”குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்”: பிரதமர்!

குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்கி குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

‘மாற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் யாரையும் எதனையும் காப்போம்’ என்ற தொனிப்பொருளில் அலரி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற 36ஆவது உலக வாழ்விட தின தேசிய கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலக வாழ்விட தின கொண்டாட்டத்துடன் இணைந்து 650 வீட்டு உரிமைப் பத்திரங்களும் வழங்கப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மனித உயிர்களுக்கு பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் நம்பிக்கை உள்ள வீட்டில் பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்பக்கூடிய சூழலை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் வசதி குறைந்த 1200 தோட்டங்களுக்கு நிரந்தர வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

22ஆவது திருத்தம்: ஆராயுமாறு ஆளும் கட்சியினருக்கு ஜனாதிபதி வேண்டுகோள்!

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் கலந்துரையாடி மேலதிக ஆய்வில் ஈடுபடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின்போது நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்தின்போது, அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தச்சட்டமூலம் தொடர்பாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 29ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற விவகாரக் குழுவில் அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை இம்மாதம் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், தற்போதைக்கு அரசியலமைப்பு திருத்தம் தேவையில்லை என ஆளுங்கட்சி பராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தருணத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் நாட்டுக்கு தேவை என பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த அதிகாரங்களை விட்டுக்கொடுக்க இது பொருத்தமான சந்தர்ப்பம் அல்ல எனவும் நாட்டின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு ஜனாதிபதியின் அதிகாரங்கள் அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம், அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதற்கு பொதுஜன பெரமுனவின் 30க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வார அமைச்சரவைத் தீர்மானங்கள்!

ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
01. ‘உணவுக் கொள்கைக் குழுவை’ நிறுவுதல்
உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் போசாக்கினை உறுதிப்படுத்தல் போன்ற தீர்மானங்களை எட்டுப்போது கிராமிய மட்டத்திலிருந்து மேல்மட்டத்தை நோக்கிய மூலோபாயத்தை பின்பற்றி கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்தும் நோக்கில் பல் – துறைசார் பொறிமுறையொன்று அரசாங்கத்தால் அண்மையில் நிறுவப்பட்டது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகம் செய்தல் உள்ளிட்ட ஒட்டுமொத்த பொறிமுறைக்கு வழிகாட்டல் மற்றும் கண்காணித்தல், அத்துடன் பல்வேறு நிர்வாக மட்டங்களில் சமூகத்தில் அதிக இடருக்கு உள்ளாகக் கூடியவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய இயலுமை குறித்த பொறிமுறை மூலம் உறுதிப்படுத்தப்படும்.
இப்பொறிமுறையை முறைசார்ந்த வகையிலும் வினைத்திறனாகவும் நடைமுறைப்படுத்துவதற்காக விநியோகம்;, விலை மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான குறுகியகால பிரச்சினைகள் உள்ளிட்ட நாட்டில் விநியோகச் சங்கிலி நடவடிக்கைகள் தொடர்பாக உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோருக்கிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் குறித்த நிறுவனங்களின் தலைமையில் ஏற்புடைய நிறுவனங்களின் தலைவர்களின் பங்கேற்புடன் ‘உணவுக் கொள்கைக் குழுவை’ நிறுவுவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. அரசுக்கு சொந்தமான தொழில் முயற்சிகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு வயதை திருத்தம் செய்தல்
பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள 2022 இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளவாறு, அரசுக்குச் சொந்தமான தொழில் முயற்சிகளில் பணிபுரியும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயது 60 ஆக திருத்தப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய, 2023.01.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அதற்கான ஒழுங்குவிதிகளை விதித்து ஏற்புடைய சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளியிடுவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தெசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. 2022ஃ23 பெரும்போகச் செய்கைக்குத் தேவையான மியூரேட் ஒஃப் பொடாஸ்; (MOP) உரக் கொள்வனவுக்கான பெறுகை
ஆசிய அபிவிருத்தி வங்கியால் வழங்கப்பட்டுள்ள 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பயன்படுத்தி 40,000 மெட்ரிக்தொன் 2022ஃ23 பெரும்போகச் செய்கைக்குத் தேவையான மியூரேட் ஒஃப் பொடாஸ்; (MOP) உரக் கொள்வனவுக்கான பெறுகைக் கோரலுக்கு 2022.06.20 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, முறையான பெறுகைக் கோரல் செயன்முறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த ஒப்பந்தத்தை Ameropa Asia Pte, Ltd
கம்பனிக்கு வழங்குவதற்காக நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. சுங்கக் கட்டளைச் சட்டம் மற்றும் 2006 ஆம் 01 ஆம் இலக்க அரசாங்க அரசிறையைப் பாதுகாத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்தம் செய்தல்
சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 47 மற்றும் 57 ஆம் உறுப்புரைகள் மற்றும் 2006 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அரசாங்க அரசிறையைப் பாதுகாத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆவது உறுப்புரையைத் திருத்தம் செய்வதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அத்துடன் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 153 ஆவது உறுப்புரையின் ஏற்பாடுகளால் பொருட்களை அரசவுடமையாக்கல் மற்றும் அபராதம் விதித்தல் போன்றவற்றால் அரசுக்கு கிடைக்கின்ற வருமானம் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதால் குறித்த உறுப்புரையை திருத்தம் செய்வதன் அவசியத்தை அராசாங்க கணக்குகள் பற்றிய பாராளுமன்ற குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோல் இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் படிமுறையாக சுங்க நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை செய்தல் மற்றும் குறித்த விசாரணைகளைப் பூர்;த்தி செய்வதற்கான கால வரையறையை சட்டரீதியாகக் குறித்தொதுக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, பொருத்தமான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தி மேலும் சுங்கக் கட்டளைச் சட்டம் மற்றும் 2006 ஆம் 01 ஆம் இலக்க அரசாங்க அரசிறையைப் பாதுகாத்தல் சட்டத்தை திருத்தம் செய்வதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. பாடசாலை பகலுணவு வேலைத்திட்டம்
அரசாங்கம் வருடாந்தம் 4 பில்லியன் ரூபாய்கள் செலவிட்டு 7,926 பாடசாலைகளில் 1.08 மில்லியன் மாணவர்களை இலக்குவைத்து பாடசாலை பகலுணவு வேலைத்திட்டத்தை  நடைமுறைப்படுத்தி வருகின்றது. வறுமையொழிப்பு கொள்கைப் பிரகடனத்தின் கீழ் ‘உணவுப் பற்றாக்குறையால் எந்தவொரு பிரஜையும் பட்டினியால் இருத்தல் ஆகாது’ எனும் நோக்கத்தை இலக்காகக் கொண்ட வேலைத்திட்டங்களை அரசாங்கம் துரிதமாக மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றது.
அதன்கீழ் வறுமை மற்றும் போசாக்கு தொடர்பாக மாவட்ட மட்டத்தில் காணப்படுகின்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, தேவையான நிதியை வெளிநாட்டு நன்கொடைகள் மூலம் பெற்றுக்கொண்டு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாடசாலை பகலுணவு வேலைத்திட்டத்தை விரிவாக்கம் செய்து மேலும் ஒரு மில்லியன் மாணவர்களுக்கு முழுமையான போசாக்கான பகலுணவு வேளையை வழங்குவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
2023 நிதியாண்டுக்கான  ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 2022.08.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒவ்வொரு செலவுத் தலைப்புக்களுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள 2023 ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அமைச்சரவையால் ஆராயப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான மொத்த மீண்டெழும் செலவாக 4,634 பில்லியன் ரூபாய்களும், மொத்த மூலதனச் செலவாக 3,245 பில்லியன்களும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காகவும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தெசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Posted in Uncategorized

ஐ.நா மனித உரிமை பேரவையில் படுதோல்வியை சந்திக்க போகும் இலங்கை

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை எந்த வழியிலும் இலங்கை அரசால் தோற்கடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இலங்கைக்கு ஆதரவாக ஆறு நாடுகள் மாத்திரமே வாக்களிக்கும் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா,ஜேர்மனி,மலாவி,மொண்டினீக்ரோ மற்றும் கிழக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு எதிரான யோசனைக்கு இணை அனுசரணை வழங்குகின்றன. அல்பேனியா, அவுஸ்திரேலியா, ஒஸ்ரியா, பெல்ஜியம், கனடா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பிரான்ஸ், ஜேர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லத்வியா, லிவ்டென்ஸ்டையின், லக்ஸம்பேர்க், மாஷல் தீவுகள், நெதர்லாந்து, நியூசிலாந்து, ஸ்லோவேக்கியா, சுவீடன், துருக்கி, பிரித்தானியா, வட அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஏற்கன யோசனை ஆதரவாக கையெழுத்திட்டுள்ளன. இந்தியா, நேபாளம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வாக்கெடுப்பில் கவந்துக்கொள்ளாது

வழமையாக இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் ரஷ்யா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு இம்முறை வாக்களிக்கும் உரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவும் நேபாளமும் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவதில்லை என தீர்மானித்துள்ளன.

அதேபோல் கடந்த காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்து வந்த மத்திய கிழக்கு நாடுகளும் இம்முறை வாக்களிப்பில் கலந்துக்கொள்வதில்லை என முடிவு செய்துள்ளன.

இலங்கைக்கு எதிரான யோசனை எதிர்வரும் 6 ஆம் அல்லது 7 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வாக்கெடுப்புக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி தற்போது ஜெனிவா சென்றுள்ளார்

Posted in Uncategorized

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர்கள் நியமனம்!

புதிய அமைச்சர்கள் பதவியேற்ற பின்னரே 25 மாவட்டங்களுக்குமான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்படுவார்கள் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர்கள் நியமனம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

“அமைச்சர்கள் சிலர் விரைவில் பதவியேற்கவுள்ளனர். புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டதன் பின்னர், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர்களை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

விரைவில் அவை நடைமுறைப்படுத்தப்படும்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: தீர்ப்பாயத்தின் அறிவிப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் பிரதிவாதிகளின் பிணைக் கோரிக்கை மீதான உத்தரவு நவம்பர் 24ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என, கொழும்பு மேல் நீதிமன்ற தீர்ப்பாயம், இன்று (03) திகதி நிர்ணயித்தது.

ஈஸ்டர் தாக்குதலுக்கு சதி மற்றும் ஆதரவு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மௌலவிகள் உட்பட பிரதிவாதிகள் 25 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால்  வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிபதிகளான தமித் தொட்டவத்த (தலைவர்) அமல் ரணராஜா மற்றும் நவரட்ன மாரசிங்க அடங்கிய மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது, பிரதிவாதிகளின் பிணை கோரிக்கைகள் தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரியா ஜயசுந்தர மன்றுக்கு அறிவித்தார்.

அதனையடுத்து, பிரதிவாதிகளின் பிணைக் கோரிக்கை மீதான உத்தரவு, நவம்பர் 24ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என, நீதிபதிகள் குழாம் திகதியை நிர்ணயித்தது.

நௌபர் மௌலவி, சஜித் மௌலவி, மொஹமட் மில்ஹான், சாதிக் அப்துல்லா, ஆதம் லெப்பை, மொஹமட் சனாஸ்தீன் மற்றும் மொஹமட் ரிஸ்வான் உட்பட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டன.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் கொலைக்கு சதி செய்தல், உதவி செய்தல், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சேகரித்தல் மற்றும் கொலை முயற்சி ஆகியவை அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று, கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில், 270 பேர் உயிரிழந்ததுடன் 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

Posted in Uncategorized

புனர்வாழ்வுப் பணியக சட்டமூலம்- சட்டமா அதிபரின் முக்கிய அறிவிப்பு

புனர்வாழ்வுப் பணியக சட்டமூலம் குறித்த ஏற்பாடுகள் நீதித்துறை மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என்று உயர்நீதிமன்றத்துக்கு இன்று (03) அறிவித்த சட்டமா அதிபர், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தில் சில திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது என்றும் அறிவித்தார்.

நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ கடந்த 23 ஆம் திகதி புனர்வாழ்வு பணியகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

அந்த சட்டமூலம் நாட்டை இராணுவமயப்படுத்துவதற்கு வழிவகுக்கும் அரசியலமைப்புக்கு முரணான சட்டமூலம் என தீர்ப்பளிக்குமாறு கோரி  சட்டத்தரணி அமில எகொடமஹவத்த உயர் நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை (29) விசேட தீர்மான மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

மேலும், குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர், எஸ்.எம்.மரிக்கார் வெள்ளிக்கிழமையன்று (30) அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல் செய்தார்.

குறித்த மனுக்கள், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபரால் மேற்குறிப்பிட்ட விடயம் மன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

அரசியலமைப்பின் 3 மற்றும் 4 வது பிரிவுகளை குறித்த சட்டமூலம் மீறும் என்றும் நாட்டு மக்களுக்கு சொந்தமான நீதிமன்ற அதிகாரம், நீதிமன்றத்தின் உத்தரவின்றி பணியகத்திடம் ஒப்படைக்கப்படுவதாகவும், சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது நீதிமன்ற அதிகாரத்தை சூறையாடும் எனவும் சட்டத்தரணியின் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தீவிர அல்லது அழிவுகரமான செயல்களில் ஈடுபடும் வழி தவறிய போராளிகளுக்கு புனர்வாழ்வு என முன்னுரையில் கூறப்பட்டாலும், குறிப்பிட்ட வரையறை எதுவும் உள்ளடக்கப்படாமையின் காரணமாக கடந்த கால தவறுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கூட புனர்வாழ்வு அளிக்கும் அதிகாரம் இராணுவத்தினருக்கு வழங்கப்படும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மக்களின் பேச்சு, கருத்துச் சுதந்திரம் , அமைதியான போராட்ட சுதந்திரம் ஆகியவற்றை முற்றிலும் நசுக்கும் வகையிலான இந்த சட்டமூலத்தை  சபையின் 2/3 பெரும்பான்மைக்கு மேலதிகமாக வாக்கெடுப்பின் மூலம் மக்களின் ஆணை தேவை என்று அறிவிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளார்.

வழி தவறிய போராட்டக்காரர்கள், அடிப்படைவாதிகள்,  நாசகார செயலில்  ஈடுபடுவோர் அல்லது போதை மருந்துகளுக்கு அடிமையானோருக்கான புனர்வாழ்வு செயற்பாட்டை திறம்பட செயலாற்றுவதற்காக இந்த பணியகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

பணியகத்தின் செயற்பாடுகள், நிர்வாகம், முகாமைத்துவம் என்பவற்றுக்கு சபையொன்றை ஸ்தாபிக்கப்பட்டு, பாதுகாப்புக் கல்வி , சுகாதாரம் , புனர்வாழ்வு உள்ளிட்ட துறைசார் அமைச்சுகளின் செயலாளர்கள் அதற்கென நியமிக்கப்படவுள்ளனர்.

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ்மா அதிபர் அல்லது பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரும் அதில் உள்ளடக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

உலகில் பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைத்துக்கொள்ளப்பட்டது

உலகில் பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.உலக உணவுத் திட்டத்தால், கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில், முதல் தடவையாக பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட புதிய அறிக்கையிலும், இலங்கை பட்டினி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பற்ற நிலை காணப்படும் நாடுகளில் ஆப்கானிஸ்தான், எதியோப்பியா, நைஜீரியா, தென் சூடான், சோமாலியா மற்றும் யேமன் ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.அத்துடன், இலங்கையும் இந்த அபாய கட்டத்தை நெருங்கி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையானது கடும் உணவு தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்துள்ளது என உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.குறித்த அறிக்கையை மேற்கோள்காட்டி சர்வதேச நாணய நிதியமும் இவ்வருடம் ஒக்டோபர் மாதம் முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கை உட்பட 19 நாடுகளில் உணவு பாதுகாப்பற்ற நிலை காணப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.(

Posted in Uncategorized

இலங்கையில் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இலங்கையில் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாம் காலாண்டுப் பகுதியில் வேலை வாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வட்டி வீத உயர்வு, இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள், பணவீக்கம் உள்ளிட்ட பல காரணிகளினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது.

முதலாம் காலாண்டில் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கை 4.3 வீதமாக காணப்பட்டதாகவும், இரண்டாம் காலாண்டில் இது 4.6 வீதமாக உயர்வடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் முழுமையான அளவில் முயற்சியான்மைகளை மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இரண்டாம் காலாண்டில் மொத்த தேசிய உற்பத்தியானது 8.4 வீத பின்னடைவினை சந்தித்துள்ளது.

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அவுஸ்திரேலியாவிடம் கோரிக்கை

இலங்கையில் அவுஸ்திரேலிய நிறுவனங்களின் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவுஸ்திரேலிய  துாதுவர் போல் ஸ்டீபன்ஸிடம்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இருவருக்கும் இடையில் நேற்று முன்தினம் சந்திப்பு இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, உள்நாட்டு சவால்களை எதிர்கொள்வதற்காக அண்மையில் அவுஸ்திரேலியாவினால் வழங்கப்பட்ட உடனடியான மனிதாபிமான உதவிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வலுசக்தி மற்றும் கல்வித்துறையில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அதேநேரம், பல்தரப்பு மட்டத்தில் பரஸ்பர நலன்கள் உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.