தமிழக மீனவர்களை நாம் விரோதியாக பார்க்க கூடாது – சிவாஜிலிங்கம்

தமிழ் நாட்டு மீனவர்களும் இலங்கை மீனவர்களும் அடிபட்டு சாக வேண்டும் என்பதற்காகவே இலங்கை அரசாங்கம் மீனவர்களின் பிரச்சினைகளை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றனது, என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஊரைக் கொளுத்தும் ராஜாவுக்கு கொள்ளிக்கட்டை கொடுக்கும் மந்திரி போல இங்கு ஒரு அமைச்சர் இருக்கின்றார், அவர் தான் டக்ளஸ் தேவானந்தா.

அவர் வருவார், என்ன செய்ய வேண்டுமென்றே அவருக்கு தெரியாது, அவர் கதைப்பதும் விளங்காது.

இந்த நிலைமையில் தான் நாம் இருக்கின்றோம். ஆகவே 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு படகு ஒழுங்குபடுத்தல் சட்டம் மற்றும் இழுவை மடி தடைச் சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழக மீனவர்களை நாம் விரோதியாக பார்க்க கூடாது, ஒரு பிரச்சினைக்கு ஒரு தீர்வு உண்டு. அதை பயன்படுத்தி தீர்வைக் காண வேண்டும்.

எமக்கும் தமிழகத்துக்குமான உறவை அறுத்து விட அதிக எண்ணிக்கையான ஆட்கள் உள்ளனர்.

அன்று சந்திரிகா அம்மையார் கடலுக்குள் மீனவர்களை இறங்குவதற்கு தடை விதித்தார்.

அப்போது நான் மருத்துவமனையில் இருந்துஇ மாவை சேனாதிராஜா உள்ளிட்டோர் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி பெற்றோம்.

டக்ளஸ் தேவானந்தா அண்மையில் யாழில் இடம்பெற்ற போராட்டத்தில் ஆவேசமாக செயற்பட்டார். அது கண்டிக்கத்தக்கது.

இதனால் யாழ்.கச்சேரிக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டம் மதியத்துடன் நிறைவுக்கு வந்தது.

இப்படி போராட்டங்கள் பல வழிகளிலும் குழப்புவதற்கு இப்படி போராட்டங்கள் பல வழிகளிலும் குழப்புவதற்கு முயற்சித்தனர்.

இதற்கு எதிராக நாம் தெளிவாக செயற்பட வேண்டும். திருமண வீட்டில் நான் தான் மாப்பிளை,  இறப்பு வீட்டில் நான் தான் பிணம் என்று திரிபவர் தான் டக்ளஸ் தேவானந்தா, என்றார்.

Posted in Uncategorized

ஜெனிவாவில் மற்றொரு பிரேரணைக்கு பிரித்தானியா திட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் மற்றுமொரு கடுமையான பிரேரணையைக் கொண்டு வருவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் பிரேரணையை இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றவை எனக் கூறப்படுகின்ற பாரதூர மான மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச் சாட்டுகளுக்கான பொறுப்புக்கூறலின் தாமத நிலை மற்றும் அண்மைய கால உரிமைகள் மீறல்கள் பற்றிய விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என கொழும்பு இராஜதந்திர மட்டத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பிரித்தானியா கொண்டு வரவுள்ள இந்த புதிய பிரேரணைக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவும் மேற்குலக நாடுகள் சிலவும் ஆதரவை தெரிவித்துள்ளன எனவும் அந்தத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறானதொரு நிலையில் ஜெனிவாவில் ஏற்பட கூடிய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றது.

இதனடிப்படையில் ஜெனிவா அமர்விற்கு முன்னர் முக்கிய சில ஐரோப்பிய நாடுகளுடன் கலந்துரையாடலை முன்னெடுக்க வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தீர்மானித்துள்ளார். இந்த கலந்துரையாடல்களுக்கு சில நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன என வெளிவிவகார அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட் டார்.

அண்மைய இந்திய விஜயத்தினை போன்று குறிப்பிட்ட சில ஐரோப்பிய நாடுகளுக்கு ஜெனிவா அமர்வுக்கு முன்னர் விஜயம் செய்தல் அல்லது மார்ச் மாதம் 3 ஆம் திகதி இலங்கை குறித்த அறிக்கை சமர்பிக்கப்படுவதற்கு முன்னர் குறித்த நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளல் போன்ற வழிமுறைகள் குறித்து இலங்கையின் இராஜதந்திர பணிக் குழாம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அதே சமயம் வெளிவிவகார அமைச் சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ள ஐக் கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக ஜெனிவா செல்லவுள்ளார்.

மார்ச் 3 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை குறித்த எழுத்து மூலமான அறிக்கை சமர்பிக்கப்படஉள்ளது. இந்த அறிக்கையானது இலங்கைக்கு சவால் மிக்கதாகவே அமையும் எனவும் கருதப்படுகின்றது.

Posted in Uncategorized

கடன் ஒப்பந்தத்தை இறுதி செய்ய மீண்டும் இந்தியாவிற்கு செல்கின்றார் பசில் !

இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் இந்தியாவிற்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதியமைச்சர் அண்மையில் இந்தியாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியமை வெற்றியளித்துள்ளது என்றும் நாட்டிற்கு பயனுள்ள முடிவுகளை வழங்கியது என்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கைக்கு 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இந்தியா உறுதி வழங்கியுள்ளது என்றும், அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது கடந்த விஜயத்தின் போது இதற்கான அடித்தளத்தை உருவாக்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்காக இலங்கை முதலில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியாவிடம் இருந்து கடனாகப் பெறும் என ஜி.எல்.பீரிஸ் கூறினார்.

எனவே குறித்த கடன் தொடர்பான இறுதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் புதுடெல்லிக்கு செல்வார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கு திட்டம்

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஆங்கிலம், அரபு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளுடன், ப்ரான்ஸ், ஸ்பெய்ன், ஜேர்மன், இத்தாலி, சீன மற்றும் ஜப்பான் முதலான நாடுகளின் மொழிகளைக் கற்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு ஏற்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இணையவழி முறைமையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் நிலைமை மிக மோசமாகிவிட்டது, ஆட்சி மாற்றமே உடனடி தேவை என்கின்றார் சந்திரிக்கா

இலங்கையின் இன்றைய நிலைமை மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

மக்கள் அனைவரும் பொறுமை இழந்துள்ளனர் எனவும், நாட்டில் அடுத்து என்ன நடக்கும் என்று தன்னால் கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய ஆட்சியால் நாடு சீரழிந்துள்ளது என்றும் நாடு மீண்டு எழ முடியாத நிலையில் நாட்டின் பொருளாதாரம் அதாள பாதாளத்தில் சென்றுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆட்சி மாற்றமே தற்போதைய உடனடித் தேவை என குறிப்பிட்ட சந்திரிகா குமாரதுங்க, ஜனநாயகத்தை நேசிக்கும் பிரதிநிதிகள் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

அவ்வாறு இணையாவிட்டால் உலக வரைபடத்தில் இலங்கை இல்லாமல் போகும் நிலைமைதான் ஏற்படும் என்றும் சந்திரிகா குமாரதுங்க எச்சரித்தார்.

Posted in Uncategorized

மிச்செல் பச்லெட்டின் அறிக்கை அரசாங்கத்திடம் கையளிப்பு, வெள்ளிக்கிழமை வரை அவகாசம்

இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பச்லெட்டின் அறிக்கை இன்று இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

இதற்கான பதிலை வழங்குவதற்கு வெள்ளிக்கிழமை வரை அவகாசம் வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

2009 இறுதிபோரின் போது இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பான ஆவணங்ளை திரட்ட கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற அமர்வில் தீர்மானம் எட்டப்பட்டது.

இந்நிலையில் இந்த மாத இறுதியில் தொடங்கும் அதன் நாற்பத்தி ஒன்பதாவது அமர்வில் மிச்செல் பச்லெட் எழுத்து மூலமான அறிக்கையை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பச்லெட்டின் அறிக்கையின் நகலை அரசாங்கம் இன்று பெற்றுக்கொள்ளும் என ஜெயநாத் கொலம்பகே கூறியுள்ளார்.

ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளின் ஆதரவுடன் தனது நிலைப்பாட்டை பாதுகாக்க இலங்கை தயாராகும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அத்தோடு மனித உரிமைகள் நிலைமையை மேம்படுத்த உறுதியான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதால் இம்முறை கடினமானதாக இருக்காது என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இருப்பினும் தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்டமூலத்தில் உள்ள குறைகளை ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இரு கடிதங்களை இறுதி செய்வதற்கு புதனன்று கூடவுள்ள தமிழ்த் தலைமைகள்

தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஆறு கட்சிகளின் தலைவர்கள் எதிர்வரும் புதன்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் இருவேறு கடிதங்களை இறுதி செய்வதற்காக கூடிக்கலந்துரையாடவுள்ளனர்.

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப்.தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா ஆகியோரே இவ்வாறு கூடிவுள்ளவர்கள் ஆவர்.

இவர்களின் கூட்டத்தின் போது, முதலாவதாக, கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பிய கடிதத்தின் தொடர்ச்சியான கடிதமொன்று இம்முறையும் அனுப்புவது பற்றி இறுதி செய்யப்படவுள்ளது.

இதற்கான ஆரம்பவரைவுகள் உள்ளநிலையில் அதனை மேலும் செம்மைப்படுத்தி இறுதி செய்வதற்கு முனைப்புச் செய்யப்படவுள்ளது.

இரண்டாவதாக, இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கடிதம் இறுதி செய்யப்படவுள்ளது. இந்த கடிதத்தின் வரைவினை சி.வி.விக்னேஸ்வரன் தயாரித்துள்ள நிலையில் அதன் உள்ளடக்கப்பற்றி ஏனைய தலைவர்களின் கருத்துக்களும் பெறப்பட்டு இறுதி செய்யப்படவுள்ளது.

இவ்வாறு இறுதி செய்யப்படும் கடிதமானது,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதனிடையே இந்த கடிதங்களை இறுதி செய்யும் விவகாரத்தில் மாவை.சோ.சேனாதிராஜா பங்கெடுக்க மாட்டார் என்று நம்பிக்கையான தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல்நலக்குறைபாடு காரணமாக அவர் தனது பிரதிநிதியாக சீ.வீ.கே.சிவஞானத்தினை அனுப்புவதற்கு இணக்கம் கண்டுள்ளதாக குறித்த கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இக்கலந்துரையாடல் நடைபெறும் இடம் குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படாதுள்ளபோதும் பொதுவானதொரு இடத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த கலந்துரையாடல் நடைபெறும் இத்தினத்திலேயே தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் ‘ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் தேசிய பிராந்திய சர்வதேச நிலவரங்களும்’ எனும் தலைப்பிலான கருத்தரங்கு இளங்கலைஞர் மண்டபத்தில் காலை 9.30இற்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தமிழ் அரசியற் சூழலில் அரசியற் தலைவர்களினதும் ஊடகவியலாளர்களினதும் பொறுப்புணர்வும், வரலாற்றுக் கடமையும்

தமிழர் தாயகத்தில் புதிய அரசியற் சூழல் ஒன்று தற்போது உருவாகி வருகிறது. தமிழர் நலனில் அக்கறை கொண்டு 6 தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய மத்திய அரசை நோக்கி அரசியல் காய்களை நகர்த்துகின்றன. எல்லா நம்பிக்கைகளையும் இழந்து கையறு நிலையில் இருந்த தமிழ் மக்களுக்கு இந்தப் புதிய நகர்வு எச்சரிக்கையுடனான நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இந்த அரசியற் சூழலை தமிழ் அரசியலாளர்களும், ஊடகவியலாளர்களும் பொறுப்புணர்வுடன் கையாள வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பமும் எதிர்பார்ப்புமாகும்.

“அரசியலில் நண்பர்களும் நிரந்தரமில்லை – எதிரிகளும் நிரந்தரமில்லை – நலன்களே நிரந்தரமானவை“ என்ற அரசியல் பொன்மொழியை நினைவிற் கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இந்திய அரசை பகைமை உணர்வுடன் அணுகும் முறைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய வரலாற்றுச் சூழலில் ஈழத்தமிழர்கள் இன்று உள்ளனர்.

இந்தியாவின் தேசிய நலனும் – ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளும் ஒரு புள்ளியில் சந்திக்கும் பிராந்திய அரசியற் சூழல் மீண்டும் எழுந்துள்ளது

இதை சரியாகவே கணித்து, தமிழ் அரசியற் தலைமைகள் ஒன்றுகூடி இந்திய அரசை நோக்கி தமது இராஜதந்திர வியூகங்களை வகுக்க முற்படுவது வரவேற்கத்தக்கது.

எதிரிகளாக இருந்து போர்கள் புரிந்த பல நாடுகள் பின் நண்பர்களாக இணைந்து தத்தமது தேசிய நலன்களை அடைந்த வரலாற்றை நாம் பார்த்திருக்கிறோம்.

அணுகுண்டு வீசி அழித்த அமெரிக்காவுடன், ஜப்பான் ஏற்படுத்திய உறவும் – நன்மைகளும்…
இரு பெரும் உலகப் போர்களில் எதிரும் புதிருமாக போரிட்ட ஜேர்மன் – பிரான்ஸ் இன்று நண்பர்களாக இருந்து பரஸ்பர நன்மைகள் பெறுவதும் இதற்கு சிறு உதாரணங்கள்.
எமது சொந்தப் பலத்தை மட்டும் வைத்துக் கொண்டு (இராணுவ – அரசியல்) எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றுவிட சிங்கள அரசு அனுமதிக்காது என்பதை வரலாறு எமக்கு நிரூபித்துள்ளது.

எனவே எமக்கு ஒரு வெளிநாட்டின் உதவியும் தேவை. அது இந்திய அரசுதான். மாறிவரும் இன்றைய உலக ஒழுங்குகளில் அமெரிக்கா தலைமை தாங்கும் மேற்குலகமும் இந்தியாவின் பூகோளப் பங்காளியாகவே உள்ளது.

எனவே இந்திய உதவியை நாடல் என்பது சர்வதேசத்தின் உதவியையும் இணைத்துக் கொண்டு வரும் என்பதே உண்மை.

இந்திய – ஈழத்தமிழர்களுக்கு இடையே கடந்த காலத்தில் இருந்த பகைமை உணர்வால் ஏற்பட்ட காயங்கள் ஆறிவரும் சூழலில், ஆறிய புண்களை நோண்டிப் பார்ப்பது போல பழைய சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, புதிய அரசியல் சூழலை கெடுக்க முனைவது விவேகமல்ல.

இதை தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் ஊடகவியலாளர்களும் நினைவிற் கொண்டு வரலாற்றுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

ஊடகம் என்ற தளமும் –ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளும் இன்றைய சமூகவலையத் தளங்களால் விரிவாக்கம் பெற்றுள்ளன. இதால் அரசியல் கருத்துக்கள் அதிகளவிலும் தான்தோன்றித் தனமாகவும் வெளிப்பட்டுக் குட்டையைக் குழப்பும் சூழலும் உள்ளதை மறுக்க முடியாது.
இந்த நிலையில் ஆய்வுக் கட்டுரைகள் வரையும் போதும், அரசியலாளர்களை செவ்வி காணும் போதும் ஊடகவியலாளர்கள், நெறியாளர்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுவது இன்றியமையாதது.

கடந்த கால தவறுகளை – முரண்பாடுகளை எதிர்மறை எண்ணங்களுடன் குத்திக் காட்டி ஆய்வு செய்வதோ! கேள்விகள் தொடுப்பதோ! சாதகமான பலன்களை தராது. புதிதாக ஏற்பட்ட அரசியல் சூழலை – இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் கேள்விகளைத் தொடுப்பதிலும் கருத்துக்களை வெளிப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

Zoom meeting – Whats App கலந்துரையாடல்களுக்கு ஆட்களை அழைத்து மக்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்கும் நடைமுறை இப்போது அதிகரித்துள்ளது.

இங்கே கூட்ட நெறியாளர்களின் கடமை முக்கியமானது. விதண்டாவாதமான வினாக்களை இனங்கண்டு அவற்றை புறந்தள்ளும் எச்சரிக்கை உணர்வுடன் நெறியாளர்கள் செயற்படுவது அவசியம். விவாதங்களைத் திசை திருப்பி குப்பையைக் கிளறும் கேள்விகளைத் தவிர்க்க வேண்டும். இந்தப் புதிய அரசியல் சூழலை எதிர்ப்பாவர்களுக்கு மேடை அமைத்துக் கொடுக்காமல் இருந்து, அவர்களின் நச்சுக் கருத்துக்கள் அப்பாவி மக்களின் மனங்களைக் குழப்பாமல் தடுக்க வேண்டும்.

கருத்துச் சுதந்திரம் மற்றும் இனத்தின் நலன் என்ற போர்வையில் தமது சுயநலன்களை பழிதீர்க்கும் படலங்களை அடைந்துவிட முயலும் அரசியல்வாதிகளை அம்பலப்படுத்த வேண்டும். அரைகுறை அரசியல் அறிவுடனும், பிழையான தரவுகளுடனும் பொதுமகன் என்ற போர்வையில் வந்து கேள்விகள் தொடுக்கும் புல்லுருவிகளை புறம் தள்ள வேண்டும்.

ஊடகவியலாளர்கள் என்றால் நடுநிலைமையுடன் இருக்க வேண்டும் என்றொரு பலமான கருத்து உண்டு. மேம்போக்கான பார்வைக்கு இது சரியாகவே தோன்றும். ஆனால் இது பகுப்பாய்வுக்குரியது.
ஊழல் செயற்பாடுகள் – அதிகார துஸ்பிரயோகங்கள் – பெண் உரிமை – சிறுவர் மற்றும் முதியோர் நலன்கள் என்று சமூகப் பிரச்சினைகளைக் கையாளும் போது, நடுநிலைமை என்பது தார்மீக நிலைப்பாடாகும்.

ஆனால் தேசிய நலன் சார்ந்த அரசியலுக்கு நடுநிலைமை இல்லை. இங்கே நடுநிலைமை என்பது ஆபத்தானது. இந்த நலன் சார் அரசியலில் பக்கம் சார்ந்திருப்பதே தர்மம்.

ஈழத் தமிழர்களின் இன அழிப்புப் பற்றி நடுநிலையாக சிங்கள ஊடகங்கள் பேசியதுண்டா?
இரு நாட்டின் நலன் சார்ந்த அரசியலில் தேசிய ஊடகங்கள் உலகளாவிய ரீதியில் நடுநிலையுடன் கருத்துக்களை வெளிப்படுத்தியதுண்டா?
சிங்களத்தின் அரசியல் சாசனம் நடுநிலையுடன் இல்லை. நீதித்துறை நடுநிலையுடன் இல்லை. எல்லாம் பக்கம் சார்ந்துள்ளன.

புகழ்பெற்ற உலக ஊடகங்களான BBC, CNN நிறுவனங்கள் அரசியலை நடுநிலையுடன் அணுகுகின்றன என ஒருவர் நம்பினால் அவர் அரசியற் குருடராகவே உள்ளார் என்பதே உண்மை.

எல்லாமே தத்தமது அரசுகளுக்கு – இனங்களுக்கு – நலன்களுக்கு ஆதரவாக பக்கம் சார்ந்தும் முன்உரிமை கொடுத்தும் இயங்குகின்றன.

எனவே நலன் சார்ந்த அரசியலில் நடுநிலை என்பது நடைமுறையில் இல்லை என்பதே யதார்த்தம்.

ஆகவே இலங்கையின் அரசியற் சூழலில் தமிழர் நலன் சார்ந்து தமிழ் ஊடகவியலாளர்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவது கடமையாகும்.

இன்றைய உலகில் ஊடகம் என்பது பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. பரபரப்பான செய்தி என்பது போட்டியில் முந்துவதற்காக ஊடகங்கள் பயன்படுத்தும் ஒரு தந்திரம். இந்தியப் பத்திரிகைகள் பெரும்பாலும் இதைச் செய்கின்றன. அதனால் தான் அவற்றிற்கு சமூகப் பொறுப்புணர்வு இல்லை என்ற பரவலான குற்றச்சாட்டுகளும் உள்ளன.
பொருளாதாரம் முக்கியமானது. ஆனால் இன நலனைவிட அதை முக்கியமாகப் பார்ப்பது துரோகத்தனமானது. பொருளாதார நலன் சார்ந்து தமிழ் அரசியல்வாதிகள் பலர் கொழும்பைச் சார்ந்துள்ளனர். முக்கிய தருணங்களில் இத்தகைய அரசியல்வாதிகள் இன நலனை விடுத்து தமது சொந்தப் பொருண்மிய நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து சிங்கள அரசின் தமிழர் விரோத நிலைப்பாடுகளுக்கு ஆதரவு கொடுப்பதை எவரும் மறுக்க முடியாது. இந்த இழி நிலை பலமுறை நடந்துள்ளது.
தமிழ் அரசியல்வாதிகளின் – குறிப்பாகத் தலைமைகளின் அரசியல் நலன்கள் மட்டுமல்ல, அவர்களின் பொருளாதார நலன்களும் தமிழர் நிலத்திலேயே மையம் கொண்டிருப்பதே தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பானதாகும்.

ஒரு இனம் அது அந்தஸ்துடன் இருந்தால் ஊடகங்களை தமது இனம் – நாடு சார்ந்து அரசாங்கம் நெறிப்படுத்தும்.

ஒரு இனம் பலமான அரசியல் இயக்கத்தை பெற்றிருந்தால், அந்த இயக்கம் ஊடகங்களை இன நலன் சார்ந்து நெறிப்படுத்தும்.

இப்படித்தான் புலிகள் இயக்கம் தமிழ் ஊடகங்களை தமிழர் இனநலன் சார்ந்து நெறிப்படுத்தியிருந்தது. அதனால் கருத்தியல் ரீதியாக தமிழர்கள் ஒரு குடையின் கீழ் ஒன்று திரண்டு இரந்தார்கள். அதன் பலன்களையும் அடைந்தனர்.

இப்போது ஈழத்தமிழர்களுக்கு பலம் வாய்ந்த ஒரு தலைமை இல்லை. இன்று 6 தமிழ்க் கட்சிகள் ஒரு அணியில் திரண்டு நின்று இன நலன் சார்ந்து இராஜதந்திர முயற்சி எடுத்தாலும் அது இன்னும் பலமான கூட்டுத்தலைமையாக உருவாகவில்லை.

இந்த இக்கட்டான சூழலில் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் தான் தமிழ் இனத்தின் அரசியல் நலன் சார்ந்த கருத்து மண்டலத்தின் தலைமைப் பாத்திரத்தை வகிக்கின்றார்கள் என்ற வரலாற்றுப் பொறுப்பை ஊடகவியலாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தனித்தொரு தலைமையின் கீழ் இவ்வாறான அரசியல் நகர்வு நடந்திருந்தால் அது ஒரு கட்டுக் கோப்புக்குள் இருக்கும் வாய்ப்பு அதிகம். ஆனால் 6 தலைமைகள் இதில் பங்கெடுப்பதால், அனைத்துத் தலைவர்களும் நாவடக்கத்துடன் நடந்து கொள்வது அவசியம்.

இத் தலைவர்கள் கூட்டுப் பொறுப்பை மறந்து தனிப்பட்ட கருத்துக்கள் கூறுவதோ, நட்பு வட்டாரத்தில் உளறிக் கொட்டுவதோ தவிர்க்கப்பட வேண்டும். இது எதிரிகளுக்கு அவல் கிடைத்தது போலாகி விடும். கூட்டுத் தலைமை என்ற ஒற்றுமையும் தொலைந்து விடும்.

வரலாறு, மீண்டும் ஒருமுறை தமிழினத்திற்கு வழங்க முன்வந்துள்ள பொன்னான வாய்ப்பைப் பற்றிப் பிடிக்கப் போகின்றதா, அல்லது கை நழுவி விடப் போகின்றதா. காலம் பதில் சொல்லும்.

இலக்கு மின்னிதழ் 169 பிப்ரவரி 12, 2022 | Weekly Epaper 169

தமிழ் மகன்

உலகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடும் ‘உலகத் தமிழ் பாராளுமன்றம்’

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு மற்றும் உலகத் தமிழ் வர்த்தக சங்கம் கடந்த 7 ஆண்டுகளாக உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு நடத்தி வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள், தமிழ் சங்கங்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், பொருளாதார நிபுணர்கள், தாய் தமிழகத்திற்கு வந்து தம் உறவுகளை சந்தித்து சமுதாயம் மேம்படுவதற்கான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாண்டு மார்ச் 11 ஆம் திகதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டில் ஒரு நிகழ்வாக உலகத் தமிழ் பாராளுமன்றமும் கூட உள்ளது.

கலை, கலாச்சாரம், கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேற்றமடைய நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்யவும் அயல்நாடுகளில் நமக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்யவும் இவ்வமைப்பின் மூலம் பலர் பயன் பெறுகின்றனர்.

இதுவரை இணையத்தில் நடைபெற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராஜ்யசபா உறுப்பினர்கள், செனட்டர்கள், தேசிய உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்கள், பெரும்பான்மையான உறுப்பினர்கள் நேரடியாகவும்,இணையத்திலும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இந்நிகழ்வில் 12 நாடுகளில் 152 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாங்கள் வசிக்கும் நாட்டில் அரசாங்கத்தின் மூலம் தமிழர்களை கல்வி பொருளாதாரத்தில் எப்படி மேம்படுத்தலாம் எனவும், 12 நாட்டு அரசாங்கத்தின் உதவிகளை பெறவும் ராஜாங்க உறவை மேம்படுத்த இந்த உலகத் தமிழ் பாராளுமன்றம் பேருதவியாக இருக்கும் என உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவரும் உலகத் தமிழ் பாராளுமன்ற அமைப்பாளர் செல்வகுமார் தெரிவித்தார்.

Posted in Uncategorized

திட்டமில்லாத அரசாங்கமும் திட்டமிடல் இல்லாத ஜனாதிபதியும் – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி தெரிவிப்பு

திட்டமில்லாத அரசாங்கமும் திட்டமிடல் இல்லாத ஜனாதிபதியுமே காணப்படுகின்றனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியா பாரதிபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

விவசாயிகளின் வயிற்றில் கை வைத்ததால் இன்று அரசாங்கம் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது.

இன்றையை விலைவாசி உயர்வால் சாதாரணமான மக்களுக்கு வருமானம் குறைவாக உள்ள நிலையில் பொருட்களின் விலை அதிகமாக காணப்படுகின்றது. விலை நிர்ணயம் இல்லாமல் போய் விட்டது. தற்போது அறுவடை இடம்பெறும் நிலையில் விவசாயிகளுக்கு போதிய விளைச்சல் இல்லாமல் காணப்படுகின்றது.

ஒரு திட்டமில்லாதஅரசாங்கமும் திட்டமிடல் இல்லாத ஜனாதிபதியுமாக காணப்படுகின்றனர். 10 ஏக்கர் விவசாயம்செய்தவர்களை 2 ஏக்கரை இயற்கை முறையில் செய்யுங்கள் என கூறியிருக்கலாம். இல்லையேல் இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு நெல்லினை 100 ரூபாவுக்கு பெறலாம் என தெரிவித்திருந்தால் ஏதாவது முயற்சி செய்து விவசாயிகள் செய்திருப்பார்கள். பழக்கம் இல்லாத விவசாயி இதனை செய்ய முடியாதுள்ளது.

வவுனியாவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முயற்சி செய்து கடந்த அரசாங்கத்தால் யாழ் பல்கலைக்கழகத்துடுன் இருந்து வளாகம் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. இதனை ஜனாதிபதி திறந்து வைக்கின்றார். நம் அபிவிருத்தி எதிரானவர்கள் அல்ல. ஆனால் தமிழ், சிங்களம், ஆங்கிலத்தில் வரவேற்பு நுழைவாயில் காணப்பட்டது.
ஆனால் தற்போது தமிழ்மொழி அகற்றப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்திற்குள் நுழையும்போது சிங்கள மொழியே தெரியவேண்டுமாம். அரசியல் அமைப்பில் தமிழ் சிங்கள மொழிகள் சம அந்தஸ்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனால் அவ்வாறுள்ள மொழிக்கு பாகுபாடு காட்டப்பட்டுள்ளது.

எமது தமிழ் மொழி இல்லாத இடத்திற்கு சென்று கலந்துகொள்வதனை நாம் விரும்பவில்லை. ஆனால் பல்கலைக்கழகமொன்று வரவேண்டும் என்று முயற்சி எடுத்தோம் அது அமைந்துள்ளது. அது சந்தோசம்.

ஆனால் மொழிக்காகவும் நிலத்திற்காகவுமே நாம் பல போராட்டங்களை செய்தோம். ஆனால் இன்று புறக்கணிக்கப்படுகின்றோம் என தெரிவித்தார்.