தொடருக்கு கொண்டுசெல்ல வாய்ப்பு உள்ளது.

“பாராளுமன்றத்தின் முன்னர் உரிய முறையில் கொணரப்பட்டுள்ளவையும் பாராளுமன்றத்தின் அமர்வு நிறுத்தப்பட்ட நேரத்தில் முடிவுசெய்யப்படாதிருந்தவையுமான எல்லாக் கருமங்களும், அடுத்த அமர்வின்போது, விட்ட நிலையிலிருந்து தொடர்ந்து கையாளப்படலாம்.” என அரசியலமைப்பின் 70(4) ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் இந்த ஏற்பாடுகளின் கீழ் பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அலுவல்கள் இரத்துச் செய்யப்படுவதில்லை. இதன்போது, பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டவுடனேயே எதிர்வரும் அலுவல்களை அவ்வாறே முன்னெடுத்துச் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கின்றது.  இங்கு முன்னெடுக்கப்பட வேண்டிய அரசாங்கத்தின் அலுவல்களை சபை முதல்வர் தீர்மானிப்பதுடன், தனியார் உறுப்பினர் சட்டமூலம் அல்லது பிரேரணை என்பவற்றை மீண்டும் புதிதாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் போது ஒழுங்குப் பத்திரத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சபை அலுவல்களை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டுமானால் அவற்றை மீண்டும் பட்டியலிடுவது அவசியமாகும்.

பாராளுமன்றக் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் போது அனைத்துக் குழுக்களும் இரத்தாகின்றனவா

பாராளுமன்றக் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் போது பாராளுமன்ற குழுக்களுக்கு என்ன நடக்கின்றது என்பது அனைவருக்கும் எழும் கேள்வியாகும். இதில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை இலக்கம் 109, 111(2), 124(5), 125(1) என்பவற்றுக்கு அமைய முறையே பாராளுமன்ற விசேட குழுக்கள், துறைசார் மேற்பார்வைக் குழுக்கள், உயர் பதவிகள் பற்றிய குழு மற்றும் இணைப்புக் குழு தவிர்ந்த ஏனைய அனைத்துக் குழுக்களும் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிக்கும் போது மீண்டும் நியமிக்கப்படுகின்றன. இங்கு நிலையியற் கட்டளை 125(1) க்கு அமைய இணைப்புக் குழுவுக்கு உறுப்பினர்கள் பதவியடிப்படையில் (சபாநாயகர், பிரதி சபாநாயகர் போன்ற பதவிகளின் அடிப்படையில்) நியமிக்கப்படுவதனால் அதில் மாற்றம் ஏற்படுவதில்லை.

பாராளுமன்ற நிலையியற் கட்டளை இலக்கம் 114 க்கு அமைய ஒவ்வோர் புதிய கூட்டத்தொடரின் போதும் தெரிவுக்குழு புதிதாக நியமிக்கப்படுகின்றது. இதில் சிறப்பு நோக்கங்களுக்கான கீழே குறிப்பிட்டுள்ள அனைத்துக் குழுக்களும் பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் போது இரத்தாகின்றன.

  • அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்
  • சட்டவாக்க நிலையியற் குழு
  • பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு
  • நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு
  • சபைக் குழு
  • ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு
  • அரசாங்க கணக்குகள் பற்றிய குழு
  • அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு
  • அரசாங்க நிதி பற்றிய குழு
  • பொது மனுக்கள் பற்றிய குழு
  • பின்வரிசை குழு

பாராளுமன்றத்தில் புதிய கூட்டத்தொடரொன்று எவ்வாறு ஆரம்பிக்கப்படுகின்றது?

பாராளுமன்றத்தில் புதிய கூட்டத்தொடரொன்று எவ்வாறு ஆரம்பிக்கப்படுகின்றது?

பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படும் போது வைபவரீதியாக திறந்துவைத்தல் அத்தியாவசியமானதொன்றல்ல. எனினும் புதிய கூட்டத்தொடர் வைபவரீதியாக ஆரம்பிக்கப்பட வேண்டுமானால், அது கட்டாயம் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறும்.

பாராளுமன்றத்தின் ஒவ்வோர் கூட்டத்தொடரின் ஆரம்பத்திலும் அரசாங்கத்தின் கொள்கைப்பிரகடனம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுகின்றது. அதற்கமைய ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்கவினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் எதிர்வரும் ஆகஸ்ட் 03 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

அரசியலமைப்பின் 33(அ) உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும், அரசியலமைப்பின் 33(ஆ) உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றத்தின் சடங்குமுறையான அமர்வுகளில் தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுகின்றது.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் என்றால் என்ன?

பாராளுமன்றத்தின் ஒவ்வோர் கூட்டத்தொடரினதும் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குக் காணப்படுகின்றது. இதன்போது ஜனாதிபதியினால் அவரது அரசங்கத்தின் எதிர்கால நோக்கு தொடர்பிலான விளக்கமான பகுப்பாய்வு கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக பாராளுமன்றத்துக்கும் மக்களுக்கும் முன்வைக்கப்படும்.

கடந்த காலத்தில் இது மகா தேசாதிபதியால் வழங்கப்படும் அக்கிராசன உரை என்று அறியப்பட்டது.

1978 முதல் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியால் முன்வைக்கப்படும் கொள்கைப் பிரகடனம் இதுவரை விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டோ, வாக்கெடுப்புக்கு விடப்பட்டோ இல்லை.

இலங்கைப் பாராளுமன்றத்தில் ஒவ்வோர் பாராளுமன்றத்திலும் ஆரம்பிக்கப்பட்ட புதிய கூட்டத்தொடர்களின் எண்ணிக்கை

1947 ஆம் ஆண்டு முதல் இற்றை வரை சுமார் 50 தடவைகள் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாக பாராளுமன்ற பதிவுகள் குறிப்பிடுகின்றன. 1978 ஆம் ஆண்டு முதல் இதுவரை 25க்கும் மேற்பட்ட பாராளுமன்றக் கூட்டத்தொடர்கள் இடம்பெற்றுள்ளன. அவை வருமாறு;

  • 09.07 ஆம் திகதி ஆரம்பமான முதலாவது பாராளுமன்றம் 1988.12.20 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் ஏழு கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.
  • 03.09 ஆம் திகதி ஆரம்பமான இரண்டாவது பாராளுமன்றம் 1994.06.24 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் ஐந்து கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.
  • 08.25 ஆம் திகதி ஆரம்பமான மூன்றாவது பாராளுமன்றம் 2000.08.18 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் மூன்று கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.
  • 10.18 ஆம் திகதி ஆரம்பமான நான்காவது பாராளுமன்றம் 2001.10.10 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் மூன்று கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.
  • 12.19 ஆம் திகதி ஆரம்பமான ஐந்தாவது பாராளுமன்றம் 2004.02.09 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் இரண்டு கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.
  • 04.22 ஆம் திகதி ஆரம்பமான ஆறாவது பாராளுமன்றம் 2010.02.09 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் நான்கு கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.

(அவசரகால ஒழுங்குவிதிகளை நிறைவேற்றுவதற்காக கலைக்கப்பட்ட பாராளுமன்றம் 2010.03.09 மற்றும் 2010.04.06 ஆம் திகதிகளில் மீளக் கூட்டப்பட்டது)

  • 04.22 ஆம் திகதி ஆரம்பமான ஏழாவது பாராளுமன்றம் 2015.06.26 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் ஒரு கூட்டத்தொடரை மாத்திரம் கொண்டிருந்தது.
  • 09.01 ஆம் திகதி ஆரம்பமான எட்டாவது பாராளுமன்றம் 2020.03.02 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் நான்கு கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.
  • 08.20 ஆம் திகதி ஆரம்பமான ஒன்பதாவது பாராளுமன்றம் இற்றை வரை இரண்டு கூட்டத்தொடர்களை கொண்டுள்ளது.

அவசரகால சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!

ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அவசரகால சட்ட அமுலாக்கத்திற்கான வர்த்தமானியை வலுவிழக்க செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில்  அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத், தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளமையால், அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், கடந்த 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் சட்டவிரோதமாக கைது செய்தல், தடுத்து வைத்தல், சித்திரவதைக்குள்ளாக்குதல் போன்ற செயற்பாடுகளுக்கு வழி சமைப்பதாக எடுத்துக்கூறியுள்ள முறைப்பாட்டாளர், கடந்த 22 ஆம் திகதி காலி முகத்திடலில் ஆயுதமேந்திய படையினர் செயற்பட்ட விதம் அதற்கான எடுத்துக்காட்டு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

ஜனாதிபதியின் கொடியை படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது!

ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதியின் கொடியை திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 09ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்து ஜனாதிபதியின் கொடியை திருடிய 54 வயதான நபர் ஒருவர் பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் இருந்து திருடப்பட்ட ஜனாதிபதியின் கொடியை குறித்த நபர் படுக்கை விரிப்பாக பயன்படுத்திய வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அதே நேரம் , காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் முன்னின்று செயற்பட்ட லஹிரு வீரசேகர மற்றும் தெம்பிட்டியே சுகதானந்த தேரர் ஆகிய இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பிடியாணை உத்தரவு பிறப்பித்தார்.

சட்டவிரோதமாக மக்களை ஒன்றுகூட்டியமை தொடர்பான வழக்கொன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, லஹிரு வீரசேகரவும் தெம்பிட்டியே சுகதானந்த தேரரும் மன்றில் ஆஜராகியிருக்கவில்லை.

இதேவேளை, லோட்டஸ் வீதி, நிதி அமைச்சு, ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசிக்கும் நுழைவாயிலை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் வசந்த முதலிகே, ஜோசப் ஸ்டாலின், லஹிரு வீரசேகர, ரங்க லக்மால் தேவப்பிரிய, எரங்க குணசேகர மற்றும் அருட்தந்தை அமில் ஜீவந்த ஆகியோருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதித்து, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று மற்றுமொரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மட்டு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க. மோகன் ஒருவருடத்தின் பின்னர் பிணையில் விடுதலை

இணையத்தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை பதிவேற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2021 ஆண்டு கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை சட்டமா அதிபரின் ஆலோசனையில்  வெள்ளிக்கிழமை (29) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் எஸ். அன்வர் சதாத் ஒரு இலச்சம் ரூபா இருவர் கொண்ட சரீரப்பிணையிலும் 50 ஆயிரம் ரூபா காசு பிணையிலும் விடுவித்துள்ளார்.

இணையத்தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை பதிவு ஏற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த மே மாதம் 3ம் திகதி தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைக்கபபட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஏறாவூர் பொலிசார் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டர் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய சட்டத்தரணி ரி.ஜெயசிங்கம், சின்னத்துரை ஜெகன் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை (29) ஆஜராகி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் முன்நகர் பத்திரம் தாக்கல் செய்ததையடுத்து சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் எஸ். அன்வர் சதாத் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டதையடுத்து அவரை ஒரு இலச்சம் ரூபா இருவர் கொண்ட சரீரப் பிணையிலும் 50 ஆயிரம் ரூபா காசு ரொக்கப் பிணையிலும் பிணையில் விடுவித்துள்ளார்.

Posted in Uncategorized

காலிமுகத்திடல்   போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைதுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் முகமாக மட்டக்களப்பில் கவனயீர்ப்பு

கொழும்பு காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஜனநாயகப் போராட்டங்களை மேற்கொண்டு வரும் போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், கைதுகள் போன்ற அச்சுறுத்தல்களைக் கண்டித்தும், கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரியதுமான கவனயீர்ப்புப் போராட்டம்  வெள்ளிக்கிழமை (29)  மட்டக்களப்பில் இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சிவில் அமைப்புகள் இணைந்து மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் க.லவகுசராசா தலைமையில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது  அமைதியான போராட்டக் காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்;மையாகக் கண்டிக்கின்றோம், போராட்டக் காரர்களைக் கைது செய்வதை நிறத்துக, அமைதி வழியில் போராடியவர்கைள விடுதலை செய், பேச்சு சுதந்திரம் எமது அடிப்படை உரிமை, போராட்டக் காரர்கள் மீது வன்முறை வேண்டாம், ஒன்று கூடுவது எமது உரிமை போன்ற பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியும் ஆhப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் காலிமுகத்திடல் அமைதிவழிப் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் முகமாக கண்டன அறிக்கையும் வெளியிடப்பட்டது.

இவ்விக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

29 ஆவணி 2022 ஆகிய இன்றைய நாளில், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களாகிய நாமும், சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மனித உரிமைப் பாதுகாவலர்கள், சிவில் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து அமைதிவழிப் போராட்டக்காரர் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அமைதிவழிப் போராட்டக்காரர்களையும், ஊடகவியலாளரையும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் தாக்குவதை நிறுத்துமாறு நாம் இலங்கை அரசை கோருகிறோம். அத்துடன், தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து போராட்டக்காரர்களையும் உடன் விடுவிக்குமாறு நாம் அரசை வேண்டுகிறோம்.

இலங்கைத் தீவின் அதிகாரங்களற்ற சாதாரண பொதுமக்கள், ஜனநாயகமான மக்கள் போராட்டத்தின் மூலம் சர்வாதிகார ராஜபக்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர். இலங்கைத் தீவின் மக்கள் எனும் வகையில், நாம் பெருமிதமடைகிறோம். தமிழின அழிப்புக்கும், போர்க்குற்றங்களுக்கும் பொறுப்பான பேரினவாதப் பாதுகாவலர்களான ராஜபக்சர்களை மண்டியிடச்செய்த மக்கள் போராட்டத்துக்கு தலை வணங்குகிறோம். முழுநாடும் ஜனநாயக ஆட்சி மாற்றத்துக்காக காத்திருந்தது. எனினும், மக்கள் போராட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அதிகாரமாற்றத்தின் காரணமாக அதிகாரத்துக்கு வந்தவர்கள், அதே மக்களுக்கு எதிராக திரும்பி அந்த மக்களின் குரலையே நசுக்குவது சந்தர்ப்பவாதமாகும்.

தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் வன்முறையான, ஜனநாயக விரோதமான நடவடிக்கைகள் நாட்டை மீளவும் ஒரு இருண்ட யுகத்துக்குக் கொண்டு செல்லுமென நாம் அஞ்சுகிறோம்.

எனவே, மக்களுக்கு அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகள மீறுவதை உடன் நிறுத்துமாறும், ஜனநாயகத்தையும் சட்ட ஆட்சியையும் உறுதிப்படுத்துமாறும் நாம் இலங்கை அரசைக் கோருகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.