மட்டக்களப்பிற்கான தமிழக நிவாரண பொதிகள்!

இந்தியாவின் தமிழ்நாட்டு அரசினால் வழங்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் பொதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்

இந்திய நிவாரணப் பொதிகள் தொடர்பாக கருத்து தெரிவத்த மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவின் தமிழ்நாட்டு அரசினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள் இலங்கையில் வறுமையில் வாடும் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர்களை இணையவழியில் சந்திப்பு நடத்திய உயர் அதிகாரிகள், மாவட்டத்தில் வறுமையில் உள்ள மக்களின் புள்ளி விபரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளதுடன், மாவட்டத்திற்கான உலர் உணவு பொதிகளின் எண்ணிக்கையை கேட்டறிந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 84 ஆயிரம் குடும்பங்களுக்கு இதில் முதற்கட்டமாக தலா 10 கிலோ நிறை கொண்ட 50 ஆயிரம் நிவாரண பொதிகள் கிடைக்கவுள்ளதுடன் அதனை வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு குடும்பம் ஒன்றிற்கு தலா ஒரு பொதி வழங்கவுள்ளதுடன் அதன் பின்னர் வரும் நிவாரணப் பொதிகள் ஏனையவர்களுக்கு வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எரிபொருள் இன்மையால் தடைப்பட்ட காரைநகர்- ஊர்காவற்துறைப் பாதைச் சேவை!

யாழ். காரைநகருக்கும் ஊர்காவற்துறைக்கும் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு கடந்த ஒரு வாரகாலமாக சேவையில் ஈடுபடுத்தப்படாமையால் அரச உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.

மண்ணெண்ணெய் இன்மையாலேயே மேற்படி சேவை இடம்பெறவில்லை என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பாதைச் சேவையை நடத்துவதில் வீதி அபிவிருத்தி அதிகார சபை தொடர்ந்தும் அசமந்தப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது என இதனூடாகப் பயணிப்போர் குற்றம் சாட்டுகின்றனர்.

பொறுப்புடைய ஒரு அரச நிறுவனம் மண்ணெண்ணெயைத் தேவைக்கு ஏற்ப பெற்று வைத்திருந்து மக்களுக்குச் சீரான சேவையை வழங்க வேண்டும். இதை விடுத்துக் கடல் கடந்து போக்குவரத்துச் செய்யும் அரச பணியாளர்களைச் சிரமத்திற்கு உள்ளாக்குகின்றமை குறித்து அரச பணியாளர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

பாதைச் சேவை இடம்பெறாமையால் தனியார் படகுகளில் மோட்டார்ச் சைக்கிள்களை ஏற்றும்போது அவை சேதமடைகின்றன எனவும், உதிரிப்பாகங்களை அதிக விலைக்குப் பெற்றுச் சீர் செய்தாலும் அவை மீண்டும் சேதமடைகின்றன எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயத்தில் யாழ்.அரசாங்க அதிபர் உடனடிக் கவனம் செலுத்திப் பாதைச் சேவை இடம்பெறுவதை உறுதிப்படுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Posted in Uncategorized

சீன நாட்டுத் தூதுவர் கிழக்கு ஆளுநரை சந்தித்து பேச்சு

சீன மக்கள் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் QI Zenhong இன்று (24) காலை திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை சந்தித்தார்.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஆளுநருக்கும் சீனத் தூதுவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஆளுநரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

ஆளுநர் அலுவலகத்திற்கு வந்த சீன தூதுவருக்கு உற்சாக வரவேற்பேற்களிக்கப்பட்டது .

அதனைத் தொடர்ந்து சீனத் தூதரகத்தினால் கிழக்கு மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 உலர் உணவுப் பொதிகளை தூதுவர் உத்தியோகபூர்வமாக விநியோகித்தார்.

பின்னர் கிழக்கு மாகாணத்தில் புதிய முதலீடுகள் மூலம் அபிவிருத்தி செய்யக்கூடிய வளங்கள் குறித்து சீனத் தூதுவர் மற்றும் அவரது குழுவினருக்கு விளக்கமளித்தார். மேலும், புதிய முதலீடுகளை மேற்கொள்ளக்கூடியதுமான மாகாணத்தின் வளங்கள் தொடர்பான விசேட கையேட்டை ஆளுநர் அவர்கள் தூதுவரிடம் இதன் போது வழங்கினார்.

இதில் திருகோணமலை மாவட்ட செயலாளர் உட்பட பல உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

யாழில் தொடரும் எரிபொருளுக்கான நீள் வரிசைகள்: விலை அதிகரிப்புத் தொடர்பில் மக்கள் கடும் விசனம்

கடும் பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக யாழிலும் பொதுமக்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்தநிலையில் மீளவும் எரிபொருட்களின் சடுதியான விலை அதிகரிப்பு பொதுமக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமையும்(24.5.2022) யாழ்.மாவட்டத்தில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காகப் பரவலாகப் பல்வேறு இடங்களிலும் மிக நீண்ட வரிசைகளில் மோட்டார்ச் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். நீண்ட நேரம் காத்திருந்தே எரிபொருளைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகத் தெரிவித்த பொதுமக்கள் இன்று அதிகாலை முதல் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரித்தமை தொடர்பிலும் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Posted in Uncategorized

சர்வதேச கடன் மறுசீரமைப்பிற்கான செயற்பாடு முன்னெடுப்பு; 2 நிறுவனங்கள் தெரிவு

எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட நெருக்கடிகளால் மக்கள் துன்பப்படுகின்ற நிலையில், அரசாங்கம் பெற்றுக்கொண்ட சர்வதேச கடனை மறுசீரமைப்பதற்கான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாட்டிற்கான நிதி ஆலோசனை சேவைகளுக்காக உலகின் முன்னணி ஆலோசனை நிறுவனங்கள் இரண்டை தெரிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்வைக்கப்பட்டுள்ள சர்வதேச யோசனைகள் தொடர்பில் ஆராய்ந்து, அதற்கான புள்ளிகள் வழங்கப்பட்டு, பிரான்ஸின் Lazard என்ற நிறுவனமே கடன் மறுசீரமைப்பிற்கான ஆலோசனை நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

இந்த ஆலோசனை சேவைகளுக்கான கட்டணமாக 5.6 மில்லியன் டொலரை செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சட்ட ஆலோசனைகளை வழங்க Clifford Chance நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ராஜபக்ஸ குடும்பத்தாரை நாட்டிலிருந்து வௌியேற்ற மொஹமட் நஷீட் முயல்வதாக சர்வதேச அரங்கில் சந்தேகம்

மாலைத்தீவுகளின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் இலங்கைக்கான வௌிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்கும் விடயத்தில் மேற்கொண்டுள்ள தலையீடு குறித்து தற்போது அதிகம் பேசப்படுகிறது.

மொஹமட் நஷீட் இலங்கையில் தங்கியிருந்து மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது குடும்பத்தவர்கள் பாதுகாப்பாக நாட்டிலிருந்து வௌியேறுவதற்கான பொறிமுறையை தயாரித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளதென The Maldives Journal இணையத்தளம் இன்று செய்தி வௌியிட்டுள்ளது.

சர்வதேச உதவிகள் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு தன்னார்வமாக முன்வந்து கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்த மொஹமட் நஷீட், அத்தகைய பணிகளில் எவ்வித அனுபவமும் இல்லாதவர் என இணையத்தள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக மாலைத்தீவுகளின் சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷீட் முன்வைத்த யோசனையை கடந்த 19 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டார்.

பிரதமரின் அனுமதியுடன் 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த மொஹமட் நஷீட், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோரை சந்தித்தார்.

இந்த சந்திப்புகளுக்கு மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவையும் அவர் கடந்த 21 ஆம் திகதி சந்தித்தார்.

சர்வதேச உதவிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக எவ்வித அனுபவமும் இல்லாத மொஹமட் நஷீட், கடந்த சில தினங்களாக உயர் மட்ட அரசியல் தலைவர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டு, ராஜபக்ஸ குடும்பத்தினர் மாலைத்தீவுகளுக்கு செல்வதற்கான பாதுகாப்பு வழிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கு அழுத்தம் பிரயோகித்துள்ளதாக The Maldives Journal இணையத்தளம் தெரிவித்துள்ளது.

பதவி விலகிய மஹிந்த ராஜபக்ஸ, மொஹமட் நஷீட்டை தொடர்புகொண்டு இலங்கையின் நிலைமை தணியும் வரை தமது குடும்பத்தவர்கள் மாலைத்தீவுகளில் தங்கியிருப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்ததாக மாலைத்தீவுகள் அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி இந்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மொஹமட் நஷீட், ராஜபக்ஸ குடும்பத்தினருக்காக மாலைத்தீவுகளில் உள்ள இந்திய பிரஜை ஒருவருக்கு சொந்தமான 12 மில்லியன் டொலர் பெறுமதியான மாளிகையொன்றையும் மூன்று மில்லியன் டொலர் பெறுமதியான மற்றுமொரு சிறிய மாளிகையையும் விற்பனை செய்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் The Maldives Journal செய்தி வௌியிட்டுள்ளது.

இணையத்தளத்தில் வௌியிடப்பட்டுள்ள செய்தி தொடர்பாக மலைத்தீவுகளின் சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷீட்டிடம் வினவியபோது,

இலங்கை அரசியல் தலைவர்களின் வௌியேற்ற உபாயத்தின் ஒரு பாத்திரத்தை வகிப்பதாக வௌியிடப்பட்டுள்ள பக்கசார்பான செய்திகளை முற்றாக நிராகரிக்கின்றேன். இந்த கடினமான காலகட்டத்தில் எப்போதும் நண்பர்களாக செயற்படுகின்ற நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் உதவிகளை பெற்றுக்கொடுப்பதுடன் மாத்திரம் எனது பொறுப்பு வரையறுக்கப்படுகிறது

என பதில் அளித்தார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தனது தந்தைக்கு நாட்டில் இருந்து வௌியேறவோ மாலைத்தீவுகளில் மாளிகை கொள்வனவு செய்யவோ எவ்வித நோக்கமும் இல்லை என நாமல் ராஜபக்ஸவின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அரசியல் யாப்பில் உள்ள அதிகாரங்களை 21 இன் மூலம் நிரந்தரமாக்க நாம் முயல வேண்டும் – ரெலோ

தெற்கின் அரசியல் நகர்வுகளில் கருத்து தெரிவிப்பதில் நேரத்தை வீணடிப்பதை தவிர்ப்பதே சிறந்தது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான இருபத்தியோராம் திருத்த சட்ட மூல பரிந்துரைகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட இருக்கின்றன.

ஒருவரிடத்தில் அனைத்து அதிகாரங்களும் குவிந்து இருப்பதை எதிர்த்து தமிழ்த் தேசியத் தரப்புகள் ஒருமித்த அறிக்கை ஒன்றையும் அண்மையில் வெளியிட்டிருந்தோம். ஜனாதிபதியின் எதேச்சாதிகாரப் போக்கை இல்லாதொழிக்க இது உதவும். நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்குவது ஜனநாயகத்தை உறுதி செய்யும்.

ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அல்லது பாராளுமன்றம் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வினை கடந்த காலங்களில் வழங்கத் தவறியுள்ளன. இந்த திருத்தங்கள் ஊடாகத் தமிழ் மக்களுக்கு உறுதியாகப் பெற்றுத் தரக்கூடிய அதிகார விடயங்களை தமிழ் அரசியல் தரப்பினர் கையாள முன்வர வேண்டும்.

சமர்ப்பிக்கப்பட இருக்கும் இருபத்தியோராம் சட்டத் திருத்தம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதோடு ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கக்கூடிய அதிகாரப் பகிர்வினை நிரந்தரமாகவும் மீீளப் பெறப்பட்ட அதிகாரங்களை மீண்டும் வழங்குவதற்கும் வழி செய்ய வேண்டும். ஏற்கனவே அரசியல் யாப்பில் கூறப்பட்ட அதிகாரங்களை வலுப்படுத்தி, மீள் நிறுத்தி முற்றாகப் பகிர்வதற்கு முன்மொழியப்பட இருக்கும் 21 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழ்த் தரப்புக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

புதிய அரசியல் யாப்பின் மூலமே இதைச் செய்யமுடியும், மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற பல சாக்கு போக்கினை ஆளும் தரப்பினர் சொல்ல முற்படுவார்கள். ஆனால் ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள விடயங்களை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்துவதற்கு புதிய அரசியல் யாப்பு அல்லது மக்கள் வாக்கெடுப்பு அவசியமில்லை. திருத்தங்களின் மூலமே அவற்றை செய்து கொள்ள முடியும்.

அரசியல் யாப்பில் இல்லாத நிறைவேற்று அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு 20 ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய போது மக்கள் வாக்கெடுப்பு தேவைப் படவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள விடயங்களை நடைமுறைப் படுத்துவதற்கு அல்லது அதிகாரங்களை வலுப் படுத்துவதற்கு மக்கள் வாக்கெடுப்பு தேவை எனக் கூறி தப்பித்துக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்?

புதிய அரசியல் யாப்பு, பொதுஜன வாக்கெடுப்பு என்பன நாம் கோருகின்ற நிரந்தரமான சமஸ்டி முறையான அரசியல் தீர்வை வழங்குவதற்கே அவசியம் என்பதை தமிழர் தரப்பு வலியுறுத்த வேண்டும்.

தெற்கிலே ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலைகளில் ஆர்வத்தோடு தினமும் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்து வருவது தமிழ் மக்களுக்கு நலன் பயக்காது. அங்கு ஆக்ரோஷத்தோடு எதிர்ப்பு கருத்து தெரிவிப்பதும் பிரேரணைகளை முன்வைப்பதும் அவர்களோடு கலந்துரையாடல்களில் ஈடுபடுவதும் ஒருபுறம் இருக்க கொண்டு வரப்பட இருக்கும் 21ம் திருத்தத்தில் ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள அதிகாரங்களை முற்றாக பகிர வலியுறுத்த நாம் முயல்வது ஆக்கபூர்வமானதாக அமையும்.

ஏற்கனவே அரசியல் யாப்பில் அதிகாரங்கள் பல வழங்கப் பட்டு உள்ளன. அவை நிரந்தரமாக்கப் படவும் இல்லை. பகிரப் படவும் இல்லை. முற்றாக நடைமுறைப் படுத்தப் படவும் இல்லை. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால் அரசியல் யாப்பில் உள்ள விடயங்கள் நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளியை காண்கிறோம். ஜனாதிபதி முறைமையில் அரசியல் யாப்பில் சொல்லப்பட்ட விடயங்களை அரசாங்கம் முற்றுமுழுதாக நடைமுறைப் படுத்துகிறது. ஆனால் அதிகாரப் பகிர்வு என்று வருகின்ற பொழுது இருப்பதையே நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் பின் நிற்கின்றது.

ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ளவற்றுக்கும் நடைமுறைப் படுத்துவதற்குமான இடைவெளியை சீராக்கி முற்றாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதை கையாள்வது எமது கடமை. ஏனெனில் எதிர்காலத்தில் சமக்ஷ்டி முறையான தீர்வு அரசியல் யாப்பில் கொண்டு வரப் பட்டாலும் அது நடைமுறைப் படுத்துதில் பாரிய சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ள நேரிடும்.

இந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில், சிறப்பாக ஒருமித்து நின்று கையாள்வதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் தயவுடன் அழைக்கின்றோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் – ரெலோ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Posted in Uncategorized

தமிழ்நாட்டு முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி : செல்வம் அடைக்கலநாதன்

தமிழ்நாட்டு உறவுகள் இலங்கை மக்களுக்கு மிக உற்சாகமான முறையில் தங்களுடைய உறவுகள் பட்டினி கிடக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைத்திருந்தார்கள். இந்த செயல்பாட்டுக்காக தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் தமிழ்நாட்டின் சட்டசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று (23) திங்கட்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்நாட்டு முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி : செல்வம் அடைக்கலநாதன்

“கனேடிய நாட்டின் நாடாளுமன்றத்தில் எங்களுடைய மே 18 நாளை இனப்படுகொலை நாளாக அந்த வாரத்தை அனுஷ்டிப்பதற்கு கனேடிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்காக பாடுபட்ட ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு நன்றி. அவர் இந்த விடயத்தில் பாரிய முனைப்பு காட்டியது இட்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி : செல்வம் அடைக்கலநாதன்

இந்த செயல்பாடானது எங்களுடைய நாட்டிலும் பிரதேச சபை நகர சபை போன்ற இடங்களில் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை பிரதான கோரிக்கையாக நான் முன்வைக்கிறேன்.

அதேபோல் கனேடிய நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அந்த நாட்டு மக்களுக்கும் முதலில் நன்றியை தெரிவிக்கிறேன்.
அத்துடன் நேற்றைய தினம் தமிழ்நாட்டு உறவுகள் இலங்கை மக்களுக்கு மிக உற்சாகமான முறையில் தங்களுடைய உறவுகள் பட்டினி கிடக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு அரிசி, பால் மா, மருந்து பொருட்கள் அனுப்பி வைத்திருந்தார்கள்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி : செல்வம் அடைக்கலநாதன்

இந்த செயல்பாட்டுக்காக தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் தமிழ்நாட்டின் சட்டசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் தமிழ்நாட்டில் ஒரு சிறுமி தனக்கு சைக்கிள் வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை இலங்கை மக்களுக்காக வழங்கியிருந்தார். அதேபோல் தேநீர் கடை நடத்தும் ஒரு நபர் தான் வழங்கும் தேநீ ரை கொடுத்து தேனீரை பெற்றுக் கொள்பவர் தங்களால் முடிந்த அளவு இலங்கை மக்களுக்கு வழங்கும் பணத்தினை இலங்கை மக்களுக்கு அனுப்ப உள்ளார்.
அதேபோல் அன்றாடம் யாசகம் பெறும் ஒரு முதியவர் கூட தன்னுடைய பணத்தை எங்களுடைய மக்களுக்கு வழங்குவதற்கு முன் வந்திருந்தார். இதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் ஆன தொப்புள் கொடி உறவு என்பது.

தமிழ்நாட்டு முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி : செல்வம் அடைக்கலநாதன்

அதைத்தான் தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே தமிழ்நாட்டு மக்களும் இலங்கை தமிழ் மக்களும் ஏற்படும் சிறுசிறு முரண்பாடுகளை பெரிதாக்காமல் எங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய ஒரு வேண்டுகோளாக இருக்கின்றது.

அதேபோல் அகதி முகாம்களில் இருக்கும் எங்களுடைய மக்களை இன்றும் தமிழ்நாட்டு மக்கள் பாதுகாத்துக் கொண்டிருக்கும் அந்த செயற்பாடுகளையும் எங்களால் ஒருபோதும் மறக்க முடியாது. அந்த வகையில் தமிழ் நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் அனைத்து தமிழக மக்களுக்கும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பாகவும் எனது கட்சி சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி : செல்வம் அடைக்கலநாதன்

மேலும் எங்களுடைய வன்னி மாவட்டத்தில் குறிப்பாக கடல் தொழிலாளர்கள் விவசாயிகளுக்குத் தேவையான எரிபொருள் பிரச்சனை பாரிய பிரச்சினையாக இருக்கிறது. மண்ணெண்ணெய் இல்லாத சூழலில் அவர்களுடைய தொழில் பாதிக்கப்படுகிறது. அவற்றை சீர் செய்யுமாறு ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறோம். முதன்மை அடிப்படையில் எங்களுடைய விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் மண்ணெண்ணெய் டீசல் வழங்க வேண்டும் என்று பேசியிருந்தோம்.

இப்போது இருக்கும் அமைச்சர் அவர்கள் விரைவாக சீர் செய்வதாக கூறிய போதும் அவை சரியான முறையில் சீர் செய்யப்பட வில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு.
இன்றைக்கும் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்துக் கொண்டு இருப்பதை காண முடிகிறது. அந்த வகையில் எங்களுடைய மீனவர்கள் விவசாயிகளின் உழைப்பு வருமானம் பாதிக்கப்படும் ஒரு செயல்பாடாக இவை இருக்கின்றது .

தமிழ்நாட்டு முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி : செல்வம் அடைக்கலநாதன்

ஆகவே அரசாங்கம் பெட்ரோல் டீசலுக்கு காட்டுகின்ற முனைப்பை போலவே மண்ணெண்ணைக்கும் துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றோம்.

அரசாங்கம் சொல்கிறது கேஸ், பெட்ரோல், டீசல் ,இனிமேல் தாராளமாக கிடைக்கும் என்று.

ஆனால் இப் பொழுதும் மக்கள் இரவிரவாக வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்த விடயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி இந்த மக்களுடைய பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை கேட்டு நிற்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

வெளிவிவகார அமைச்சின் செயலாளராக அருணி விஜேவர்தன நியமனம்

வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்த அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அப்பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இந்நிலையில் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் மேலும் 10 அமைச்சர்கள் பதவியேற்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அரசாங்கத்தின் மிகுதி அமைச்சர்கள் இன்று திங்கட்கிழமை பதவியேற்றுள்ளனர்.

பந்துல குணவர்தன – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

ரமேஷ் பத்திரன – தொழிற்சாலை அமைச்சராகவும் இதேவேளை ரமேஷ் பத்திரன – தொழிற்சாலை அமைச்சராகவும் நசீர் அஹமட் – சுற்றாடல் அமைச்சர்.

இதேவேளை சுதந்திரக் கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர விவசாயம், வனவிலங்கு மற்றும் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்ல நீர் வழங்கல், ரொஷான் ரணசிங்க – நீர்ப்பாசனம், விதுர விக்ரமநாயக்க – கலாசாரம், டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

ஏற்கனவே 13 அமைச்சரவை அமைச்சர்கள் இருவேறு தினங்களில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.இந்நிலையில் இன்று புதிதாக 10 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.