இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த சீன கப்பல்

சர்ச்சைக்குரிய யுவான் வேங் – 5 (Yuan Wang 5) சீன அதி தொழில்நுட்ப கப்பல், தற்போது SEA OF SRILANKA எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளது.

இந்த கப்பல் நாளை(16) காலை 7.30 மணிக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடையவுள்ளது.

நாளை(16) முதல் 07 நாட்களுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் குறித்த கப்பல் நங்கூரமிடப்பட்டு வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் வருவதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்த போதிலும், கப்பலின் வருகையை தாமதிக்குமாறும் இலங்கை அதிகாரிகள் சீனாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதேவேளை, கடந்த 12ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான பி.என்.எஸ்.தைமூர் (PNS Taimur) கப்பல் வெற்றிகரமான கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

கடற்படையினரின் மரபிற்கமைய தைமூர் கப்பலுக்கான பிரியாவிடை, கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றது.

தைமூர் கப்பல் இலங்கையிலிருந்து வெளியேறும் போது, கொழும்பு துறைமுகத்திற்கு அப்பாலுள்ள கடற்கரையில் இலங்கை கடற்படையின் சிதுரல கப்பலுடன் தேடுதல், மீட்பு பயிற்சிகள் அடங்கிய கூட்டு நட்பு கடற்படை பயிற்சியும் இடம்பெற்றது.

டயஸ்போரா அமைப்புகளை சந்தித்து உரையாட நான் தயார்

ரணில் நிர்வாகம், உலகத் தமிழர் பேரவை, பிரிட்டன் தமிழர் பேரவை, கனடா தமிழ்க் காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ், உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் திராவிட ஈழ மக்கள் சம்மேளனம் ஆகிய ஆறு அமைப்புக்கள் மீதான தடையும், 316 தனிநபர்களுக்குமான தடையும் நீக்கியுள்ளது. இந்நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். ஆனால், தடை நீக்கம் மாத்திரம் அவர்களை திருப்தி படுத்த போவதில்லை.

இலங்கையின் 52 பில்லியன் டொலர் கடன்சுமை, நாட்டை நடத்த மாதாந்த 500 மில்லியன் டொலர் தேவை ஆகிய வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள அனைத்து தமிழ், சிங்கள மக்களின் ஒத்துழைப்புகளை நாம் நாட வேண்டும். இதற்காக கால தாமதம் செய்யாமல், இந்நாட்டின் தேசிய ஐக்கியம் மற்றும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலும், ஊழலற்ற நிதி நிர்வாகம் தொடர்பிலும் ஒரு குறைந்தபட்ச பொது கோட்பாடுகளை இலங்கை அரசு புலம்பெயர் இலங்கையர்களை நோக்கி அரசாங்கத்தின் உத்தரவாதமாக அறிவிக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் தமிழ் அமைப்புகள் மட்டுமல்ல, இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள சிங்கள மற்றும் அனைத்து மக்களது அமைப்புகளுடனும் சென்று உரையாட நான் தயாராக இருக்கின்றேன். ஒரு பக்கம் தமிழர் என்ற முறையிலும், மறுபுறம் தெற்கில் சிங்கள மக்கள் வாழும் கொழும்பு மாவட்ட எம்பி என்ற முறையிலும் நான் இந்த பாத்திரத்தை வகிப்பது பொருத்தமானது என நம்புகிறேன். அரசில் அமைச்சு பதவிகளை பெறுவதை விட இதுதான் பிரயோஜனமானது எனவும் நான் நம்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று நடத்திய விசேட ஊடக சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று நாம் உலக நாடுகளிடம் கையேந்தி கொண்டு இருக்கிறோம். ஆனால், இந்தியாவை தவிர எவரும் எமக்கு உதவில்லை. இந்திய மக்களின் வரிப்பணம் மூலமான இந்த உதவிகள் இன்னமும் எவ்வளவு நாளைக்கு கிடைக்கும் என தெரியவில்லை. சர்வதேச நாணய நிதி, உலக வங்கி ஆகியவை ஒதுங்கியே இருக்கின்றன.

அவர்களிடம் முன்வைக்கும் சமூக பொருளாதார திட்டம் என்ன? ஜனாதிபதி பதவி ஏற்று பல வாரங்கள் ஆகியும் இவை எதுவும் இன்னமும் நடைபெறவில்லை. இந்நிலையில் பழைய அடிப்படைகளில் இருந்து மாறி, புதிய முறையில் பார்க்க, சிந்திக்க முடியுமானால், நாம் உலகம் முழுக்க வாழும் நமது நாட்டு மக்களிடம், தாய் நாட்டுக்கு உதவுங்கள் என கோர முடியும்.

உலகம் முழுக்க புலம் பெயர்ந்துள்ள அனைத்து தமிழ், சிங்கள இலங்கையர்கள் சுமார் 25 இலட்சம் பேர் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் மனமுவந்து நாட்டுக்கு உதவக்கூடிய அளவில் அவர்களது நம்பிக்கையை பெறுவது நாட்டின், நாட்டு அரசின் கடமை. இந்நாட்டில் வாழ முடியாமல், வெளிநாடுகளுக்கு போய் விட்ட இவர்களுக்கு நாடு நல்ல திசையில் மாறுகிறது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும்.

ஆனால், அவற்றுக்கு முன்நிபந்தனைகள் உண்டு. புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் குறிப்பாக நாட்டின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் உத்தரவாதங்களை எதிர்பார்ப்பார்கள். புலம் பெயர்ந்துள்ள சிங்கள மக்கள் குறிப்பாக தமது உதவிகள் ஊழல், வீண்விரயம் ஆகியவற்றை செய்யும் அரசியல்வாதிகளின் கைகளுக்கு போய்விடக்கூடாது தொடர்பில் உத்தரவாதங்களை எதிர்பார்ப்பார்கள்.

இந்நாடு சிங்கள பெளத்த நாடு என்ற அடிப்படை மாற வேண்டும். இந்நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடு என்ற அடிப்படை ஏற்கப்பட வேண்டும். இந்நாடு மத சார்பற்ற நாடாக மாறவும் வேண்டும். இலங்கையர் என்ற அடையாளம் மேலெழும்ப வேண்டும். அதேபோல் வெளிநாட்டில் இருந்து வரும், ஒவ்வொரு டொலரும், பவுண்டும், யூரோவும் நாட்டின் தேவைகளுக்காக வெளிப்படை தன்மையுடன் கூடிய பொறுப்பு கூறலுடன் பயன்படுத்தப்பட வேண்டும். இவை பற்றிய குறைந்தபட்ச பொது கோட்பாடுகளை உத்தரவாதமாக இலங்கை அரசும், எதிர் கட்சிகளும் அறிவிக்கும்மானால், இது சாத்தியப்படலாம்.

இந்த அடிப்படையில் தமிழ் அமைப்புகள் மட்டுமல்ல, இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள சிங்கள மற்றும் அனைத்து மக்களது அமைப்புகளுடனும் சென்று உரையாட நான் தயாராக இருக்கின்றேன். ஒரு பக்கம் தமிழர் என்ற முறையிலும், மறுபுறம் தெற்கில் சிங்கள மக்கள் வாழும் கொழும்பு மாவட்ட எம்பி என்ற முறையிலும் நான் இந்த பாத்திரத்தை வகிப்பது பொருத்தமானது என நம்புகிறேன். அரசில் அமைச்சு பதவிகளை பெறுவதை விட இதுதான் பிரயோஜனமானது எனவும் நான் நம்புகிறேன்.

75வது சுதந்திர பவள விழாவை முன்னிட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரெலோ தலைவர் செல்வம் வாழ்த்து

மாண்புமிகு இந்தியாவின் பிரதமர் அவர்களுக்கு

இன்றைை ஆவணி 15 வது நாளில் இந்திய மக்கள் கொண்டாடும் 75 வது ஆண்டு சுதந்திர தின நிகழ்வில்உங்களுக்கும் இந்திய மக்களுக்கும் சிறப்பான வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் எனது மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாள் மிகவும் உற்சாகத்துடனும் பெருமையுடனும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது, தேசத்தின் விடுதலைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்களின் தியாகங்களை நினைவுகூர மக்கள் ஒன்று கூடுகிறார்கள்.

மொழி, கலாசாரம், இனம், மதம் மற்றும் பலவற்றில் பன்முகத் தன்மை கொண்டிருப்பினும் ஒரே தேசமாக ஒரு நாடு எவ்வாறு முன்னேற முடியும் என்பதற்கு இந்தியா உலகிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியா இன்றுவரை “பெரிய ஜனநாயகம்” என்று கருதப்படுகிறது.

இந்திய மக்கள் இந்த நாளை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் கொண்டாடுகிறார்கள். இந்த மகத்தான வேளையில், ஒற்றுமை மற்றும் சிந்தனை எதிர்காலத்திலும் மேலும் தொடர தங்களுக்கும் இந்திய மக்களுக்கு அனைத்து நல்வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

அன்புடன்

செல்வம் அடைக்கலநாதன் – பாராளுமன்ற உறுப்பினர்,
வன்னி மாவட்டம் , தமிழ் தேசிய கூட்டமைப்பு
தலைவர் – தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

Posted in Uncategorized

இலங்கை – பாகிஸ்தான் கடற்படைகளுக்கு இடையிலான ‘போர் பயிற்சி ’   – கடற்படை விளக்கம்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான (பிஎன்எஸ்) தைமூர் உடனான திட்டமிடப்பட்ட கடற்படைப் பயிற்சி தொடர்பான சில தகவல்களுக்குப் பதிலளித்த இலங்கை கடற்படையினர், வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் கடற்படைக் கப்பல்கள் நாட்டை விட்டுப் புறப்படும்போது வழக்கமான செயற்பாடாக பயிற்சிகளை மேற்கொள்வது சம்பிரதாயபூர்வமானது என தெரிவித்துள்ளது.

134 மீ. நீளமுள்ள PNS தைமூர் ஆகஸ்ட் 12 அன்று ஒரு உத்தியோகபூர்வமான பயணமாக கொழும்பு வந்தடைந்தது. இந்த கப்பல் ஆகஸ்ட் 15 வரை நாட்டில் இருக்கும் , மேலும் இரு கடற்படைகளுக்கு இடையில் ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பல நிகழ்ச்சிகளில் கப்பலின் பணியாளர்கள் பங்கேற்பார்கள்.

மேலும், பிஎன்எஸ் தைமூர் ஆகஸ்ட் 15 ஆம் திகதி புறப்படும்போது மேற்கு கடல் பகுதியில் இலங்கை கடற்படையுடன் கடற்படை பயிற்சியை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்தப் பின்னணியில், இலங்கை கடற்படைக்கும் பாகிஸ்தான் கடற்படைக்கும் இடையில் ‘போர் விளையாட்டு’ பற்றி பரப்பப்படும் சில ஊடகச் செய்திகள் தவறானவை” என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த பயிற்சிகளின் முக்கிய நோக்கம், வெளிநாட்டு கடற்படைகளுடன் செயல்படும் திறன், கூட்டாண்மை மற்றும் நல்லெண்ணத்தை மேம்படுத்துவது மற்றும் சிறந்த நடைமுறைகளை பரிமாறிக்கொள்வதாகும்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜப்பான், ஜேர்மனி, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் கடற்படைகளுடன் இதற்கு முன்னர் பல தடவைகள் இவ்வாறான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

”இந்தியாவுக்கு இலங்கை நம்பிக்கை துரோகமிழைத்துள்ளது”: ராமதாஸ் குற்றச்சாட்டு!

சீன கப்பலுக்கு அனுமதி அளித்து இலங்கை இந்தியாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளது என்று  பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ´´இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு, இப்போது அதன் நிலையை மாற்றிக் கொண்டு நாளை மறுநாள் சீன கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர அனுமதித்திருக்கிறது. இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்.

சீன கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் உளவு பார்க்கப்படும். இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என எச்சரித்தப் பிறகும் சீனக் கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்துள்ளது. இலங்கையின் சீன பாசத்திற்கு இது தான் எடுத்துக்காட்டு.

இலங்கையின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டிற்கு டோர்னியர் 228 வகை போர் விமானத்தை இந்தியா நாளை இலவசமாக வழங்குகிறது. இப்படியாக ராணுவ உதவி, பொருளாதார உதவி அனைத்தையும் பெற்றுக் கொண்டு தான் இந்தியாவுக்கு இலங்கை துரோகம் செய்கிறது. இதுதான் அதன் குணம்.

இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் வெளியுறவுக் கொள்கையை வகுக்க வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பு கருதி, இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.´´ என்று தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

”ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வாருங்கள்”: ஜனாதிபதியிடம் பேராயர் வேண்டுகோள்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர முயற்சித்தால் மட்டுமே தற்போதைய ஜனாதிபதியை ஏற்றுக்கொள்ள முடியும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது, ​​ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் வழங்கிய நிதி கையளிக்கப்பட்டது .

இதன்போது உரையாற்றிய அவர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மையை வெளிக்கொணரும் நோக்கில் தற்போதைய ஜனாதிபதி செயற்பட்டால் மட்டுமே அவரை ஏற்றுக்கொள்வோம். இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் சதி இருக்கலாம் என அறியப்படுகிறது. கூறியுள்ளது. இது குறித்த உண்மையை வெளிக்கொணர தற்போதைய ஜனாதிபதி உழைக்க வேண்டும்.

மேலும் 2019 ஏப்ரல் 21க்கு முன்னர் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சஹ்ரானைக் கைது செய்யவிருந்த பொலிஸ் அதிகாரியைத் தடுத்தவர்களுக்குத் தண்டனை வழங்குவது அவசியமாகும். சஹ்ரானை கைது செய்ய விடாமல் தடுத்த அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும், ஏனெனில் அவரும் சஹரானைப் போன்ற குற்றத்தை செய்துள்ளார். நாங்கள் யாரையும் பழிவாங்க முயற்சிக்கவில்லை, ஆனால் உண்மையை மட்டுமே அறிய விரும்புகிறோம்” என்று அவர் மேலும் கூறினார்

Posted in Uncategorized

2500 பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய வங்கி யோசனை!

இலங்கையில் டொலர் பற்றாக்குறை மேலும் மோசமடையக்கூடும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதனால் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மேலும் மட்டுப்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சிற்கு அறிவித்துள்ளது.

நாட்டில் வெளிநாட்டு கையிருப்பின் தாக்கம் எதிர்காலத்தில் தொடர்ந்து மோசமாக இருக்கும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இந்த இறக்குமதிக் கட்டுப்பாடுகளை உடனடியாகச் செய்ய வேண்டும் என்று மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது.

எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலரை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால், அத்தியாவசியமற்ற அனைத்து பொருட்களின் இறக்குமதியும் கண்டிப்பாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, அத்தியாவசியமற்ற பொருட்களின் மூன்று பட்டியல்களை மத்திய வங்கி நிதியமைச்சிற்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்பட்டியலில் 2500க்கும் மேற்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

”பலம் வாய்ந்த நாடுகளின் வேட்டைக் களமாக இலங்கை மாறிவிட்டது”

பலம் வாய்ந்த நாடுகளுக்கு வேட்டைக்களமாக இலங்கை மாறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இதன் மூலம் தேசிய பாதுகாப்பு கூட நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ராஜபக்சர்களால் இந்நாட்டின் முதுகெழும்பு உடைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

2019 ஜனாதிபதி தேர்தலில் “ஐக்கிய பாதை”க்கு பதிலாக “தவறான பாதையை” தெரிவு செய்ததன் அவலத்தை இன்று நாடு எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நாட்டை கட்டியெழுப்பும் ஆற்றல் ஐக்கிய மக்கள் சக்திக்கே உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று (13) ஹோமாகம தேர்தல் தொகுதியில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஹோமாகம தேர்தல் தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி பிரதான அமைப்பாளர் சட்டத்தரணி எரந்த வெலியங்க இதனை ஏற்பாடு செய்திருந்தார்.

தற்போதைய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டமை அரசியலமைப்பு ரீதியாக சரியானது என்றாலும், அங்கீகாரம் மற்றும் மக்கள் அபிப்பிராயம் என்ற அடிப்படையில் இது முற்றிலும் மாறுபட்ட நிலை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தை விட நிகழ்காலம் முற்றிலும் மாறுபட்டது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அந்நாட்களில், பெரும்பாலும் அரசியல் முடிவுகளை எடுப்பதில் முன்னுரிமை பெற்றது பெரியவர்களே என்றாலும், இன்று இளம் தலைமுறையினர் அதை வீட்டில் கூட பெற்றுள்ளனர் எனவும் தெரிவித்தார். தேர்தலில் முடிவெடுப்பது குறித்து வீட்டில் செல்வாக்கு செலுத்துவது இளைஞர் சமுதாயத்தினரின் எண்ணங்கள் மற்றும் விருப்பங்களின் பிரகாரமே என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவர்களின் எண்ணங்களையும் விருப்பங்களையும் புரிந்து கொள்ள வேண்டியது ஆட்சியாளர்களின் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்தார்.

தம்மிடம் இரத்தம் சிந்திய வரலாறு இல்லை எனவும்,தமது வங்கி கணக்குகளில் போதைப்பொருட்கள் விற்ற பணம் இல்லை எனவும்,தம்மிடம் எந்த வித கபடத்தனமும் இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஓர் அணியாக இணைந்து நாட்டை கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஏனைய புலம்பெயர் அமைப்புக்கள், தனிநபர் தடைகளையும் நீக்குக ரெலோ கோரிக்கை

எமது தொடர்ச்சியான கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி அவர்கள் அண்மையில் சில புலம்பெயர் அமைப்புகளின் தடைகளை நீக்கி உள்ளதை வரவேற்கிறோம். அதே நேரம் இன்னும் பல அமைப்புகளும் தனி நபர்கள் உடைய பெயர்களும் தடைசெய்யப்பட்ட பட்டியலிலேயே காணப்படுகிறது. அவர்கள் மீது உள்ள தடையை நீக்குமாறு நாம் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் கோருகிறோம்.

நமது கோரிக்கையின் பிரதான காரணம் நாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வதற்கு முதலீடு மிக அவசியமாகிறது. புலம்பெயர் உறவுகள் பலர் இங்கு முதலீடு செய்வதில் இருக்கக்கூடிய பிரதான சிக்கல் பாதுகாப்பின்மை ஆகும். தாங்கள் பாரிய முதலீடுகளை இங்கு ஏற்படுத்திய பின்னர் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக காரணம் காட்டி தங்கள் முதலீடுகளை முடக்கவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யவும் முடியும் என்று அச்சம் கொள்கிறார்கள். முகநூல் இணைப்புக்களை காரணம் காட்டியே பலர் கைது செய்யப்பட்ட சம்பவங்களை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
எனவே முதலீடு செய்யத் தயாராக இருக்கும் புலம்பெயர் உறவுகள் அச்சமின்றி தங்கள் முதலீடுகளை செய்வதற்கு இந்த தடைகளை நீக்குவது அவசியம் என்று உங்களிடம் சுட்டிக் காட்டியுள்ளோம். ஆகவே இதைக் கருத்தில் கொண்டு ஏனைய புலம்பெயர் அமைப்புகளையும் தனிநபர்களின் பெயர்களையும் நீக்குமாறு கோருகிறோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் -ரெலோ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சிலவற்றின் மீதான தடைகள் நீக்கம்

இலங்கையில் 6 புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி 6 சர்வதேச தமிழ் அமைப்புக்கள் மீதான தடை தளர்த்தப்பட்டுள்ளது.
உலக தமிழர் பேரவை (GTF), பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF), கனடியத் தமிழர் பேரவை (CTC), அவுஸ்ரேலியத் தமிழர் பேரவை (ATC), தமிழீழ மக்கள் பேரவை (TEPA) மற்றும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC)ஆகியவற்றின் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பில் அறிவித்துள்ளது.

இதேவேளை பிரித்தானியாவை தலமாக கொண்டு இயங்கும் உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனும் தடை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் 316 நபர்கள் மீதான தடையையும் நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized