மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம்

இம்மாதம் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

கொவிட் கட்டுப்பாடு தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இன்று (10) இடம்பெற்ற கலந்துரையாலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறித்த பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் தினம் விரைவில் அறிவிக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்கு இது தடையாக இருக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், இந்த கட்டுப்பாடுகளின் போது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், நாட்டின் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் பராமரித்துச் செல்ல உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் ஒன்று கூடும் வகையில் இடம்பெறும் விருந்துபசாரங்களை ரத்துச் செய்வதற்கும், வர்த்தக நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் மற்றும் அங்கு இருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய தொற்றுக்கு உள்ளானவர்கள் அதிகளவில் கண்டு பிடிக்கப்படுகின்ற பகுதிகளை தனிமைப்படுத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதற்கும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணத்தடை விதிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் பாதுகாப்பு பிரிவினக்கு அறிவுறுத்தல்

இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்தில் மாவட்டங்களுக்கிடையில் பயணத்தடை விதிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் பாதுகாப்பு பிரிவினக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள வர்த்தக நிலையங்களை மாலை 6 மணியுடன் மூடவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தேவையற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட வேண்டும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

முள்ளிவாய்க்காலில் ஒன்று கூடினால் கைது!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஒன்றுகூடாது வீடுகளில் நினைவேந்தல் செய்யலாம்- இராணுவதளபதி.

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள் என இராணுவத்தளபதியும் கொவிட் செயலணி தலைவருமான சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆம் திகதியிலிருந்து அரச மற்றும் தனியார் நிகழ்வுகள்​ மற்றும் நயினாதீவில் இடம்பெறவிருந்த வெசாக் நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கொரோனா கட்டுப்பாட்டுக்காக விசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

நினைவுகூரலுக்கு மக்கள் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடினால் அரசில்வாதிகள் மக்கள் என்ற வேறுபாடு இல்லாது கைதுசெய்யப்படுவார்கள்.

இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை நாம் மறுக்கவில்லை. வீடுகளில் தனித்து அதனைச் செய்வதில் எமக்கு ஆட்சேபனையில்லை என தெரிவித்துள்ளார்.

நாட்டை முடக்க எவ்வித தீர்மானமும் இல்லை – இராணுவத் தளபதி

நாடு முழுவதையும் முடக்குவதற்கு எவ்வித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இருப்பினும் எதிர்வரும் நாட்களில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனால் நீண்ட வரிசைகளில் நின்று பொருட்களை கொள்வனவு செய்து சேகரிக்க தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சுவிஸ் கிளையால் சூரிச் மாநிலத்தில் ரெலோ முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினத்தின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு!

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சுவிஸ் கிளையால் மறைந்த தலைவர் சிறி அண்ணா, மற்றும் அவருடன் மரணித்த 350க்கும் மேற்பட்ட போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும், சுவிஸ் கிளையால் சூரிச் மாநிலத்தில் முப்பத்தி ஐந்தாவது ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது,

அத்துடன் 1985ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி எமது இயக்கம் நடத்திய மிகப்பெரிய இராணுவத் தளமான கொக்காவில் இராணுவ முகாம் தாக்குதலில் வீரமரணமடைந்த ஒன்பது போராளிகளுக்கும் 36வது ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வானது மூத்த உறுப்பினர் விமல் அவர்களின் தலைமையில்,

எமது மூத்த உறுப்பினரும் மதிப்பிற்குரிய சிவா அண்ணன் அவர்களின் அஞ்சலி உரையுடன் ஆரம்பமானது.

இந்நிகழ்வுக்கு மிக மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்கள் அழைக்கப்பட்டனர்.

இதில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களும் Corona தடுப்பூசி (இரண்டையும்) போட்டுள்ளனர்.

எமது வேண்டுகோளை ஏற்று வீடுகளில் இருந்து அஞ்சலி செலுத்திய, மற்றும் Zoom, தொலைபேசி வாயிலாக, ஸ்கைப் , வாட்ஸ்அப் ஊடாக அஞ்சலி செலுத்திய அனைத்து சுவிஸ் கிளை உறுப்பினர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றி கிளை நிர்வாகம்.

Posted in Uncategorized

கொக்காவில் தாக்குதலில் வீரமரணம் எய்திய தோழர்களை தலைசாய்ந்து நினைவு கூறுவோம்

கொக்காவில் தாக்குதலில் மக்களுக்காக மரணித்த எம்தோழர்கள். இவர்களின் கல்லறையிலேயே, எம் வாழ்ககை, உயிர்துடிப்பு, எம் இலக்கு எல்லாம் அடங்கியுள்ளது.இவர்கள் மக்களுக்காக என்பதுடன் எமக்காகவும் தம் உயிரை கொடுத்துள்ளார்கள். இன்று 09/05 இவர்களை தலைசாய்ந்து நினைவு கூறுவோம்.

மிசோ Ram – உன்னதமான தோழன், எமது ஆளுமை மிக்க ஆரம்ப கால ரெலோ உறுப்பினர். 1982இல் மக்களின் விடுதலைக்காக சுதந்திரத்தை நாடி எல்லா சுகபோகங்களையும் துறந்து மக்களுக்காக புறப்பட்ட மாவீரன்.

1985ம் ஆண்டு May மாதம் 09ம் திகதி. தாஸ்,புரூஸின்,மிசோவின் தலைமையில் ரெலோவால் நடாத்தப்பட்ட கொக்காவில் இராணுவ முகாம் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். அவர்கள் மூவரின் தலைமையில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் மிசோவுடன் சேர்ந்து எம் தோழர்கள் 9 பேர் வீரமரணம் எய்தியதுடன் சிலர் படுகாயமடைந்தார்கள்.

மிசோ
பவா
குமார்
ரவி
வீனஸ்
பரன்
அஐந்த்
பாலசிங்கம்
ஜெராட்

இவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்கிறோம்.

Posted in Uncategorized

வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க புதிய அமைப்பு- யாழ். மாநகர முதல்வரின் முயற்சி!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய அமைப்பொன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

‘யாழ்ப்பாணம் மரவுரிமை மையம்’ என்னும் பெயரில் 11 அங்கத்தவர்களுடன் இந்த அமைப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள மந்திரி மனை, சங்கிலியன் அரண்மனை, யமுனா ஏரி போன்றவற்றைப் பாதுகாத்து அதை மீள்நிர்மாணம் செய்வது இந்த அமைப்பின் நோக்கமாகும்.

மரவுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கு ஒரு அமைப்பினை நிறுவுவதற்கு யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் முயற்சியை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், மாநகர முதல்வரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் குறித்த, யாழ்ப்பாணம் மரவுரிமை மையத்தின் தலைவராக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், உப தலைவர்களாக வைத்திய கலாநிதி பேராசிரியார் ரவிராஜ் மற்றும் நடராஜா சுகிதராஜ் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டதுடன் செயலாளராக மருத்துவபீட பதிவாளர் ராஜேந்திரம் ரமேஸ் மற்றும் துணைச் செயலாளராக பாசுப்பிரமணியம் கபிலன் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

மேலும், பொருளாளராக பேராசிரியர் செல்வரட்ணம் சந்திரசேகரம், இணைப்பாளராக சிவகாந்தன் தனுஜன் மற்றும் பதிப்பாசிரியராக வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் மரவுரிமை மையத்தின் உறுப்பினர்களாக விஸ்வலிங்கம் மணிவண்ணன், விஸ்வபாலசிங்கம் மணிமாறன், பூவானசுந்தரம் ஆரூரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பொதுமக்களின் பங்களிப்புடன் இந்த அமைப்பு வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதுடன் எதிர்காலத்தில், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அனைத்திலும் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பித்தக்கது.

Posted in Uncategorized

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை கலந்துரையாடல்

நாட்டிலுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனாக்கள் என்பனவற்றை மீளத் திறப்பது தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை (12) கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்காக வைத்தியர்கள், கல்விசார் நிபுணர்கள் உள்ளிட்டோரை அழைப்பதற்கு எதிர்பார்ப்பதாக கல்வியமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்போது பெறப்படுகின்ற ஆலோசனைகளின் பிரகாரம் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கல்வியமைச்சர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 15 பேர் பலி -உயிரிழந்தோரின் எண்ணிக்கை 801

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 801 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 40 புதிய அரசியல் கட்சிகள்!

40 புதிய அரசியல் கட்சிகள் பதிவுக்காக விண்ணப்பித்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இவற்றில்18 கட்சிகள் நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்பட்டுள்ளன.

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized