ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான நிரோஷிற்கு எதிரான வழக்கு நவம்பர் 16 க்கு ஒத்திவைப்பு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு தடையாக அமைந்ததன் வாயிலாக தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்கு தடை ஏற்படுத்தினார் என ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷிற்கு எதிராகத் தொடாரப்பட்ட வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த வருடம் தொடரப்பட்ட இவ் வழக்கில் வழக்கினை முன்னொண்டு செல்வதாயின் சட்டமா அதிபரின் ஆலோசனையினைப் பெறுமாறு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று புதன்கிழமை(15.06.2022) மல்லாகம் நீதவான் திருமதி காயத்திரி சைலவன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, அச்சுவேலி பொலிஸார் மேலதிக அறிக்கையினை சமர்ப்பித்ததுடன் சட்டமா அதிபரின் ஆலோனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் மன்றில் தெரியப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Posted in Uncategorized

நெருக்கடிகளைத் தீர்க்க இதுவரை எவ்வித திட்டமும் தீட்டப்படவில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிக்கை

எரிபொருள், எரிவாயு, உணவுப்பொருட்கள் தொடர்பில் நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக இந்தியா சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அரிசி, எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய மருந்துப்பொருட்கள், பசளை போன்றவற்றை வழங்கி வருவதாகவும், அந்த உதவிகள் அடுத்த சில நாட்களில் முடிவடையும் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதன் பின்னர் ஏற்படப்போகின்ற தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு இதுவரை எத்தகைய திட்டமும் தீட்டப்பட்டுள்ளதாக தெரியவில்லை எனவும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த வாரங்களுக்கு எரிபொருள், எரிவாயு, மின்சாரம், அத்தியாவசிய உணவுப்பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் தடையின்றி கிடைக்குமா என்பது குறித்த நிச்சயமற்ற நிலையில், அச்சமூட்டும் சூழலே நிலவுவதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் எதனையும் திட்டமிட முடியாத நிலையில், அரசாங்கத்தின் மோசமான நிர்வாக சீர்கேடுகளினால் பொதுமக்களால் எதனையும் திட்டமிட முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் தற்போதைய ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்கு தகுதியானவர்களா என்பதை அவர்களது மனச்சாட்சியிடம் கேட்க வேண்டியுள்ளதாக அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் நிலவுகின்ற நெருக்கடியை தீர்த்து, அந்நிய முதலீடுகளை உள்வாங்கி, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேசிய இன பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு கண்டறியப்பட வேண்டியது முதற்படியாகும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்- ஜெனீவா அமர்வில் கவலை

இலங்கையில் அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை குறித்த ஜெனீவாவில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய பிரித்தானியா தலைமையிலான நாடுகள் வேண்டுகோள் கரிசனை வெளியிட்டுள்ளன.

ஜெனிவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 50ஆவது அமர்வில் கனடா பிரிட்டன் அமெரிக்கா ஜேர்மன் மலாவி மொன்டினீக்ரோ வடமசடோனியா ஆகிய நாடுகள் இணைந்து இந்த கரிசனையை வெளியிட்டுள்ளன.

அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் கருத்துசுதந்திரம் ஆகியவற்றுக்கான தங்களது உரிமையை ஆர்ப்பாட்டக்காரர்கள் சமீபகாலங்களில் பயன்படுத்தியுள்ளனர் என்பதை நாங்கள் கருத்தில் கொள்கின்றோம்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வன்முறை தாக்குதல் குறித்தும் அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் ஆதரவாளர்கள் மீதான வன்முறைகள் குறித்தும் நாங்கள் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம்.

இந்த வன்முறைகளிற்கு காரணமானவர்கள் பொறுப்புக் கூறச் செய்யப்பட வேண்டும் என மேலும் அந்நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை, இலங்கை மீதான பயணத் தடைகளை நீக்குமாறு இராஜதந்திர ரீதியிலான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான திட்டத்தை வகுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.அவ்வாறு செய்தால் 2025 ல் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவர முடியும் என்றும் இதனால் 3.5 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டக்கூடிய நிலை ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

எனவே அதற்கான நீண்டகாலத் திட்டங்களை வகுக்குமாறும் சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.இந்த ஆண்டில் சுமார் 800,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து 800 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Posted in Uncategorized

கடல்வழியாக ஆட்கடத்தலில் ஈடுபடுவோர் தொடர்பில் பாதுகாப்பு தரப்பு வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டை விட்டு வெளியேறும் சட்டவிரோதக் இடப்பெயர்வாளர்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்களை வேறு நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தற்போது அம்பலப்படுத்தியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இலங்கையர்கள் சிலர் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

இவர்களில் பெரும்பாலானோர் கடற்படை உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாட்டில் நிலவும் பிரச்சினை காரணமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ஒவ்வொருவரிடமிருந்தும் 700,000 ரூபாய் முதல் 1 மில்லியன் ரூபாய் வரை பணத்தை கடத்தல்காரர்கள் பெற்றுக்கொள்வதாகவும் படகிற்குள் ஏறியதும் கடத்தல்காரர்களே பாதுகாப்புப் படையினருக்கு இடப்பெயர்வாளர்கள் குறித்த தகவல்களை வழங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

அதேபோல், சிறிய படகுகள் மூலம் கரையில் இருந்து நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகிற்கு இடப்பெயர்வாளர்களை அழைத்துச் செல்வதற்கு 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த 15 இலங்கையர்கள் கடந்த தினம் அவுஸ்திரேலிய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இருந்து படகுகள் மூலம் ஆட்களை ஏற்றிச் செல்லும் போது, கடத்தல் காரர்களே அவர்களை பாதுகாப்பு தரப்பினரிடம் காட்டிக்கொடுத்து விடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதே அடிப்படையாக இருக்கும் – மீனாக்ஷி கங்குலி

பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு அரசியலமைப்பின் ஊடாக பாதுகாப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதே அடிப்படையாக இருக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நாடாளுமன்றில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்துக்களை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள மீனாக்ஷி கங்குலி, அரசியலமைப்பின் ஊடாக பாதுகாப்பை உறுதிப்படுத்தல், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் ஆகியவையே கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான அடிப்படைத் திறவுகோளாகும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நாடாளுமன்றில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விளக்கமளித்திருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை, உலக உணவுத்திட்டம் மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகிய கட்டமைப்புக்களின் மூலமான உதவிகள் என்பன தொடர்பாகவும் அவர் தெளிவுபடுத்தியிருந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய அவசரக் கூட்டத்தைக்  கூட்டுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜனா அரச அதிபரிடம் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அவசரமாகத் தீர்க்கப்படவேண்டிய மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான அவசரக் கூட்டத்தினை ஏற்பாடு செய்யுமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் புதன்கிழமை அரசாங்க அதிபரிடம்  கடிதம் மூலமாக விடுக்கப்பட்டுள்ள இக் கோரிக்கையில்,

நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். உணவு, அன்றாடத் தேவைகள், எரிபொருள், எரிவாயு என அனைத்துக்கும் பெரும் இறுக்கமான பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு நிம்மதியைக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

முக்கியமாக விவசாயிகளைப் பொறுத்தவரையில் இரசாயன உரப்பினைச்சினை அவர்களது வாழ்வாதாரமான வேளாண்மை மற்றும் பயிர்ச்செய்கையின் விளைச்சலை வீழ்ச்சியடையச் செய்திருக்கிறது. ஆரம்பித்திருக்கும் இப் போகத்திலும் உரம் சரியான முறையில் விநியோகிக்கப்படுமா என்பது புரியாமலிருக்கிறது. இதற்கு நம்முடைய மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரம் விதிவிலக்கானதல்ல.

இந்த நிலையில் மக்களுக்கான நிவாரணங்கள், உதவிகள் சரியான முறையில் அவர்களைச் சென்றடைவதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்படவேண்டும். மக்களுக்குத் தேவையான பொருட்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

விவசாய உற்பத்திகளை அதிகரிக்கும் வகையில், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தரிசு நிலங்களை பயிர்ச்செய்கைக்குட்படுத்தும் வேலைத்திட்டத்தினை விரைந்து எமது மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்துவது முக்கியமாகும். அதன் மூலம் எதிர்வரும் மாதங்களில் ஏற்படவுள்ள உணவுத் தட்டுப்பாட்டை ஓரளவுக்கேனும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என எண்ணுகிறேன். அதற்கு அனைத்துத் தரப்பினருடைய ஒத்துழைப்பும் அவசியமாகும்.

எனவே இவ்வாறான செயற்பாடுகளை மாவட்டத்தில் விரைந்து நடைமுறைப்படுத்தும் வகையில், பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள்,  அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், மேட்டு நிலப் பயிர்ச்செய்கையாளர்கள், கால்நடைப் பண்ணையாளர்கள் உள்ளிட்டோரை உள்ளடக்கிய வகையில் விசேட ஆராய்வுக் கூட்டம் ஒன்றினை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மாவட்டத்தின் அரசாங்க அதிபர் என்ற வகையில் இவ்விடயம் குறித்து தங்களது விரைந்த நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

யாழ். நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைக்கு தடை : ரெலோ யாழ் மாவட்ட தலைவரை மன்றில் முன்னிலையாகுமாறு பணிப்பு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் உள்ளிட்டவர்கள் தடைகளை ஏற்படுத்தினர் எனக் குற்றம் சாட்டப்பட்டு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ் வழக்கில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமத்திற்குத் தடை ஏற்படுத்தியதாக மேலும் சிலரை இணைக்கவுள்ளதாகவும் மன்றில் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழாம், தொல்லியல் திணைக்களத்தின் வர்த்தமானியில் நிலாவரைக் கிணறு என்றே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டக் கோவையின் பிரகாரம் இவ் வழக்கை சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றே மேற்படி வழக்கின் குற்றப்பத்திரத்தினைத் பொலிஸார் தாக்கல் செய்திருக்கவேண்டும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதேசசபையின் தலைவர் என்ற வகையில் தவிசாளார் அங்கு என்ன நடக்கின்றது எனக் கேள்வி எழுப்பியமையை அரச கடமைக்கு தடை ஏற்படுத்தியதாகக் கருத முடியாது.

நிர்வாக ரீதியாக இரு அரச நிறுவனங்களுக்கு இடையே எழும் பிரச்சினையினை குற்றவியல் சட்டக்கோவையின் பிரகாரம் அணுகமுடியாது எனவே இவ்வழக்கினை தள்ளுபடி செய்யவேண்டும் என மன்றில் தமது சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

அதேவேளை தனியாராக இருந்தாலென்ன அரச ஸ்தாபனமாக இருந்தாலென்ன பிரதேசசபையின் அனுமதி பெற்றே எந்தக் கட்டுமானத்தினையும் செய்ய முடியும் என்பதும் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டது.

அவ் வழக்கினை கடந்த வருடம் விசாரித்த நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா, பொலிசார் தாக்கல் செய்துள்ள குற்றவியல் சட்டக்கோவையின் பிரகாரம் முதலாம் எதிராளியாக மன்றில் முன்னிலையாகியுள்ள வலிகாமம் கிழக்குப் பிரதேசசபைத் தவிசாளரை விசாரிப்பதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டதாக எங்கும் வெளிப்படுத்தவில்லை.

அத்துடன் தொல்லியல் திணைக்களத்தின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கிணறு என்றே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்ததுடன் தொடர்ந்து இவ் வழக்கினை நடத்துவதாயின் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று வழக்கினைத் தொடருமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

பிரதேசசபைத் தவிசாளர் இவ்வழக்கில் மேலதிக விசாரணைகள் தேவைப்படின் தவிசாளர் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தவிசாளர் ஒரு இலட்சம் ரூபா சொந்தப் பிணையில் செல்வதற்கும் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் மீளவும் இவ் வழக்கிற்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரை முதலாவது சந்தேக நபராக அடையாளப்படுத்தி மன்றில் முன்னிலையாகுமாறு கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் கனிய மணல் அகழ்வு குறித்து விசேட நடவடிக்கை தேவை- செல்வம்

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கனிய மணல் அகழ்வு குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெலிற்கு அவசர கடிதம் ஒன்றையும் இன்று அனுப்பி வைத்துள்ளார்.

இந்தக் கடிதத்தில், மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் இல்மனைட் கனிம வள மண் அகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் மன்னார் மாவட்ட மக்கள் மத்தியில் இல்மனைட் மணல் அகழ்வுக்கு பாரிய எதிர்ப்புகள் இருந்தும் கூட அதற்கு எந்தத் தடையும் இன்றி கனிம வள மணல் அகழ்வுகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடி சில முடிவுகளை எடுத்து அதனை நடைமுறைப் படுத்த வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இதுதொடர்பாக கலந்துரையாடல் ஒன்றுக்கான ஏற்பாடுகளை செய்து தருமாறும், குறித்த கலந்துரையாடல் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கோத்தா + ரணில் : அசுத்தக் கூட்டா ?

  • நிலாந்தன்

தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, சகித்துக்கொள்ள முடியாத, தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது. தந்தைக்கு நிரந்தர தொழில் இல்லை.வேறு வருமான வழிகளும் இல்லை.இதனால்,அக்குடும்பம் சுமார் 3 நாட்களாக நீரை மட்டுமே அருந்தி உயிர்வாழ்ந்ததாகக் கூறப்படுகின்றது.இது முதலாவது செய்தி.

வெலிகேபொல, பிரதேசத்தில் கிராமத்தில் ஒரு வறிய பெண் நோயுற்ற தனது பிள்ளைக்கு உணவுக்கு எதுவும் இல்லை என்பதால் அருகிலுள்ள உறவினருக்கு சொந்தமான ஈரப்பலா மரத்தில் காயொன்றைப் பறித்து 100 ரூபாய்க்கு விற்றுள்ளார்.அப்பணத்தில் 500 கிராம் அரிசியை வாங்கியுள்ளார்.ஈரப்பலா பறிக்கப்பட்டதை அறிந்த உறவினர், கோபமுற்று அந்தத்தாயைத் தாக்கியுள்ளார். இது இரண்டாவது செய்தி.

கதிர்காமத்தில்,மூன்று பிள்ளைகளின் தாயொருவர்,ஒரு கிலோ அரிசி, 250 கிராம் சீனி, 200கிராம் கருவாடு மற்றும் பிஸ்கட் என்பவற்றை வாங்கிக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். வழியில்,மீன் வியாபாரியொருவர் சைக்கிளில் வந்துள்ளார்.சைக்கிளை நிறுத்தி,மீன் வாங்கியுள்ளார்.அப்பொழுது,உணவுப்பொருட்கள் இருந்த பையை தரையில் வைத்துள்ளார்.மீனை வாங்கிக்கொண்டு,பையைப் பார்த்தபோது,பையைக் காணவில்லை. பையை யாரோ திருடி விட்டார்கள்.இது மூன்றாவது செய்தி

தொடரும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக கொழும்பு ‘லேடி ரிட்ஜ்வே’ சிறுவர் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா கவலை வெளியிட்டுள்ளார்.அண்மை நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 53 குழந்தைகளில் 11 பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என்றும், அவர்களில் நால்வருக்கு கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டின் அறிகுறிகள் தென்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இது நாலாவது செய்தி.

கடந்த 31ஆம் திகதி “சவுத் சைனா மோர்னிங் போஸ்ற்” என்ற இணைய ஊடகத்தில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதில் பெண்கள் மாதவிடாய் காலங்களில் அணியும் சுகாதார பாதுகாப்பு நப்கின்களின் விலை அதிகரித்த காரணத்தால் பாடசாலைக்குச் செல்லும் மாணவிகள் அவதிப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.மாதவிடாய் காலங்களில் பள்ளிக்கூடம் செல்வதை தாங்கள் தவிர்ப்பதாக மாணவிகள் தெரிவித்திருக்கிறார்கள்.இறக்குமதி செய்யப்படும் நப்கின்களுக்கு அரசாங்கம் 58 விகித வரி அறவிவிடுகிறது.இதனால் வெளிநாட்டு நப்கின்களை வாங்க முடியாத ஒரு நிலைமை.வறிய பெண்கள் பெருமளவுக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நப்கின்களை பயன்படுத்தப்படுவதாகவும்,ஆனால் அவற்றின் விலையும் அதிகரித்திருப்பதால் பல குடும்பங்கள் அவற்றுக்காக காசை செலவழிக்க முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.நப்கினா சாப்பாடா என்று கேட்டால் சாப்பாடுதான் முக்கியம் என்று பல குடும்பத்தலைவிகள் கருதுவதாகத் தெரிகிறது.இதனால் நப்கின்கள் இல்லாத காரணத்தால் பல மாணவிகள் பள்ளிக்கூடம் வருவதில்லை என்றும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.மிகவறிய பெண்கள் விலை கூடிய நப்கின்களை வாங்குவதற்கு பதிலாக சீலைத் துண்டுகளை பயன்படுத்துவதாகவும் அது சுகாதாரமற்றதுநோய் தொற்றுக்கான காரணிகளில் ஒன்று என்று எச்சரிக்கப் பட்டிருக்கிறது.இது ஐந்தாவது செய்தி.

கடந்தமாதம் 28ஆம் திகதி “தெ டெலிகிராப்” இணையத்தளத்தில் வெளிவந்த மற்றொரு கட்டுரையில்,ஆடைத் தொழிற்துறையைச் சேர்ந்த ஒரு தொகுதி பெண்கள் வேலையின்மை,வறுமை காரணமாக பாலியல் தொழிலை நோக்கிச் செல்வதாக கூறப்பட்டுள்ளது.இது ஆறாவது செய்தி.

இதுதான் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னரான நாட்டின் நிலை. எனினும் அவர் பதவியேற்ற பின் ஒரு விடயத்தில் மிகவும் தெளிவாக காணப்படுகிறார்.நாட்டில் எந்தப் பொருள்?எவ்வளவு கையிருப்பில் உண்டு?எவ்வளவு நாடுக்குத் தேவை?எவ்வளவு கடனாகக் கிடைக்கும்? எப்பொழுது எந்த பொருளுக்கு தட்டுப்பாடு வரும்? எப்பொழுது பஞ்சம் வரலாம்? போன்ற எல்லா விவரங்களையும் அடிக்கடி வானிலை அறிவித்தலில் கூறுவதுபோல வெளிப்படையாகச் சொல்லி வருகிறார். அதனால்தான் ஒரு முஸ்லிம் நண்பர் முகநூலில் பின்வருமாறு எழுதினார்….

ரனில் விக்ரமசிங்கவை இலங்கை கிறிக்கட் அணித்தலைவராக நியமித்தால்….

“அடுத்து வரும் போட்டிகளில் எமக்கு வீசுவதற்கு ஒரு பஞ்சு கட்டி கூட கிடைக்காது”

“இனி வரும் ஆட்டங்களில் இடை வேளையில் மூன்று மிடறு தண்ணீருக்கு பதிலாக இரண்டு மிடறு தண்ணீரையே பருக வேண்டி வரும்”

“ஒக்டோபர் மாதம் வரும் போது கிறிக்கட் மட்டைக்கு பதிலாக நாங்கள் தென்னம் மட்டையே பயன் படுத்த வேண்டிவரும்”

“உக்ரேன் வீரர்களுடன் கிறிக்கட்டும் அதே விக்கட்டால் ரஷ்ய வீரர்களுடன் கிட்டிப்புள்ளும் விளையாடுங்கள்”…….

ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கும் புள்ளிவிபரங்கள் உண்மையோ பொய்யோ அவர் நாட்டின் நிலைமையை ஒளிவு மறைவின்றி மக்களுக்கு தெரியப்படுத்துகிறார் என்ற ஒரு தோற்றத்தை வெற்றிகரமாக கட்டியெழுப்பி விட்டார்.ஆனால் இது மக்களுக்குப் பீதியூட்டும் நடவடிக்கை என்றும்,இதனால் வர்த்தகர்கள் பொருட்களைப் பதுக்குகிறார்கள் என்றும் ஒரு விமர்சனம் வருகிறது.

ஆனால் இதுவிடயத்தில் ரணில் விக்கிரமசிங்கவிடம் வேறு உள்நோக்கங்கள் இருப்பதாக தெரிகிறது.நாட்டின் நிலைமையை வெளிப்படையாக செய்வதன்மூலம் மக்களை அவர் நெருக்கடிக்கு தயார்படுத்துகிறார்.மக்களை உஷாராக இருக்குமாறு எச்சரிக்கிறார்.அதேசமயம் இந்த நெருக்கடிகளுக்குத் தான் பொறுப்பில்லை என்பதையும் மறைமுகமாக உணர்த்தப்பார்க்கிறார்.அவர் கூறுவது போல விடயங்கள் நடக்கும்பொழுது அவர் உண்மையைத்தான் சொன்னார்,எதையும் மறைக்கவில்லை என்ற உணர்வு மக்கள் மத்தியில் பரவும். இது தன்னைப் பலப்படுத்த உதவும் என்று அவர் நம்புகிறாரா? வியட்நாம் விடுதலைப் போராட்டத்தின் தலைவர் கோசிமின் கூறிய“மக்களிடம் செல்லுங்கள்,மக்களுக்கு உண்மையைச் சொல்லுங்கள், மக்கள் உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தருவார்கள்”என்ற மேற்கோளை ரணில் எப்படி விளங்கி வைத்திருக்கிறார்?

அவர் பிரதமராக வந்தபின் நாட்டுக்கு உள்ளேயும் நாட்டுக்கு வெளியேயும் நம்பிக்கைகளை கட்டியெழுப்ப வேண்டிய ஒருவராகக் காணப்படுகிறார்.நாட்டுக்குள் அவ்வாறு நம்பிக்கைகளை கட்டியெழுப்பினாரோ இல்லையோ நாட்டுக்கு வெளியே படிப்படியாக நம்பிக்கைகளைக் கட்டியெழுப்பி வருகிறார் என்பது உண்மை.

ரூபாயை மிதக்க விட்டமை,சில பொருட்களுக்கான வரியை அதிகரித்தமை,வட்டி விகிதத்தைக் கூட்டியமை,விலைக் கட்டுப்பாட்டை நீக்கியமை,அரசு செலவினங்களை குறைத்தமை,சில அமைச்சுக்களின் செயலர்களாக இருந்த படைத்துறை பிரதானிகளின் இடத்துக்கு சிவில் அதிகாரிகளை நியமித்தமை,அமெரிக்காவினால் பயணத்தடை விதிக்கப்பட்ட சவேந்திர சில்வாவின் பதவியை மாற்றியமை,ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை இடைநிறுத்தி,குற்றம் சாட்டப்பட்ட சிலரை மீண்டும் கைதுசெய்தமை,பசில் ராஜபக்சவை நாடாளுமன்றத்திலிருந்து அகற்றியமை.போன்ற மாற்றங்களோடு, முக்கியமாக ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் விதத்தில் 21ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவரும் ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறார்.

 

மேற்கண்ட மாற்றங்களின்மூலம் நாட்டின் நீதித்துறை சுயாதீனமாக இயங்குகிறது என்ற ஒரு தோற்றத்தையும்,நாட்டில் ராணுவமய நீக்கம் நிகழ்கிறது என்ற ஒரு தோற்றத்தையும்,ராஜபக்சவின் அதிகாரம் குறைக்கப்படுகிறது என்று ஒரு தோற்றத்தையும் கட்டியெழுப்புவதே கோத்தா+ரணில் கூட்டின் நோக்கமாகும்.அப்படி ஒரு தோற்றம் கட்டியெழுப்பப்பட்டால் மேற்கு நாடுகளையும் ஐஎம்எப் போன்ற பன்னாட்டு நிறுவனங்களையும் கவரலாம் என்று ரணில் அரசாங்கம் சிந்திக்கிறது.

ஒருபுறம் இந்தியா நாட்டுக்கு சேலைன் ஏற்றிக்கொண்டிருக்கிறது. இந்தியா திட்டமிட்டு சிறுகச்சிறுக உதவிகளைச் செய்துவருகிறது. உடனடியாக பெருமெடுப்பில் உதவிகளைச் செய்யாமல்,சேலைன் ஏற்றுவது போல துளித்துளியாக இந்திய உதவிகள் கிடைக்கின்றன. இதன்மூலம் இந்தியா தனது அருமையை உணர்த்தமுற்படுகிறது. அதேசமயம்,பெருமெடுப்பிலான உதவிகள் அடுத்தடுத்த மாதங்களில் ஐ.எம்.எப்பிடமிருந்து கிடைக்கலாம் என்று ரணில் விக்ரமசிங்க எதிர்பார்க்கிறார்.

குறிப்பாக 21ஆவது திருத்தத்தின்மூலம் ஐ.எம்.எப்,மேற்கு நாடுகள்,எதிர்க்கட்சிகள்,காலிமுகத்திடலில் போராடிக் கொண்டிருப்பவர்கள்.ஆகிய நான்கு தரப்புக்களையும் திருப்திப்படுத்தலாம் என்று கோத்தா+ரணில் கூட்டு சிந்திக்கின்றது.

ஐஎம்எப், காலிமுகத்திடலில் போராடிக் கொண்டிருப்பவர்கள்,மேற்கு நாடுகள் போன்றன ராஜபக்சவை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.ஆனால் கோத்தா+ரணில் கூட்டு அதற்கு உடனடியாகத் தயாரில்லை.கோட்டாபயவின் அதிகாரங்களைக் குறைத்துவிட்டு அவரைத் தொடர்ந்தும் பதவியில் வைத்திருப்பதே அவர்களுடைய உள் நோக்கம்.

கோட்டாபய பதவி விலகத் தயார் இல்லை என்பதைத்தான் அண்மையில் அவர் அமெரிக்காவின் அவர் அமெரிக்காவின் ப்ளூம்பேர்க் (Bloomberg) செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செவ்வி காட்டுகிறது. “தோற்றுப்போன ஜனாதிபதி என்ற பெயருடன் விலகிச் செல்ல முடியாது”என்று அவர் கூறியிருக்கிறார் (Bloomberg) செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செவ்வி காட்டுகிறது.”தோற்றுப்போன ஜனாதிபதி என்ற பெயருடன் விலகிச் செல்ல முடியாது”என்று அவர் கூறியிருக்கிறார்.

அதாவது தான் இப்பொழுது தோற்றுப் போயிருக்கிறார் என்பதனை அவர் ஒப்புக்கொள்கிறார்.யுத்த வெற்றியை முதலீடாகக் கொண்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற ஒரு குடும்பத்தின் பிரதிநிதி அவர். யுத்த வெற்றியை ஒரு குடும்பச் சொத்தாக மாறிய ராஜபக்சக்கள், அவர்களுக்கு முன்னிருந்த எல்லாத் தலைவர்களும் செய்த தவறுகளின் விளைவாக வந்த திரட்டப்பட்ட தோல்வியை சுமக்க வேண்டி வந்தமை என்பது இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் ஒரு நகைமுரண்தான்.நாட்டின் பொருளாதாரத் தோல்விகளுக்கு ராஜபக்சக்கள் மட்டும் பொறுப்பில்லை.ரணிலும் உட்பட இனப்பிரச்சினையை படைப் பலத்தின்மூலம் தீர்க்க முற்பட்ட எல்லாத் தலைவர்களுமே பொறுப்புத்தான்.இவர்கள் எல்லாருடைய தொடர் தோல்விகளின் திரட்டப்பட்ட விளைவுதான் கோத்தாபயவின் தலையில் வந்து பொறிந்தது.

ஆனால் அவர் வெற்றி பெற்றவராகப் பதவி விலகுவாரா என்பது சந்தேகமே. ஏனென்றால் அவர் இனிப் பெறக்கூடிய எல்லா வெற்றிகளும் ரணில் விக்கிரமசிங்கவின் கணக்கில்தான் சேர்க்கப்படும்.

கோத்தா+ரணில் கூட்டு ஒர் அசுத்தக் கூட்டு என்று யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.அது ஒரு தந்திரக் கூட்டு.தோல்வியின் விளிம்பில் சிங்களத் தலைவர்கள் கட்சி பேதங்களைக் கடந்து எப்படி ஒருவர் மற்றவரைப் பாதுகாப்பார்கள் என்பதற்கு அதுவோர் ஆகப் பிந்திய உதாரணம்.