குருந்தூர் மலை கட்டுமானத்தை நிறுத்தி , கோணேஸ்வரர் ஆலய கட்டுமானத்திற்கான தடையை நீக்க கோரிக்கை!

திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்மாண பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்ற விடயம் தொடர்பில் உடனடியாக தொல்பொருள் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அதன் பணிப்பாளர் மனவிதானய தெரிவித்ததாக தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்

பேராசிரியர் புஷ்பரட்ணம் ஏற்பாட்டில் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் மனவிதானவிக்கும் நல்லை ஆதீன முதல்வர் மற்றும் தெல்லிப்பளை துர்கா தேவி தேவஸ்தான தலைவர் ஆகியோருக்கும் இடையில் இன்று ம் விசேட சந்திப்பு இடம்பெற்றது

குறித்த சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்த கலாநிதி ஆறு திருமுருகன் முக்கியமாக, கீரிமலையில் ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் மூன்று கோவில்கள் நீண்டகாலமாக பூஜை வழிபாடுகள் இடம்பெறாது உள்ளன எனவே அந்த மூன்று கோயில்களிலும் உடனடியாக பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் கலந்துரையாடி அதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருக்கின்றோம்

அதேபோல் கீரிமலையில் சமாதிகள் சிலவும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன அவற்றையும் பெற்றுத் தருவதற்கு உதவ வேண்டும் எனக்கு கோரிக்கை விடுத்ததோடு திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோணேஸ்வரர் ஆலய கட்டுமான பணிகளுக்கு தொல்பொருத்திணை கழுத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக தெரிவித்த போது தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் இந்த விடயத்தினை உடனடியாக அமைச்சு மட்டத்திற்கு தெரியப்படுத்தி தீர்வினை தான் பெற்றுத் தர முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் முல்லை தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலை நீண்ட காலமாக சைவ மக்களால் வணங்கப்பட்டு வந்த அந்த மலையில் வேறு சில கட்டுமான பணிகள் இடம்பெறுகின்றன

எனவே அந்த விடயங்களை நிறுத்து உரிய தீர்வினை பெற்று தர வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தோம் எனினும் திருகோணமலை விடயம் தொடர்பில் உடனடியாக தான் அமைச்சு மட்டத்திற்கு தெரியப்படுத்தி தீர்வினை பெற்று தரமுயற்சிப்பதாக தெரிவித்தார் என்றார்,

Posted in Uncategorized

ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த பொலிஸார் தொடர்பில் விசாரணை

ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த பொலிஸார் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் பல இடங்களில் புகைப்படம் எடுத்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டை நீதவானிடம் பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போது கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதவான் திலின கமகே முன்னிலையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்தமை மற்றும் ஜனாதிபதியை கொடியை பயன்படுத்தியமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ரஞ்சனை பாராளுமன்றம் அழைத்துச் செல்ல தயாராகும் சஜித்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் ஏற்படும் முதலாவது வெற்றிடத்தில் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படுவார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க கலந்து கொண்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், ரஞ்சனுக்கு ஓரளவு சுதந்திரம் கிடைத்துள்ளது. அவருக்கு ஜனநாயக உரிமைகள் இருந்திருக்க வேண்டும்.

அந்தச் சுதந்திரத்தை ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சகல அரசியல் உரிமைகளுடன் வழங்குமாறு ஜனாதிபதிக்கு நாங்கள் பரிந்துரைக்கின்றோம்.

கோட்டாபயவுக்கு முன்னாள் ஜனாதிபதியின் சலுகைகளை வழங்க முடியாது?

இலங்கையின் அரசியலமைப்புக்கமைய முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு வழங்கப்படும் விசேட சலுகைகள் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட முடியாது என்று  முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெற்ற ஜனாதிபதியல்ல என்பதனால் அவருக்கு அந்தச் சலுகைகளை வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர் பதவி விலகியவர் என்பதனால், ஜனாதிபதி ஒருவருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சலுகைகள் எதுவும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்கள் உள்ளிட்ட எந்தவொரு சிறப்புரிமையும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இல்லை எனவும் சரத் என். சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநரால் நடத்தப்படும் விசேட நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் முன்னோக்கி செல்லும் வழி தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரால் நடத்தப்படும் விசேட நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பணிப்புரைக்கு அமைய இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் எதிர்கால பொருளாதாரத் திட்டங்கள் குறித்து பயனுள்ள சொற்பொழிவுக்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கைக்கு கைகொடுக்கும் ஜப்பான்

இலங்கைக்கு கடன் வழங்கிய தரப்பினர்களுக்கான மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்ய ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் வகையில் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் இணைந்து நடத்தும் பொறுப்பை ஏற்க ஒப்புக்கொண்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் குறித்த கலந்துரையாடலில் சீனாவின் பங்கேற்பு தெளிவில்லாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டுக் கடனில் ஐந்தில் ஒரு பங்கு சீனாவிடம் உள்ளது.

இதன் மதிப்பு 3.5 பில்லியன் டொலர்களாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் கைதிகளின் விடுதலை கண்துடைப்பு நாடகமாக அமைந்துவிடக்கூடாது: K.V.தவராசா அறிக்கை

நல்லாட்சிக் காலத்தில் நடைபெற்றதைப் போன்று அரசியல் கைதிகளின் விடுதலை கண்துடைப்பு நாடகமாக அமைந்துவிடக் கூடாது என ஜனாதிபதி சட்டத்தரணி K.V.தவராசா தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளியிட்டமைக்காக 2017, 2019 ஆம் ஆண்டுகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் சிலரை விடுதலை செய்து விட்டு, 12 முதல் 26 வருடங்கள் வரை சிறைகளிலுள்ள 46 அரசியல் கைதிகளின் விடுதலையை தவிர்த்துவிடக்கூடாது என தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சிக் காலத்தில் 217 அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்குறுதியளித்துவிட்டு, சந்தேகத்தின் பேரில் கைது செய்து வழக்குத் தாக்கல் செய்வதற்கு போதிய சாட்சியங்களற்ற 61 கைதிகளை பிணையிலும் 23 கைதிகளை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பியும் விடுதலை செய்ததாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சட்டமா அதிபரினால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, நீதிமன்றங்களினால் தண்டணை விதிக்கப்பட்ட அரசியல் கைதியோ அல்லது மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்குட்பட்டிருந்த அரசியல் கைதியோ அரச தரப்பினருடன் நடைபெற்ற பேச்சுவார்தைகளின் போது இன்று வரை விடுதலை செய்யப்படவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி K.V.தவராசா தெரிவித்துள்ளார்.

நல்லாட்சிக் காலத்தில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த கைதிகள் விடுதலை செய்யப்படும்போது தற்போதைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவே அப்போதைய நீதி அமைச்சராக செயற்பட்டவர் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

அரசாங்கத்திற்கு எதிரான அமைதியான போராட்டத்தை நசுக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தும் முயற்சிகளை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்துள்ளது.

மே 9ஆம் தேதி முதல் கைது செய்யப்பட்ட அனைத்து நபர்கள் மீதும் பொதுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மே 9 ஆம் தேதி முதல் நடந்த அனைத்து வன்முறைச் செயல்களுக்கும் காரணமானவர்களைக் கண்டறிந்து, தகுந்த தண்டனையைப் பரிந்துரைக்க, உரிய அதிகாரங்களைக் கொண்ட ‘உண்மை ஆணையத்தை’ நியமிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை புறக்கணிக்கப்பட்டதாகவும், அதற்கு பதிலாக அரச அலுவலகங்களுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் கேலிக்கூத்து முயற்சியில் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

ரஞ்சன் ராமநாயக்க விடுதலையாகி வெளியே வந்தார்!

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு  தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.இதன்படி இன்று பிற்பகல் அவர் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்துள்ளார்.அவரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிறைச்சாலையில் இருந்து அழைத்துச் சென்றார்.

இதன்பின்னர் விகாரைக்கு சென்று அவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.வரும் காலத்தில், நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் எந்தவொரு கருத்தை தெரிவிக்கவோ செயற்படவோ கூடாது என்ற நிபந்தனையுடன் பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

2017  ஆகஸ்ட் 21 ஆம் திகதி அலரிமாளிகைக்கு வெளியே நீதித்துறையை அவமதிக்கும் வகையில் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவித்தமைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 2021 ஜனவரி 12  ஆம் திகதியன்று ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக மன்னிப்பு கோரி, ரஞ்சன் ராமநாயக்க சத்தியக் கடதாசியொன்றை நேற்று (25) நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.தான் தெரிவித்த கருத்துக்கள் முற்றிலும் பிழையானவை என்றும் அந்தக் கருத்துக்களினால் பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதித்துறையினர் அனைவருக்கும் அகௌரவம் ஏற்பட்டமைக்காக மன்னிப்புக் கோருவதாகவும் குறித்த சத்தியக் கடதாசி மூலம் தெரிவித்திருந்தார்.

தான் கூறிய கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் அவற்றை மீளப் பெறுவதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவிக்கமாட்டேன் என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த சத்தியக்கடதாசியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஜெர்மனிய வெளிவிவகார அமைச்சு பிரதானிகளுடன் ஆறு தமிழ் கட்சி தலைவர்கள் இணையவழிச் சந்திப்பு

23 ஆவணி 2022 மாலை 6.30 மணி அளவில் ஜெர்மனியின் வெளிவிவகார அமைச்சின் ஆசிய பிராந்தியத்திற்கான தலைவர் திருமதி சபின் சிட்லர் மற்றும் இலங்கைக்கான விசேட அதிகாரி திரு. மரியோ கியோரி ஆகியோருடனான முக்கிய சந்திப்பு ஆறு தமிழ் கட்சி தலைவர்களுடன் நடைபெற ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதில் மாவை சேனாதிராஜா, நீதியரசர் விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் ஏற்பாட்டாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிவஞானம் ஸ்ரீதரன், கோவிந்தன் கருணாகரம், ஸ்ரீகாந்தா ஆகியோர் பிரத்தியேக காரணங்களால் பங்குபெற்ற முடியவில்லை.

நீண்டகால இடைவெளிக்குப் பின்னராக, ஐநா மனித உரிமைப் பேரவையில் முக்கிய நாடாகவும், ஐநா பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடாகவும் இருக்கும் உலக வல்லரசுகளில் ஒன்றான ஜெர்மனியுடன் நடாத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தை அரசியல் ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் மிகவும் முக்கியம் வாய்ந்தது.

தமிழ் மக்கள் சார்ந்த பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலையை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. ஐநா மனித உரிமைப் பேரவையில் பிரதான நாடாக அங்கம் வகிக்கும் ஜெர்மனி, தமிழ் மக்கள் சார்ந்து ஆதரவு நிலைப்பாட்டில் தொடர்ந்தும் செயல்பட்டு வருவதற்காக நன்றி தெரிவிக்கப்பட்டது. மனித உரிமை உயர்ஸ்தானிகரின் 46/1 அறிக்கையில் பரிந்துரைக்கப் பட்ட பிரகாரம் இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப் படுத்துவதற்கான கோரிக்கையை ஐநா பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் தமிழ் கட்சித் தலைவர்களால் பிரதானமாக முன்வைக்கப்பட்டது.

ஐநாவில் பல்வேறு பிரேரணைகள் நிறைவேற்றப் பட்ட போதிலும், அவை இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் நிராகரிக்கப்பட்டாலும் விடயங்கள் இன்று வரை நடைமுறைப் படுத்தப் படாமல் இருப்பதை அவதானிக்க முடிகிறது என்று தமிழ் கட்சித் தலைவர்களால் சுட்டிக் காட்டப் பட்டது.

அரசியல் கைதிகள் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், காணி அபகரிப்பு, இன குடிப்பரம்பல் சிதைப்பு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் நடைபெறுகின்றமை, புனர் வாழ்வு அளிக்கப் பட்ட முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் நிலை என்ற பல அவசரமான பிரச்சினைகள் பற்றி பேசப்பட்டது.

நிரந்தர அரசியல் தீர்வுக்கான கோரிக்கைகள் சர்வதேச சமூகம் உட்பட தமிழர் தரப்பு வலியுறுத்தி வந்தாலும் இலங்கை அரசாங்கங்கள் அதை நிறைவேற்றும் நோக்கங்களில் அர்ப்பணிப்பு அற்ற நிலையே தொடர்ச்சியாகக் காணப்படுகிறது.

தற்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார சூழ்நிலையில் இருந்து நாடு மீீள வேண்டிய தேவை உள்ளது. அதற்கான ஆதரவை தமிழ்த் தரப்புகள் நிபந்தனையின் அடிப்படையில் வழங்குவதற்கு தயாராக உள்ள போதிலும் அரசு தங்கள் உறுதிமொழிகளை நிறைவேற்றுமா என்ற சந்தேகம் காணப்படுவதாகவும், அதேநேரம் சர்வதேச சமூகம் இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் வேளையில் தமிழர்களுடைய அரசியல் தீர்வு பற்றிய கரிசனை கொள்வது நன்மை பயக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கு பதில் வழங்கிய திருமதி சபின் சிட்லர் அவர்கள், நீதிப் பொறிமுறையை நடைமுறைப் படுத்துவதற்கான ஏற்பாடுகளில் பிரதான நாடுகளுடன் தாங்கள் தொடர்ந்து முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.

ஐநா பொறிமுறைக்கு வெளியிலும் குறிப்பாக ஜி.எஸ்.பி வரிச்சலுகை, இலங்கைக்கான நிதி வழங்கல் என்பவற்றினூடாக தாங்கள் இலங்கையை பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்

எதிர்வரும் செப்டம்பர் மாத ஜெனீவா மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் தமிழ் மக்களின் சார்பாக கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் தெரிவித்த பல்வேறு கருத்துக்களை ஜெர்மனிய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு அவற்றை ஐநாவில் பிரதிபலிக்கும் வகையில் பிரதான மற்றும் அங்கத்துவ நாடுகளுக்கு தாங்கள் முன்னெடுத்துச் செல்வதாகவும் உறுதி அளித்தார்.

சுரேந்திரன்
தமிழ் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர்