ஈழத்-தமிழர் அரசியலின் தந்திரோபாய வறுமை மீண்டுமொரு முறை நிரூபணமானது

யதீந்திரா
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பெரும்பாண்மை வாக்குகளால் தெரிவாகியிருக்கின்றார். அந்த வகையில் ‘ஒப்பிரேசன் ரணில்’ வெற்றிபெற்றுவிட்டது. இதனை சிலர் ராஜபக்சக்களின் வெற்றியென்று கூறலாம் ஆனால் இந்தக் கட்டுரையாளர் அப்படிக் கருதவில்லை. ஏனெனில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாவதற்கான திட்டங்கள் மிகவும் கச்சிதமாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. கோட்டபாய ராஜபக்சவிற்கு எதிராக, கிளர்சிகள் அதிகரித்த போது, நிலைமைகளை சமாளிக்கும் ஒரு உக்தியாகவே ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனால் ரணில் பிரதமராக நியமிக்கப்பட்ட போதே, ரணில் ஜனாதிபதியாவதற்கான திட்டம் ரணிலிடம் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இது சாத்தியப்பட்டிருக்காது. ரணில் பிரதமரான போதே, கோட்டபாயவினால் அதிக காலம் பதவியில் நீடிக்க முடியாதென்னும் விடயத்தை ரணில் கணித்திருக்க வேண்டும். கோட்;டபாய விலகியதை தொடர்ந்து, ரணில் பதில் ஜனாதிபதியானார். 69 லட்சம் வாக்குகளால் வெற்றிபெற்ற ஜனாதிபதி ஒருவரின் வீழ்ச்சியை தொடர்ந்து, அதற்கு சமதையான வாக்குகளை பெற்றிருக்கும் 134 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ரணில் ஜனாதிபதியாகியிருக்கின்றார். இப்போது ரணில் கேள்விகளுக்கு அப்பாற்றபட்டவர்.

இந்த விடயத்தை எவ்வாறு கையாளுவது என்பதில்தான், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டுமொரு முறை சறுக்கியிருக்கின்றது. யுத்தத்திற்கு பின்னரான கடந்த 13வருடங்களில், அரசியலை தந்திரோபாய ரீதியில் கையாளும் விடயத்தில் சம்பந்தன் தொடர்ந்தும் தோல்விகளையே சந்தித்திருக்கின்றார். தொடர் தோல்வியில் இப்போது புதிதாக சேர்ந்திருப்பதுதான் டளஸ் அழகப்பெருமவை ஆதரித்த பிரச்சினையாகும். புதிய ஜனாதிபதிக்கான விடயம் விவாதத்திற்கு வந்த நாளிலிருந்தே, தமிழரசு கட்சியை தீர்மானிக்கவல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பொது வெளிகளில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நிலைப்பாடுகளையே முன்வைத்துவந்தார். சுமந்திரனின், தெரிவு சஜித்பிரேமதாசவாகவே இருந்தது. ஆனால் சஜித்பிரேமதாச திடிரென்று போட்டியிலிருந்து விலகியதை தொடர்ந்து, ராஜபக்சக்களின் பொதுஜன பெரமுனவின் பொருளாளர் டளஸ் அழகப்பெருமவை ஆதரிக்கும் விவகாரம் சூடுபிடித்தது.

ஆனால் இதில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே மாறுபட்ட அப்பிராயங்கள் இருந்ததை தனிப்பட்டரீதியில் இந்தக் கட்டுரையாளர் அறிவார். இவ்வாறானதொரு சூழலில்தான், இதில் கூட்டமைப்பு எடுக்கக் கூடிய ஆகச் சிறந்த முடிவு தொடர்பில், இந்தக் கட்டுரையாளர் சில விடயங்களை வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு கடிதமொன்றையும் அனுப்பியிருந்தேன். அதாவது, ஜனாதிபதி போட்டியிலிருந்து கூட்டமைப்பு விலகியிருப்பதுதான், சரியானதென்று சுட்டிக்காட்டியிருந்தேன். இதன் மூலம் ஜனாதிபதியாக எவர் தெரிவு செய்யப்பட்டாலும் அவருடன் பணியாற்றுவதற்கு, புதிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு இலகுவாக இருக்குமென்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால் வழமைபோலவே, சம்பந்தனும் சுமந்திரனும் பழைய பாணியில் சிந்தித்து, விடயங்களை குழப்பினர்.
தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் சிவில் சமூகம் மற்றும் புத்திஜீவிகள் என்போர் – ஒரு விடயத்தை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, நாம் என்னவகையான அரசியலை மேற்கொள்கின்றோம்? இந்தக் கேள்வியிலிருந்துதான் ஒவ்வொரு விடயங்களை பறறியும் சிந்திக்க வேண்டும். இன்று நாம் முன்னெடுக்கும் அரசியலானது, பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியலாகும். அதன் ஆற்றலுக்கு ஒரு எல்லையுண்டு. அதாவது, தேர்தல்கள் மூலம் கிடைக்கப்பெறும் பிரதிநித்துவ பலத்தின் அடிப்படையில், பேரம்பேசி விடயங்களை வெற்றிகொள்வதை பற்றித்தான், நாம், இங்கு சிந்திக்க முடியும். இது ஒன்றுதான், தற்போது தமிழர்களிடமுள்ள அரசியல் வறிமுறையாகும்.

இந்த வழிமுறையில் முன்னெடுக்கப்படும் அரசியலின் மூலம் வெற்றிகளை அடைய வேண்டுமாயின், தந்திரோபாயங்கள் மட்டுமே கைகொடுக்கும். அதே வேளை இங்கு வெற்றியென்பது முழுமையானதல்ல என்னும் புரிதலும் நம்மிடமிருக்க வேண்டும். எனவே பெறக் கூடியவைகளை பெறுவதென்பததான் வெற்றியாகும். ஏனெனில், விடயங்கள் தோhல்விடையும் போது, தமிழர் தரப்பில் அரசை, கீறங்கிவரச் செய்வதற்கான மாற்று வழிகள் இல்லை. எனவே முழுமையான அரசியல் வெற்றியென்பது தமிழர் அரசியலின் இலக்காக இருக்கவே முடியாது. உதாரணமாக பேச்சுவார்த்தைகள் தோல்வியடைகின்ற போது, விடுதலைப் புலிகள் அந்தத் தோல்வியை இராணுவ வெற்றிகள் மூலமே சரிசெய்துகொண்டனர். இதன் மூலம் மீளவும் அரசாங்கத்தை தங்களை நோக்கி வரவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தினர். இவ்வாறான அணுகுமுறை ஆயுதப் போராட்ட அரசியலில் மட்டுமே சாத்தியப்படும். ஜனநாயக அரசியலில் தந்திரோபாயங்கள் மூலம் மட்டுமே நலன்களை வெற்றிகொள்ள முடியும்.

யுத்தம் நிறைவுற்ற காலத்திலிருந்து, கூட்டமைப்பு, ஏனைய தமிழ் தேசிய சிறுகட்சிகள், தமிழ் சிவில் சமூகம், புலம்பெயர் அமைப்புக்கள் என, அனைவரும் பல்வேறு தளங்களில் இயங்கியிருகின்றனர். ஜ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி, இந்தியாவை நோக்கி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருக்கி;ன்றனர். இவைகள் எவையும் தந்திரோபாயங்கள் அல்ல. மாறாக, சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கான செயற்பாடுகள் மட்டுமே. ஒரு குறிப்பிட்டளவு அழுத்தங்களும் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் இவ்வாறான அழுத்தங்களின் ஊடாக, ஏதாவது வாய்ப்புக்கள் கிடைக்கும் போது, அதனை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்வதுதான் அரசியல் தந்திரோபாயமாகும். ஏனெனில் சர்வதேச அழுத்தங்கள் என்பவை நிரந்தரமானதல்ல. அவை மாற்றமடையக் கூடியவை. கொழும்பின் ஆட்சியாளர்களின் அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்ற போது, சிறிலங்காவின் மீதான அழுத்தங்களும் மாற்றமடைந்துவிடும். இந்த இடைப்பட்ட காலத்தில் கிடைப்பதுதான் வாய்ப்புக்கள், அந்த வாய்ப்புக்களை திறம்பட கையாளுவதில்தான் தமிழர் அரசியலின் வெற்றி தங்கியிருக்கின்றது. இந்த விடயங்களை தமிழர் தரப்புக்களால் புரிந்து கொள்ள முடியாமல் போகும் ஒவ்வொரு சந்தர்பங்களிலும், தமிழ் மக்களுக்கு வெறும் சுலோகங்கள் மட்டுமே மிஞ்சும்.

இப்போது மீண்டும் ஜனாதிபதி தெரிவு விவகாரத்திற்கு வருவோம். நான் முன்னர் குறிப்பிட்டது போன்று, ரணிலை எதிர்க்கும் நோக்கில் சிந்திக்காமல், வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பதன் மூலம் ரணிலை எதிர்நிலைக்கு கொண்டுபோகாமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்த ஜனாதிபதி தெரிவின் போது, ஒரு வேளை ரணிலை ஆதரிக்கும் முடிவெடுத்திருந்தாலும் கூட, அது பிரச்சினைக்குரிய ஒன்றல்ல. ஏனெனில், இரண்டு பக்கத்திலுமே மொட்டு அணியினரின் ஆதிக்கம்தான் மேலோங்கியிருந்தது. ஒரு புறம் மொட்டு உறுப்பினர்களின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்கவும் மறுபுறும் மொட்டு கட்சியின் சார்பில் டளஸ் அளகப்பெருமவும் போட்டியிட்டிருந்த நிலையில், கூட்டமைப்பிற்கு இதில் தலையீடு செய்ய வேண்டிய தேவையிருந்திருக்கவில்லை. ஒரளவு பொருத்தமானவர் என்னுமடிப்படையில் கூட்டமைப்பினர் வாக்களிக்க விரும்பியிருந்தால், ரணில் விக்கிரமசிங்கதான் கூட்டமைப்பினரின் தெரிவாக இருந்திருக்க முடியும். ஏனெனில், ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டமைப்பினர் முன்னர் இணைந்து பணியாற்றியிருந்தனர். இந்த பின்புலத்தில் ரணிலை ஆதிரிப்பதில் பெரிய அரசியல் சிக்கல்கள் இருந்திருக்கவில்லை. எனினும் கொள்கையடிப்படையில் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டிய தேவையிருந்திருப்பின் நடுநிலை வகிப்பதே ஒரேயொரு சிறந்த தெரிவாக இருந்தது. ஆனால் சம்பந்தனால் தந்திரோபாய ரீதியில் செயற்பட்டிருக்க முடியவில்லை. ஏனெனில் அவ்வாறான அரசியல் ஆளுமை அவரிடம் இல்லை, அவரிடம் மட்டுமல்ல, தமிழ் சூழலிலேயே தந்திரோபாயம் தொடர்பான புரிதல் மிகவும் பலவீனமாகவே இருக்கின்றது. அரசியலை வெறும் உணர்வுரீதியில் புரிந்துகொள்வதற்கே பெரும்பாலான தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் பழக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களை நெறிப்படுத்த வேண்டிய, புத்திஜீவிகள்; மற்றும் கருத்துருவாக்கிகள் மத்தியிலும் தந்திரோபாய அரசியல் சார்ந்து ஆழமான புரிதல்கள் இல்லை. அவர்களில் அனேகரும் உணர்வுரீதியாகவே விடயங்களை அணுக முற்படுகின்றனர். தாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை சிறிலங்கா ஏற்றுக்கொள்ளாவிட்டால், அரசை இறங்கிவரச் செய்வதற்கான மாற்றுவழிகள் தொடர்பில் எவரும் பேசுவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு அது தெரியாது.

உதாரணமாக சிலர் இடைக்கால அரசாங்கம் பற்றி கற்பனைகளை முன்வைக்கின்றனர். அதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தமிழர் தரப்புக்கள் என்ன செய்யும்? விடுதலைப் புலிகள் பாணியில் தாக்குதலை தொடுப்பீர்களா? பொத்துவில் தொடங்கி பொலிகண்டி போன்ற நடவடிக்கைகளால் கொழும்மை இறங்கிவரச் செய்ய முடியாது. ஏனெனில் வடக்கு கிழக்கில் இடம்பெறும் இது போன்ற நடவடிக்கைகளால் கொழும்பின் நிர்வாகம் முடங்கப்போவதில்லை. அண்மையில் இடம்பெற்ற சிங்கள இளைஞர்களின் பொருளாதார நெருக்கடி கோபம், எவ்வாறு கொழும்மை இறங்கிவரச் செய்தது என்;பது ஒரு நல்ல உதாரணமாகும். அவ்வாறான ஒரு நடவடிக்கையை வடக்கு கிழக்கில் மேற்கொண்டிருந்தால், அது கொழும்பிலுள்ளவர்களுக்கு ஒரு புதினமாகவே இருந்திருக்கும்.

எனவே விடயங்களை தொகுத்து நோக்கினால் தந்திரோபாயரீதியில் தீர்மானங்களை எடுக்க வேண்டிய ஒவ்வொரு சந்தர்பங்களிலும், சம்பந்தன் இடறிவிழுபராகவே இருந்திருக்கின்றார். இதற்கு என்ன காரணம்? சம்பந்தன் அரசியலில் காலாவதியாகிவிட்டார். சம்பந்தன் மட்டுமல்ல இன்னும் பலரும் அவ்வாறான நிலையில்தான் இருக்கின்றனர். ஆனால் தமிழ் வாக்காளர்களின் அறியாமையும், ஞாபக மறதியும் அவ்வாறானவர்களை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது. தந்திரோபாய அரசியலுக்கு முன்னுரிமையளிக்கின்ற, வெறும் உண்ர்ச்சிகர அரசியலுக்கு மயங்காத ஒரு புதிய தலைமுறை தமிழ் தேசிய அரசியலை கைப்பற்றாதவரையில், இவ்வாறான பழம் அரசியலில் எந்தவொரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை. சில தினங்களுக்கு முன்னர் ஒரு சிங்கள சட்டத்தரணியோடு பேசிக் கொண்டிருந்த போது, அவர் ஒரு விடயத்தை குறிப்பிட்டார். அடுத்த தேர்தலில் குறைந்தது எழுபதிற்கு மேற்பட்ட புதியவர்கள், இளைஞர்கள், தெற்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வரக்கூடும் என்றார். கூடவே, தமிழ் பகுதியில் நிலைமையென்ன என்று கேட்டார். தமிழ் வாக்காளர்களை நம்பி எவ்வாறு பதிலளிக்க முடியும்?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கறுப்பு ஜீலை நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்றைய தினம் காலை கறுப்பு ஜீலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள பிரதான கொடிக்கம்பத்தில் கறுப்பு கொடியேற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.அத்துடன் 1983 கறுப்பு ஜூலை வாரத்தில் தமிழிர்களுக்கு இழைக்கபட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.இதனையடுத்து பல்கலைக்கழக பிரதான தூபி வளாகத்தில் கறுப்பு ஜீலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு ,மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

மேலும் 39வருடங்களின் முன் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு, திட்டமிடப்பட்ட தமிழர்கள் மீதான வன்முறைகளின் போது பாதிக்கப்பட்ட உயிர்நீத்த உறவுகளுக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை, தற்காலத்திலும் தமிழர்கள் மீதான அடக்குமுறை இடம்பெற்றே செல்கிறது.ஒடுக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் வலியுறுத்தப்பட்டது.

தாக்குதல் அச்சம் வெளியிடும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை

கொழும்பில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகிலுள்ள போராட்ட முகாமை அகற்றுவதற்கு, பாதுகாப்புப் படையினர் தேவையற்ற பலத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவது தொடர்பில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் பீதியடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் அலுவலகப் பேச்சாளர் ஜெரமி லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதன்போது போராட்டக்காரர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மீது தடியடி நடத்தப்பட்ட செய்திகளையும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் கண்டித்துள்ளது.

அத்துடன் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடியவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலக பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் ஆர்ப்பாட்டங்களைக் கண்காணித்து அறிக்கையிடுவதற்கு உரிமையுடையவர்கள். எனவே இந்தச் செயற்பாடுகளை எந்த வகையிலும் தடை செய்யக்கூடாது என்று மனித உரிமைகள் அலுவலக பேச்சாளர் வலியுறுத்தினார்.

எனவே, அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக பலாத்காரம் பயன்படுத்துவது சர்வதேச சட்டத்திற்கு முரணானது எனவும், அவ்வாறான பலத்தை பயன்படுத்துவதை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் கோரியுள்ளது.

இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை பலவந்தமாக தீர்க்க முடியாது எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பரந்த ஆலோசனைகள் மற்றும் உரையாடல்களின் மூலமே, சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இலங்கையர்கள் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ரணிலை சந்தித்தார் ஜூலி

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்தித்துள்ளார்.

ஒரே இரவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்க்காரர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதற்காக ஜனாதிபதியை சந்தித்ததாக ஜூலி சங் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சிறந்த எதிர்காலத்திற்கான இலங்கையர்களின் அழைப்புகளுக்கு பதிலளிக்க, ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு ஒரு வாய்ப்பும் கடமையும் உள்ளது. குடிமக்களை ஒடுக்குவதற்கான நேரம் இதுவல்ல.

மாறாக, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் அரசாங்கம் எடுக்கக்கூடிய உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எதிர்நோக்க வேண்டுமென அமெரிக்க தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்திய – இலங்கை உறவு சிறந்த முறையில் உள்ளது: கோபால் பாக்லே

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் வர்த்தக முதலீட்டு உறவுகள் சிறந்த  முறையில் உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் தேசிய தொலைகாட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

துறைமுகம் , மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி, ஹைட்ரோ கார்பன் உட்கட்டுமான அபிவிருத்தி தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாகவும் விவசாயம், பாலுற்பத்தி, தகவல்  தொழில்நுட்பம் மற்றும் உயர்  கல்வியிலும்  மேலதிக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளதாகவும் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாக பாரிய நிறுவனங்கள் இலங்கையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி  செயற்பட்டு வருவதுடன்,  காலி முகத்திடலில் பாரிய இந்திய நிறுவனங்கள் வர்த்தக நடவடிக்கைளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஹிட்லரின் தீர்வுகளை பொதுமக்கள் எதிர்பார்க்கவில்லை-ஓமல்பே சோபித தேரர் அரசாங்கத்திற்கு கண்டனம்

மக்கள் போராட்டத்துக்கு ஹிட்லரின் தீர்வுகளை பொதுமக்கள் எதிர்பார்க்கவில்லை என வண. ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலை ஆக்கிரமித்த முப்படையினரால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இரக்கமற்ற மற்றும் நெறிமுறையற்ற செயல் எனவும் தேரர் தெரிவித்துள்ளார்.

பிற்பகல் 2 மணிக்குள் ஜனாதிபதி செயலகத்தை விட்டு வெளியேற ஆர்ப்பாட்டக்காரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் தாக்குதல் நடத்துவது வீண் என தேரர் தெரிவித்துள்ளார்.

உலகில் எந்த ஒரு நாடும் பலத்தைப் பயன்படுத்தி எதிர்ப்புகளை அடக்குவதற்கு மன்னிக்க முடியாது எனவும், சர்வதேச சமூகங்களும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளன எனவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

புதிய அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்கத் தயார்-சீனா

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு சீன ஜனாதிபதி Xi Jinping வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்க பதிவொன்றில், புதிய அரசாங்கம் இலங்கையை நெருக்கடி நிலையில் இருந்து மீட்டெடுக்கும் வகையில் செயற்படும் என தான் நம்புவதாக சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதிய அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்குவதற்கு சீனா தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ரணிலின் இடத்துக்கு வஜிர நியமனம்!

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதன் பின் ஏற்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற ஆசன வெற்றிடத்துக்கு வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

எமது பிள்ளைகள் உகண்டாவிலா?: காணாமல் போனோரின் உறவுகள் கேள்வி!

ராஜபக்‌ஷ குடும்பத்தினருக்கு சொந்தமானதாக கூறப்படும் உகண்டாவில் உள்ள தொழிற்சாலைகளில் இலங்கையில் காணாமல் போன எமது பிள்ளைகள் இருக்கின்றார்களா என்று உலகவாழ் உறவுகள் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சஙக தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

இந்த ஆட்சி மாற்றம் எங்களிற்கு பெரிதாக ஒன்றும் செய்யப்போவதில்லை. நாங்கள் சர்வதேசத்தின் ஊடாக நீதியை கேட்டு நிற்கின்றோம். இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கின்றது.

சர்வதேசம் இலங்கை தொடர்பில் அவதானித்து தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வினையும், எமக்கான நீதியையும் பெற்றுத்தர வேண்டும் என கேட்டு நிக்கின்றோம். இதேவேளை உலகலாவிய ரீதியில் வாழ்கின்ற தமிழர்கள், ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுத்து எமது போராட்டத்திற்கும், அரசியல் தீர்வுக்கும் முன்னின்று உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கை அரசில் குடும்ப ஆட்சியும் இனவழிப்பும் நடந்து அவர்கள் கலைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட பின்னர் எங்களிற்கான தீர்வு சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்.

தற்பொழுது உள்ள ஜனாதிபதி பதவியை இழந்து நிற்கும்போது, எங்களுடைய மண்ணில் வந்து எங்களை சந்தித்தார். உங்களது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் எனவும், தற்பொழுது நான் பதவியில் இல்லை. மகிந்தவின் மனைவியின் பிள்ளை காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் அவர்கள் தேடுவார்கள். அவர்களிற்கான சட்டத்தை பயன்படுத்துவார்கள். நான் இந்த பதவிக்கு வந்தால், நிச்சயமாக பிள்ளைகளை மீட்டுத்தருவேன் என்று கூறியிருந்தார்.

அவரோ அல்லது அவர் சார்ந்த எவருமோ எமக்கு எதுவும் செய்யப்போவதில்லை. இன்று ராஜபக்ச குடும்பத்தினர், நாடுகடத்தப்பட்டு அனாதைகளாக தெருத்தெருவாக திரிகின்ற இந்த வேளையில், உண்மையாக அந்த இனவழிப்பை செய்தவர்களை கைது செய்வதற்கு சர்வதேசம் முன்வரவேண்டும். அவ்வாறு கைது செய்து எமக்கான நீதியை பெற்றுத்தருவார்கள் என்று நம்புகின்றோம்.

உகண்டா எனும் நாட்டிலே, ராஜபக்ச குடும்பத்தினர்11 தொழிற்சாலைகளை அமைத்து அங்கு எமது பிள்ளைகளை சம்பளமில்லாத கூலித்தொழிலாளிகளாக வேலைக்கு வைத்திருக்கலாம் என்று நாங்கள் நம்புகின்றோம். எமது கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்கு என்ன நடந்தது என்று கூற முடியாதவர்கள், எங்களுடைய பிள்ளைகளை கூலித்தொழிலாளர்களாக வைத்திருக்கலாம் என்று நம்புகின்றோம்.

அந்த தொழிற்சாலைகளை நிர்வகிக்கின்றவர் வேலுப்பிள்ளை கனநாதன் என்ற ஒரு தமிழர். அவருடன் உலக நாடுகளில் உள்ள எமது உறவுகள் தொடர்புகொண்டு, எவ்வாறு அந்த தொழிற்சாலைகள் இயங்குகின்றன என்பதையும், அங்கு எமது பிள்ளைகள் இருக்கின்றார்களா என்பதை அறிவதற்கும் முன்வரவேண்டும் என்றார்.

காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் – ஐ.நாவிடம் மனு கையளிப்பு

காலிமுகத்திடலில் இருந்த போராட்டகாரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் விசேட மனு ஒன்றை கையளித்துள்ளனர்.

கொழும்பு 4 தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகத்தில் இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார, முஜிபுர் ரஹ்மான்,ஹர்சன ராஜகருண ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

அமைதியான போராட்டகாரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கவனம் செலுத்தி, அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறு இந்த மனு ஊடாக கோரிக்கை விடுத்துள்ளதாக முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.