தமிழர்களின் தீர்வு விடய முன்னெடுப்புகள் சிங்கள இளைஞர்கள் மத்தியிலிருந்தும் உருவெடுத்தால் தான் இந்த நாடு மீட்சி பெறும் – டெலோ பிரதித் தலைவர் பிரசன்னா இந்திரகுமார்

இந்த நாட்டின் மூவின மக்களும் ஒற்றுமையாக இருந்தால் தான் இந்த நாடு செழிப்பாகும். அவ்வாறான ஒற்றுமை வெறுமனே வாயளவில் இல்லாமல் செயற்பாட்டில் உருவாக்கப்பட வேண்டும். தமிழர்களின் தீர்வு விடயத்தில் சிங்கள இளைஞர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதற்கான முன்னெடுப்புகள் சிங்கள இளைஞர்கள் மத்தியிலிருந்தும் உருவெடுத்தால் இந்த நாடு மீட்சி பெறும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினத்தின் 36வது வீரவணக்க நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று எமது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீ சபாரெத்தினம் அவர்களின் 36வது ஆண்டு நினவினை எமது மட்டக்களப்பு காரியாலயத்தில் மேற்கொண்டுள்ளோம். 1986ம் ஆண்டு மே மாதம் 06ம் திகதி யாழ்ப்பாணம் அன்னங்கை என்ற இடத்தில் வைத்து எமது தலைவர் சகோதரப் படுகொலை செய்யப்பட்ட நாள்.

நாங்கள் எமது தலைவரின் பாசறையில் வளர்ந்தவர்கள். இன்றும் அவர் கொள்கைகள் மாறாவண்ணம் எமது மக்களுக்கான செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம். இன்றைய நாட்டின் சூழ்நிலை காரணமாக இன்று தொழிற்சங்கங்கள் இணைந்து ஹர்த்தாhல் அனுஸ்டிக்கும் தினமாகையால் எமது இந்த நிகழ்வினை குறிப்பிட்ட உறுப்பினர்களின் பங்களிப்புடன் மேற்கொண்டுள்ளோம்.

இந்த நாடு இவ்வளவு மோசமான நிலைக்குச் சென்றதற்கு இந்த நாட்டை மாறி மாறி ஆண்டு வந்த இனவாதத் தலைவர்களே காரணம். தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாக போரும் அதன் பின்னரான பொருளாதாரச் சீரழிவுகளும் இடம்பெற்று தற்போது இந்நிலையில் வந்திருக்கின்றது. இன்று இந்த நாடு உலகலாவிய ரீதியில் வறுமைக் கோட்டின் கிழுள்ள நாடுகளின் வரிசையில் முன்னிலையில் இருக்கின்றது.

தமிழர்கள் தங்கள் உரிமைகளை முன்நிறுத்தி தங்கள் போராட்டத்தை எங்கு ஆரம்பித்தார்களோ அதே காலி முகத்திடலிலே இன்று சிங்கள மக்கள் நாட்டின் பொருளாதார பிரச்சனைகளை முன்நிறுத்திப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இன்று இந்த அரசாங்கத்திற்கு எதிராக பொருளாதாரப் பிரச்சனைகளைச் சுட்டிக் காட்டிப் போராடும் சிங்கள மக்கள் தமிழர்களின் உரிமைப் பிரச்சனை தொடர்பிலும் அக்கறை கொள்ள வேண்டும். அதன் வரலாறுகளை அறிந்து ஏற்பட்ட தவறுகளைத் திருத்தவும் முன்வர வேண்டும்.

புழர்ழஅநபுழவவய போராட்டம் நடைபெறுகின்ற பழைய நாடாளுமன்ற கட்டிடம் அதாவது தற்போதைய ஜனாதிபதி செயலகம் முன்பாகவுள்ள காலி முகத்திடலில் தான் தமிழ் மக்களின் உரிமை போராட்டமும் தமிழர்களுக்கு எதிரான வன்முறை வடிவிலான அடக்கு முறையும் அத்திவாரமிடப்பட்டது.

சுதந்திரத்திற்கு பின் காலி முகத்திடல் பல போராட்ட வரலாறுகளை கொண்டிருந்தாலும் முதலாவது போராட்டமாக 1956 தமிழர்களின் சத்தியாகிரக போராட்டம் தான் பதிவாகியுள்ளது. அந்த பூமியில் தான் தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறையிலான வன்முறைகளுக்கும் அடித்தளம் இடப்பட்டது.

தமிழர்களின் உரிமை போராட்டத்தில் முதல் ரத்தம் சிந்திய பூமி காலி முகத்திடல். இலங்கை நாடாளுமன்றத்தில் 1956 யூன் 05 தனிச் சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ் மொழி தேசிய மொழி அந்தஸ்த்தை இழந்;தது. சிங்கள மொழியில் பணிபுரிய முடியாத தமிழ் அரச ஊழியர்கள் பணி இழக்க நேரிட்டது. இச்சட்டதிற்கு எதிராக தமிழரசுக் கட்சி தலைமையில் தமிழர்கள் சத்தியாகிரகப் போராடத்தை முன்னெடுத்தனர். தனிச் சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்ட 1956 யூன் 05ல் தற்போதைய ஜனாதிபதி செயலகமாக இருக்கின்ற அப்போதைய நாடாளுமன்றுக்கு முன்னாலுள்ள காலி முகத்திடலில் ஆயிரகணக்கில் தமிழர்கள் அணி திரண்டனர்.

தந்தை செல்வாவும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களோடு மக்களாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயுதம் தங்கிய இராணுவத்தினரும் காவல்துறையினரும் அங்கு காணப்பட்டனர். அன்றைய பிரதமர் பண்டாரநாயக்க உட்பட மற்றைய சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற மேல்மாடியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களைப் பார்த்தனர். அமைச்சரான கே.பி.ராஜரத்ன மற்றும் சிங்கள மொழி பாதுகாப்புத் தலைவர் எல்.எச்.மேதானந்த ஆகியோரின் தலைமையிலான குண்டர்களால் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சிலர் குண்டுக் கட்டாக தூக்கப்பட்டு அருகிலுள்ள சகதிக்குள் வீசப்பட்டனர். இராணுவம், காவல்துறை முன்னிலையில் இந்த தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டன. காலி முகத்திடல் தமிழர்களின் இரத்தம் சிந்திய பூமியானது.

அமிர்தலிங்கம் இரத்தம் சிந்திய நிலையில் நாடாளுமன்றத்திற்குள் சென்று அடக்கு முறைக்கு எதிராகக் குரல் எழுப்பினார். ஆத்திரம் அடைந்த தமிழ் இளைஞர்களைத் தந்தை செல்வா பொறுமை காக்குமாறு கோரினார். அஹிம்சைப் போராடத்தைக் கைவிட வேண்டாம் என்றும் தமிழர்களைக் கேட்டுக்கொண்டார். தமிழர்கள் இரத்தம் சிந்துவதை வேடிக்கை பார்த்த சிங்கள தலைவர்கள் நாடாளுமன்றின் உள்ளே சென்று தனிச் சிங்களச் சட்டத்தை ஏகமனதாக நிறைவேற்றினர். இந்த வரலாறு எத்தனை சிங்கள இளைஞர்களுக்குத் தெரியும்.

ஏன், இன்று நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என மக்கள் இரவு பகலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுகின்ற இதே காலி முகத்திடலில் தான் 1978ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மக்கள் முன்னிலையில் முதலாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகப் பதவி பிரமாணமும் செய்து கொண்டார்.

இவ்வாறான வரலாற்றுச் சிறப்புமிக்க காலி முகத்திடலில் மக்களின் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள் எத்தனை பேர் மக்களின் இவ்வாறான போராட்டங்களுக்கு செவி சாய்க்கின்றனர், மதிப்பளிக்கின்றனர்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்திலே பல நாடகதாரர்களின் முகத்திரைகள் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளன. வெறுமனே 65 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே மக்கள் பக்கம் நிற்பதென்பது மிகவும் வேதனையான விடயம். இதனை சிங்கள மக்கள் தான் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டின் மூவின மக்களும் ஒற்றுமையாக இருந்தால் தான் இந்த நாடு செழிப்பாகும்.

அவ்வாறான ஒற்றுமை என்பது வெறுமனே வாயளவில் மாத்திரமல்லாமல் செயற்பாட்டில் உருவாக்கப்பட வேண்டும். தமிழர்கள் இத்தனை காலம் மேற்கொண்டு வரும் போராட்டங்களுக்கான தீர்வு விடயத்தில் சிங்கள இளைஞர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதற்கான முன்னெடுப்புகளை சிங்கள இளைஞர்கள் மத்தியில் இருந்து உருவெடுக்கப்பட்டால் தான் இந்த நாடு மீட்சி பெறும். ஆனால் அதற்கு இந்த இனவாதத் தலைவர்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டார்கள்.

எனவே காலி முகத்திடலிலே போராடிக் கொண்டிருப்பவர்களே, அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களே கடந்த காலங்களில் தமிழர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளைத் தடுத்து, தமிழ் மக்களுக்கான விமோசனம் கிடைக்கு வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் இன்று காலி முகத்திடலிலே வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், தமிழ் இளைஞர்கள் நிரம்பியிருப்பார்கள்.

இன்று ஏற்பட்டுள்ள பொருளாதாரக் கஷ்டத்தில் இருந்து மக்கள் மீண்டெழுவது மிகவும் கடினம். கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் என்பது போல சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை தற்போது நாடியிருக்கிறார்கள். அதன் உதவி அந்தளவு விரைவில் கிடைக்கும் என்பதற்குச் சாத்தியம் இல்லை என்று தெரிவித்தார்.

அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு!

அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று மாலை 5.30 மணிக்கு இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதன்போது நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் முக்கியத் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

Posted in Uncategorized

டெலோ முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினத்தின் 36வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினம் அவர்களின் 36வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பில் அமைந்துள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்க காரியாலயத்தில் டெலோவின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்களான சீ.ஜெயந்திரகுமார், பு.ரூபராஜ், ச.கமலரூபன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மறைந்த தலைவரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், தலைவருடன் இணைந்து மறைந்த அத்தனை இயக்க உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தமிழ்நாட்டின் இலங்கைக்கான உதவி யாருக்கு பயன்படும்?-மே பதினேழு இயக்கம் கேள்வி

மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் இலங்கைக்கான உதவி யாருக்கு பயன்படும்? எனக் கேள்வி எழுப்பியுள்ள மே பதினேழு இயக்கம், தமிழர்களின் வரலாற்றுத் தேவையை நிறைவேற்றிடும் வாய்ப்பை தமிழ்நாடு அரசு தவறவிடக் கூடாதெ வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைப் பொருளாதாரப் பிரச்சனையின் அடிப்படை அதன் இராணுவதிற்கு மேற்கொள்ளும் ஆயுத செலவு. உலகின் மிகப்பெரிய இராணுவத்தை கொண்ட சீனா, ரசியா, அமெரிக்க போன்ற நாடுகளில் 1000 பேருக்கு 2 பேர் வீதமே இராணுவத்தினராக இருக்கும் பொழுது, இலங்கையில் 14 பேர் இராணுவத்தில் உள்ளார்கள்.

ஈழத்தின் தமிழர்-தமிழ்இசுலாமியர்-மலையகத்து தமிழ் மக்கள் தொகையை கழித்துவிட்டு பார்த்தால் இது இன்னும் அதிக விகிதமாக இருக்கும். ஏனெனில் இலங்கை இராணுவமென்பது சிங்களர்களுக்கு மட்டுமானது. இந்த கட்டமைப்பினை பாதுகாக்கவும், இதன் இராணுவத் தலைமைகளின் ஊழலாலும் இலங்கை பொருளாதாரம் பலியிடப்பட்டது.

2009 தமிழினப்படுகொலையின் போர் முடிந்து, கடந்த 13 ஆண்டுகளில் ரூ.1,85,000 கோடி இராணுவத்திற்கு செலவு செய்யப்பட்டது. இது இன்றும் தொடர்கிறது. இலங்கை மக்களுக்கு பெட்ரோல், டீசல், உணவு, மருந்து பற்றாக்குறை உள்ளதை கவலையுடன் பார்க்கும் உலகிற்கு, இலங்கை இராணுவத்தில் இதற்கான தட்டுப்பாடு இல்லாதது கண்களில் படுவதில்லை. இன்றும் அதிக செலவு பிடிக்கும் இராணுவ-கடற்படை பயிற்சிகளை செய்கிறார்கள்.

இத்தனைக்கும் இந்தியாவை தவிர வேறு நாடுகள் அருகில் இல்லாத பாதுகாப்பான நாட்டிற்கு அன்றாட இராணுவ பயிற்சி நிகழ்கிறது. மேலும், ஜெர்மனி-பிரான்ஸ்-இங்கிலாந்தை விட பெரிய இராணுவத்தை வைத்திருக்கிறது இலங்கை. இந்த பெரும்படை தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு பகுதியிலேயே நிலை கொண்டுள்ளது. தமிழர்கள் மீது அடக்குமுறை செலுத்துவதோடு தமிழர்களை படுகொலையும் செய்கிறது. மேலும், தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கிறது.

இலங்கையின் இந்த இராணுவக் கட்டமைப்பை கலைக்காமல் இலங்கையின் பொருளாதாரம் மீளாது. இந்த இராணுவத்தை சர்வதேச விசாரணைக்கு ஒப்படைக்காமல் ஈழத்தமிழர்களின் வாழ்வு வளம்பெறாது. இந்த இராணுவத்தையும், அதன் தலைமைகளான இராஜபக்சே குடும்பம், சிங்கள பெளத்த பேரினவாதத்தை எதிர்கொள்ளாமல், இன்று நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முயல்வது சனநாயக விரோதம் என்பது மட்டுமல்ல, இனவெறி கூட்டத்தை பாதுகாப்பதாகிவிடும்.

மேலும், தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் ஒப்பந்தங்களை கைச்சாத்திடாமல், கொல்லபட்ட மீனவர்களின் கொலை வழக்கை நடத்தி இலங்கை கடற்படை மீது நடவடிக்கையை துவக்க தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் கோரிக்கை வைப்பதன் மூலம் நம் மீனவ மக்களின் நலனை முன்னிறுத்த முடியும். இதற்கான சரியான காலகட்டம் இதைத்தவிர வேறென்னவாக முடியும்? இராஜபக்சே சகோதரர்கள், இராணுவத் தளபதிகளை சர்வதேச இனப்படுகொலை விசாரணைக்கு ஒப்படைப்பதும் தமிழ்நாட்டு தமிழர்களின் பெரும்பொறுப்பு.

இந்த நடவடிக்கைகளே ஈழத்தமிழர்களுக்கும், ஈழ இசுலாமியருக்கும், மலையகத் தமிழர்களுக்கும், சிங்கள ஏழைகளுக்கும் நாம் செய்யும் பேருதவியாகும்.

ஏனெனில், இம்மக்களை நெருக்கடிக்குள்ளாக்கிய சிங்கள ஆட்சியாளர்களையும், இன-மதவெறியர்களையும் பாதுகாக்கும் பணியில் இந்திய பார்ப்பனிய-இந்து மதவெறியர்கள் இறங்கியுள்ள நிலையில், அதே நடவடிக்கைகளில் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் ஈடுபடுத்துவது இந்துத்துவ-சிங்கள வெறியர்களை இப்போதிருக்கும் நெருக்கடியிலிருந்து பாதுகாக்கவே செய்யும்.

உலகெங்கும் இனப்படுகொலை செய்த ஆட்சியாளர்களை பொருளாதார நெருக்கடி கொண்டே சனநாயக ஆற்றல்கள் வீழ்த்தினார்கள். இவ்வழியிலேயே இசுரேல் மீதான பொருளாதாரத் தடையை பாலஸ்தீனர்கள் கோருகிறார்கள். இவ்வழியிலேயே தென்னாப்பிரிக்காவின் வெள்ளை இனவெறி அரசை தனிமைப்படுத்தி பலமிழக்கச் செய்து வீழ்த்தினார்கள்.

இது போன்ற நிலைப்பாட்டையே வங்க இனப்படுகொலைக்காக பாகிஸ்தான் மீது இந்தியா கோரியது. கடந்த காலத்தில் தாலிபன்கள் மீது பொருளாதார ஒதுக்குதலை இந்தியாவும், உலகும் செய்தது. இந்நடவடிக்கைகளால் சாமானியர் பாதிக்கப்பட்டாலும், அம்மக்கள் மீதான நெருக்கடிக்கு காரணமான பயங்கரவாத அரச கட்டமைப்பு தகர்க்கப்பட்டது.

ஆகவே, எவ்வித மனித உரிமை-சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மனிதாபிமான உதவியென்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். குற்றவாளி சிங்கள ஆட்சியாளர்களை அப்புறப்படுத்தி தமிழர்களை இராணுவப் பிடியிலிருந்து மீட்டு, தமிழர் பகுதிகளுக்கான சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டாத கட்டுபாடற்ற பொருளாதார உதவி, இராஜபக்சேக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பேருதவியாகும். அதை தவிர்த்து சிங்களப் பேரினவாதத்தின் கழுத்தில் தூக்குக்கயிரை மாட்டும் சந்தர்ப்பத்தையும், வாய்ப்பையும் தமிழ்நாட்டு முதலமைச்சர் இழக்க வேண்டாம்.

சிங்கள பேரினவாதத்தோடு மோதி வீழ்த்தும் வாய்ப்புள்ள இச்சமயத்தை வீணடித்திடாமல் செயல்திட்டத்தை வகுக்கவேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டின் திமுக அரசிற்கு உண்டு.

இந்த வரலாற்று வாய்ப்பை பயன்படுத்தி தமிழீழத் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை, பொதுவாக்கெடுப்பு, அரசியல் சிறைவாசிகள் விடுதலை, தமிழர் பகுதியிலிருக்கும் இராணுவ வெளியேற்றம், காணாமல் ஆக்கப்பட்டோர் மீதான பொறுப்புகூறல், மேலதிகமாக இனப்படுகொலை, போர்க்குற்றம் மீதான சர்வதேச விசாரணைக்கு கோரிக்கைகளை இந்திய அளவில் மாநில கட்சிகளிடத்தில் முன்நகர்த்தும் ஆக்கப்பூர்வ அரசியலே இன்றையத் தேவை.

இவற்றையே தமிழ்நாடு அரசிடம் உலகத் தமிழினம் எதிர்பார்க்கிறது. அதனையே தமிழ்நாடு அரசிடம் மே பதினேழு இயக்கம் கோரிக்கையாக முன்வைக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கோட்டா அரசின் செயற்பாடானது வடக்கிற்கு ஒரு நீதி தெற்கிற்கு ஒரு நீதி – குரலற்றவர்களின் குரல் அமைப்பு

தற்போதைய கோட்டாபய ராஜபக்ச அரசின் செயற்பாடானது வடக்கிற்கு ஒரு நீதி தெற்கிற்கு ஒரு நீதி என்பதைப் பறைசாற்றுகின்றது என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் கோமகன் தெரிவித்தார்.

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை அழைப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கடந்த 30ஆம் திகதி பயங்கரவாத தடுப்புப் பிரிவின் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பானது நீண்ட காலமாக அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறுபட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் அடிக்கடி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்படும் நிலை காணப்படுகின்றது.

அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஏற்கனவே பல தடவைகள் கொழும்பு மற்றும் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் கொழும்பில் இடம்பெறும் போராட்டங்கள் தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் மாத்திரம் அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமை இந்த நாட்டில் வடக்கு கிழக்கிற்கு ஒரு நீதி தெற்கு ஒரு நீதி என்பதைப் பறைசாற்றுகின்றது.

குறிப்பாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் ஆகிய நான் பல தடவைகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளேன். எனவே எனது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாகவே இன்றைய தினம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளேன் என்றார்.

Posted in Uncategorized

உரிமை எனும் குரலினால் உயர்ந்தவரே உலகத்தார் இன்றுவரை நினைத்தனரே இம்மண்ணில்

உரிமை எனும் குரலினால் உயர்ந்தவரே
உலகத்தார் இன்றுவரை நினைத்தனரே
இம்மண்ணில் –  அரியதொரு பணியினை ஆற்றி சென்றாய்
ஆறாத என் துயரும் இன்று வரை தீரவில்லை
கால் வீழாத தமிழினத்தின் வீரன்-நீ
தலைவன் நீ எங்கள் சிறி அண்ணா
விந்தை பலசெய்து நின்றாய்- எமக்கு சிந்தனையால் பல வழிகள் சொல்லி நின்றாய்
சீரான தமிழ் இன வாழ்வுக்காய்
சிறப்பான படையணி நடாத்தி –  அதிரவைத்தாய்

அழகான உன் பயணம் அரங்கேற முன்னே  வெறும் அநியாயம் கொடிகட்டி-  பறந்ததண்ணா
விரைவாக விடுதலை வெல்வோம்  என்றாய்
வீரர்களே அணி திரண்டு வாரீர் என்றாய்
ஆளுமை மிகு தலைவன் நீ – ஈழமண்ணில்
ஆற்றல்மிகு பணிகளையே செய்து நின்றாய்-  தலைவா தமிழா
போற்றல்மிகு பணிகளையே உன் தலைமேல் கொண்டாய்

போராளி அமைப்புகளை ஒன்றாக்கி வைத்தாய் – ஈழப்போர் முறையில் வெற்றி கண்டாய் பேராற்றல்  மிகு தலைவன் ஆனாய்
சிங்கத்தின் வால் தன்னை பிடிக்காமல் –
சிற்றெறும்பின் தலையாக நிமிர்ந்து நின்றாய்
முழு அன்புக்கும் நீதானே
எங்கள் அண்ணா –
தமிழ் பண்புக்கும் நீதானே அன்றும் இன்றும் என்றும்
எம் தலைவர்களே!
சிறைக்குள் நீங்கள் சிந்திய இரத்தம் -எம்
இதய அறைக்குள் அல்லவா புகழிடம்பெற்றது

வன்முறை தழுவா வாழ்வியல் சொன்ன-
அண்ணனின் கண்களில் வேலிடை பாய்ந்தால்
வேலியே பயிரை மேய்ந்திட இங்கே வேரோடு எம்மினம் வீழ்ந்திடுமென்றால்
போரிடும்முறையில்புறமுதுகிடா
தமிழ்த்தேரிடை நெரித்து மனு –  நீதி சொன்ன பரம்பரை நீ
இம்மண்ணில் நிமிர்ந்து உரிமை கேட்டது பிழையா தமிழா !
அன்று சுதந்திரம் வேண்டி அனைவரும் ஒன்றாய் இணைந்து நின்றோம் ஆங்கிலப் படைகள் அநீதிகள் கேட்க வீதியில் இறங்கி விடுதலை கேட்டோம்
விரும்பியோ விரும்பாமலோ சுதந்திரம் பெற்றோம்

எல்லைகள் மாறி எம் மண்ணை இழந்தோம்
புத்தன்காந்திசொன்ன புதிய   பாதை நிமிர்ந்து காத்தோம்
சத்தியம் நேர்மை சாந்தமாக எத்தனை பாதை திறந்து  பார்த்தோம்
கையில் விலங்கு  எம் –  கழுத்தில் சுருக்கு
வீழ்ந்த போதும் நிமிர்ந்து  கேட்டோம்
வேண்டாம் வேண்டாம் நிறுத்து என்று வேண்டித் தானே நாமும் நின்றோம்
எம்இனத்தின்மீது
இறுதிகயிற்றைஇறுக்கும்போது தானே  நாமும் –
இழுத்து அறுத்து போக நினைத்தோம்

வன்முறை மீது காதல் கொள்ள எம்வாழ்வைத்தானே இம்மண்ணில்
தேம்பிக்கேட்டோம்
கூடு பிய்த்துக் கலைத்த போதும் நாங்கள் இம்மண்ணில் –  கூரையற்று அலைந்த போதும்  எம்முயிர் வாழத் தானே உரிமை கேட்டோம்
தீர்க்கவேண்டிய மேசை எல்லாம் தீக்கிரையாக்கிய போதும் கூனிக்குறுகி நாங்கள்-  இந் நாட்டுக் குடிமகன் என்று குழந்தைபோல் அழுதுநின்றோம்
காது கேட்கா செவிடர்கள்  போலே
கண்களற்ற குருடர்களாக – எம்
வாழ்விழக்க வைத்ததும்  – எம்
மண்ணின் வளம் பறிக்கத் துணிந்ததும் – தினம்
களமிறங்கிப் படைகளுக்கு தமிழ் இன காழ்புணர்வை  ஊட்டியதும்
ஈழமண் உயிர்களையே இரக்கமற்று இரையாக்கி பார்த்தது போதும் என்றும் நிறுத்தாமல் போய்க்கொண்டே  இருக்கிறது எம் தலைவர்களே !

நீதிமன்ற வாசலிலே நின்றுரைத்த வரிகளை நீதிமன்றம் காத்திருந்தால் தமிழ் இனம் மீது – போர் அறைந்த பேய்களையே சிறைக்குள்ளே  தள்ளி  இருந்தால்
நாடு திருந்தி இருக்கும்
நம் இனமும்இணைந்திருக்கும்
கோபுரம் போல் புகழ் பறந்திருக்கும்
பாரெங்கும் இந்நாட்டின்  கொடி பார்ப்போர் மனதில் சிறந்திருக்கும்
தலைவர்கள் சொன்ன வழி சரித்திரமாக அமைந்திருந்தால் இன்று சிங்கத்தின் தலைமேல்
சிற்றெறும்பின் –  தலையெல்லாம்
சிகரம் போல் எழுந்திருக்கும்
சிங்கமது வாள் ஏந்தி  இம்மண்ணை இனி சீராக்க முடியாது
சீரான பாதையினை சீக்கிரமே தேடவேண்டும்
சிறி அண்ணா நினைவு  நாளினிலே
இனிய பணி தொடர வேண்டும்

ஒன்றுபட்டு நாமெல்லாம் இன்று ஓரணியில் நிமிர்ந்துநின்று
ஈழதேசத்தை இளையோரிடம் கையளிக்க
இனமானம் காத்து நிற்போம்
வீழ்ந்தும் எழுந்துநிற்கும்
என்றும்
வீழாத தமிழ் தாயை
விரைவாக மீட்டெடுப்போம்
சிறி அண்ணா தந்த சீரான வழியை
சிறப்பாக எம் மனதில் உயர்த்தி வைப்போம்.

                    நன்றி
பிரச்சார செயலாளர்: சொக்கன் நா .கணேசலிங்கம்

நாளை (06) நாடளாவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாளை (06) நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

சுகாதார தரப்பினர், ஆசிரியர்கள், பல்கலைக்கழக தரப்பினர், போக்குவரத்து, வங்கி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நாளைய ஹர்த்தாலுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களிலும் VIP மற்றும் CIP எனப்படும் வணிக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களுக்கான சேவைகளை நாளை முதல் நிறுத்துவதாக இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளைய தினம் முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு தாம் ஆதரவு வழங்குவாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

அனைத்து ஹோட்டல்களிலும் கறுப்புக்கொடியை பறக்கவிடுமாறும் ஹோட்டல்களுக்கு முன்பாக கவனயீர்ப்பை முன்னெடுக்குமாறும் ஊழியர்களிடம் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, நாளைய தினம் நோயாளர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டாலும் ஹர்த்தாலுக்கு தமது ஆதரவை வழங்குவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர் சங்கமும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்குவதற்காக 011 263 5675 எனும் விசேட தொலைபேசி இலக்கத்தை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனிடையே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்புகளில் நாளை நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

வட மாகாண இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், மட்டக்களப்பு மாவட்ட விவசாய சம்மேளனம், ஏறாவூர் வர்த்தக சங்கம் மற்றும் இந்து லங்கா சமூக அமைப்பு என்பன இந்த அழைப்பை விடுத்துள்ளன.

ஒரே குறிக்கோளோடு ஹர்த்தாலுக்கான ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக இந்து லங்கா சமூக அமைப்பின் தலைவர் கிருஷ்ணகோபால் திலகநாதன் தெரிவித்தார்.

இதனிடையே, மட்டக்களப்பிலுள்ள அனைத்து வர்த்தகர்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென ஏறாவூர் வர்த்தக சங்கத்தின் ஏ.எம். அஸ்மி கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மக்கள் விடுதலை முன்னணி இன்று யாழ். நகரத்தில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தது.

Posted in Uncategorized

27 ஆவது நாளாகவும் தொடர்கின்றது ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டங்கள்

கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக முன்னெடுக்கப்படும் மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று(05), 27 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலகி, நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டுமென கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் வருகைதந்த மக்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

இதனிடையே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சரவையை பதவி விலகுமாறு வலியுறுத்தி அலரி மாளிகைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் மைனா கோ கம போராட்டம் இன்று(05) 11 ஆவது நாளாக தொடர்கின்றது.

இந்த போராட்டத்தில் ஒருவர் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பவர்கள் வெறும் 65 பேர் மாத்திரமே: செல்வம் அடைக்கலநாதன்

மக்கள் இன்று தமது வாழ்வியலை கொண்டு செல்லமுடியாமல் அன்றாடம் வீதியில் நின்று அரசாங்கத்தை வீட்டிற்குச் செல்லுமாறு வலியுறுத்தும் நிலையில், 148 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருகின்றமை மக்களுக்குச் செய்யும் துரோகமாகும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டை வளமிக்க பூமியாகப் பாதுகாத்துக்கொள்ள மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் மேற்கொண்டு வருவதுடன், ஊழல் மோசடி நிறைந்த ஆட்சியாளர்களை வீட்டுக்குச் செல்லுமாறும் வலியுறுத்துகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மக்கள் வாக்குகளைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள் பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதில் தமது உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மக்கள் எப்பாடுபட்டாலும் அதைப்பற்றி சிந்திக்காது அரசாங்கத்தைப் பாதுகாத்தே தீருவோம் என 148 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கங்கணம் கட்டி நிற்பது வாக்களித்த மக்களுக்குச் செய்யும் பெரும் துரோகமாகும்.

இந்த நாடாளுமன்றத்தில் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே மக்களுக்கான பிரதிநிதிகள் என்பதனை வெளிப்படுத்தியுள்ளனர்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலி­னுக்கு நன்றி தெரி­வித்­து பிரதமர் மஹிந்த கடிதம்

நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்தமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்­பி­வைத்­துள்ளார்

குறித்த கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

தமி­ழக சட்­டப்­பே­ர­வையில் தாங்கள் கொண்­டு­வந்த தனித் தீர்­மா­னத்­தின்­படி இலங்­கையில் தற்­போது நிலவி வரும் கடும் பொரு­ளா­தார சூழ்­நி­லையில் கடும் சிர­மத்­திற்கு ஆளாகி உள்ள மக்­க­ளுக்கு தமிழ்­நாட்­டி­லி­ருந்து உணவு, அத்­தி­யா­வ­சியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்­துகள் அனுப்பி வைக்­கப்­படும் என்று தாங்கள் அறி­வித்­துள்­ளமை தங்­க­ளது நல்­லெண்­ணத்தைக் குறித்­து­நிற்­கின்­றது.

இலங்கைப் பொரு­ளா­தார நெருக்­க­டியை அண்டை நாட்டுப் பிரச்­சி­னை­யாகப் பார்க்­காது மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் நோக்கும் தங்­க­ளிற்கும் தமிழ்­நாடு மாநில அரசிற்கும் இலங்கை மக்கள் சார்பாக மிகுந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No description available.