பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்த முன்மொழிவுகளில் முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை – ஐரோப்பிய ஒன்றியம்

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பை வெளியிட்டிருக்கும் அதேவேளை, மிகமுக்கியமான பல்வேறு விடயங்கள் அந்தத் திருத்தங்களில் உள்ளடக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

அத்தோடு பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பயன்பாட்டைக் குறைக்குமாறும் எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி அச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை பிணையில் விடுதலை செய்வதற்குரிய சாத்தியமான நடவடிக்கைளை முன்னெடுக்குமாறும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியிருக்கின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 24 ஆவது கூட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை புருசேல்ஸில் நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய, பசுபிக் வெளிவிவகாரசேவையின் பிரதி நிறைவேற்றுப்பணிப்பாளர் பவோலா பம்பலோனி மற்றும் இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் தலைமையிலான பிரதிநிதிகளுக்கிடையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

அதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 24 ஆவது கூட்டம் நட்பானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான முறையில் நடைபெற்றதுடன் இதன்போது இருதரப்பு நல்லுறவு குறித்த மீளாய்வும் இடம்பெற்றது.

அதுமாத்திரமன்றி ஆட்சி நிர்வாகம், நல்லிணக்கம், மனித உரிமைகள் தொடக்கம் வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, காலநிலை மாற்றம், சுற்றாடல், பல்துறை ஒத்துழைப்பு, பாதுகாப்பு, பயங்கரவாத முறியடிப்பு வரை இருதரப்பினதும் அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாள்வதற்கான இலங்கையினால் செயற்திறனான முறையில் முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அதன் பாராட்டை வெளிப்படுத்தியது. அதேவேளை வைரஸ் தொற்றுப்பரவல் காரணமாக உருவாகியிருக்கும் இயலாமை மற்றும் சமத்துவமின்மை தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஐரோப்பிய ஒன்றியம், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளும் கொவிட் – 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்வதற்கான கடப்பாட்டைத் தாம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தது. அதனைக் கேட்டறிந்துகொண்ட இலங்கை, உலகின் அனைத்து நாடுகளுக்கும் சமத்துவமான முறையில் தடுப்பூசிகள் பகிரப்படுவதை உறுதிசெய்வதில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிவரும் தொடர்ச்சியான பங்களிப்பிற்குத் தனது பாராட்டை வெளியிட்டது.

அதேவேளை மேற்படி இருதரப்புக்கலந்துரையாடலின்போது ஜனநாயகம், நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி, சிறுபான்மையினர், பெண்கள், சிறுவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய தரப்பினரின் உரிமைகள் உள்ளடங்கலாக மனித உரிமைகள், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

மேலும் நல்லிணக்கப்பொறிமுறையிலும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீனக்கட்டமைப்புக்களின் நடவடிக்கைகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தெளிவுபடுத்தியது.

இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடனும் அதன் பொறிமுறையுடனும் நெருங்கிய தொடர்பையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து பேணுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை ஊக்குவித்தது.

அத்தோடு மேற்படி சுயாதீனக்கட்டமைப்புக்கள் சுதந்திரமாகவும் செயற்திறனுடனும் இயங்கவேண்டியதன் அவசியத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது. அதுமாத்திரமன்றி இக்கலந்துரையாடலின்போது சிவில் சமூக அமைப்புக்களை வலுப்படுத்துதல் மற்றும் அவற்றின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான இடைவெளியை உறுதிசெய்தல் என்பவற்றின் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் ஏற்றுக்கொண்டதுடன் இலங்கையில் நீதி மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க முயற்சிகளு;ககு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்தது.

அதேவேளை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத் திருத்தங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அதன் வரவேற்பை வெளியிட்டபோதிலும், மிகமுக்கியமான காரணிகள் வர்த்தமானி அறிவித்தல் வடிவில் வெளியிடப்பட்டுள்ள திருத்தங்களில் உள்ளடக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியது.

இதுவிடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் வெளிப்படுத்திய கரிசனை குறித்து அவதானம் செலுத்திய இலங்கை, சர்வதேச நியமங்களுக்கு அமைவாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் திருத்தியமைப்பதற்கு அவசியமான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தது.

மேலும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பயன்பாட்டைக் குறைக்குமாறு அறிவுறுத்திய ஐரோப்பிய ஒன்றியம், எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை பிணையில் விடுதலை செய்வதற்குரிய சாத்தியமான நடவடிக்கைளை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தியது.

அடுத்ததாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் வர்த்தகத்தொடர்புகள் குறித்து இதன்போது இருதரப்பும் அவதானம் செலுத்தின. அதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உற்பத்திகள் இலங்கையின் சந்தைக்குள் பிரவேசிப்பதைத் தடுக்கின்ற இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் வலுவாகக் கேட்டுக்கொண்டது.

அதற்குப் பதிலளித்த இலங்கை, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாட்டுக்கையிருப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியைக் கையாள்வதற்காக அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி தொடர்பில் தற்காலிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகத் தெளிவுபடுத்தியது. அத்தோடு இந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியான மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருவதாகவும் தெரிவித்தது.

மேலும் நாட்டின் நிலைபேறான அபிவிருத்திக்குப் பங்களிப்புச்செய்யக்கூடிய விதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் தமது வரவேற்பை இலங்கை வெளிப்படுத்திய அதேவேளை, கடந்த 2021 செப்டெம்பரில் முன்னெடுக்கப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் மீளாய்வு நடவடிக்கைகளின்போது இலங்கையைச் சேர்ந்த அனைத்துத்தரப்பினராலும் வழங்கப்பட்ட ஒத்துழைப்பை ஐரோப்பிய ஒன்றியம் நினைவுகூர்ந்தது.

அத்தோடு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைத்திட்டத்தின்கீழ் மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சூழல் பாதுகாப்பு, சிறந்த நிர்வாகம் உள்ளடங்கலாக இலங்கை கொண்டிருக்கக்கூடிய 27 சர்வதேசக்கடப்பாடுகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டதுடன் அவற்றை உரியவாறு நிறைவேற்றுவதற்கான தமது கடப்பாட்டை இலங்கை மீளவலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் மனித உரிமை துஸ்பிரயோகங்கள் முடிவிற்கு வராது-சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கை அரசாங்கத்தின் பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்கான முன்மொழிவுகள் மூலம் அரசாங்கத்தின் மனித உரிமை துஸ்பிரயோகங்கள் முடிவிற்கு வராது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மதிப்பிழந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் மோசமான துஸ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம், இந்த சட்டத்தை கைவிடுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையின் ஏனைய வர்த்தக சகாக்களும் நிதி வழங்குநர்களும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் இலங்கை அரசாங்கம் இந்த சட்டத்தை கைவிட வேண்டும் என அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்தோடு பரந்துபட்ட துஸ்பிரயோகங்களை முடிவிற்கு கொண்டுவருவதற்கு உதவாத உத்தேச திருத்தங்களை நிராகரிக்க வேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Posted in Uncategorized

ரிஷாட் வௌிநாட்டு செல்ல அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் இந்த அனுமதியை 3 மாத காலத்திற்கு வழங்கியுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமகி ஜன பலவேகே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றிலும், தனது வீட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய சிறுமி தீயில் எரிந்து உயிரிழந்த வழக்கு தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றமும் பாராளுமன்ற உறுப்பினருக்கு பிணை வழங்கியிருந்தது.

13 ஆவது திருத்தத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்குவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சம்பந்தன்

“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வோர் தமிழ் மக்களின் நன்மை கருதிச் செயற்பட வேண்டும்.

தமது சுயலாப அரசியலுக்காகத் தமிழ் மக்களை நட்டாற்றில் விடும் வகையில் அவர்கள் செயற்படக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

13 ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது படுமுட்டாள்தனமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“அரசமைப்பில் முதன்முறையாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதைத் தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக ஏற்க முடியாது. இதைத் தீர்வுக்கான முதல் படியாக வைத்துக்கொண்டு நாங்கள் முன்னோக்கி நகர்ந்து வருகின்றோம்.

இந்நிலையில், 13ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது படுமுட்டாள்தனமானது.

இப்படியான செயற்பாடு, இருப்பதையும் இழப்பதற்குச் சமமானது. அதனால் தான் 13ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரி வருகின்றோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இந்தியாவை ஏமாற்றுவதற்கான மற்றுமொரு நகர்வே பீரிஸின் புதுடில்லிக்கான விஜயம்-கருத்து வெளியிட்டார் விக்னேஸ்வரன்

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் புதுடில்லிக்கான விஜயம் இந்தியாவை ஏமாற்றுவதற்கான மற்றொரு நகர்வாகவே உள்ளது என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கட்சியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் தற்போதைய இந்திய விஜயம் தொடர்பாக ‘ரைம்ஸ் எப் இந்தியா’வுக்கு கருத்துவெளியிட்ட போதே விக்;னேஸ்வரன் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவித்தவை வருமாறு:

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் புதுடில்லிக்கான விஜயம் இந்தியாவை ஏமாற்றுவதற்கான மற்றொரு நகர்வாகவே உள்ளது. இந்தியா தமது நட்பு நாடு என அவர்கள் நடிப்பார்கள். தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு விடயத்தில் இந்தியா தலையிடாமலிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக போலியான வாக்குறுதிகளை அவர்கள் வழங்குவார்கள்.

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவது உட்பட, இந்தியாவுக்கு கடந்த காலங்களில் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. இந்திரா காந்திக்குப் பின்னர் இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை தோல்வியையே சந்தித்திருக்கின்றது. அதன் விளைவாகத்தான் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்திருக்கின்றது.

இருந்த போதிலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் குஜாராத் முதலமைச்சராக இருந்த போது நான் அங்கு சென்றிருக்கின்றேன். அவர் இலங்கையின் போலி வாக்குறுதிகளை நம்பாமல் இலங்கை தொடர்பில் மிகவும் அவதானமாக இருந்து, தீர்க்கமான செயற்பாடுகளை முன்னெடுப்பார் என நான் நம்புகின்றேன்.

தமிழ் மக்களுடைய சட்டரீதியான உரிமைகளை உறுதிப்படுத்தவும், அவர்களுடைய தொடர்ச்சியான இருப்பை உறுதிப்படுத்தவும் இந்தியப் பிரதமர் துணிச்சலாகச் செயற்படுவார் என இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். எம்மை வலுப்படுத்துவதற்காக இந்தியா எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் இந்தியாவின் பாதுகாப்புக்கும் உகந்ததாக இருக்கும். ஆக, பேராசிரியர் பீரிஸின் பேச்சுவன்மையில் இந்தியா ஏமாற்றுப்பட்டுவிடக்கூடாது என்பதுதான் என்னுடைய ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.

Posted in Uncategorized

கடலில் இறப்புக்கள் நடைபெறுவதற்கு கடற்படையே காரணம் – சார்ள்ஸ் எம்பி

இறப்புக்கள் நடைபெறுவதற்கு கடற்படையே காரணம்: இந்திய பிரதமருக்கு தமிழ் கட்சிகளால் கடிதங்கள் கொடுத்ததன் பிற்பாடுதான் கடலில் இறப்புக்கள் நடைபெறுகிறது. இது இலங்கை அரசாங்கத்தின் ராஜதந்திர நடவடிக்கையாகவே பார்க்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்தியா பதின்மூன்றாம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது அதிகார பகிர்வு வேண்டும் என்று தமிழ் கட்சிகளால் கொடுக்கப்பட்ட கடிதங்களின் பின்னணியில் சம்பவங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்கிறது. இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள்தான் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஆகவே கடிதம் கொடுத்ததன் பிற்பாடு இந்திய மத்திய அரசாங்கம் இலங்கையில் ஒரு அழுத்தத்தை மேற்கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை உருவாக்கியது இந்தியா. இந்தியாவுக்கு பொறுப்பு இருக்கிறது.

எங்களுடைய தாய்நாடு இந்தியா, ஆகவே இலங்கையில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எல்லா பிரதிநிதிகளும் இணைந்து ஒரு விடயத்தை முன்வைக்கின்ற போது அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஒரு கடப்பாடு இந்தியாவுக்கு இருக்கிறது.

ஆனால் தற்போது தமிழ்நாட்டையும், இலங்கை தமிழர்களையும் முரண்படுகின்ற வகையில் இலங்கை அரசாங்கம் தந்திரோபாய திட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகிறது. அதாவது வடபகுதியில் இருக்கின்ற மீனவர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கும் இடையில் தற்போது ஒரு முரண்பட்ட நிலையை இலங்கை அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது.

இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி எங்களுடைய மக்களை தங்களுடைய சொந்த நிலங்களில், சொந்த கடலில் மீன் பிடிப்பதற்கு ஏற்ற நிலைமையை உருவாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது.

ஆனால் தற்போது வடக்கு கடலில், இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் முரண்பட்டு மரணிக்கும் சம்பவங்கள் நடைபெறுகிறது.

அண்மையில் நான்கு உயிர்கள் பறிபோயிருக்கிறது. இதில் சந்தேகம் இருக்கிறது. இந்திய பிரதமருக்கு கடிதங்கள் கொடுத்ததன் பிற்பாடுதான் இந்த சம்பவங்கள் கடலில் நடைபெறுகிறது. ஆனால் கடலில் இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் சண்டை பிடித்தார்கள் என்பதற்கு எந்த விதமான ஒரு ஆதாரமும் இல்லை. ஆனால் அவர்கள் இறக்கிறார்கள். எப்படி இறக்கிறார்கள்?

என்னை பொறுத்தவரையில், இது இலங்கை அரசாங்கத்தினுடைய ஒரு ராஜதந்திர நகர்வாக கடற்படையினுடைய செயற்பாடாக இருக்க வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இனப்பாரபட்சம் காட்டிவிட்டு அம்பிகாவை சாடுவது ஏன்? மனோ கணேசன் எம்பி

எங்கள் ஆட்சியின் போது, 29 ஒக்டோபர் 2019ம் வருடம் வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானியின்படி, நுவரெலியா, காலி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பழைய பிரதேச செயலகங்கள் பிரிக்கப்பட்டோ, தரமுயர்தப்பட்டோ புதிய முழுமையான பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்க முடிவு.

இதன்படி புதிதாக வந்த இந்த ஆட்சியில், காலியின் பழைய உப பிரதேச செயலகங்கள், புதிய முழு பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட்டு கோலாகலமாக திறந்தும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதே அரசாங்க வர்த்தமானியில் கூறப்பட்டுள்ள நுவரெலியா மாவட்டத்திற்கான ஐந்து மேலதிக முழு பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை உதாசீனம் செய்து விட்டு, இரண்டு உப பிரதேச செயலகங்களை மாத்திரம் பெயரளவில் இந்த அரசாங்கம் திறந்து வைத்துள்ளது.

காலிக்கு வெள்ளிக்கரண்டி; நுவரேலியாவுக்கு தகரம். இது இன பாரபட்சமில்லையா? அப்புறம் ஏன் மனித உரிமை செயற்பாட்டாளர் அம்பிகா சற்குருநாதன் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கிய சாட்சியத்தில் இந்நாட்டில் இன பாரபட்சம் இருப்பதாக கூறியது கண்டு வெளிநாட்டு அமைச்சர் ஜி. எல். பீரிஸ், இந்த வயதான வேளையில், பூமிக்கும், வானத்துக்குமாக குதிக்கிறார்? என தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபற்றி எம்பி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

மனித உரிமை செயற்பாட்டாளர் அம்பிகா ஒரு நீண்ட கால மனித உரிமை போராளி. அவரை பான் 2005ம் வருடம் முதல் அறிவேன். கொழும்பில் வெள்ளை வேன் கடத்தல்களுக்கு எதிராக எமது மக்கள் கண்காணிப்பு குழு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அவர் எம்முடன் இணைந்து செயற்பட்டார். அவர் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கிய சாட்சியத்தில் இந்த பிரதேச செயலகங்கள் பற்றி கூறினாரோ என எனக்கு தெரியாது. ஆனால் இந்நாட்டு இன பாரபட்ச நடப்பில் இது ஒரு சிறிய உதாரணம்.

கடந்த 74 வருட காலமாக இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு உரிமை பகிர்வு, அபிவிருத்தி இரண்டிலும், பித்தளை, தகர கரண்டிகள்தான் காட்டப்பட்டுள்ளன. அத்தனைக்கும் காலியை விட, நுவரேலியாவில்தான் இந்த பிரதேச செயலக பிரிவில் ஜனத்தொகை அதிகம். நீண்டகாலமாக அங்கே பிரதேச சபைகளே போதுமானளவு இல்லாமல் இருந்து அவற்றை நாமே பிரித்து பெற்றுக்கொடுத்தோம். இப்போது அவற்றுக்கு சமாந்திரமாக பிரதேச செயலகங்களை கேட்டால் கிடைக்கவில்லை. அமைச்சரவை தீர்மானம் எடுத்து வர்த்தமானி பிரகடனம் செய்தாலும் கிடைக்கவில்லை.

ஆனால், அதே வர்த்தமானியில் நுவரேலியாவுடன் சேர்ந்து அறிவிக்கப்பட்ட காலிக்கு கொடுக்கிறீர்கள். நுவரேலியாவில் தமிழர் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். ஒருவேளை நுவரேலியாவில் தமிழர் வாழாவிட்டால் கிடைத்திருக்கும். அப்படியானால், இதுதானே இன பாரபட்சம்?

அரசாங்க உடன்பாடு ஏற்பட்டு வர்த்தமானியில் பிரகடனம் செய்யப்படுவதுதான், இதில் மிக முக்கிய அங்கம். அதை நாம் செய்து முடித்து விட்டோம். ஆட்சி முன்கூட்டியே கலைக்கப்பட்டது. இன்றைய ஆட்சி நாம் விட்ட இடத்தில் இருந்து முன் கொண்டு செல்ல வேண்டும். காலிக்கு மாத்திரம் முன்கொண்டு செல்கிறார்கள். நுவரேலியாவுக்கு இல்லை. அப்படியானால், இந்நாட்டில் நாம் மாற்றாந்தாய் மக்கள். இதுதான் பாரபட்சம்.

வெள்ளி கரண்டி பெரும்பான்மை மக்களுக்கு என்றால், ஏனைய மக்களுக்கு பித்தளை கரண்டி. மலையக மக்களுக்கு பித்தளை கரண்டிகூட கிடைப்பதில்லை. வெறும் தகரம்தான். அதனால்தான் பிரதேச சபைகள் பெறுவதற்கே 1987ல் இருந்து முப்பது வருடங்கள் நமது மக்கள், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பங்காளி ஆகும்வரை காத்திருந்தார்கள். இத்தகைய இன பாரபட்சங்களைதான் அம்பிகா சற்குருநாதன் எடுத்து கூறியுள்ளார் என்பதை படித்த பேராசிரிய அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எடுத்து கூறுகிறேன்.

Posted in Uncategorized

சிறீதரனும் சாள்ஸும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு

இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் ஜேக்கப்புக்கும், யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்றைய தினம் மாலை, கொழும்பு.3 இலுள்ள பிரதி உயர்ஸ்தானிகரின் வதிவிடத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பின் போது,

தமது வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதற்கும், மாதகல் மற்றும், வத்திராயன் பகுதியில் சடலங்களாக கரையொதுங்கிய மீனவர்களின் இறப்புக்கு நீதிகோரியும் வடமராட்சி, சுப்பர்மடம் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களின் நியாயமான கோரிக்கைக்கு கூர்நோக்குடனான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு மீனவர்களிடையேயும் தொடர்ச்சியாக நிலவிவரும் இம்முரண்பாடுகள் ஈழத்தமிழர்களுக்கும், தாய்த்தமிழக உறவுகளுக்குமிடையே விரிசலை ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் முகமாக, இலங்கை மீனவர்களின் கடல் எல்லைகளை வரையறை செய்வதற்கேனும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற வேண்டுகோள் இரு பாராளுமன்ற உறுப்பினர்களாலும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் குறித்தும், தமிழ்மக்களின் ஏகோபித்த அரசியல் அபிலாசையான நிலையான அரசியற்தீர்வைப் பெறுவதில் ஏற்படுத்தப்படும் காலதாமதமானது, தமிழர்களின் நில உரித்துக்களை வன்பறிப்புச் செய்து, தமிழர்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தும் சமநேரத்தில் இந்தியாவின் அரசியல், இராஜதந்திர நகர்வுகளிலும் தாக்கம் செலுத்தக்கூடும் என்பதால், தமிழர்களுக்கான நிரந்தர அரசியல்தீர்வில் இந்தியாவின் வகிபாகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் சிறப்பாகக் கலந்துரையாடப்பட்டது.

மீனவப் படகுகள் ஏலம்: தமிழக முதல்வர் பிரதமருக்கு அவசர கடிதம்!

இந்திய மீனவர்களின் படகுகளை இலங்கை அரசாங்கம் ஏலத்தில் விடும் முயற்சிளை தடுத்து நிறுத்துமாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 105 மீன்பிடிப் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ள தமிழக முதல்வர், கவலைக்குரிய இந்த நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென பிரதமரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை விடுவிக்கவும் பிரதமர் அவசரமாக தலையிட வேண்டுமென தமிழக முதல்வர் தமது கடிதத்தில் கோரியுள்ளார்.

ஏலத்தைத் தடுத்துநிறுத்திடவும் 2018 ஆம் ஆண்டிற்கு முன்னர் சிறைபிடிக்கப்பட்ட 125 பழுதுபார்க்க இயலாத நிலையில் உள்ள தமிழகப் படகுகள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்பார்வையிட அதிகாரிகள் மற்றும் மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்களின் உத்தேச பயணத்திற்கு இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலையும் தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பான ஒப்பந்தம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் லங்கா ஐஓசி நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐஓசி மற்றும் ட்ரிங்கோ பெற்றோலியம் டேர்மினல் (பிரைவெட்) லிமிட்டட் ஆகிய நிறுவனங்களுக்கு இடையில் குறித்த உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை மேம்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

குறித்த ஒப்பந்தம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized