கறுப்பு யூலையை நினைவு கூர்ந்து யாழ்.நகரில் சுவரொட்டிகள்

தமிழ்மக்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்ட 1983 ஆம் ஆண்டு கறுப்பு யூலையை நினைவு கூர்ந்து தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையினரால் யாழ்.நகரின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதேவேளை, இன்றையதினம் இலங்கை வரலாற்றில் தமிழ்மக்கள் மறக்க முடியாத ஒரு முக்கியமான நாள் எனவும், கடந்த-39 வருடங்களுக்கு முன்னர் தலைநகர் கொழும்பில் தமிழ்மக்கள் சிங்களப் பேரினவாதிகளால் தாக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்ட நாள் எனவும் தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் இடம்பெற்று 39 ஆம் ஆண்டுகள் கடந்த போதும் இதற்கான நீதியையோ, தமிழ்மக்களுக்கான உரிமைகளையோ இதுவரை சிங்கள ஆட்சியாளர்கள் பெற்றுத் தரவில்லை எனச் சுட்டிக் காட்டிய அவர் கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வு அடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தப்படுவதன் மூலம் தமிழ்மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் வாழ்த்துக் கடிதம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காகவும், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவும் இந்திய அரசு எப்போதும் ஒத்துழைப்பை வழங்குமெனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

தேசிய அரசாங்கத்தை அமைக்க உத்தியோகபூர்வ அழைப்பு வரவில்லை: மனோ கணேசன் அறிக்கை

தேசிய அரசு தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து உத்தியோகபூர்வ அழைப்பு எவருக்கும் விடுக்கப்படவில்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசு அல்லது சர்வகட்சி அரசு அமைப்பது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கோ ஏனைய எதிர்க்கட்சிகளுக்கோ உத்தியோகபூர்வ அழைப்புகள் வரவில்லை என மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .

எவ்வாறாயினும், நாடு இன்று இருக்கும் அவதி நிலையில், ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர அவகாசம் கொடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரப்பட்டு எதிர்ப்பு அரசியல் ஆர்ப்பாட்டங்களை செய்யக்கூடாது என்பதே தமிழ் முற்போக்குக் கூட்டணியின்
நிலைப்பாடு என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சருடன் தமது கூட்டணி மலையக தமிழ் இலங்கையர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்வைக்கும் என மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய கொடியேற்றம் ; சுற்று வீதிகள் போக்குவரத்திற்கு தடை – யாழ் முதல்வர் மணிவண்ணன்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர சபையினால் விளக்கமளிக்கப்பட்டது.

மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று செவ்வாய்கிழமை காலை 9.00 மணியளவில் யாழ் மாநகர சபையில் இடம்பெற்றது.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம் பெற்ற நல்லூர் மஹோற்சவம் வழமைபோன்று அதாவது 2018 ஆம் ஆண்டுக்கு முன்பு எவ்வாறு உற்சவம் நடந்ததோ அதேபோல இம்முறை இடம்பெறுமென யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்தார்.

கலந்துரையாடலுக்கு பின்னர் நல்லூர் ஆலயப் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், ஆகஸ்ட் 1ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஆகஸ்ட் 29 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும்.

ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது.

அதேபோல வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் எந்தவிதமான வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்ய முடியாது.

காலணிகளுடன் ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது.

ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும். ஆனால் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும்.

முகக்கவசங்களை அணிவது சட்டமாக்கப்படவில்லை. இருந்த போதும் கொரோனா எச்சரிக்கை காணப்படுவதால் முகக்கவசங்களை அணிந்து தன்னெழுச்சியாக சுகாதார விதிமுறைகளை பக்தர்கள் பின்பற்றவேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் தங்களது சுகாதாரத்தில் கவனம் எடுத்து செயல்பட வேண்டும்.

திருட்டுச் சம்பவங்களை தவிர்க்க நல்லூர் ஆலயச்சூழலில் யாழ் மாநகர சபையினால் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்தக் கலந்துரையாடலில் யாழ் மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர்,மாநகர அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Share

Posted in Uncategorized

விமானத்தினுள் வைத்து டானிஷ் அலி கைது

போராட்டத்துடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் டானிஷ் அலி துபாய் செல்வதற்கு தயாரான போது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் நோக்கி பயணிக்கவிருந்த விமானத்தில் இருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் நுழைந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த பிடியாணைக்கு ஏற்ப டானிஷ் அலி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

Posted in Uncategorized

கூட்டமைப்புக்குள் சர்ச்சையை ஏற்படுத்திய இரகசிய அழைப்பு! மூடிய அறைக்குள் நடந்ததை விளக்கும் TNA இணைத்தலைவர் செல்வம்

இலங்கையில் நடந்தது இன வாதம் தான் என ஏற்றுக்கொள்ள வைப்பதே எமது எண்ணம். இதனை நடைமுறைப்படுத்தும் வகையிலேயே ஜனாதிபதி தெரிவில் எமது முடிவு காணப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,“யாரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என்று எமது கட்சிக்குள் பல வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன. சஜித் உட்பட பலர் ஜனாதிபதி தேர்தலில் கலந்துகொள்ள இருந்து பின்னர் தங்களின் முடிவுகளை மாற்றி கொண்டனர்.

இதனால் எமது கட்சி ஒரு தீர்மானத்தை எடுத்தது. ஜனாதிபதி தெரிவு நடப்பதற்கு முதல் நாள் யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்யலாம் என தீர்மானிக்கபட்டது.

இந்த தீர்மானம் நாட்டின் பொருளாதார பிரச்சினை, மக்களின் தேவை மற்றும் இன பிரச்சினை என்பவற்றை அடிப்படையாக கொண்டமைந்தது. மேலும் விமல் வீரவன்ச தரப்பினர் இன வாதத்தை கட்டிக்கொண்டு இருப்பவர்கள். அண்மையில் ஐ.நா சபையிலும் இலங்கையில் நடந்தது இன வாதம் இல்லை என கூறும் வகையில் ஜி.எல் பீரிஸ் கருத்து வெளியிட்டிருந்தார்.

எனவே இதனை அடிப்படையாக கொண்டு தான் எங்களுடைய யுக்தி அமைந்தது. அதாவது இலங்கையில் நடந்தது இன வாதம் தான் என அவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பதே எமது எண்ணம்.”என கூறியுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி.

Posted in Uncategorized

அடுத்த 12 மாதங்களில் எரிபொருள் இறக்குமதியை மட்டுப்படுத்த நேரிடும் – அமைச்சர் கஞ்சன

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக எதிர்வரும் 12 மாதங்களில் எரிபொருள் இறக்குமதி வரையறை செய்யப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் தளத்தினூடாக அமைச்சர் இதனை இன்று(25) பதிவிட்டுள்ளார்.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் அனைத்து நிரப்பு நிலையங்களுக்கும் நாளாந்தம் எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர், மொத்தமாக எரிபொருள் கிடைத்தாலும் கூட அது தேவைக்கு போதுமானதாக இல்லை என கூறியுள்ளார்.

இதனிடையே, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் தேசிய எரிபொருள் அனுமதி அட்டையை கட்டாயப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாகன பதிவு இலக்கத்தின் கடைசி எண்ணுக்கு அமைய, எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை மாத்திரமே எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படும் எனவும் அதன்பின்னர் தேசிய எரிபொருள் அனுமதி அட்டைக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான நிரப்பு நிலையங்கள் மற்றும் லங்கா IOC வலையமைப்பினூடாகவும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த புதிய ஜனாதிபதியின் ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம் – ரஷ்ய ஜனாதிபதி

ஷ்யா – இலங்கைக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்து கடிதத்திலேயே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போதே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடைய வாழ்த்து கடிதத்தினையும் கையளித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ரஷ்ய ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு ரஷ்ய ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

‘ரஷ்ய மக்களின் நலன்களுக்காகவும், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தும் நலனுக்காகவும் பல்வேறு துறைகளில் ஆக்கபூர்வமான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு அரச தலைவர் என்ற முறையில் உங்களது செயல்பாடுகளை நான் எதிர்பார்க்கிறேன்’ என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அவரது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டங்கள் தொடர்பில் ரணிலின் அறிவித்தல்!

வன்முறையின்றி அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையை நிலைநாட்டுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்ற இராஜதந்திர அதிகாரிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

ஜனாதிபதி செயலகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றுவது தொடர்பில் இராஜதந்திர அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதற்காக இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தற்போதைய அரசாங்கம் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 21வது சரத்து மற்றும் இலங்கையின் அரசியலமைப்பின் 14 (1) (b) ஆகிய இரண்டையும் நிலைநிறுத்துவதாக ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்க கட்டிடங்களை முற்றுகையிட்டு சொத்துக்களை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன் வழங்கிய அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

உடமைகளுக்கும் உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காமல் வன்முறையற்ற போராட்டங்கள் அனுமதிக்கப்படுவதை உறுதிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இராஜதந்திரிகளுக்கு விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதேசத்தில் விகாரமஹாதேவி பூங்காவின் வெளி அரங்கம், புதிய நகர மண்டபம், ஹைட் பார்க், கெம்பல் பிட்டிய போன்ற அனைத்து வசதிகளும் அகிம்சை வழியிலான போராட்டங்களுக்காக வழங்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

´கோட்ட கோ கம´ போராட்டக் களம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என்றும், பாதுகாப்புப் படையினரால் அது அகற்றப்படவில்லை என்றும் இங்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அனைவரையும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவது உட்பட பின்பற்ற வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்தும் சட்டமா அதிபர் இராஜதந்திர அதிகாரிகளுக்கு இந்தக் கூட்டத்தில் விளக்கமளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ரணில்: கடைசி ஆளா? – நிலாந்தன்

நாடாளுமன்றத்தில் தனது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே ஒரு உறுப்பினர்,அதுவும் தேர்தலில் தோற்றதால்,தேசியப் பட்டியல்மூலம் உள்ளே வந்தவர்,நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.இது ஆசியாவின் அதிசயம் மட்டுமல்ல உலகத்தின் அதிசயமும்தான்.தாமரை மொட்டுக்குத் தலைமை தாங்கும் யானைக்கும், யானைக்குத் தலைமை தாங்கும் தாமரை மொட்டுக்கும் இடையிலான போட்டியில் யானை ஜெயித்திருக்கிறது.எனவே அது எல்லா விதத்திலும் தாமரை மொட்டுக்குக் கிடைத்த வெற்றிதான்.ரகசிய வாக்கெடுப்பு என்பது திருடர்களுக்கு வசதியானது.”அரகலய”போராட்டக்காரர்கள் கூறுவதுபோல, திருடர்களே வெற்றியைத் தீர்மானித்திருக்கிறார்கள்.

ரணிலை முன்னிறுத்தியதன்மூலம் ராஜபக்சக்கள் தங்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாதுகாத்துக் கொண்டு விட்டார்கள்.இது முதலாவது வெற்றி.இரண்டாவது வெற்றி,போராட்டத்தைப் பிசுபிசுக்கச் செய்யலாம் என்பது.பதவியேற்ற அடுத்தநாளே ரணில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்.எனினும் இது ஒரு முழுமையான முறியடிப்பு நடவடிக்கை அல்ல. ஒருவிதத்தில் குறியீட்டு வகைப்பட்ட எச்சரிக்கை எனலாம். ஜனாதிபதி செயலகத்தின் முன்பகுதியைக் கைப்பற்றி வைத்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்களே அகற்றப்பட்டிருக்கிறார்கள்.அதேசமயம் கோட்டா கோகம கிராமத்தைச் சேந்த கூடாரங்கள் பெருமளவுக்கு அகற்றப்படவில்லை.

ஜனாதிபதி செயலகத்தை சில தினங்களில் கையளிக்கப்போவதாக போராட்டத்தில் ஈடுபடும் தரப்புகள் சமூக வலைத்தளங்களில் அறிவித்திருந்தன என்றும்,நள்ளிரவுத் தாக்குதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிகிறது.

இது கிட்டத்தட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதிக்கட்டத்தை ஒத்தது. தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமது பிரதான கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட்டபின் அந்த வெற்றியின் உற்சாகத்தால் புதிய கோரிக்கைகளை முன்வைத்து ஒரு தரப்பு தொடர்ந்து போராட்டக் களத்தில் நின்றது. மிஞ்சி நின்ற அந்தத் தரப்பை தமிழக அரசு பலத்தை பிரயோகித்து துரத்தியது.

எனினும் காலி முகத்திடல் போராட்டம் சற்று வித்தியாசமானது. போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் முழுமையாக வெற்றி பெறவில்லை. ரணிலை முன்னிறுத்தி ராஜபக்சக்கள் தப்பிவிட்டார்கள்.அதுமட்டுமல்ல போராட்டத்தின் இறுதி வெற்றியைத் தடுக்கும் ஒருவராக ரணில் ஜனாதிபதியாக மேலெழுந்து விட்டார்.ராஜபக்சக்களை பிரதியீடு செய்யும் ரணிலை அகற்றுவதற்காக தொடர்ந்து போராடப் போவதாக போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள்.

ஏற்கனவே தன்னுடைய வீடு எரிக்கப்பட்டதாலும்,தனக்கு மிகவும் விருப்பத்துக்குரிய வளர்ப்பு நாய் கொல்லப்பட்டதாலும்,ரணில் தனிப்பட்ட முறையில் மனமுடைந்து காணப்பட்டவர்.நள்ளிரவுத் தாக்குதலை ஊக்குவித்த காரணிகளில் அதுவும் ஒன்றா?

போராட்டங்களின் பின்னணிகள் மேற்கு நாடுகள் நின்றன. சில விமர்சகர்கள் கூறுவது போல மேற்கத்திய தூதுவர்கள் போராட்டத்திற்கு நிதியுதவி வழங்கினார்கள் என்ற சூழ்ச்சிக் கோட்பாட்டை இக்கட்டுரை நியாயப்படுத்தவில்லை.ஆனால் போராட்டங்களுக்கு மேற்கத்திய தூதரகங்களின் ஆசீர்வாதம் இருந்தது.இப்பொழுதும் ரணில் விக்ரமசிங்கவின் முறியடிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கு நாடுகள், கொழும்பில் உள்ள ஐநா தூதரகம் போன்றன கருத்துத் தெரிவித்துள்ளன.ஆனால் முன்பு ராஜபக்சவுக்கு எதிராக பயன்படுத்திய கடுமையான வார்த்தைகளை இம்முறை பயன்படுத்தவில்லை.

இதுதான் அரசியல்.சீனாவுக்கு விசுவாசமான ராஜபக்சக்களை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை போராட்டக்காரர்களைத் தடவித்தடவி உற்சாகமூட்டினார்கள்.ராஜபக்சக்கள் அகற்றப்பட்டதன் விளைவாக மேற்கிற்கு விசுவாசமான ரணில் ஜனாதிபதியாகிவிட்டார்.இப்பொழுது எந்தப் போராட்டங்களை மேற்கு ஆசீர்வதித்ததோ,அதே போராட்டங்களை அவர்களுடைய விசுவாசியை வைத்துக் கையாள வேண்டிய ஒரு நிலை.

போராட்டங்களின் இதயமாகக் காணப்பட்ட இடதுசாரி மரபில் வந்த ஜேவிபி, முன்னிலை சோசலிசக் கட்சி,அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போன்றவற்றை மேற்குநாடுகள் இந்தியா போன்றன எச்சரிக்கை உணர்வோடுதான் அணுகின.இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த தரப்புகள் இலங்கைத்தீவின் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதையோ அல்லது தீர்மானிக்கும் சக்திகளாக வருவதையோ மேற்குநாடுகளும் அனுமதிக்காது,இந்தியாவும் அனுமதிக்காது. எனவே ரணிலுக்கு எதிரான அரகலயவை ஏதோ ஒரு விதத்தில் முறியடிக்க வேண்டிய தேவை மேற்குக்கும் உண்டு.

அரகலயவை நீர்த்துப்போகச் செய்வதும் பொருளாதார நெருக்கடிகளை தற்காலிகமாகத் தணிப்பதும் ஒன்றுதான்.ஏனென்றால் பொருளாதார நெருக்கடிகளின் காரணமாகத்தான் அரகலய தோற்றம் பெற்றது.எனவே பொருளாதார நெருக்கடிகளை தற்காலிகமாக வேணும் வெற்றிகரமாகக் கையாண்டால்,நடுத்தர வர்க்கத்தின் கொதிப்பையும் கோபத்தையும் தணிக்கலாம். ரணில் பதில் ஜனாதிபதியாக வந்த கையோடு அந்த மாற்றத்தைக் காட்டவிளைந்தார்.எரிவாயு கிடைக்க தொடங்கியது,எரிபொருள் வரத் தொடங்கியது,மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது.

ரணில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதும் ஐ.எம்.எஃப் வெளியிட்ட அறிக்கையும் மத்தியவங்கி ஆளுநர் தெரிவித்த கருத்துக்களும் அந்த வகையிலானவைதான்.மத்தியவங்கியின் ஆளுநர் இப்பொழுது கூறுகிறார் 5 மாதங்களுக்குள் நிலைமை தேறிவிடும் என்று.ஆனால் சில கிழமைமைகளுக்கு முன் ரணில் கூறினார்,பொருளாதாரத்தை நிமிர்ந்துவதற்கு குறைந்தது நான்கு ஆண்டுகள் தேவை என்று ஐ.எம்.எஃப் கூறியதாக. அதிலும் குறிப்பாக முதலாவது ஆண்டு மிக நெருக்கடியான ஆண்டாக அமையும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.ஆனால் இப்பொழுது மத்திய வங்கியின் ஆளுநர் கூறுகிறார் நாலைந்து மாதங்களில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று. மொத்தத்தில் ரணிலைப் பலப்படுத்துவதற்காக மேற்குநாடுகளும் ஐ.எம்.எஃப்பும் இலங்கைத்தீவை நோக்கி உதவிகளைப் பாய்ச்சத் தொடங்கிவிட்டன.பங்குச் சந்தையும் அண்மை நாட்களில் மாற்றத்தைக் காட்டுகிறது.ரணிலை பலப்படுத்துவதுதான் அவர்களுடைய ஒரே குறிக்கோள்.ரணிலை பலப்படுத்துவதென்றால் பொருளாதாரத்தை தற்காலிகமாகவேனும் நிமிர்த்த வேண்டும்.பொருளாதாரத்தை தற்காலிகமாக நிமிர்த்திவிட்டால் போராட்டத்திற்கான காரணங்கள் வலுவிழுந்துவிடும்.

 

எனினும்,போராடும் தரப்புக்களுக்கு அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று ரணில் சிந்திப்பதாகத் தெரிகிறது.இத்தாலிய அறிஞரான க்ரொம்சி கூறுவது போல…நாடாளுமன்றம்,ஜனநாயகம் என்றெல்லாம் வெளித் தோற்றத்துக்குக் காட்டப்படும்.ஆனால் அரசுக்கு ஆபத்து என்று வரும்போது நாடாளுமன்றத்தின் பின் மறைந்து நிற்கும் ராங்கிகள் வெளியில் வரும்.அதுதான் கடந்த வியாளன் நள்ளிரவு நடந்ததா?பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதும் ரணில் காயப்பட்ட படையினரை மருத்துவமனைக்குச் சென்று பார்த்ததும், ஜனாதிபதியாக வந்ததும் படைத்தரப்பைச் சந்தித்ததும் அதைத்தான் காட்டுகின்றன.அதாவது ராஜபக்சக்கள் ரணிலை ஒரு முன்தடுப்பாக முன் நிறுத்தியதன்மூலம் தமது இரண்டாவது இலக்கையும் அதாவது அரகலயவைத் தோற்கடிப்பது என்ற விடயத்தில் வெற்றிபெறத் தொடங்கி விட்டார்களா?

ரணில் பதில் ஜனாதிபதி ஆகியதும் போராட்டக்காரர்கள் உஷார் அடைந்தார்கள்.ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் பாசிச சக்திகள் உண்டு என்று அவர் கூறினார்.எனவே அரகலய தன்னை தற்காத்துக் கொள்ள முற்பட்டது. ஏற்கனவே அவர்கள் கட்சித் தலைவர்களை சந்திக்கத் தொடங்கி விட்டிருந்தார்கள்.ஜனாதிபதி தேர்தலையொட்டி கட்சிகளுடன் சந்திப்பை வேகப்படுத்தினார்கள்.அவர்கள் ஒரு புதிய கட்சியை உருவாக்கப் போவதாகவும் ஓர் அறிவிப்பு வந்தது.ஆனால் அது போராட்டத்துக்குள் ஊடுருவிய சிலரின் பொய்யான அறிவிப்பு என்று போராடும் அமைப்புகள் தெரிவிக்கின்றன. ராஜபக்சக்கள் ரணிலை முன்னிறுத்தியதும் அரகலய முன்னெச்சரிக்கை உணர்வோடு தற்காப்பு நிலைக்குச் செல்லத்தொடங்கியது.எந்த அரசியல் கட்சிகளை போராட்ட களத்தில் அனுமதிக்க மறுத்தார்களோ,அதே கட்சிகளை அவர்கள் சந்தித்தார்கள்.எந்த மக்கள் பிரதிநிதிகளை அவர்கள் திருடர்கள் என்று விழித்தார்களோ அவர்களைச் சந்தித்தார்கள்.

எனினும் அரகலயவின் முன்னெச்சரிக்கையோடு கூடிய தற்காப்பு நடவடிக்கைகளை மீறி ரணில் தாக்குதலைத் கொடுத்திருக்கிறார். ராஜபக்சக்கள் செய்யத்துணியாத ஒன்றை அவர் செய்திருக்கிறார்.ஏனென்றால் ராஜபக்சக்களின் பலம் உள்நாட்டில் சிங்கள பௌத்த பெருந்தேசியவாத உணர்வுதான்.அவர்கள் எப்பொழுதும் உள்நாட்டில் பலமான தலைவர்கள். வெளியரங்கில் பலவீனமானவர்கள்.அதனால்,உள்நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பியதும் அவர்களுடைய சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத் தளம் ஆட்டங்காணத் தொடங்கியது.அரகலயவின் பின்னணியில் மேற்குநாடுகள் நிற்பதும் அவர்களுக்குத் தெரியும்.எனவே தப்பிச் செல்வதைத் தவிர ராஜபக்சங்களுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. ஆனால் ரணிலின் விடயத்தில் நிலைமை வேறு.அவர் உள்நாட்டில் மிகவும் பலவீனமானவர்.வெளியரங்கில் மிகப் பலமானவர்.மேற்கு நாடுகள் மத்தியில் அவருக்கு கவர்ச்சி அதிகம். அந்தத் துணிச்சல் காரணமாகத்தான் அவர் அரகலயவின் மீது கை வைத்திருக்கிறார்.

ஆனால் இது ஒரு விஷப்பரீட்சை.ஏனெனில் அரகலியவின் பின்னணியில் இடதுசாரி மரபில் வந்த,ஏற்கனவே பலமான நிறுவனக் கட்டமைப்புகளை கொண்டுள்ள,அமைப்புகளும் கட்சிகளும் உண்டு.ஏற்கனவே இருதடவை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு தோற்கடிக்கப்பட்ட அனுபவம் உண்டு.பலமான தொழிற்சங்கங்கள் உண்டு.இவற்றின் தொகுக்கப்பட்ட விளைவாக ரணிலை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்று பார்க்க வேண்டும்.ரணில் இப்பொழுதும் உள்நாட்டில் பலவீனமான தலைவர்தான்.

 

பொருளாதார நெருக்கடிகளை தற்காலிகமாகத் தணிப்பதன்மூலம் அரகலியவை இல்லாமல் செய்யலாம் என்று ரணிலும் மேற்கு நாடுகளும் சிந்திக்கும். ஆனால் முறைமை மாற்றத்தை கேட்டு அரகலய புதிய வடிவம் எடுக்குமாக இருந்தால் அது நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை பாதிக்கும். இதைப் பொழிவாகச் சொன்னால், ரணில் அரகலயவை எப்படிக் கையாள போகிறார் என்பதுதான் நாட்டின் அடுத்தகட்ட அரசியலைத் தீர்மானிக்கப் போகின்றது.அரகலயவின் விளைவாகத்தான் அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பே கிடைத்தது.இக்கட்டுரை எழுதப்படும் கணம் வரையிலும் அரகலயவவின் வெற்றிக் கனிகளை ரணில் தன்னுடைய சட்டப்பைக்குள் போட்டுக் கொண்டு விட்டார்.

நாடாளுமன்றத்தில் தாமரை மொட்டுக்கட்சி தொடர்ந்தும் பலமாகக் காணப்படுகிறது.அதனால் மாற்றத்தைக் கேட்கும் மக்களுக்கு ஒரு தோற்ற மாற்றத்தைக் காட்டும் ஒரு உத்தியாக அரசியல் சங்கீதக் கதிரை விளையாட்டை அக்கட்சி கடந்த மூன்று மாதங்களாக விளையாடி வருகிறது. இந்த சங்கீதக் கதிரையில் கடைசியாக அமர்த்தபட்டவர்தான் ரணில்.ஆனால் அதுதான் சங்கீதக் கதிரை விளையாட்டின் கடைசிக் கட்டம் என்று எடுத்துக் கொள்ள தேவையில்லை.கிரேக்கத்தில் பொருளாதார நெருக்கடிகளின்போது ஐந்து ஆண்டுகளுக்குள் ஏழு தடவைகள் அரசாங்கம் மாறியது.இலங்கைத் தீவில் கடந்த சுமார் இரண்டரை ஆண்டு காலப் பகுதிக்குள் ஒன்பது தடவைகள் அமைச்சரவை பகுதியளவோ அல்லது முழுமையாகவோ மாற்றப்பட்டிருக்கிறது.ஐந்து நிதி அமைச்சர்கள் வந்துவிட்டார்கள்.மூன்று பிரதமர்கள் வந்துவிட்டார்கள்.ஒரு புதிய ஜனாதிபதியும் வந்துவிட்டார். இதுதான் கடைசி மாற்றமா இதற்குப் பின்னரும் மாற்றங்கள் இடம் பெறுமா என்பதனை ரணிலுக்கும் அரகலயவுக்கும் இடையிலான மோதல்தான் தீர்மானிக்கப் போகிறதா?

Posted in Uncategorized