எடின்பரோ மரதன் ஓட்டத்தை வெற்றிகரமாக ஓடிமுடித்தேன் -வைத்தியர் சத்தியமூர்த்தி

எடின்பரோ மரதன் ஓட்டத்தை வெற்றிகரமாக ஓடிமுடித்தேன்.ஆதரவு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் கல்விக்கான நிதி பங்களிப்பு செய்த அனைவருக்கும் பாராட்டுக்கள் என வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஓட்ட நிகழ்வு சமகாலத்தில் நடைபெற்றமை இரட்டிப்பு மகிழ்ச்சி.இலண்டன் கிளிநொச்சி மக்கள் அமைப்பு மிக சிறப்பாக ஒருங்கினைப்பை செய்தார்கள். என்னுடன் பல மைல்கள் பயணித்து நிகழ்வில் என்னை ஊக்கவித்தமை மிக்க மகிழ்ச்சி.

கிளிநொச்சியை சேர்ந்த உதயன் பல மரதன் ஓட்டங்களை முடித்தவர். இன்று அவருடன் சேர்ந்து எடின்பரோ மரதன் ஓடியமை மகிழ்ச்சியான விடயம்.உடல், உள, மற்றும் ஆத்மா ஒருங்கிணைந்த பயிற்சியில் மரதன் ஓட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

சுகதேகியாக ஒருவர் தன்னை பாதுகாத்துக் கொள்ள முயற்சிப்பது தற்காலத்தில் கைக்கொள்ள வேண்டிய ஒரு விடயம்.குறிப்பாக பொருளாதார புயலில் சிக்கி தவிக்கும் இலங்கையில் இலவச மருத்துவ சேவை நலிவுற்றிருக்கும் இக் காலத்தில் ஒவ்வொருவரும் தங்களை பாதுகாக்க வேண்டியமை காலத்தின் தேவை என மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

கச்சதீவு விவகாரம் – தமிழரசுக் கட்சியும் அதீத கவனம் செலுத்துவதாக மாவை தெரிவிப்பு

கடற்தொழிலாளர்களின் கருத்துக்களை அறிந்துகொண்ட பின்னரே கச்சதீவு விடயம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் எனக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழகத்துக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கச்சதீவை மீட்பதற்குரிய பொருத்தமான நேரம் இதுவெனக் கோரிக்கை விடுத்திருந்தார். எனவே, இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் மாவை சேனாதிராஜா கருத்து தெரிவிக்கையில்,“இது இரண்டு நாடுகளின் உடன்படிக்கை. இந்தநிலையில், கச்சதீவு எங்களுடைய கடற்தொழிலாளர்களின் நலன்களுக்குச் சாதகமாக இருக்குமானால் எங்களுடைய கடற்தொழிலாளர்களின் நலன்களுக்காக இந்திய அரசுடன் பேச வேண்டும்.

அதற்கு முன்னதாக கச்சதீவை இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சரின் கருத்து தொடர்பில் முதலில் எமது கடற்தொழிலாளர்களின் கருத்துக்களை அறியவேண்டும்.

அவர்களின் கருத்துக்களை வைத்தே எங்கள் முடிவுகள் அமையும். அதற்கு முன்னதாக எழுந்தமானமாகக் கருத்துக்களைக் கூறமுடியாது.

அத்தோடு இலங்கை – இந்திய கடற்தொழிலாளர்களின் இழுவைப் படகு பிரச்சினை தீர்க்கப்படாதுள்ளது.

எனவே, அது தொடர்பில் இந்திய அரசுடன் பேசும்போது கச்சதீவு விடயம் பற்றியும் பேசவேண்டும். இதுவொரு இராஜதந்திர ரீதியான நடவடிக்கை” – என்றார்.

இலங்கை அரசாங்கத்தின் திட்டங்களில் இளைஞர்களை இணைக்க ரணில் யோசனை

பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்கான தெரிவுக்குழுக்கள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் புதிதாக நியமிக்கப்பட்டு, அதில் இளைஞர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.

நேற்று  விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் அவர் தன்னுரையில்,

இன்று எமது நாட்டின் பிரதான பிரச்னைகள், பொருளாதாரத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை. அதேபோன்று, அரசியல் துறையில் இரண்டு பிரதான பிரச்னைகள் காணப்படுகின்றன. அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீண்டும் செயற்படுத்துவது முதலாவது பிரச்னை.

அதற்கு தீர்வாக, கட்சித் தலைவர்கள் என்ற விதத்தில் நாம், 21வது திருத்தத்தைத் தயாரித்து வருகின்றோம். இரண்டாவது பிரச்னை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது. அதற்கான கால எல்லை மற்றும் நடைமுறைகள் தொடர்பில் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க முடியும். இதற்கு மேலதிகமாக பாராளுமன்றம் தொடர்பில் பிரச்னை ஒன்று உள்ளது.

20வது திருத்தத்தின் ஊடாக பாராளுமன்றம் வலுவிழக்கச் செய்யப்பட்டு, அதிகளவிலான அதிகாரங்களை நிறைவேற்று அதிகாரம் தன்வசப்படுத்திக் கொண்டமையின் ஊடாக பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன.

மேலும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில்  பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அந்த நிறுவனங்கள் வலுவிழந்துள்ளன. அவற்றை வலுவடைய செய்ய வேண்டுமாயின், அது குறித்து அறிக்கையிட புறம்பாக குழுவொன்று தேவைப்படுகின்றது. அதனால், வங்கி மற்றும் நிதி சேவைகள் தொடர்பிலான தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எமது நிலையியற் கட்டளை 111ன் கீழ், எமக்கு கண்காணிப்பு குழுக்களை நியமிக்க முடியும். கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்படவில்லை.

அதனால், 10 கண்காணிப்பு குழுக்களை நியமிக்குமாறு நான் யோசனையொன்றை முன்வைக்கின்றேன். இந்த கண்காணிப்பு குழுக்களுக்கு அரசாங்கத்தில் இருக்கின்ற விடயதானங்களை பகிர்ந்தளிக்க முடியும். அந்த கண்காணிப்பு குழுக்களின் ஊடாக அறிக்கைகளை பெற்றுக்கொள்ள முடியும். கொள்கைகள் தொடர்பிலும் நாடாளுமன்றத்திற்கு அறிக்கைகளை சமர்ப்பிக்க முடியும். இது தொடர்பில் நாடாளுமன்றம் செயற்பட வேண்டும்.

இந்த நிதி செயற்குழுக்களிலும், கண்காணிப்பு குழுக்களிலும் தலைவராக பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவார்கள். அமைச்சர்கள் இல்லை. அமைச்சர்களுக்கு சுயாதீனமாக செயற்படுவதற்கான இயலுமை எமக்கு கிடைக்கும். இந்த இடத்தில் விசேட விடயமொன்று குறித்து நாம் அவதானம் செலுத்த வேண்டும். இளைஞர்களுக்கு தற்போதுள்ள நடைமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்கின்றார்கள்.

பிரச்னைகளை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இந்த 15 தெரிவுக்குழுக்களுக்கும் தலா 4 இளைஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதில் ஒருவர் இளையோர் பாராளுமன்றத்திலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும். மற்ற மூவரும் போராட்டக் குழுக்கள் மற்றும் பிற ஆர்வலர் குழுக்களைச் சேர்ந்தவர்கள். இந்த நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறையை இளைஞர் அமைப்புகளே தீர்மானிக்க முடியும்.

அத்துடன், குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தலாம் என்று நம்புகிறோம். இப்பணியின் மூலம் இளைஞர்கள் தாங்களாகவே பிரச்னைகளை அறிந்து அதற்கான தீர்வுகளை வழங்க முடியும். அவர்கள் விரும்பினால் தேர்தலில் போட்டியிட முடியும்” என ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.

21ம் திருத்தம் என்று சொல்லி மாகாணசபைகளையும், தேர்தல் முறையையும் மாற்ற பார்க்கிறார்கள்- மனோ கணேசன்

21ம் திருத்தம் என்று சொல்லி மாகாணசபைகளையும், தேர்தல் முறையையும் மாற்ற பார்க்கிறார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“மாகாணசபை முழுமையான அதிகார பரவலாக்கல் தீர்வல்ல. ஆனால், குறைந்தபட்சமாக இருக்கும் அதையும் வெட்டிக்குறைக்க வேண்டுமென சிங்கள கட்சிகள் கூறுகின்றன. அதேபோல் குறைந்தபட்சமாக தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை பாராளுமன்றம், மாகாணசபைகள் ஆகியவற்றுக்கு செல்ல வழிகாட்டும் விகிதாசார தேர்தல் முறைமையையும் மாற்ற வேண்டும் என்ற குரல்கள் தெற்கில் எழுகின்றன.

இது தொடர்பில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் விழிப்பாக இருக்க வேண்டும்” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அனைத்து தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கும் அறைகூவல் விடுத்துள்ளார்.

மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

21ம் திருத்தம் என்று சொல்லி, நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றினால், 13ம் திருத்தம், தேர்தல் முறை ஆகியவையும் மாற வேண்டும் என இங்கே பலர் சொல்ல தொடங்கி உள்ளார்கள்.

தென்னிலங்கை சிவில் சமூகத்துக்கு நல்லாட்சி, சுயாதீன குழுக்கள், நீதிமன்ற சுதந்திரம், ஊடக சுதந்திரம், ஊழல் எதிர்ப்பு போன்ற பல்வேறு முன்னுரிமை பிரச்சினைகள் தொடர்பாக தேசிய கோரிக்கைகள் உள்ளன.

இவற்றை நாங்களும் கடுமையாக ஆதரிக்கின்றோம். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.ஆனால், எங்களது முன்னுரிமை பிரச்சினைகள் வேறு.

ஒரே நாட்டுக்குள் வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அதிகார பகிர்வு, மலையகத்தில் அதிகார பகிர்வு, தோட்ட குடியிருப்புகளை தேசிய நிர்வாக வலையமைப்புக்குள் கொண்டு வரல், மொழி உரிமை, மத வழிபாட்டு உரிமை, அகழ்வாராய்ச்சி, வனம் மற்றும் வனஜீவி திணைக்களங்கள், மகாவலி அதிகாரசபை ஆகியவற்றின் மூலம் வட-கிழக்கில் காணி பிடிப்பு, பெளத்த மயமாக்கல், பயங்கரவாத தடுப்பு சட்டம், அரசியல் கைதிகள், காணாமல் போனோர்… என்று பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

தேசிய கோரிக்கைகளை ஆதரிக்கும் அதேவேளை எமது பிரச்சினைகளையும் நாம் களத்துக்கு கொண்டுவர வேண்டும்.எமது பிரச்சினைகளுக்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

எனவேதான், ஜனாதிபதி முறைமையை முழுமையாக அகற்றுகிறீர்களோ, இல்லையோ, 13ம் திருத்தம், தேர்தல் முறை இவற்றில் கைவைக்க ஒருபோதும் இணங்க மாட்டோம். இருப்பதையும் இழக்க இணங்க மாட்டோம்.

பழைய பிரச்சினையை தீர்க்க போய், புது பிரச்சினைகளை உருவாக்காதீர்கள் என்று நேற்று நான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் உரக்க கூறினேன்.

இந்த நிலைப்பாட்டுடன் உடன்படும்படி, அனைத்து தமிழ், முஸ்லிம் கட்சிகளையும், அக்கட்சி தலைவர்களையும், எம்பீகளையும் தமிழ், முஸ்லிம் அரசியல் ஆய்வாளர்களும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களும், கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்த வேண்டும்” என்றார்.

Posted in Uncategorized

21 ஆவது திருத்த சட்டத்திற்கு பூரண ஆதரவு மைத்திரி அவசர கடிதம்

21 ஆவது திருத்த சட்டத்திற்கு தமது கட்சி பூரண ஆதரவளிப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் பல யோசனைகளை அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவிடம் இந்த திருத்தத்தில் உள்ளடக்குமாறு அவர் முன்வைத்துள்ளார்.

21வது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரியப்படுத்துவதற்கான கலந்துரையாடலும் அண்மையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

Posted in Uncategorized

சீன தூதுவர் அம்பாறை விஜயம் ; 2500 உலருணவுப்பொதிகள் வழங்கி வைப்பு !

சீனக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கிவ் ஜென்கொங் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார் . அவரை அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் வரவேற்று கலந்துரையாடினார்.

அங்கு ,அம்பாரை மாவட்டத்திற்கு சமகால இடர் நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக சீன நாட்டு உதவியாக 2500 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

ஒவ்வொன்றும் 5,000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் 2500 பொதிகள் வழங்கப்பட்டன .

இதில் ,அடையாளமாக 100 பயனாளிகளுக்கு சீன தூதுவரும் அவரது பாரியாரும் அதனை வழங்கி வைத்தார்கள். இந்த சந்திப்பில் ,கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மதநாயக்க மற்றும் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

“இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நல்லுறவு தொடரும் என்றும் எமது முதற் கட்ட உதவி இது. எதிர்காலத்தில் இன்னும் பல உதவிகளை நாட்டுக்கு செய்ய இருக்கிறோம்” என்று சீன தூதுவர் அங்கு கூறியிருந்தார்.

அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் சீன தூதுவருக்கு நன்றி தெரிவித்து “மேலும் இந்த உதவிகளை அம்பாரை மாவட்டத்திற்கு வழங்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

Posted in Uncategorized

ஒருவாரத்துக்குள் 21 இன் இறுதி வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் : வட,கிழக்கு அரசியல் கட்சிகளை பங்கேற்குமாறு நீதி அமைச்சர் அழைப்பு

ஒருவாரகால இடைவெளியில் 21ஆவது திருத்தச்சட்டத்திற்கான வரைவு இறுதி செய்யப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று குறிப்பிட்ட நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வடக்கு, கிழக்கு அரசியல் கட்சிகளும் பங்கேற்று தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள 21ஆவது திருத்தச்சட்டத்திற்கான வரைவினை தயாரித்தவரான அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அடுத்தகட்டச் செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயெ அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்மொழியப்பட்டுள்ள 21ஆவது திருத்தச்சட்ட வரைவு குறித்து அனைத்துக்கட்சிகளினதும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூட்டமொன்று நடத்தப்பட்டது. அந்தகூட்டத்தில் வடக்கு, கிழக்கினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளில் பெரும்பான்மையானவை பங்கேற்கவில்லை.

இதனால், இறுதித் தீர்மானம் இன்றி குறித்த கூட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பிறிதொரு கூட்டம் நடத்தப்படவுள்ளது.

இதன்போது, பெரும்பாலும் வரைவு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறான நிலையில் 6ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவை அனுமதிக்காக குறித்த பத்திரம் சமர்ப்பிக்கப்பவுள்ளது என்றார்.

Posted in Uncategorized

யாழ்ப்பாணத்திலுள்ள மீனவ மக்களுக்கு மண்ணெண்ணெய்

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பெறப்பட்ட 15,000 லீற்றர் மண்ணெண்ணெய் யாழ்ப்பாணத்திலுள்ள மீனவ மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் ராகேஷ் நட்ராஜ் ஆகியோரின் தலைமையில் இந்த விநியோக நிகழ்ச்சி இடம்பெற்றதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு மீனவர்கள், ஊர்காவற்றுறை மீனவர்கள் மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் நயினாதீவு மீனவர்களுக்கு இந்த மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது.

Posted in Uncategorized

என்னையும், குடும்பத்தையும் இந்தியாவுக்கு அழைத்து பாதுகாப்பு தருக – மோடியிடம் இலங்கை கோரிக்கை

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையான பாதுகாப்பு இதுவரையிலும் வழங்கப்படவில்லை என்பதால், தன்னையும் தன்னுடைய குடும்பத்தினரையும் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று, பாதுகாப்பு வழங்குமாறு இந்தியப் பிரதமர் ​ந​ரேந்திர மோடியிடம், இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான விமலவீர திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு தொடர்பில், தான் திருப்தி அடையவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மே 9 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் ஆளும் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 75 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளும் சொத்துக்களும் சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாகோகம போராட்டத்திற்கு 50 நாட்கள் பூர்த்தி: ஆர்ப்பாட்டப் பேரணியை கலைக்க பொலிஸார் நடவடிக்கை

கொழும்பு – கோட்டை உலக வர்த்தக மையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

கோட்டாகோகம போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் 50 நாட்களாகின்றன.

கட்சி சார்பற்ற மக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், கலைஞர்கள் மற்றும் வல்லுநர்கள் உள்ளிட்ட குழுவினர் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இன்று பேரணியொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போதே அவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

ஜனாதிபதி உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என கோரி தொடர்ச்சியாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

பல்வேறு தரப்பினரின் பங்குபற்றுதலுடன், கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து கோட்டாகோகம போராட்டக்களம் நோக்கிய பேரணி இன்று முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட அனைத்து வீதிகளிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதனிடையே, சுதந்திர சதுக்கத்திற்கு அருகிலிருந்து மற்றுமொரு எதிர்ப்பு பேரணி இன்று பிற்பகல் ஆரம்பமானது

கோட்டகோகம போராட்டத்தின் 50 ஆவது நாள் நிறைவை முன்னிட்டு உலக வர்த்தக மையத்திற்கருகிலுள்ள லோட்டஸ் வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர்.

இதன்போது போராட்டக்காரர்கள் மும்மொழிகளிலும் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கோட்டா – ரணில் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும், மஹிந்த மற்றும் தேஷபந்து உள்ளிட்ட மே 9 தாக்குதலின் சூத்திரதாரிகளாக செயல்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுதலை செய்ய வேண்டும், மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் எனும் கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.

இதேவேளை, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் பல நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்று காலை காலி பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக அமைந்துள்ள போராட்டக்களத்தில் மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றதுடன், நகரின் மத்தியில் போராட்டம் வலுப்பெற்றது.

கண்டி, மாத்தளையிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மே 9 தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கோட்டா – ரணிலின் கூட்டு சதியைத் தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளிலும் குருநாகல் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றது .

இதனைத் தவிர திகன, எம்பிலிப்பிட்டிய, பொலன்னறுவை , வலஸ்முல்ல ஆகிய பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.