”தோட்டத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபா சம்பளம் வேண்டும்”

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 2,000 ரூபாய் வழங்கப்பட வேண்டுமென்ற யோசனையை தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கூட்டணி முன்வைத்துள்ளது.

மலையக சிவில் மற்றும் தொழிற்சங்க, வெகுசன அமைப்புகள் இணைந்து ஹட்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

அத்துடன், மலையக மக்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கையும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இதில் மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் செயற்பாட்டாளர் எஸ்.டி.கணேசலிங்கம், சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் செயற்பாட்டாளர் இராஜேந்திரன், தோட்ட தொழிலாளர் மத்திய நிலையத்தின் அமைப்பாளர் டீ.மாக்ஸ் பிரபாகரர், ப்ரொடெக்ட் சங்கத்தின் உப தலைவி கருப்பையா மைதிலி, தோட்ட தொழிலாளர் மத்திய நிலையத்தின் செயலாளர் வசந்தகுமார அபேகோன் ஆகிய பிரதிநிதிகள் கலந்துகொண்டு, கருத்துகளை முன்வைத்தனர்.

Posted in Uncategorized

திருத்தச் சட்டங்களெல்லாம் ஒரு சிலரது, சில கட்சிகளது விருப்பங்களுக்காகவே அன்றி மக்களுக்காகக் கொண்டு வரப்படுவதில்லை – ஜனா

பாராளுமன்றத்தில் வருகின்ற திருத்தச் சட்டங்களெல்லாம் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக அல்லாமல் ஒரு சிலரது, ஒரு சில கட்சிகளது விரும்பங்களை நிறைவேற்றுவதற்காகவே கொண்டு வரப்படுகின்றன. அந்த அடிப்படையிலேயே 22வது திருத்தச் சட்டத்தின் விவாதமுமும் பிற்போடப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் நேற்றைய உரை மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

22வது திருத்தச் சட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டிய இந்த நேரத்திலே ஜனாதிபதி அவர்களின் உரை சம்மந்தமான ஒத்திவைப்புப் பிரேரணையிலே பேசுகின்றோம். 22வது திருத்தச் சட்டம் ஒரு சிலரின் விருப்பதைப் பூர்த்தி செய்யாதமையினாலே அது இன்று சபைக்குக் கொண்டுவரப்படவில்லை எனக் கருதுகின்றேன்.

இதேபோல் தான் மாறி மாறி இந்த நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் தங்களது தேவைக்காக அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றார்கள். இந்த அரசியலமைப்பில் 44 வருட காலத்திலே 2வது திருத்தச் சட்டம் முன்னாள் மட்டக்களபப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராஜதுரை அவர்களை அரச தரப்பிற்கு எடுப்பதற்காக அவரது உறுப்புரிமையைப் பறிப்பதைத் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டமாக இருக்கின்றது. 3வது திருத்தம் ஒரு ஜனாதிபதி ஆறு வருடங்கள் ஆட்சியில் இருக்கலாம் என்பதை மாற்றி அவரது ஆட்சிக் காலத்திலே நான்கு வருடத்தினுள் தேர்தலை நடத்தலாம் என்று கொண்டு வரப்பட்டது. 6வது திருத்தச் சட்டம் அப்போதைய தமிழர் விடுதலைக கூட்ணியின் பாராளுமன்ற உறுப்;பினர்களாக வந்தவர்களை இந்தச் சபையில் இருந்து துரத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டது. 13வது திருத்தச் சட்டம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாகப் பிறப்பிக்கப்பட்ட குழந்தை, 18வது திருத்தச் சட்டம் மஹிந்த ராஜபக்ச அவர்களின் அதிகாரத்தைப் பலப்படுத்தக் கொண்டு வரப்பட்டது. 19வது திருத்தச் சட்டம் ராஜபக்ச குடும்பத்தை மையப்படுத்தி அவர்களை அரசியலில் இருந்து ஒதுக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டது. 20வது திருத்தச் சட்ட மீண்டும் கோட்;டபாய ராஜபக்சவின் அதிகார வெறிக்கு உரமூட்டிய சட்டம்.

ஆக மொதத்தில் இங்கு வருகின்ற திருத்தச் சட்டங்களெல்லாம் ஒரு சிலரது, ஒரு சில கட்சிகளது விரும்பங்களை நிறைவேற்றுவதற்காகத் தான் கொண்டு வரப்படுகின்றன. அதேபோல் தான் 22வது திருத்தச் சட்டமும் இந்தச் சபையிலே விவாதிக்கப்பட வேண்டிய நிலையிலே ஒரு சிலருக்காக இந்தச் சட்டம் இங்கே கொண்டு வரப்படாமல் இருக்கின்றது.

இந்தத் திருத்தச் சட்டங்களிலே பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் ஒன்றுதான் இலங்கையில் மக்களின் பிரச்சனைகளை ஓரளவேனும் தீர்ப்பததற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். நாங்கள் அதை முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவ்வாறு இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான ஆரம்பப் புள்ளியாகக் கொண்டுவரப்பட்ட சட்டத்தைக் கூட இந்த நாட்டின் அரசுகள் அரசிலமைப்பினை மீறி கையாளுகின்றன. 13வது திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்கள் கூட இன்றுவரை முழுமையாக வழங்கப்படாமல் மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கும் ஆட்சியாளர்;களால் அரசியலமைப்பு இன்றுவரை மீறப்படுகின்றது.

ஜனாதிபதி அவர்களின் நேற்றைய உரை நாட்டின் யதார்த்தத்தைப் பிரதிபலித்தது. இன மத மொழி பேதமின்றி கட்சி அரசியல் பேதமின்றி நாடாக ஒன்;றிணைய வேண்டும் என்ற தொனி அவரது உரையில் தெரிந்தது. அதனை முழுமையாக நாங்கள் ஏற்கின்றோம். ஆனால் எமது ஒத்துழைப்பு உங்கள் காரியங்களை நிறைவேற்றுவதற்காக மாத்திரமா? என்கின்ற ஐயத்துடனான கேள்வி எங்களுக்குள் எழுகின்றது. நாட்டின் தலைமை வகித்தவர்களில் நல்லவராகக் காட்டக் கூடியவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதில் எனக்கு ஐயமில்லை. அவர் ஜனாதிபதியாக வந்தமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், அவர் ஜனாதிபதியாக வந்தது அரசியலமைப்பின் அடிப்படையிலேயே என்பதில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை.

ஆனால், இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த காலத் தேர்தல் வரலாற்றை உணர வேண்டும். கடந்த நல்லாட்சி என்ற அரசின் காலத்தில் நடந்த அரசியல் கோமாளித் தனத்தை உணர வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் உங்கள் பக்கமே எம் தமிழர்கள் இருந்தார்கள். 2010, 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் தற்போதைய ஜனாதிபதி இருந்த பக்கமே எமது தமிழ் மக்கள் இருந்தார்கள். அது நாட்டைப் பிளவுபடுத்த அல்ல சுபீட்சப்படுத்தவே.

நல்லாட்சிக் காலத்தில் இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்த செயலுக்காக அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் ஒத்துழைத்து உங்களை மீண்டும் பதவியில் அமர்த்தியதில் கூடுதல் பங்காற்றியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. இந்த வரலாற்றை நீங்கள் என்றும் மறக்கக் கூடாது. உங்களது கடந்த கால வரலாற்றின் துயரங்கள் இனிமேலும் தொடரக் கூடாது. இந்த நாட்டில் புதிய அத்தியாயத்தைப் படைக்கக் கூடிய சுபீட்சத்தை ஏற்படுத்தக் கூடிய ஏன் உங்களது நீண்ட கனவு கூட இன்று நிறைவேறியுள்ளது. எனவே நிதானமாகச் செயற்படுங்கள்.

எமது நாட்டின் வரலாற்றில் போற்றப்பட வேண்டியவராக இருக்க வேண்டுமென்றால் இந்த நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைக்கு முக்கியமான காரணமாகவுள்ள புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்குத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய ஒரு தீர்வைத் தாருங்கள்.

இன்று ஐநா மனித உரிமைகள் பேரவையில் வெளிவிவகாhர அமைச்சர் அலிசப்றி அவர்கள் வீPரவசனங்கள் பேசிக் கொண்டிருக்கின்றார். இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட பிரேரணையில் இலங்கைக்கு ஆதரவாக ஏழு நாடகளே ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அவை எந்த நாடுகள் சீனா, பாக்கிஸ்தான் போன்றவை. இந்த நாடுகளில் ஜனநாயகம் இருக்கின்றதா என்பதைப் பாருங்கள். இலங்கைக்கு எதிராகவுள்ள நாடுகளைப் பாருங்கள் அமெரிக்கா பிரித்தானியா போன்ற ஜனநாயகம் நிரம்பிய நாடுகள். அந்த நாடுகளிலே பல்மொழி பேசுகின்ற பல இன மக்கள் வாழுகின்றார்கள். அந்த மக்களுக்கான அதிகாhரங்கள் பரவலாக்கபட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த நாடுகள் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேறிக் கொண்டிருக்கின்றார்கள்.

அதேபோன்று இந்த நாடும் முன்னேற வேண்டுமானால் உங்களிடையே நல்லெண்ணம் உருவாக வேண்டும். பிரேரணைக்கு நடுநிலை வகித்த இந்தியாவைப் பின்பற்றிய நாடுகள் என்ன சொல்லுகின்றன. 13வது திருத்தச் சட்டத்தை முழு அதிகாரத்துடன் நிறைவேற்றுங்கள், மாகாணசபைத் தேர்தலை நடாத்துங்கள் என்றே கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் மக்கள் சபையொன்று இல்லாமல் இருக்கின்றது. மாகாண ரீதியில் இருக்கின்ற தொல்பொருள் திணைக்கம் மதவாதம், இனவாதம் கொண்டதாகவே இருக்கின்றது. கடந்த கோட்டபாய ஆட்சியிலே கிழக்கு மாகாணத்திலே உருவாக்கப்பட்ட தொல்பொருள் செயலணி என்ன செய்து கொண்டிருக்கின்றது. இந்தத் தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக எமது இந்து மதப் பாரம்பரிய புராதனச் சின்னங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இங்கே முன்னாள் அமைச்சர்கள் நல்லிணக்கத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழர்களுக்கு இரத்தம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் கடந்த பாராளுமன்றத்திலே பேசியிருந்தார். ஆனால், அவர் எத்தனை தமிழர்களின் இரத்தங்களை வெளியில் எடுத்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். தொல்பொருளுக்குப் பொறுப்பான அமைச்சர் கூறுகின்றார் எதுவும் நடக்காது என்று. ஆனால், தொல்பொருள் திணைக்களத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயவினால் உருவாக்கப்பட்ட வியத்மக அமைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. இந்த சரத் வீரசேகர போன்றவர்கள் வியத்மக அமைப்பில் இருந்து கொண்டு சம்மந்தப்படட அமைச்சருக்கே தெரியாமல் தொல்பொருள் திணைக்களத்துடன் தொடர்புகளை வைத்தக் கொண்டு இவ்வாறான வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த காலங்களிலே எமது உயிர்நீத்த உறவுகளை நாங்கள் நினைவு கூருகின்ற போது போராட்ட வரலாற்றிலே இருந்த விமல் வீரவன்ச அவர்கள் புலிப்பயங்கரவாதிகளை நினைவு கூருகின்றார்கள். அவர்களைக் கைது செய்யச் சொல்லுகின்றார். ஆனால், அவரது தலைவர் ரோகண விஜயவீர உட்பட அவர்களது தோழர்கள் இறந்தமையை அவர்கள் இன்றும் நிpனைவுகூர்ந்து வருகின்றார்கள். ஆனால், எமது விடுதலைக்காகப் போராடியவர்களை நினைவு கூருபவர்களை கைது செய்யச் சொல்லுகின்றார்கள்.

இன்று பாhளுமன்றத்திலே கேள்வி பதில் விடயத்திலே ரோகண விஜயவீர அவர்கள் கடந்த 1989.12.12ம் திகதி பிடிபட்டதாகவும், 13ம் திகதி கொல்லப்பட்டதாகவும் அதற்கு யாரும் விவாசரணை கேட்கவில்லை என்று தோழர் விமல் விரவன்ச தெரிவித்தார். அவரிடம் நான் கேட்கின்றேன் அப்போது ரோகண வியஜயவீரவுடன் இருந்த நீங்கள் தான் அதற்கு நீதி கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

முல்லைத்தீவு சம்பவத்திற்கு வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கண்டனம்!

வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்கப்பட்டமைக்கு, வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

வடமராட்சியில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் காத்தலிங்கம் அண்ணாமலை இந்த கண்டனத்தை பதிவு செய்தார்.

எதிர்வரும் 9ஆம் திகதி இந்த தாக்குதலுக்கு நல்ல பதில் தருவதாக அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்தவர்கள் உறுதியளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படாத நிலையில், வடக்கு மாகாணம் தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்படுமென எச்சரித்தார்.

இதேவேளை மண்ணெண்ணெய் விநியோகம் வாரத்திற்கு ஒரு தடவை மாத்திரம் 29 லிட்டர் வழங்கப்படுவதாகவும் அது ஒரு நாளுக்கு மாத்திரமே போதுமானதாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

Posted in Uncategorized

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை வெற்றிக்கொள்ள ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்- பிரித்தானியா

இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கான கூட்டு மற்றும் புதுப்பிக்கப்பட்ட திறனின் மீது தற்போது கவனம் திரும்ப வேண்டும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

எனவே இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பினர்களை அழைப்பதாக பிரித்தானிய அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு தெரிவித்துள்ளார்.

அனைவரும் இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை வெற்றிக்கொள்ள ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக நேற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பின்னர் இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

”இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்”

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.

‘ஆயுத மோதலின் போதும் அதற்கு பின்னரும் இலங்கையில் தமிழர் உரிமைகளுக்கான சர்வதேச சட்ட பாதுகாப்பில் தோல்வி’ என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற உப நிகழ்வில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி, தமிழர் உரிமைக்கான குழுமத்தின் பிரதிநிதி பெரிடன்ஸ்  பெர்டினான்டஸ்  மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் இந்த  உப நிகழ்வில்  கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை பொறுப்புக்கூறலை இழுத்தடித்துள்ளதால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என இதன்போது தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி  குறிப்பிட்டுள்ளார்.

பல வருடங்கள் கடந்து விட்ட போதிலும் இலங்கை அரசு கலப்பு நீதிமன்ற பொறிமுறை தொடர்பில் கரிசனை செலுத்தவில்லை எனவும் தமிழர் பிரதேசங்களை சிங்களமயமாக்குவதையும் இராணுவமயமாக்கல் மற்றும் காணி சுவீக்கரிப்பையும் முன்னெடுத்து வருவதாக சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில்  தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற போதிலும் தமிழர்களுக்கு ஏதும் மாறவில்லை  எனவும், மாறாக சர்வதேச சமூகத்துடன் தனது உறவுகளை கட்டியெழுப்ப இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் இதன்போது தமிழர் உரிமைக்கான குழுமத்தின் பிரதிநிதி பெரிடன்ஸ்  பெர்டினான்டஸ் கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல தசாப்தங்களாக  தமக்கான நீதியைக் கோரி நிற்பதாக வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தராஜா தெரிவித்தார்.

Posted in Uncategorized

”ஜெனிவா தீர்மானம் அரசாங்கத்திற்கு இது பலத்த அடியாகும்”

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், இது ஒரு நாடு என்ற வகையில் பாரிய பிரச்சினையாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இதேவேளை சர்வதேசத்தை வென்றதாக கூறிக்கொள்ளும் அரசாங்கத்திற்கு இது பலத்த அடியாகும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

வரலாற்றில் முதல் தடவையாக பொருளாதார குற்றங்கள் தொடர்பான பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், வாக்களிப்பில் இருந்து விலகிய நாடுகளை வெற்றிகொள்ளும் வேலைத்திட்டமொன்று அரசாங்கத்திடம் இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கோட்டாவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி

பொருளாதார பிரச்சினைகளுக்கு பொறுப்புக்கூறவேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராகவும் விசாரணைகளை முன்னெடுக்க உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெசனல் உட்பட்ட தரப்புக்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் மீதே இந்த அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

தவிர்த்தது இந்தியா : எதிர்த்தது சீனா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது, இதற்கு ஆதரவாக 20 நாடுகளும், 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்தனர்.  20 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகிக்கொண்டன. இந்தியா வாக்களிப்பில் இருந்து விலக்கிக்கொண்ட நிலையில், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.

இலங்கையின் ஈடுபாடு அவசியம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம்,  இலங்கை அரசாங்கம் ஐ.நா சர்வதேச சகாக்களுடன் தொடர்ந்தும் ஈடுபாட்டை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

ஜனநாயக விழுமியங்கள் மனித உரிமைகள் சட்டத்தின் ஆட்சி குறித்த முழுமையான அனைவரையும் உள்வாங்கும் கலந்துரையாடல்களிற்கு முழுமையான ஆதரவளிப்போம் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கை மீதான தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியுள்ளது
குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.பொலிவியா சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வெனிசூலா ஆகிய 7 நாடுகளும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தன.

அத்துடன், பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, கொரியா, உக்ரைன், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

இந்த வாக்களிப்பில், இந்தியா, ஜப்பான், பிரேசில், கட்டார் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் கலந்துகொள்ளவில்லை.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இன்று இடம்பெற்ற இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன்னரான நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் கருத்துவெளியிட்டிருந்தார்.

அதில் இலங்கை மீதான போர்க்குற்றங்களுக்கு உள்நாட்டு பொறியின் கீழ் தீர்வுகாண எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.