சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளை (20) முதல் மூடப்படுகிறது

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நாளை (20) இரவு முதல் மீண்டும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சுத்திகரிப்பு செயற்பாடுகளுக்கு போதுமான மசகு எண்ணெய் இல்லாததால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிபபிட்டார்.

பல நிறுவனங்களில் மசகு எண்ணெய்க்கு முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், அந்த மசகு எண்ணெய் கிடைக்கும் திகதி குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முற்பதிவு செய்யப்பட்ட மசகு எண்ணைய் கிடைத்தவுடன், சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்தியாவிலிருந்து வருகை தரும் 20,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளது.

Posted in Uncategorized

“ஜனாதிபதியை விமர்சித்த தொகுப்பாளினி இடைநீக்கம் ” – சிவில் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சியா?

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் நாட்டு மக்கள் வெளிப்படையாக விமர்வித்து வருகின்றனர்.

அந்த வகையில் மக்களின் பரிதவிப்புகளை பிரதிபலித்து தனது தனிப்பட்ட முகநூல் பக்கத்தில் பதிவிட்ட காரணத்திற்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை சேர்ந்த பெண் அறிவிப்பாளர் ஒரு வர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளமை சிவில் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் அரசின் செயல் என கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
ரூபவாஹினியில் பல்வேறு சிங்கள நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய பிரபலமான அறிவிப்பாளினி பரமி நிலேப்தா ரணசிங்ஹவே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

தன்னைப் பணி நீக்கியமை தொடர்பாக பரமி நிலேப்தா ரணசிங்ஹ அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், ‘ஒரு குடிமகன் என்ற ரீதியில் எனது பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் கேள்விக்குறியாகும் போது சமூகப் பொறுப்பாக எனது நலனையும் துயரத்தையும் பற்றி விசாரிப்பவர்களுக்காக நான் இந்தக் குறிப்பை இடுகிறேன்.

நான் பெரும்பான்மையான இலங்கையர்களின் வாழ்வு குறித்து உணர்திறன் கொண்டிருப்பதால் இன்று முதல் தொலைக்காட்சி வளாகம் எனக்கு தடை செய்யப்பட்ட இடமாக மாறியுள்ளது. இது ஒரு நிறுத்தம் இல்லை ஒரு திருப்பம் என தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தொலைக்காட்சி தொகுப்பாளரின் இடைநிறுத்தம் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

இதேவேளை சுதந்திர ஊடகவியலாளர் ராகுல் சமந்தவை கடமையை செய்ய விடாது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா அழுத்தம் பிரயோகித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக சுதந்திர ஊடக இயக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பரமி நிலேப்தி, தனது முகநூல் பதிவுகள் மூலம் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சிப்பதால் தொலைக்காட்சி சேவையில் பணியை தொடர வேண்டாம் என ஜனாதிபதி அலுவலகம் தமக்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பரமி நிலேப்னா ரணசிங்கவை பணி இடைநிறுத்தம் செய்ய இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் எடுத்த தீர்மானத்தை சுதந்திர ஊடக இயக்கம் கண்டித்துள்ளது.

ஊடகவியலாளர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள் என்ற வலுவான சமிக்ஞையை இந்த சம்பவங்கள் வெளிகொனர்வதாக ஊடக இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

கருத்து சுதந்திரம், தொலைக்காட்சி தொகுப்பாளரின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல். அத்தோடு, இலங்கையில் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் அப்பட்டமான முயற்சியென சுதந்திர ஊடக இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஊடக சுதந்திரத்தை அடக்கியாள ஊடக உரிமையாளர்களுக்கோ அல்லது அரசியல் அதிகாரிகளுக்கோ இடமளிக்க முடியாது என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

Posted in Uncategorized

உக்ரைனிற்கு ஆதரவாக இலங்கை குரல்கொடுக்க வேண்டும்- உலக நாடுகளின் தூதுவர்கள் கூட்டாக வேண்டுகோள்

உக்ரைனிற்கு ஆதரவாக இலங்கை குரல் கொடுக்க வேண்டும் என மேற்குலக நாடுகளின் தூதுவர்களும் அமெரிக்கா ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அறிக்கையொன்றில் அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
இலங்கையில் உள்ள தூதரகங்களின் தலைவர்கள் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கம் எங்களுடன் இணைந்து உக்ரைனிற்கும் சர்வதேச சட்டத்திற்கும் ஐநா பிரகடனத்திற்கும் வாய்மொழி மூல ஆதரவை வழங்கவேண்டும் என தூதுவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தங்கள் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
இறைமையுள்ள ஜனநாயக நாடான உக்ரைன் மீதான ரஸ்யாவின் தூண்டப்படாத நியாயமற்ற சட்டவிரோத படையெடுப்பை நாங்கள் மிகவும் கடுமையாக கண்டிக்கின்றோம்.

இந்த மூர்க்கத்தனமான தாக்குதல்ஐநாசாசனம் உட்பட சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறும் செயலாகும். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் மனிதாபிமான பேரழிவை ஏற்படுத்தியுள்ளதை உலகம் அச்சத்துடன் பார்த்தவண்ணமுள்ளளது.
ரஸ்யா பொதுமக்கள் வாழும் பகுதிகள் கட்டமைப்புகள் மீதான தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதன் காரணமாக பொதுமக்களிற்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

பெண்கள்குழந்தைகள் முதியர்வர்கள் உட்பட மில்லியன் கணக்காண மக்கள் அயல்நாடுகளிற்கு அகதிகளாக தப்பிவெளியேவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பெண்கள்குழந்தைகள் முதியர்வர்கள் உட்பட மில்லியன் கணக்காண மக்கள் அயல்நாடுகளிற்கு அகதிகளாக தப்பிவெளியேவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக கடந்த 70 வருடங்களில் மிகவேகமாக அகதிகள் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ரஸ்யாவின் படையெடுப்பு என்பது அமைதியான நாட்டின் மீதான தூண்டப்படாத நியாயமற்ற நடவடிக்கையாகும். உலகில் சமாதானம் அமைதி என்பவற்றிற்கான அடித்தளமாக உள்ள இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கு ரஷ்யா அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கியநாடுகள் சாசனம் கடந்த காலங்களில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் அது அமைதி பாதுகாப்பு அபிவிருத்தி நீதி சர்வதேச சட்டங்கள் மற்றும் மனித உரிமைகளின் பக்கம் உறுதியாக நி;ன்றுள்ளது. சர்வதேச சமூகம் உக்ரைனிலும் அனைத்து மனித குலத்திற்கும் இந்த விழுமியங்கள் உறுதிப்படுத்தப்படுவதை தனது அதிகாரத்தை பயன்படுத்தி உறுதி செய்யவேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கைக்கு நாங்கள் முழுமையான ஆதரவை வெளியிடுகின்றோம்.

உக்ரைனிற்கான மிகப்பெரும் ஆதரவு காரணமாக ரஸ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைன்மீதான ரஸ்ய அரசாங்கத்தின் தாக்குதலை கண்டிப்பதில் நாங்கள் ஐக்கியப்பட்டுள்ளோம். மார்ச் இரண்டாம் திகதி ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் 141 நாடுகள் ரஸ்யாவை கண்டிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

இது ரஸ்யா சர்வதேச சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. ரஸ்யாவிற்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக உக்ரைனிற்குஆதரவளிக்கும் நாடுகள் முன்னர் ஒருபோதும் இடம்பெறாதவகையில் ரஸ்யாவிற்கு எதிராக இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதித்துள்ளன.

உக்ரைனிற்கு எதிரான தாக்குதல்களை தொடரும் ரஸ்யாவின் திறனை குறைப்பதும்,உக்ரைனிற்கு எதிரான விரோதப்போக்கிலிருந்து ரஸ்யாவை பின்வாங்க செய்வதற்கான அழுத்தத்தை கொடுப்பதுமே இதன் நோக்கம்.

வங்கிகள் முதல் எண்ணெய் நிறுவனங்கள் கால்பந்தாட்ட கழகங்கள் வரை புட்டினின் நடவடிக்கைகளிற்கு விளைவுகள் இருக்கும் என்பதையும் அவரது அரசாங்கம் இனிமேல் சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியாக விளங்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

உக்ரைனின் சகாக்களும் நண்பர்களும் குறிப்பிடத்தக்க அளவு மனிதாபிமான மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கியுள்ளன.பல நாடுகள் உக்ரைனிலிருந்து தப்பிவருபவர்களிற்கு தங்கள் எல்லைகளைதிறந்துள்ளன. தனது படையெடுப்பை நியாயப்படுத்தும்விதத்தில் ரஸ்யா பொய்யான கதைகளை வெளியிடுகின்றது.

ரஷ்யா அதன் படையெடுப்பை நியாயப்படுத்தும் ஒரு போலியான முயற்சியில் உக்ரைன் அரசாங்கத்திற்கு எதிரான போலியான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.
அதன் ஜனநாயக அயல்நாடுகளை அழிக்க நினைக்கும் ரஸ்யாவின் பிரச்சாரம் எந்த நியாயமும் இல்லாதது.

நேட்டோ ஆத்திமூட்டுகின்றது என ரஸ்யா பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றது.நேட்டோ எப்போதும் ஒரு தற்பாதுகாப்பு கூட்டணியாகவே இருந்துவந்துள்ளது,அதனால் ரஸ்யாவிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.
நாங்கள் இலங்கை உக்ரைனிற்கும் சர்வதேச அமைதிமற்றும் பாதுகாப்பிற்கும் ஆதரவளிக்கவேண்டும் என வேண்டுகோள்விடுக்கின்றோம்.

இலங்கையில்உள்ள தூதரகங்களின் தலைவர்கள் என்ற அடிப்படையில் இலங்கைஅரசாங்கம்உக்ரைனிற்கும் ஐநா சாசனம் சர்வதேச சட்டத்திற்குமான குரல்களுடன் இலங்கை இணைந்துகொள்ளவேண்டும் என நாங்கள் வலியுறுத்திக்கேட்டுக்கொள்கின்றோம்.

ரஸ்யா தனது மோதல்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என வேண்டுகோள்விடுப்பதில்இலங்கை எங்களுடன் இணைந்துகொள்ளவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.உக்ரைனின் இறைமை மீண்டும் நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்வதற்காக நாங்கள் உலகெங்கிலும் உள்ள எங்கள் சகாக்கள் நண்பர்களுடன் இணைந்து பாடுபடுவோம்.

எதிர்ப்பு போராட்டத்தையடுத்து கந்தரோடை விகாரை வழிபாட்டை இரத்துச் செய்தார் மகிந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் – கந்தரோடை விகாரைக்கு வழிபடுவதற்காக வரவிருந்த தனது திட்டத்தை கைவிட்டு உள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் மத ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்நிலையில் அதன் ஒரு அங்கமாக கந்தரோடை விகாரைக்கும் சென்று வழிபட தீர்மானித்திருந்தார்.

கந்தரோடை விகாரையில் பிரதமர் அடிக்கல் நாட்டுவதாக செய்தி வெளியான நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும் தமிழ் தேசிய மக்கள் முன்ணணியும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீடிரென கந்தரோடை விகாரைக்கான தனது விஜயத்தை ரத்து செய்தார்.

இதனையடுத்து அப்பகுதியில் பிரதமரது பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் அங்கிருந்து விலகிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.

கடதாசி இல்லை – பரீட்சைகளும் இல்லை

கடதாசி உள்ளிட்ட அச்சிடலுக்கு தேவையான பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக தவணை பரீட்சைகளை நடாத்தும் திகதிகளில் மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் இறுதி ஆண்டு பரீட்சையை நடாத்துவதற்கான வினாத்தாள்களை அச்சிடுவதற்கு கடதாசி உள்ளிட்ட அச்சிடலுக்கு தேவையான பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேல் மாகாண கல்வி பணிப்பாளரால் ஏனைய அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் இது தொடர்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு ஏனைய மாகாண கல்வி பணிப்பாளர்களிடம் குறித்த கடிதம் மூலம் மேல் மாகாண கல்வி பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கமைய 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புக்களுக்கான இறுதி தவணை பரீட்சைகளை நடத்துவதற்கான திகதிகளில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய மேல் கல்வி திணைக்களம் வினாத்தாள்களுக்கமைய நடத்தக் கூடிய அனைத்து பாடசாலைகளிலும் குறித்த நேர அட்டவணைக்கமைய பரீட்சையை நடத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4,9,10 மற்றும் 11 ஆம் வகுப்புக்களுக்கான ஆண்டிறுதி பரீட்சையை ஏப்ரல் விடுமுறையின் பின்னர் நடாத்துவதற்கு மேல் மாகாண கல்வி திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Posted in Uncategorized

சர்வதேச நீதி பொறிமுறை முன் இலங்கை அரசை பாரப்படுத்துவதன் மூலமே தமிழ் மக்களுக்கான நீதியை பெற முடியும்: சுரேந்திரன்

சர்வதேச நீதிப் பொறிமுறை முன் இலங்கை அரசை பாரப்படுத்த செயற்படுவதன் மூலம்தான் தமிழ் மக்களுக்கான ஒரு பரிகார நீதியையும், மீள நிகழாமையையும், உறுதிப்படுத்த முடியும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு தொடர்பாகக் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மனித உரிமைப் பேரவையின் அண்மையில் நடந்த அமர்வில் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆற்றிய உரை ஒரு கேளிக்கை விருந்தாகவே அமைந்துள்ளது.

அரசியல் யாப்பில், மனித உரிமை பாதுகாப்பதற்கான விடயங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும், சுயாதீன நீதி பொறிமுறையினால், அவை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

அரசியல் யாப்பிலே உள்வாங்கப்பட்ட விடயங்கள் எவற்றை அவர்கள் நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை அவர் கூற தவறிவிட்டார்.

யுத்தக் குற்றங்களுக்கான தண்டனையின்மை நீடிக்கிறது. விசாரணைகள் நடத்தப்படவில்லை. குறிப்பாக, அரசியல் யாப்பிலே அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான பொது மன்னிப்பு பொறிமுறை ஒன்று ஜனாதிபதியின் அதிகாரத்திற்குக் கீழ் வருகின்றது.

அதில் பல்லாண்டு காலமாக இருக்கக்கூடிய எங்களுடைய அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குப் பலமுறை கோரிக்கைகள் வைத்தும் அவர்களை விடுதலை செய்யாமல் யுத்த குற்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்திருக்கிறார்கள்.

இதுதான் மனித உரிமையைப் பேணுவதற்கு அரசியல் யாப்பிலே உள்ள ஏற்பாடா? அல்லது அதன் அடிப்படையில்தான் மனித உரிமை கோட்பாடுகளை அரசாங்கம் மதித்து நடப்பதற்கான எடுத்துக்காட்டா? என்ற கேள்வி சர்வதேச சமூகம் முன் எழுகின்றது.

அடுத்ததாக யுத்தத்துக்குப் பின்னரான பரிகார நடவடிக்கைகளை தாங்கள் முன்னெடுத்து வருவதாகவும், பொறுப்புக் கூறல், நல்லிணக்க நடவடிக்கைகள், உள்ளக பொறிமுறை ஊடாக நடைமுறைப்படுத்தி வருவதாகவும் கூறி இருக்கிறார்.

உள்ளக பொறிமுறையின் ஊடாக அரசாங்கம் முன்னெடுத்த நல்லிணக்க நடவடிக்கைகள் என்ன? பொறுப்புக் கூறல் நடவடிக்கை என்ன? என்பதை அவர் தெளிவாகக் குறிப்பிடத் தவறியுள்ளார்.

எந்த விதமான நல்லிணக்க நடவடிக்கைகளோ, பொறுப்பு கூறலுக்கான எந்தவித ஆரம்பக்கட்ட முயற்சியோ, அரசாங்கத்தால் கொள்ளப்படவில்லை.

மாறாக நினைவேந்தல் நிகழ்வுகளையும் நீதி கோரி அமைதியாக நடத்தப்பட்ட ஜனநாயக போராட்டங்களையும் கொடூரமான முறையில் அரசால் தடுக்கப்படுவது நல்லிணக்க நடவடிக்கையா? மேலும் சர்வதேச சமூகம் வலியுறுத்திய பல விடயங்களை அரசாங்கம் முன்னெடுக்காமல், தவிர்த்து வருகிறது.

குறிப்பாக ஐ.நாவோடு தாங்கள் ஒன்றிணைந்து செயலாற்றத் தயார் என கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்ற ஜி.எல்.பீரிஸ் ஐ.நா தங்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துகின்ற பிரேரணையில் உள்ள சரத்துக்களை தாங்கள் முற்று முழுதாக நிராகரிப்பதாக அதே உரையிலேயே கருத்து தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக இலங்கையினுடைய விருப்பம் இல்லாமலேயே கடந்த நாற்பத்தியாறு பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஆதாரங்களைத் திரட்டும் நடவடிக்கையை தாங்கள் நிராகரிப்பதாகவும், அது உள்ளக பொறிமுறையின் ஊடாக பொறுப்பு கூறல் நல்லிணக்க முயற்சியைப் பாதிக்கிறது என்பதையும் அவர் தன்னுடைய உரையிலே கூறியிருக்கிறார்.

இது மிகவும் வேடிக்கையானது மாத்திரமல்ல ஐநா மனித உரிமை பேரவையிலே அங்கத்துவம் வகிக்கின்ற நாடுகளைக் கூட ஒரு கேளிக்கையாக எள்ளி நகையாடி இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.

எந்த விதமான பொறுப்புக் கூறலையும், நல்லிணக்க நடவடிக்கைகளையும் முன்னெடுக்காத அரசாங்கம் யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களைத் திரட்டுகின்ற தாங்கள் நிராகரிப்பதாகக் கூறி இருக்கிறார்.

யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் நடைபெறவில்லை என்றும் தெரிவிக்கின்றார். யுத்த குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடைபெறவில்லை என்றால், அதற்கான விசாரணை பொறிமுறையை எதிர்கொள்வதில் எதற்கு இவர்கள் தயக்கம் காட்ட வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது.

அமெரிக்கப் பதிவிடப் பிரதிநிதியிடம் வெளிநாட்டுத் தலையீடுகளை தாங்கள் விரும்பவில்லை என்றும், அந்த அழுத்தங்களை நிராகரிக்கிறோம் என்றும் கூறியிருக்கிறார்.

ஆகவே முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைத் தனது உரையிலே கூறிக் கொண்டு மனித உரிமை யுத்த குற்றங்கள், மனித உரிமை மீறல், மற்றும் பொறுப்பு கூறல், நல்லிணக்கம் போன்ற முக்கியமான விடயங்களை ஐ.நா மனித உரிமை பேரவை பரிந்துரைத்தும் அவற்றை நிராகரித்ததோடு மாத்திரமல்ல அது சார்ந்து இவர்கள் எந்த விடயத்திலும் செயற்படவும் இல்லை என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இனிமேலும் அரசாங்கம் செயற்பட மாட்டார்கள் என்பதை தன்னுடைய உரையினூடாக வெளிநாட்டு அமைச்சர் தெளிவுபடுத்தியிருப்பது இலங்கையைத் தான் காப்பாற்றுவதாக அல்லது இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கான உரையாகத்தான் நிகழ்த்தியிருப்பது போன்று அவர் காட்டியிருப்பதுதான் வேடிக்கையாக இருக்கின்றது.

ஆகவே அவருடைய இந்த கருத்து இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமையைப் பேணுகின்ற நடவடிக்கைகள், அதே போன்று யுத்தக் குற்றங்கள் மனித உரிமை மீறலுக்கான, நீதிப் பொறிமுறையை இவர்கள் எப்போதும், உள்ளக பொறிமுறையின் ஊடாக வழங்கப் போவதில்லை என்பதற்குச் சர்வதேச சமூகத்துக்குச் சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது.

தாமாக வலிந்து அவற்றைச் செயல்படுத்தப் போவதில்லை என்பதையும், சர்வதேச நாடுகளினுடைய தலையீடு இல்லாமல் அல்லது ஐநாவினுடைய தலையீடு இல்லாமல் சர்வதேச நீதி பொறிமுறைக்கு முன்னால் இலங்கையை நிறுத்தாமல் இவர்கள் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப் போவதில்லை என்பதை அவருடைய உரை தெளிவாக எடுத்துக் காட்டி இருக்கிறது.

ஆகவே இதன் அடிப்படையில் சர்வதேச சமூகம் காத்திரமான, உறுதியான முறையிலே சர்வதேச நீதிப் பொறிமுறை முன் இலங்கை அரசை பாரப்படுத்த செயற்படுவதன் மூலம்தான் தமிழ் மக்களுக்கான ஒரு பரிகார நீதியையும், மீள நிகழாமையையும், உறுதிப்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஒரு இலட்சம் தானா எனது பிள்ளையின் பெறுமதி- கோகிலவாணி கேள்வி

ஒரு இலட்சம் தானா எனது பிள்ளையின் பெறுமதி என கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி இராமநாதன் கோகிலவாணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகள் சங்க அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று எங்களுடைய போராட்டம் 5 வருடங்களையும் கடந்து வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஒரு இலட்சம் ரூபா வாழ் வாதாரமும், மரணச்சான்றிதழும் மரணச்சான்றிதழை பெற்றுக்கொள்ள விரும்பாதவர்களிற்கு காணாமல் போனோர் சான்றிதழ் வழங்குவதாகவும் நீதி அமைச்சர் கூறியிருக்கின்றார்.

எங்களது உறவுகள் கிடைக்கும் வரை போராடிவரும் எமது போராட்டத்தை மழுங்கடிக்கவே இந்த தீர்வை அவர்கள் கொண்டு வந்திருக்கின்றார்கள். பொருட்களின் விலைகள் அதிகரித்து உணவின்றி மக்கள் உயிரிழக்கும் வேளையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கு ஒரு இலட்சம் ரூபா வாழ்வாதாரம் வழங்க முன்வந்திருக்கின்றார்.

இந்த வேளையில் அவர் இவ்வாறான வாழ்வாதாரத்தை கொடுக்க முன்வந்திருப்பது தொடர்பில் எமக்கு விளங்கவில்லை. எமது போராட்டத்தை மழுங்களிடிக்கவே இவ்வாறு உதவ முன்வந்துள்ளதாக நாங்கள் விளங்கிக்கொண்டிருக்கின்றோம். எமது உறவுகள் இவர்களது ஒரு லட்சம் ரூபாவை வாங்குவதற்கும், மரணச் சான்றிதழை பெற்றுக் கொள்ளவும் தயாராக இல்லை. இவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளை மீட்டுத்தர வேண்டும். இவர்களால் தரமுடியாதுப போனால் சர்வதேசம் எமது உறவுகளை கண்டுபிடித்து தர வேண்டும்” என்றார்

நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் கோட்டாவுடன் பேசுங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேசவுள்ள விடயங்கள் தொடர்பில் நிகழ்ச்சி நிரல் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில்   இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கௌரவமான தீர்வு வழங்க இந்த அரசாங்கம் தயாராக இல்லை. தமிழ் மக்களை இந்த அரசாங்கத் தரப்பினர் மிகவும் மோசமாகத் தான் நடத்துகின்றனர். ஒரு பேச்சுவார்த்தைக்கான சரியான ஒரு சூழலைக்கூட இந்த அரசாங்கத்தால் உருவாக்க முடியவில்லை.

ஒரு பக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துக் கொண்டு மறுபக்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் மரணச் சான்றிதழும், ஒரு இலட்சம் ரூபா பணமும் வழங்க இந்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை பாதிக்கப்பட்ட மக்களை மேலும் மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கக் கூடிய விடயம்.

எனவே, காணி கபளீகரம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம், பொருளாதார நெருக்கடி குறித்தும் ஜனாதிபதியுடன் பேச்சுக்கு செல்லவுள்ள தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேசவுள்ள விடயங்கள் தொடர்பில் நிகழ்ச்சி நிரல் ஒன்றைத் தயாரிக்க வேண்டும்.

என்னென்ன அமைச்சு சார்ந்த விடயங்களில் பிரச்சினைகள் உள்ளது என்பதை தீர்மானித்து முன்னரே ஜனாதிபதியிடம் அறிக்கையாக கொடுக்கும்போது அது சார்ந்த அமைச்சர்களும் பேச்சுவார்த்தையில் பங்கேற்று ஒரு தீர்க்கமான முடிவொன்றை பேச்சுவார்த்தையில் பெற்றுக்கொள்ள முடியும்” என்றார்.

கடந்த 15ஆம் திகதி கூட்டமைப்பினருடான சந்திப்பு ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் திடீரென் குறித்த சந்திப்பு ஒத்திக்கவைக்கப்படுவதாக ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோட்டாபய ராஜபக்சவுக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியாக ஏற்பட்டிருக்கும் நெருக்குவாரங்களில் இருந்து தன்னை விடுவித்து கொள்வதற்கான சூழ்ச்சியாகவே இச்சந்திப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதால் அதனை புறக்கணிக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டிய ரெலோ, இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள விவகாரங்கள் தொடர்பில் நிபந்தனை அடிப்படையில் பேச்சுக்கு செல்ல வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாதபட்சத்தில் தமது கட்சி புறக்கணிப்பதாகவும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை சர்வதேச நாணயநிதியம் ஆரம்பிக்கவுள்ளது-கெரி ரைஸ்

இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான திட்டமொன்று குறித்து இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை சர்வதேச நாணயநிதியம் ஆரம்பிக்கவுள்ளது என அதன் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நுண்பொருளாதார ஸ்திரத்தன்மையை மீண்டும் ஏற்படுத்துவதற்கும்,கடன் ஸ்திரதன்மையை உறுதி செய்வதற்கும் வலுவூட்டப்பட்ட சமூகப்பாதுகாப்பின் மூலம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களை பாதுகாப்பதற்கும் நம்பகதன்மை மிக்க ஒத்திசைவான மூலோபாயத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை தொடர்பான அனைத்து சாத்தியப்பாடுகள் குறித்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என ரைஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியம் சமீபத்தில் இலங்கையுடனான தனது கலந்தாலோசனைகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு நாணய இருப்பினை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக சந்தையால் தீர்மானிக்கப்பட்ட நெகிழ்வான நாணயமாற்று வீதத்தை பின்பற்றவேண்டும் என அதன் நிறைவேற்று சபை தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

காகித தட்டுப்பாடு: பரீட்சைகளை நடத்துவதில் சிக்கல்

காகிதம் மற்றும் மூலப்பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டினால் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கான இறுதி தவணை பரீட்சைகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் தௌிவுபடுத்தி, அனைத்து வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் விசேட கடிதமொன்றை மாகாண கல்வி பணிப்பாளர் ஶ்ரீலால் நோனிஸ் அனுப்பி வைத்துள்ளார்.

6, 7, 8 ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி மதிப்பீட்டு நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த கடிதத்தில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், மேல் மாகாண கல்வி திணைக்களத்தின் வினாத்தாள்களுக்கு அமைவாக, தவணைப் பரீட்சையை நடத்த முடியுமான அனைத்து பாடசாலைகளிலும் பரீட்சை அட்டவணைக்கமைய பரீட்சைகளை நடத்த முடியும்.

பரீட்சைகளை நடத்துவதில் சிக்கலை எதிர்நோக்கும் பாடசாலைகளில், வினாத்தாள்கள் மற்றும் பரீட்சை அட்டவணை என்பனவற்றை பாடசாலை மட்டத்தில் தயாரித்து பரீட்சைகளை நடத்த முடியுமென குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 04, 09, 10, 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகளை ஏப்ரல் மாத விடுமுறையின் பின்னர் நடத்தவும் மேல் மாகாண கல்வி பணிப்பாளரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.