”பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க உதவுவோம்”: அமெரிக்க தூதுவர்!

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சன்ங் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.
இன்று (30) பிற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில்  ஜூலி சன்ங் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
சர்வதேச நாணய நிதியத்துடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக அந்நாட்டில் இருந்து வருகை தந்த உயர்மட்ட இராஜதந்திரக் குழு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனும் பல சந்தர்ப்பங்களில் மனிதாபிமான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டுக்காகவும் மற்றும் அதன் மனிதாபிமான உதவிகளை வழங்கி அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன்  இலங்கைக்கு வழங்கும் ஆதரவிற்காக ஜனாதிபதி அவர்கள் தமது நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கை எதிர்நோக்கும் தற்போதைய நிலைமையை தாம் அறிந்திருப்பதாகவும், நாடு விரைவில் மீண்டு வருமென நம்புவதாகவும்  ஜூலி சன்ங் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
Posted in Uncategorized

இலங்கை-தூதரக சேவைகள் மூன்று நாட்களுக்கு மட்டுப் படுத்தப் படுவதாக அறிவிப்பு

தூதரக சேவைகளை வழங்குவது இன்று முதல் ஜூலை 10 வரை மூன்று நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அறிக்கையின்படி, தூதரகப் பிரிவு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரமே பொதுமக்களுக்குத் திறக்கப்படும்.

இதேவேளை யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களிலுள்ள பிராந்திய தூதரக அலுவலகங்களும் இந்த நாட்களில் சேவைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்யும் IMF பிரதிநிதிகள் குழு

IMF பிரதிநிதிகள் குழு விஜயம் நிறைவு: சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்யவுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான பிணை எடுப்புப் பொதி தொடர்பில் அரசாங்கம் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக 10 பேர் கொண்ட IMF குழு கடந்த ஜூன் 20 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் செய்தது.

பிணைமுறிப் பொதிக்கு வழிவகுக்கும் அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பாக IMF பிரதிநிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பல தரப்புகளுடன் கலந்துரையாடினர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஜூலை மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் உத்தியோகபூர்வ அளவிலான உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள இலங்கை உத்தேசித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகக் குடியேறிய 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயன்ற போது கைது செய்யப்பட்ட 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவினர் இன்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.இவர்கள் சிலாபத்தில் வசிப்பவர்கள் என்பதுடன், ஐந்து வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளும் குழுவில் உள்ளனர்.

இன்று காலை 8:40 மணிக்கு விமானத்தில் கொக்கோஸ் தீவில் இருந்து இலங்கையர்கள் குழு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.விமானத்தில் 100 அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகளும் இருந்தனர்.

குறித்த நபர்கள் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளால் பண்டாராநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தந்துள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனையடுத்து 46 இலங்கையர்களும் பண்டாராநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த நபர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Posted in Uncategorized

அரசியலமைப்பு திருத்தங்கள் ஆட்சியாளர் அதிகாரம் பெறவே மக்கள் நன்மைக்காக அல்ல! – சபா குகதாஸ்

அரசியலமைப்பு திருத்தங்கள் ஆட்சியாளர் அதிகாரம் பெறவே மக்கள் நன்மைக்காக அல்ல என்று வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

தற்கால அரசியல் நிலைமைகள் குறித்து கருத்து வெளியிடுiகிலேயே இதனை அழவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் அமைப்புத் திருத்தம் என்பது மாறி மாறி வரும் ஆட்சியாளர்கள் தமக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள மேற் கொள்ளப்படுகிறதே தவிர மக்களின் அல்லது நாட்டின் நலன்கள் கருதியவை அல்ல இதற்கு கடந்தகால திருத்தங்கள் சிறந்த உதாரணங்களாகும்.

1978 ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியலமைப்பே தற்போது நடைமுறையில் உள்ளது இதன்ஆரம்பப் பிரசவமே சர்வாதிகாரத் தன்மை கொண்டதாக மக்களின் கருத்துக்களை உள்வாங்காது உருவாக்கப்பட்டது இந்த அரசியலமைப்பு 44 ஆண்டுகளில் 21 திருத்தத்தை கடந்து செல்கின்றது.

பௌத்த சிங்கள ஆட்சியாளர்கள் தாங்கள் ஏகபோக சுகபோகங்களை அனுபவிப்பதற்காகவும் ஊழல்ச் செயற்பாடுகளை மேற் கொள்வதற்காகவும் அவற்றில் இருந்து தம்மை பாதுகாப்பதற்காகவும் குடும்ப ஆட்சியை மேற் கொள்வதற்காகவும் அரசியலமைப்புத் திருத்தங்களை மாறி மாறி வந்த ஆட்சியில் அரங்கேற்றினார்கள் இதுதான் உண்மை நிதர்சனம்.

இதுவரை வந்த திருத்தங்களால் நாடு தொடர்ந்து பொருளாதார வீழ்ச்சியை மட்டுமல்ல நாட்டின் அத்தனை அபிவிருத்திக் குறிகாட்டிகளும் வீழ்ச்சியடைந்துள்ளன நாடு தொடர்ந்தும் அமைதியற்ற நவ காலணித்துவத்துள் விழுங்கப்பட்டு வருகின்றது.

19 திருத்தம் ஐனாதிபதிக்கும் பிரதமருக்கும் பாராளுமன்றத்திற்கும் அதிகாரங்களை பகிர்ந்தது ஆனால் ஐனாதிபதியும் பிரதமரும் வேறு வேறு கட்சி சார்ந்தவர்களாக இருந்தமையால் இருவரும் மாறி மாறி அதிகாரங்களை பயன்படுத்தி முரண்பட ஆட்சி சீரழிந்து ஏப்ரல் 21 குண்டு வெடித்ததுடன் பெரும் ஊழல்களும் அறுவடையாகியது.

20 திருத்தம் அபரி மிதமான அதிகாரங்களை ஐனாதிபதிக்கு கொடுத்தது பாராளுமன்றத்தை கபினட்ரை கணக்கில் எடுக்காது நடத்திய காட்டுத் தர்பார் இரண்டரை ஆண்டில் பெற்றல் இல்லாமல் டோக்கன் கொடுக்கும் கொடுமைக்கு நாடு வங்குறோத்தாகியது.

21 திருத்தமும் ஐனாதிபதியிடம் இருந்து அதிகாரங்களை பிரதமர் மற்றும் ஏனைய தரப்பும் பெற்றுக் கொள்வதற்கான ஒரு நாடகமே தவிர நாட்டு மக்களுக்கு ஏமாற்றமே கிடைக்கும். மீண்டும் நல்லாட்சியின் கயிறு இழுத்தல் போட்டிதான்.

ஆகவே அரசியலமைப்பு திருத்தங்களால் இலங்கை மக்களுக்கு விமோசனம் கிடைக்க வாய்ப்பு இல்லை மாறாக இந்த நாட்டில் உள்ள சகல இனங்களையும் மதிக்கின்ற சமஷ்டி அடிப்படையிலான பண்புகளைக் கொண்ட அதிகாரப் பகிர்வினைக் கொண்ட புதிய அரசியலமைப்பு மக்களின் கருத்துக்களை உள்ளடக்கி அமைக்கப்படும் போதே நாடு முன்னோக்கி பயணிக்கவும் நிரந்தர அமைதி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

 

Posted in Uncategorized

சமஷ்டி அரசியல் தீர்வே தேவை; ஜப்பான் தூதுவரிடம் வலியுறுத்தல்

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ் மாநகர சபையில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார்.

இதன்போது மாநகர முதல்வரால் ஜப்பான் தூதுவருக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.

இந்த சந்திப்பின் போது சமகால நிலைமைகள் தொடர்பில் பல்வேறுபட்ட தரப்புக்களுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் பற்றி ஆராயப்பட்டது. ஜப்பான் கடந்த காலங்களில் யாழ் மாநகர சபையின் எல்லைக்குள் செய்துவந்த பொருளாதார மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கு யாழ் மாநகர முதல்வர் என்ற வகையிலும் மாநகர மக்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் இலங்கையில் சமாதானம் நிலவிய காலத்தில் ஜப்பானால் சமாதான பேச்சுவார்த்தைக்கு காத்திரமான பங்களிப்பு செய்யப்பட்டது குறிப்பாக இலங்கைக்கான விசேட தூதுவர் யசுசி அகாஷி அந்த பணிகளிலே ஈடுபட்டிருந்தார்.

அதேபோன்று தற்சமயமும் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றுக்கு ஜப்பானிய அரசு பங்களிப்பு செய்ய வேண்டும் என்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு ஜப்பான் உதவி வருகின்றது.

இந்நிலையில் இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முன்நிபந்தனையாக இலங்கையில் ஒரு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசுக்கு ஜப்பானிய அரசு விடுக்க வேண்டும் என்று மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஜப்பானிய தூதுவரிடம் கேட்டுக்கொண்டார்.

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரினால் இன்று காலை இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இந்த செயலணி பல்வேறு தரப்பினரை சந்தித்து தமது கருத்துக்களை கேட்டறிந்தது.

இதன்படி தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கந்தக்காடு தடுப்பு முகாமில் இருந்து 600 கைதிகள் தப்பியோட்டம்!

பொலனறுவை கந்தக்காட்டில் அமைந்துள்ள புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளில் 600 பேர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலை தொடர்ந்து இவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மோதலின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தப்பிச் சென்றவர்களை தேடி கந்தக்காடு, பொலனறுவை பகுதியில் தீவிர தேடுதல்களில் இராணுவமும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

தமிழ் அரச நிர்வாகிகளின் கவனத்திற்கு

நிலாந்தன்

பள்ளிஹகார முன்பு வட மாகாண ஆளுநராக இருந்தவர். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் களில் ஒருவர்.இவர் தமிழ்ப் பகுதிகளில் உள்ள நிர்வாகக் கட்டமைப்பின் வினைத்திறனை குறித்து உயர்வான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்ததாகத் தெரியவருகிறது. போர்காலத்தில் மிக நெருக்கடியான ஒரு சூழலில் நிர்வாகம் செய்து பழகிய தமிழ் அதிகாரிகளிடமிருந்து முழு நாடும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுவாராம்.

அதில் உண்மையும் உண்டு.நெருக்கடியான காலகட்டத்தில் இரண்டு நிர்வாகங்களுக்கு இடையே செயல்படுவது என்பது கயிற்றில் நடப்பது போன்றது. மூத்த தமிழ் நிர்வாகிகள் பலரிடம் அந்த ஆற்றல் இருந்தது. ஆனால் அண்மை நாட்களாக தமிழ்ப் பகுதிகளில் காணப்படும் எரிபொருள் வரிசைகளை வைத்துப் பார்த்தால் அப்படியான நிர்வாகத்திறமை எங்கே போனது என்று கேட்கத் தோன்றுகிறது.

இது நாடு முழுவதற்குமான ஒரு தோற்றப்பாடு, இதில் தமிழ்ப் பகுதியை தனித்துப் பார்க்க முடியாது என்று ஒரு விவாதம் முன்வைக்கப்படலாம்.ஆனால் டெல்டா திரிபு வைரஸ் நாடு முழுவதையும் தாக்கியபோது தமிழ்ப் பகுதிகள் ஒப்பீட்டளவில் ஸ்திரமாக காணப்பட்டன. இறப்பு விகிதமும் ஒப்பீட்டளவில் தமிழ் பகுதிகளில் குறைவு என்று கூறப்படுகிறது. யுத்தமும் வைரசும் ஒன்று அல்ல என்பதனை ராஜபக்ஷக்களுக்கு உணர்த்திய ஒரு நெருக்கடி அது. டெல்டா திரிபு வைரஸின் தாக்கத்தின்போது தமிழ்ப் பகுதிகளில் மருத்துவ சுகாதார கட்டமைப்புக்கள் இயங்கிய விதம் முன்பு யுத்த காலகட்டத்தில் கிடைத்த அனுபவத்தின் விளைவு என்றும் எடுத்துக் கொள்ளலாமா?

இவ்வாறாக அனர்த்த காலங்களின்பொழுது தமிழ் மக்களின் கூட்டு உளவியலும் சரி தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய நிர்வாக கட்டமைப்புகளும் சரி முன்னைய யுத்த கால அனுபவத்தை அடியொட்டி சிறப்பாக செயல்பட முடியும். ஏனென்றால் இந்த பூமியிலே யாருக்கும் கிடைக்காத நூதனமான அனுபவங்கள் தமிழ் மக்களுக்கு கிடைத்தன. இந்தப்பூமியிலேயே யாரும் அனுபவித்திராத துன்பங்களை தமிழ்மக்கள் அனுபவித்திருக்கிறார்கள்.நவீன வரலாற்றில் மரணத்தின் ருசி மிகத்தெரிந்த மக்கள் கூட்டங்களுக்குள் தமிழ் மக்களும் அடங்குவர்.மரணத்தோடு நீண்டகாலம் உரையாடிய மக்கள் அவர்கள். மரணத்துள் வாழ்ந்து தப்பிப் பிழைத்த மக்கள் அவர்கள். அதாவது சாவினால் சப்பித் துப்பப்பட்ட மக்கள். ஒரு இனப் படுகொலையில் தப்பிப் பிழைத்தவர்கள். தமிழ் அதிகாரிகள் போரிலீடுபட்ட இரண்டு தரப்புக்களுக்கும் இடையே சான்ற்விச் ஆக்கப்பட்டவர்கள்.இக்கூட்டு அனுபவங்களின் ஊடாகவே தமிழ் மக்கள் எந்த ஒரு நெருக்கடியையும் எதிர்கொள்வார்கள்.

யூதர்களின் வரலாற்றைக் கூறும் எக்சோடஸ் என்றழைக்கப்படுகின்ற நாவலில் அதன் ஆசிரியர் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும்போது இவர் இந்த பெயருடைய நாசி வதைமுகாமின் பட்டதாரி என்று அறிமுகப்படுத்துவார். அதாவது நாசி வதை முகாம்களில் இருந்து தப்பிய ஒவ்வொரு யூதரும் பட்டப்படிப்புக்கு நிகரான அனுபவங்களை கொண்டிருந்தார் என்று பொருள். இது தமிழ் மக்களுக்கும் பொருந்தும்.தமிழ் மக்களைப் பொருத்தவரை எல்லா இடப்பெயர்வுகளும் புலப்பெயர்ச்சிகளும் அவர்களுக்குப் பட்டப்படிப்புகள்தான். எல்லாக் கூட்டுக் காயங்களும்,கூட்டு மனவடுக்களும் சித்திரவதைகளும், அகதிமுகாம்களும் நலன்புரி நிலையங்களும் அவர்களைச் செதுக்கின. இப்படிப் பார்த்தால் இந்தப் பூமியிலேயே மிகக்கொழுத்த அனுபவங்களைக் கொண்ட மக்கள். இப்படியான அனுபவத்தைக் கொண்ட ஒரு சமூகம் இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையின்போது எப்படிச் செயல்பட வேண்டும்?

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இவ்வளவுதான் எரிபொருள் உண்டு என்றால் அந்த அடிப்படையில் வாகனங்களை முதலில் பதிவு செய்து டோக்கன் கொடுத்து ஏதோ ஒரு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகத்தை கொண்டு வரலாம் தானே? ஏன் இப்படி நாட்கணக்காக வாகனங்களையும் சாதிகளையும் தெருவோரங்களில் நிறுத்தி வைக்க வேண்டும்?

எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்களில் ஒரு பகுதியினரைப் பார்த்தால், ஒரு இனப்படுகொலையில் இருந்து கற்றுக்கொண்ட மக்களாகத் தெரியவில்லை.ஒருபகுதியினர் வரிசைகளில் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.ஒரு பகுதியினர் திரும்பத் திரும்ப எரிபொருளை மீள நிரப்புகிறார்கள்.அதை ஒரு குழுவாகத் திட்டமிட்டு வியாபாரமாகச் செய்கிறார்கள்.அந்த எரிபொருள் கறுப்புச் சந்தையில் ஒரு லீற்றர் 1000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. நிர்வாகம் சீர்குலைந்தால் கள்ளச் சந்தையும் பதுக்கலும் தலைவிரித்தாடும். யார் அதைக் கட்டுப்படுத்துவது? தெற்கில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் பொறுமையிழந்து மோதலுக்கு போனால் அதை போலீஸ் கட்டுப்படுத்துகிறது.ஆனால் வடக்கில், விசுவமடுவில் அதை ராணுவம் கையாண்டிருக்கிறது.

 

எரிபொருள் வரிசைகள் மட்டுமில்ல, கடந்த வாரம் பாடசாலைகளை இயக்குவது தொடர்பிலும் அவ்வாறான குழப்பத்தைக் காணமுடிந்தது.இங்கு முதலில் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். எரிபொருட் தட்டுப்பாடு காரணமாக அன்றாட வாழ்வின் அசைவுகளை மட்டுப்படுத்த வேண்டியிருக்கிறது. எனினும் தனியார் கல்வி நிறுவனங்கள் குறிப்பாக கல்விப் பொதுச்சாதாரணம், உயர்தரம்,மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் போன்ற தேசிய பரீட்சைகளுக்கான தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குகின்றன.அவற்றை நோக்கி ஆயிரக்கணக்கில் தமது பிள்ளைகளை பெற்றோர் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றி இறக்குகிறார்கள். ஒரு நண்பர் பகிடியாக சொன்னார்…..பெட்ரோல் கியூவில் நிற்கும் ஒரு பகுதியினர் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தமது பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்காகத்தான் எரிபொருளைச் சேமிக்கிறார்களா? என்று.

அரசாங்கம் மாறிமாறி அறிக்கைகளை விடுகிறது.ரணில் விக்ரமசிங்க பிரதமராக வந்த பின்னரும்கூட நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று உண்டா என்று கேட்குளவுக்குத்தான் நிலைமை தொடர்ந்தும் காணப்படுகிறது. எனவே இந்த விடயத்தில் அரசாங்கம் குழம்பிப் போனதால் நிர்வாக அதிகாரிகளும் குழம்பிப் போனார்கள்,நிர்வாகக் கட்டமைப்பும் குழம்பிபோய் விட்டது,என்று ஒரு விளக்கத்தை தரமுடியும்.

கடந்த வாரம் பாடசாலைகளை திறப்பதா இல்லையா என்ற விடயத்தில் முடிவெடுக்க முடியாத ஒரு நிலைமை காணப்பட்டது. முதலில் பாடசாலைகளை குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மூடப்போவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அது மேல் மாகாணத்துக்கு மட்டுமே பொருந்தும்,என்றும் ஏனைய மாகாணங்களுக்கு பொருந்தாது என்றும் பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது. அதேசமயம் கிட்ட உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் கல்வி கற்கலாம் என்று கூறப்பட்டது.மேலும் இணைய வழியிலும் வகுப்புகளை நடத்தலாம் என்று கூறப்பட்டது. அதாவது ஹைபிரிட் முறைமை. முடிவில் அதிபர்கள் தற்துணிவாக முடிவெடுக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால் இப்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்பில் நெருக்கடிக்குள் ரிஸ்க் எடுத்து துணிவாக முடிவெடுக்க எத்தனை அதிபர்கள் தயார்? அவ்வாறு ரிஸ்க் எடுத்து முடிவெடுக்கக்கூடிய ஒரு நிர்வாகக் கட்டமைப்பு நாட்டில் உண்டா? துணிந்து முடிவெடுக்கும் அதிபர்கள் அதன் விளைவுகளுக்கும் பதில் சொல்ல வேண்டும்.அவர்கள் எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டும்?கல்வித் திணைக்களம், பெற்றோர்,பழைய மாணவர் என்று எல்லாத் தரப்பும் அதிபரைத் தான் பிடுங்குவார்கள்.கிளிநொச்சி மாவடடத்தைச் சேர்ந்த ஒரு அதிபர் பின்வருமாறு முகநூலில் எழுதியிருந்தார்…”நினைச்சு நினைச்சு கலியாணம் முடிக்கிறாங்கள்.என்னெண்டு பிரயோக முடிவுகளை எடுப்பது? சீ”.

இதுவிடயத்தில் நிர்வாகக் கட்டமைப்புக்கள் மட்டும் குழம்பிப் போயிருந்தன என்பதல்ல,ஊடகங்களும் குறிப்பாக இணையவழி ஊடகங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு நிலைமையைக் குளப்பின என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.ஒரு செய்தியின் மூலத்தை விசாரிக்காமல் பரபரப்பிற்காக செய்திகளைப் போடும் ஒரு போக்கை சமூக வலைத்தளங்கள் வளர்த்துவிட்டிருக்கின்றன.இதனால்,உண்மையை விட வதந்தியே அதிகம் பரவலாகச் சென்றடைகிறது.இது கடந்த ஞாயிற்றுக்கிழமையும் நடந்தது.பதினோரு மணியளவில் அடுத்த நாள் பாடசாலைகள் இயங்காது என்று இணைய ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன.ஆனால் சுமார் அரை மணித்தியால இடைவெளிக்குள் அச்செய்தியை அதே ஊடகங்கள் மறுத்தன. நாட்டைக் குழப்புவதில் உறுதிப்படுத்தப்படாத செய்திகள்,அல்லது பரபரப்பு செய்திகளுக்கும் ஒரு பங்கு உண்டு.குறிப்பாக பொருட்கள் பதுக்கப்படுவதற்கும் விலைகள் உயர்வதற்கும் பரபரப்புச் செய்திகளும் ஒரு விதத்தில் காரணம். ஓர் அனர்த்த காலத்தில் மக்களை குழப்பாமல் இருக்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கும் உண்டு.

அத்தியாவசிய சேவைகளுக்குரிய நிர்வாகக் கட்டமைப்பின்படி நாட்டின் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளருக்கு கீழ் ஒவ்வொரு மாவட்டச் செயலரும் பதவி வழியாக பிரதி அத்தியாவசிய சேவைகள் ஆணையாளராகச் செயற்பட முடியும்.அதாவது மாவட்ட செயலர்களுக்கு அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக முடிவெடுக்கத் தேவையான முழு அளவு அதிகாரம் உண்டு. அவர்கள் தமது மக்களுக்காக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்தால் சரி. ஆனால் தமிழ்ப் பகுதிகளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டமன்றங்கள் இல்லை. இதனால் கொழும்பினால் நேரடியாக நிர்வகிக்கப்படும் நிர்வாகக் கட்டமைப்பே உண்டு. இதுவும் தமிழ் நிர்வாகிகளின் சுயாதீனத்தை கட்டுப்படுத்துகிறது.

இவ்வாறான ஒரு நிர்வாகச் சூழலில்ஆளுநர் ஒருவரின் கூற்றில் தொடங்கிய இக் கட்டுரையை மற்றொரு ஆளுநரின் அறிவிப்பில் முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.சில நாட்களுக்கு முன் வடமாகாண ஆளுநரின் அறிவிப்பு ஒன்றை ஊடகங்களில் பார்க்க முடிந்தது. எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் மணிக்கணக்காக காத்திருக்கும் மக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இயன்றவரை நீராகாரத்தை வழங்குமாறு ஆளுநர் கேட்டிருக்கிறார்.அது ஒரு மனிதாபிமான நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு மாகாண ஆளுநர் அதைவிடக்கூடுதலாகச் செய்யவேண்டிய ஒரு வேலை இருக்கிறது. எரிபொருள் வரிசைகளை எப்படிப் புத்திபூர்வமாக ஏதோ ஒரு முறைமைக்குள் கொண்டு வரலாம் என்று சிந்திப்பதே அது. பதவி வழி அதிகாரமுடைய நிர்வாகிகள் துணிந்து ரிஸ்க் எடுக்க வேண்டிய ஒரு காலகட்டம் இது. தமிழ் அதிகாரிகள் மதிப்புக்குரிய,முன்னுதாரணம்மிக்க இறந்தகால அனுபவங்களைப் பின் தொடர வேண்டும்.

22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில்!

22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அடிப்படைச் சட்டமூலத்திற்கு நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் இருபத்திரண்டாவது அரசியலமைப்பு திருத்தம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணங்கியொழுகவில்லை என்பதை சட்டமா அதிபரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, இருபத்திரண்டாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.