நினைவேந்தலில் மாற்றம் விடுதலைப் போராட்ட உண்மைகளை திரிபு படுத்திவிடும் – ரெலோவின் இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

தமிழர்களின் உண்மையான பூர்வீக வரலாறுகளை மறைக்கும் பாரிய நிகழ்ச்சித் திட்டத்தில் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் செயற்பட்டு வரும் போது தமிழர்கள் தடைகளுக்கு மத்தியில் அந்த வரலாற்று உண்மைகளை உயிர்ப்புடன் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய தார்மீக கடமையை கொண்டுள்ளனர் என்பதை ஒவ்வொரு தமிழரும் மறந்து விட முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்தார்.

அண்மையில் ஆயர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பிலும் நினைவேந்தலின் முக்கியத்துவம் குறித்தும் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

தமிழர்கள் தாம் வாழும் சம காலத்து வரலாற்று நிகழ்வுகளையே திரிபு படுத்தும் அபத்தமான காரியங்களில் இறங்கி விடக் கூடாது. காரணம் வரலாறு என்பது நிகழ்வுகள் நடந்த சம காலத்திலேயே பதிவு செய்யப்பட்டு ஆதாரப்படுத்தபட வேண்டும் அதுவே எதிர்காலத்தில் அதன் உண்மைத் தன்மைகளை உறுதி செய்யும். இவ்வாறான உண்மைகளை தொழில் நுட்ப முறைகளினில் மாற்றியமைக்க முடியாது.

உதாரணமாக மகாவம்சத்தில் அதன் உண்மைத் தன்மைகளை ஏற்க மறுப்பதற்கான காரணம் அந்த நூலில் இடம் பெற்ற சம்பவங்கள் கி மு 6 நூற்றாண்டில் நடந்தவை ஆனால் அதனை எழுதிய நூலாசிரியர் கி பி 6 நூற்றாண்டில் வாழ்ந்தவர் இந்த வேறுபாட்டுடன் குறிப்பிட்ட பல விடையங்களுக்கு ஆதாரம் இல்லை ஆகவே இவ்வாறான நிலை எதிர்காலத்தில் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாறுக்கும் ஏற்பட்டு விடக் கூடாது.

தமிழர்களின் விடுதலைப் போராட்ட உண்மைகளை சம காலத்திலேயே மாற்றியமைத்தால் இனத்தின் வரலாற்று இருப்புக்கு பாரிய பின்னடைவாக அமைவது மாத்திரமல்ல விடுதலைப் போராட்ட உண்மைகள் மறைக்கப்பட்டு விடும்.

சிங்கள் ஆட்சியாளர்கள் தடுக்கின்றார்கள் நினைவேந்தல்களை செய்யும் போது பயங்கரவாத தடைச் சட்டம் பாயும் என்பதற்காக வரலாற்று உண்மைகளை மாற்றி நினைவேந்தல் செய்வது ஆரோக்கியமான பணி அல்ல.

1948 ஆண்டில் இருந்து இன்றுவரை தொடரும் அடக்குமுறைகள் அழிவுகள் தியாக செயற்பாடுகள் யாவும் திரிபு படுத்தப்படாமல் தடைகளுக்கு மத்தியில் அனுஸ்டித்து அதன் உண்மைகளை இளைய தலைமுறைக்கும் உலகிக்கும் சொல்ல வேண்டும். தடைகள் என்பது தமிழ் மக்களுக்கு புதிய விடையம் இல்லை.

வடக்கு கிழக்கில் வாழும் அனைத்து தமிழர்களும் இனத்தின் விடுதலைப் போராட்டத்திற்கும் இன ஒற்றுமைக்கும் தமிழன் என்ற அடையாளத்துடன் பணியாற்றியதை யாரும் மறந்து விடமாட்டார்கள். இவ்வாறான சூழ்நிலையில் தற்போது வடக்கு கிழக்கு ஆயர்களின் ஒன்றியம் எடுத்த முடிவை மீள் பரிசீலனை செய்யுங்கள். யுத்தகாலத்திலும் அதற்கு பின்னதான மக்களின் புனர் வாழ்விலும் ஆயர்களது பணியை வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது அவை மிக அளப்பரிய பணி.

தமிழர்கள் ஆகிய நாம் எங்களுக்குள் முரண்படும் நிலையை தோற்றுவிக்காமல் வார்த்தைகளால் பொது வெளியில் விமர்சிக்காது ஒற்றுமையாக பயணிப்போம்.

மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை , நவம்பர் 27மாவீரர் நாள் உள்ளிட்ட அனைத்து நினைவேந்தல்களையும் தொடர்ந்து அதே காலப்பகுதியில் நடாத்தி சத்திய வேள்வியில் ஆகுதியாகிய அத்தனை தியாகிகள் மக்களினதும் வரலாறுகளையும் பாதுகாத்திடுவோம்.

பாரபட்சம் நீடித்தால் தனியான நகரசபைக்காக போராட வேண்டிய நிலையேற்படும் : மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்.

முஸ்லிங்களும், தமிழர்களும் ஒற்றுமையாக வாழும் கல்முனை மாநகரில் மாநகர முதல்வரின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை. மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேள்வியெழுப்பினால் ஒலி வாங்கியையும் உடைத்தெறிந்துவிட்டு சபையிலிருந்து வெளியேறி சென்றுவிடுகிறார். இந்த நிலை நீடித்தால் கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தல் போராட்டத்திற்கு மேலதிகமாக நாங்களும் நகரசபைக்கான கோரிக்கையை முன்னிறுத்தி போராடவேண்டிய நிலையேற்படும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.

புதன்கிழமை (17) மாலை கல்முனை தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கல்முனை மாநகரசபையினால் தடுத்து நிறுத்தப்படும் அபிவிருத்திகள் தொடர்பிலான விடயங்களை இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய தேவை எழுந்துள்ளது. தனிப்பட்டவர்களுடன் கொண்ட கோபத்தின் காரணமாக கல்முனைக்கு வரும் அபிவிருத்திகளை தடுத்துக்கொண்டிருக்கிறார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்காக கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி பணிப்பாளரினால் கல்முனை 12ஆம் வட்டாரத்தில் உள்ள பொதுமயான சுற்றுமதில் அமைக்க 13 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு பிரதேச செயலகத்தினால் அதற்கான முன்னெடுப்புக்கள் செய்யப்பட்டுவரும் சூழ்நிலையில் ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையில் கல்முனை முதல்வர் மற்றும் ஆணையாளர் அதற்கான அனுமதிகளை வழங்காமல் தமக்கு சாதகமானவர்களின் அரசியல் இருப்புக்காக இழுத்தடிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். அரச அதிகாரியான ஆணையாளர் அரசியல்வாதியை போன்று செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது. கல்முனை தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தியை விரும்பாதவர்களுக்கு கல்முனை முதல்வர் சாதகமாக செயற்படுகிறார்.

அது மட்டுமின்றி மழைகாலம் ஆரம்பிக்கவுள்ளதால் பாண்டிருப்பு பிரதேசத்தில் இந்த வார ஆரம்பத்தில் வடிகான்களை துப்பரவு செய்யும் பணியில் கல்முனை மாநகர சுகாதார ஊழியர்களும், இயந்திரமும் வேலை செய்து கொண்டிருந்த போது கல்முனை பொலிஸில் கடமையாற்றும் ஒரு உப பொலிஸ் பரிசோதகரும், அவருடன் வந்த இன்னும் சில பொலிஸாரும் மதுபோதையில் தடுமாறியவர்களாக வாக்குவாதப்பட்டு அந்த ஊழியர்களை பொய்யான வழக்கை பதிவுசெய்து கைதுசெய்வேன் என்று மிரட்டி தாக்க முற்பட்டார்கள். அப்போது அந்த வழியால் வந்த நான் இது தொடர்பில் தலையிட்டு நியாயம் கேட்டேன். இன்றுவரை இதுதொடர்பில் கல்முனை முதல்வரோ அல்லது அவருடன் இணைந்திருப்பவர்களோ, மாநகர நிர்வாகிகளோ அந்த சுகாதார ஊழியர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்க முன்வராமல் மௌனியாக இருக்கிறார்கள். மட்டுமின்றி அந்த அப்பாவி சுகாதார ஊழியர்களையும் சிலர் அதிகாரத்தொனியில் மிரட்டுகிறார்கள். இது தொடர்பில் நாங்கள் மிகவும் கவலையுற்றுள்ளோம்.

பொதுமயான சுற்றுமதில் அமைக்கும் பணிகளை கிராம அபிவிருத்தி சங்கம் ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டு ஆரம்பித்துள்ள போது மாநகர சபையினால் தடுத்து நிறுத்தப்பட்ட விடயம் தொடர்பில் கடந்த சபை அமர்வில் நான் கேள்வியெழுப்பினேன். அப்போது முதல்வர் அவரது ஒலிவாங்கியையும் உடைத்தெறிந்துவிட்டு சபையிலிருந்து வெளியேறி சென்றுவிட்டார். இந்த நிலை நீடித்தால் பிரதேச செயலக போராட்டத்திற்கு மேலதிகமாக நாங்களும் எதிர்காலத்தில் எங்களுக்கான தனியான நகரசபைக்கான கோரிக்கையை முன்னிறுத்தி போராடவேண்டிய நிலையேற்படும் என்றார்.

Posted in Uncategorized

இலங்கை அடுத்த மாதம் முதல் இருளில் மூழ்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இலங்கை அடுத்த மாதம் முதல் இருளில் மூழ்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாத இறுதியில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தீர்ந்துவிடும் என்றும் அன்றிலிருந்து நாட்டு மக்கள் இருளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பழுது நடவடிக்கை காரணமாக சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்படவில்லை என்றும் மசகு எண்ணெய்க்குச் செலுத்த வேண்டிய டொலர்கள் இல்லாத காரணத்தினால்தான் மூடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், விமான நிலையத்திற்கான எரிபொருள் நிறுத்தப்பட்டு ஸ்ரீலங்கன் விமானச் சேவையும் நிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு நீதிமன்றால் தடையுத்தரவு

வருடம்தோறும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய வருடந்தோறும் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை மாவீரர் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்ற நிலையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி துயிலுமில்லங்களில் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு ஆண்டு தோறும் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருவதோடு கடந்த 2009 ம் ஆண்டு முதல் மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஸ்ரிக்க முடியாத நிலை உருவாக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 2018 ம் ஆண்டு நல்லாட்சி காலத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்ய அனுமதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிலையில் கடந்த வருடம் முதல் நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பெற்று இந்த அரசாங்கம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்து வருகின்றது.

இதனிடையே இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து அதற்கான தடையுத்தரவை பெறுவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதனடிப்படையில் முல்லைத்தீவு பொலிஸாரினால் இன்று மாங்குளம் நீதிமன்றில் AR 868/21 வழக்கினூடாக முல்லைத்தீவு பொலிஸ் பிரதேசத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனடிப்படையில் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் பன்னிரெண்டு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் பொருளாளருமான அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இழஞ்செழியன், சமூக செயற்பாட்டாளர் முத்துராசா சிவநேசராசா (கரன்), முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் (முல்லை ஈசன்), சமூக செயற்பாட்டாளர் இசிதோர் அன்ரன் ஜீவராசா, முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி, சமூக செயற்பாட்டாளர் பேதுருப்பிள்ளை ஜெராட், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சமூக செயற்பாட்டாளர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன் ஆகிய பன்னிரெண்டு பேர் மற்றும் இவர்களது குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

காணி அளவிட வந்த அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்

யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில், கடற்படையினரின் தேவைக்காக,  தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக, இன்று (17) முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டு பணிகள், மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளன.

மாதகல் – ஜே150 கிராம சேவையாளர் பிரிவில், தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர், அக்காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகள்,  இன்றைய தினம் (17) முன்னெடுக்கப்படவிருந்தன.

இதன் போது, காணிகளை அளவீடு செய்வதற்காக நிலஅளவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் வருகை தந்த போது, காணி உரிமையாளர்கள் , அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்தவர்கள், கடும் எதிர்ப்பை தெரிவித்ததை அடுத்து , காணி அளவீட்டுப் பணிக்கு வந்தவர்கள் திரும்பி சென்றனர்.

பதவியிலிருந்து ஞானசாரரை தூக்குங்கள் – ரவூப் ஹக்கீம்

ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக
நியமிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டுமென ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்
வலியுறுத்தினார்.

வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நேற்றைய (16)
விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
போராட்டங்களுக்கு ஏன் அரசாங்கம் இப்படி பயப்படுகிறது என்றும் அவர்
கேள்வியெழுப்பினார்.
கொரோனா வைரஸ் பரவலைக் காரணங்காட்டி அரசாங்கம் போராட்டங்களை
அரசாங்கம் தடுத்து வருகிறது. நாட்டின் பெரும்பான்மை நீதிமன்றங்கள் தடை
உத்தரவை பிறப்பிக்க மறுத்துள்ள நிலையில், அதனை மதிக்காது
போராட்டங்களுக்கு வருபவர்களை பொலிஸார் தடுத்துள்ளனர் எனவும்
தெரிவித்தார்.

உரத் தடையின் பிரதிபலனை பெரும்போகத்துக்குப் பின்னர் பார்க்க முடியும்.
நாட்டில் பாரிய பெரும் பஞ்சமொன்றுக்கு நாட்டு மக்களை அழைத்து செல்லும்
செயற்பாடாகவே நாம் பார்க்கிறோம் எனவும் தெரிவித்தார்.

ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக நாட்டில்
இனவாதத்தையும், வெறுப்பையும் பரப்பும் பௌத்த பிக்குவை தலைவராக
நியமிக்கப்பட்டுள்ளார். அவரை உடனடியாக அந்த பதவியிலிருந்து நீக்க
வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Posted in Uncategorized

‘கஞ்சா வளர்ப்போம் – கடன் தொல்லையை தீர்ப்போம்’என அரசாங்கத்திற்கு டயானா கமகே ஆலோசனை

கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2025 ஆம் ஆண்டளவில் கஞ்சாவுக்கான உலக சந்தை மதிப்பு $8.6 பில்லியன் முதல் $10.5 பில்லியன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பெரும்பாலான மருந்துவ பயிர்களை முறையாக பயிரிட்டு, ஏற்றுமதி செய்து, அந்நியச் செலாவணியைப் பெற முடியும். நாம் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்ல வேண்டியதில்லை.

யாரிடமும் கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை. தேயிலை, இறப்பர், தெங்கு போன்றவற்றுக்கு கடந்த காலங்களில் சர்வதேச அரங்கில் காணப்பட்ட கிராக்கி தற்பொழுது கிடையாது.

கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை.

இயற்கை வளங்களை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு பாரிய பொருளாதார நலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

நெடுங்கேணியுடன் அநுராதபுரத்தின் 3 கிராம சேவை பிரிவுகளை இணைக்க முன்மொழிவு

வவுனியா வடக்கு – நெடுங்கேணி பிரதேச செயலகத்துடன் அநுராதபுரத்தில் உள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஆயிரம் குடும்பங்களை இணைப்பதற்கு, மாவட்டச் செயலாளர், முன்மொழிவொன்றை, எல்லை நிர்ணயக் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளதாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

சிங்கள குடியேற்றங்களிற்கெதிராக வவுனியா வடக்கில், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அரசாங்கம் இந்த மாவட்டத்தின் எல்லையின் ஓர் இஞ்சியைக் கூட்டுவதாக இருந்தாலும் சரி, குறைப்பதாக இருந்தாலும் சரி, இந்த மாவட்டத்திலுள்ள மக்களின் கருத்துகள், மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகள் எதையும் அறியாமல், வவுனியா மாவட்டச் செயலாளர் ஊடாக எல்லை நிர்ணயக் குழுவுக்கு அநுராதபுரத்தில் உள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவுகு உட்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை, நெடுங்கேணி பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கான ஒரு முன்மொழிவு, எல்லை நிர்ணயக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

முஸ்லிம்களை பயமுறுத்தலாம் என்றா எதிர்பார்க்கின்றீர்கள்? – நாடாளுமன்றில் ரிஷாட் கேள்வி

இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாக வைத்துகொண்டு நீண்டகாலம் ஆட்சி செய்ய முடியாது எனவும், அரசுக்கு வாக்களித்த மக்கள் கூட இன்று வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இன்று (16) நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

இன்று நாட்டு மக்கள் பெரிதும் கஷ்டப்படுகின்றார்கள். நீங்கள் உங்கள் தொகுதிகளுக்கு சென்று அந்த மக்களுடன் உரையாடினீர்கள் என்றால் விவசாயிகள் படுகின்ற வேதனைகள் புரியும். அரசாங்கத்தை உருவாக்கிய விவசாயிகள் கூட தங்களது எதிர்காலம் பூச்சியமாகிவிடும் என்ற அச்சத்தில் காலம் கடத்துகின்றார்கள். அவர்களின் அன்றாடத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்றனர். இன்று பாதையில் நிற்கும் அத்தனை பேரும் அரசுக்கு எதிரானவர்கள் அல்ல. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர், எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அவர்களின் தேவைப்பாட்டை நிறைவேற்றக் கூடிய வகையில், உங்கள் உள்ளத்தில் மாற்றம் வர வேண்டும்.

இந்த வரவு செலவுத் திட்டத்தை எடுத்துக்கொண்டால் பாதுகாப்பு விடயத்துக்காக நிதி அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு என்று கூறும் போது, வெறுமனே ஆயுத ரீதியானது மட்டுமின்றி ஒரு மனிதனின் உணவு, வறுமையை நீக்குதல், இருப்பிட வசதி, சுகாதார வசதி, கல்வி மற்றும் இன்னோரன்ன விடயங்களை வழங்குவதும் கூட பாதுகாப்புடன் தொடர்புபட்டதே. எனவே, அந்த விடயத்துக்கு இந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடுகள் போதாமையாக உள்ளது.

இந்த அரசாங்கம் மட்டுமின்றி, கடந்த காலங்களிலும் வரவு செலவு திட்டத்தை பார்க்கும் போது, தேர்தலை மையமாக வைத்துக்கொண்டோ, கட்சியை வளர்ப்பதற்காகவோ செயற்பட்டதனால்தான், 70 வருடங்களுக்கு முன்னர் நாம் சுதந்திரத்தைப் பெற்ற போதும், இன்னும் அதலபாதாளத்தில் இருக்கின்றோம். இதனால்தான் ஒவ்வொரு வருடமும் நமது நாட்டின் கடன் சுமை அதிகரித்துக்கொண்டே போகின்றது. பொருளாதாரம் சீரழிகின்றது. உலக வரைபடத்திலே வறுமையான நாடாக பதியப்பட்டுள்ளது. எனவேதான், இந்த நிலையை மாற்றுவார் என்ற பெரிய எதிர்பார்ப்புடன் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சுமார் 69 இலட்சம் மக்கள் வாக்களித்தனர். அந்த நம்பிக்கையில்தான் பாராளுமன்றத் தேர்தலிலே கிட்டத்தட்ட 142 ஆசனங்கள், அதாவது, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறக்கூடிய வகையில் அவரது அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தனர்.

நமது பாராளுமன்றத்திலே இருக்கின்ற மூத்த அரசியல்வாதிதான் மஹிந்த ராஜபக்ஷ. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடத்திலும் பாராளுமன்றத்திலும் இருந்த அதிகாரங்கள், இருபதாவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியிடம் கைமாறப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷ என்ற ஒரு நாமம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் பேசப்பட்ட ஒன்று. அவரது அரசாங்கத்தில் ஒன்பது வருடங்களாக நானும் இணைந்து பணியாற்றியிருக்கின்றேன். அவரது தேர்தல்களிலே அவருக்கு பக்கபலமாக இருந்தவன் என்ற வகையிலே அவரது அமைச்சரவையிலே சுமார் ஒன்பது வருடங்கள் பணியாற்றியவன் என்ற வகையில் அவரிடம் இருந்த தூர சிந்தனையை நாம் கண்டோம்.

நாட்டைப் பற்றிய கவலைகளை அவரிடம் கண்டோம். நாட்டின் பொருளாதாரம் பற்றிய திட்டங்களைக் கண்டோம். தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற சிந்தனையைக் கண்டோம். ஆனால், இன்று மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒரமாக்கப்பட்டுவிட்டாரா? என்று கூட எண்ணத் தோன்றுகின்றது. அவரது கருத்துக்களுக்கு இடமில்லையா என்ற கேள்வியும் எமக்கு எழுகின்றது. ஏனெனில், இந்த இரு வருட கால ஆட்சியையும் மகிந்தவின் ஒன்பது வருட ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, மலையும் மடுவும் போல இருக்கின்றது. மிகவும் வித்தியாசமாக இருக்கின்றது. மக்களின் வெறுப்பை மிகவும் விரைவாக சம்பாதித்த அரசாக இது மாறியுள்ளது. எதை எடுத்தாலும் இனவாதம், மதவாதமாக பார்க்கின்ற ஒரு நிலை.

இதன் மூலம் தங்களது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற நிலையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலின் போது சமத்துவம் என்ற தொனிப்பொருளைக் கொண்டுவந்து, “ஒரே நாட்டு ஒரே சட்டம்” என்று கூறினார்கள். இந்த நாடு ஒரே நாடே. இரு நாடுகள் அல்ல. யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இது ஒரே நாடுதான். இந்த நாடு ஒரே நாடாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, நான் சார்ந்த முஸ்லிம் சமூகமும் சகோதரச் சமூகங்களான சிங்கள, தமிழ் சமூகங்களும் இணைந்தி சுதந்திரத்துக்காகப் போராடி, அதை பெற்றுக்கொண்டோம். இந்த ஒரே நாட்டிலே முஸ்லிம்களுக்கான தனியார் சட்டங்கள் அவர்களுடைய தனித்துவக் கலாச்சார விழுமியங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. அதுபோல, தேச வழமை மற்றும் கண்டியச் சட்டங்களும் நடைமுறையில் இருந்தன. இதனை அன்று தொடக்கம் எல்லோரும் அங்கீகரித்ததுடன் நீதிமன்றங்களிலும் அவை பிரயோகிக்கப்பட்டன.

இந்த நாட்டிலே பயங்கரவாதம் உருவெடுத்த போதும், நாட்டிலுள்ள பெரும்பாலானவர்கள் அதனை எதிர்த்து ஒற்றுமையை பேணியதே கடந்தகால வரலாறு. இப்போது அவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற தூரநோக்கு இல்லாத ஒரு கொள்கையை அறிமுகப்படுத்தி, அதுவும், அல்லாஹ்வை மிக மோசமாக கேவலப்படுத்திய ஒருவரை அதன் தலைவராக ஆக்கியுள்ளீர்கள். உலகின் இரண்டு பில்லியன் முஸ்லிம்கள் வணங்கும் அல்லாஹ்வை, ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எனக் கூறி, அவரை ஏசிய ஒருவரை இவ்வாறு தலைவராக ஆக்கியுள்ளீர்களே. அதுமட்டுமின்றி, நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டு, சிறையில் இருந்து பின்னர் ஜனாதிபதி மைத்திரிபாலவினால் மன்னிப்பளிக்கப்பட்ட ஒருவரையே, “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணியின் தலைவராக நியமித்துள்ளீர்கள். இதன் மூலம் நீங்கள் எதனை சாதிக்க நினைக்கின்றீர்கள்? இந்த நாட்டில் வாழும் இருபது இலட்சம் முஸ்லிம்களை பயமுறுத்தலாம் என்று நினைக்கின்றீர்களா? அல்லது பெரும்பான்மை மக்களை சந்தோஷப்படுத்தலாம் என்று நினைக்கின்றீர்களா? எதிர்மாறாக பெரும்பான்மை சிவில் சமூகம் கூட இதனை எதிர்க்கும் நிலை இன்று வந்துள்ளதே.

இந்த இருவருட காலத்தில் நீங்கள் மிகவும் சண்டித்தனமான ஆட்சியே நடத்துகின்றீர்கள். நான் சிறையில் இருந்து பாராளுமன்றத்துக்கு வந்து, எனது கருத்தைக் கூட கூற முடியாது தடுத்தீர்கள்.. ஒரு ஜனநாயகக் கட்சியின் தலைவனாக, ஜனநாயகவாதியாக மக்கள் தந்த ஆணையில் இங்கு வந்திருக்கும் நான், எனக்கு நடந்த அநியாயத்தை கூற விடாமல் மறுக்கின்ற விரோதப் போக்குடன் செயற்பட்டீர்கள். இவைகள் எல்லாம் நீண்ட காலத்துக்கு நிலைக்காது என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

கடந்த கால ஆட்சியாளர்கள் உங்களை சிறையில் அடைத்தார்கள் என்றீர்கள். இவ்வாறான சிறையடைப்புக்\கு நாங்களா காரணம்? நாங்கள் இருதரப்புடனும் பங்காளிகளாக இருந்திருக்கின்றோம். நியாயத்தின் பக்கம் நின்றிருக்கின்றோம். நாட்டின் அபிவிருத்திக்கு துணை செய்திருக்கின்றோம். நாட்டின் பாதுகாப்புக்கு பக்கபலமாக இருந்திருக்கின்றோம். அனைத்து நல்ல விடயங்களுக்=கும் ஆட்சியாளர்களுடன் கைகோர்த்திருக்கின்றோம்.

இந்த பட்ஜெட்டிலே சில விடயங்களை நீங்கள் மறைமுகமாகக் கொண்டு வந்து மக்களுக்கு சுமையை கொடுத்திருக்கின்றீர்கள். இந்த நாட்டிலே டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்னும் நான்கைந்து மாதங்களுக்குப் பின்னர் என்ன நடக்குமென்று தெரியாது.

எனவே, இவ்வாறான நிலையிலே இனவாதத்தை கிளறி, நாட்டைக் குட்டிச்சுவராக்காதீர்கள். சட்டத்தை எல்லோருக்கும் சமமாகப் பிரயோகியுங்கள். அப்போதுதான் நாடு முன்னேற்றமடையும். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். கடந்த காலங்களில் மலேசியா, அபுதாபி போன்றவை பாரிய முதலீடுகளை செய்தனர். நான் அமைச்சராக இருந்த போது, கட்டார் ஒரு பில்லியன் முதலீடு செய்ய தயாரானது. ஓமான் மற்றும் பல இஸ்லாமிய நாடுகள் இவ்வாறு தயாராக இருந்தன. அந்த நாடுகளைப் பொறுத்தவரையில் இந்த நாட்டிலே வேறு எந்த எண்ணத்தையும் அதாவது, வளங்களை சூறையாட வேண்டும் என்ற கபட நோக்கம் இருந்ததில்லை. இந்த நாட்டில் சமாதானம், அபிவிருத்தி ஆகியவற்றை மட்டுமே சிந்திக்கின்ற இஸ்லாமிய நாடுகள் கூட, “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணியின் தலைவராக முஸ்லிம்களின் இறைவனை நிந்தித்த ஒருவரை ஏற்றுக்கொள்வார்களா? எனவே, இவற்றை எல்லாம் நீங்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும். இனவாதத்தை மூலதனமாகக் கொண்டு நீண்டகாலம் அரசியல் செய்ய முடியாது என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளுங்கள்.

இன்னுமொரு விடயத்தையும் நான் கூற வேண்டும். அண்மையில் நடந்த திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் சட்டமாணி நுழைவுப் பரீட்சையின் வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னரேயே வெளியாகின. இது தொடர்பில், நீதி அமைச்சரும் கல்வி அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், அண்மையில் புத்தளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக புத்தளம் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். அவர்களின் நிவாரணக் கொடுப்பனவுகள் மற்றும் பாதிப்புக்களை சரிசெய்வது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் மாபெரும் பேரணி

ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் திட்டமிட்டவாறு கொழும்பில் இன்று (16) நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பமானது.

சமையல் எரிவாயு, பால் மா, அரிசி, மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உர தட்டுப்பாட்டால் விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியும் அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொள்ளுப்பிட்டிசந்தி வரை பேரணியாக வந்தவர்கள் காலி முகத்திடல் நோக்கி பயணித்தனர்.

பின்னர் காலிமுகத்திடல் சுற்றுவட்டத்தில் ஒன்றுகூடினர்.

இதனிடையே வாகனங்களில் கொழும்பிற்கு வருகை தருவோரை மட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

கொழும்பு – களுத்துறை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பாணந்துறை வீதித்தடையில் கொழும்பு நோக்கி பயணித்த அனைத்து பஸ்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

ஹைலெவல் வீதியில் பயணித்த பஸ்கள் நுகேகொடை மேம்பாலத்திற்கு அருகில் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

அரலகங்கில பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் அணியினர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதேவேளை, பொலன்னறுவை, மணம்பிட்டி, கத்துறுவெல ஆகிய பிரதேசங்களிலும் மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

நாட்டில் பல பிரதேசங்களில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு கொழும்பிற்கு வரும் வாகனங்கள் பொலிஸாரால் பரிசோதிக்கப்பட்டன.

எதிர்க்கட்சியின் எதிர்ப்பு பேரணியினை முன்னெடுப்பதற்கு பல இடங்களில் பொலிஸாரால் இடையூறு ஏற்பட்டது.

குருநாகல் – ஹிரிபிட்டிய, குருநாகல் – மாவத்தகம, வாரியபொல, பலாங்கொடை, ஹல்துமுல்ல மற்றும் நொச்சியாகம உள்ளிட்ட பகுதிகளில் இடையூறு ஏற்பட்டது.

கொழும்பிற்கு வருகை தர முடியாமற்போனோர், பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

பெந்தோட்டை பகுதியிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் அநுராதபுரத்தில் இருந்து வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தி குழுவினருக்கு அநுராதபுர எல்லையயை கடப்பதற்கு ராஜாங்கனை பொலிஸாரால் அனுமதி வழங்கப்படவில்லை.

ஊவா, சப்ரகமுவ மாகாண நுழைவாயிலில் ஹல்தமுல்ல, மரங்கஹவெல பிரதேசத்திலும் கொழும்பிற்கு வருகை தந்த வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.