இலங்கை தொடர்பில் பிரிட்டனின் பயண ஆலோசனை தவறானது: பீரிஸ்!

இலங்கைக்கான பயண எச்சரிக்கையை விடுத்து பிரிட்டன் விடுத்துள்ள அறிவிப்பில் தவறுகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய கொவிட் தொற்றுநோயின் விளைவாக நாட்டின் சுற்றுலாத் துறை புத்துயிர் பெறத் தொடங்கியுள்ள மற்றும் அதன் பொருளாதாரத்தை மறுசீரமைக்க வெளிநாட்டுப் பணம் தேவைப்படும் வேளையில், பயண ஆலோசனையில் தவறான தன்மைகள் நிலவும் பொருளாதார பாதிப்புகளை அதிகரிக்கக்கூடும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் இலங்கையிலுள்ள நடைமுறை யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில் இலங்கை தொடர்பான பயண ஆலோசனையை திருத்துமாறும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள பிரிட்டன் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்து அமைச்சர் பீரிஸ் இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு நிபந்தனைகளை விதிக்க வேண்டும் : சர்வதேச நாணய நிதியத்திடம் 5 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கோரிக்கை

பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடவிருக்கும் நிலையில், கடன் உள்ளிட்ட உதவிகளை வழங்குவதற்குப் பதிலாக போர்க்குற்றங்கள் மற்றும் கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல், உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை நிலைநாட்டல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட நிபந்தனைகளை விதிக்கவேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்திடம் 5 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

வட அமெரிக்க தமிழ்ச்சங்கங்கள் பேரவை, இலங்கை தமிழ்ச்சங்கம், தமிழ் அமெரிக்கர் ஒன்றியம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஐக்கிய அமெரிக்க தமிழ் செயற்பாட்டுக்குழு மற்றும் உலகத்தமிழ் அமைப்பு ஆகிய 5 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இணைந்து சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவாவிற்கு கூட்டாக அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இலங்கையின் பொருளாதார நிலைவரம் மிகமோசமடைந்துவரும் நிலையில், அதனை சீரமைப்பதற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடவிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் மூலம் அறிந்துகொள்ளமுடிந்தது.

தற்போதைய பொருளாதாரநிலையின் காரணமாக இலங்கை மக்கள் முகங்கொடுத்திருக்கக்கூடிய நெருக்கடிகளை நாம் உணர்ந்துகொண்டிருக்கும் அதேவேளை, இதுகுறித்து எமது கரிசனையையும் வெளியிடுகின்றோம்.

எவ்வாறிருப்பினும் இலங்கைக்கு எவ்வித நிபந்தனைகளுமற்ற உதவிகளை வழங்குவதன் மூலம் தற்போது மக்கள் அனுபவித்துவரும் துன்பத்தை நீக்கமுடியாது என்றே நாம் கருதுகின்றோம்.

அதுமாத்திரமன்றி தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாதக்கொள்கைகளால் நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் இது பங்களிப்புச்செய்யாது.

இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் தமிழ் மக்களின் உரிமைகளை மறுதலித்து வந்திருக்கின்றன என்பதற்கான வலுவான ஆதாரங்கள் காணப்படுவதுடன், அவை கடந்த 2009 ஆம் ஆண்டில் முடிவிற்குக்கொண்டுவரப்பட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினர் போர்க்குற்றங்களிலும் மனிதகுலத்திற்கு எதிரான மீறல்களிலும் இனப்படுகொலையிலும் ஈடுபடுவதற்கு வழிவகுத்தது.

குறிப்பாக இலங்கை தொடர்பில் ஆராய்வதற்கென ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவானது, இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரின்போது சுமார் 40,000 பொதுமக்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று நம்பத்தகுந்த தரப்பினரால் மதிப்பிடப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோன்று கடந்த 2012 ஆம் ஆண்டில் சார்லஸ் பெட்ரியினால் தலைமைதாங்கப்பட்ட ஐ.நா உள்ளகக்குழுவின் மதிப்பீட்டு அறிக்கையில், இறுதிக்கட்டப்போரின்பேர்து சுமார் 70,000 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு என்ன நேர்ந்தது என மதிப்பிடப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு போர்க்குற்றங்களும் மனிதகுலத்திற்கு எதிரான மீறல்களும் இடம்பெற்றிருப்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் காணப்படுவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் இடம்பெற்றதாகக்கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் உரியவாறான விசாரணைகளை மேற்கொண்டு, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தும் 30/1 தீர்மானம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும் தற்போதைய அரசாங்கம் அந்தத் தீர்மானத்தை நிராகரித்துவிட்டது. தற்போதுவரை இறுதிக்கட்டப்போரின்போது நிகழ்த்தப்பட்ட குற்றங்களுடனும் மனித உரிமை மீறல்களுடனும் தொடர்புடைய ஒருவர்கூட கைதுசெய்யப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை.

பல்வேறு கட்டமைப்புக்களிலும் நிலவும் தண்டனைகளிலிருந்து விடுபடும்போக்கு அதற்குக் காரணம் என்பதுடன் அது சிங்கள, பௌத்த மத அடிப்படைவாதம் எழுச்சியடைவதற்கு வழிவகுத்துள்ளது.

எனவே பொருளாதாரமீட்சிக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் உதவிகள் வழங்கப்படும்பட்சத்தில், தாமாகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உதவியை நாடவேண்டும் என இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர் நிலங்களின் பூர்வீக, பாரம்பரியக் கட்டமைப்பை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது.

அமெரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் ஒக்லான்ட் நிலையத்தினால் ‘என்ட்லஸ் வோர்’ என்ற தலைப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் வலுகட்டாயமாக இடம்பெறும் சிங்கள குடியேற்றங்கள் மற்றும் அவற்றினூடாக தமிழ் மக்களின் பாரம்பரிய, கலாசார அடையாளங்களை அழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் மற்றும் மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறும் நீங்கள் (சர்வதேச நாணய நிதியம்) இலங்கை அரசாங்கத்திற்கு நிபந்தனை விதிக்கவேண்டும்.

மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப்பயங்கரவாதத்தாக்குதல்கள் குறித்தும் இன்னமும் நீதிநிலைநாட்டப்படவில்லை. எனவே சர்வதேச நாணய நிதியம் போன்ற கட்டமைப்புக்கள் இலங்கைக்குக் கடன்வழங்கும்போது நிபந்தனைகளை விதிப்பதன் ஊடாகவே பொறுப்புக்கூறலை நோக்கிய நகர்வுகளை வலுப்படுத்தமுடியும்.

அதேபோன்று சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழுவினால் மிகவும் மோசமான சட்டமாகச் சுட்டிக்காட்டப்பட்டதும் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கக்கூடியதுமான பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பிலும் உங்களது கவனத்திற்குக் கொண்டுவரவிரும்புகின்றோம்.

தற்போதைய அரசாங்கம் அச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகளைச் செய்திருந்தாலும், சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைவாக அச்சட்டத்தை மாற்றியமைப்பதற்கு அத்திருத்தங்கள் குறைந்தளவான பங்களிப்பையே வழங்குவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

எனவே கடனுதவிகளை வழங்குவதெனின், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குமாறும் நிபந்தனை விதியுங்கள் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தொப்புள்கொடி உறவு என்பது ஒரு மேடை பேச்சாக இருக்க கூடாது: யாழ் இந்திய துணைத்தூதுவர் பேச்சு

தொப்புள்கொடி உறவு என்பது ஒரு மேடை பேச்சாக இருக்க கூடாது, அதையும் தாண்டி இருக்க வேண்டும் என யாழ் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீ ராகேஷ் நடராஜ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஜெயபுரம் கடற்தொழில் சம்மேளனத்திலும் பூநகரி நக்ரா நிறுவனத்திலும் மற்றும் கௌதாரி முனை பொதுநோக்கு மண்டபத்திலும் யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கடற்தொழிலாளர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (15) இடம்பெற்றுள்ளது.

இதன்போது இந்திய அரசாங்கத்திடமிருந்து மனிதாபிமான உதவிகள் என்ற வகையில் தலா 6000 ரூபா பெறுமதியான 200 உலருணவுப் பொதிகள் கடற்தொழிலாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே யாழ் இந்திய துணைத்தூதுவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடற்றொழிலாளர்களின் தேவைகள் எதுவாக இருந்தாலும் துணைதூதரகத்திற்கு வருகை தாருங்கள் அதனை உங்களது வீடாக எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்திய அரசு தொடர்ந்தும் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக கடற்தொழிலாளர் சமூகத்தில் கொண்டுள்ள அக்கறை காரணமாக இவ் உதவிகளை வழங்கி வைக்கின்றது. எங்களது எண்ணங்கள் சிந்தனைகள் எப்பொழுதும் உங்களுடன் இருக்கும்.

இந்திய அரசு வடக்கில் குறிப்பாக கடற்தொழிலாளர் சமூகம் பயன்படுகின்ற வகையில் முதலீடுகளை மேற்கொள்ளும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் தொடர்பில் நாமலுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு

சிரேஸ்ட அமைச்சர்களை கண்காணிக்கும் பொறுப்பு அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

2015 இல் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது குடும்ப ஆட்சி குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விட அதிகளவில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக குடும்ப ஆட்சி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

2015இல் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மூன்று அமைச்சர்களே பதவி வகித்தனர் தற்போது அதனை விட அதிகமானவர்கள் பதவி வகிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையை எத்தனை முறை மாற்றினாலும் நாமல் ராஜபக்சவிற்கு ஏதாவது பதவியை வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பெரும்பாலான உறவுகள் மரணச் சான்றதழையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை – தியாகி ருவன்பத்திரன

பெரும்பாலான உறவுகள் மரணச் சான்றதழையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய ஆய்வாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான தியாகி ருவன்பத்திரன தெரிவித்தார்.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தில் ‘காணக்கிடைக்கவில்லை’ எனும் சான்றிதழைப் பெற்றுக்கொண்டவர்களின் குடும்ப மீள்வாழ்விற்காக ஒருமுறை மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாயைச் செலுத்துவதற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியது.

அரசாங்கத்தின் குறித்த முடிவு தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உள்ளக மற்றும் சர்வதேச ரீதியில் அரசாங்கம் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை வெளியிடுவதாக சுட்டிக்காட்டினார்.

காணாமல்போனோர் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான குழுக்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் ஸ்தாபிக்கப்பட்டது என ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் உறுதியளித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

இருப்பினும் காணாமல்போனோரின் பெரும்பாலான குடும்பங்கள் மரண சான்றிதழையோ இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை என்றும் மாறாக அவர்கள் தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையையே எதிர்பார்க்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுவரையில் காணாமல்போனோர் தொடர்பாக கிடைக்கப்பெற்றிருக்கும் 14 ஆயிரத்து 988 முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை முடிவிற்குக் கொண்டுவருவதற்காக 25 விசாரணைக்குழுக்கள் நியமிக்க கடந்த வாரம் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. அமர்வு சவாலாக இருக்கும் – ஜயநாத் கொலம்பகே

மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரை இலங்கை வெற்றிகரமாக எதிர் கொண்டதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தம்மால் உண்மைகளை முன்வைக்கவும் அது குறித்து விளக்கவுமளிக்கவும் முடிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறுவதற்கு பதிலாக உள்நாட்டு அரசியல் விவகாரங்கள் குறித்தே ஆணையாளரின் அறிக்கை கவனம் செலுத்தியது என சுட்டிக்காட்டினார்.

அத்தோடு ஊடாடும் உரையாடலின் போது 31 நாடுகள் இலங்கை தொடர்பான கருத்துக்களை வெளிப்படுத்திய அதேவேளைஇ உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்பதே தமது பிரதான வாதமாக இருந்தது என பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே கூறினார்.

இதன் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவருடன் இலங்கைப் பிரதிநிதிகள் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும்இ அதற்கு சாதகமான பதில் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 51 ஆவது அமர்வு இலங்கை எதிர்கொள்ள வேண்டிய அடுத்த சவாலாக இருக்கும் என்றும்இ அதனை சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் நிபுணர்கள் உட்பட அனைத்துப் பிரிவினரின் ஆதரவுடன் எதிர்கொள்வோம் என்றும் கூறினார்.

Posted in Uncategorized

ஒரு லட்சம் ரூபாயை தந்து நீதியை இல்லாமல் ஒழிப்பதற்கே நீதியமைச்சர் முயல்கின்றார்- சி.ஜெனிற்றா

ஒரு லட்சம் ரூபாயையும், சான்றிதழையும் தந்து நீதியை இல்லாமல் ஒழிப்பதற்காகவே நீதியமைச்சர் அலி சப்ரி இவ்வாறு கூறிக்கொண்டிருக்கின்றார் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று ( புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நீதி அமைச்சரின் நடமாடும் சேவையில் காணாமல் போனோருக்கான அலுவலகம் வேண்டாம் என நாங்கள் கூறியிருந்தோம். இழப்பீடோ, மரணச்சான்றிதழோ தேவையில்லை என கூறியிருந்தோம். அப்படியிருந்தும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மீது திடீரென ஏன் அக்கறை வருகின்றது.

ஒருலட்சம் ரூபா நிதியினை எமது உறவுகளுக்கு வழங்கி அந்த நிதியில் வாழ்க்கை செலவை கட்டியெழுப்ப முடியுமா? இந்த நிதியில் எமது உறவுகள் வாழ முடியுமா? நீதிக்காக இதுவரை காலமும் போராடி கொண்டிருந்தோமே தவிர ஒரு லட்சம் ரூபாவிற்காக போராடவில்லை.

யுத்தம் முடவடைந்து 13 வருடங்களை கடந்தும் எமது உறவுகளை தான் தேடிக்கொண்டிருக்கின்றோம். உறவுகளுக்கு ஒரு லட்சம் ரூபா வழங்கி உறவுகளை திருப்திப்படுத்துவதாக நீதி அமைச்சர் கூறியிருக்கின்றார்.

எமது உறவுகள் நிதிக்காக போராடவில்லை. சர்வதேசமானது நீதி அமைச்சர் அலிசப்ரி கூறுகின்ற கூற்றையும், பதிவாளர் நாயகம் எடுத்திருக்கின்ற இந்த முடிவும் தவறானது. ஏனென்றால் நாங்கள் 13 வருடமாக தொடர்ச்சியாக வீதியோரத்தில் நின்று நிதிக்காகவோ, காணாமல் போனவர்களுக்கான சான்றிதழிற்காகவோ போராடவில்லை. எமக்கு நீதி தான் தேவையென்றே போராடி வருகின்றோம்.

சர்வதேசமானது இதனை கண்டித்து 49 ஆவது கூட்ட தொடரிலாவது எமக்கு நீதி வழங்க ஆவன செய்வார்கள் என்ற நம்பிக்கையிலே காத்திருக்கின்றோம். ஒரு லட்சம் ரூபாயையும், காணாமல் போனவர்களுக்கான சான்றிதழையும் தந்து நீதியை இல்லாமல் ஒழிப்பதற்காகவே நீதியமைச்சர் அலி சப்ரி இவ்வாறு கூறிக்கொண்டிருக்கின்றார். இவரின் கருத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இலங்கை அரசின் நீதி மறுக்கப்பட்ட போதுதான் சர்வதேசத்தை நோக்கி போராடி வருகின்றோம். இலங்கை அரசின் உள்ளக பொறிமுறையோ, காணாமல் போனோரின் அலுவலகமோ எமக்கு தேவையில்லை என்பதனை தான் கூறிக்கொண்டிருக்கின்றோம்.

இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி பொறுப்பு கூற வேண்டிய கடமை இருக்கிறது. ஏனென்றால் கையில் ஒப்படைக்கப்பட்டவர்களும் , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களும், இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டவர்களும் , இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களையும் தான் நாங்கள் கேட்டுக்கொண்டு இருக்கின்றோம்.

ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியா எமது உறவுகளின் பெறுமதி? இதனை எமது உறவுகள் யாரும் வாங்க கூடாது என்பதனை ஊடக வாயிலாக தெரிவித்து கொள்கிறேன் என மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சற்று முன்னர் புதுடில்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.இந்த சந்திப்பின்போது இலங்கைக்கு இந்தியா வழங்கும் நிதி உதவிக்கு இந்திய பிரதமருக்கு நிதி அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

அத்துடன் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்குமாறு நிதி அமைச்சர் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.இல்லையெனில் மார்ச் 30 அன்று இலங்கையால் நடத்தப்படும் வங்காள விரிகுடாவின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்முயற்சி மாநாட்டில் கலந்துகொள்ள அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை இந்திய வெளியுறவு அமைச்சர் . எஸ். ஜெய்சங்கர், நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி ஆகியோரையும் நிதியமைச்சர் சந்திக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜபக்ஷர்களுக்கு ஒரு உயிரின் பெறுமதி வெறுமனே ஒரு இலட்சம் ரூபாய் மாத்திரமே – அம்பிகா சற்குணநாதன்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஒருதடவை மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாயை வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் விசனம் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் மரணச் சான்றிதழை பெற்றுக் கொள்வோருக்கு ஒரு இலட்சம் பணத்தை உதவித் தொகையாக ஒரு தடவை மட்டும் வழங்குவதற்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், “காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் மரணச் சான்றிதழையோ அல்லது இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்த அவர், மாறாக அவர்கள் உண்மையையும் நீதியையுமே கோருகின்றார்கள்” என அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்ஷ அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் ஒரு உயிரின் பெறுமதி வெறுமனே ஒரு இலட்சம் ரூபாய் மாத்திரமே. இது அவமரியாதை செய்யும் வகையிலான மிகமோசமான செயல் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழாராய்ச்சி மாநாடும் அரை உண்மைகளும் – தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

ஈழத்தமிழர் வரலாற்றில், உணர்ச்சிமிக்கதாகப் பேசப்படுவது யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாளில் நிகழ்ந்த வன்முறை பற்றிய கதைகளுமாகும்.
செவிவழிக் கதைகள் போல, இக்கதைகள் அரை உண்மைகளாகச் சொல்லப்பட்டு, இன்று சமூகத்தில் அவை நிலைபெற்றுள்ளன. அச்சம்பவங்களும் அதைச் சூழ்ந்த நிகழ்வுகளும் பற்றிய முழுமையான தேடலோ விசாரணையோ இல்லாமல், இன்றுவரை அக்கதை திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது.

ஈழத்தமிழர் வரலாற்றின் முக்கியமான திருப்புமுனை அச்சம்பவம். ஆனால், ஏனைய நிகழ்வுகளுக்குக் கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் இதற்குக் கொடுக்கப்படுவதில்லை. காரணம் சொல்லப்பட்டுள்ள கதைகளில் உள்ள கோளாறும் அதன் நியாயமற்ற தன்மையுமாகும். தேடி விசாரித்தறியத் தவறும் சமூகம், எத்தகையதொரு கொடிய தண்டனையை எதிர்நோக்க வேண்டிவரும் என்பதற்கு, இச்சம்பவம் நல்லதொரு சான்று.

சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையில், தமிழருக்கு எதிரான தொடர்ச்சியான நடவடிக்கைகளை, அரசாங்கங்கள் மேற்கொண்டு வந்த நிலையில், தமிழ்த் தலைவர்களுக்கும் அரச தலைவர்களுக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்படிக்கைகள், தொடர்ச்சியாகத் தோல்வியடைந்தன.

குறிப்பாக, பண்டாரநாயக்க செல்வநாயகம் உடன்படிக்கைப்படி, குடியேற்றத் திட்டங்கள் மீதான அதிகாரம் உடைய மாவட்ட சபைகள் நிறுவப்படும் என ஏற்கப்பட்டது. அதே அடிச்சுவட்டில், டட்லிசெல்வா உடன்படிக்கை தோற்றம் பெற்றது. இரண்டும் செயல்வடிவம் பெறவில்லை.

இவற்றின் மூலம், குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வுக்குக் கூட, பேரினவாதக் கட்சிகள் தயாராக இல்லை என்பதை மிகத் தெளிவாகக் காட்டின. ஆனால், இந்நிலைப்பாடு ஐக்கிய தேசிய கட்சியோடு தொடர்ந்தும் நல்லுறவைப் பேணுவதற்கு, தமிழரசுக் கட்சிக்குத் தடைகள் இருக்கவில்லை. இவ்வுறவு 1960களில் புதிய பரிமாணம் கண்டது.

1970ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில், சிறிமா தலைமையிலான ஐக்கிய முன்னணி, மூன்றில் இரண்டுக்கும் மேலான பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. அப்போது தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ். ஜே. வீ. செல்வநாயகம், “தமிழரை இனிமேல் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொன்னார்.

இது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியை, பேரினவாத ஆட்சியாகக் கண்டதை மட்டுமன்றி, அரசாங்கத்தை அமைப்பதில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையை தமிழரசுக் கட்சி இழந்த ஏமாற்றத்தையும் குறித்தது. புதிய அரசாங்கத்துடன் செயற்படவியலாத வகையில், தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசிய கட்சியோடு தன்னை நெருக்கமாகப் பிணைத்துக் கொண்டது. இதனால் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய ஒரு நிலையை இழந்தது.

இதில் கவனிப்புக்கு உரியது. யாதெனில், தமிழ் மக்களின் தெரியப்பட்ட பிரதிநிதிகளையுடைய தமிழரசுக் கட்சியோடு அலட்சியமான முறையிலேயே அரசாங்கம் நடந்து கொண்டது. குறிப்பாக, யாழ்ப்பாண மாநகர மேயராக இருந்த அல்பிரட் துரையப்பாவுக்கு அரசாங்கம் கொடுத்த முக்கியத்துவம், தமிழரசுக் கட்சிக்குச் சினமூட்டியது.

இதன் தொடர்ச்சியாக அரசியலில் அறிமுகமில்லாத, மக்களால் அறியப்படாத செல்லையா குமாரசூரியர் என்ற பொறியியலாளரை, மூதவையான செனட் சபைக்கு நியமித்த அரசாங்கம், அவரை தபால் தொலைத்தொடர்பு அமைச்சராக்கியது. இச்செயல்கள் மூலம், தமிழர் நலன்களைத் தங்களது தமிழர்கள் மூலமே கவனித்துக்கொள்ளவியலும் என்பதைக் கோடுகாட்டியதோடு, தமிழரசுக் கட்சியினரைப் புறக்கணித்தது.

இக்காலப்பகுதியில், சிறுபான்மையினரது நலன்கள் தொடர்ச்சியாக நெருக்குதலுக்கு உள்ளாகின. தமிழ் மக்களுக்கு குமாரசூரியர் அமைச்சரானது போல, பதியூதின் மஹ்மூத்தை கல்வி அமைச்சராக்கி, அவரூடாக முஸ்லிம்கள் நலன்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதாக அரசு காட்டிக் கொள்ள முயற்சி செய்தது.
சிறிமாவின் அரசு தொடர்ச்சியாக, சிறுபான்மையினரின் நலன்களைப் புறக்கணித்து வந்தது என்பதும் இந்த அமைச்சரவை நியமனங்கள் சிறுபான்மையின நலநோக்கில் செய்யப்பட்டவையல்ல என்பதும் வெளிப்படையானது.

இவ்வாறு, 1970களில் தமிழ்ப் பாரளுமன்றப் பிரதிநிதிகளும் அரசாங்கமும் தொடர்ச்சியான மோதற்போக்குடன் தொடர்ந்த நிலையில், 1972ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பு, சிறுபான்மையினருக்கான பேரினவாத நிகழ்ச்சிநிரல் ஒன்றை, அரசாங்கம் முன்னெடுக்கிறது என்பதைக் காட்டியது.

ஈழத்தின் முன்னோடியான தமிழ் அறிஞர்களில் ஒருவராகிய தனிநாயகம் அடிகளாரின் அயராத முயற்சியால், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாக்கப்பட்டு, 1966இல் கோலாலம்பூரில் முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்த இரண்டாவது மாநாடு, 1968இல் சென்னையிலும் மூன்றாவது 1970இல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் நடைபெற்றன. பாரிஸ் மாநாட்டைத் தொடர்ந்து, நான்காவது மாநாட்டை இலங்கையில் நடத்துவது என்று முடிவானது.

மாநாடுகள் தொடர்ச்சியாக, இரண்டாண்டு கால இடைவெளியில் நடத்தப்பட்ட நிலையில், இலங்கையில் 1972இல் இம்மாநாட்டை நடத்தத் திட்டமிடப்பட்டது. அரசியல் தலையீடுகள் காரணமாக, இது 1974 ஜனவரியிலேயே சாத்தியமானது.
இம்மாநாட்டை நடத்துவதற்குப் பொறுப்பான தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இலங்கை கிளை, இம்மாநாட்டை கொழும்பிலேயே நடத்தத் திட்டமிட்டது. ஆனால், தமிழரசுக் கட்சியினர் இதை யாழ்ப்பாணத்தில் நடத்த விரும்பினர். இலங்கை கிளையில் இருந்த தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களின் அழுத்தத்தால், இம்மாநாடு யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டது.

அமைச்சராக இருந்த குமாரசூரியர், இம்மாநாட்டை கொழும்பில் நடத்த விரும்பினார். அதன்மூலம், தனக்கு அரசியல் இலாபம் தேடலாம் எனக் கணித்தார். எனவே, மாநாட்டை எங்கே நடத்துவது என்ற இழுபறி தொடர்ந்தது. இதனால் இம்மாநாடு ஓர் அரசியல் பிரச்சினையானது.

உலகளாவிய தமிழ் அறிஞர்கள் பங்குகொள்ளும் ஒரு மாநாட்டை, அரசியல் பிரச்சினையாக்கக் கூடாது என்பது, பலரது கருத்தாக இருந்தது. பல தமிழறிஞர்கள் இக்கருத்தோடு உடன்பட்டார்கள். சிலர், இதனை அரசியலாக்குவதன் ஆபத்துகள் குறித்து எச்சரித்தனர்.

தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்த தமிழரசுக் கட்சி, தங்கள் செல்வாக்கை மீட்பதற்கான வாய்ப்பாக, இதைப் பயன்படுத்த முயன்றது என்பதை, மாநாடு சார்ந்த நடவடிக்கைகள் உணர்த்தின.

யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு எட்டப்பட்ட முடிவை, அரசாங்கம் பகையாகக் கண்டது. இதனால், மாநாட்டுக்கு வருகை தருவோருக்கான விசாக்கள் தாமதமாகின. அரசியல் பிரமுகர்களுக்கு விசா மறுக்கப்பட்டது. அரசுக்குரிய பாடசாலை மண்டபங்கள் மறுக்கப்பட்டன. அரசாங்கத்தின் ஆதரவுடைய அல்பிரட் துரையப்பா, யாழ்ப்பாண மேயராக இருந்தது ஒழுங்கமைப்பாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

அரசாங்கம் நெருக்கடிகளைக் கொடுத்தாலும், இம்மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு சிங்கள மக்கள் மத்தியிலும் ஆதரவு இருந்தது. சிங்களப் பொதுமக்கள், அறிஞர்கள் எனப் பலர் இந்த மாநாட்டை வரவேற்று ஆதரவு வழங்கினார்கள். இந்தத் தகவலை, இலங்கை கிளைக்குத் தலைவராக இருந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன், அம்மாநாட்டு நினைவுமலருக்கு எழுதிய செய்திக்குறிப்பில் விதந்துரைத்துள்ளார்.

இம்மாநாடு, அறிஞர்கள் பங்குகொள்கின்ற தமிழாய்வை முன்னெடுக்கும் ஒரு நிகழ்வு. ஆனால், இதைப் பொது மக்களுக்கான நிகழ்வாக மாற்றுவது என்ற யோசனை, தமிழரசுக் கட்சியினரால் முன்மொழியப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் இருந்தபோதும், இறுதியில் இம்முன்மொழிவு ஏற்கப்பட்டு, இறுதிநாள் நிகழ்வானது பொதுமக்களுக்கான நிகழ்வாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடத்த முடிவானது.

இந்நிகழ்வு நோக்கிய நகர்வுகள், ஏட்டிக்குப் போட்டியானவையாக மாறின. அரசாங்கம் என்னவகையில் தடுத்தாலும், நிகழ்வை நடத்தியே தீருவது என்று தமிழரசுக் கட்சி கங்கணம் கட்டிக்கொண்டது.

இதன் ஒருபகுதியாக, விசா மறுக்கப்பட்ட தமிழ்த் தேசியவாதியான ஜனார்த்தனனைக் களவாகக் கொண்டு வந்து, மேடையேற்றுவது என்று தமிழரசுக் கட்சித் தலைவர்கள் சிலரும் இளைஞர்களும் முடிவெடுத்தனர். இதன்மூலம் அரசாங்கத்தின் முகத்தில் அறைவது என்று முடிவானது.

இதன்படி, படகுவழியாகக் கள்ளமாக யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டம் குறித்த செய்திகள், பொலிஸாருக்குத் தெரிந்திருந்தன. ஒருவேளை, ஜனார்த்தனனை மேடையேற்ற முயன்றால், அதைத் தடுப்பதென்றும் தேவையேற்படின் அவரைக் கைது செய்வதென்றும் அரசாங்கம் முடிவெடுத்தது. இவை, ஓர் ஆராய்ச்சி மாநாடு, எவ்வாறு அரசியலானது என்பதற்கான சாட்சியங்கள்.

ஜனார்த்தனன் மேடையேற, அதைத்தடுக்க பொலிஸார் மேடையை நோக்கி விரைந்தனர். பொலிஸாரை இளைஞர்கள் தடுத்தனர். பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

கூட்டத்தைக் கலைக்க, பொலிஸார் வானத்தை நோக்கிச் சுட்டனர். பெருமளவில் முற்றவெளியில் கூடியிருந்த மக்கள் சிதறி ஓடினர். மின்சாரக் கம்பிகள் சரிந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி ஏழு பேர் உயிரிழந்தனர். இவ்வுயிரிழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆரம்பம் முதலே, இம்மாநாடு குறித்த பகையுணர்வும் சட்டம், ஒழுங்கை பொலிஸ் பேணத்தவறியமையும் ஏற்புடையதல்ல. அதேவேளை, இந்த உயிரிழப்புகள் குறித்த எந்தவொரு விசாரணையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

இதேவேளை, இந்த அனர்த்தத்துக்கு தமிழரசுக் கட்சியும் பொறுப்பு என்பதை மறுக்கவியலாது. தமிழரசுக் கட்சியின் பொறுப்பற்ற செயல்குறித்து யாரும் பேசுவதில்லை. இவ்வாறு, மக்களைக் குறிவைப்பதனூடாக, அரசியல் ஆதாயம் பெறும் புதிய யுத்தியை, தனது தேர்தல் அரசியலுக்காக தமிழரசுக் கட்சி தொடங்கியது.

இந்நிகழ்வுகள் தமிழரசுக் கட்சியின் உணர்ச்சிகர அரசியலுக்கு வலுவூட்டி, அரசியல் வன்முறைகளை இளைஞர்கள் கையிலெடுப்பதற்கு வழிகோலியது. இவ்வகையான வன்முறைகளுக்கு, மௌன அங்கிகாரத்தை வழங்கின. இதைத் தொடர்ந்து, துரையப்பாவில் தொடங்கியது கொலைக் கலாசாரம். அது, ஈழத் தமிழர் வரலாற்றின் கறைபடித்த பக்கங்கள்.

Posted in Uncategorized